மொத்தப் பக்கக்காட்சிகள்

திங்கள், 13 நவம்பர், 2017

தொல்லியல் தடயங்களைத் தேடி-சாலைப்புதூர்

முன்னுரை
நண்பர் துரை பாஸ்கரன், தாம் பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னர் பார்த்திருந்த சில பழங்கோயில்களை நினைவு கூர்ந்து, அவற்றை இப்போது சென்று பார்க்கலாமா என்று அண்மையில் கேட்டிருந்தார். தொல்லியல் தடயங்களைத் தேடும் ஆர்வத்தால் ஒப்புக்கொண்டேன். நீண்ட நாள்களுக்குப் பின்னர் இக்கோயில்களின் நினைவு வந்த காரணம் பற்றிக் கேட்டபோது அதன் பின்னணியைக் கூறினார். பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னர், மலையேற்றப் பயிற்சி பெற்ற நண்பர்கள் சிலர் கோவையில் ஒரு குழு அமைத்து இயங்கிவந்தார்கள். அப்போது, குழுவைச் சேர்ந்த ஒருவர், சாலைப்புதூர் அருகில் விண்ணிலிருந்து வீழ்ந்த எரிகற்கள் கிடைப்பதாகக் கூறவே, குழு நண்பர்கள் சிலர் அவற்றைப் பார்ப்பதற்காகச் சாலைப் புதூர் சென்றுள்ளனர்.    அந்நிகழ்வைக் குழுவினருள் ஒருவரான சின்ன சாத்தன் என்பார் தாம் எழுதிய “வனவலம்”  என்னும் நூலொன்றில் விண்கற்களைத் தேடி ஒரு பயணம்என்னும் கட்டுரையில் எழுதியிருக்கிறார். அதில், பயணத்தின்போது பார்த்த ஓரிரு பழங்கோயில்கள் பற்றிய குறிப்பும் காணப்படுகிறது. அந்த நூலை அண்மையில் பார்க்க நேர்ந்த நண்பர் துரை பாஸ்கரன் மீண்டும் அங்கு சென்று பார்க்கும் விழைவால் என்னை அழைத்துள்ளார். சென்ற 11-11-2017 அன்று, நண்பரும், நானும் சாலைப்புதூர் நோக்கிப் பயணம் மேற்கொண்டோம். அதன் பகிர்வு இங்கே.

பயணம்
பல்லடம்-உடுமலை சாலையில் அமைந்துள்ளது சாலைப்புதூர். அங்கே, சாலையோரத் தேநீர்க் கடையில், தொகுப்பாக இருக்கும் பழங்கோயில்களின் இருப்பிடம் பற்றிக் கேட்டறிந்தோம். சாலைப்புதூரிலிருந்து கிழக்கே பிரியும் வண்டித் தடத்தில் எங்கள் நடைப் பயணம் தொடங்கியது. நண்பர், கல்லூரியில் தாவர இயலும் படித்தவர். பறவைகளைக் கண்டறியும் முறையையும் கற்றிருக்கிறார். எனவே, பயணத்தின்போது வழியில் செடிகளைப் பற்றிப் பேசிக்கொண்டும் சில செடிகளை இனம் கண்டு காண்பித்துக் கொண்டும் வந்தார். அண்மைக்கால மழைப்பொழிவினால், வண்டித்தடம் ஒரு மண்பாதை. இரு புறமும் செடிகளும் செடிகளுக்கப்பால் சோளப்பயிரும் சூழ்ந்து பசுமை கூட்டின. நகரத்தின் ஒலி, காற்று மாசுகளினின்றும் நமக்கு விடுதலை அளித்த ஓர் அழகான சூழல்.

                                         அழகான வண்டிப்பாதை


                         நரிக்கற்களால் அமைந்த வேலிச் சுவர்


 பாதையில் ஒரு சில இடங்களில், பயிர் நிலங்களின் எல்லையாக நிற்கும், கற்களாலான சுற்று வேலிச்சுவர். சிறு சிறு கற்கள்; நெருக்கமாக அடுக்கிச் சுவராக்கியிருந்தார்கள். இவற்றை “நரிக்கல்”  எனக்குறிப்பிடுவர் என்று நண்பர் தெரிவித்தார். பாதையின் இரு புறங்களிலும் பல்வேறு செடிகள். நண்பர் வேலிப்பருத்தி என்று ஒரு செடியைக் காட்டினார். இன்னொரு செடியைச் சூரல் கொடி எனசொன்னார். சூரல் கொடியை (செடி?) இப்போதுதான் நான் காண்கிறேன். இந்தச் சூரல் கொடி மிகுந்து காணப்பட்டதால் சூரலூர் என்று தற்போதுள்ள சூலூரின் பெயர் வழங்கியது என்று தொல்லியல்-கல்வெட்டு அறிஞர் பூங்குன்றன் அவர்கள் குறிப்பிட்டது நினைவுக்கு வந்தது. கல்வெட்டுகளிலும் சூரலூர் என்றே சுட்டப்பெறுகிறது. பெயர் தெரியாத ஒரு காட்டுச் செடியில், ஊதா வண்ணத்தில் மலர் ஒன்று பூத்திருந்தது ஓர் அழகான காட்சி. வேலிக்கல்லின் மீது ஓர் ஓணான் தலையைத் தூக்கி நின்றுகொண்டிருந்தது.

                     சூரல் கொடி 

           வேலிப்பருத்தி

                  ஊதாப்பூ


                  வேலிக்கல்லில் ஓணான்


கோயில் வளாகம்
பதினைந்து நிமிட நடைக்குப் பின்னர் ஒரு கோயில் வளாகத்தை அடைந்தோம். அங்கே நாலைந்து கோயில்கள் காணப்பட்டன. கோயில்கள் பற்றிக் கேடடறிய அங்கே எவரும் இல்லை. ஒன்றில் பெரிய குதிரையின் உருவத்தின் அடிப்பகுதியில் இருந்த தற்காலத்துக் கல்வெட்டு, அது, கரையாம்பாளையம் மதுரை வீரன் கோயில் என்றது. கல்வெட்டில் காணப்பட்ட துந்துபி ஆண்டு 1982-ஐக் குறிக்கும். மற்றொரு கோயில் பத்ரகாளியம்மன் கோயில் என்று பின்னர் அறிந்தோம். இக்கோயிலின் விமானம் சாலை அமைப்பைக் கொண்டிருந்தது. இரண்டு அடுக்கு கிரீவப்பகுதியில் சிற்ப வேலைப்பாடுகள் இன்றி, வெறுமையான சுவர்களே காணப்பட்டன. உச்சியில் மூன்று கலசங்கள். கோயிலின் முன்புறத்தில் உள்ள கல்லாலான விளக்குக் கம்பம் தவிர்த்து கருவறை, மண்டபம் ஆகியன செங்கல் கட்டுமானம். முழுதும் சுண்ணம் பூசப்பெற்று வெண்மை நிறத்தில் காணப்பட்டது. பழங்கோயிலின் ஓரிரு கற்கள் மண்ணில் கிடந்தன. ஒரு மரத்தடியில், பலகைக் கல் பரப்பின்மீது மூன்று சிறு கற்கள், இரு பெரிய கற்கள் என ஐந்து கற்கள் பதிக்கப்பெற்றிருந்தன. எவ்விதச் சிற்பச் செதுக்கல்களும் இல்லாமல் இயல்பாய்க் கற்களை ஐந்து, ஏழு என வரிசையாய்ப் பதித்து வைத்து வழிபடும் வழக்கம் நாட்டுப்புறங்களில் நம் காணும் காட்சிகளுள் ஒன்று. இது பற்றி சக்தி பிரகாஷ் என்பவர் தம் முக நூலில் கீழ்க்கண்டவாறு பதிவிட்டுள்ளார்:

                    கோயில் வளாகம்

                                 மதுரை வீரன் கோயில் குதிரை


                                        பொட்டுசாமி 

கொங்குப் பகுதியில் பெருவாரியான ஊர்களில் இன்றளவிலும் மக்களால் வணங்கப்படும் ஒரு தெய்வம்தான் "பொட்டுசாமி". இந்த பொட்டுசாமி நமது தொன்ம வழிபாடான நடுகல் வழிபாட்டின் நீட்சியாக கருதலாம்.
கொங்குப்பகுதிகளில் பொட்டு சாமியை ஊர் மந்தையிலும், குலதெய்வக் கோவில்களிலும், பிள்ளையார் மாரியம்மன் கோவில்களுக்கு நடுவிலும், நடுகற்களின் அருகிலும் காணலாம்.
பொட்டுசாமியை 1,3,5,7,9 என வரிசையாக கூர்மையான கற்களை நட்டு வழிபடுவர் . சில இடங்களில் அதற்கு வெள்ளையடித்தும் , சிவப்பு கருப்பு இட்டும் வழிபடுகின்றனர் . பெரும்பாலும் தனிமேடை அமைத்து அதன்மீது வைக்கப்பட்டுள்ளது.
இங்கே ஐந்து கற்களின் வழிபாட்டு வடிவமும் பொட்டுசாமியாகலாம். கோயில் வளாகத்தில் விளக்குக் கம்பத்துடனும், சிங்க ஊர்திச் சிற்பத்துடனும் கூடிய இன்னொரு அம்மன் கோயிலும், மேலும் மூன்று சன்னதிகள் கொண்ட ஒரு வரிசையும் இருந்தன. இந்த வளாகம் முழுதும் பல கோயில்கள் இருந்தும் தொன்மைச் சான்றுகளோ, கல்வெட்டுகளோ இல்லாதது எங்கள் பயண நோக்கத்துக்குப் பயன் விளைவிக்கவில்லை.

மேற்கு சடையம்பாளையம் கண்டியம்மன் கோயில்
அடுத்து, ஓர் இருபது நிமிட நடையில், தென்னந்தோப்பு ஒன்றைச் சுற்றிச் சென்ற மண்பாதையில் நடந்தும் ஓர் ஆற்றுப்பள்ளத்தைக் கடந்தும் சென்ற பின்னர் நாங்கள் சென்றடைந்தது கண்டியம்மன் கோயில். இது, சடையம்பாளையம் மூவர் கண்டியம்மன் கோயில் என்றும், தலை கண்டியம்மன் கோயில் என்றும் இரு பெயர்கள் கொண்டிருக்கிறது. கோயில் வளாகத்தில் முதன்மையாக விளங்கும் கண்டியம்மன் கோயிலோடு, பஞ்சகன்னியர் சன்னதி, வினாயகர் சன்னதி என இரு சிறு கோயில்கள். கண்டியம்மன் கோயிலின் கருவறை விமானம் ஒரு தளக் கிரீவத்துடனும் சாலை அமைப்பைக் கொண்ட சிகரத்துடனும் காணப்படுகிறது.. நாயக்கர் காலக் கட்டுமானங்களுக்குப் பின்னர் 19-ஆம் நூற்றாண்டின் காலத்துக் கட்டுமானச் சாயல் எனலாம். இவ்வகைக் கோயில் விமானங்களில் தளச் சிற்பங்களின் (சுதைச்சிற்பங்கள்) வேலைப்பாடுகளிலும் உருவங்களிலும் அழகோ, திருத்தமோ காணப்படுவதில்லை. மனித உருவச் சிற்பங்களும் இயல்புக்கு ஒவ்வாத நீளங்களில் கைகளையும், கால்களையும் கொண்டு காட்சியழகு சிறிதுமின்றிக் காணப்படுகின்றன. சாலைச் சிகரத்தின் ஒரு புறம், மடியில் மனைவியை இருத்திய தோற்றத்தில் விநாயகர் சிற்பம் உள்ளது. மற்றொரு புறம் மூன்று முனிவர்களின் சிற்பங்கள். ஒரு முனிவர் புலித்தோலின் மீது அமர்ந்திருக்கிறார். புலித்தலை நன்கு புலப்படுகிறது. மற்றொரு புறம் மகரதோரணத்தின் நடுவிலும் ஒரு முனிவர் சிற்பமே காணப்படுகிறது. விமானச் சிற்பங்களில் முனிவர்களின் உருவங்களைத் தவிர கடவுளர்களின் உருவங்கள் இல்லாதது வியப்புக்குரியதாகும்.

                                      மூவர் கண்டியம்மன் கோயில்


நடுகல்லும் சதிக்கல்லும்
கோயில் வளாகத்தில் கண்டியம்மன் தவிர மேலும் இரண்டு சிறிய கருவறை விமானங்கள் உள்ளன. ஒன்று பஞ்சகன்னியர் சன்னதி என்று பூசையாளர் தண்டபாணி கூறினார். ஆனால், கருவறையில் ஐந்து கன்னியர் சிற்பங்கள் இல்லை. மூன்று ஆண் உருவச் சிற்பங்களும், இரண்டு பெண்ணுருவச் சிற்பங்களும் காணப்படுகின்றன. வீரர்கள் இருவரின் நினைவாக எழுப்பப்பட்ட நடுகல்லும், வீரர்களின் மனைவிகளின் சதிக்கல்லும் சேர்ந்த ஒரு தொகுதியாக இச் சிற்பக்களைக் கருதலாம். நாயக்கர்காலச் சிற்பங்கள். வீரர்களில் ஒருவர் தன் வலப்பக்கத்தில் வாளைத் தரையில் பதித்துவைத்தவாறு கைகூப்பி வணங்கும் நிலையில் உள்ளார். இன்னொரு வீரர் தம் இடக்கையைத் தொடையில் பதித்தவாறும் வலக்கையில் ஒரு மதுக்குடுவையைப் பிடித்த நிலையிலும் காணப்படுகிறார்கள். மூன்றாவதாக ஒரு வீரர் தண்டம் போன்ற ஒன்றைத் தரையில் பதித்துவைத்தவாறு கைகூப்பி வணங்கும் நிலையில் உள்ளார். இவருடைய இடைக்கச்சில் குறுவாள் காணப்படுகிறது. ஆண்கள் இடப்புறமாகவும், பெண்கள் வலப்புறமாகவும் கொண்டை முடிந்துள்ளனர். ஆண், பெண் அனைவரும் காதணிகளும், கழுத்தணிகளும் அணிந்திருக்கிறார்கள். அனைவரது ஆடை அமைப்பிலும் அழகுறக் காட்டப்பட்டுள்ளன. தொல்லியல் தடயங்களைத் தேடி வந்த எங்கள் பயணத்தில் முதன் முறையாக ஒரு நடுகல் தடயம் கிடைத்ததில் மகிழ்ச்சியும் நிறைவும் ஏற்பட்டன.

                  நடுகல் - சதிக்கல் சிற்பங்கள்

கல்வெட்டு
பூசையாளர், எழுத்துகள் உள்ள இரண்டு துண்டுக் கற்களைக் காட்டினார். எழுத்துகள் இருக்கும் பக்கம் கீழ்ப்புறமாகத் தரையில் மறைந்தவாறு இருக்கவே அவற்றைப் புரட்டித் திருப்பினோம். முதலில் புதிய கல்வெட்டு கிடைத்த என் மகிழ்ச்சி மறைந்தது. காரணம், இந்தக் கல்வெட்டை நானும் நண்பர் தென்கொங்கு சதாசிவமும் 03-10-2013 அன்று ஒரு மாலை நேரத்தில் வந்து பார்ர்த்துச் சென்றுள்ளோம். எழுத்துகள் மிகவும் சிதைந்து போனமையால் படிக்க இயலவில்லை. இருப்பினும் பழைய ஒளிப்படங்கள், இப்போது எடுத்த ஒளிப்படங்கள் ஆகியவற்றை ஒப்பிட்டுப் பார்த்ததில் சில எழுத்துகள் அடங்கிய பாடத்தைக் கீழே தந்துள்ளேன்.

                        கல்வெட்டுகள்




கல்வெட்டுப்பாடம்
முதல் துண்டுக்கல்:
1 ண்ண
2 சோழன்
3.........
 4 ஊரு (ட)
5 டையரா
6 கிய செ
7 நாயனா
8 ர் (ற்) அ
9 ண்ண
10 யனா
11 கு (ள)
12 மகன்
13 த்தொ
14 ம்

இரண்டாவது துண்டுக்கல்
1 ........
2 ..........
3 நானா ட
4 ............ந
5 .............
6 ன
7  ற ட ய

மேற்படி கல்வெட்டுப்பாடத்திலிருந்து தெளிவான செய்திகள் எவையும் புலப்பட்வில்லை. எனினும், “உடைய”,  “நாயனார்”,  ”ஊரு”  “மகன்”  போன்ற சில சொற்களைக்கொண்டு யூகமாகப் பொருள் கொண்டால், சோழன் என்னும் சிறப்புப் பெயர் கொண்ட ஒருவன் கோயிலுக்குக் கொடை அளித்துள்ளான் எனலாம். “நாயனார்”  என்பது சிவன் கோயில் இறைவனைக் குறிக்கும் சொல். ஆனால் இங்கே அம்மன் கோயிலில் கல்வெட்டு உள்ளது. வேறெங்காவது இடத்திலிருந்து இக்கற்கள் பெயர்த்துக் கொண்டுவரப்பட்டனவா என்னும் ஐயமும் எழுகிறது.
கண்டியம்மன் கோயிலைப் பார்த்துவிட்டுத் திரும்பும் வழியில், ஆற்றுப்பள்ளத்தில் சிறு சிறு பானை ஓட்டுச் சில்லுகள் கிடைத்தன. ஆங்காங்கே, இரும்புக்கசடுகளின் (Iron slag) துண்டுகள் கிடைத்தன். பானையோட்டுச் சில்லுகள், வரலற்றுக்கு முந்தைய பெருங்கற்காலத்துப் பொருள்களாக அறியப்படுவதால் இப்பகுதியில் பழங்கால வாழ்விடமோ, ஈமக்காடோ இருந்திருக்கவேண்டும் எனக் கருதலாம். இரும்புக் கசடுகள் கிடைப்பதால் இப்பகுதியில், இரும்பை உருக்கி ஆயுதங்கள் செய்யும் தொழில் நடைபெற்றிருக்கலாம் எனவும் கருதலாம். வழியில் யாரோ பிடுங்கியெறிந்த ஒரு காந்தள் செடியைக் காண நேர்ந்தது. சற்றே வாடியிருந்தாலும் அதன் அழகு மங்காத அழகு.

 அனுமந்தப் பெருமாள் கோயில்
பகல் இரண்டு மணிக்கு மேல் பகலுணவை முடித்த பின், தேநீர்க்கடையில் சந்தித்த சிலரிடம் பேசியதில் பெரியபட்டியில் பழங்கோயில் உள்ளதெனச் செய்தி கிடைத்தது. பெரியபட்டி சென்றோம். அங்கு ஒருவர் சுட்டிய பெருமாள் கோயிலுக்குச் சென்றோம். உப்பாற்றின் கரையோரம் கோயில் அமைந்திருந்தது. அநுமந்தப் பெருமாள் கோயில் என்பது பெயர். ஆனால், கோயிலின் பெயர் சொல்ல ஒரு பெயர்ப்பலகை கூட இல்லை. கோயிலுக்குள் குறிப்பிடும்படியாகக் கல்வெட்டுகள் இல்லை. ஒரே ஒரு எழுத்துப் பொறிப்பு எங்களுக்குக் கிட்டியது. கோயிலின் தெற்குச் சுற்றில் மேடை மீது வீற்றிருக்கும் ஒரு நாகச் சிற்பம். சற்றே பெரிதாக இருந்தது. நாகத்தின் உடல் வளைவுகள் மூன்றுடன் தலைப்பகுதியில், காளிங்க நர்த்தனத்தை நினைவூட்டும் வகையில் கண்ணனின் ஆடுகின்ற தோற்றத்துடன் கானப்பட்டது. சதுரப் பீடத்தின் மையப்பகுதியில் ஒரு மனித உருவமும் அதனைச் சுற்றிலும் உள்ள இடைவெளியில் சில எழுத்துகளும் காணப்பட்டன. “அனுமந்”  என்னும் இறுதிச் சொல் படிக்க இயன்றது. இதன் தொடர்ச்சியாக, நாகத்தின் பக்கப்பகுதியில், பீடத்தில் சில எழுத்துகள் பொறிக்கப்பட்டிருந்தன. அவற்றைப் படிக்க இயன்றது. முழுப்பாடமும் கீழ் வருமாறு:

           அனுமந்தப் பெருமாள் கோயில் - உப்பாற்றங்கரை



                                    நாகச் சிற்பம் - கல்வெட்டுடன்

                                            கல்வெட்டு

கல்வெட்டுப் பாடம்:
1 அனுமந்
2 த ராம
3 ர் பூசாரி
4 சென்ன
5 பெருமா
 6 ள் தாசன்
7 மகன் ரங்
8 கா தாசன்

கல்வெட்டின் எழுத்துகள் மிகவும் பிற்காலத்து எழுத்துகள். 20-ஆம் நூற்றாண்டெழுத்துகள். சென்னப் பெருமாள் தாசன் என்பவனின் மகன் ரங்க தாசன் என்பவன் அமைத்துக் கொடுத்த நாக சிற்பம் என்பது கல்வெட்டுச் செய்தி. இக்கோயிலைப்பார்த்த பின்னர் ஊர் திரும்ப் நினத்தவேளை, பெரியபட்டி ஊருக்குள்ளேயே பாழடைந்த ஒரு கோயில் உள்ளதெனத் தெரியவந்தது. அதுவும் ஒரு பெருமாள் கோயில்.
பெரியபட்டிப் பெருமாள் கோயில்
பெரியதொரு வளாகம். கல்லும் மண்ணூம் கலந்து கட்டப்பெற்ற சுற்றுச் சுவர். வளாகத்தின் மையத்தில் பாழடைந்த நிலையில், கருவறை, அர்த்தமண்டபம், முன்மண்டபம் ஆகிய மூன்று கட்டுமானங்களைக் கொண்ட வெளிப்புறத்தோற்றம். நுழைவு மண்டபத்தின்  (முன்மண்டபம்) கதவு பூட்டியிருந்தது. பத்தடிக்கும் மேலான உயரமுள்ள ஆறு கல் தூண்கள் முன்மண்டபத்தின் முன்புறம் நின்றுள்ளன. வடக்குத் திருச்சுற்றில் இரண்டு நிலத்தடிக் கட்டுமானங்கள் காணப்பட்டன. கட்டுமானத்தின் மூல வடிவம் முற்றாய்க் கலைந்து வெறும் செங்கற்கூடாகக் காட்சியளித்தது. ஒன்று கிணறு போலத் தோற்றமளித்தது. இன்னொன்று நிலவறைச் சுரக்கம் போலத்தோற்றமளித்தது. (பின்னால் தெரிய வந்த செய்தி என்னவெனில் அவை இரண்டும் சிங்கமுகம் கொண்ட கோயிலின் தீர்த்தக் கிணற்றின் இரு பகுதிகள்).  பூட்டபெற்ற கதவின் வழியே பார்த்தபோது உள்ளே ஒரு விளக்கொளி தெரிந்தது.

                                  பெரியபட்டி அரங்கநாதப் பெருமாள் கோயில்

                     சிங்கமுகக் கிணறு


கோயிலைப்பற்றிய செய்திகளைத் தெரிந்துகொண்ட பிறகே ஊர் திரும்பவேண்டும் என்னும் ஆவலில் அருகே கேடறிந்து கோயிலின் பரம்பரைப் பூசையாளரைக் காணச் சென்றோம். பெரியபட்டிக்கருகில் உள்ள கள்ளப்பாளையத்தில் அவரது இருப்பிடம். ஐம்பத்தொன்பது அகவையுள்ள பூசையாளர் ஸ்ரீநிவாச ஐயங்கார். இவரது முன்னோர்கள் ஆதித்திருவெள்ளறை சோழியர் வழி வந்தவர்கள். திருவெள்ளறையிலிருந்து இடம் பெயர்ந்து வந்தவர்கள். அவர் கூறிய செய்திகள் இங்கே. கோயிலின் பெயர் அரங்கநாதப் பெருமாள் கோயில். கோயிலுக்கு நிறைய மானிய நிலங்கள் இருந்துள்ளன. தற்போது மிகக் குறைந்த அளவில் நிலம் உள்ளது. அருகில் உள்ள ஆமந்தக்கடவு ஜமீன் நிலக்கொடை கொடுத்துப் புரந்துகொண்டிருந்தது. கோயிலின் அன்றாட வழிபாடுகள் எவையும் நடைபெறுவதில்லை. மேற்படி
ஸ்ரீநிவாச ஐயங்காரின் தந்தையர்ர் காலத்திலிருந்தே பூசைகளின்றியும் தக்க பேணுதலின்றியும் கோயில் அதன் அழகை இழந்து நிற்கிறது. 
கோயிலின் உள்ளே கருவறை முதலிய இடங்கள் பெரும்பாலும் மரத்தால் ஆன கட்டுமானங்களைக் கொண்டவை. கோயிலின் உள்ளே யாரும் செலவதில்லை. சிதிலமடைந்த மரக்கட்டுமானங்களால், எந்நேரத்திலும் அவை கீழே வீழும் அச்சச் சூழ்நிலை. இருப்பினும், பூசையாளர் சிறுவயது முதற்கொண்டே உள்ள பழக்கம்கொண்டு நாள்தோறும் காலையில் கோயிலின் உள்ளே விளக்கேற்றி வருகிறார். கோயில், புதுப்பிக்க முன்வரும் புரவலரை எதிர் நோக்கிக் கோயில் காத்திருக்கின்றது.

ஆங்கிலேயர் காலத்து ஆவணம்
ஸ்ரீநிவாச ஐயங்கார் 1863-ஆம் ஆண்டு ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தைச்  சேர்ந்த ஒரு நில ஆவணத் தாளைக் காட்டினார். இனாம் ஆணையம் (INAM COMMISSION)  வழங்கிய நிலமானியம் பற்றியது. மேற்படி அரங்கநாதர் கோயிலுக்கு வழங்கப்பட்டது. TITLE DEED என்னும் தலைப்பில் வழங்கப்பட்ட இவ்வாவணத்தில் கோயில் என்பதற்குப் “பகோடா”  (PAGODA)  என்னும் சொல் ஆளப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 1919-ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட சொத்துப்பத்திரம் ஒன்றையும் காட்டினார்.

                 இனாம் ஆணையத்தின் ஆவணம் - 1863 

                இனாம் ஆணையத்தின் முத்திரை

                              அரசு முத்திரை 

                   1919-ஆம் ஆண்டுப் பத்திரம் 

முடிவுரை:
பெருமாள் என்றாலே செல்வமுள்ள கடவுள் என்னும் சூழலில், புதுக் கோயில்களை எழுப்ப நினைக்கும் பெரும் செல்வர்கள் ஒன்றிணைந்து இது போன்ற கோயில்களுக்குப் புத்துயிர் வழங்கலாம்.





---------------------------------------------------------------------------------------
து.சுந்தரம், கல்வெட்டு ஆராய்ச்சியாளர், கோவை.
அலைபேசி: 9444939156.
மின்னஞ்சல்  : doraisundaram18@gmail.com

வலைப்பூ : kongukalvettuaayvu.blogspot.in

திங்கள், 6 நவம்பர், 2017

குடிமங்கலம் கல்வெட்டு

முன்னுரை
24-10-2017 அன்று இணைய நண்பர் சேஷாத்திரி ஸ்ரீதரன் அவர்கள் எனக்கு ஒரு கல்வெட்டுப் படத்தை அனுப்பியிருந்தார். அதைப் பார்த்ததும் நான் மிக வியப்புற்றேன். வியப்புக்குக் காரணம் உண்டு. கல்வெட்டுகளின் படங்களை அவர் பகிர்வதும், அவற்றின் பாடங்களை நான் படித்துக் கல்வெட்டுகள் கூறும் செய்திகளைப் பதிவதும் வழக்கமாக நடைபெறுபவைதாம். ஆனால் இந்தக் கல்வெட்டுப்படம் மாறுபட்டது. 2011-ஆம் ஆண்டு நான் கண்டறிந்து படித்து ஆவணப்படுத்திய ஒரு கல்வெட்டின் படம் மீண்டும் என்னிடமே வந்தடைந்து படிப்பதற்காக என் முன்னால் காட்சியளித்தது. நான் வியப்படைந்ததில் வியப்பில்லை.  கல்வெட்டுப் படத்துடன் கல்வெட்டின் பாடத்தையும் நண்பர் அனுப்பியிருந்தார். செய்தியும் படமும் கிட்டிய மூலம், தென்கொங்கு சதாசிவம் என்பவரின் பதிவு என்பதையும் குறிப்பிட்டிருந்தார். கல்வெட்டின் முதல் பக்கத்தை ஆவணப்படுத்திய பின்னர் எனக்கு நண்பரானவர் தென்கொங்கு சதாசிவம். நானும் அவரும் பல இடங்களுக்கு ஒன்றாய்ச்  சுற்றியிருக்கிறோம். கல்வெட்டுகளைக் கண்டறிந்துள்ளோம்.  அவர் என்னுடைய பல கல்வெட்டுச் செய்திகளைப் பகிர்ந்துகொள்வதுண்டு. அவ்வாறு அவர் பதிந்த மூலத்தையே நண்பர் சேஷாத்திரி அவர்கள் தற்போது  பகிர்ந்துள்ளார். சதாசிவம் பதிந்துள்ள கல்வெட்டுப் பாடம் நிறையப் பிழைகளைக் கொண்டுள்ளது. அதுமட்டுமல்ல; ஆவணம்இதழில் ஆவணப்படுத்திய பாடத்திலும் சில பிழைகள் உள்ளன. இப்போது மீண்டும் படிக்கையில் சில திருத்தங்களைக் கண்டறிய முடிந்தது. எனவே, திருத்தங்களுடன் கூடிய சரியான பாடத்தையும், கல்வெட்டு கண்டறியப்பட்ட பின்னணியையும் இங்கு பகிர்ந்து கொள்கிறேன்.

கல்வெட்டுகளைத் தேடி
2010-ஆம் ஆண்டு. தமிழ்ப்பேராசிரியரும் கல்வெட்டு அறிஞருமான அவிநாசி மா.கணேசன் அவர்களோடு கல்வெட்டுகளைப் பார்த்தும் படித்தும் பயிற்சியில் ஈடுபட்டிருந்த காலம். கோவை மாவட்டக் கல்வெட்டுகள்”  (தமிழகத் தொல்லியல் துறை வெளியீடு) நூலை அடிப்படையாகக் கொண்டு நூல் பிடித்தவாறு, கல்வெட்டுகள் உள்ள கோயில்களுக்குச் சென்று பார்வையிடுதல், படித்தல், கல்வெட்டுப் பாடங்களைப் புரிந்துகொள்ளல் என்பதாகக் களப்பணிப் பயணங்கள் மேற்கொண்டிருந்தேன். அவ்வாறு செல்லும் இடங்களில் சந்திப்போரையெல்லாம் “இது போன்று கல்வெட்டுகள் வேறெங்காவது கண்டதுண்டா அல்லது கேள்விப்பட்டிருக்கிறீர்களா என்று கேட்டுக் கேட்டுத் தேடும் பணியையும் சேர்த்துக்கொண்டேன். தேடலின் முதல் பயணம் சூலூருக்கு அருகில் அமைந்த செலக்கரச்சல் சிவன் கோயிலாகத்தான் இருக்கும் என நினைவு. அப்பயணத்திலிருந்தே களப்பணி பற்றிய நாட்குறிப்பும் எழுதத் தொடங்கியாயிற்று.

4-2-2011 அன்று செலக்கரச்சல் பயணம். முதலில் சூலூர்; அங்கிருந்து செலக்கரச்சல். கல்வெட்டு நூல் குறிப்புப்படி செலக்கரச்சல் சிவன் கோயிலில் ஆறு கல்வெட்டுகள் இருக்கவேண்டும். ஆனால், கோயில் ஏற்கெனவே புதுப்பிக்கப் பட்ட நிலையில் கல்வெட்டுகள் இருந்த குமுதப்படைத் துண்டுகளும், ஜகதிப்படைத் துண்டுகளும் கோயிலுக்கு அருகில் ஊர்த் தெருக்களில் ஆங்காங்கே கேட்பாரற்றுக் குப்பைக் கழிவு போல எறியப்பட்டுப் புழுதியில் புரண்டு கிடந்தன. அவற்றையெல்லாம் ஒளிப்படம் எடுத்துப் பின்னர் செய்தி எழுதி இரு நாளிதழ்கள்களில் வெளியிட்டேன். செலக்கரச்சலிலிருந்து திரும்பும் பயணத்தில் நகரப் பேருந்தில் சிந்திலுப்பு தங்கையன் அறிமுகமானார். (நானே அறிமுகப் படுத்திக்கொண்டேன் என்பதுதான் மெய்.) அவரிடம் பேசியதில், பல்லடம்-உடுமலைச் சாலையில் குடிமங்கலம் நால் ரோடு”  அருகில் பெரிய பாறையில் கல்வெட்டு இருப்பதாகச் சொன்னார். நால் ரோடு பகுதியில் உள்ள வேளாண் அலுவலகத்தில் பணிபுரியும் பழநிச்சாமி என்பவரைப் பார்க்கவென்றும் குறிப்புக் கொடுத்தார்.

குடிமங்கலம் கல்வெட்டு
5-3-2011 அன்று, குடிமங்கலம் நோக்கிப் பயணம். குடிமங்கலம், உடுமலைக்கருகில் அமைந்துள்ள ஓர் ஊர். பல்லடம் வழியே நால்ரோடு அடைந்து பழநிச்சாமி அவர்களையும் பார்த்த பின்னர், அருகில் இருந்த அரசு மருத்துவ மனை வளாகத்தில் ஐந்தே முக்கால் அடி உயரத்தில், மூன்றரை அடி அகலத்தில் நெடிய தோற்றத்தில் காணப்பட்ட கல்வெட்டைப் பார்த்ததும் மலைப்பு; மகிழ்ச்சி. கல்வெட்டைப் படியெடுக்க வாய்ப்பில்லை. தற்போதுபோல் சுண்ணப்பொடி, மைதா/கடலை மாவு ஆகியவற்றில் ஒன்றைப் பூசிப்படமெடுக்கப் பழகவில்லை. ஒளிப்படக்கருவியில் படங்கள் எடுத்துக்கொண்டேன்.

கல்வெட்டுப் பாடம் படிப்பு
கல்வெட்டுப் படங்களைக் கணினி மூலம் படிக்க முயன்றதில், கல்வெட்டின் முதல் பக்கத்தை மட்டுமே படிக்க இயன்றது. கல்வெட்டின் முதல் பக்கத்தில் கல்வெட்டு வரிகள் மட்டுமே காணப்படுகின்றன. ஆனால், இரண்டாம் பக்கத்தில் நிலவும் கதிரும் புடைப்புச் சிற்பங்களாக வடிக்கப்பட்டுள்ளன. முழு வட்டமாகக் காணப்படுவது கதிரைக் குறிக்கும். பிறை வடிவில் உள்ளது நிலவைக்குறிக்கும். கல்வெட்டில் “இந்த தன்மம் சந்திராதித்தவரையும் செல்லக்கடவதாக”  என்று குறிப்பிடுவதற்கேற்றவாறு நிலவும் கதிரும் உருவமாகப் பொறிக்கப்பட்டுள்ளன. கல்வெட்டு குறிப்பிடும் தன்மம் தடையின்றி நெடுங்காலம் நிறைவேற்றப்படவேண்டும் என்பதன் பொருளாகவே நிலவும் கதிரும் உள்ளவரை என்னும் தொடர் கல்வெட்டுகளில் தவறாமல் இடம்பெறும். இரண்டாம் பக்கத்தில் வாமனரின் உருவமும் பொறிக்கப்பட்டுள்ளது சிறப்பானது. நிலக்கொடை பற்றிய கல்வெட்டு என்பதால், மூன்றடி நிலம் கேட்ட வாமனரின் உருவம் பொறிக்கப்பட்டது என்னும் கருத்து முற்றும் பொருந்துகிறது. கல்வெட்டுப் பாடம் கீழ்வருமாறு:

                    கல்வெட்டின் முதல் பக்கம்   


கல்வெட்டின் பாடம் முதல் பக்கம்.

1 ஸ்வஸ்திஸ்ரீ விஜயோத்3பு4தய சாலிவாகன சகாத்தம் உ
2 1458 ன் மேல் செல்லா நின்ற துன்
3 முகி வரு. அற்பசி மீ 27 உ துவாதெசியும் புத
4 வாரமும் உத்தர நக்ஷரமும் பெற்ற னாள் ஸ்ரீ
5ன் ராசாதிராசன் ராசபரமேசுரன் ஸ்ரீவீரப்பி  
6 றதாப ஸ்ரீவீரஅச்சுதராய மகாராயர் பிறுது
7 விராச்சியம் பண்ணி அருளாநின்ற காலத்து அந்
8 த அச்சுதராய மகாராயற்கு தெக்ஷிணாபுயா தெண்
9 டமான காவேரிவல்லபன் கடகசூறைக்கா
10 றன் விருதின் வாயுவந்தி விருதகஜாசிங்கன் பெ
11 க்கெத்து ராசுல ஒக்கெத்து கண்டன் மண்டலீ
12 க மகலராசன் உறையூற் புரவராதீசுரன் பொன்னா
13 ம்பலநாத ஸ்ரீபாதசேகர காசிபகோத்திரத்
14 து ஆபஸ்தம்ப சூத்திரத்து சூரிய வங்கித்தில் சோ
15 ழகுல ஒங்கர சென்னையதேவ மகாராசாவின் பு
16 த்திரரான ஸ்ரீமன் மகாண்டலேசுர வாலையதேவ மகா
17 ராசா நம்முடைய சுவாமி அச்சுத்தராய மகாராயற்கு பு
18 ண்ணியமாக தென்பொங்கலூற்கா நாட்டுப் பூளை
19 யபாடிக் கால்பள்ளியான பெரியமங்கலம் நம்முடை
20 ய சுவாமி அச்சுத்தராயற்கு புண்ணியமாக பிராம
21 ண சத்திரத்துக்கு ஸ்ரீலட்ஷிமி நாராயண பிறீதியாக து
22 வாதெசி புண்ணிய காலத்தில் சயீரண்ணிய உத
23 க தானம் தராபூறுவமாக சறுவமானியமாகக் கு
24 டுக்கையில் இந்த பிராமண சத்திரத்து பெரிய ம
25 ங்கலத்து னாற்பாங்கெல்லைக்கு விபரம் கீழ்பா
26 ங்கு எல்லை உடையார்கோயில் குளத்தேரி வ
27 ட கீழை மூலை தான்தோன்றிக்கு வழிக்கு மேற்கு
28 நாச்சியப்ப நயினான் காட்டுக்கு வடக்கு நட்ட வாம
29 முத்திரைக் கல்லு தென் மேலை மூலைக்கு எல்
30 லை சுங்கரரி முடக்குக் கரையில் ஒற்றைப்புளியி
31 ல் நட்ட வாமன முத்திரைக் கல்லு வடமேலை மூலை
32 க்கு எல்லை தும்முரேவுக்கு கிழக்கு கொண்டன்
33 பட்டி எல்லைக்கு தெற்கு நட்ட வாமன முத்திரைக்
34 கல்லு வட கீழை மூலைக்கு எல்லை பூளைய பா
35 டி வழிக்கு மேற்கு பிள்ளையாண்டான் குட்டை
36 க்கு தெற்கு நட்ட வாமன முத்திரை கல்லு இந்த னா
37 ற்பாங்கெல்லைக்கு உட்பட்ட நஞ்சை புஞ்சை
38 தோட்டம் தொடுகை மாவடை மரவடை ச.....டை
39 ....................................................மகமை கத்தி காவிலி புற...
40 .....................................................நிதி நிஷேம் செல தரு பாஷா


குறிப்பு:  சிவப்பு வண்ண எழுத்துகள் கிரந்தம். பச்சை வண்ண எழுத்துகளால் காட்டப்பெறுகின்ற “வாமன முத்திரைக் கல்லு”  என்னும் சொல் சிறப்புடையது. விளக்கம் பின்னர் வரும் பகுதியில் காண்க.


ஆவணத்தில் பதிதல்
கல்வெட்டின் பாடத்தையும் சுருக்கச் செய்தியையும் எழுதித் தொல்லியல் கழகத்துக்கு அனுப்பி வைத்தேன். அந்தப் பதிவு 2011-ஆம் ஆண்டின் “ஆவணம்”  இதழில் வெளியானது.

மீண்டும் குடிமங்கலம்
10-8-2013 அன்று, நண்பர் விழுப்புரம் தொல்லியல் ஆய்வாளர் வீரராகவன் அவர்களோடு குடிமங்கலம் சென்றேன். அவர், கல்வெட்டில் மை பூசிப் படியெடுப்பதில் வல்லவர். மைப்படி எடுப்பதற்குரிய தாளினைக் கல்வெட்டின்மீது ஒட்டி, அதன்பின்னர் மைபூசி எடுப்பது வழக்கமாகச் செய்வது. குடிமங்கலம் கல்வெட்டு ஏறத்தாழ ஆறு அடி உயரமும் மூன்றரை அடி அகலமும் கொண்ட பெருங்கல்லாயிருந்ததனால், கற்பரப்பின்மீது நேரடியாகவே மையை ஒத்தி எடுத்துப் படி எடுத்தார். எழுத்துகள் மிகத் தெளிவாகத் தெரிந்தன. இரு பக்கங்களின் பாடங்களும் கிடைத்தன. இருவரும் இணைந்து ஆவணம்-2014 இதழில் ஆவணப்படுத்தினோம்.

                 கல்வெட்டின் இரண்டாம் பக்கம்

கல்வெட்டின் பாடம் இரண்டாம் பக்கம்.

1 றும் எற்பேற்பட்ட சகல சுவாமியங்களும் பெரி
2 யமங்கலத்தில் பிராமண சத்திரத்துக்கு நடந்துவ
3 ரக்கடவதாகவும் இந்த தன்மம் ந்திராதித்தவரையும்
4 செல்லக்கடவதாகவும் என்று ஸ்ரீமன் காண்ட
5 லேசுர வாலைய மகாராச நம்முடைய சுவா
6 மி அச்சுத்தராயற்கு ப் புண்ணியமாக பிராமண
7 சத்திரத்துக்கு வைத்த தென்பொங்கலூற்கா
8 நாட்டுப் பெரியமங்கலத்துப் பிராமண சத்தி
9 ரத்து தன்மம் சாதனம் இந்த சத்திரத்தை பிராம
10 ணால் ஆராகலும் நன்றாக நடத்தி வந்தான் அ
11 ந்த பிராமணனே இந்தக் கிறாமத்தையும் அனு
12 பவித்துக்கொண்டு இந்த பிராமண சத்திரத்தையும்
13 நன்றாக நடத்திக்கொண்டு வரக் கடவானாக(வும்)
14 இந்த தன்மத்துக்கு யாதொருவர் அகிதம் பண்
15 ணினவர்கள் கெங்கைக் கரையிலே கபிலை
16 ப்பசுவையும் பிராமணரையும் மாதா பிதாவை
17 யும் குருக்களையும் கொன்ற பாவத்திலே போ
18 கக் கடவராகவும்

19-23            வரிகள் கிரந்தம்-சமற்கிருதம்

24 பூவிரியுங்காவறை தென்பொங்கலூற்கா நாட்
25 டில் வாவிதெறியும் பெரியமங்கலத்தைக் கூவ
26 நகாமன்னிளையாந் தென்னுறையும் ................
27 அருளால் மறையோற் கன்னமி..........................
28 கண்டான்

குறிப்பு:  சிவப்பு வண்ண எழுத்துகள் கிரந்தம்.

கல்வெட்டுச் செய்திகள்
விஜய நகரப் பேரரசின் அரசர்களுள் “துளுவ குடிவழியில் கிருஷ்ணதேவராயருக்குப்பின் ஆட்சியேற்றவர் அவரின் தம்பி (மாற்றாந்தாயின் மகன்) அச்சுத தேவ ராயர் ஆவார். அவரது ஆட்சிக்காலம் கி.பி. 1529 முதல் கி.பி. 1542 வரை (பாண்டியநாட்டு .வரலாற்று ஆய்வு மையம்-குறிப்பேடு). அவரது ஆட்சிக்காலத்தில், கி.பி. 1536-ஆம் ஆண்டில் வெட்டப்பட்டது இக்கல்வெட்டு. கல்வெட்டில் கொடுக்கப்பட்ட சாலிவாகன ஆண்டும், தமிழ் ஆண்டான துன்முகி ஆண்டும் கி.பி. 1536 ஆங்கில ஆண்டுடன் முற்றிலும் பொருந்துகிறது. கொங்கு நாட்டுப் பிரிவுகளில் ஒன்றான தென்பொங்கலூர்க்கா நாட்டைச் சேர்ந்த பூளையபாடிப் பெரியமங்கலத்தில் இருக்கும் நிலம் இப்பகுதியின் பிராமணச் சத்திரத்துக்குக் கொடையாக அளிக்கப்பட்ட செய்தியைக் கல்வெட்டு தெரிவிக்கிறது. அன்றைய பூளையபாடி இன்று பூளவாடி என்னும் பெயரில் பல்லடம்-உடுமலைச் சாலையில் உள்ளது.

கொடையாளி வாலையதேவ மகாராசா என்பவன். இவன் விஜய நகர் அரசர் அச்சுதராயரின் ஆட்சியில்,  கொங்குமண்டலத்தை நிருவாகம் செய்யும் மகாமண்டலேசுவரர் பதவியில் இருந்தவன். இவன் சென்னைய தேவ மகாராசாவின் மகன் என்று கல்வெட்டு தெரிவிக்கிறது. காசிப கோத்திரத்து ஆபஸ்தம்ப சூத்திரத்தைச் சேர்ந்தவன் என்றும், சூரிய வம்சத்தைச் சேர்ந்தவன் என்றும் கல்வெட்டு விரிவாகச் சொல்கிறது. கல்வெட்டின் நான்கு வரிகள் இவனுடைய மெய்க்கீர்த்தியைச் சொல்வதாக அமைகின்றன. இவன் கிருஷ்ணதேவராயர் ஆட்சிக்காலத்தில் கொங்குப்பகுதியில் ஒரு அதிகாரியாய் இருந்தவன்; பின்னர் அச்சுதராயர் ஆட்சிக்காலத்தில் தென்மண்டல அலுவலனாக உயர் பதவியில் இருந்துள்ளான். விஜய நகர அரசர்கள் இவனுக்குப் பரவலான ஆட்சி அதிகாரம் அளித்துள்ளனர் எனலாம். ஏனெனில், இவன் தன் பெயரில் பாலையன் புள்ளிப் பணம் என்னும் நாணயம் அச்சிட்டு வெளியிட்டுள்ளான். ஈரோடு மாவட்டம், பெருந்துறை வட்டம் குன்னத்தூரில் உள்ள இலட்சுமி நாராயணப் பெருமாள் கோயில் கல்வெட்டு இச்செய்தியைக் குறிக்கிறது.

இந்தியக் கல்வெட்டு ஆண்டறிக்கை எண் 180/1967-68
கல்வெட்டு வரிகள்:
    “ஸ்வஸ்திஸ்ரீ .............   குறுப்பு நாட்டுக் குன்றத்தூரில்........நாயனார் இலக்ஷ்மிநாராயணப் பெருமாள் கோயிலில்........பெருமாள் திருமுன்பே சந்தியா தீப விளக்கு எரிப்பதாக வாங்கின இராசி பாலையன் புள்ளி 12.....

குடிமங்கலம் கல்வெட்டில் வாலையதேவன்”  என இருப்பதையும், குன்னத்தூர் கல்வெட்டில் நாணயத்தின் பெயரில் “பாலையன்”  என்றிருப்பதையும் உன்னுக. தமிழில், “பா”   எழுத்து “வா”  எனத் திரிந்து வழங்குதல் இயல்பு.

பிற்காலக் கல்வெட்டுகளில் பாலயதேவன், வாலயதேவன் என்றும், பாலசுப்பன், வாலசுப்பன் என்றும் எழுதப்பெறுவது வழக்கம்.
                 -புலவர் செ.இராசு நூல்: தஞ்சை மராட்டியர் செப்பேடுகள்-50

கொங்குமண்டல சதகங்கள் எழுதிய மூன்று ஆசிரியர்களுள் ஒருவர் பெயர் வாலசுந்தரக் கவிராயர் என்பதையும் இங்கு நினைவில் கொள்ளலாம். அவரது இயற்பெயர் பாலசுந்தரக் கவிராயர் என்பது தெளிவு.  

ஈரோடு மாவட்டம், காங்கயம் வட்டம் அகிலாண்டபுரம் அகத்தீசுவரர் கோயில் கல்வெட்டு, இவன் கி.பி. 1532-இல் “தெக்ஷிணபுச”  என்னும் மண்டலத் தலைவனாக இருந்து பிருதிவி இராச்சியம் பண்ணி அருளாநின்றமையைக் குறிக்கிறது.

இந்தியக் கல்வெட்டு ஆண்டறிக்கை எண் 246/1920
கல்வெட்டு வரிகள்:
         “...............ஸ்ரீ வீர அச்சுதரா
          யர் மகாராயர் காரியத்து
          க்கு கடவதான திம்மாத ணா
          யக்க உடையாற்கு தெக்ஷண
          புசமான வாலைய தேவ மகா
          ராசா பிறுதிவி இராச்சியம் ப
          ண்ணி அருளாநின்ற கலியுக சகா
          த்தம் 4633 க்கு மேல்
          செல்லா நின்ற திருநல்லி ஆண்
          டு நந்தன வரு.......................


கல்வெட்டில் 28-29, 31, 33, 36 ஆகிய வரிகளில் முத்திரைக் கல்லு என்பதாக  வரும் தொடரை முதலில் “வர்மன் முத்திரைக் கல்லு எனப்படித்து ஆவணப்படுத்தினேன். இப்போது மீள்படிப்பில் இத்தொடர், “வாமன முத்திரைக் கல்லு எனத் தெளிவு கிடைத்தது. மேலே குறிப்பிட்டவாறு பச்சை வண்ண எழுத்துகளால் காட்டப்பெறுகின்ற “வாமன முத்திரைக் கல்லு”  என்னும் சொல் சிறப்புடையது. கல்வெட்டில் ஒரு பக்கத்தில் தலைப்புப் பகுதியில், வாமன அவதாரத்தின் புடைப்புச் சிற்பம் காட்டப்பெற்றுள்ளது. இது வைணவம் சார்ந்த ஒன்று. விஜய நகரப் பேரரசை உருவாக்கிய சங்கம அரசர்கள் ஹரிஹரர், புக்கர் ஆகியோர் சைவத்தைத் தழுவியவர்களாக இருந்தனர். அவர்களது குல தெய்வம் விரூபாட்சர். பின்னால் வந்த துளுவ அரசர்கள் வைணவம் சார்ந்தவர்கள். எனவே, குடிமங்கலக் கல்வெட்டில் வாமன அவதாரச் சிற்பத்தைப் பொறித்துள்ளதில் வியப்பில்லை. ஆனால், வாமன முத்திரைக் கல்லு என்பது கொடைநிலம் பற்றியது.

சோழர் கல்வெட்டுகளில் திருச்சூலக்கல், திருவாழிக்கல் ஆகியவை குறிப்பிடப்பெறுகின்றன. கொடையாக அளிக்கப்பட்ட நிலங்களில் எல்லையைக் குறிக்க இந்தக் கற்கள் நாட்டப்பெற்றன. இவை எல்லைக்கற்கள் எனப்படும். கொடை நிலம் சிவன் கோயிலுக்கெனில் திருச்சூலக்கல்; விண்ணகரக் கோயிலுக்கெனில் திருவாழிக்கல். திருச்சூலக்கல்லில் சூலம் பொறிக்கப்பட்டிருக்கும்; திருவாழிக்கல்லில் ஆழி (திருமாலின் சக்கரம்) பொறிக்கப்பட்டிருக்கும். விஜயநகர ஆட்சியின்போது, தமிழகத்தில் சோழர்காலந்தொட்டு நிலவிய மேற்குறித்த எல்லைக் கற்களோடு மூன்றாவதாக “வாமன முத்திரைக் கற்களும் பயன்பாட்டில் இருந்துள்ளதைக்  குடிமங்கலம் கல்வெட்டு வாயிலாக அறிகிறோம். எல்லைகளைக் குறிக்கும்போது, ஆறு, வாய்க்கால், வதி, மயக்கல்(மன்னறை), ஏரி, குளம், பெருங்கோயில், நாட்டார் தெய்வங்களின் சிறு கோயில்கள், தனியாரின் பெயரில் அமைந்த வயல் நிலங்கள் ஆகியவற்றின் பெயர்கள் இடம்பெறும். இவைபோன்ற குறிப்புகளைக் காட்ட இயலாதபோது எல்லைக்கற்களின் இருப்பிடங்கள் அடையாளம் காட்டப்பெறுகின்றன. விஜயநகரர் ஆட்சியில் கருநாடகப்பகுதியில் இவற்றை எல்லெ கல்லு   (தமிழின் உருவைத்தான் கன்னடம்  ஏற்றது என்பதற்கு இது ஒரு சான்று) என்பர். கோயிலுக்குத் தன்மமாகக் கொடுப்பதால் இவற்றைத் “த4ர்மத3 கல்லு  என்றும் குறிப்பர். கருநாடகக் கல்வெட்டுகளில், திருச்சூலக்கல்லை லிங்க முத்3ரெய கல்லு என்றும், திருவாழிக்கல்லை “வாமன முத்3ரெய கல்லு  என்றும் குறிப்பிடுவார்கள். இவற்றில் முறையே சிவலிங்க உருவமும், வாமனரின் உருவமும் பொறிக்கப்பட்டிருக்கும். வாமனர் ஒரு கையில் குடையும் ஒரு கையில் நீர்ச் செம்பும் வைத்திருப்பார். விஜய நகரர் காலத்துக் கருநாடக வழக்கம் குடிமங்கலத்தில் அப்படியே மாற்றமேதுமின்றிப் பயின்று வந்துள்ளது. இதுதான் “வாமன முத்திரைக் கல்லு என்பதன் சிறப்பு. கல்->கல்லு  என உகரம் பெற்றதைக் காண்க. கொங்குப்பகுதியில் “வாமன முத்திரைக் கல்லு என்னும் தொடர் இதுவரை பார்த்த கல்வெட்டுகளில் காணப்படவில்லை. குடிமங்கலம் கல்வெட்டில்தான் முதன்முதலாகக் காணப்படுகிறது எனக் கருதுகிறேன். கல்வெட்டில் குறிக்கப்பெறும் நாச்சியப்ப நயினான் காடு, ஒற்றைப்புளி, கொண்டன் பட்டி, பிள்ளையாண்டான் குட்டை ஆகிய இடங்களைக் குடிமங்கலம் பகுதியில் தேடி இனம் கண்டால் நான்கு வாமன முத்திரைக் கற்கள் கிடைக்கக்கூடும்.

கொடை நிலத்தின் பரப்பு அதன் எல்லைகளைக் குறிப்பதன் வாயிலாக அறியப்படும். கல்வெட்டில் கொடை நிலத்தின் எல்லைகள் விரிவாகக் கூறப்பட்டுள்ளன. எல்லைகளைக் குறிக்கையில் உடையார்கோயில் குளம், நாச்சியப்ப நயினான் காடு, பூளையபாடி வழி, பிள்ளையாண்டான் குட்டை ஆகிய சில இடப்பெயர்கள் காணப்படுகின்றன. உடையார் கோயில் என்னும் கோயில் இப்போதும் உள்ளதா என்பது ஆய்வுக்குரியது.

நான்கெல்லைகளுக்குட்பட்ட கொடை நிலத்தைச் சேர்ந்த நஞ்சை, புஞ்சை வயல்கள், தோட்டம் ஆகியன கொடை பெற்றோரின் பயன்பாட்டு நுகர்வுக்கு உரியன. கல்வெட்டில் தோட்டத்துக்கு அடுத்து தொடுகையும் காணப்படுகிறது. (தொடு=தோண்டு). கல்வெட்டுச் சொல்லகராதியில் இச்சொல் இல்லையெனினும், இது கிணற்றை குறிப்பது கண்கூடு. தோட்டம்-துரவு, தோப்பு-துரவு  என்னும் சொல் வழக்கு இதை உறுதிப்படுத்துகிறது. மேலும் சோழர் கல்வெட்டுகளில் பயிலும் “மேல் நோக்கிய மரமும் கீழ் நோக்கிய கிணறும்”   என்னும் தொடரால் இதை உணரலாம்.  அடுத்து மாவடை, மரவடை என்னும் சொற்கள். இவை முறையே கொடை நிலத்திலிருக்கும் மரங்கள், விலங்குகள் மூலம் வரும் வருவாயைக் குறிக்கும். மகமை என்பது வணிகர்கள் தாமாகவே தம் விற்பனையிலிருந்து கோயில், சத்திரம் போன்ற அறநிலையங்களுக்குச் செலவளிக்க வசூலிக்கும் ஒரு வகையான வரி. (புலவர் செ.இராசு). அடுத்துக் காணப்படுகின்ற கத்தி காவிலி”   என்பதன் பொருள் தெரியவில்லை. அடுத்து, நிதி நிஷேபம் செல தரு பாஷா(ணம்)  என்னும் தொடர், கொடை கொடுத்த நிலத்தில் புதையல், நீர், மரம், மணிகள் கிடைத்தால் கொடை பெற்றவர் பயன்படுத்தலாம் என்பதைக் குறிக்கும். (புலவர் செ.இராசு)

இறுதியாக, பிராமணச் சத்திரத்தை நன்றாக நடத்திவரும் பிராமணன் பெரியமங்கலம் கிராமத்தின் பொறுப்பையே ஏற்கலாம் என்றும், இந்தத் தன்மத்துக்குத் தீங்கு (அகிதம்) செய்தவர்கள், கங்கைக் கரையில் பசுவையும், பிராமணனையும், பெற்றோரையும், ஆசானையும் கொன்ற பாவத்தை அடைவார்கள் எனக் கல்வெட்டு அறிவுறுத்துகிறது. இதை “ஓம்படைக்கிளவி என்று கல்வெட்டியலில் குறிப்பிடுவர். கல்வெட்டின் இறுதியில் ஐந்து வரிகள் கிரந்த எழுத்துகளில் சமற்கிருதத் தொடர்கள் காணப்படுகின்றன. அதைத் தொடர்ந்து செய்யுள் வடிவில் தமிழில் எழுதப்பட்ட வரிகள், வளமிக்க தென்பொங்கலூர்க்கா நாட்டுப் பெரியமங்கலத்தில் மறையோர்க்கு அன்னமிடச் சத்திரம் நிறுவப்பட்டது என்பதாகச் சுருக்கமாகக் கல்வெட்டின் கருத்தைச் சொல்லி நிறைவு செய்கிறது.

முடிவுரை
பல்வேறு செய்திகளைத் தன்னகத்துக் கொண்ட சிறப்பானதொரு கல்வெட்டாகக் குடிமங்கலக் கல்வெட்டு திகழ்ந்து கல்வெட்டு ஆய்வாளர்களுக்கு ஒரு பயிற்சிப்பட்டறையாய் விளங்குகிறது என்பதில் ஐயமில்லை. விஜய நகர ஆட்சியில் கல்வெட்டுகளில் தமிழின் ஆட்சி மங்கியது என்பதற்கும் இக்கல்வெட்டு சான்றாய் உள்ளதென்பதில் ஐயமில்லை.










து.சுந்தரம், கல்வெட்டு ஆராய்ச்சியாளர், கோவை.
அலைபேசி : 9444939156.
மின்னஞ்சல் :  doraisundaram18@gmail.com