மொத்தப் பக்கக்காட்சிகள்

வியாழன், 15 மே, 2014










பழமையைப் போற்றுவோம்


         கல்வெட்டு நூல்களைப் படித்துக்கொண்டிருக்கையில் நூறு கல்வெட்டுகளுக்கிடையில் ஒரு கல்வெட்டு வேறுபட்டு நின்றது. கும்பகோணம் வட்டத்தில் திருக்கோடிக்காவல் திருக்கோடீசுவரர் கோயிலில் அக்கல்வெட்டு உள்ளது. திருக்கோடிக்காவல் ஊர், பண்டு நல்லாற்றூர் என்னும் நாட்டுப்பிரிவில் அமைந்திருந்தது. அதே நாட்டுப்பிரிவைச்சேர்ந்த ஒரு பிரமதேயம் (பிராமணர்களுக்குத் தானமாகக் கொடுத்த ஊர்ப்பகுதி), நாரணக்க சதுர்வேதிமங்கலம் ஆகும். இந்தச் சதுர்வேதிமங்கலத்தை நிருவாகம் செய்ய ஒரு குழு இருந்தது. அது சபை எனப்பட்டது. இச்சபையார்  திருக்கோடீசுவரர் கோயிலுக்குத் தானமாக நிலம் ஒன்றை அளிக்கிறார்கள். இந்த நிலம் விற்ற நில விலையாவணம் என்னும் நடைமுறையில் தானமாக அளிக்கப்பட்டது. இந்த நடைமுறைப்படி, சதுர்வேதிமங்கலத்தைச் சேர்ந்த நிலம் விலை கூறப்பட்டு ஒருவருக்கு விற்கப்படும். விலைப்பணம் சபைக்கு உரிமையாகும். நிலத்தை விலை கொண்டு வாங்கியவர் அந்நிலத்தைக் கோயிலுக்குக் கொடையாகத் தருவார்.

         மேலே கூறப்பட்ட விலையாவணம் பற்றிய கல்வெட்டு, இக்கோயில் செங்கற்களைக் கொண்டு கட்டப்பட்ட காலத்தைச் சேர்ந்தது. தனிக்கல்லில் வெட்டப்பட்டிருந்தது. இந்நிலையில், உத்தம சோழரின் தாயாரும், கண்டராதித்த சோழரின் அரசியாரும் ஆன செம்பியன் மகாதேவியார், இக்கோயிலைக் கற்றளியாகப் (செங்கல் கட்டுமானத்திலிருந்து கல் கட்டுமானம்) புதுப்பித்தார். அவ்வாறு புதுப்பிக்கையில், இக்கல்வெட்டு கற்றளிக்கோயிலின் சுவர்களின் கற்களில் மீண்டும் வெட்டப்பட்டது. மீண்டும் வெட்டும்போது புதிய கல்வெட்டு வரிகளில் பழங்கல்வெட்டுப்படி வெட்டிய கல்வெட்டு என்னும் குறிப்பைத் தெளிவாகச் சொல்லியிருக்கிறார்கள். ஆவணப்படுத்துதலில் எவ்வளவு நேர்மை!  கல்வெட்டு வரிகளைக் கீழே தந்துள்ளேன்:

      ஸ்வஸ்திஸ்ரீ இதுவும் மொரு பழங்க
      ல்படி கோவிராஜகேசரிபன்மற்கு யாண்டு நான்காவது வடகரை
      நல்லாற்றூர் நாட்டு பிரமதேயம் நாரணக்கசதுர்வேதிமங்கலத்து
      சபையோம் விற்ற நிலவிலையாவணம் ......................................
   
      .............................................................................................................................
      .............................................................................................................................
      .............................................................................................................................

      ..............
      இவிசைத்த பெருநான்கெல்லையிலும் அகப்பட்ட நிலம் மேடும் 
      பள்ளமும் உள்பட முக்கால் செயும் விற்று விலையாவணம் செய்து
      குடுத்தோம் ......................... நாரணக்கச் சதுர்வேதிமங்கலத்து சபையோம்
      இது பழய கல்படி இந்த ஸ்ரீவிமாநத்திலே  ஏற வெட்டிநமையில் முன்
      னிவாஜகம் வெட்டிக்கிடந்த தனி கல்லால் உபையோகம்
      இல்லாமையால் அது தவிர்ந்தது இது முட்டில் பன்மாயேச்வர கடை
      கூட்டப்பெற்றார் ||


         பழமையைப் பாதுகாக்க அக்கால மக்கள் மேற்கொண்ட அக்கறை தற்போது நம்மிடம் உள்ளதா என்பது நம் முன் உள்ள கேள்வி. சில ஒளிப்படங்களை இங்கே இணைத்துள்ளேன். தற்காலம் கோயில்கள் புதுப்பிக்கப்படுகையில் பழங்கல்வெட்டுகள் எவ்வாறு புறக்கணிக்கப்படுகின்றன என்பதை ஒருவாறு உணர இப்படங்கள் துணை செய்யும்.

               
பழமையைச் சற்றேனும் போற்றுவோம்.




  
       




து.சுந்தரம், கல்வெட்டு ஆராய்ச்சியாளர், கோவை.

அலை பேசி : 9444939156.         

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக