மொத்தப் பக்கக்காட்சிகள்

செவ்வாய், 26 டிசம்பர், 2017

பேசல் மிஷன்-மங்களூர்
முன்னுரை
இணையத்தில், வரலாறு, கல்வெட்டு தொடர்பான சில தேடுதல்களின்போது எதிர்பாராமல் சில செய்திகள் ஈர்க்கின்றன. அவ்வாறான ஒரு தேடுதலின்போது மங்களூரில் இருக்கும் பேசல் மிஷன்”  (BASEL  MISSION)  பற்றிய ஒரு கட்டுரையைக் கருநாடக வரலாற்றுக் கழகத்தின் தொகுப்பு ஒன்றில் பார்க்க நேரிட்டது. கட்டுரையைப் படிக்கத் தொடங்கியதுமே, ஒரு நாற்பத்தெட்டு ஆண்டுகளுக்கு முன்னால் மனம் பாய்ந்துவிட்டது. மங்களூரின் பேசல் மிஷன்”  (BASEL  MISSION) வளாகத்துக்கருகிலேயே நாம் மூன்று ஆண்டுக்காலம் தங்கியிருந்துள்ளோமே என்று ஒரு வியப்புக் கலந்த மகிழ்ச்சி உண்டாயிற்று. ஆனால், மகிழ்ச்சியைக் கடந்து, ஒரு கழிவிரக்க உணர்வு.  வரலாறு பற்றிய இப்போதிருக்கும் ஒரு விழிப்புணர்வும், ஆர்வமும், தேடுதலும் அப்போது இல்லாமல் எத்துணை மடமையோடு இருந்திருக்கிறோம் என்று ஓர் ஏமாற்ற உணர்வு.  

1970-ஆம் ஆண்டு. கல்லூரிப் படிப்பை முடித்த பின்னர் ஒருங்கிணைந்த ‘அஞ்சல்-தொலைத்தொடர்புத்துறையில் எழுத்தர் பணியில் சேர்ந்து மங்களூர் சென்ற ஆண்டு அது. பணிக்கு முன்பு, பெங்களூரில் இரண்டு மாதப் பயிற்சியின்போது அறிமுகமான நண்பருடன் மங்களூரில் ‘பல்மட்டா’  (BALMATTA)  என்னும் இடத்தில் வாடகை அறையொன்றில் உறைவிடம். தங்குமிடத்துக்கருகிலேயே பேசல் மிஷன்”  (BASEL  MISSION) அமைந்திருந்தது. அன்றாடம், இரவு உணவுக்காகத் தங்குமிடத்திலிருந்து பலமட்டா கடைத்தெருவுக்குச் செல்லவேண்டும். பேசல் மிஷன்”  (BASEL  MISSION) வளாகத்துச் சுற்றுச் சுவரை ஒட்டியிருந்த மண்பாதையில் நடந்து செல்லவேண்டும். பேசல் மிஷன்”  என்பது தெரிந்திருந்தது. அது ஓர் இந்திய அமைப்பல்ல; கிறித்தவச் சமயத்தைச் சார்ந்த ஒரு வெளிநாட்டு அமைப்பு என்று தெரிந்திருந்தது. ஆனால், அந்த அமைப்பு எவ்வாறு இயங்குகிறது, என்னென்ன பணிகள் நடைபெறுகின்றன, வளாகத்தின் உள்ளே சென்று அறிந்துகொள்ளவேண்டாமா என்பதான சிந்தனைகள் எழாமலே காலத்தைக் கழித்துவிட்டிருக்கிறோம் என்று இப்போது நினைக்கிறேன். கருநாடக வரலாற்றுக் கழகக் கட்டுரையை முழுதும் படித்தேன். அது கன்னட மொழியில் எழுதப்பட்ட ஒரு கட்டுரை. மங்களூரில் இருந்தபோது மொழிப்புலமை மிகுதியாக ஏற்படாவிடினும், எழுத்துகளின் (லிபிகளின்) மீதான ஓர் ஈர்ப்பு, என்னைக் கன்னட எழுத்துகளைக் கற்கத் தூண்டியது. ஓரளவு பயிற்சியேற்பட்டதும், எழுத்தாளர் சிவராம காரந்த் அவர்கள் கன்னட மொழியில் எழுதியிருந்த “அழித மேலே”,  “மூக்கஜ்ஜிய கனசுகளு”  ஆகிய இரு புதினங்களைப் படித்துக் கதைகளைப் புரிந்துகொண்டேன். (அழிதமேலேஎன்னும் புதினத்தைச் சித்தலிங்கையா என்பவர் தமிழில் பெயர்த்திருந்தார். அதையும் பின்னாளில் படித்திருக்கிறேன். மூலத்தின் முழு உணர்வையும் தமிழில் மிக இயல்பாக மொழிபெயர்ப்பு என்னும் எண்ணமே தோன்றாதவகையில் மிக அழகாகப் படைத்திருந்தார். தலைப்பு ‘அழிந்த பிறகு’.  அருமையான ஒரு புதினம்.. அடுத்த புதினம் ‘மூக்கஜ்ஜிய கனசுகளு. அஜ்ஜி என்பது பாட்டியைக் குறிக்கும் கன்னடச் சொல்; மூக2’  என்பது ஊமையைக் குறிக்கும் சொல். கனசு என்னும் கன்னடச் சொல் கனவு என்னும் தமிழ்ச் சொல்லின் திரிபாதலைக் காணலாம். சிவராம காரந்தரின் எழுத்து நடை அழகானது.) 

ஆண்டுகள் நாற்பத்தேழு கடந்துவிட்டதென்றாலும், மங்களூரின் சில நினைவுகள் மறையவில்லை. நாங்கள் தங்கியிருந்த பகுதி பல்மட்டா. எங்கள் அலுவலகம் ஹம்பனகட்டா என்னும் பகுதியில் அமைந்திருந்தது. தங்குமிடத்திலிருந்து அலுவலகம் நோக்கி நடந்து செல்வோம். போகும் வழியில், நகரின் புகழ் பெற்ற மோத்தி மகால் ஓட்டல். புத்தம் புதிய, அகன்ற திரை கொண்ட ”பிளாட்டினம்” என்னும் பெயருடைய திரையரங்கும் வழியிலேயே அமைந்திருந்தது. அடுத்து, மிலாக்ரஸ் (MILAGRES) தேவாலயம். அதன் வளாகத்தை ஒட்டி எங்கள் அலுவலகக் கட்டிடம். தேவாலயத்தாருக்குரியது. எங்கள் அலுவலகம் தவிர வங்கி ஒன்று இயங்கியது என நினைவு. அலுவலகத்திலிருந்து நடந்து செல்லும் தொலைவில் இரயில் நிலையமும், வெண்லாக் (WENLOCK) மருத்துவமனையும். இந்த மருத்துவ மனை 1848-ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. கதிரி ம்ஞ்சுநாதர் கோயில் (சமணக்கோயிலாக இருந்த இக்கோயில் சைவக்கோயிலாக மாற்றம் பெற்ற வரலாறு அப்போது தெரிந்திருக்க்வில்லை. சமண எச்சங்கள் இன்னும் உள்ளன எனத்தெரிகிறது), மங்கலாதேவி கோயில் (இது கண்ணகிக் கோயில் என்று கருதப்படுகிறது) ஆகிய கோயில்கள் மங்களூரின் சிறப்பு மிகு அடையாளங்கள். ப3ந்தர் (கடலை ஒட்டிய துறை), உள்ளால் கடற்கரை, கலையரங்கக் கட்டிடம், அதன் எதிரே பெரிய திடல் ஆகியன அடிக்கடி சென்றுவந்த ஒரு சில இடங்கள். (கலையரங்கில் புல்லாங்குழல் கலைஞர் மாலி அவர்களின் குழலிசையைக் கேட்க ஆவலுடன் சென்றதும், மேடையில் இசை நிகழ்ச்சி தொடங்கிய ஒரு சில நிமிடங்களிலேயே அவருடைய குடிப் பழக்கத்தால் நிகழ்ச்சி நின்றுபோனதும் நினைவில் நின்றவை. அப்போது அவருடன் துணையாக ஒரு வெளிநாட்டுப்பெண்மணி (மனைவி?) யும் இருந்தார்.) திடலில், ஏதோ ஒரு விழாவின்போது கேட்ட, மதுரை சோமு, சீர்காழி கோவிந்தராஜன் ஆகியோரின் இசை நிகழ்ச்சிகளும், யக்‌ஷ கானமும் நினைவில் அடக்கம். இன்னொன்றும் உண்டு. திரைப்படம் பற்றியது. தமிழ்த் திரையுலகின் புகழ் பெற்ற இயக்குநர் பாலச்சந்தர் தம் ஆசான் என்று கூறுமளவு பெயர் பெற்ற கன்னட இயக்குநர் புட்டண்ண கணகலின் திரைப்படங்களும், கிரீஷ் கார்நாடின் திரைப்படங்களும். முதன்முதலாகத் துளு மொழியில் எடுக்கப்பட்ட திரைப்படத்தின் ஒரு பாடல் காட்சியின் படப்பிடிப்பை நேரில் பார்த்த நிகழ்வு. அடடா! ஒளிப்படக் கருவி ஒன்றிருந்திருந்தால் பல ஆவணங்கள் இப்போது கைவசம் இருக்கும். முன்னுரை நீண்டுவிட்டது. நினைவுகளின் தாக்கம்.

பேசல் மிஷன்
பேசல், சுவிட்சர்லாந்து நாட்டைச் சேர்ந்த ஒரு நகரம். பிரான்ஸ், ஜெர்மனி ஆகிய இரு நாடுகளின் எல்லையில் ரைன் நதிக்கரையில் அமைந்தது. சுவிஸ் நாட்டின் 23 மண்டலங்கள் அல்லது உள்நாட்டுப் பிரிவுகளுள் (CANTON) ஒன்றின் தலை நகர். வணிகம், கல்வி ஆகியவற்றின் மையம். 1815-ஆம் ஆண்டு. நெப்போலியனின் காலம். இரஷ்யாவுக்கும், பிரான்சுக்கும் இடையிலான போர் தொடர்பான அச்சம் எப்போதும் நிலவிக்கொண்டிருந்த சூழ்நிலை. பேசல் ஊரார் ஒன்றுகூடுகிறார்கள். போரின் தாக்கமின்றி ஊர் காக்கப்படவேண்டும் என்னும் ஒரே வேண்டுதல். வேண்டுதல் நிறைவேறினால் கிறித்தவ இறையியல் பள்ளி ஒன்று (SEMINARY)  நிறுவப்படும். இவ்வாறு, 1816-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 16-இல் உருவானதுதான் ஜெர்மன் இவாஞ்சலிகல் சொசைட்டி”  (GERMAN EVANGELICAL SOCIETY)  என்னும் இறையியல் கழகம். பின்னர், பேசல் மிஷன் எனப்பெயர் மாற்றம் பெற்றது. தொடக்கத்தில், சமயப் பரப்புக்காக ஆப்பிரிக்க நாட்டுக்கு மட்டும் சென்ற பரப்புநர்கள் நாளடைவில் வேறு நாடுகளுக்கும் செல்லத்தொடங்கினர்.

மங்களூரில் பேசல் மிஷன் (1834)
1834-ஆம் ஆண்டு, ஜான் கிறிஸ்டோஃப் லெஹனர் (JOHN CHRISTOPH LEHNER), கிறிஸ்டோஃப் லியோனார்ட் க்ரெனர் (CHRISTOPH LEONARD GRENER), சாமுவெல் ஹெபிக் (SAMUEL HEBICH) ஆகிய மூவர் கள்ளிக்கோட்டை வழியாக மங்களூர் அடைந்து செயல்படத் தொடங்கினர். கருநாடகத்தின் தென் கன்னடம், தார்வாடா, பிஜாப்பூர் ஆகிய பகுதிகளில் கல்வி, தொழிற்சாலைகள் ஆகிய துறைகளில் தங்கள் பணியைத் தொடங்கினர். மேற்கத்திய கல்வி முறை மதமாற்றத்துக்கு முதன்மையானது என்று கருதி மேற்கத்திய கல்வி முறையில் கருத்தைச் செலுத்தினார்கள். மேலே குறிப்பிட்ட ஹெபிக் என்பார், 1836-ஆம் ஆண்டு நான்கு மாணவர்களைக் கொண்டு ஆங்கிலப்பள்ளி ஒன்றைத் தொடங்கினார். அடுத்த ஆண்டே, மோக்லிங் (MOEGLING) என்பார் தார்வாடாவில் பள்ளியைத் தொடங்கினார். அடுத்தடுத்து, ஹுப்ளி, கடக், கொடகு (குடகு) ஆகிய இடங்களில் “ஆங்கிலோ வெர்னாகுலர் பள்ளி என்னும் பெயரில் பள்ளிகள் உருவாயின.

                           பேசல் மிஷன்
                          

பள்ளிகள்
பேசல் மிஷன் உருவாக்கிய பள்ளிகள் வியத்தகு முறையில் விரிவடைந்தன. ஒழுக்கம், தொழிற்கல்வி ஆகிய இரண்டுக்கும் முதன்மை அளிக்கப்பட்டது. 1853-இல் ஏறத்தாழ ஐம்பது தொடக்கப் பள்ளிகள்; எட்டு உயர்நிலைப் பள்ளிகள். மங்களூரில் பெல்மாண்ட் (BELMONT)  என்னும் ஒரு பெரிய மாளிகை கட்டப்பெற்று அங்கு பேசல் மிஷன் இயங்கியது. பெல்மாண்ட் என்னும் பெயர் நாளடைவில் மருவி, மிஷன் இயங்கிய அந்தப்பகுதிக்கு பல்மட்டா (BALMATTA) என்னும் பெயர் நிலைத்துவிட்டது. அங்கே பெல்மாண்ட் சர்ச் என்னும் பெயரில் ஒரு தேவாலயம் 1862-இல் கட்டபெற்றது. தொடர்ந்து ஹுப்ளி, தார்வாடா பகுதிகளிலும் தேவாலயங்கள் கட்டப்பெற்றன. பெல்மாண்ட் தேவாலயம் நூறாண்டுகளூக்குப் பின்னர் 1962-இல் அதன் பழமை மாறாமல் புதுப்பிக்கப்பட்டது.

               பெல்மாண்ட் (பல்மட்டா) தேவாலயம்


                          ஆங்கிலப்பள்ளி
                       

மதமாற்றங்கள்
1842-ஆம் ஆண்டு வாக்கில் மதமாற்றங்கள் நிகழ்ந்திருந்தன. அந்த ஆண்டில், ஆனந்தராவ் கௌண்டின்யர் என்னும் பிராமணர் கிறித்துவத்தைத் தழுவினார். அவரைத் தொடர்ந்து பகவந்தராவ் கௌசிக்,  முகுந்தராவ் கௌசிக் ஆகிய இரு பிராமணர்களும் மதம் மாறினர். இதற்குக் காரணமானவர் மோக்லிங் (REV. MOEGLING) என்பாரே. ஆனந்தராவ், குடகுப்பகுதிக்குச் சென்று சமயப்பரப்புப் பணியைக் கைகொண்டார். ஹொலெய(ர்), பில்லவர்’  ஆகிய குலத்தவர் மதம் மாறினர். கன்னட மொழியில் ‘ஹொலெயர்’  எனில், தமிழில் ‘பொலெயர்’  என்றாகிறது. தமிழகத்தில் நாம் குறிப்பிடும் புலையரே இவர்கள் என்பதில் ஐயமில்லை. பில்லவர் என்பவர் வில் கொண்டு வேட்டைத் தொழிலில் ஈடுபட்ட வில்லிகள் என்று கன்னடக் கட்டுரை எழுதிய ஆய்வாளர் குறிப்பிடுகிறார்.

தொழிற்பயிற்சிகள் (1844)
மதமாற்றம் பெற்றவர்கள் சமுதாயத்தினரால் புறக்கணிக்கப் பட்டதால் அவர்களின் தற்சார்பு வாழ்க்கைக்கு உதவும் பல்வேறு தொழிற்பயிற்சிகளை மெட்ஸ் (REV. METZ) என்னும் ஜெர்மானியப் பாதிரியார் வழங்கினார். குறிப்பாக நெசவுப்பயிற்சி. இது நடைபெற்றது 1844-ஆம் ஆண்டு.

மங்களூர் ஓடுகள் (1865)
அடுத்து, ஓடுகள் செய்தல். மங்களூர்ப் பகுதியில் கும்பாரர் என்று வழங்கும் மண்ணாளர்கள் திகரி என்னும் சக்கரத்தைக் கொண்டு கைகளால் உருவாக்கிய நாட்டு ஓடுகளுக்கு மாற்றாக இயந்திரங்கள் கொண்டு ஓடுகள் உருவாக்கும் தொழிற்சாலையை பிளெபாத் (PLEBOT) என்னும் பெயருடைய ஜெர்மன் பாதிரியார்  1865-ஆம் ஆண்டு தோற்றுவித்தார். இவருடைய இயற்பெயர் ஜார்ஜ் பிளெப்ஸ்ட் (GEORGE PLEBST) என்பதாகும். பேசல் மிஷன் ஓட்டுத்தொழிற்சாலை என்னும் பெயரில் அது செயல்படத் தொடங்கியது. (நாட்டு ஓடு என்னும் தமிழ் மொழி வழக்கை அப்படியே கன்னட மொழியில் “நாட ஓடு”  என்று கன்னட ஆய்வாளர் வழங்குவது குறிப்பிடத்தக்கது. பழங்கன்னடச் சொல் தமிழை ஒட்டியே இருந்தது என்பதற்கு இதுவே சான்று. ஓடு என்பதற்குப் பின்னர் வழங்கிய கன்னடச் சொல் ஹென்ச்சு என்பதாகும்).

               ஓட்டுத் தொழிற்சாலை - பெயர் முத்திரை


                    ஓட்டுத் தொழிற்சாலை

                                                           மற்றுமொரு தொழிற்சாலை


                                                          மங்களூர் ஓடுகள் -  ஒரு தோற்றம்


நாள்தோறும் பன்னிரண்டு தொழிலாளிகளின் உழைப்பில் ஐந்நூற்று அறுபது ஓடுகள் வெளிவந்தன. இந்த ஓடுகள் ஆப்பிரிக்க, ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதியாயின. பின்னர், ஐம்பத்திரண்டு தொழிற்சாலைகள்; ஆயிரக்கணக்கில் தொழிலாளர்கள்.

பேசல் மிஷன்-அச்சுத்தொழில் (1841)
பேசல் மிஷன் பதிப்புத்தொழிலிலும் இறங்கியிருந்தது. 1817-இல் ‘கன்னட மொழியின் இலக்கணம்’  (A GRAMMAR OF THE KARNATA LANGUAGE)  என்னும் பெயரில் கல்கத்தாவிலிருந்து பேசல் மிஷன் பதிப்பித்த நூல் வெளியானது. தொடர்ந்து, கன்னட மொழிக்கான நிகண்டு, இலக்கியம் ஆகிய துறைகளில் நூல்கள் பதிப்புப் பெற்றன. முதன் முதலில் கன்னட மொழியில் கன்னட லிபியில் விவிலியத்தை ஜான் ஹாண்ட்ஸ் (JOHN HANDS) என்பார் நூலாக வெளியிட்டார். இது அப்போதைய மதராசில் கமர்ஷியல் பிரெஸ் என்னும் அச்சகத்தின் வாயிலாக அச்சேறியது. 1824-இல், ரெவரெண்ட் ரீவ் (REV.REAVE) என்பவரது முயற்சியால் ஆங்கிலம்-கன்னடம் அகரமுதலி பதிப்பிக்கப்பெற்றது. 1840-ஆம் ஆண்டு, பெங்களூரில் வெஸ்லி மிஷனரியைச்  (WESLEY MISSIONARY)  சேர்ந்த காரெட் (GARETTE) என்பார் அரசு அச்சகத்தை நிறுவினார். இதைத் தொடர்ந்து 1841-இல் பேசல் மிஷன் அமைப்பினரும் மங்களூரில் ஜெர்மன் இவாஞ்சலிகல் மிஷன் பிரஸ்”  (GERMAN EVANGELICAL  MISSION PRESS)  என்னும் பெயரில் அச்சகம் ஒன்றை நிறுவினார்கள். கன்னட லிபியில் “துளு கீர்த்தனைகள்”  நூலாக வெளிவந்தது. 1843-இல் “மங்களூரு சமாச்சார”  என்னும் இதழ் வெளியாயிற்று. 1859-இல் கொங்கணி மொழியில் கன்னட லிபியில் நூல்கள் வெளீயாயின. மற்ற மொழிகளிலும் செய்தித் தாள்கள் வெளியாயின. ஜெர்மன் மிஷனரியைச் சேர்ந்த ரெவ. குண்டர்ட் (REV.GUNDERT) என்னும் மொழியியல் அறிஞர் மலையாளம்-ஆங்கிலம் அகர முதலியை அச்சேற்றினார். அண்மையில் 2016-ஆம் ஆண்டு, பேசல் மிஷன் அச்சகம், 175 ஆண்டுகள் நிறைவினைக் கொண்டாடியுள்ளது.

                              அச்சகம்


                    மங்களூரில் அச்சான மலையாளம் - ஆங்கிலம்  அகரமுதலி


முடிவுரை
பல்லாயிரம் கற்கள் தொலைவைக் கடந்து கிறித்தவ இறையியல் பரப்பு என்னும் நோக்கத்தில் கருநாடகத்துக்கு வந்த பேசல் மிஷன் அமைப்பு பலவகைப்பட்ட சமுதாயப் பணிகளை ஆற்றிக் கருநாடக வரலாற்றில் நீண்டதொரு இடத்தைக் கொண்டுள்ளது என்பதும் நூற்று எழுபத்தைந்து ஆண்டுகளுக்கு மேல் நிலைத்து நின்று செயலாற்றியுள்ளது என்பதும் பெருஞ்செயலாகும்.


ஒளிப்படங்கள் : இணையத்திலிருந்து எடுக்கப்பட்டவை.

---------------------------------------------------------------------------------------
து.சுந்தரம், கல்வெட்டு ஆராய்ச்சியாளர், கோவை.
அலைபேசி : 9444939156. 

செவ்வாய், 12 டிசம்பர், 2017

வெள்ளலூரில் ஒரு புதிய கல்வெட்டு


முன்னுரை
கல்வெட்டுகளைத் தேடிச் செய்திகளை வெளியிடும் பணி பற்றிப் பேசிக்கொண்டிருக்கையில், அண்மையில் அறிமுகமான கோவை நண்பர் திரு. தமிழ்மாணிக்கம் அவர்கள் ஒரு செய்தியைச் சொன்னார். வெள்ளலூரில் காசி அப்பச்சி கோயில் என அழைக்கப்படும் ஒரு கோயிலில் நடுகல் சிற்பம் ஒன்றினை மூலவராக வணங்கிவருகிறார்கள்; அதே கோயிலில் ஒரு தனிக்கல்லில் கல்வெட்டு ஒன்று உள்ளது. அச்செய்தியின் அடிப்படையில் கட்டுரை ஆசிரியர் சென்ற 26-08-2017 அன்று, வரலாற்று ஆர்வலர்களான நண்பர்கள் பாஸ்கரன், மீனாட்சிசுந்தரம் ஆகியோருடன் காசி அப்பச்சி கோயிலுக்குச் சென்று கல்வெட்டை ஆய்வு செய்தார்.

காசி அப்பச்சி கோயில்
வெள்ளலூர் ஊரின் எல்லையில், இடையர்பாளையம் சாலையில், சாலையின் ஓரத்திலேயே அமைந்துள்ள ஒரு சிறு கோயில்தான் காசி அப்பச்சி கோயில். வேப்ப மரங்களுக்கிடையில், எளிமையான சிமெண்ட் தரையுடன் கூடிய சிறு வளாகம். ஒரு புறம் மேடைமேல் வீற்றிருக்கும் பிள்ளையார். இன்னொரு புறம் ஒரு சிறிய அறையைக் கருவறையாகக் கொண்டுள்ள காசி அப்பச்சி கோயில். மூன்றாவதாக நாம் கண்டறிந்த கல்வெட்டுக் கல். காசி அப்பச்சி கோயில் கருவறையில் மூலவராக இருப்பது ஒரு நடுகல் சிற்பம்.

                        காசி அப்பச்சி கோயில்


புலிகுத்திக்கல்லே வழிபடு தெய்வம்
கோவைப்பகுதியில் கால்நடைகளின் பட்டியில் காவல் பணியில் ஈடுபட்ட வீரர்களில், கால்நடைகளைத் தாக்கவருகின்ற புலிகளுடன் சண்டையிட்டுக் கொன்று தானும் இறந்துபடுகின்ற வீரனுக்கு எடுக்கப்பட்ட நினைவுக்கற்கள் நிறைய உள்ளன. அவ்வகை நடுகல் ஒன்றை இப்பகுதியில் கோயிலாக்கியுள்ளனர். நடுகல் வீரன், காசி அப்பச்சி என்னும் பெயரில் வழிபடப்படுகிறான். வழக்கமாகக் காணும் புலிகுத்திக்கல் சிற்பத்தின் கூறுகளே இங்கும் காணப்படுகின்றன. வீரன் தன் வாளைப் புலியின் வாய்ப்பகுதியில் பாய்ச்சுகிறான். புலி தன் பின்னங்கால்களில் நின்றுகொண்டு, முன்னங்கால்களால் வீரனைத் தாக்கும் நிலையில் உள்ளது. அதன் வால் உயர்ந்து நிற்கிறது. வீரன் அணி செய்யப்பட்ட தலைப்பாகை அணிந்திருக்கிறான். தலைப்பாகையில் குஞ்சலம் காணப்படுகிறது. பெரிய செவிகளும் காதணிகளும் நன்கு புலப்படுகின்றன. இடைக் கச்சையுடன் ஆடை அமைந்துள்ளது. படையலோடு வழிபாடு நடக்கிறது.

              புலிகுத்திக்கல் சிற்பம் -  வழிபடு தெய்வமாக


 வாதப்பிள்ளையார் கோயில்
மேடையையே கோயிலாகப் பெற்ற பிள்ளையார், வாதப்பிள்ளையார் என இங்குள்ள மக்களால் அழைக்கப்படுகிறார். மக்கள் தம்முடைய வாத நோய் நீங்கவேண்டி இப்பிள்ளையாரையும் அருகில் அமைந்துள்ள கல்வெட்டு எழுத்துகள் உள்ள தனிக் கல்லையும் சேர்த்து வணங்குகிறார்கள்.

கல்வெட்டு
மூன்றடிக்குள் உயரம் கொண்ட ஒரு தனிக்கல். நீள் சதுர வடிவம் கொண்டது. உச்சிப் பகுதியில் மட்டும் வளைவாக வடிக்கப்பட்டுள்ளது. எழுத்துகளின் பதினோரு வரிகள் காணப்படுகின்றன. கோடுகள் செதுக்கப்பட்டுக் கோடுகளுக்கிடையில் எழுத்துகள் எழுதப்பட்டுள்ளன. கல்லின் தரைப்பகுதியில் தரைக்குக் கீழே மேலும் சில வரிகள் இருக்கவேண்டும். அந்தப் பகுதியில்தான் கல்வெட்டுச் செய்தி முடிவடைகிறது எனக் கருதலாம். ஏனெனில், வழக்கமாகக் கல்வெட்டுகளின் முடிவில் காணப்படும் “இது பந்மாகேச்வர ரக்ஷை என்னும் இறுதித் தொடர், இக்கல்வெட்டில், கல்லின் பக்கவாட்டுப் பகுதியில் பொறிக்கப்பட்டுள்ளன. கல்லின் பருமன் சிறியது. எனவே, மூன்று சிறு வரிகளில் “பந்மாகே(ச்வ)ர இரக்க்ஷை என்னும் தொடர் எழுதப்பட்டுள்ளது.

                              கல்வெட்டு


கல்வெட்டின் பாடமும் காலமும்
கல்வெட்டின் பாடம் கீழ் வருமாறு. கி.பி. 12-14-ஆம் நூற்றாண்டுக் காலகட்டத்தைச் சேர்ந்த தமிழ் எழுத்துகளால் எழுதப்பட்டுள்ளது.

                                           கல்வெட்டின் முகப்புப் பகுதி    


கல்வெட்டின் முகப்புப் பகுதி
1         (ஸ்வஸ்தி)ஸ்ரீ
2         வெள்ளலூர் ஆளு
3         டையார் தென்
4         னூராண்டார் தி
5         ருக்குளம் பெ
6         ரிய நாச்சியா(ர்)
7         வாரம்ம் இ
8         (து)  அன்னதா
9         (ந) சிவபுரியி(ல்)
10     பொற்கோயிற்
11     கைக்கோளர்

                                          கல்வெட்டின் பக்கவாட்டுப் பகுதி


கல்வெட்டின் பக்கவாட்டுப் பகுதி

1         பந்மாகே
2         ர இரக்
3         க்ஷை


கல்வெட்டுச் செய்திகள்-ஓர் ஆய்வு
கல்வெட்டுகள் “ஸ்வஸ்திஸ்ரீ என்னும் மங்கலத் தொடருடன் தொடங்குவது வழக்கம். அவ்வாறே இக்கல்வெட்டும் தொடங்குகிறது. ஆனால், கல்வெட்டின் காலத்தைக் கணிக்க உதவும் வகையில், அரசனின் பெயரோ, ஆண்டுக்குறிப்போ காணப்படவில்லை. வெள்ளலூர் ஆளுடையார்  என்பது வெள்ளலூரில் கோயில் கொண்டிருக்கும் இறைவனைக் குறிக்கும் பொதுத்தொடர். ஆளுடையார் தென்னூராண்டார் என்னும் தொடர், ஊருடன் இணைத்து வழங்கும் இறைவனின் சிறப்புப் பெயரைக் குறிக்கும்.  அந்த வகையில், தென்னூரின் இறைவன் என்பது உணரப்படும். எனில், வெள்ளலூருக்குத் தென்னூர் என்று மற்றொரு பெயரும் உண்டு என்பது புலனாகிறது. இதற்குச் சான்றாகப் பின்வரும் கல்வெட்டுகளைக் குறிப்பிடலாம்.

1                  கல்வெட்டு எண். 213 (கொங்குநாட்டுக் கல்வெட்டுகள்-கோயம்புத்தூர் மாவட்டம்-நூல்.)

வரி 14   ஆளுடையா
15                ர் தென்னூர்ப்
16                பதியுளாற்கு ஒரு

2                  கல்வெட்டு எண். 214 (கொங்குநாட்டுக் கல்வெட்டுகள்-கோயம்புத்தூர் மாவட்டம்-நூல்.)
   வரி  10   ண்டு வேளிலூர்
     11    த் தென்னூர் நக்
     12   கனார்.....
3                  கல்வெட்டு எண். 216 (கொங்குநாட்டுக் கல்வெட்டுகள்-கோயம்புத்தூர் மாவட்டம்-நூல்.)
வரி  3  .......பேரூர்நாட்டு
     4  வெள்ளலூர் ஆளுடையார்
        5   தென்னூராண்டார் கோயிற்


கல்வெட்டில், “அன்னதான சிவபுரியில்   என்னும் தொடர் காணப்படுகிறது. அன்னதான சிவபுரி என்பது வெள்ளலூருக்கு வழங்கிய மற்றொரு பெயராகும். இதற்குச் சாண்றாகப் பின்வரும் கல்வெட்டைக் குறிப்பிடலாம்.

கல்வெட்டு எண். 212 (கொங்குநாட்டுக் கல்வெட்டுகள்-கோயம்புத்தூர் மாவட்டம்-நூல்.)

வரி  6   பேரூர் நாட்டு அன்
7                னதான சிவபுரியான
8                வெள்ளலூர்...


காசி அப்பச்சி கோயில் கல்வெட்டில், பொற்கோயிற் கைக்கோளர்  என்னும் தொடர் உள்ளது. இத்தொடர், கைக்கோள வீரர்களைக் கொண்ட படையினரைக் குறிக்கும். கி.பி. 10-ஆம் நூற்றாண்டுச் சோழர் காலக் கல்வெட்டுகளில் குறிப்பிடப்படும் பல்வகைப் படையினரில் கைக்கோளர் படையினரும் ஒருவர். “பொற்கோயில்  என்னும் ஒருவகைச் சிறப்பு அடையாளத்தை அல்லது பட்டத்தைச் சிலருக்கு அரசர் வழங்கியிருத்தல் வேண்டும். ஏனெனில், மேற்சொன்ன படையினர் அல்லாது மக்கட்குடிகள் சிலருக்கும் இந்தப் பட்டம் இணைந்து வருவதைக் கீழ்க்காணும் கல்வெட்டு வரிகள் தெளிவாக்குகின்றன.

1) செய்யாறு வட்டம்-திருவோத்தூர் வேதபுரீசுவரர் கோயில் கல்வெட்டு. (க.வெ. எண். 112/ தொல்லியல் துறை ஆண்டறிக்கை 102/1900.)

“பொற்கோயில் கைக்கோளப் பெரும்படையர்க் குடி

2) திருவண்ணாமலை வட்டம்-செங்கம் ரிஷபேசுவரர் கோயில் கல்வெட்டு. (க.வெ. எண். 118/ தொல்லியல் துறை ஆண்டறிக்கை 106/1900.)

பொற்கொற்ற கைக்கோளரும்” 

3) காஞ்சிபுரம் வட்டம்-செவ்வல்லிமேடு கயிலாசநாதர் கோயில் கல்வெட்டு. (க.வெ. எண். 45/ தொல்லியல் துறை ஆண்டறிக்கை 42/1900.)

இக்கோயிலில் பொற்கோயில் ஆசாரி எழுத்து

கோயில், கொற்றம் ஆகிய சொற்கள் அரசு, அரசர், அரண்மனை ஆகியவற்றோடு தொடர்புடையன என்பது கருதத்தக்கது.

நமது வெள்ளலூர்க் கல்வெட்டிலும் இந்தப் பொற்கோயில்”  அடைமொழி பெற்ற கைக்கோளர் குறிப்பிடப்படுகின்றனர். முதன்மைச் சோழர் ஆட்சியில் வழங்கிய இச்சிறப்புப் பெயருடைய கைக்கோளர், கொங்குச் சோழர் ஆட்சியில், கொங்குப்பகுதியிலும் கி.பி. 12-14-ஆம் நூற்றாண்டுகளில் இருந்துள்ளனர் என்பது புலனாகிறது. சிறப்புப் படைப்பிரிவினரான கைக்கோளர் வெள்ளலூரில் இருந்துள்ளனர் என்பது, வெள்ளலூர் ஊரின் முதன்மையை, சிறப்பைக் காட்டுகிறது எனலாம். ஏனெனில், வெள்ளலூர், பேரூர் நாட்டுபகுதியில் சிறப்புப் பெற்ற ஒரு வணிக நகரமாக இருந்துள்ளது; வணிகப் பெருவழியில் அமைந்திருந்தது; உரோமானிய வணிகர்கள் வெள்ளலூர் வழியாக வணிகம் செய்துள்ளனர்; உரோமானிய நாணயங்கள் இங்கு ஏராளமாகக் கிடைத்துள்ளன. குறு நிலத்தலைவனான ஒரு வேளிரின் தலை நகராக இருந்துள்ளது. அதன் காரணமாகவே “வேளிலூர்”   எனப் பெயர் பெற்ற இந்நகரம் “வெள்ளலூர்”  எனத் திரிந்திருக்கவேண்டும் எனத் தொல்லியல் அறிஞர்கள் கருதுகின்றனர்.

கல்வெட்டில் தென்னுராண்டார் திருக்குளம் பெரியநாச்சியார் வாரம்”  என வரும் தொடர், கோயிலைச் சேர்ந்த திருக்குளத்தால் பெறப்படும் வருவாய், நாச்சியார் என்னும் அம்மனுக்கு வேண்டிய வழிபாட்டுச் செலவினங்களுக்குப் பயன்பட்டிருக்கக் கூடும் என்பதைத் தெரிவிப்பதாகத் தொல்லியல் அறிஞர் திரு. பூங்குன்றன் கருதுகிறார்.

தென்னூர் ஆண்டார் -  தேனீசுவரர் மாற்றம்
தென்னூர் என்னும் பழம்பெயர் கொண்ட ஊரில் கோயில்கொண்ட  இறைவர் தென்னூர் ஆண்டார் என வழங்கபெற்றார். காலப்போக்கில், பழம்பெயர்கள் பெருஞ்சமயத்துத் தாக்கத்தினால் வடமொழிப் புனைவு பெற்றுத் தம் பழமையை இழந்தன. எடுத்துக் காட்டாக, தென்கொங்கில் கடத்தூரில் மருதமரத்துடனான தொடர்பால் “மருதுடையார்”  என்று பெயரமைந்த இறைவன் “மருதீசர்என்றும், பின்னர் “அர்ஜுனேசுவரர்”  என்றும் மாற்றுப்பெயரால் அழைக்கப்பெற்றது வடமொழித் தாக்கத்தால்தான். அர்ஜுனம்என்பது மருத மரத்தைக்குறிக்கும் வடமொழிச் சொல்லாகும். இவ்வாறே, தென்னூராண்டார்,  தேனீசுவரர் ஆனார். அதற்கேற்பப் புனைவுகள் ஏற்பட்டிருக்கவேண்டும். தினமலர்”  நாளிதழின் இணையதளமான “கோயில்கள்”  என்னும் தளத்தில், தேன் ஈயினால் பூஜிக்கப்பட்டதால் மூலவருக்கு தேனீஸ்வரர் என்ற பெயர் வந்தது”  என்னும் செய்தி காணப்படுகிறது. இது புனைவே அன்றி வேறென்ன?

அன்னதான சிவபுரி-பெயர்க்காரணம்
நமது வெள்ளலூர்க் கல்வெட்டில் அன்னதான சிவபுரி என்னும் பெயர் உள்ளது. இப்பெயர் வெள்ளலூருக்கு எவ்வாறமைந்தது என்பது ஆய்வுக்குரியது. ஆனால், வெள்ளலூர் ஆளுடையார் எனக் குறிப்பிடும் கல்வெட்டு, அன்னதான சிவபுரியில் பொற்கோயில் கைக்கோளர்என்றும் குறிப்பிடுவதால், கோயில் அமைந்திருந்த பகுதி வெள்ளலூர் என்றும், கைக்கோளர் இருந்த பகுதி (வெள்ளலூர் நகரத்தின் வேறொரு பகுதி) அன்னதான சிவபுரி என்றும் வழங்கியிருக்கவேண்டும் எனக் கருதலாம். தமிழறிஞர் ரா.பி. சேதுப்பிள்ளையவர்கள் தம்முடைய “ஊரும் பேரும்”  நூலில்,

அன்னதானத்தால் அழியாப் புகழ் பெற்ற
வள்ளல் ஒருவரது ஞாபகச் சின்னமாக இவ்வூர் விளங்குகின்றது என்று
கூறலாகும். ”  

என்று குறிப்பிடுகிறார். எனவே, வள்ளலூர் என்பது வெள்ளலூர் என மருவியது என்பர்.


வெள்ளலூருக்கு இன்னொரு பெயரும் உண்டு
வெள்ளலூருக்கு இன்னொரு பெயரும் உண்டு என்பது தெரியவந்துள்ளது. அண்மையில், இங்குள்ள கரிவரதராசப்பெருமாள் கோயிலில் திருப்பணிகள் செய்யப்பெற்றுக் குடமுழுக்கு நடந்தேறியது. அப்போது கருவறை விமானத்தின் ஜகதிப்படையில் கல்வெட்டுகள் புலப்பட்டன. அதில் ஒரு பகுதியில், வெள்ளலூருக்கு அதிராசராசச் சருப்பேதிமங்கலம்”  என்று பெயர் வைத்த செய்தி காணப்படுகிறது. அதிராசராசன் (அதிராஜராஜன்) என்பவன் வீரகேரள அரசன். அவனது ஆட்சிக்காலம் கி.பி. 1069-1092.  அவனை அடுத்து வந்த அரசர்களின் ஆட்சிக்காலத்தில், வெள்ளலூரைப் பிராமணர் குடியிருப்பாக ஆக்கியிருக்கலாம். பிராமணர் குடியிருப்பு “சதுர்வேதி மங்கலம்  என்று அழைக்கப்பட்டது. சில கல்வெட்டுகளில், “சருப்பேதிமங்கலம்  எனவும் பயின்றுவரும். மேற்படி கல்வெட்டின் பகுதியின் பாடம்:


1         ட்டு .......(ஸ்ரீ க்ருஷ்ண) பட்ட ஸோமையாஜியார்..............
2         க்களுக்கு .......பேரூர் நாட்டு வெள்ளலூரான அதிராசராசச்
3         சருப்பேதிமங்கலம் என்று தங்களுக்கு (வேண்டு) பிராமண(ர்)
4         .....குளத்துக்கு நான்கெல்லை ஆவது கீழ்பாற்கெல்லை
5         ............................................................................................................


       அதிராசராசச் சருப்பேதிமங்கலம் - குறிப்புள்ள கல்வெட்டு



காசி அப்பச்சி கோயில் கல்வெட்டின் முழுச்செய்தி
வெள்ளலூரில் அன்னதான சிவபுரியில் இருக்கும் பொற்கோயில் கைக்கோளர் படையினர், வெள்ளலூர் சிவன் கோயிலில் எழுந்தருளியிருக்கும் இறைவன் தென்னூர் ஆண்டாருக்குத் திருக்குளம் அமைத்துக் கொடுத்துள்ளனர் என்பதாகவும், குளத்தின் வருவாய் அம்மன் வழிபாட்டுச் செலவினங்களுக்குப் பயன்படுத்தப்படவேண்டும் எனக் கல்வெட்டு எழுதிவைத்துள்ளனர் என்பதாகவும் கொள்ளலாம். இந்தத் தன்மத்தைக் கோயிலின் நிருவாகத்தில் இருக்கும் பந்மாகேசுவரர் கண்காணித்துப் பாதுகாக்கக் கடமைப்பட்டவர் ஆவார் என்று கல்வெட்டு தெரிவிக்கிறது.

முடிவுரை
வெள்ளலூர், பழங்காலத்தில் பன்முகச் சிறப்புகளைப் பெற்ற ஒரு நகரமாக இருந்துள்ளமை புலப்படுகிறது. கோவை என்னும் கோவன்புத்தூர் உருவாவதற்கு முன்னரே கிரேக்க வணிகர்கள் வந்து போன நகரமாக இருந்துள்ளது. கி.பி. முதல் நூற்றாண்டளவிலேயே வெளிநாட்டு வணிகத்தொடர்புடையதாய் விளங்கிற்று என அறிகிறோம். இங்கு, பிராமணச் சதுர்வேதி மங்கலம் ஒன்று இருந்துள்ளது என்பதையும் அறிகிறோம்.


----------------------------------------------------------------------------------------------------
து.சுந்தரம், கல்வெட்டு ஆராய்ச்சியாளர், கோவை.
அலைபேசி :  9444939156.