மொத்தப் பக்கக்காட்சிகள்

திங்கள், 24 ஏப்ரல், 2017

உடுமலை அருகே தொல்லியல் தடயங்கள்
சிறியதொரு வரலாற்றுப்பயணம்


முன்னுரை

     கோவையில் இயங்கும் வாணவராயர் அறக்கட்டளையினர் மாதந்தோறும் கோவையைச் சுற்றிலுமுள்ள கொங்குப்பகுதியில் ஆங்காங்கே அமைந்துள்ள, தொல்லியல் தடயங்களைக் கொண்டுள்ள இடங்களுக்கு வரலாற்றுப் பயணமாக அழைத்துச் சென்று வரலாறு, தொல்லியல் பற்றிய ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். அவ்வகையில், 26-03-2017 ஞாயிறன்று, உடுமலை வட்டாரத்தில் சில இடங்களூக்குப் பயணமானோம். அது பற்றிய பதிவும் பகிர்வும் இங்கே. 

காசிலிங்கம்பாளையம்-பெருங்கற் சின்னங்கள்

      தொல்லியலில், வரலாற்றுக்கு முந்தைய காலகட்டத்தைப் பெருங்கற் காலம் என்று வழங்குவர். ஆங்கிலத்தில், MEGA LITHIC PERIOD  எனக் குறிப்பிடப்படும். (MEGA=பெரும்; LITH=கல்) பெயருக்கேற்றவாறு, பெருங்கற்களைக்கொண்டு நினைவுச் சின்னங்களை அக்கால மக்கள் உருவாக்கினர். அது போன்ற பெருங்கற் சின்னங்களைக் கொண்டுள்ள ஓர் இடம்தான் காசிலிங்கம்பாளையம் என்னும் சிற்றூர்.  பல்லடம்-உடுமலைச் சாலையிலிருக்கும் ஜல்லிப்பட்டி என்னும் ஊரின் கிழக்கே பிரியும் ஒரு சாலையில் பயணம் செய்தால் முதலில் வருவது அய்யநாயக்கன் பாளையம். அதை அடுத்துள்ள ஊர் காசிலிங்கம்பாளையம்.

கல் வட்டம்

      காசிலிங்கம்பாளையத்தில் நாங்கள் பார்த்த பெருங்கற் சின்னம் என்பது, தொல்லியலார் குறிப்பிடும் கல் வட்டம் ஆகும். ஆங்கிலத்தில், CAIRN CIRCLE  எனக் குறிப்பிடப்பெறும் கல்வட்டம்,  இறந்தவர்களின் புதைவிடச்  சின்னங்களாகும். உருண்டையான வடிவத்தில் அமைந்த பெரும் பெருங் கற்களை ஒரு பரப்பில் வட்டமாக அடுக்கி வைத்து எழுப்பப்பட்ட நினைவுச் சின்னம். இந்த வட்டத்தின் நடுப்பகுதிதான் புதைவிடத்தைக் குறிக்கும் பகுதி. புதைவிடம் என்றதும், இறந்தவர்களின் உடலை அங்கு புதைத்திருப்பதாகப் பொருள் கொள்ளக்கூடாது. தமிழ் இலக்கியங்களோடு தொடர்புள்ள, சங்க காலம் என்று நாம் குறிப்பிடும் காலம், கி.மு. 500 வரையுள்ள பண்டைக்காலம் என்று சான்றுகளோடு நிறுவப்பட்டுள்ளது. தேனி மாவட்டம் புலிமான்கோம்பை என்னும் இடத்தில் கிடைத்துள்ள ஒரு நடுகல்லில் பொறிக்கப்பட்ட தமிழி எழுத்துகளின் அடிப்படையில் இக்கருத்து ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது. சங்க காலத்துக்கு முன்னர் உள்ள காலத்தைத் தான் பெருங்கற்காலம் என்று குறிப்பிடுகின்றனர்.

                              கல்வட்டங்கள்












      காட்டு வாழ்க்கை வாழ்ந்துவந்த மக்கள், வேளாண்மை வாழ்க்கையைத் தொடங்கியதும், கால்நடை வளர்ப்பில் ஈடுபட்டு ஆங்காங்கே கால்நடைப்பட்டிகளை அமைத்துக் கொண்டு, ஓரிடம் விட்டு ஓரிடம் என்ற முறையில், இடம் பெயர்ந்து வாழும் வழக்கத்தைக் கொண்டிருந்தனர். இந்த இடப் பெயர்தலை ஆங்கிலத்தில் நொமாடிக்”  ( NOMADIC )  என்று குறிப்பிடுவர். வேளாண்மை வளர்ச்சியுற்ற காலத்து, மக்கள் இடம் பெயர்தலை விடுத்து ஓரிடத்தே நிலையாக வாழத் தலைப்பட்டனர். ஊர் உருவாக்கமும் நிகழ்ந்தது. இந்த இடத்தில், வேளாண்மையை அறிமுகப்படுத்தியவர்கள் மகளிரே என்னும் கருத்தை இங்கு குறிப்பிடவேண்டியுள்ளது. காட்டு வாழ்க்கையில், ஆண்மக்கள் வேட்டைக்குச் சென்றதும், பெண்கள் காட்டுப்பகுதிகளில் இயற்கையாய்க் கிடைக்கும் உணவுப்பொருள் தேடலின்போது வேளாண்மையின் அடிபடைக்கூறுகளைத் தெரிந்துகொண்டனர். இது உலகம் முழுவதும் நிகழ்ந்த ஒன்று.

      ஊர் வாழ்க்கையில், இறந்தவர்களைப் புதைக்கும் மரபு தோன்றியது. முழு உடலைப் புதைக்கவில்லை. இறந்தவரின் உடலை ஊருக்குப் புறத்தே ஆங்காங்கே  எறிந்தனர். இயற்கையாகவும், கழுகு போன்ற பறவைகளும் மற்ற சில விலங்குகளும் தின்றும், அழிந்துபோகவிடுவர். சில நாள்கள் அல்லது மாதம் கழித்து, எஞ்சியுள்ள எலும்புகளை முதுமக்கள் தாழிகளிலோ, அல்லது கற்களைக்கொண்டு அமைத்த சிறு அறைகளிலோ வைத்துப் புதைத்து மூடி விடுவர். இறந்தவர்கள் பயன்படுத்திய பொருள்களை உள்ளே வைத்துவிடுவர். பண்டு, இறந்தவர்கள் மீண்டும் உயிர்த்தெழுவர் என்றும், ஆவியாக வந்துசெல்வர் என்றும், இறந்தும் அவர்கள் ஊர் மக்களைக் காப்பதாகவும், மழை, மண் விளைவு போன்ற வளங்கள் நல்குவதாகவும் மக்களிடையே ஒரு நம்பிக்கை நிலவியது. புதைவிடங்களை அடையாளப்படுத்தும் முகத்தான், அதைச் சுற்றிலும் பெரும் உருண்டைக் கற்களை வட்டமாக அடுக்கிவைத்துப் பாதுகாத்தனர். ஊர் என்றால், அதற்கு ஒரு தலைவன் உண்டே. ஊர்த்தலைவனின் புதைவிடத்து நினைவுக்கல் மிகப் பெரிதாயிருக்கும். கற்களை வட்டமாக அடுக்கிவைக்காமல், நெடியதொரு கல்லைச் செங்குத்தாக் நிறுத்திவைப்பர். இதை நெடுநிலை நடுகல் என்பர். (பின்னர், கட்டுரையின் ஒரு பகுதியில் நெடுநிலை நடுகல்லைப் பற்றிய செய்தியைக் காணலாம்.)


      காசிலிங்கம்பாளையத்தில், நாங்கள் பார்த்த கல்வட்டங்கள் இருந்த பகுதி ஒரு பெரிய பரப்பு. நான்கைந்து ஆண்டுகளுக்கு முன்னர், நம் பயணத்தில் பங்குகொண்ட வரலாற்று ஆர்வலர் சதாசிவம், இந்த இடத்தை முதலில் கண்டறிந்தபோது, இப்பகுதியில் எண்பதுக்கும் மேற்பட்ட கல்வட்டங்கள் இருந்துள்ளன. தற்போது, நாங்கள் பார்க்கையில், இருபது அல்லது இருபத்தைந்து கல்வட்டங்கள் இருக்கக் கூடும். அவையும், முழு வட்டங்கள் என்பதாகத் தோற்றம் கொண்டிருக்கவில்லை. கற்கள் பலவாறு சிதறுண்டு போயின. ஊர் மக்கள் தொடர்ந்து மேற்கொண்ட வேளாண் நிலமாக்கும் முயற்சியில், நூற்றுக் கணக்கான உருண்டைக்கற்கள் புரட்டியெறியப்பட்டு, ஓரங்களில் ஒதுக்கப்பட்டு, கல்வட்டங்கள் ஊனமாயின. ஓரிரு இடங்களில், உருண்டைக் கற்களை வட்டமாக அடுக்குவதற்கு மாற்றாக, புதைவிடத்தை அடையாளப்படுத்த, கற்களைக் குவியலாக அடுக்கிய அமைப்புகள் காணப்படுகின்றன. இவை கற்குவை எனப்படும்.

      பெருங்கற் சின்னங்கள் இருக்கும் இடங்கள் பெரும்பாலும் பள்ளமான நீர்ப்பிடிப்புப் பகுதி அல்லது  ஆற்றுப்பகுதியை ஒட்டியுள்ள வாழ்விடத்துக்கருகில் காணப்படும். இங்கே காசிலிங்கம்பாளையத்துக்கருகிலும் நீரோடிய பள்ளம் காணப்படுகிறது. அமராவதி ஆற்றின் துணையாறான உப்பாறு அணித்துள்ளது எனத்தெரிகிறது.

மன்று (மன்றம்)

      காசிலிங்கம்பாளையத்திலிருந்து திரும்பும் வழியில், அம்மன் கோயிலின் முன்புறம் அரசு, வேம்பு ஆகிய இரு மரங்களை நடுவில் இருத்திக் கட்டப்பெற்ற ஓர் அழகிய மேடையைப் பார்த்தோம். பயணத்துக்குத் தலைமையேற்ற முனைவர் இரா.ஜெகதீசன் அவர்கள், இந்த மேடை சங்க காலத்து “மன்று”   என்னும் கருத்தை நினைவூட்டுவதாகக் குறிப்பிட்டார். சங்ககால மக்கள் வாழ்க்கையில், ஊரின் நடுவில் மக்கள் கூடிப்பேசுவது வழக்கமாக இருந்துள்ளது. இவ்வாறு கூடுவதும், கூடும் இடமும் மன்றம் (மன்று) எனப்பட்டது. இம்மன்றங்களில் ஊர்ப் பெரியோர் கூடி மக்களிடையே நிகழ்ந்த வழக்குகளைத் தீர்க்கும் பணி நடத்தினர் என்று இலக்கியங்கள் வாயிலாக அறிகிறோம். அது போன்றதொரு மன்று, இங்கே நேரில் காட்சியளித்தது.  மன்றத்தைப்பற்றிப் புறநானூறும் குறிப்பிடுகிறது.

                                  மன்று


மன்ற வேம்பின் ஒண்பூ உறைப்ப
                        -புறம்.371.

இதிலிருந்து, மன்றத்து மேடை வேப்ப மரத்தின் கீழ் இருந்ததாக அறிகிறோம். நாம் நேரில் பார்த்த இந்த மன்றமும் வேப்பமரத்தடியிலேயே இருந்தது. கூடுதலாக அரச மரமும் இணைந்திருந்தது ஒரு சிறப்பு. கல்வெட்டுகளில், குறிப்பாகச் சோழர்காலக் கல்வெட்டுகளில் “தெண்டக் குற்றம்”  என்றும் “குற்றத்தெண்டம்”  என்றும் குறிப்புகள் உள்ளன. ஊர் மக்களில் குற்றம் இழைத்தவர்க்கு மன்றங்களில் தண்டனை தருவதும், குற்றத்துக்காகச் செலுத்தும் பணமும் குற்றத்தெண்டம் எனப்படும். சங்க கால மன்றம், சோழர் காலத்தில் கி.பி. 10-ஆம் நூற்றாண்டிலும் செயல்பட்டு வந்ததைக் காண்கிறோம். 

வெற்றிலைக்கார சாமி
      


      ஊர் மன்றத்தைப் பார்த்துவிட்டு சிறிது தொலைவு சென்றதும், மற்றொரு மரத்தடி மேடையில் சில முதியோர் கூடியிருந்ததைப் பார்த்தோம். மேடையில் ஒரு பழஞ்சிற்பம் காணப்பட்டது. அது பற்றி அவர்களிடம் கேட்டபோது, அது வெற்றிலைக்காரசாமி என்றார்கள். அது ஒரு நினைவுக்கல் போன்றே காணப்பட்டது. சிலையின்மீது தொடர்ந்து எண்ணெய் பூசப்பட்டு வருவதால் வடிவமைப்பு நுண்மையாகத் தெரியவில்லை. இருப்பினும், ஓர் ஆண் சிற்பம் என்பதும், அதன் இடது தோள்ப்பகுதியில் வில் போன்ற பொருளும், இடையில் குறுவாளும் இருப்பது புலப்பட்டது. தலை முடி, இடதுபுறமாக்க் கொண்டை அமைப்பில் இருந்தது. ஒரு நடுகல்லாக இருக்கக் கூடும்.

மெட்ராத்தி-மாலக்கோயில்

      அடுத்து நாங்கள் சென்ற ஊர் மெட்ராத்தி. பல்லடம்-உடுமலைச் சாலையில் குடிமங்கலத்திலிருந்து கிழக்கே பிரியும் சாலையில், துங்காவி என்னும் ஊரைக் கடந்த பின்னர் உள்ள ஊர் மெட்ராத்தி. மெட்ராத்தியில், தென்னந்தோப்புகளின் சூழலில், மாலக்கோயில் என்றழைக்கப்படும் ஒரு கோயில் உள்ளது.

                             மாலக்கோயில்-முகப்பு


நாளிதழ்ச் செய்தி

      இக்கோயிலைப்பற்றி 2015-ஆம் ஆண்டு தினமலர் நாளிதழில் ஒரு செய்தி வெளியானது. அதில், மெட்ராத்தி ஜமீனைச் சேர்ந்த முன்னோர்கள், பல நூற்றாண்டுகளுக்கு முன்பு எழுப்பிய நினைவுச் சின்னம் இது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மரத்தாலான இந்த சதுரத்தூணில் பன்னிரண்டு படிநிலைகளில் சிற்பங்களை அமைத்திருக்கிறார்கள். வீரர்களின் உருவங்கள், போரிடும் காட்சிகள், வரிசையாக நிற்கும் பெண்களின் உருவங்கள், குதிரை வீரர்களின் உருவங்கள், மாடுகளின் உருவங்கள், சிவலிங்கம், குழலூதும் கண்ணன் எனப் பல்வேறு உருவங்கள் தூணின் நான்கு புறங்களிலும் செதுக்கப்பட்டுள்ளன. போரில் இறந்தவர்கள் நினைவாக அல்லது போர் நிகழ்ந்ததைக் குறிப்பிடும் வகையில் இந்த நினைவுத்தூண் அமைக்கப்பட்டிருக்கலாம். இக்கோயில் மெட்ராத்தி ஜமீனைச் சேர்ந்தவர்களின் குலதெய்வக்கோவிலாக் விளங்குகிறது. ஒவ்வொரு அமாவாசை நாளன்றும் ஜமீனைச் சேர்ந்தவர்கள் இங்கு வந்து வழிபடுகிறார்கள். ஜமீன் குடும்பங்களில் இறப்பவர்கள் கோவில் அருகில் அடக்கம் செய்யப்படுகிறார்கள்.

கோயிலின் வரலாற்றுப் பின்னணி
கர்னல் காலின் மெக்கன்சி
      மேலே, நாளிதழ்ச் செய்தியில் பொதுவான செய்திகள் குறிப்பிடப்பட்டாலும், வரலாற்றுப் பின்னணியில் வேறு செய்திகள் உள்ளன. மெட்ராத்தி, ஒரு பாளையக்காரர்களுடைய ஊர். ஸ்காட்லாந்து”  நாட்டைச் சேர்ந்த காலின் மெக்கன்சி (1754-1821) கி.பி. 1783 - இல் இந்தியாவிற்கு வருகை தந்தார்.  கிழக்கிந்தியக் கம்பெனியின் ஒரு பொறியியல் பிரிவின் பணியாளராகப் பணியாற்றிய இவர்,.  பழங்கணக்குகள், இந்திய வரலாறுகள், கீழ்த்திசை மொழிகள் ஆகியவற்றில் மிகுந்த ஆர்வம் உள்ளவராக இருந்தார்.  அவர் ஏராளமான சுவடிகள், வரை படங்கள், நாணயங்கள் ஆகியவற்றைச் சேகரித்தார்.  தமிழ் நாடு தொடர்பானது மட்டுமல்லாமது சிலோன், சாவா ஆகிய பகுதிகள் தொடர்பாகவும்  அவருடைய தொகுப்புகள் இருந்தன.  அவர், பாளையக்காரர் பற்றி எழுதியுள்ள நூலில், மெட்ராத்தி நினைவுச் சின்னம் பற்றிய குறிப்பு உள்ளது. மெட்ராத்தி பாளையக்காரர்கள், தில்லி சுல்தான்களின் ஆட்சியின்போது, வட இந்தியாவில் ஒரு பகுதியின் ஆட்சியாளர்களாய் இருந்தவர்கள். அவர்களிடம் தில்லி சுல்தான்கள் பெண் கேட்டுள்ளனர். சுல்தான்களுக்கு அஞ்சி, மெட்ராத்தி முன்னோர்கள் விசய நகரப் பேரரசர் கிருஷ்ணதேவ ராயரிடம் அடைக்கலம் நாடினர். அவர்களுடைய பின்னணி, திறமைகளைக் கிருஷ்ணதேவராயர் கண்டு பாராட்டி ஆதரவு கொடுத்துச் சிறிதுகாலம் தம்முடன் இருத்திக்கொண்டார். பின்னர், அவர்களுக்கு மெட்ராத்திப் பகுதியை ஒதுக்குப் பாளையக்காரர்களாக ஆட்சிப்பொறுப்பை அளித்தார். இராயர் காலத்தில் இந்த ஊர், புது ஊராக உருவாக்கப்பட்டது. ஊரின் பெயர் தெலுங்குச் சாயலுடன் இருப்பதைக் காணலாம். மெட்ராத்தி பாளையக்காரர்கள் கம்பளத்து நாயக்கர் குலத்தினர் ஆவர். தில்லி சுல்தான்களின் ஆட்சியின்போது, இந்துக்கள் வடக்கிலிருந்து தெற்கில் இடம் பெயர்ந்து வந்துள்ளனர் என்ற வரலாற்றுச் செய்தியும், கிருஷ்ணதேவராயர் காலத்தில் நிறையப்பேர், பாளையக்காரர்கள் என்னும் நாயக்கர்கள் உருவாக்கப்பட்டார்கள் என்ற வரலாற்றுச் செய்தியும் அறியப்படுகின்றன. இவர்கள் படைகளுடன் கூடிய ஆட்சித்தலைவர்கள்; இராயரின்கீழ் கட்டுப்பட்டு, இராயருக்கு வரி செலுத்தவும், இராயருக்கு வேண்டும்போது படையுதவி தரவும் ஒப்பந்தம் செய்துகொண்டவர்கள். இராயரின் ஆட்சி நிருவாக வரலாற்றில் இதை “நாயக்கத்தனம் என்று குறிப்பிடுவர். எனவே, நாயக்கர் என்போர் ஒரு சாதியினர் அல்லர் என்பது பெறப்படும்.

நடுகல்-விஜயநகரர் பாணி (தெலுங்கர் மரபு)

                                                                           அடுக்கு நிலைத் தூண் நடுகல் 


      பல அடுக்கு நிலைகளைக்கொண்ட நெடிதுயர்ந்த தூண் வடிவிலான நடுகல் அமைப்பு தமிழகத்தில் இல்லை. இவ்வகை நடுகல் தெலுங்கர் மரபு. தெலுங்கரான பாளையக்காரர்களின் காலத்தில்தான் இவ்வகை நடுகற்கள் தமிழகத்துக்கு அறிமுகமாயின. இவ்வகை நடுகல் பண்பாடு ஆந்திரத்திலும் கருநாடகத்திலும் உண்டு. ஆனால், கருநாடகத்தில், மூன்று அடுக்குகளுக்கு மிகாது. முதல் அடுக்கில் வீர மரணம் எய்திய வீரனின் உருவம் (வீரச்செயலும் இடம் பெறுவதுண்டு), இரண்டாவது அடுக்கில், வீரனுடன் சதி”  என்னும் உடன்கட்டை ஏறி உயிர் நீத்த அவனது மனைவி (தேவ மகளிர் அவளை மேலுலகுக்கு அழைத்துச் செல்வது போன்ற காட்சி), மூன்றாம் அடுக்கில் மேலுலகம் சென்ற வீரன் சிவலிங்கத்தை வணங்கும் காட்சி ஆகியவை சிற்பங்களாக வடிக்கப்படும். இது கன்னட மரபு.  இது கங்கர்களின் ஆட்சித் தாக்கத்தால் தமிழகம் வந்தது. தெலுங்கு மரபுள்ள தூண் நடுகற்கள், உடுமலை-பொள்ளாச்சிப் பகுதியில் கோட்டமங்கலம், சிஞ்சுவாடி, மெட்ராத்தி ஆகிய மூன்று ஊர்களில் காணலாம்.

தூண் சிற்பங்கள்

      பன்னிரண்டு அடுக்கு நிலைகளைக் கொண்ட இத்தூண் நடுகல்லில் ஒவ்வொரு அடுக்கிலும் போர் வீரர்களின் வரிசை, பெண்களின் வரிசை, போர்க்காட்சிகள் எனப்  பல்வேறு சிற்பங்கள் வடிக்கப்பட்டுள்ளன. கோட்டமங்கலம், சிஞ்சுவாடி  ஆகிய ஊர்களில் உள்ள தூண் நடுகற்கள் கற்களால் ஆனவை. ஆனால், இங்குள்ளது, மரத்தால் ஆனது என்பது சிறப்பு. மரத்தால் ஆனது என்றாலும், சிதைவுகளின்றி நல்ல நிலையில் காணப்படுகிறது. காலம் காலமாக இதன் மேல் எண்ணெய்ப் பூச்சு பூசப்படுவதால் சிதைவு ஏற்படவில்லை எனலாம். தூணின் உச்சியில், சிவலிங்கம், நந்தி  ஆகிய சைவத்தின் உருவங்களும், சங்கு சக்கரத்துடன் கூடிய குழலூதும் கண்ணன் உருவமும் ஒருசேரக் காணப்படுவது, சமயப் பொறையைக் குறிக்கும் எனலாம். கொங்குப்பகுதி பல நூறு ஆண்டுகளாகக் கொங்குச்சோழர் ஆட்சியில் இருந்தது. சோழர் சைவ சமயத்தைப் பேணினர். எனவே, மக்களும் சைவம் சார்ந்திருந்தனர். இந்நிலையில், விஜய நகரர்-பாளையக்காரர் ஆட்சியில், அரசு வைணவம் சார்ந்திருந்தாலும் மக்களின் போக்குக்கு இடையூறு நேராவண்ணம் வைணவத்தைச் சைவத்தோடு இணைத்தே வளர்த்தனர் எனலாம். எனவேதான், இந்த நடுகல்லில், வீரன் மேலுலகம் அல்லது சிவபதவி அடைந்தான் எனக் குறிக்க நடுகல்லில் சிவலிங்கமும் நந்தியும், வைகுண்ட பதவியை நினைவூடும் வகையில் கண்ணனும் சிற்பங்களாக வடிக்கப்பட்டுள்ளன.  மக்களை மன்னன் பக்கம் திருப்பும் முயற்சி எனலாம். மெட்ராத்தி தூண் நடுகல், போரில் இரந்த அனைத்து வீரர்களுக்குமான ஒரு நினைவுச் சின்னமாக விளங்குகிறது.

                     சைவம்-வைணவம் இணைந்த சிற்பம்

                                                      வீரனும் புலியும்


                                                       வீரனும் பன்றியும்


                                                 


நெடுநிலை நடுகல்-நாட்டுக்கல்பாளையம்



      அடுத்து நாங்கள் சென்ற ஊர் நாட்டுக்கல்பாளையம். பொள்ளாச்சி-தாராபுரம் சாலையில் காரத்தொழு என்னும் ஊரிலிருந்து பிரியும் சாலையில் அமைந்துள்ள சிற்றூர் நாட்டுக்கல்பாளையம். இங்கே, பெருங்கற்காலத்து நினைவுச் சின்னங்களுள் ஒன்றான நெடுநிலை நடுகல் ஒன்று உள்ளது. இதனை ஆங்கிலத்தில் (MENHIR)  என்று குறிப்பிடுவர். பதினைந்திலிருந்து இருபது அடிகள் உயரத்தில் நெடியதாய் செங்குத்தாக நிற்கும் ஒரு பலகைக்கல். அடிப்புறத்தே அகலமாகத் தொடங்கி, உயரம் செல்லச் செல்லக் குறுகி முடியும் ஒரு கல். ஒரு தலைவனுக்கு எழுப்பப்பட்ட நினைவுக்கல். 

கோட்டமங்கலம்-கல்திட்டைகள்

                            கல்திட்டை-1


                                                              கல்திட்டை-1

                                                               கல்திட்டை-2

                                                               கல்திட்டை-2

      நெடுநிலை நடுகல் பார்த்தபின்னர், அடுத்து நாங்கள் சென்ற ஊர் கோட்டமங்கலம். அக்கு, தார்ச் சாலையிலிருந்து ஒரு கல் தொலைவில் புன்செய் நிலத்திடையே காணப்பட்டவை இரு கல்திட்டைகள். பெருங்கற்கால நினைவுச் சின்னங்களுள் இதுவும் ஒரு வகை. ஆங்கிலத்தில்DOLMENஎனக் குறிப்பிடுவர். பெரும் பெரும் பலகைக் கற்களை வீடு போல இணைத்த ஓர் அமைப்பு. செவ்வக வடிவிலானது. முன்புறம் சிறிய அளவிலான இரண்டு பலகைக் கற்கள் நிறுத்தப்பட்டுள்ளன. இவற்றின் இடையில் வீட்டின் நுழைவாயில் போன்று இடைவெளி. நேர் பின்புறம் ஒரு ஒற்றைக் கல் பலகை. இவ்விரண்டு அமைப்பும் செவ்வகத்தின் அகலப் பக்கங்கள். செவ்வகத்தின் நீளப்பக்கங்கள் இரண்டிலும் இரண்டு நீளமான பெரிய பலகைக் கற்கள். இவற்றின் மேலே கூரைப்பகுதியில், ஆமையின் முதுகில் காணப்படும் ஓடு போன்றதொரு மிகப்பெரிய பலகைக் கல். செவ்வகப் பரப்பை முழுதும் மூடுகின்ற வகையில் மூடுகல். உள்ளே காணப்படும் அறை போன்ற இடம், கட்டுரையின் தொடக்கத்தில் குறிப்பிட்டவாறு, இறந்தவர் எலும்புகள், பயன்படுத்திய பொருள்கள் ஆகியவற்றை வைத்து வழிபடும் இடம். இக்கல்திட்டையை அடுத்து அருகிலேயே மற்றொரு கல்திட்டை இருந்தது. இதில், மூடுபலகைக் கல்லில் ஒரு பெரிய வட்டமான துளை காணப்படுகிறது.

கொங்கல்நகரத்தில் ஒரு நெடுநிலை நடுகல்




      அடுத்து நாங்கள் பயணப்பட்டது கொங்கல் நகரம் என்னும் ஊருக்கு. மீண்டும் ஒரு நெடுநிலை நடுகல்லைப் பார்க்கும் வாய்ப்பு அங்கு கிடைத்தது. முன்பு பார்த்த நெடுஙகல்லைவிட அளவில் பெரியது. அண்ணாந்து பார்க்கும் வகையில், ஏறத்தாழ இருபது இருபத்தைந்து அடிகள் உயரம் கொண்ட தோற்றத்தை உடையது. ஒரு வேப்பமரம் அதை ஒட்டியவாறு வளர்ந்துள்ள நிலையில், சற்றுக்காலத்தில் மரம் பெரிதாக வளர்ந்து நடுகல்லைச் சாய்த்துவிடும் சூழ்நிலை காணப்படுகிறது. தவிர கல்லின் உச்சிக் கருகிலிருந்து கீழ்நோக்கி வரும் இடைப்பகுதி வரையிலும் கல்லின் பரப்பில் ஆங்காங்கே வெடிப்புப் போன்ற கோடுகள் உள்ளன. கல் சரிய நேருமெனில் மேல்பகுதி உடைவது திண்ணம். அதற்கேற்றவாறு, நடுகல்லின் அடிப்பகுதி அகலமாகவும், மேலே செல்லச் செல்ல அகலம் குறைந்தும் வலுவின்றிக் காணப்படுகிறது.

சோமவாரப்பட்டி-அமரபுயங்கரீசுவரர் கோவில்



      பயணத்தின் இறுதிக்கட்டத்தில் நாங்கள் பார்த்தது சோமவாரப்பட்டி என்னும் ஊரில் இருக்கும் அமரபுயங்கர ஈசுவரர் கோவில். இவ்வூரின் பழம்பெயர் அமரபுயங்கரபுரம் என்பதாகும். பழக்காலத்தில் வணிக நகரமாக இருந்துள்ளது. பெருவழியின் அருகில் அமைந்த ஊர். தென்கொங்குப்பகுதியை ஆண்ட வீரகேரள அரசருள் இரண்டாமவனான அமரபுயங்கன் என்பவனின் பேரால் அமைந்த நகரம். (வடகொங்குப்பகுதியைக் கொங்குச் சோழர்கள் ஆண்டுவந்தார்கள்.) இவனது ஆட்சிக்காலம் கி.பி. 967-990. இவன் முதலாம் இராசராச்னை எதிர்த்துப் போரிட்டுத் தோற்றவன். இராசராசனிடம் அடிபணியவே, இராசராசன் இவனை மீண்டும் ஆட்சியில் இருத்தி இறை செலுத்தச் செய்தான். இங்குள்ள கோயில் இறைவற்கும் அரசனின் பெயராலேயே அமரபுயங்கரீசுவரர் என்னும் பெயரமைந்தது. இக்கோயிலில் இரு கல்வெட்டுகள் உள்ளன. பரகேசரி கோனேரின்மைகொண்டான் என்னும் அரசன், தென்கொங்கில் நல்லூர்க்கால், காவடிக்கால், வாயறைக்கால் நாடுக்ளின் சிவன் கோவில்களில் பூசை நின்றுபோகவே, மீண்டும் பூசை தொடர ஆணையிட்டுக் கொடை அளித்துள்ளான். மற்றொரு கல்வெட்டில், திசை ஆயிரத்து ஐந்நூற்றுவர் என்னும் வணிகர்களும், இவ்வூர் நகரத்தாரும் சேர்ந்து இக்கோயிலுக்குக் கண்ணாடிப்புத்தூரில் உள்ள நிலத்தைக் கொடையாக அளித்துள்ளார்கள்.
  
மூவர் கண்டியம்மன் கோயில் 

                                                   மூவர் கண்டியம்மன் கோயில்


                                                          வாயிற்காவலர்-ஆண்

                                                          வாயிற்காவலர்-பெண்

                                                             கூரையில் சிற்பம்


      சிவன் கோயிலுக்கருகிலேயே அமைந்துள்ளது மூவர் கண்டியம்மன் கோயில். இக்கோயில் சற்றுப்பழமையானது. ஆனால் கல்வெட்டுகள் எவையுமில்லை. எட்டுக்கைகளை உடைய கொற்றவையின் மூலவர் சிற்பம் சிறப்பானது. 

சாம்பல் மேடு


        கண்டியம்மன்கோயில் கருடகம்பம்-பின்னணியில் சாம்பல்மேடு    


கோயிலுக்கருகில் சாம்பல் மேடு என்ற பெயர்கொண்ட இடம் பெருங்கற்கால வாழ்விடத்தைக் கொண்ட ஓரிடமாகும். இங்கு மேற்பர்ரப்பிலேயே, பெருங்கற்காலத்தைச் சேர்ந்த பானையோட்டுச் சில்லுகளும், சங்கு வளைகளின் துண்டுகளும், சிறார்களின் விளையாட்டுப் பொருளான சுடுமண் வட்டுகளும் கிடைத்துள்ளன. அண்மையில் ஓரிரு ஆண்டுகளுக்கு முன், இங்கு “அமண”  என்னும் தமிழி (தமிழ் பிராமி) எழுத்துப் பொறித்த பானைச் சில்லு கிடைத்தது இப்பகுதியின் பழமையை எடுத்துச் சொல்லும். அரசு அக்கறைகொண்டால், முறையான அகழாய்வு மூலம் பழமைச் சான்றுகள் பல கிட்டும்.



கருத்துகள், செய்திகள் - துணை நின்றோர் :

1. முனைவர். இரா.ஜெகதீசன், வாணவராயர் அறக்கட்டளை, கோவை.
2. தமிழ் மரபு அறக்கட்டளை.
3. கல்வெட்டு-காலாண்டிதழ், அக்டோபர், 2010.

------------------------------------------------------------------------------------------------------------
து.சுந்தரம், கல்வெட்டு ஆராய்ச்சியாளர், கோவை.
அலைபேசி : 9444939156.

சனி, 8 ஏப்ரல், 2017

                                                  களிமண் ஓடுகளில் பிராமி எழுத்துகள்

பேரூர்த் தமிழ்க்கல்லூரியில்   23-02-2016 அன்று நடைபெற்ற   தொல்லியல்     கண்காட்சியில், கோவைப்பகுதியில் கிடைத்த களிமண் தட்டுகளை வைத்திருந்தார்கள். அவற்றில் ஒரு சில
பிராமி எழுத்துகளைக் கற்பனையான சில குறியீடுகளுடன்  கலந்து பொறித்துள்ளனர். 
இத் தட்டுகள் போலியானவை என்று கருதப்படுகின்றன.. அவற்றின் படங்களைக் கீழே காண்க:











---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
து.சுந்தரம், கல்வெட்டு ஆராய்ச்சியாளர், கோவை.
அலைபேசி : 9444939156.

செவ்வாய், 4 ஏப்ரல், 2017

நம்பியூர்-கோபி-பகுதியில்
தொல்லியல் தடயங்களைத்தேடி ஒரு பயணம்

முன்னுரை

   அண்மையில், திருப்பூருக்கு உறவினர் ஒருவரின் திருமண நிகழ்ச்சிக்குச் சென்றிருந்தேன். அங்கு என் நெருங்கிய உறவுக்கார இளைஞர் - என்னுடைய கல்வெட்டுகள் தொடர்பான தேடல்களை நன்கு அறிந்தவர் - தாம் கோபியிலிருந்து பயணப்பட்டுத் திருப்பூர் திரும்பும் வழியில் நம்பியூருக்கு அருகில் போத்தம்பாளையம் என்னும் ஊரில் அமைந்துள்ள பெருமாள் கோயிலில் கல்வெட்டு ஒன்றைப் பார்த்ததாகத் தகவல் தெரிவித்தார். உடனே அதனைப் பார்க்கும் ஆவல் மிகவே, கோவையிலிருந்து நம்பியூர் செல்ல முடிவாயிற்று. பயணத்தில் தொல்லியல் ஆர்வலர்களான நண்பர்களையும் உடன் அழைத்துச்செல்ல எண்ணி ஓரிரு நண்பர்களுக்குத் தகவல் தந்தேன். கோவைப்பகுதியில் இருக்கும் நண்பர்கள் இருவருக்கு வர இயலவில்லை. அவர்களில் ஒருவர் அவிநாசியில் ஆசிரியப்பணியில் இருக்கும் இரமேஷ் அவர்கள். அவர், ஏற்கெனவே இந்தக் கல்வெட்டை நேரில் பார்த்து ஆய்வு செய்திருக்கிறார். எழுத்துகளின் தெளிவின்மை காரணமாகக் கல்வெட்டுச் செய்தியை முழுமையாகப் படிக்கவில்லை என்று அவர் படித்த அளவில் கல்வெட்டு வரிகளை எனக்கு மின்னஞ்சலில் அனுப்பியிருந்தார். (அவ்ற்றின் துணை கொண்டு கல்வெட்டு மீளாய்வு செய்யப்பட்டது.)

    சத்தியிலிருந்து, ஆசிரியர் பணியிலிருக்கும் ஃபவுசியா வந்திருந்தார். இவர், வரலாறு, தொல்லியல் புலங்களில் மிகுந்த ஈடுபாடும் கற்றல் விருப்பும் கொண்டவர். தனியே, தமக்குத் தெரிந்த இடங்களுக்குப் பயணம் மேற்கொண்டு வரலாற்றுச் செய்திகளைத் தொகுத்து வைத்திருப்பவர். இவருடைய நண்பர் கோபியைச் சேர்ந்த சிவக்குமார் என்னும் இளைஞர்; தொழில் முறையில் வணிகத்தை ஏற்றிருந்தாலும் வரலாற்று ஆர்வமுடையவர். இத்துறையில் ஈடுபட்டுத் தம்மை மேம்படுத்திக் கொள்ளவேண்டும் என எண்ணிக் கொண்டிருந்தவருக்குச் செயல்வடிவில் ஒரு தொடக்கமாக இப்பயணம்  அமைந்தது. நம்பியூரில் நாங்கள் மூவரும் சந்தித்துப் போத்தம்பாளையம் பயணப்பட்டோம்.

போத்தம்பாளையம் பெருமாள் கோயில்

                                                                     கோயிலின் தோற்றம்

                                                       வரலாற்று ஆர்வலர்கள்-கோயில் நிர்வாகியுடன்


     போத்தம்பாளையம், அவிநாசி-கோபி சாலையில் நம்பியூருக்கும் சேவூருக்கும் இடையில் அமைந்திருக்கும் ஒரு சிற்றூர். சாலையிலிருந்து மேற்கே பிரியும் ஒரு சிறிய சாலையில் பத்து நிமிடப்பயணத்தில் பெருமாள் கோயிலை அடையலாம். கோயிலின் பெயர், வேணுகோபாலசாமி கோயில். பாமா, ருக்குமணி ஆகிய இறைவியரை இருபுறமும் கொண்டுள்ள வேணுகோபாலன். அகன்றதொரு வளாகத்தைப் பெற்றிருந்த கோயில்  வடிவில் சிறியது. ஒரு சிறிய கருவறையும் அதையடுத்து ஓர் அர்த்தமண்டபமும் உள்ளன. கருவறை கல்கட்டுமானத்தால் ஆனது. கருவறையின்மேல் ஒருதள விமானம். கோயில் கட்டிடக்கலையில் நாகர விமானம் எனக் குறிக்கப்படும் சதுர வடிவம் கொண்டது. விமானத்தின் தளப்பகுதியில் நான்கு புறமும் நடுவில் கோட்டமும், அதன் இருபுறமும் சில புடைப்புச் சிற்பங்களும் உள்ளன. அவற்றில், மனித உருவங்களும் , யானை போன்ற விலங்கு உருவங்களும் காணப்படுகின்றன. விமானத்தின் நான்கு புறச்சரிவுகளிலும் மகர தோரணங்கள் உள்ளன. விமானத்தின் உச்சியில் கலசம். வழக்கமாகச் செங்கல்லால் அமையும் விமானம் போலன்றி, இது காரையால் மட்டுமே கட்டப்பட்டது எனக் கோயில் தானத்தார் கூறினார். கோயில் முழுதும் காவி வண்ணப் பூச்சு. அர்த்தமண்டபத்தை அடுத்துள்ள முன்மண்டபம், சுற்றுச் சுவரால் மூடப்பட்ட மண்டப அமைப்பைக் கொண்டுள்ளதல்ல; தற்கால அமைப்பில், இரும்புக்குழல் கம்பங்களும், மேலே வேயப்பட்ட உலோகக் கூரையும் கொண்டது.

நினைவுக்கல் சிற்பம்



    முன்மண்டபத்தில் அர்த்தமண்டப வாயிலின் வலப்புறமாக, வடக்கு நோக்கிய நிலையில் ஒரு நினைவுக்கல் சிற்பம் காணப்படுகிறது. சிறிய மேடையொன்றில் இச்சிற்பம் நிறுத்தப்பட்டுள்ளது. ஓர் ஆணின் உருவமும், ஒரு பெண்ணின் உருவமும் கொண்ட சிற்பம். கோயில் கட்டுவித்தவராயிருக்கக் கூடும்; அல்லது கோயிலில் திருப்பணி செய்தவராய் இருக்கக் கூடும். மனைவியருடன் உள்ளார். ஆணின் சிற்பத்தில், ஆணின் வலக்கையில் சேகண்டி எனப்படும் இசைக்கருவியும், இடக்கையில் சங்கும் காணப்படுகின்றன. பெண் சிற்பம், இரு கைகளைக் கூப்பி வணங்கும் நிலையில் காணப்படுகிறது. வைணவச் சிறப்புச் சின்னங்களான சங்கும், ஆழியும் (சக்கரம்) ஆண், பெண் இருவரின் தோள்ப்பகுதிகளில் செதுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. ஆண், பெண் இருவரும் கழுத்து, கைகள், கால்கள் ஆகியவற்றில் அணிகலன்கள் பூண்டிருக்கிறார்கள். இருவருமே கால்கள் வரை ஆடை அணிந்துள்ளனர். ஆடை மடிப்புகள் கோடுகளால் புலப்படும்படி செதுக்கப்பட்டுள்ளது. இருவரின் கால்களுக்கு நடுவில் அமைந்த இடைவெளியில், ஒரு காளை மாட்டுச் சிற்பம் வடிக்கப்பட்டுள்ளது. சிற்பத்தில் வடிக்கப்பட்டவர், கால்நடைச் சமுதாயத்தைச் சேர்ந்த இடையராய் இருக்கலாம் என்ற கருத்தை இக்காளை மாட்டுருவம் சுட்டுகிறது. புடைப்புச் சிற்பமாக இருப்பினும், பலகைக் கல்லில், சிற்பங்களின் கழுத்துப்பகுதியிலும், இடைப்பகுதியிலும் சிறு சிறு துளைகள் இருப்பது குறிப்பிடத்தக்கது. சிற்பங்களின் வடிவமைப்பு பிற்காலத் தோற்றம் கொண்டிருப்பதால், சிற்பத்தின் காலம் 19-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதி என்ற் கொள்ளலாம்.

பலகைக்கல் கல்வெட்டு



      அர்த்தமண்டபத்தினுள், தென்மேற்கு மூலையில், ஒரு பலகைக் கல் நிறுத்தப்பட்டுள்ளது. அதில்தான் கல்வெட்டு பொறிக்கப்பட்டுள்ளது. கல்வெட்டின் மேல் பாதிப்பகுதியில் புடைப்பு உருவங்களும், கீழ்ப்பாதிப் பகுதியில் எழுத்துகளும் உள்ளன. நாயக்கர் ஆட்சிக்காலத்திலிருந்து கல்வெட்டுகளில் கதிரும், நிலவும் செதுக்கப்படும் வழக்கம் உள்ளது. செய்யப்பட்ட தன்மம் (கொடை), கதிரும் நிலவும் உள்ளவரை அழியாது, இடைநிறுத்தம் இல்லாது தொடரவேண்டும் என்னும் கருத்தின் குறியீடாகவே இது கொள்ளப்படுகிறது. கல்வெட்டு வாசகத்திலும் “சந்திராதித்தியவரை”  என்ற தொடர் இதைக்குறிக்கும். இவ்வழக்கத்தையொட்டி, இக்கல்வெட்டின் தலைப்பகுதியில் இரு ஓரங்களில் கதிரும் நிலவும் செதுக்கப்பட்டுள்ளன. நடுப்பகுதியில், வைணவக் குறியீடான திருமண் (நாமம்) உருவம் உள்ளது. அடுத்த நிலையில், ஆழியும் சங்கும் ஒரு பீடத்தின் மீது நிறுத்தப்பட்டதுபோல் செதுக்கப்பட்டுள்ளன. இவ்வுருவங்களுக்குக் கீழ், பத்து வரிகள் கொண்ட எழுத்துப்பொறிப்பு உள்ளது. எழுத்து மொழியும், சொற்களைச் சரியாகக் கையாளும் திறமையும் இல்லாத ஒரு கல்தச்சர் எழுத்துகளைப் பொறித்திருக்கவேண்டும். காரணம், பிழையான சொற்கள். எழுத்துகளின் வரிவடிவமும் திருத்தமாக இல்லை. கல்வெட்டு வரிகளில் காலக் குறிப்பு எதுவுமில்லை, சர்வதாரி வருடம் என்பதைத் தவிர. கல்வெட்டின் எழுத்தமைதி, சர்வதாரி என்னும் ஆண்டுக்குறிப்பு ஆகியன கொண்டு, கல்வெட்டின் காலம் கி.பி. 1888 ஆகலாம் எனக் கருத வாய்ப்புள்ளது. எனவே, நினைவுக்கல்லின் பழமையும், கல்வெட்டின் பழமையும் இருநூறு ஆண்டுகளுக்குள் அமைகின்றன. கோயிலின் பழமையையும் இருநூறு ஆண்டுகள் அளவில் நிலைநிறுத்தலாம். கல்வெட்டின் பாடம் கீழ்வருமாறு :

கல்வெட்டுப்பாடம்

1 சுமணயன சிலை (சபை?)
2 சறுவதரி வருச
3 ம் அப்பிசை மதம்
4 15 தேதி செல்லி
5 ன குப்பயி மள்
6 பாகாயி சி
7 (லை?) வய்த ன்ம
8 முதல் பெரு ம்
9 த(க)ன கொபால்
10 ...............ப்பட

முன்னரே குறித்தவாறு, கல்வெட்டை எழுதியவர் மொழியறிவுக் குறைபாடு கொண்டவராக இருக்கவேண்டும் ஏனெனில், சொல்லவந்த சேதி என்ன என்பதைச் சரியாக எழுதத் தெரியவில்லை என்பதை மேலே கல்வெட்டின் வாசகம் தரும் குழப்பத்திலிருந்து உணரலாம். சர்வதாரி என்னும் சொல் தமிழ் ஆண்டைக்குறிக்கும் வடசொல். அதனை த்மிழ்வடிவத்தில் “சருவதாரிஎன எழுதலாம். ஆனால், இங்கே, இடையின “ரிஎழுத்து, வல்லின “றி என்பதாக மாற்றப்பட்டுள்ளது. மேலும், “தாரி என்னும் நெடில், “தரி”  என எழுதப்பட்டுள்ளது. முதல் வரியில் சு ம ண ய ன”  ஆகிய எழுத்துகள் எந்தப்பொருளையும் தரவில்லை. முதல் வரியின் இறுதிச் சொல், “சபைஎன்றும், “சிலை”  என்றும் படிக்கும் வகையில் குழப்பமாக எழுதப்பட்டுள்ளது. “மாதம்”  என்பது “மதம்”  என எழுதப்பட்டுள்ளது. குப்பயி”, “பாகாயி”  ஆகிய சொற்கள் காணப்படுகின்றன.  மீண்டும் சிலை”  என்று பொருள்படும்படி ஒரு தெளிவற்ற சொல். “வைத்த”   என்னும் சொல்லை “வய்தஎன்று எழுதியிருப்பதாக நாம் யூகம் கொள்ளுமாறு ஒரு சொல் மயக்கம். இதேபோன்று,  “முதல் பேரு”  என்பதன் பொருள் தெளிவாகவில்லை. “கொபால” (கோபால)  என்னும் சொல், இறைவனின் பெயரான “வேணுகோபால”  என்பதைக் குறிக்கிறதா, இல்லை, “தனகோபால்”  என்னும் வேறொரு ஆள் பெயரைக் குறிக்கிறதா என்பதும் மிகுந்த ஐயத்தை எழுப்புகிறது. முதல் வரி, “சுவாமி சிலைஎன்று ஊகிக்கும்படியாகவும் உள்ளது. முடிவாக, கல்வெட்டு, இறைவனின் சிலையைச் செய்து கொடுத்தது பற்றியோ, கோயிலுக்குச் செய்த ஏதோவொரு தன்மத்தைப்பற்றியோ கூறுகிறது எனக் கொள்ளலாம். அந்தச் செயல் நடைபெற்ற ஆண்டு சர்வதாரி என்பது மட்டும் தெளிவாகிறது. அறுபது ஆண்டுகள் கொண்ட தமிழாண்டுகளின் சுழற்சியில், கி.பி. 1888, கி.பி. 1828 ஆகிய இரு ஆண்டுகளில் சர்வதாரி ஆண்டு அமைகிறது. இவ்விரு ஆண்டுகளில் ஓர் ஆண்டினைக் கல்வெட்டின் காலமாகக் கொள்ளலாம்.

தும்பிக்கை ஆழ்வார்

தும்பிக்கை ஆழ்வார் என்னும் வினாயகரைப்பற்றி இணையத்தில் (விக்சனரி) காணப்பட்ட செய்தி இங்கு தரப்படுகிறது.

இந்து சமயக் கோட்பாடுகளில் வினாயகரை வணங்காமல் எந்தச் செயலையும் செய்யக்கூடாது. எடுத்த காரியம் வெற்றிகரமாக முடிய வினாயகரை வழிப்பட்டேயாகவேண்டும். வினாயகர் சிவபெருமானின் மகன். தீவிரமாக திருமாலை வழிபடும் வைணவர்கள் சிவன் தொடர்புடைய எதையும் கொண்டாடமாட்டார்கள். ஆனால் இந்து சமய நெறியின்படி ஒரு காரியத்தை தொடங்கும்போது வினாயகரை வழிபடுவது கட்டாயம். இந்த நிலையில் வைணவர்கள் வினாயகரையே வைணவ சமய சம்பந்தப்பட்டவராக்கி, வினாயகர், கணபதி என்றெல்லாம் அழைக்காமல் ' தும்பிக்கை ஆழ்வார்' என்று வைணவப் பெயரிட்டே வணங்கினார்கள். பெரும்பாலும் வினாயகரின் திருவுருவத்தை வழிபடாமல் சொல்லும் மந்திரங்களில் அவரை வேறு பெயர்களால் கொண்டாடுவர். சில சந்தர்ப்பங்களில் திருவுருவம் தேவையென்றால் விநாயகருக்கு திருநீறு (விபூதி) அணிவிக்காமல் வைணவ முறைப்படி திருமண் (நாமம்) இட்டு வணங்குவார்கள். சில வைணவக் கோயில்களில் வினாயகரை இந்தக் கோலத்தில் மிக அரிதாக இன்றும் காணலாம்..எனினும் இந்த வழக்கம் தற்காலத்தில் வைணவர்களிடையே பெரிய அளவில் நடைமுறையில் இல்லை என்றே கொள்ளலாம்..

                                                                       தும்பிக்கை ஆழ்வார் 


இததகைய பிள்ளையாரின் சிற்பம் இக்கோயிலில் காணப்படுவது குறிப்பிடத்தக்கது. ஒரு தனிச் சன்னதியைக் கட்டி அதில் வைணவப்பிள்ளையாரை எழுந்தருளச் செய்திருக்கிறார்கள். பிள்ளையாருக்கு இரு கைகள் மட்டுமே உள்ளன. ஒரு கையில் சங்கும், மற்றொரு கையில் ஆழியும் ஏந்தியிருக்கிறார்.

ஒண்டி முனியப்பன் கோயில்


     அடுத்து, நாங்கள் செல்ல வேண்டிய இலக்கு, கோபி-சத்தி சாலையில், பங்களாப்புதூர், தூக்கநாயக்கன்பாளையம் ஆகிய ஊர்களுக்கு அருகில் உள்ள மத்தாளக்கோம்பு என்னும் இடம். போகும் வழியில் பங்களாப்புதூர்ச் சாலையின் ஓரத்திலேயே ஒரு முனியப்பன் கோயில். ஒண்டிமுனியப்பன் என்னும் பெயருடைய இந்தக் காவல் தெய்வம் நாட்டார் வழிபாட்டு மரபில் நீண்ட காலமாக இங்குள்ளது. கிராமத்து மக்களின் நம்பிக்கைத் தெய்வமும் கூட. அவருக்கு  ஏன் ஒண்டி முனியப்பர் என்று பெயர்? காரணம் தெரியவில்லை. ஒற்றையாய் இருப்பது காரணமாகலாம். பல கோயில்களில், ஒன்றுக்கு மேற்பட்ட முனியப்பன் சிலைகளைக் காண்கிறோம். இப்பகுதி மக்கள் த்ம் உள்ளக்கிடக்கையை வேண்டுகோளாக முனியப்பனிடம் வைக்கிறார்கள். வேண்டுவதை நிறைவேற்றித்தரும் ஆற்றல் பெற்றவர் முனியப்பன் என்று மக்களுக்கு அசையாத நம்பிக்கை.

உருவாரம்



         கிராமத்து எளிய மக்கள் தம் எளிய விருப்பங்கள் நிறைவேறவும், தம் அன்றாட வாழ்வில் எதிர்கொள்ளும் இடர்கள் நீங்கவேண்டியும் முனியப்பனிடம் நேர்ந்துகொண்டு, நேர்த்திக் கடன் கழிக்கும் பாங்கில், மண் பொம்மைகளைச் செய்து கோயில் வளாகத்தில் வைத்து வழிபடுகிறார்கள். இப்பொம்மை உருவங்களை உருவாரம் என்று அழைக்கிறார்கள். நிறைய மனித உருவங்கள்; பெரியவர்கள், சிறார் ஆகியோரின் உருவங்கள். கால்நடைகள், நாய்கள் ஆகியவற்றின்  உருவங்களும் உள்ளன. அவற்றின் ஊறுகளையும் முனியப்பன் களைகிறார். பாம்பைக் கண்ட அச்சம் விலகப் பாம்புப்பொம்மைகள். கால்களின் ஊறு களையத் தனியே பொம்மைக் கால்கள். படிப்பு வரவேண்டிப் புத்தகத்துடன் மாணவன் பொம்மை. ஒரு மரத்தில் இரும்புச் சங்கலிகள். அவை எதைக்குறிக்கின்றன எனத் தெரியவில்லை.

மத்தாளக்கோம்புப் பிள்ளையார்

                                                                     விநாயகர் கோயில் 

                                                                 மத்தாளக்கோம்பு விநாயகர்


           மத்தாளக்கோம்பில் ஒரு புதுமையான பிள்ளையார் கோயில் கொண்டிருக்கிறார். பழமையான அரசமரத்தடியில். மத்தாளக்கோம்பு விநாயகர் என்னும் பெயருடன் விளங்கும் இந்த விநாயகர் சிற்பம் புதுமையானது; மாறுபட்டது. இரு கைகளுடன் திகழும் விநாயகர் தம் இடது கையால் வடிவில் உள்ள தும்பிக்கையைத் தாங்கிப்பிடித்திருக்கிறார். நீள்வட்ட வடிவில் தலை; ஆனைமுகத்தில், ஆனைச்செவியைக் காணவில்லை. செவிப்பகுதியிலிருந்து சரியும் தோள்பட்டைகள் இரண்டும் பருத்தும், கைகள் இரண்டும் மெலிந்தும் காணும் முரணிய தோற்றம். உருண்டும் திரண்டும் வழக்கமாய்க் காணப்படும் “குண்டு வயிற்றைக் காணவில்லை. சதுரவடிவில் புடைத்த வயிற்றுப்பகுதி. வயிற்றை ஒட்டி, மடித்த குள்ளக் கால்கள். தும்பிக்கை இல்லையெனில் அது ஒரு பிள்ளையார் சிற்பம் என நம்ப இயலாது. சிற்ப வேலைப்பாடுகள் எவையுமின்றி வடிக்கப்பட்ட ஒரு பழங்கற்சிலை. அழகு இங்கு முதன்மையல்ல; “நான் தும்பிக்கையைக் கையில் பிடித்துக்கொண்டிருக்கிறேன். அதை மட்டும் பார்; நீ நம்பிக்கையை விடாமல் பற்றிக்கொள்”  என்று சொல்லாமல் சொல்லும் குறிப்பின் உருவம்தான் இந்தப் பிள்ளையார்.

மத்தாளக்கோம்புச் சுனைநீர்க் குளம்



                                                     மத்தாளக்கோம்பு நீரூற்று- நாளிதழ்ச் செய்தி

    மத்தாளக்கோம்பில், பிள்ளையார் கோயிலக்கருகில் ஒரு சிறிய குளம் உள்ளது. உண்மையில், இது குளமல்ல. இயற்கையாய் அமைந்த ஒரு நீரூற்று. ஐந்நூறு ஆண்டுகளாய் வற்றாமல் ஊற்றெடுத்து வரும் நீர் நிலை. குளம் போல் தேங்கிப் பின்னர் வழிந்து அடுத்துள்ள வாய்க்கால் வழியே வெளியேறி, வாநி (பவானி)யாற்றுடன் கலக்கிறது. இந்த நீரூற்று பற்றி, தூ.நா. பாளையம் வரலாற்று ஆராய்ச்சியாளர் இராமசாமி அவர்கள் ஓரிரு ஆண்டுகளுக்கு முன்பே நாளிதழொன்றில் செய்தி வெளியிட்டுள்ளார். அச்செய்தியில் அவர், அங்கே படிக்கட்டுகளில் கல்வெட்டு காணப்படுவதாகவும், கல்வெட்டு படிக்கப்படும்போது மேலும் சில செய்திகள் தெரியவரும் என்றும் குறிப்பிடுகிறார். ஆசிரியர் பவுசியா அவர்களும் முன்பு இங்கு வந்திருந்தபோது கல்வெட்டைக் கண்டிருக்கிறார். கல்வெட்டைப் படிக்கும் ஆவலிலேயே நாங்கள் தற்போது இங்கு வந்தோம்.

குளத்துப் படிக்கற்களில் கல்வெட்டு



    குளத்தின் படிக்கட்டுகளில் உள்ள இரண்டு கற்களில் எழுத்துகள் காணப்பட்டன. கற்களின் மேற்பரப்பு செம்மைப்படுத்தப்படாமல், கரடு முரடாக இருந்த நிலையிலேயே அவற்றின்மீது எழுத்துகளைப் பொறித்திருக்கிறார்கள். எனவே, கற்களில் இயல்பாய் இருக்கும் பள்ளங்களினூடே எழுத்துகளும் இருப்பதால், எழுத்துகள் புலப்படவில்லை. சுண்ணப்பொடியை நீரில் குழைத்து, கற்களின்மீது பூசிக் காயவிட்டபின், ஓரளவு எழுத்துகள் புலப்பட்டாலும் கல்வெட்டு வாசகங்களை முற்றாகப் படிக்க இயலவில்லை. சில சொற்களை மட்டும் படிக்க இயன்றது. நீரூற்றைச் சுற்றியும் படிக்கட்டுகள் அமைத்துக் கொடுத்துக் குளம்போல் கட்டிக்கொடுத்தவர் யார் என்பதைக் கல்வெட்டு தெரிவிக்கிறது. தூக்கநாயக்கன்பாளையத்தைச் சேர்ந்த மூக்கண்ண கவுண்டர் என்பவர் இந்தப் பணியைச் செய்துள்ளார்.

முடிவுரை

     மத்தாளக்கோம்பு பிள்ளையார் கோயிலையும், நீரூற்றையும், கல்வெட்டையும் பார்த்து முடித்ததும், இப்பகுதியின் தொல்லியல் தடயங்களைத் தேடி மேற்கொண்ட  எங்கள் பயணம் நிறைவுற்றது. பயண இறுதியில், தூ.நா. பாளையத்தில், வரலாற்று ஆராய்ச்சியாளர் இராமசாமி அவர்களையும் சந்தித்துப் பேசினோம். அவர், மத்தாளக் கோம்பு பற்றி அவர் வெளியிட்ட நாளிதழ்ச் செய்தியைக் காண்பித்தார்.



து.சுந்தரம், கல்வெட்டு ஆராய்ச்சியாள்ர், கோவை.
அலைபேசி : 9444939156.