மொத்தப் பக்கக்காட்சிகள்

சனி, 22 செப்டம்பர், 2018


                          பள்ளிப்புரம் கோட்டை -  PALLIPPURAM FORT

முன்னுரை

”திருவாங்கூர் தொல்லியல் வரிசை”  (TRAVANCORE ARCHAEOLOGICAL SERIES) என்னும் பெயரில் பதிப்பிக்கப்பட்ட தொல்லியல் நூல் தொகுதியில், தற்போதையத் தமிழகத்தின் தென்கோடிப் பகுதி மற்றும் பழந்தமிழ்நாட்டின் சேர நாட்டுப்பகுதி ஆகிய நிலப்பரப்பில் காணப்படுகின்ற தொல்லியல் எச்சங்கள், கல்வெட்டுகள், செப்பேடுகள் பற்றிய அரிய வரலாற்றுப் பதிவுகள் கூறப்படுகின்றன. இந்த நூலின் தொகுதிகளில் சில படிக்கக் கிடைக்கும்போது, சில செய்திகளைப் பகிர்ந்துகொள்ளும் விழைவு தவிர்க்க இயலாததாகின்றது.  சங்க காலத்துத் தமிழகத்தின் முப்பெரும் நாடுகளுள் ஒன்றாகச்  சேர நாடு அமைந்திருப்பினும், சங்ககாலத்துக்குப் பின்னர் இடைக்காலத்திலிருந்து சேர நாட்டின் மொழி, மக்கள் பண்பாடு ஆகியவற்றில் தனித்தொரு மாற்றம் இருப்பதாகவே தோன்றுகிறது. மொழி தமிழாகவும், எழுத்து வட்டெழுத்தாகவும் இருந்த நிலை மெல்ல மாற்றம் பெற்று மொழி மலையாளமாகவும், வட்டெழுத்திலிருந்து பிரிந்து தமிழ்-கிரந்த எழுத்தின் துணையோடு எழுத்தும் மலையாளமாகவும் புது உருவம் கொள்கின்றன. இந்த மாற்றங்களை, தமிழ் வேரின் அருகிலிருந்து அடையாளம் காணக் கணக்கற்ற தரவுகளை உள்ளடக்கியதாக மேற்படி நூல் தொகுதி அமைகிறது.  வட்டெழுத்துக் கல்வெட்டுகள் மற்றும் வட்டெழுத்துச் செப்பேடுகள் ஆகியன பற்றிப் பகிர்ந்துகொள்வதற்கு நிறையச் செய்திகள் உள்ளன. சிலவற்றைப் பகிர்ந்துகொண்டும் வருகிறேன். இங்கே, அண்மையில் படித்த  15-ஆம் நூற்றாண்டு வரலாற்றுச் செய்தி ஒன்றின் பதிவைப் பகிர்ந்துகொள்கிறேன்.

T.A. கோபிநாத ராவ்

திருவாங்கூர் அரசின் தொல்லியல் துறைத் தலைவர்களாக (கண்காணிப்பாளர் பதவியில்) இருந்த மூன்று அறிஞர்களில் ஒருவர் T.A. கோபிநாத ராவ் அவர்கள். மற்ற இருவர் K.V. சுப்பிரமணிய ஐயர், A.S. இராமநாத அய்யர் ஆகியோர். இம்மூவருமே மேற்படி ”திருவாங்கூர் தொல்லியல் வரிசை”  (TRAVANCORE ARCHAEOLOGICAL SERIES) நூல் தொகுதிகளின் ஆசிரியர்களாவர். நூலின் வரிசைகளில் பதினொன்றாம் வரிசையில் “பள்ளிப்புரம் கோட்டை அல்லது இந்தியாவில் உள்ள காலப்பழமையில் முதலிடம் பெறும் ஐரோப்பியக் கட்டிடம்”  என்னும் தலைப்பில் ஒரே ஒரு ஆய்வுக்கட்டுரை இடம்பெறுகிறது. எழுதியவர் T.A. கோபிநாத ராவ் அவர்கள்.

பள்ளிப்புரம் கோட்டை

கொச்சித் தீவொன்றில் கட்டப்பெற்ற கோட்டை பள்ளிப்புரம் கோட்டை. முன்னரே கூறியவாறு இந்தக் கட்டிடம் இந்தியாவிலேயே, ஐரோப்பியர் எழுப்பிய மிகப் பழமையான கட்டிடம் என கோபிநாதராவ் குறிப்பிடுகிறார். இக்கட்டுரையில் அடிக்குறிப்பில், இக்கோட்டையைப் பற்றிய வரலாற்றுச் செய்திகள் யாவும் ஃபிரான்சிஸ் டே (FRANCIS DAY) என்பவர் எழுதிய  ”பெருமாள்களின் நாடு” (LAND OF THE PERMAULS’) என்னும் நூலை அடிப்படையாகக் கொண்டவை என்று குறிப்பிடுகிறார். நம் கட்டுரையும் கோபிநாதராவ் அவர்களின் ஆங்கிலக் கட்டுரையின் தமிழாக்கம் எனலாம்.

வாஸ்கோ ட காமா (VASCO de GAMA)

1498-ஆம் ஆண்டு மே மாதம் 18-ஆம் நாள். கடல் வழிப் பயணம் மேற்கொண்ட வாஸ்கோ ட காமா என்னும் போர்த்துகீசியரின் கண்களுக்கு இந்திய நிலம் புலப்பட்ட நாள். அடுத்து இரு நாள்களில் மே, 20 அன்று கோழிக்கோட்டில் நுழைவு.

                                         வாஸ்கோ ட காமா கோழிக்கோட்டில் இறங்கிய இடம்            


பாண்டிபோ (BONTAYBO) என்னும் ”மூர்” (MOOR) இனத்தைச்  சேர்ந்த ஒருவரின் உதவியோடு காமா, கோழிக்கோட்டு அரசர் சமூத்திரியைச் (ZAMORIN) சந்தித்துப்பேசுகிறார். பாண்டிபோவுக்குப் போர்த்துகீசிய மொழியும், மலையாள மொழியும் தெரிந்திருந்தது. அதனாலேயே, காமா சமூத்திரியிடம் பேச இயன்றது. காமாவும் சமூத்திரியும் பேசி உடன்படிக்கையை எட்டுகின்றனர். போர்த்துகீசியர் மலபார் பகுதியில் வணிகம் நடத்தலாம். மலபார் பகுதியில் ஏற்கெனவே மூர் இனத்தவர், அரபு நாட்டிலிருந்து வந்து வணிகம் நடத்தத் தொடங்கிவிட்டவர்கள். மலபார்ப் பகுதியில் மிளகு, நறுமணப் பொருள்களின் வணிகத்தில் இவர்கள் போட்டியேதுமின்றி நிலைகொண்டவர்கள். காமா, அரசர் சமூத்திரியிடம் வணிக ஒப்பந்தம் ஏற்படுத்தியதும் மூர் மக்கள் கலக்கமுறுகின்றனர். காமா தலைமையில் வந்த போர்த்துகீசியர், ஐரோப்பாவைச் சேர்ந்த ஒரு நாட்டின்  பிரதிநிதிகளாக வணிகம் செய்ய வந்தவர் அல்லர் என்றும், உண்மையில் அவர்கள் கடற்கொள்ளையர் என்றும் அரசரிடம் கூறி அரசரின் மனத்தில் நஞ்சு கலக்கின்றனர். போர்த்துகீசியரோடு அரசருக்கிருந்த உறவில் மாற்றம் ஏற்படுகிறது. எனவே, காமா 1499-ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதத்தில் நாடு திரும்புகிறார்.

மீண்டும் போர்த்துகீசியர் வருகை

1500-ஆம் ஆண்டு, மார்ச்சு மாதம் 15-ஆம் நாளில் போர்ச்சுகல் நாட்டின் கடற்படைத் தளபதி காப்ரல் (PEDRO ALVAREZ CABRAL) தலைமையில் கோழிக்கோடு நோக்கி மீண்டும் ஒரு பயணம் தொடங்கியது. கடற்பயணத்தில் நேரும் பல பேரின்னல்களைக் கடந்து கப்பல்கள் கோழிக்கோடு அடைந்தன. இம்முறை சமூத்திரி நட்புக்காட்டியதுடன் ஓர் ஒப்பந்தத்தையும் முடிக்கிறார். அதன்படி, தளபதி காப்ரல் கோழிக்கோட்டில் ஒரு தொழிற்சாலையைத் திறக்கிறார். ஆனால், இப்போதும் ஒரு சிக்கல் எழுகிறது. மூர்  வணிகர்களுக்கு வணிகப்பொருள்களைக் குறைவின்றி வழங்கிய அளவுக்குப் போர்த்துகீசியருக்கு அரசர் சமூத்திரி வழங்கவில்லை. சினமுற்ற தளபதி காப்ரல், கடலில் வணிகப்பொருள்களோடு இருந்த, மூர் இனத்து வணிகரின் கப்பலொன்றைத் தாக்கி, ஆள்களைக்கொன்று வணிகப்பொருள்களைக் கைப்பற்றினான். கரையில் இருந்த மூர் இனத்து வணிகர் இதை எதிர்க்கவே, தளபதி காப்ரல் மேலும் சினந்து கோழிக்கோடு நகரின்மீது ஒரு தாக்குதலை நிகழ்த்தி 600 பேரைக் கொன்றான். இதன் விளைவாக அவன் கோழிக்கோட்டைவிட்டு அகலவேண்டியதாயிற்று.

அங்கிருந்து பயணப்பட்ட தளபதி காப்ரல் கொச்சி நகரை அடைந்தான். இது நிகழ்ந்தது கி.பி.1500, டிசம்பர் மாதம் 20-ஆம் நாள். கொச்சி அரசர், அயலாரைப் பணிவன்புடன் வரவேற்று வணிகம் செய்யப் பல வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்து ஒரு தொழிற்சாலையையும் தளபதி காப்ரலுக்கு அளித்தார். இதைக் கேள்வியுற்ற சமூத்திரி, போர்த்துகீசியரை விரட்ட, 1500 பேர்கள் அடங்கிய கப்பற்படையைக் கொச்சியை நோக்கி அனுப்பினார். சமூத்திரியின் படை கொச்சியை நெருங்கியதும் இச்செய்தியைக் கொச்சி அரசர் தளபதி காப்ரலுக்குத் தெரிவித்ததோடு,  தாக்குதலின்போது உதவுவதாகவும் கூறியிருந்தார். தளபதி காப்ரல் இந்தப் படையை எதிர்த்துத் துரத்தினான். ஏனோ சமூத்திரியின் படை போர்த்துகீசியரோடு நேரடியாக மோதாமல் அகன்றது.  இதற்குப் பின்னர் தளபதி காப்ரலும் கொச்சிக்குத் திரும்பாமல் நாட்டை நோக்கிப் புறப்பட்டான். போர்த்துகீசியரின் முதல் கொச்சித் தொடர்பு இவ்வாறு நிகழ்ந்தது.

போர்த்துகீசியரின் வருகை-மூன்றாம் முறையாக

மூன்றாம் முறையாகப் போர்த்துகீசியர் அணியொன்று மீண்டும் காமாவின் தலைமையில் 1502-ஆம் ஆண்டு, மார்ச்சு மூன்றாம் நாள் புறப்படுகிறது. போர்ச்சுகல் நாட்டு அரசரே, சமூத்திரிகளைத் தாக்கும் திட்டத்துடன் காமாவை அனுப்புகிறார். வாஸ்கோவின் உறவினரான ஸ்டீஃபன் ட காமா (STEPHEN de GAMA) அவருடன் இணைந்துகொள்கிறார். கோழிக்கோட்டை அடைந்து தாக்குகின்றனர். ஃபிரான்சிஸ் டே தம் நூலில், காமாவின் அடாத செயல்களைப் பற்றிக் குறிப்பிடுகிறார். தாக்குதலின்போது கொடுமைகள் நிகழ்கின்றன. அரசுத் தூதுவர்கள் தூக்கிலிடப்படுகின்றனர். கிறித்தவ நாடுகளின் வரலாற்றில் ஒரு கறையாக இந்நிகழ்வு அமைந்ததாயும் மானுடத்துக்கே இது ஒரு இழிவு என்றும் ஃபிரான்சிஸ் டே குறிப்பிடுகிறார். காமா, பின்னர் கொச்சிக்குச் சென்று வணிகத் தொழிற்சாலை ஒன்றை அமைத்து ஒரு வணிகர் பிரிவை அங்கே இருத்திவிட்டுச் செப்டம்பர் மாதத்தில் தாயகம் திரும்புகிறான்.

கொச்சி மீது போர்

கொச்சி அரசர் போர்த்துகீசியருடன் வணிக நிமித்தம் இணைந்து செயல்பட்டமை கொச்சி அரசர்க்குத் தீங்காய் முடிகின்றது. கோழிக்கோட்டு அரசர் சமூத்திரியின் பகைமையை வலுக்கச்செய்தது.  பெரும்படையுடன் சமூத்திரி கொச்சி மீது படையெடுப்பு நிகழ்த்துகிறார். கொச்சி அரசர், கொச்சிக்கருகில் உள்ள வைப்பீன் (VYPEEN) என்னும் தீவில் அடைக்கலம் புகுகின்றார். கொச்சி அரசரின் நல்லூழ் காரணமாகப் போர்த்துகீசியரின் கப்பற்படைப் பிரிவு ஒன்று ஃபிரான்சிஸ்கோ ட ஆல்புக்கர்க் (FRANCESCO de ALBUQUERQUE) என்னும் தளபதியின் தலைமையில் 1503, செபடம்பர் 20-ஆம் நாள் மேலைக்கடற்கரை வருகிறது. சமூத்திரியின் படைகளைத் தோற்கடித்து, கொச்சி அரசரை அவரது பதவியில் அமர்த்தியது. சமூத்திரியின் நட்பு அரசரான பிராமண அரசரின் ஆட்சிப்பகுதியான எடப்பள்ளியும் போர்த்துகீசியரால் கைப்பற்றப்படுகிறது. கொச்சி அரசரும் போர்த்துகீசியரின் நட்புக் கிடைத்த மகிழ்ச்சியில், அவர்கள் கொச்சியில் ஒரு கோட்டை கட்டிக்கொள்ள ஒப்புதல் அளிக்கிறார். 1503, செபடம்பர் 26-ஆம் நாள் பணி தொடங்கி, அக்டோபர் முதல் நாள் கோட்டைக்கு “மானுவல்” (MANUEL) என்று பெயரும் சூட்டப்படுகிறது. இது அப்போது போர்ச்சுகல் நாட்டை ஆண்டுகொண்டிருந்த அரசரின் பெயராகும்.

பள்ளிப்புரம் கோட்டை

அடுத்த சில ஆண்டுகளில் கொடுங்கலூர் மற்றும் பள்ளிப்புரம் கோட்டைகள கட்டப்பெறுகின்றன. கடலிலிருந்து கழிமுகப்பகுதிக்குள் நுழையும் கட்டுப்பாட்டு வாயில் போன்று பள்ளிப்புரம் கோட்டை பயன்பட்டது எனலாம். கோட்டைக் கட்டிடம் மிகவும் பெரிதான அமைப்பில்லை. கண்காணிப்புக்கும் காவலுக்கும் நிறைய ஆள்கள் தேவையில்லை. இதைப்பற்றி காஸ்பர் கொரியா (GASPER CORREA) எழுதியுள்ள குறிப்பில், “பள்ளிப்புரம் கோட்டை 1507-ஆம் ஆண்டு கட்டப்பட்டது. அளவில் சிறியதாயினும் கழிமுகத்தின் வாயிலாகத் திகழ்ந்தது; காவலுக்கு இருபது வீரர்களே இருந்தனர். அமைப்பில் எண்கோண வடிவுடையது. எண் முகப்புகளிலும் பீரங்கி நிறுத்தும் இடவமைப்புக்கொண்டது. இதுவே இந்தியாவில் ஐரோப்பியரின் மிகப் பழமையான கட்டிடமாக இருக்கக்கூடும்”  என்று உள்ளது. பள்ளிப்புரம் கோட்டை கட்டப்படும்போதும் அதற்குப் பின்னரும் அலிக்கோட்டை அல்லது ஆயக்கோட்டை என்று அழைக்கப்பட்டது. எல்லோரது குறிப்பிலும் இது எண்கோண வடிவக் கோட்டை என்றிருப்பது வியப்பே. காஸ்பர் (GASPER) எழுதிய குறிப்பிலும்ம், ஃபிரான்சிஸ் டே (FRANCIS DAY) எழுதிய குறிப்பிலும் எண்கோண வடிவக் கோட்டை என்றே உள்ளது. உண்மையில் இக்கோட்டை அறுகோண வடிவம் கொண்டதாகும்.

    பள்ளிப்புரம் கோட்டை - முன்புறத் தோற்றம்                                           


மேலைக் கடற்ரையில் போர்த்துகீசியரின் ஆதிக்கம் தொடங்கிய காலக்கட்டத்தில் கட்டப்பெற்ற மூன்று கோட்டைகளில் இன்று எஞ்சியிருப்பது பள்ளிப்புரம் கோட்டை ஒன்றே. கொச்சிக் கோட்டை இருந்த தடயமே இன்றில்லை. ஒரு காலத்தில் பெயர்பெற்று விளங்கிய கொடுங்கலூர்க் கோட்டையின் எச்சங்கள் இன்று ஒரு மண் மேட்டுக்குள் அடக்கம். அறுபது அல்லது எழுபது கஜம் நீளத்தில் கோட்டையின் இடிந்த சுற்றுச் சுவரும், வாயில் பகுதியும், நிலவறையும் இந்த மண்மேட்டுக்குள் புதையுண்டு காணப்படுகின்றன.  நிலவறை, வெடி மருந்துக் கிடங்காகப் பயன்பட்டிருக்கவேண்டும். முழுதும் சிதைந்து அழிந்துபோகாமல் இருக்கும் ஐரோப்பியரின் கட்டுமானம் பள்ளிப்புரம் கோட்டை ஒன்றே.


                                              பள்ளிப்புரம் கோட்டை - இன்னொரு தோற்றம்                                           


கொச்சிக்கு வடக்கில் இருக்கும் தீவு வைப்பீன் தீவு. இத்தீவின் வடகோடியில் இருக்கும் ஒரு சிறிய கிராமம் பள்ளிப்புரம். இந்தத் தீவு பதின்மூறு மைல் நீளம் கொண்டது. அகலம், ஆங்காங்கே ஒரு மைல் முதல் மூன்று மைல் வரையிலும் மாறிக் காணப்படும். கடலோடு வந்து கலக்கும் பல்வேறு நீர்க்கால்களால் கொண்டு சேர்க்கப்பட்ட வண்டல் மண்ணால் இத்தீவு உருவானது என்று கருதப்படுகிறது. முதன்முதலாகப் போர்த்துகீசியர் நுழைந்த சமயத்தில், இத்தீவு கொச்சி அரசரின் உடைமையாய் இருந்தது. வைப்பீன் தீவின் வட கோடியில் கட்டப்பெற்ற இக்கோட்டை, அயலார் கப்பல்கள் பெரியாற்றின் வாய்ப்பகுதி வழியே நுழையாவண்ணம் கண்காணித்துக் காக்கும் துறைபோல இயங்குவதற்காகவே கட்டப்பெற்றது. இக்கோட்டைக்கு நேர் எதிரே பெரியாற்றின் எதிர்க்கரையில் கொடுங்கலூர்க் கோட்டை கட்டப்பெற்றுள்ளது.

                                              பள்ளிப்புரம் கோட்டை -  செய்திப் பலகை


முன்னரே குறித்தவாறு, பள்ளிப்புரம் கோட்டை அறுகோண வடிவிலான கட்டிடம் ஆகும். மூன்று அடுக்குகளைக்கொண்டது. கீழ்மட்ட அடுக்கு அல்லது தரைமட்ட அடுக்கின்  (LOWEST FLOOR/GROUND FLOOR) கட்டிடப்பகுதி, கோட்டை அமைந்துள்ள தரைப்பகுதியோடு ஒட்டி அமையவில்லை. தரைப்பகுதியின் மட்டத்திலிருந்து ஓர் ஐந்தடி உயரத்துக்கு மேடை போலமைத்து அதன் மீதுதான் கோட்டையின் கீழடுக்கு தொடங்குகிறது. இந்த மேடைப்பகுதியின் கீழே ஒரு நிலவறை (CELLAR) அமைக்கப்பட்டுள்ளது. நிலவறைக்குச் செல்லும் சாய்தளப் பாதை வடக்கிலிருந்து தெற்கு நோக்கி அமைந்துள்ளது. இப்பாதை மூன்றடி அகலமும் மூன்றடி உயரமும் கொண்ட குறுகலான பாதையாகும். பாதையைக் கடந்து முடிந்ததும் உள்ள நிலவறை ஏழடிக்கு ஏழடிச் சதுரப் பரப்பும் நான்கடி உயரமும் கொண்டது. வெடி மருந்து (GUN POWDER) போன்ற பொருள்களைச் சேமித்து வைக்க இந்த நிலவறை பயன்பட்டிருக்கவேண்டும். கோட்டையின் நுழைவாயில் ஐந்தேகால் அடி நீளமும், ஏழடி உயரமும் அமைந்த கருங்கல் (GRANITE) கட்டுமானம். பரப்பும், வடிவமும் நன்கு செதுக்கிச் செம்மைப்படுத்தப்பட்ட கருங்கற்களே கட்டுமானத்துக்குப் பயன்பட்டன. நுழைவாயிலின் மேற்பகுதி, வளைவான வடிவில் அமைக்கப்பட்டுள்ளது. அதன் விட்டப்பகுதி செம்மையான வார்ப்புக்கொண்டது. நுழைவாயிலுக்குப் பின்புறம், அதன் நீளம் ஐந்தேகால் அடியிலிருந்து ஏழே கால் அடியாக விரிகிறது. கட்டிடச் சுவரை அணுகுமுன்பே மேற்குப் புறத்தில் ஒரு கிணறு காணப்படுகிறது. மூன்றே கால் அடிச் சதுரமும், பதினாறடி ஆழமும் உடைய கிணற்றுச் சுவரின் அகலம் அரை அடி. T.A. கோபிநாத ராவ் அவர்கள் ஆய்வு செய்த பொழுதில், கிணற்றில் இரண்டடி ஆழத்துக்குத் தண்ணீர் இருந்துள்ளது. தண்ணீர் குடிக்கும் நிலையில் நன்கிருந்ததாகப் பள்ளிப்புரம் மக்கள் கூறியுள்ளனர் என்றும் ஆனால் தற்போது கிணறு பயன்படுத்தப்பெறாமல் பேணுதலின்றிக் கிடக்கின்றது என்றும் ராவ் அவர்கள் குறிப்பிடுகிறார்.

கிணற்றின் வடக்குத் திசையிலிருந்து கட்டிடப்பகுதி இருக்கும் மேடைப்பகுதியைச் சென்றடையும் வண்ணம் நான்கு படிகள் உள்ளன. படிகளைக் கடந்தவுடன் வடபுறத்தில், நிலவறையை நோக்கிச் செல்லும் ஒரு திறப்பு உள்ளது. மேடைப்பகுதியின் மையத்தில், மூன்றடி விட்டமுள்ள வட்ட வடிவக் கற்பலகை ஒன்று காணப்படுகிறது. இது தூணின் அடிப்பகுதியாகலாம். எனில், இந்த மையக் கல் பீடத்திலிருந்து ஆரக்கால்கள் போல மர விட்டங்கள் பிரிந்து சென்று கட்டிடத்தின் இரண்டு தளத்தையும் தாங்கியிருத்தல் வேண்டும்.

                                          பள்ளிப்புரம் கோட்டை - வேறு தோற்றங்கள் 








கோட்டைக் கட்டுமானம்-விரிவான விளக்கம்

கட்டிடம் அறுகோணவடிவில், ஆறு முகப்புகளைக் கொண்டது எனக் கூறியிருந்தோம். இவ் ஆறு முகப்புகளும், வெளிப்புறத்தில் முப்பத்திரண்டு அடி நீளமும், முப்பத்து நான்கு அடி உயரமும் கொண்டவை. இந்த முகப்புகளில் ஒவ்வொன்றிலும் பீரங்கியை நுழைத்துச் சுடுகின்றவகையில் ஒரு புழை அல்லது பெரிய துளை அமைக்கப்பட்டுள்ளது. தரைத்தளம் மற்றும் முதல் தளத்தில் முழு வடிவிலான துளையமைப்பும், இரண்டாம் தளத்தில் தளத்தின் சுற்று மதிலின் மேற்புற விளிம்பில் ”ப” வடிவிலான துளையமைப்பும் காணப்படுகின்றன. முதலிரண்டு துளைகளும் இரண்டுக்கு இரண்டரை அடிக் கணக்கிலான அளவுள்ளவை. ஆறு முகப்புகளிலும் சேர்த்துப் பதினெட்டு துளைகளில் பதினெட்டுப் பீரங்கிகளை நிறுத்தி வைக்க முடியும். கோட்டையின் எல்லாத் திசைகளிலிருந்தும் வருகின்ற தாக்குதல்களை எதிர்கொள்ளவும், கோட்டையிலிருந்து பீரங்கித்தாக்குதல் நிகழ்த்தவும் இந்தப் பாதுகாப்பு அமைப்பு போதுமானதாய் இருந்துள்ளது எனலாம். இந்தப் பீரங்கித் துளைகளுக்கருகில் காணப்படும் சிறு சிறு துளகள், நாம் ஏற்கெனவே குறிப்பிட்ட ஆரக்கால்கள் பதிக்கப்பட்ட இடங்களைக் குறிக்கும். மரத்தால் ஆன இந்த ஆரக்கால்களின் எச்சங்கள் எவையும் தற்போது காணப்படவில்லை. மரச்சட்டங்கள் காலப்போக்கில் அழிந்துபோயிருக்கலாம்; அல்லது, ஊர் மக்கள் அவ்வப்போது அவற்றைப் பிரித்துக்கொண்டுபோய் பயன்படுத்தியிருக்கக்கூடும்.  இதில் இரண்டாவதாகச் சொன்னதே நடந்திருக்க வாய்ப்புள்ளதாக ராவ் அவர்கள் கருதுகிறார். (கட்டுரை ஆசிரியர் குறிப்பு:  ராவ் அவர்கள் கருதுவதே மிகச் சரியானதாய் இருக்கும். ஏனெனில், கங்கை கொண்ட சோழபுரத்தில், அரச மாளிகை இருந்த மாளிகைமேட்டுப் பகுதியிலிருந்து அரண்மனைக் கட்டுமான எச்சங்களாய்க் கிடைத்த செங்கற்கள் அவ்வூர் மக்களால் வீடு கட்டப்பயன்பட்டன என்பது அகழாய்வின்போது கண்டறிந்த ஒன்று.)

கோட்டை வாயிலை ஒட்டிய உள்பகுதியில் பன்னிரண்டடிக்கு ஐந்தேமுக்கால் அடிப்பரப்புள்ள வெளி ஒன்று உள்ளது. இது தரைமட்டத்தில் உள்ளது. இங்கிருந்து நேரே நிலவறைக்கோ அல்லது கட்டிடம் அமைந்துள்ள மேடைப்பகுதிக்கோ எளிதாகச் செல்லலாம். அதற்காகவே இந்த வெளியிடத்தை விட்டிருக்கலாம்.

கோட்டைக் கட்டுமானத்துக்கு LATERITE  என்னும் கல்லும் (செம்புறாங்கல்?) GRANITE என்னும் கருங்கல்லும், மரமுமே பயன்படுத்தப்பட்டுள்ளன. கட்டுமானச் சுவர்கள் காரைப்பூச்சுக்கொண்டவை. நுழைவாயிலும், மேடைப்பகுதியின் மையப்பகுதியில் காணப்படுகின்ற வட்டவடிவக் கற்பலகையும் மட்டுமே கருங்கற்பணி. கோட்டையின் ஆறு பக்கங்களிலும் புதர்களும் மரங்களும் மிகுதியாக வளர்ந்துள்ளன. சுவர்களின் மீதும் பெரிய பரப்பில் அவை படர்ந்துள்ளன. பெரிய அளவில் கட்டிடம் சேதமுறவில்லை எனினும், இதே நிலை தொடர்ந்தால் கட்டிடம் அழிய வாய்ப்புள்ளது. நிலவறையை நோக்கிச் செல்லும் பாதையின் மேற்புறத்தில் ஓரிரு கற்கள் பெயர்ந்து தொங்கிக்கொண்டிருக்கின்றன.

கோட்டையின் மீது வளர்ந்து படர்ந்திருக்கும் ஆலமரங்களும் புதர்ச்செடிகளும் கோட்டைக்கு ஓர் அழகான தோற்றத்தைத் தருகின்றன. ஆனால், அழிவிலிருந்து இக்கோட்டை பாதுகாக்கப்பட இந்த மரங்கள், புதர்ச் செடிகளை வேரோடு ஒழிக்கப் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

பள்ளிப்புரம் என்னும் இச்சிறிய ஊர்ப்பகுதி மூன்று பிரிவுகளாக அமைந்துள்ளது. வடக்குப் பகுதி திருவாங்கூர் அரசுக்கும், நடுப்பகுதி பிரிட்டிஷ் அரசுக்கும், தென்பகுதி கொச்சி அரசுக்கும் சொந்தமாயுள்ளன. கோட்டை, திருவாங்கூர் எல்லைப்பகுதியில் உள்ளதால், கோட்டையை ஒரு பழங்காலச் சின்னம் என்னும் அடிப்படையில் திருவாங்கூர் அரசே பாதுகாத்து வருகின்றது.

கோட்டையின் வரலாறு

போர்த்துகீசியர்கள், கொச்சி அரசன் வீரகேரளவர்மனை அரச பதவியிலிருந்து கீழிறக்கிவிட்டு அவனுடைய அத்தையை ஆட்சியில் இருத்துகிறார்கள். வீரகேரளவர்மன், இலங்கையில் இருக்கும் டச்சுக்காரர்களின் உதவியை நாடுகிறான். அவனை மீண்டும் அரசனாக்கினால், மலபார் பகுதியில் டச்சுக்காரர்களுக்கு மிளகு வணிகத்தில் நிறையச் சலுகைகள் அளிப்பதாக உறுதியளிக்கிறான். கொச்சி அரசனின் அமைச்சனாய் இருந்தவன் பாலியத்து அச்சன். இவனுடைய பரம்பரையைச் சேர்ந்தவர்கள் கொச்சி அரசர்க்கு அமைச்சர்களாகப் பரம்பரையாகப் பணியாற்றியவர்கள். இந்த பாலியத்து அச்சனுக்கும் போர்த்துகீசியருக்கும் ஏதோ ஒரு தனிப்பகை இருந்த காரணத்தால் இவனும் வீரகேரளவர்மனுடன் இணைந்து டச்சுக்காரர்களைப் போர்த்துகீசியருக்கு எதிராகத் தூண்டும் பணியில் ஈடுபடுகிறான். டச்சுக்காரர்களைக் கொச்சிமீது தாக்குதல் நடத்த வைக்கின்றனர். டச்சுக் கடற்படைத்தலைவன் ரிக்லாஃப் வான் கோயன்ஸ் (RYKLOF VAN GOENS) தலைமையில், 1662-ஆம் ஆண்டில் கொச்சிமீது தாக்குதல் நடக்கிறது. ஆனால், இத் தாக்குதலில் டச்சுக்காரர்களுக்கு வெற்றி கிடைக்கவில்லை. டச்சுக்கடற்படை, வடக்கு நோக்கிப் பயணப்பட்டு கொடுங்கலூர்க் கோட்டையைத் தாக்கிக் கைப்பற்றுகிறது. அடுத்த ஆண்டில் இன்னும் கூடுதல் வலுவுள்ள கடற்படைகொண்டு கொச்சி தாக்கப்பட்டது. போர்த்துகீசியர் இத்தாக்குதலுக்கு அடிபணிய நேரிடுகிறது. கொச்சிக்கோட்டையை டச்சுக்காரர்களுக்கே விட்டுக்கொடுக்கிறார்கள்.  இவ்வாறாக, மலபார்ப் பகுதியில் போர்த்துகீசியரின் ஆதிக்கம் மறைந்தது. போர்த்துகீசியரின் அனைத்து உடைமைகளும் டச்சுக்காரர்களின் உடைமைகளாயின.

இந்தச் சூழ்நிலையில் ஹைதர் அலியின் நுழைவு நிகழ்கிறது. நாளும் ஹைதர் அலியின் அதிகாரமும் ஆதிக்கமும் வளர்ந்து வரும் காலம். கி.பி. 1773-ஆம் ஆண்டு ஹைதர் அலி கோழிக்கோட்டுக்குள் நுழைகிறான். ஏழு ஆண்டுகளுக்கு முன்னரே, 1766-இல், கொடுங்கலூர்க் கோட்டையையும் அலிக்கோட்டையையும் விலைக்கு வாங்கும் முயற்சியில் ஹைதர் அலி டச்சுக்காரர்களோடு பேச்சு நடத்தியிருக்கிறான். கொச்சி அரசையும், திருவாங்கூர் அரசையும் கைப்பற்ற கொடுங்கலூர்க் கோட்டையே திறப்புச் சாவி என்பதை அவன் அறிந்திருந்ததாலேயே இந்த முயற்சி. ஆனால், ஏதாயினும் ஒரு காரணத்தால் இந்த முயற்சி பலனளிக்காமலே போனது. மலபார்க் கடற்கரைப் பகுதிகளில் சிறு சிறு நாட்டுப்பகுதிகளைத் திப்பு கைப்பற்றிக் கொண்டிருக்கும் இந்த வேளையில், கொடுங்கலூர்க் கோட்டையையும், ஆயக்கோட்டையையும் (பள்ளிப்புரம் கோட்டை), திருவாங்கூர் அரசு தக்கவைத்துக் கொள்ளும் கட்டாயத்தில் இருந்தது. திருவாங்கூர் அரசன் மார்த்தாண்ட வர்மன் இவ்விரு கோட்டைகளையும் வாங்கிய சூழ்நிலையும் இங்கு முதன்மை பெறுகிறது. திருவாங்கூர் அரசின் கையேட்டைத் (MANUAL) தொகுத்த நாகமய்யா என்பவரின் வாய்மொழியாகவே இதன் பின்னணியைக் காண்போம்.

நாகமய்யாவின் கையேட்டு ஆவணம்

டச்சுக்காரர்களிடமிருந்து கொடுங்கலூர்க் கோட்டை மற்றும் ஆயக்கோட்டை வாங்கியமை:  1789-ஆம் ஆண்டின் போது, திப்பு கோயம்புத்தூரிலிருந்து ஒரு படையுடன் புறப்படுகிறான். 20,000 தரைப்படை வீரர்கள், 10,000 ஈட்டி எறிவீரர்கள் ஆகியோரும், 5,000 குதிரைகள், 20 பீரங்கிகள் ஆகியவையும் படையில் அடக்கம். முன்னர் 1766-இல் ஹைதர் அலி முயன்றது போலவே, கொடுங்கலூரையும் ஆயக்கோட்டையையும் விலைக்கு வாங்கிவிடத் திப்புவும் பாலக்காட்டில் டச்சுக்காரரோடு பேச்சு நடத்துகிறான். இவ்விரு கோட்டைகளும் திருவாங்கூர் அரசுக்குப் பாதுகாப்பு அரண்களாக விளங்கக்கூடியவை.  எனவே, திருவாங்கூர் அரசன் தன் அரசுக்காக இக்கோட்டைகளை டச்சுக்காரரிடமிருந்து வாங்க எண்ணித் தன் அமைச்சனான திவான் கேசவ பிள்ளையை டச்சுக்காரரோடு பேச்சு நடத்த ஆணையிடுகிறான். திருவாங்கூர் அரசுக்கும் பிரிட்டிஷாருக்கும் இடையில் ஏற்கெனவே ஓர் ஒப்பந்தம் உண்டு. அதன்படி, பிரிட்டிஷ் படைகள் திருவாங்கூர் அரசுக்கு எல்லைப் புறத்தில் மட்டுமே உதவும். இக்கோட்டைகள் திப்புவின் கைக்குள் சென்றுவிட்டால், திருவாங்கூர் அரசின் உள்பகுதியில் பிரிட்டிஷார் உதவ இயலாது. எனவே, இவ்விரு கோட்டைகளும் திருவாங்கூர் அரசுக்கு மிகத்தேவை.  டச்சு ஆளுநர், திவானுடன் கலந்து பேசி, இக்கோட்டைகள் இரண்டையும் திருவாங்கூருக்கு விற்பதன் மூலம் திப்புவின் படைகளைத் தடுக்க முடியும் என்னும் முடிவுக்கு வருகிறார். ஒப்பந்தமும் 1789-ஆம் ஆண்டு ஜூலை 31-ஆம் நாள் நிறைவேறுகிறது. இந்த ஒப்பந்தத்துக்கு டச்சு நாட்டு பட்டாவியா (BATAVIA) அரசின் ஒப்புதலும் பின்னர் முறையாகப் பெறப்படுகிறது. இந்த ஒப்பந்த ஆவணம் மதராசில் (இன்றைய சென்னை) உள்ள புனித ஜார்ஜ் கோட்டையில் பின்னாளில் கிடைத்துள்ளது.  ஒப்பந்தத்தின் விரிவான செய்திகள் கீழே தரப்பட்டுள்ளன:

டச்சு அரசு- திருவாங்கூர் அரசு ஒப்பந்தம்

“மேன்மைமிகு திருவாங்கூர் அரசராகிய வஞ்சி பால மார்த்தாண்ட ராம வர்மன் தன் அமைச்சரும் திவானுமாகிய மதிப்புக்குரிய கேசவ பிள்ளையை, இந்திய நெதர்லாண்ட் ஆளுநரும், நெதர்லாண்ட் கும்பினியாரின் மலபார்க்கரைப் படைத்தளபதியும் ஆன  வணக்கத்துக்குரிய ஜான் ஜெரார்ட் வான்  ஏஞ்சலெக்கிடம் (JOHN GERARD VAN ANGELHECK)  கொடுங்கலூர்க் கோட்டையையும் ஆயக்கோட்டையையும் வாங்கும் எண்ணத்துடன் அனுப்புகிறார். கோட்டைகளோடு அவற்றின் தோட்டங்களும் நிலங்களும் விற்பனையில் அடங்கும். கீழ்க்காணும் வரம்புகளோடு (நிபந்தனை) ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது.

“திவான் கேசவ பிள்ளை, தம் அரசருக்காக வாங்குகிறார்; ஆளுநர் வான்  ஏஞ்சலெக் (VAN ANGELHECK) தம் கும்பினி சார்பாகத் திருவாங்கூர் அரசருக்கு  முந்நூறாயிரம் சூரத் பணத்துக்கு கொடுங்கலூர்க் கோட்டையையும் ஆயக்கோட்டையையும் விற்கிறார். இந்த விற்பனையில், தற்போதிருக்கும் பீரங்கி முதலான தளவாடங்களும் வெடி மருந்துகளும் அடங்கும். சிறிய ஆயுதங்கள் இவற்றில் சேரா.

”டச்சுக் கும்பினியாரின் கலங்களோ (படகுகள்/நாவாய்கள்) கொச்சி அரசின் கலங்களோ, கொச்சி மக்களின் கலங்களோ மேற்கண்ட கோட்டைகளைக் கடந்து ஆற்றில் செல்வதற்குத் தடை இருக்கக்கூடாது. கலங்களில் ஏற்றிச் செல்லும் பொருள்களுக்கும் வரி இருக்கக் கூடாது. மரக்கட்டைகளையும், மூங்கில்களையும் ஆற்றின் வழியில் கொண்டுபோகவும் தடை இருக்கக் கூடாது. எரிபொருளாகிய விறகுககளைக் கொச்சி நகருக்குக் கொண்டுசெல்வதிலும் தொல்லை இருக்கக்கூடாது. சுங்கம் போன்ற வரி இருக்கக்கூடாது.

“’பலிபோர்ட்டோ’ (PALIPORTO) என்னும் இடத்திலுள்ள  தொழு நோயாளிகளுக்கான இல்லம் (LEPER’S HOUSE), அதன் கட்டிடப்பகுதிகள், தோட்டம், வெற்று நிலம் ஆகியவற்றோடு டச்சுக் கும்பினிக்கு முழு உடைமையாகிறது.

“கொடுங்கலூரில் நெடுங்காலமாகக் கும்பினியின் கீழ் இருந்துவரும் ’ரோமிஷ் சர்ச்’ (ROMISH CHURCH) என்னும் மாதாகோயில், தொடர்ந்து கும்பினியர் வசமே இருக்கும். திருவாங்கூர் அரசின் தலையீடு எதுவும் மாதாகோயிலில் இருக்கக் கூடாது. மாதாகோயிலைச் சார்ந்துள்ள கிறித்தவர்கள் கும்பினியாருக்குக் கட்டுப்பட்டவர்களாகவே இருக்கவேண்டும். அவர்கள்மீது எவ்வித வரியும் விதிக்கக்கூடாது.

“பலிபோர்ட்டோ’ (PALIPORTO) என்னும் இடத்தில் அமைந்துள்ள சமயத்தலைவரின் இல்லம் (PARSON’S HOUSE) – டச்சு ஆளுநர், மாதா கோயிலுக்கு அன்பளிப்பாகக் கட்டிக்கொடுத்தது – மாதா கோயிலின் உடைமையாகவே தொடரவேண்டும்.

“தனிப்பட்ட முறையில் தோட்டம் நிலம் ஆகியவற்றைப் பெற்றுள்ள கிறித்தவர்கள், முன்பு கும்பினியாருக்குக் கட்டுப்பட்டிருந்தது போலவே இருப்பர். கும்பினியார்க்குச் செலுத்திய வரித்தொகையையே தற்போது திருவாங்கூர் அரசுக்குச் செலுத்தக் கடமைப்பட்டவர். கூடுதலாக அவர்கள்மீது வரியேதும் விதிக்கப் படமாட்டாது.

”கோட்டையை ஒப்படைக்கும் முன்னரே திருவாங்கூர் அரசர் 50,000 ரூபாய்ப் பணத்தைக் கும்பினியாருக்குச் செலுத்த வேண்டும். மீதிப்பணத்தை நான்கு தவணைகளில், ஆண்டுதோறும் 62,500 ரூபாய்ப் பண மதிப்புள்ள மிளகுப் பொருளாகச் செலுத்தவேண்டும். மிளகு வணிகர்களான டேவிட் ரஹபாய், (DAVID RAHABOY),  இஃப்ராயிம் கோஹென் (EPHRAIM COHEN), அனந்த செட்டி ஆகியோர் இதற்குப் புணை ஏற்கவேண்டும்.

“இந்த ஒப்பந்தம் கொச்சிக் கோட்டையில் கொல்லமாண்டு 974-இல் கர்க்கடக (ஆடி) மாதம் 19-ஆம் நாள் அல்லது கி.பி. 1789-ஆம் ஆண்டு ஜூலை 31-ஆம் நாள் நிறைவேற்றப்பட்டது.

ஒப்பந்தம், திருவாங்கூரைச் சேர்ந்த பிரிட்டிஷ் குடிமகனான பௌனி (POWNEY) என்பவர்  முன்னிலையில் கையெழுத்தானது .

டச்சுக்காரர்களின் உடைமைகள் அனைத்தும் கி.பி. 1870-இல் பிரிட்டிஷ் அரசின் கட்டுப்பாட்டில் வந்தன. அப்போது, ரோமிஷ் தேவாலயமும், தொழு நோயாளிகள் இல்லமும் பிரிட்டிஷ் அரசின்கீழ் வந்தன. தற்போது, தொழு நோயாளிகள் இல்லத்தையும் அதைச் சேர்ந்த மருத்துவ மனையையும் பிரிட்டிஷ் அரசே ஏற்று நடத்திப் பேணிவருகிறது.


                பள்ளிப்புரம்  டச்சுக்காரர் கட்டுவித்த   மாதாகோயில்


                                         பள்ளிப்புரம்  போர்த்துகீசியர் கட்டுவித்த   மாதாகோயில்


முடிவுரை


”கோட்டையின் மீது வளர்ந்து படர்ந்திருக்கும் ஆலமரங்களும் புதர்ச்செடிகளும் கோட்டைக்கு ஓர் அழகான தோற்றத்தைத் தருகின்றன. ஆனால், அழிவிலிருந்து இக்கோட்டை பாதுகாக்கப்பட இந்த மரங்கள், புதர்ச் செடிகளை வேரோடு ஒழிக்கப் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது”   என்று கோ[பிநாத ராவ் அவர்கள் கூறியுள்ளார். அவர் கூற்றுபடி பள்ளிப்புரம் கோட்டை பாதுகாக்கப்பட்டு வந்துள்ளது. இன்றளவும் கோட்டை ஒரு தொல்லியல் வரலாற்று எச்சமாக நிலைத்திருக்கிறது. தற்போதைய நிலையை அறிய இணையத்தில் பார்த்ததில் சில படங்கள் கிடைத்தன. அவற்றை மேலே காணலாம்.



கோபிநாத ராவ் அவர்கள், ”திருவாங்கூர் தொல்லியல் வரிசை”  (TRAVANCORE ARCHAEOLOGICAL SERIES) நூல் தொகுதியில் ஒரு வரிசையாகவே பள்ளிப்புரம் கோட்டையைப் பற்றிய ஆய்வுக்கட்டுரை எழுதியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.  தொல்லியல் சின்னங்களை ஆய்வு செய்வது எப்படி என்று நாம் கற்றுக்கொள்ளும் அளவு நுட்பமாகவும், துல்லியமாகவும் இக்கோட்டையைப் பார்வையிட்டு விரிவான செய்திகளை அளித்துள்ளார்.



                               வைப்பீன் தீவு - பள்ளிப்புரம் கோட்டை  அமைப்பு - வரை படம்

                                                     பள்ளிப்புரம் கோட்டை  அமைப்பு - வரை படம்



தவிர, வைப்பீன் தீவின் இருப்பிடத்தைக் குறிக்கும் வகையில் ஒரு வரைபடம், கோட்டையின் திட்ட அமைப்பு, அதன் முன்புற அமைப்பு, அதன் குறுக்கு வடிவத் தோற்றம் , வாயிலின் அமைப்பு, நிலவறையை நோக்கிப் போகும் பாதையின் அமைப்பு, தற்போது காணப்படும் வட்டவடிவக் கல்லிலிருந்து எழும்பும் தூணிலிருந்து எவ்வாறு மரத்தாலான ஆரக்கால்கள் கிளை பிரிந்து இரு தளங்களின் கூரைப்பகுதிகளைத் தாங்கி நின்றிருக்கக் கூடும் என்ற ஆய்வுப்பார்வை ஆகிய அனைத்தையும் காட்சிப்படுத்தும் வரைபடம் எனப் பல கூறுகளை உள்ளடக்கியதாய் அவரது ஆய்வுக்கட்டுரை அமைந்திருப்பது மிகச் சிறப்பு. 

“செய்யுந்தொழிலே தெய்வம்” என்னும் முன்னோர் மொழியை எத்துணை ஈடுபாட்டோடு பின்பற்றி உழைத்திருக்கிறார் என்பதை அவரது ஆய்வுக்கட்டுரை நமக்கு உணர்த்துகிறது.  தொல்லியல் துறை, முன்னாள்களில் எத்துணைச் சிறப்பாக இயங்கிவந்துள்ளது என்பதைத் துறையின் முன்னாள் வெளியீடுகளே நமக்கு உணர்த்துகின்றன.

வரலாறு கற்போம். வரலாற்றுத் தடயங்களைக் காப்போம்.




---------------------------------------------------------------------
துரை.சுந்தரம், கல்வெட்டு ஆராய்ச்சியாளர், கோவை.
அலைபேசி : 9444939156

 

திங்கள், 10 செப்டம்பர், 2018


                                               கொங்குநாட்டின் தடுப்பணைகள்

முன்னுரை

புலவர் செ.இராசு ஐயா. வரலாற்று ஆர்வலர், வரலாறு படிப்போர், வரலாறு ஆய்வோர், தொல்லியல் ஆர்வலர், கல்வெட்டுகளை ஆய்வோர் ஆகியோர் எனப் பல்வேறு துறையினரில் புலவர் ஐயாவை அறியாதார் இலர்.  பள்ளியில் தமிழாசிரியராய்ப் பணி தொடங்கித் தமிழ்ப்பல்கலைக் கழகத்தில் கல்வெட்டுத்துறைத்  தலைவராக உயர்ந்து மிளிர்ந்த ஆய்வறிஞர். கொங்குநாட்டுப் பெருமைகளை எடுத்துச் சொன்ன வல்லவர். நூற்றுக்கணக்கான நூல்களின் ஆசிரியர். பணியில் நிறைவு பெற்றும், முதுமைத்தளர்ச்சி காரணமாக ஓய்வில் இருப்பினும், அறிவுப்பணியில் (எழுத்துப்பணி) ஓய்வறியா இளைஞர். சென்ற மாதம் (ஆகஸ்ட், 2018) ”தினமலர்”  நாளிதழில் அவரது கட்டுரைச் செய்தி ஒன்று வெளியானது; தமிழகத்தின் இன்றைய மீமிகு தேவையான நீர்மேலாண்மை பற்றிய கட்டுரை அது. “தடுப்பணை பல கட்டிய கொங்கு மண்டலம்” என்னும் தலைப்பில் அவரது கட்டுரையைப் படித்ததும், கல்வெட்டு ஆய்வுப்பணியில் எனக்குள்ள முனைப்பு பின்னும் ஊக்கமுற்றது. புலவர் ஐயாவின் கட்டுரை பற்றிய ஒரு கருத்துப்பதிவு இங்கே.




கொங்கு மக்களின் நீர்மேலாண்மை உணர்வு

கொங்கு மக்கள் நீர்மேலாண்மையில் காட்டிய அக்கறையுணர்வு அவர்கள் கட்டிய தடுப்பணைகள் வாயிலாக அறியலாகும். தடுப்பணைகள் வழியாகப் பாசன வசதி, தடுப்பணைக்கால்வாய்கள் வழி வட்டார ஏரி குளங்கள் நீர் பெறும் வசதி ஆகிய நன்மைகள் விளையும். தடுப்பணையின் பயனை நன்குணர்ந்த கொங்கு மண்டல மக்கள், எட்டு ஆறுகளில் மொத்தம் தொண்ணூறு தடுப்பணைகள் கட்டியுள்ளனர். நொய்யலாற்றில் மட்டும் முப்பத்திரண்டு தடுப்பணைகள் கட்டியுள்ளனர். இன்றைய கொங்கு மக்கள் அக்கறையோடு செயல்பட்டால் இந்த  முப்பத்திரண்டு தடுப்பணைகளையும் மீட்டெடுக்கலாம். இச்செய்திகளைப் புலவர், கொங்கு ஆவணங்களான இராமபத்திரன் பட்டயம், தென்கரை நாட்டுப் பட்டயம் ஆகியவற்றின் அடிப்படையில் வெளியிட்டுள்ளார்.

எட்டு ஆறுகள்-தொண்ணூறு தடுப்பணைகள்

செய்திக்கட்டுரையில் சுட்டப்பெறும் எட்டு ஆறுகளும் அவற்றின் அணை எண்ணிக்கையும் கீழே:

நொய்யல் – 32
அமராவதி (ஆன் பொருனை) – 20
மீன்கொல்லி – 18
நல்லமங்கை – 6
பவானி – 4
உப்பாறு – 4
நன்காஞ்சி – 4
குடகனாறு – 2

இந்தத் தடுப்பணைகள் பற்றிய செய்தியை உள்ளடக்கிய செப்பேட்டின் பக்கத்தையும் ஒளிப்படமாகப் புலவர் தந்துள்ளார். செப்பேட்டுப் பாடத்தைக் (வாசகத்தை) கீழே காட்டியுள்ளேன்.

செப்பேட்டுப் பாடம்:

1       றை நாடு ஆக 42 நாடு யிதில் வானியாறு காவேரியாறு நொய்யலாறு நல்லமங்
2 கையாறு ஆன்பொருனையாறு மீன்கொல்லியாறு சிற்றாறு குடைகையாறு நன்
3   காஞ்சியாறு நல்லாறு உப்பாறு ஆக நதி 11 யிதில் வானியாற்றில் நாலணை
  யும் நொய்யலாற்றில் முப்பத்திரண்டணையும் உப்பாற்றில் நாலணையும் மீன்கொ
5       ல்லியாற்றில் பதினெட்டணையும் ஆன்பொறுனையாற்றில் யிறுவது அணையும் நன்காஞ்
6 சியாற்றில் நாலணையும் நல்லமங்கையாற்றில் ஆரணையும் குடகு(ற)னாற்றில் ரண்
7       டணையும் ஆக அணை 90 ………….. 17 குளமும் ……….



கல்வெட்டுகளில் காணப்படும் சில கூடுதல் செய்திகள்

ஆறு இல்லாதவிடத்து ஆறு தோற்றுவித்தனர்; குளம் இல்லாதவிடத்துக் குளம் தோண்டுவித்தனர்; முயல் பாய்கின்ற இடத்தில் கயல் (மீன்) பாயும்படி நீர்நிலை உண்டாக்கினர்.  இச்செய்தியைக் கூறும் கல்வெட்டு செய்யுள் நடையில், இலக்கிய நடையோடு அமைந்துள்ளது மிகவும் சிறப்புக்குரியது. கல்வெட்டின் வரிகளாவன:

“ஆறு இல்வழி ஆறு தோற்றுவித்தும்
குளம் இல்வழி குளம் தொடுவித்தும்
முயல் பாய் இடம் கயல் பாயப்பண்ணியும்”

நீர்நிலைகளின் கரை “சிறை” எனப்பட்டது. கோவை பேரூருக்கு அருகில் “தேவி சிறை”  என்னும் பெயரில் ஓர் அணை இருந்ததாகப் பேரூர்க் கல்வெட்டு கூறுதலைக் காண்க. ஓர் ஊரினர் கோவில் பண்டாரத்தில் (கருவூலத்தில்) கடன் பெற்று ஊரின் ஆறு, குளங்களின் கரையை உயர்த்தியும் அகலப்படுத்தியும் வலுப்படுத்தினர். கரைகளுக்குக் ”குலை” என்னும் பெயரும் வழங்கியது. நீர் நிலைகளைத் தொடர்ந்து தூர் வாரி, அவற்றின் ஆழம் குறைவுபடாமல் காத்தனர். ஊர் மக்கள் அனைவரும் தூர் வாருதலைக் “குழி குத்துதல்”  என்னும் சொல்லால் குறித்தனர். ஊர்மக்களில் 12 வயதுக்கு மேற்பட்டோரும், 80 வயதுக்கு உட்பட்டோரும் கட்டாயம் குழி குத்துதல் பணியில் பங்கேற்கவேண்டும் என்று ஒரு கல்வெட்டு கட்டளையிடுகிறது.  









துரை.சுந்தரம், கல்வெட்டு ஆராய்ச்சியாளர், கோவை.
அலைபேசி : 9444939156.



வியாழன், 6 செப்டம்பர், 2018


கீழடி நோக்கி…..

முன்னுரை

கோவை வாணவராயர் அறக்கட்டளையினர், வரலாற்று ஆர்வலர்களை மாதந்தோறும் கொங்குப்பகுதியில் அமைந்துள்ள, வரலாற்றுச் சிறப்பும் தொடர்பும் உள்ள இடங்களுக்கு அழைத்துச் செல்வது  ”வரலாற்று உலா” என்னும் பெயரில் நடைபெற்றுவருகிறது. கடந்த 26-08-2018 ஞாயிறன்று நடைபெற்ற உலா -  இருபத்தோராவது பயணம் - கீழடியில் தற்போது நடைபெற்று வரும் அகழாய்வினைக் கண்டுவருகின்ற பயணமாக அமைந்தது. ஏறத்தாழ இருநூற்றைம்பது கி.மீ. தொலைவுக்கு மேல் பயணம் அமைய இருப்பதால், காலை எட்டு மணியளவில் புறப்படத்திட்டமிட்டு, எட்டரை மணியளவில் கோவையை நீங்கினோம். வழக்கமாக இது போன்ற வரலாற்றுலாவுக்குக் குழுமுகின்றவர் எண்ணிக்கையை விடக் கீழடிப்பயணத்துக்கு எண்ணிக்கை இருமடங்காக இருக்கவே, அறுபது பேர் பயணம் செய்யும் வகையில் பெரியதொரு பேருந்து ஏற்பாடானது. ஆர்வலர்கள் பெருகிக்கொண்டிருக்கிறார்கள்.

பயணம்

கோவை, பல்லடம், ஒட்டன்சத்திரம் ஆகிய ஊர்களைக் கடந்த பின்னர், திண்டுக்கல் அருகில் நாடு தழுவிய பெருவழியில் பேருந்து சென்றது. வழியில், சற்றே இளைப்பாறலும் தேநீர் அருந்துதலும். பிற்பகல் இரண்டு மணியளவில் மதுரை நகரை அடைந்தோம். வைகையில் ஆற்றோட்டம் இல்லை. சிற்றோடையாக ஆங்காங்கே ஓடாத நீர்.  கீழடிச் சாலையில் பயணம் தொடர்ந்தது. மதுரை நகரைக் கடந்து ஊரகப் பகுதியில் பேருந்து சென்றுகொண்டிருந்தது. உணவு வேளையும் கடந்ததால் அனைவரும் பசியின் வாட்டத்தில் இருந்தோம். ஊரகப்பகுதியில் சென்றுகொண்டிருந்தபோது, வழியில், சிலைமான் என்னும் பெயரில் தொடர்வண்டிப்பாதை குறுக்கிட்டது. அதைக் கடந்து வயல்வெளிகளையும் தென்னந்தோப்புகளையும் கடந்து கீழடி கிராமத்தை அடைந்தோம். சிலைமான் ஊர், மதுரை மாவட்டத்துத் திருப்பரங்குன்றத்து மண்டலத்தில் அமைந்திருந்தாலும் அதனை அடுத்து எட்டு கி.மீ. தொலைவில் அமைந்துள்ள கீழடி சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்தது. கீழடியில் அகழாய்வு நடைபெறும் இடம் ஒரு தென்னந்தோப்பாகும். தோப்பை அடைந்ததும், உணவு முடித்து அகழாய்வுக் குழிகளைப் பார்வையிட்டோம்.


கீழடி அகழாய்வுக் களம்

நாங்கள் சென்றது ஞாயிற்றுக் கிழமையாதலால் அகழாய்வுக் களத்தில் பணியேதும் நடைபெறவில்லை. ஓரிரு பெண் பணியாளர்கள் இருந்தனர். எங்கள் பயண மேலாளர் திரு. ஜெகதீசன் (கல்வெட்டு ஆய்வாளர்), தொல்லியல் துறை அலுவலரைத் தொடர்புகொண்டு பேசியிருந்ததால், ஆய்வுப்பணியில் உள்ள இளநிலை அலுவலர் ஒருவர் அங்கு வந்தார். நாங்கள் சென்ற நேரத்தில் மழை இல்லாவிடினும், அண்மையில் இப்பகுதியில் பெய்த மழை காரணமாகக் குழிகள் அனைத்தும் “தார்ப்பாலின்” போன்ற துணிகளால் மூடி வைக்கப்பட்டிருந்தன. இளநிலை அலுவலர் ஓரிரு குழிகளைத் திறந்து காட்டினார். ஒரு பகுதியில், பாத்தி பாத்தியாகப் பிரித்து ஆய்வுக்குழிகளில் எடுத்த பானைச் சில்லுகளைக் குவித்து வைத்திருந்தனர். ஒளிப்படம் எடுக்கத் தடை இருந்ததால் யாரும் ஒளிப்படம் எடுக்கவில்லை.  காட்சிகளை மனத்தில் பதித்துக் கொள்ள வேண்டியதாயிற்று. இளநிலை அலுவலர் கூறிய சில செய்திகள் வருமாறு:

                                           ஆய்வுக் களத்துக்குப் போகும் பாதை


                                                     அகழாய்வு முகாம் - நுழைவிடம் 
                                   
                                                              அகழாய்வு முகாம்


                                                       அகழாய்வுக்குழிகள்






                                                            பானை ஓடுகள்- பாத்திகளில்

தற்போதைய பணியின்போது, மொத்தம் முப்பத்தாறு ஆய்வுக்குழிகள் தோண்டப்பட்டுள்ளன. கீழடி கி.மு. 3-ஆம் நூற்றாண்டு முதல் கி.பி. 10-ஆம் நூற்றாண்டு வரையிலான கால எல்லையைச் சேர்ந்த சான்றுகளைக் கொண்டுள்ளது. முதலாம் இராசராசனின் நாணயங்கள் கிடைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது. கீழடிப் பகுதி மக்களின் வாழ்விடமாக இருந்துள்ளது. தமிழ்நாட்டில் பெருபாலான பகுதிகளில் கிடைக்கும் கருப்பு சிவப்பு நிறப் பானை ஓடுகள் இங்கும் கிடைத்துள்ளன. இந்தக் கருப்பு சிவப்புப் பானைகளை 1500 வெப்ப அலகு வரையிலான வெப்பத்தில் சுட்டிருக்கிறார்கள். அப்போது, வைக்கோல் போன்ற எரிபொருளின் பயன்பாட்டால் கரிப்பொருள் படர்ந்து பானைகளின் உட்புறம் கருப்பு நிறத்தையும், வெளிப்புறம் சிவப்பு நிறத்தையும் பெற்றதாகக் கூறப்படுகிறது.  ஆய்வின்போது, உறை கிணறுகள் கிடைத்துள்ளன. (உறை கிணறுள்ள குழிகளைத்திறந்து எங்களுக்குக் காட்டினர்) வட்ட வடிவச் சுடுமண்ணாலான அந்த உறைகள் 90 செ.மீ. விட்டம் கொண்டவை. 180 செ.மீ. உயரம் கொண்டவை. ஆறு அடி ஆழத்துக்குள் அக்கால மக்களுக்கு நீர் கிடைத்துள்ளது. கீழடி வாழ்விடமென்றால். அருகிலுள்ள மணலூர் ஈமக்காடாக இருந்துள்ளது.


                                                      கட்டிடப்பகுதிகள்



உறை கிணறுகளின் பகுதிகள்


                                                 அடுப்பு போன்ற தொழிற்கூட அமைப்புகள்



செங்கற்களாலான, நான்கடிக் கட்டுமானம் கிடைத்துள்ளது. செங்கற்கள், தற்போதுள்ள செங்கற்கள் மூன்றினை உள்ளடக்கும் அளவு பரப்பில் பெரியவை. கீழடி நாகரிகம், “கார்பன்” கணக்கீட்டு முறையில் 2200 ஆண்டுகள் பழமை வாய்ந்தது என அறியப்பட்டுள்ளது. ”கிரிஸ்டல்” (CRYSTAL), ”அகேட்” (AGATE)  ஆகிய வகைக் கற்களை ஆபரணக்கற்களாகப் பயன்படுத்தியுள்ளனர்.  சென்ற முறை நடந்த அகழாய்வின்போது, ஆதன், திஸன், சேந்தன் ஆகிய பெயர்கள் பிராமி எழுத்தில் பொறித்த பானை ஓடுகள் கிடைத்தன. தற்போதும் எழுத்துப்பொறிப்புள்ள பானைப்பகுதிகள் கிடைத்துள்ளன.

கொந்தகை என்னும் குந்திதேவிச் சதுர்வேதிமங்கலம்

பயண அமைப்பாளரும் கல்வெட்டு ஆய்வாளருமான திரு. ஜெகதீசன் கீழடியைப் பற்றிக் குறிப்பிடுகையில், கீழடியில் உள்ள அர்ச்சுனேசுவரர் கோயில் கல்வெட்டுகளில், தற்போது கீழடியை அடுத்துள்ள கொந்தகை என்னும் பெயரில் உள்ள கிராமம் கி.பி. 12-13-ஆம் நூற்றாண்டில், குந்திதேவிச் சதுர்வேதிமங்கலம் என்னும் பெயரில் வழங்கியது என்று கூறினார்.  “வேளூர்க் குளக்கீழ் நாட்டுக் குந்திதேவிச் சதுர்வேதிமங்கலம்” என்பது கல்வெட்டு வரி.  இந்தக் குந்திதேவிச் சதுர்வேதிமங்கலம் என்னும் பெயர் காலப்போக்கில் சதுர்வேதிமங்கலம் என்னும் அடைமொழியை இழந்து மருவிக் கொந்தகையாக மாற்றம் பெற்றுள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.

மேலே குறிப்பிட்டவாறு, அகழாய்வு நடக்கும் பகுதிகளையும், குழிகளில் காணப்பட்ட உறைகிணறுகள் மற்றும் செங்கல் கட்டுமான எச்சங்களையும் ஒளிப்படம் எடுக்கத் தடையிருந்ததால் இம்முறை நாங்கள் சென்று பார்த்ததை இப்பயணத்தில் கலந்துகொள்ளாத நண்பர்களோடும், உறவினர்களோடும் அளவளாவிப் பகிர்ந்து கொள்ள இயலாத  ஒரு சூழ்நிலை ஏற்பட்டது. ஆனால், இந்தியத் தொல்லியல் ஆய்வுத்துறை சார்பாக 2016-ஆம் ஆண்டு மே மாதம் கீழடியில் அகழாய்வு நடந்துகொண்டிருந்தபோது, இதே வரலாற்று உலாவில் நாங்கள் கலந்துகொண்டோம். அப்போது, ஆய்வுப் பொறுப்புத் தலைமை அலுவலரான அமர்நாத் இராமகிருஷ்ணன் எங்கள் குழுவினருக்குத் தாமே அகழாய்வு பற்றிய செய்திகளை எடுத்துரைத்தார். நேரடியாகக் கண்ணுற்ற காட்சிகளைப் படம் எடுத்துக்கொள்ளும் வாய்ப்பும் கிட்டியது. அகழாய்வுக்குழிகளின் மண்ணடுக்குகள் பல்வேறு காலச் சுவடுகளைத் தம்முள் வைத்துக்காட்டியதுபோல், ஒரு வரலாற்று நிகழ்வின் நினைவுகளை நெடுங்காலம் தேக்கிவைத்து வேண்டும்போதெல்லாம், நம் நினைவடுக்கின் மேற்புறத்துக்குக் கொணர்ந்து மகிழவும், நம் வழித்தோன்றல்களும் அவர்கள் காலத்தில் கண்டு மகிழவும் காட்சிப்படங்கள் நம்மிடம் இருப்பதில் ஒரு பெருமிதம்!  அந்த ஒளிப்படங்களை இப்போது இக்கட்டுரை வாயிலாகப் பகிர்ந்துகொண்டுள்ளேன்.  அமர்நாத் அவர்கள், வேண்டிய அளவு, நாளிதழ்கள் வாயிலாகவும், காணொளிகள் வாயிலாகவும் தமிழகத்தின் தொன்மைச் சான்றுகளை எளிய மக்களும் அறிந்துகொள்ளும் வகையில் செயலாற்றியதால் கீழடி பற்றிய பல்வேறு செய்திகளும் ஏற்கெனவே எல்லாரும் அறிந்தவை என்பதில் ஐயமில்லை. இருப்பினும், தற்போதைய பயணத்தில் ஒளிப்படம் எடுக்க இயலாத குறையைப் பழைய படங்களைக்கொண்டு போக்கிக்கொள்ளலாம் என்ற கருத்தில் அப்படங்களை மேலே பகிர்ந்துகொண்டுள்ளேன்.

ஆய்வுச் செய்திகள்

ஆய்வுப் பொறுப்புத் தலைமை அலுவலரான அமர்நாத் இராமகிருஷ்ணன், தொல்லியல் துறை அறிஞர்களான சாந்தலிங்கம், வேதாசலம் ஆகியோர் கீழடி ஆய்வு பற்றிப் பகிர்ந்துகொண்ட சில செய்திகளையும் காண்போம்.  ஒரு நதிக்கரை நாகரிகத்தைப் பற்றி விரிவாக ஆராய்வதன்மூலம் தமிழகத்தின் வரலாற்றை அறியமுடியும் என்ற நோக்கத்துடன் இந்த ஆய்வு தொடங்கப்பட்டது.  மதுரை, திண்டுக்கல், தேனி, சிவகங்கை, இராமநாதபுரம் ஆகிய ஐந்து மாவட்டங்களில், வைகை ஆறு தொடங்கும் வள்ளிமலையிலிருந்து அது கடலில் கலக்கும் ஆற்றங்கரை வரை உள்ள 209 கி.மீ. தொலைவு நீளும் பரப்பில், ஆற்றுக்கு இருபுறமும் 8 கி.மீ.  தொலைவுப் பரப்பில் அமைந்துள்ள அனைத்து ஊர்களையும் ஆய்வு செய்து, கிட்டத்தட்ட 293 இடங்களில் பல்வகை ஆதாரங்களையும் கண்டுபிடித்து ஆவணப்படுத்தி இறுதியாகக் கீழடிப்பகுதி தெரிவு செய்யப்பட்ட ஒரு பெரிய திட்டப்பின்னணி கொண்டது இந்த ஆய்வு. 110 ஏக்கர் நிலப்பரப்பும், நாலரை கிலோ மீட்டர் சுற்றளவுள்ள ஊர் - மக்கள் வாழ்விடப்பகுதி – ஆய்வுக்கான இடமாகக் கிடைத்தது மிக அரிதானது. அதுவும், மதுரைக்கருகில் 15 கி.மீ. தொலைவு என்பது கூடுதல் நிறை. மதுரையைப் பற்றி ஆய்வு செய்ய இந்த இடம்தான் தகுதியான இடம். முதல்கட்ட ஆய்வின்போதே நிறைய ஆதாரங்கள் கிடைத்தன. ஒரு நகரம் இருந்ததற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன. இரண்டு முறை நடந்த ஆய்வுகளின்போதும் மொத்தம் 102 குழிகள் தோண்டப்பட்டன. தமிழ்நாட்டிலேயே முதன்முறையாகக் கட்டிடப்பகுதிகள் கிடைத்த இடம் கீழடி என்றுதான் கூறவேண்டும்.  


                          அமர்நாத் இராமகிருஷ்ணன் அவர்கள்-விளக்கம் தருதல்



                        தற்போது மழை காரணமாக மூடி வைத்த குழிகள்-படம் உதவி: தினமலர்

கீழடியின் முதன்மைக் கண்டுபிடிப்பு கட்டுமானம் ஆகும். சதுரம், செவ்வகம் ஆகிய வடிவில் கட்டிடப்பகுதிகள் கிடைத்துள்ளன. இவற்றைத்தவிர வடிகால்களும், சுடுமண்ணால் செய்யப்பட்ட குழாய்களும் குறிப்பிடத்தக்க கண்டுபிடிப்பு. கட்டிடங்கள் சங்க காலத்தொடர்புடையவை. ஹரப்பாவுக்கு நிகராகக் கருதப்படுகின்றன. சீராக அடுக்கப்பட்ட செங்கற்களால் ஆன கட்டிடப்பகுதிகள். செங்கற்களை இணைக்கக் களிமண்ணைப் பயன்படுத்தியுள்ளனர். குறிப்பிட்டுச் சொல்லும் வகையில் தொட்டிகள் கிடைத்துள்ளன. தொட்டிகளோடு சேர்ந்த அடுப்புகளும் உண்டு. தொழிற்சாலை போன்ற அமைப்பு இருந்துள்ளதை இவை சுட்டுகின்றன எனலாம்.

அடுத்து, எழுத்துச் சான்றுகள். எழுத்துப் பொறிப்புகள் உள்ள பானைப் பகுதிகள் கிடைத்துள்ளன. ”முயன்”  என்னும் தூய தமிழ்ப் பெயரும், ”திஸன்”  என்னும் பிராகிருதப்பெயரும் மற்றும் ”சேந்தன் அவதி”  என்னும் பெயரும் பொறிக்கப்பட்ட பானைகள் குறிப்பிடத்தக்கன. இவை கி.மு. 2-ஆம் நூ.ஆ. -  கி.பி. 2-ஆம் நூ.ஆ. காலத்தைச் சேர்ந்தவை.

வரிச்சியூர் சமணக் குகைத்தளமும் குடைவரைக்கோயிலும்

கீழடியில் அகழாய்வுப்பகுதியைப் பார்வையிட்டு ஊர் திரும்பும் வேளை மாலைப் பொழுதாகியிருந்தது. அன்று முழுதும் மதுரையை நெருங்கும்போதும், கீழடியைச் சென்றடையும் வரையும் வானிலையில் வெப்பமே நிலவியது. ஆனால் கீழடியை விட்டு அகலும்போது மேகங்கள் கவிந்து மாலைப்பொழுதின் ஒளியையும் மங்கச் செய்தன.  எந்த நொடியும் மழை வரலாம் என்னும் சூழ்நிலை. வரலாற்று உலா அமைப்பாளர் ஏற்கெனவே, உலாத் திட்டத்தில் நேரம் கிடைத்தால் வழியில் உள்ள வரிச்சியூரைக் கண்டு திரும்பலாம் எனக்கூறியிருந்தார். வரிச்சியூர் என்னும் ஊர், பொதுமக்கள் பார்வையில் பலருக்கும் தெரிந்திராத ஓர் ஊர். தொல்லியல் பற்றிச் சிறிது தெரிந்தவர்க்கு அது வரலாற்றுச் சிறப்பு மிக்க ஊர். அங்கு சமணத்துறவிகள் தங்கியிருந்த குகைத் தளம் உள்ளது. தமிழின் தொல்லெழுத்தான தமிழி (தமிழ் பிராமி) எழுத்துகள் குகைத்தளத்தின் புருவப்பகுதியில் பொறிக்கப்பட்டுள்ளன. 1908-ஆம் ஆண்டு இந்த பிராமிக் கல்வெட்டுகள் படியெடுக்கப்பட்டு இந்தியத் தொல்லியல் ஆண்டறிக்கையில் வெளியிடப்பட்டன. இவை தவிரப் பாண்டியர் காலக் குடைவரைக் கோயில் ஒன்றும் உள்ளது. இத்துணைச் சிறப்புள்ள இடத்தைப் பார்த்துவிட்டே ஊர் திரும்பவேண்டும் என்னும் ஆவல் அனைவர்க்கும் ஏற்பட்டது. இவ்வூர், மதுரையிலிருந்து சிவகங்கை செல்லும் பாதையில் அமைந்திருந்ததால், கீழடியிலிருந்து  திரும்பும் வழியில் இவ்வூரை எளிதில் அடையமுடிந்தது. (கீழடியும் சிவகங்கை செல்லும் வழியில் அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது)

கீழடியிலிருந்து வரிச்சியூர் வருவதற்குள் மழை பெய்யத் தொடங்கி, வரிச்சியூர் குடைவரைக்கோயிலை அடைந்ததும் மழை வலுக்கத்தொடங்கியது. எதிர்பாராமல் ஒரு தடை. போதிய வெளிச்சமும் இல்லை. மழையினூடே, குடைவரைக் கோயிலையும், குகைத்தளத்தையும் பார்த்து மகிழ்ந்தோம். குடைவரைக் கோயில் சாலையின் ஓரத்திலேயே அமைந்துள்ளது. மதுரையிலிருந்து 15 கி.மீ. தொலைவு என்னும் குறிப்பைத் தாங்கிய சாலைக்கல் ஒன்றும் அருகிலேயே இருந்தது. இப்பகுதி குன்றத்தூர் என்பதாகத் தொல்லியல் துறையினர் வைத்துள்ள செய்திப்பலகை குறிப்பிடுகிறது. இக்கோயில் உதயகிரீசுவரர் கோயில் என வழங்கப்படுகிறது. குன்றின் கிழக்குச் சரிவில் கிழக்கு நோக்கி ஞாயிறு தோன்றும் திசையில் அமைந்துள்ளதால் இப்பெயர் பெற்றது. குன்றுப்பகுதியைக் குடைந்து எழுப்பப் பெற்ற கருவறையில் ஒரு சிவலிங்கத் திருமேனி சிற்பமாக வடிக்கப்பட்டுள்ளது. தனிக்கல்லில் வடித்து நிறுவப்படாமல் பாறையைக்குடையும்போதே, சிவலிங்க வடிவத்தை அமைத்துச் சுற்றிலும் கருவறை அமையுமாறு குடைந்திருக்கிறார்கள். இதே அமைப்பைக் கழுகுமலையில் உள்ள வெட்டுவான் கோயிலிலும் காணலாம். இக்கோயில் கி.பி. எட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த பாண்டியர் பணியாகக் கருதப்படுகிறது. கருவறைக்கு வெளியே ஒரு சிறிய முக மண்டப அமைப்பும், அதன் இரு புறங்களிலும் இரண்டு வாயிற்காவலர் (துவார பாலகர்) சிற்பங்களும், இன்னொரு பக்கப்பகுதியில் பிள்ளையார் சிற்பம் ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளன.

                                                    வரிச்சியூர் குடைவரை - சில தோற்றங்கள்



                                                   தொல்லியல் துறையின் அறிவிப்புப் பலகை


                                                       குடைவரைப்பாறை-சிவலிங்கத் திருமேனி

                                                    சமணக் குகைத்தளம் - சில தோற்றங்கள்








                                              கல்வெட்டு அமைந்துள்ள நீர் வடி விளிம்புப்பகுதி

மழையில் நனைந்துகொண்டே  குகைத்தளத்துக்குச் சென்றோம்.  குன்றின் சரிவுப்பாறை பாம்புபோல் நீண்டிருந்த நிலையில் நிலத்தை நோக்கிக் கவிந்து குகையமைப்பாய் மாறியிருந்தது.  பாறையின்  மேற்பகுதியில் மழை நீர் குகையின் உட்புறம் நுழையாமல் வடிந்து போவதற்காக நீர்வடி விளிம்பு வெட்டப்பட்டிருந்தது. இந்த விளிம்புகளின் மேற்புறமும் கீழ்ப்புறமும் பிராமி எழுத்துகள் பொறிக்கப்பட்டுள்ளன. மொத்தம் மூன்று கல்வெட்டுகள். மூன்றும் கி.பி. இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்தவை.  கல்வெட்டுகள் பார்வைக்குத் தெளிவாகப் புலப்படவில்லை. தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் வெளியீடான “தமிழ்-பிராமி கல்வெட்டுகள்” நூலில் உள்ள கல்வெட்டுப் பாடங்களையும் விளக்கங்களையும் கீழே காணலாம்.

முதல் கல்வெட்டு:

ப(ளி)ய் கொடுபி…….

இப்பள்ளியை அமைத்தவரின் பெயர் சொல்லப்படுகிறது. ஆனால், கல்வெட்டின் இறுதிப்பகுதி சிதைந்துவிட்டதால் பெயரைத் தெரிந்துகொள்ள இயலவில்லை.

இரண்டாம் கல்வெட்டு:

அடா . . .  றை ஈதா வைக . . . ஒன் நூறு

இப்பள்ளிக்கு நூறு கலம் நெல் வழங்கப்பட்டமையைக் கல்வெட்டு குறிக்கிறது. கொடை வழங்கியவரின் பெயர் சிதைவுற்றிருக்கலாம். ’ஈதா’ என்ற சொல் மகிழ்ச்சி விளிச்சொல்லாகக் கருதப்படுகிறது.

மூன்றாம் கல்வெட்டு:

இளநதன் கருஇய  நல் முழ உகை

இச்சிறந்த (நல்ல) குகை இளநதன் என்பவரால் குடைவிக்கப்பட்டது என்பது இதன் பொருள்.




முடிவுரை

மதுரையை விட்டு அகலும் வரை மழையும் எங்களுடன் பயணம் செய்தது. சங்ககாலத்தை எட்டிப்பார்த்த ஓர் உணர்வுடன் கோவை திரும்பினோம். ஊர் திரும்ப நள்ளிரவாயிற்று என்பது ஒரு பொருட்டாகத் தெரியவில்லை. வரலாற்றை அறிந்துகொள்வோம்; வரலாற்று எச்சங்களைப் பாதுகாப்போம் என்ற எண்ணம் மனத்தில் நின்றது.





துரை.சுந்தரம், கல்வெட்டு ஆராய்ச்சியாளர்,  கோவை.
அலைபேசி:  9444939156.