மொத்தப் பக்கக்காட்சிகள்

வியாழன், 24 டிசம்பர், 2015

கல்வெட்டுகள் உதிர்க்கும் செய்திகள்

         பேரிடர்கள் நிகழும்போது துயர் துடைக்கத் தொண்டுள்ளங்கள் இணைவதை நாம் கண்கூடாகப் பார்த்துவருகிறோம். அண்மையில் வெள்ளம் நிகழ்த்திய அழிவுத் தாக்கத்தின்போதும் அவ்வாறுதான் நடந்தது. களத்தில் நேரடியாக இறங்கி உயிர் காத்தும், உணவும் நீரும் அளித்தும் மனிதத்தை மலையளவு உயர்த்தினர். அடுத்து அழிவிலிருந்து மீளும் முயற்சிகளில் கைகொடுக்க நிதிக் கொடை தொடர்கிறது. சமுதாயத்தின் எல்லா நிலையினரிடமிருந்தும் நிதிக்கொடை. இவ்வகையில், பணியிலுள்ளோரும், பதவியிலுள்ளோரும் தங்களது ஊதியத்தில் ஒரு குறிப்பிட்ட பகுதியைக் கொடையாக அளிப்போர் பற்றிய செய்திகளைப் பார்க்கிறோம். ஒரு மாதம் அல்லது ஒரு நாள் ஊதியம் கொடையாகச் செல்கிறது. இவ்வகைச் செய்திகளை நாளிதழில் காண்கையில், கோவை-பேரூர் பட்டீசுவரர் கோவிலில் உள்ள கல்வெட்டு ஒன்று நினைவுக்கு வந்தது. அதில், ஒரு நாள் ஊதியம் கொடையாக அளிக்கப்பட்ட செய்தி தற்போதைய நிலைமையோடு இயைந்து நிற்பதைப் பார்க்கிறோம்.

கல்வெட்டு தொடர் எண் : 122 / 2004 (கோயம்புத்தூர் மாவட்டக் கல்வெட்டுகள் தொகுதி-1)          
கல்வெட்டுப் பாடம்:

1. ஸ்வஸ்திஸ்ரீ விக்கிரமசோழ தேவற்கு யாண்டு 2-ஆவது ஆளுடையார் இடங்கை நாயகீஸ்வரமுடையார் நடுவிற்சமக்கட்டோமும் அம்மன

2.         க்காறரோமும் சேனாபதிகளோமும் நாயகஞ்செய்வா


3.         ர்களோமும் மற்று இத்தந்திரத்தில் கொற்றுண்ண கடவாரெல்லாம் ஆட்டொரு நாளை படி குடுத்தோம் சந்திராதி

4. த்தவர் செல்வதாக கல்வெட்டிக் குடுத்தோம் நடுவிற்சமக்கட்டோம்  பந்மாஹேஸ்வர ரக்‌ஷை

கல்வெட்டில் வருகின்ற கொங்குச்சோழ அரசன் இரண்டாம் விக்கிரம் சோழன் ஆவான். அவனுடைய இரண்டாம் ஆட்சியாண்டில் கி.பி. 1258-இல் கல்வெட்டு வெட்டப்பட்டுள்ளது. அவனது படைகளில் ஒன்றான நடுவிற்சமக்கட்டார் என்னும் படைப்பிரிவைச் சேர்ந்தவர்களும், அம்மனக்காறர் என்னும் பதவியிலுள்ளோரும், சேனாபதிப் பதவியிலுள்ளோரும், படைகளின் நிர்வாக மேற்பார்வை செய்யும் நாயகம் செய்வார் என்பவரும், அந்தத் தந்திரத்தில் (படைத்தளத்தில்) கொற்றுண்ணக்கடவாரும் (படைப்பிரிவின் ஊழியர் தொகுதி) ஆகிய எல்லாரும் ஆண்டுக்கொருமுறை (ஆட்டொரு) ஒரு நாள் வருவாயைக் கோவிலுக்கு அளிப்பதாகக் கல்வெட்டிக் கொடுத்துள்ளார்கள். இக்கொடைச் செயல் நிலவும் கதிரும் உள்ளவரை (சந்திராதித்தவர் செல்வதாக) நடக்கட்டும் என உறுதி ஏற்கிறார்கள். இக்கொடைச் செயல் தவறாது நடப்பதைப் பந்மாஹேச்வரர் என்னும் அதிகாரிகள் கன்காணித்துக் காப்பார்களாக என்னும் காப்புறுதியோடு கல்வெட்டு முடிகிறது.

         பெரும்பதவிகளில் இருந்த பலர் கொடையளித்துள்ளது போலவே, அப்படையில் சிற்றாள் பணியில் இருந்த ஊழியர்களும் கொடையளித்துள்ளது வேறுபாடில்லா ஒற்றுமையைச் சுட்டி நிற்கிறது.  கல்வெட்டில் நாம் கண்டது மகேசன் தொண்டு. இந்நாளில் நாம் கண்டுகொண்டிருப்பது மக்கள் தொண்டு.








து.சுந்தரம், கல்வெட்டு ஆராய்ச்சியாளர், கோவை.
அலைபேசி : 9444939156.


ஞாயிறு, 20 டிசம்பர், 2015

தாசபாளையத்தில் மல்லாண்டை

         அண்மையில் கோவை கல்வெட்டு ஆராய்ச்சியாளர் து.சுந்தரம் மற்றும் அவிநாசியைச் சேர்ந்த வரலாறு-கல்வெட்டு ஆர்வலர் ஜெயசங்கர் ஆகியோர் அன்னூர் பகுதியில் கள ஆய்வுக்காகச் சென்றிருந்தபோது, மக்கள் வழக்காறு மற்றும்  பழங்கால வழிபாட்டு மரபு சார்ந்த மல்லாண்டைக்கல் ஒன்றினைக் காணும் வாய்ப்பு அமைந்தது.

         கோவை மாவட்டம் அன்னூரை அடுத்து அமைந்துள்ள ஒரு சிற்றூர் தாசபாளையம். அங்கு பேருந்து நிறுத்தத்துக்கு அருகிலேயே சதுரமான மேடை ஒன்றும், மேடையின்மேல் வழிபாட்டுக்கான ஒரு சிறிய கோயிலமைப்பும் காணப்பட்டன. மேடையின் நடுவில் கல்லொன்று நாட்டப்பட்டிருந்தது. அருகில் இரண்டு மூன்று வேல்கள் நிறுத்தப்பெற்றிருந்தன. ஒரு விளக்குக் கூடும் இருந்தது.  அதன் அருகிலேயே, சாலையைத் தொட்டவாறு மூன்றரை அல்லது நான்கு அடிகள் உயரத்தில் ஒரு பெருங்கல்லும் காணப்பட்டது.

         வரலாற்றுக் காலத்துக்கு முந்தைய கால மக்கள், தாம் போற்றிய தலைவன் இறந்துபட்டபோது, தம் வாழிடத்துக்கருகில் அவன் நினைவாகப் பெருங்கல் ஒன்றை நாட்டி வழிபடுவர். இது போன்ற தொன்மைக்கல்லைத் தொல்லியலில் நெடுங்கல் என்றும் குத்துக்கல் என்றும் குறிப்பிடுவர். இது ஒருவகை நடுகல்லாகும். இங்கே தாசபாளையத்தில் காணப்பட்ட பெருங்கல்லும் அத்தகைய நடுகல்லாய் இருக்குமோ என்னும் ஐயத்தில், அக்கம் பக்கம் இருந்த மூதாட்டிகள் இருவரையும், முதியவர் ஒருவரையும் அணுகிக் கேட்டோம். மேடை நடுவில் நாட்டப்பெற்றிருந்த கல் மாரியாத்தா என்னும் கடவுளாக வழிபடப்படுகிறது என்றும், அந்தக் குத்துக்கல் “முத்தாயி ஆத்தா”  என்னும் அம்மன் வடிவாக வணங்கப்படுகிறது என்றும் மூதாட்டிகள் கூறினர். ஆண்டுக்கொருமுறை அதைச்சுற்றிப் பச்சை ஓலைக்குடிசை அமைத்துத் தோரணங்கள் கட்டி இசைக்கருவிகளை ஒலிக்கவைத்து முளைப்பாரி ஆகியவற்றோடு மக்கள் வழிபாடு நடத்துவர். மாரியாத்தாவின் மேடைக்கோயில், அன்றாட வழிபாட்டுக்குரியது. ஆனால், முதியவர் கூறியது சற்றே மறுபட்ட செய்தியாகும். குத்துக்கல்லானது, வேளாண் நிலத்தில் நெற்களத்தில் அறுவடை நெல்லைப் படையலாக்கி வழிபட்ட மல்லாண்டைத் தெய்வம் என்றும் தற்போது மல்லாண்டைக் கல் வழிபாட்டு மரபு மறைந்துவிட்டதால் இங்கே ஊர்த்தெய்வமாக வழிபடப்படுகிறது என்றும் முதியவர் விளக்கம் அளித்தார்.

         மல்லாண்டை என்னும்  சொல் கட்டுரை ஆசிரியருக்குப் புதியதொரு சொல்லாகத் தோன்றியது. கிராமங்களின் தொடர்பு இல்லாமையால், வேளாண்மை சார்ந்த மரபுகள் அறியப்படவில்லை. மல்லாண்டை பற்றிய செய்திகளைத் திரட்டியபோது தொல்லியல் அறிஞர் முனைவர் சி.மகேசுவரன் தம் ஆய்வுக்கட்டுரை ஒன்றில் குறிப்பிடும் செய்திகள் குறிப்பிடத்தக்கவை. கொங்கு நாட்டில் அறுவடை செய்த தானியங்களைக் களத்திலிட்டு ‘மல்லாண்டை எனக்குறிப்பிடப்பெறும் உருண்டைக்கல்லின் முன் படையலாக்கி வழிபாடு நிகழ்த்திய பின்னரே மேற்படித் தானியங்களை வீட்டிற்கு எடுத்துச்செல்லுதல் மரபு. இம் மல்லாண்டை வழிபாடு மள்ளர் இன மக்களால் மட்டுமே நிகழ்த்தப்பெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. மல்லாண்டை வழிபாடு செழிப்பு வழிபாட்டு (வளமை வழிபாடு) மரபின்பாற்பட்டது. கொங்கு நாட்டில் இம்மரபு பரவலாக இருந்துள்ளது. கொங்கு நாட்டில் மிகவும் சிறப்பாகக் கொண்டாடப்பெறும் “அரவான் பண்டிகையின் போது பாடப்பெறும் பாடலில்,

“ஊருக்கொரு கூத்தாண்டெ செய்யோணும்
களத்துக்கொரு மல்லாண்டெ செய்யோணும்

என்னும் வரிகள், மல்லாண்டையின் சிறப்பை எடுத்துக்கூறுகிறது. இது, மல்லாண்டைத் தெய்வம் நல்ல விளைச்சலை ஏற்படுத்தும் என்கிற நாட்டார் நம்பிக்கை வழக்காற்றின் வடிவமே ஆகும்.

         மல்லாண்டைக்கல், தொல்லியல் நோக்கில் புதிய கற்காலத்து குழவிக்கல்லை ஒத்துள்ளது; கீழ்ப்பகுதி சற்றே அகலமாகவும் மேற்பகுதி குறுகியும் உள்ள தோற்றம். இவ்வகைக் கற்களையே கொங்கு நாட்டு மக்கள் “மல்லாண்டைக்கல்”  என அழைக்கின்றனர். இங்கே, நாம் தாசபாளையத்தில் காண்பது சற்றுப்பெரிய அளவில் அமைந்துள்ளதாகத் தெரிகின்றது.

         வேளாண் தொழிலே அருகிவரும் இந்நாளில் மல்லாண்டைக்கல் வழிபாடு மறைந்துவிட்டதில் வியப்பில்லை. ஆனால், வரலாற்று அடையாளங்களாகத் திகழும் தொல்லியல் சார்ந்த பொருள்கள் மறைந்து கொண்டுவருவது வருத்தத்துக்குரியது. (கல்வெட்டுகளைக் குறிப்பாகச் சொல்லலாம்; முறையாகப் பாதுகாக்கப்படாமல் அவை மறைந்து வருவது வேதனைக்குரியது.) தாசபாளையத்து மல்லாண்டைக்கல் நமக்கு நாட்டார் வரலாற்றையும், மரபையும் நினைவூட்டும் வகையில் நிற்கிறது; தொடர்ந்து நிற்கும் என நம்பலாம்.

துணை நின்றது : “கொங்கு நாட்டில் மல்லாண்டை - ஒர் அறிமுகம்” - ஆய்வுக்கட்டுரை
முனைவர் சி.மகேசுவரன்.











து.சுந்தரம், கல்வெட்டு ஆராய்ச்சியாளர், கோவை.
அலைபேசி : 9444939156.

  

புதன், 16 டிசம்பர், 2015

கோவைப்பகுதியில் நடுகல் சிற்பங்கள்
1.

சோமனூர்-இச்சிப்பட்டி நடுகல்
  
         கோவை, சோமனூருக்கு அருகில் இச்சிப்பட்டி சிற்றூரில் சாலையோரம் வீரன் ஒருவனுக்கு எடுக்கப்பட்ட நடுகல் காணப்படுகிறது. சாலையோரத்தில் உள்ள ஒரு மரத்தடியில் இருக்கும் இந்த நடுகல் சிற்பம் ஒரு புடைப்புச் சிற்பமாகும். இச்சிற்ப அமைப்பில் காணப்படும் சிறப்பு, திருவாசி அமைப்பாகும். திருவாசி, கொடி வேலைப்பாடுடன் அமைந்துள்ளது. வீரன், தலையின் வலப்புறத்தில் கொண்டையோடு காணப்படுகிறான். வலக்கையில் நீண்ட வாளும், இடக்கையில் குறுவாளும் ஏந்தியிருக்கிறான். செவிகள், கழுத்து, முன்கைகள், தோள்கள் ஆகியவற்றில் அணிகலன்கள் காணப்படுகின்றன. முழங்கால்வரை ஆடை உள்ளது. இடைப்பகுதியில் ஆடைக்கச்சுகள் பெரிதாகக் காணப்படுகின்றன. சிற்பத்தின் கீழ்ப்பகுதியில் பீட அமைப்பில் பலகைக் கற்களைப் பரப்பி, அவற்றின்மீது அகல்விளக்குகளை ஏற்றி மக்கள் வழிபடுகின்றனர். நாயக்கர் காலச் சிற்ப அமைப்பாகலாம்.
  


2.

கோவை-வடசித்தூர் நடுகல்

               கோவைப்பகுதியில் கிணத்துக்கடவு மற்றும் நெகமம் ஆகிய இரு ஊர்களுக்கும் அருகே அமைந்துள்ள ஒரு சிற்றூர் வடசித்தூர். வடசித்தூரின் எல்லையில் சோழியாத்தா கோவிலுக்குப் போகும் வழியில் கோணக்காடு என்னும் இடத்தில் கி.பி. 15-16-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த  நடுகல் சிற்பம் ஒன்று காணப்படுகிறது. வீரன் ஒருவனின் உருவமும், அவனது இரு புறங்களிலும் இரு பெண்களின் உருவங்களும் புடைப்புச் சிற்பமாக ஒரு பாறைக்கல்லில் மிக நேர்த்தியாக வடிக்கப்பட்டுள்ளது. பெண்கள் இருவரும் அவன் மனைவியர் எனக்கருதலாம். மூன்று உருவங்களும் பீடங்களோடு அமைக்கப்பட்டுள்ளன. வீரன் பெரிய மீசையுடன் ஒரு கையில் ஊன்றிய வாளும் மற்றொன்றில் கேடயம் போன்ற ஆயுதமும் ஏந்திய நிலையில் காணப்படுகிறான். வீரனின் இடைக்கச்சில் குறு வாள் உள்ளது. இரு பெண்களும் கைகளைக் கூப்பி வணங்கும் நிலையில் இருக்கிறார்கள். மூவருக்கும் தலையில் கொண்டை உள்ளது. வீரன் இடுப்பு ஆடையுடனும், பெண்கள் கணுக்கால் வரை ஆடையுடனும் காணப்படுகின்றனர். மூவருக்குமே, செவிகள், கழுத்து, கைகள் ஆகிய உறுப்புகளில் அணிகள் உள்ளன. பெண்களின் இரு புறமும் இரண்டு குடுவைகள் செதுக்கப்பட்டுள்ளன.  நடுகல் சிற்பம் ஒரு மேடையில் நிறுத்தப்பெற்று  மக்களால் வணங்கப்படுகிறது.


 3.


கிணத்துக்கடவு-கோதவாடி புலிகுத்திக்கல்

          கோவை மாவட்டம் கிணத்துக்கடவு வட்டத்தில் உள்ள ஒரு சிற்றூர்  கோதவாடி. இங்கே, மாலக்கோயில் என்று ஒரு கோயில் உள்ளது. இக்கோயில், ஆல் கொண்ட திருமால் கோயில் என்னும் பெயரோடு விளங்கும் ஒரு கிருஷ்ணன் கோயிலாகும். இக்கோயிலின் வெளிப்புறம் அமைந்த வளாகத்தில் ஒரு புலிகுத்திக்கல் இருக்கிறது. இது கால்நடை வளர்ப்பு மேலோங்கியிருந்த காலச் சூழலில் இறந்துபட்ட காவல் வீரனுக்கு எடுக்கப்பட்ட நடுகல்லாகும்.  வீரன் ஒருவன் புலியின் வாய்ப்பகுதியில் தன் நீண்ட வாளைப் பாய்ச்சிக்கொண்டிருப்பதுபோல வடிக்கப்பட்ட புடைப்புச் சிற்பம். புலி தன் பின்னங்கால்களைத் தரையில் ஊன்றியவாறு முன்னங்கால்களால் வீரனைத் தாக்குவது போன்ற தோற்றம். வழக்கமாக இது போன்ற புலிகுத்திக்கல் சிற்பங்களில் வீரன் தன் வாளைப் புலியின் நெஞ்சில் பாய்ச்சியவாறு இருப்பதைக் காணலாம். இங்கே சற்று மாறுபட்டுப் புலியின் வாய்க்குள் வாள் பாய்ச்சுவதுபோல் அமைந்துள்ளது. கி.பி. 16-17-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த நாயக்கர் காலச் சூழலில் இந்நடுகல் சிற்பம் அமைந்துள்ளது. ஊரார் இப்புலிகுத்திக்கல்லை நரி கடிச்ச இராமய்ய கவுண்டர் கல் என அழைக்கின்றனர். சில இடங்களில் புலிகுத்திக்கல்லில் இருக்கும் புலியின் உருவத்தை மக்கள் நரியெனக் கொள்வதால் ஏற்படுகிற பெயர் மயக்கம்..




 4.


கிணத்துக்கடவு-பெரியகளந்தை கல்திட்டை

          கோவை மாவட்டம் கிணத்துக்கடவு வட்டத்தில், கிணத்துக்கடவுக்கருகில் அமைந்துள்ள ஊர் பெரியகளந்தை. இங்கு ஆதீசுவரர் கோயில் என்னும் சிவன் கோயில் உள்ளது. இக்கோயிலுக்கு அண்மையிலேயே தொல்லியல் சின்னமான கல்திட்டை ஒன்று காணப்படுகிறது. வீடு போன்ற அமைப்பில் மூன்று புறமும் மேல்பகுதியிலும் பலகைக்கற்களால் மூடப்பட்ட தோற்றத்திலும், நான்காவது முகமாக முன்புறம் வாயில் போன்ற அமைப்பில் திறந்துள்ள தோற்றத்திலும்,  கட்டப்பட்ட  இக்கல்திட்டை இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டதாகலாம். இக்கல்திட்டையில், இடு துளை ஒன்றும் உள்ளது. இக்கல்திட்டையில் காணப்பெறும் ஒரு சிறப்பு என்னவெனில், பிற்காலத்தினர், கல்திட்டையின் அறை போன்ற பரப்பில் புலியைக் கொன்ற வீரன் ஒருவனுக்கு எடுக்கப்பட்ட நடுகல் சிற்பங்களை அமைத்துள்ளனர். இரண்டு சிற்பங்கள் காணப்படுகின்றன. முதல் சிற்பத்தில் வீரன் ஒருவன், குதிரையுடன் இருப்பதாகக் காட்சி. இரண்டாவது சிற்பத்தில் பாய்ந்து தாக்குகின்ற நிலையில் காணப்படும் புலியின் உருவம். புலியோடு வீரன் போரிடும் வழக்கமான காட்சியில் அமையாது, வீரனும் புலியும் தனித்தனியே காட்டப்பட்டிருகிறார்கள்.





 5.

பெருமாநல்லூர் நடுகல்

      கோவை-ஈரோடு நெடுஞ்சாலையில் உள்ள ஊர் பெருமாநல்லூர். இவ்வூருக்கருகில் பொங்குபாளையம் என்னும் சிற்றூர் அமைந்துள்ளது. இங்கு இடிந்த நிலையில் சதுர வடிவிலான அமைப்புடன் ஒரு சிறு கோயில் காணப்படுகிறது. நான்கு மூலைகளிலும் கல் பாறைத்தூண்கள். கூரைப்பகுதியில் மூடுகற்கள். கற்களைக்கொண்டு அமைக்கப்பட்ட ஒரு சிறிய நுழைவாயில். உள்ளே, பாறைக்கல் ஒன்றில் புடைப்புச் சிற்பமாக நடுகல் காணப்படுகிறது. ஒரு வீரனும் அவன் மனைவியுமாக அமைந்துள்ள சிற்பம். வீரன் தன் வலது கையில் வாள் ஒன்றினை உயர்த்திப்பிடித்த தோற்ரம். இடது கை அவனது தொடைப்பகுதியில் வைக்கப்பட்டுள்ளது.  தலையில்  நேர்முகமாக அமைந்த கொண்டை. மார்பில் அணிகளும், இடையில் ஆடைக்கச்சுகளும் உள்ளன. பெண்ணின் சிற்பத்தில் வலப்புறமாக அமைந்த கொண்டையும், இடைப்பகுதியில் ஆடை அமைப்பும் காணப்படுகின்றன. ஊரார் இதை குப்பாத்தம்மன் கோயில்”  எனப்பெயரிட்டு வணங்குகிறார்கள்.












து.சுந்தரம், கல்வெட்டு ஆராய்ச்சியாளர், கோவை.
அலைபேசி : 9444939156.

புதன், 9 டிசம்பர், 2015


ஜப்பானியத் தமிழறிஞர் நொபுரு கரஷிமாவுக்குப் புகழஞ்சலி


         தமிழுக்குத் தொண்டாற்றிய அயல்நாட்டுப் பெருமக்கள் பலப்பலர். அத்தகைய பெருமக்களுள் ஒருவர், அண்மையில் 26.11.2015-இல் மறைந்த ஜப்பானிய அறிஞர் நொபுரு கரஷிமா அவர்கள். நம்மில் பலருக்கு அவரைப்பற்றித் தெரியுமா என்பது ஐயமே. (கட்டுரை ஆசிரியர் குறிப்பு: கட்டுரை ஆசிரியர் கல்வெட்டியலைக் கற்கத்தொடங்கி தமிழகத்தொல்லியல் கழகத்தில் சேர்ந்த பின்னரே கரஷிமா என்பவர் யார் எனத்தெரிய வந்தது..) தமிழ்க் கல்வெட்டுகளை ஆராயும் முகத்தான் தமிழ் கற்ற அப்பெருமகனாருக்குப் புகழஞ்சலி செய்யும் நிகழ்வு 5.12.2015 அன்று கோவையில் தமிழ்நாடு கலை இலக்கியப்பெருமன்றத்தின் சார்பில் நடைபெற்றது. அதுபோழ்து, தொல்லியல் அறிஞர் பேராசிரியர் எ.சுப்பராயலு அவர்களும், தொல்லியல் அறிஞர் முனைவர் அர.பூங்குன்றன் அவர்களும் உரை நிகழ்த்தினர். பேராசிரியர் எ.சுப்பராயலு அவர்கள், நொபுரு கரஷிமா அவர்களுடன் இணைந்து பணியாற்றியவர் என்னும் கரணியத்தால் அவர் கரஷிமா பற்றி விரிவாகப் பேசினார். அவருடைய உரை கரஷிமாவைப்பற்றி நாம் தெளிவாகத் தெரிந்துகொள்ளப் பெரிதும் துணை செய்தது. அவருடைய உரையைச் செவிமடுத்து உள்வாங்கியவற்றை இங்கே கட்டுரை வடிவில் தந்துள்ளேன். (பிழைகள் சுட்டப்பட்டால் திருத்தம் எளிதாகும்.)

         1933-ஆம் ஆண்டு பிறந்த கரஷிமா தம் இருபத்தைந்தாவது அகவையில் 1958-இல் டோக்கியோ பல்கலையில் வரலாற்றுத்துறையில் பட்டப்படிப்பை (Graduation) முடித்தார். அது ஒரு முதன்மையான பட்டமாகும். அப்போதே அவரது எதிர்காலப்பணி தொடங்கியது எனலாம். அப்பட்டத்துக்கான ஆய்வுக்கட்டுரையாக அவர் தெரிவு செய்தது சோழர் வரலாறு. (ஆசிரியர் குறிப்பு; ஜப்பான் பட்டப்படிப்பில்  ஒரு ஜப்பானியர் அவரது நாட்டின் வரலாற்றுக்கூறுகளில் ஒன்றைத் தெரிவு செய்யாமல் தமிழக வரலாற்றில் நாட்டம் கொண்டார் என்பது வியப்பையே அளிக்கிறது.) அந்த ஆய்வுக்கட்டுரையை அவர் எழுதியது ஜப்பானிய மொழியில்தான். அவருக்கு ஆங்கிலம் அவ்வளவாகத் தெரியாது. ஆங்கிலத்தில் பேசுவதும் எழுதுவதும் குறைவு. (பின்னாளில் 1980களில் உலகமயமாக்கல் கரணியமாக ஜப்பானில் மற்ற மொழிகளுக்கும் முதன்மை தரப்பட்டபோது. அவர் ஆங்கிலத்தில் எழுதினார்.)

         அவருடைய காலகட்டத்தில், கல்விக்கு மதிப்பும் முதன்மையும் இருந்தன. கல்வியாளர்கள் பெரிதும் மதிக்கப்பட்டார்கள். கல்வித்துறையில் புதிய திட்டங்களைக் கல்வித்துறை அறிஞர்கள்தாம் கொண்டுவந்தனர். அரசோ அல்லது அரசியல்வாதிகளோ  தலையிடவில்லை. மற்ற துறைகளுக்கும் இந்த நடைமுறைதான். வெளிநாட்டுக்கல்வியும் கொண்டுவரப்பட்டது. தாய் மொழியான ஜப்பானிய மொழியிலேயே கல்வி கற்றதும், அரசியல் தலையீடற்ற கல்வித்திட்டங்கள், செயல்பாடுகள் ஆகியன நடைமுறையில் இருந்தமையும் கரஷிமாவின் வளர்ச்சிக்குக் கரணியங்களாக அமைந்தன. மேலும், Study Group என்னும் கற்போர் குழுக்கள் இருந்தமையும் கரஷிமாவின் வளர்ச்சிக்குப் பெரிதும் துணைசெய்தன. ஆய்வுக்கான பாடங்களைப் பயில்வோர் சிலர் ஒன்றுசேர்ந்து மாதம் ஒரு முறை இத்தகைய கற்போர் குழுவாக அமைந்து கூடிப்பேசுவர். கருத்துகளைப் பகிர்ந்துகொள்வர். கூட்ட விவாதங்களின் அடிப்படையில் ஆய்வுக்கருத்துகள் பின்னர் நூலாக வெளிவரும். பின்னாளில் இவ்வாறான குழுக்கூட்டங்களுக்குக் கரஷிமா சுப்பராயலுவை அழைத்துக்கொண்டதுண்டு. (சுப்பராயலு அவர்கள் 1973-இல் டோக்கியோ பல்கலையில் ஆராய்ச்சி மாணவராகச் சேர்ந்தபோதுதான் கரஷிமாவுடன் முறையான அறிமுகம் வாய்க்கப்பெற்றார்.)

         ஜப்பானில் பிறமொழிகளுக்கும் இடம் கிடைத்த காலத்தில்தான் கரஷிமா ஆங்கில அறிவை வளர்த்துக்கொண்டார். முதன் முதலில் ஆங்கிலத்தில் எழுதத்தொடங்கிய ஜப்பானியர் கரஷிமாவாக இருக்க வாய்ப்புண்டு. 1966-இல் முதன் முதலில்  கோலாலம்பூரில் நடைபெற்ற தமிழ் மாநாட்டில் தம்முடைய முதல் ஆங்கிலக்கட்டுரையை வெளியிட்டார். அதற்கு முன்னரே, 1963-இல் ஜப்பான்-இந்தியா நாடுகளுக்கிடையேயான மாணவர் பரிமாற்றத்தில் (Exchange students) வரலாற்று ஆய்வு மாணவராகச் சென்னைப்பல்கலைக்கு வந்தார். அப்போது, நடுவணரசின் தொல்லியல் துறையின் தென்னிந்திய மையம் உதகையில் இயங்கிவந்தது. எனவே 1963-இல் தமிழ்க் கல்வெட்டுகளைப் படிப்பதற்காக கரஷிமா உதகை வந்து சில மாதங்கள் படித்தார். தமிழ்க்கல்வெட்டுகளைப் படிப்பதற்காகவே தமிழ் கற்றார். 1968-இல் இரண்டாம் உலகத்தமிழ் மாநாட்டில் கலந்துகொள்ளச் சென்னை வந்தார். அப்போது சுப்பராயலு அவர்கள் சென்னைப் பல்கலையில் ஆராய்ச்சி மாணவராக இருந்தார். சோழ நாட்டு நாடுகள், ஊர்கள் ஆகியன பற்றிய ஒரு அட்டவணையை சுப்பராயலு அவர்கள் ஆக்கியிருந்தார். கரஷிமா அதைப் படித்திருக்கிறார்.

         1968-இல் சென்னை வந்த கரஷிமா 1968 முதல் 1971 வரை மூன்றாண்டுகள் மீண்டும் கல்வெட்டுத்துறையில் கழித்தார். இந்தக் காலகட்டத்தில் கரஷிமாவுக்குத் திருமணம் ஆகிவிட்டிருந்தது. ஒரு மகன் உண்டு. இப்போது கல்வெட்டுத்துறையின் தென்னிந்திய மையம் மைசூரில் இயங்கியது. மைசூரில் இரண்டாவது மகன் பிறப்பு. இந்த மூன்றாண்டுகளில் அவர் தமிழ் நன்றாகக் கற்றார். கல்வெட்டுத்தமிழை நன்றாகப் படிக்கக் கற்றுக்கொண்டார். ஆனால் பேசுவதற்குத் தயக்கம். ஜப்பானில் அவர் தலைமையேற்ற கற்போர் குழுவினர்க்குத் தமிழைக் கற்றுவித்தார். இந்நிலையில், 1967-1974 ஆண்டுகளில் கரஷிமா டோக்கியோவில் ஆசிய ஆப்பிரிக்க மொழி மற்றும் பண்பாட்டு ஆய்வு நிறுவனத்தில் ஆசிரியப்பணியையும் மேற்கொண்டிருந்தார். 1973-1975 ஆண்டுகளில் சுப்பராயலு அவர்கள் டோக்கியோ சென்றார்; கரஷிமாவுடன் கூட்டு ஆராய்ச்சியில் இணைந்துகொண்டார். தலைப்பு “சோழர் காலக் கல்வெட்டுகளில் ஆள்பெயர்கள்”.  இங்கு கரஷிமா அவர்களின் ஆய்வு முறை கருதுதற்குரியது. காலமுறைப்படியும் இட முறைப்படியும் ஆய்வு செய்வதில் அவர் முனைந்தார். கல்வெட்டுகளைப் படித்துப் புரிந்துகொள்வதில் “Contextual meaning” முதன்மையான ஒன்று என அவர் கருதினார். எல்லாக் கல்வெட்டுகளையும் தொகுத்துக் கிடைக்கும் ஒருங்குநிலையில் சொற்களுக்குப் பொருள்காணவேண்டும் என்பது அவரது ஆய்வு நெறிமுறை. புள்ளியியல் முறை(Statistics)யோடு  இயைந்த ஒன்று. மேற்படி ஆள்பெயர் ஆய்வில் 9000 சொற்களை வெளியிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

         கரஷிமா அவர்கள் ஒரு ஆய்வாளர் என்ற நிலையில் தமக்கு முன்னர் இருந்த வரலாற்று ஆய்வாளர்களை ஒருபோதும் மதிக்காமல் இருந்ததில்லை. அவருடைய ஆய்வுக்கட்டுரைகளில் முந்தைய வரலாற்று ஆசிரியர்களைப் பற்றிய குறிப்புகள் உள. ஆனால் அவர் வலியப்போய் மற்றவரிடம் வம்பிழுப்பதில்லை. கருத்தியல் (Theoretical) சார்ந்த ஆய்வுமுறைகளை அவர் ஏற்கவில்லை. காட்டாக மார்க்சியம் சார்ந்த ஆய்வினை முன்வைத்து அவர் ஆய்வு செய்யவில்லை. சார்பின்மை என்பது அவரது ஆய்வு நெறிமுறை. கல்வெட்டு ஆய்வுகளிலும் நூல்கள் தொகுத்தலிலும் அவர் கூட்டு முயற்சியை ஊக்குவித்தார். முதன்முதலில் அவர் தம் ஆய்வுக்கட்டுரையை  1980-இல் எழுதினார். முதலில் ஜப்பானிய மொழியில் எழுதி அவரே அதை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். அந்த ஆய்வுக்காக அவர் எடுத்துக்கொண்ட பொருள் சோழர்கால ஊர்களிலிருந்த நிலவுடைமை. சோழர்களின் 10, 11 ஆம் நூற்றாண்டைச் சார்ந்த கல்வெட்டுகளைக் கொண்டு அவர் தம் ஆய்வை மேற்கொண்டார். அதற்காகப் பயன்படுத்திய கல்வெட்டுகள் திருச்சிக்கருகில் அமைந்த அல்லூர் மற்றும் ஈசானமங்கலம் ஆகிய ஊர்களின் கல்வெட்டுகள். பெரும்பாலான ஊர்களில் நிலவுடைமையில் கூட்டுடைமை இருந்தது என்பதும், மாறாகப் பிராமண ஊர்களில் தனியுடைமை நிலவியது என்பதும் அவர் நிறுவிய கருதுகோள்களாகும். 1980-ஆம் ஆண்டில் அவர் விஜய நகர வரலாற்றில் ஆய்வு செய்தார். முதலில் தமிழ்க் கல்வெட்டுகளைப் படித்தும் பின்னர் கன்னடக் கல்வெட்டுகளைப் படித்தும் அவர் ஆய்வுசெய்தார். நாயக்கர் என்பது ஒரு பட்டமே; அது சாதிப்பெயரல்ல. “நாயக்கத்தனம்என்று தமிழிலுல் “நாயங்க்கரம் என்று தெலுங்கிலும் நாயக்கர்களின் தன்மை மற்றும் நிலையை விளக்கினார். நாயக்கர் என்பது சாதியன்று என்பதற்குச் சான்றாக சாளுவநாயக்கன் என்பான் காஞ்சிபுரத்திலிருந்த ஒரு பிராமணன் ஆவான் என்னும் குறிப்பு சிறந்த எடுத்துக்காட்டு.

         கி.பி. 1350-இலிருந்து விஜயநகர ஆட்சி தொடங்குகிறது. விஜயநகர ஆட்சியில் ஆட்சிக்குட்பட்ட நிலப்பகுதி பல இராஜ்ஜியங்களாகப் பிரிக்கப்பட்டிருந்தன. நாற்பதுக்குமேல் இராஜ்ஜியங்கள் இருந்தன. திருச்சி, தஞ்சை, வழுதலம்பட்டு, தாராபுரம், டணாயக்கன்கோட்டை ஆகியன அவற்றுள் ஒரு சில. இராஜ்ஜியங்களின் ஆட்சிப்பொறுப்பும் தலைமையும் பிரதானிகள் என்பாரிடம் ஒப்படைக்கப்பட்டன. இத்தகைய இராஜ்ஜிய-பிரதானி ஆட்சிமுறை விஜயநகர ஆட்சியில் மூன்றாண்டுக்காலம் நிலவியது. மூன்றாண்டுகளுக்குப்பின்னர், படைத்தலைவர்களுக்கு முதன்மையிடம் அளிக்கப்பட்டது. விஜயநகரப்பேரரசு உருவாக்கத்துக்காக விஜயநகர அரசர்கள் பல போர்களில் ஈடுபடவேண்டியிருந்தது. படைத்தலைவர்கள் பல்வேறு இடங்களில் ஆங்காங்கே நிலை நிற்க (தங்க) வேண்டியிருந்தது. அவர்களின் நிலை நிற்றலுக்குத் தொடர்ச்சியான செலவுகளும் இருந்தன. அச்செலவுகளை ஈடுகட்ட அவர்களுக்கு விஜயநகர அரசர்கள் நிலங்களை ஒதுக்கீடு செய்தனர். அந்நிலங்களின் வரி வருமானங்களில் ஒரு பகுதி படைத்தலைவர்களுக்கும் மிகுந்தபகுதி விஜயநகர அரசுக்கும் பங்கீடு செய்யப்பட்டன. இதை நாயக்கர்கள் சற்றே மாற்றினர். விஜயநகர அரசுக்கு முறையான வரி வருமானத்தில் சிக்கல் ஏற்பட்டது. கி.பி. 1460-க்கு மேல் குறுநிலத் தலைவர்களின் ஆட்சி மேலோங்கியது. கி.பி. 1505 முதல் துளுவ அரசர்களின் ஆட்சி ஏற்பட்டது. கிருஷ்ணதேவராயர் நாயக்கர்களைக் கட்டுக்குள் கொண்டுவருவதற்காக நாயக்கர்களுடன் ஒப்பந்தம் செய்கிறார். நாயக்கர்கள் கிருஷ்ணதேவராயருக்குப் பணிந்தனர். மைசூர் நஞ்சராயர்கள் மட்டும் பணியவில்லை. ஆட்சி அதிகாரம், 
1. அரசன்
2. நாயக்கர்கள் (பெரிய நாயக்கர்)
3. சின்ன நாயக்கர்கள்
என்னும் படிநிலையில் அமைந்தன.

தஞ்சை, மதுரை, செஞ்சி ஆகிய பகுதிகளின் நாயக்கர்கள் பெரிய நாயக்கர் வரிசையில் அடங்குவர்.
கரஷிமாவின் நாயக்கர்கள் பற்றிய ஆய்வில் ஏறத்தாழ 150 ஆண்டுகள் காலகட்டத்தில் 300 நாயக்கர்கள் குறிக்கப்படுகிறார்கள். நாயக்கர்களின் தொடர்ச்சியாகப் பாளையக்காரர்கள் காணப்படுகிறார்கள்.

         அடுத்து, கரஷிமா அவர்களின் ஆய்வு, தென்னிந்தியாவுக்கும் தென்கிழக்காசியாவுக்கும் இருந்த தொடர்பு மற்றும் பண்பாட்டுத் தாக்கம் பற்றியது. இந்த ஆய்வும் ஜப்பானிய மற்றும் தமிழ் அறிஞர்களின் கூட்டு ஆய்வாக நிகழ்ந்தது. அடுத்து மேற்கொண்ட தென்னிந்திய வணிகக்குழுக்கள் பற்றிய ஆய்விலும் மேற்சொன்னவாறு ஜப்பானிய, தமிழ் அறிஞர்களின் கூட்டு ஆய்வு நடைபெற்றது. தென்னிந்திய வணிகக் குழுக்களில் முதன்மையானவர்கள் நானாதேசி வணிகக்குழுவினர் ஆவர். இவர்களின் தொடக்கம் கன்னடப்பகுதியிலிருந்து காணப்படுகிறது. கி.பி. 9-ஆம் நூற்றாண்டுக்குப் பின்னரே தமிழகத்தில் இவர்கள் குறிக்கப்பெறுகிறார்கள். இவர்களது வணிகத் தொடர்பு மற்றும் செயல்பாடுகள் பல்வேறு அயல் நாடுகளுடன் என்றாலும் இவர்களின் தொடர்பு மொழி தமிழாகவே இருந்துள்ளது. இதன் கரணியமகவே, நானாதேசிகளின் கல்வெட்டுகள், மியான்மர்(பர்மா), மலேசியா, இந்தோனேஷியா, தாய்லாந்து, கம்போடியா ஆகிய நாடுகளில் தமிழ்க்கல்வெட்டுகள் வடிவிலே கிடைக்கின்றன. முதல் குலோத்துங்கனின் தமிழ்க்கல்வெட்டொன்று  இந்தோனேஷியாவில் உள்ளது. இதில் ஜாவா, தமிழ் ஆகிய இரு மொழிகளும் காணப்படுகின்றன. லாவோஸ் நாட்டில் ஒரு மலைமீதுள்ள சிவன்கோவிலில் சமற்கிருதக் கல்வெட்டொன்று காணப்படுகிறது.

         கரஷிமா அவர்கள் எட்டு தமிழ் மாநாடுகளில் கலந்துகொண்டுள்ளார். அவரைப்பற்றித் தெரிந்துகொள்ளும்போதே ஜப்பானிய நாட்டுச் சூழ்நிலையும் மக்களின் பண்பும் நமக்கு ஒருவாறு விளங்கும். உலகப்போரின் தாக்கங்கள், சிக்கல்கள்(பிரச்சினைகள்)  அவர் அறிந்திருந்தவர். ஜப்பானியர் அணுசக்தியின் பேரழிவைச் சந்தித்தவர்களாகையால் அணுசக்திக்கு எதிர்ப்புக் காட்டியவர்கள். இருப்பினும், தற்போது, நிலைமை மாறி ஆக்கப்பணிகளுக்கு அணுசக்தியை ஏற்றுக்கொள்கின்றனர். ஜப்பானியர் கல்வியை மிக உயர்வாக மதித்தனர். ஜப்பானியப் புத்தாண்டன்று ஜப்பானியர் முதலில் சந்தித்து மரியாதை செய்வது தம் ஆசிரியர்களைத்தான்.

         கரஷிமா அவர்கள் தம் 72-ஆம் அகவையில் எழுத்துப்பணிகளை நிறுத்திவிட்டுத் தமக்குப்பிடித்த மரச்சிற்பங்கள் செய்யும் பணியில் ஈடுபடப்போவதாகக் கூறினாலும், ஆய்வும் எழுத்துப்பணியும் அவரை விடவில்லை.  இறப்புவரை எழுத்துப்பணி. அவருக்குக் கடந்த பத்து ஆண்டுகளாக உடல் நலக்குறைவு இருந்துள்ளது. முன்னர் ஒருமுறை மஞ்சள் காமாலை நோய் தாக்கியதுண்டு.  எனினும் குருதிப்புற்று நோய் கரணியமாக அவரது மறைவுக்கு ஒரு மாதம் முன்பு அவரது பணி முடங்கியது. வருகின்ற 2016 ஜனவரியில் கரஷிமா அவர்கள் தம் மனைவியோடு தமிழகம் வந்து உதகை, மைசூர், சென்னை ஆகிய ஊர்களில் பதினைந்து நாள்கள் கழிக்கத் திட்டஏற்பாடு  வைத்திருந்தார். ஆனால் நிகழ்ந்தது வேறு.

         முடிவுரை: கரஷிமா அவர்களின் ஆய்வுகள் இளைஞர்களை எட்டவேண்டும். தற்போதுள்ள சூழ்நிலையில், ஆய்வுப்பட்டமான முனைவர் பட்டம் பெற்றவர் ஏராளமாக உளர். எளிதில் பட்டம் பெறும் சூழலும் உள்ளது.
ஆனால், ஆய்வறிவில் ஆழம் இருப்பதில்லை. முந்தைய ஆய்வறிஞர்களின் நூல்களை எல்லாம் படித்துள்ளனரா என்பது ஐயமே. குறிப்பாக ஆங்கிலத்தில் கிடைக்கின்ற மிகுதியான ஆய்வு நூல்கள் படிக்கப்படுவதில்லை. அவை தமிழில் மொழியாக்கமும் செய்யப்படுவதில்லை. இனிவரும் ஆய்வாளர்கள், இவற்றையெல்லாம் செய்யவேண்டும்.

முனைவர் அர.பூங்குன்றன் அவர்களின் சுருக்கவுரையிலிருந்து சில செய்திகள்:

         கரஷிமா அவர்களைச் சந்தித்ததுண்டு. அவருடன் உரையாடியதுண்டு. ஆனால் அவருடைய நூல்களைப் படித்துத்தான் அவருடைய ஆய்வுப்பணியை அறியமுடிந்தது. சோழ நாட்டில் ஏற்பட்ட மாற்றங்கள் குறித்த நூல்கள் குறிப்பிடத்தக்கவை. அவரது நூல்கள் உறுதியான சான்றுகள் கொண்டவை. சோழர் காலத்தில் நூற்றுக்கணக்கான வரிகள் நடைமுறையில் இருந்தன என்றாலும், அனைத்துமே அனைத்துப் பகுதிகளிலுமே நடைமுறையில் இல்லை. ஏழே ஏழு வரிகள் மட்டிலுமே எல்லாப்பகுதிகளிலும் வாங்கப்பட்டன. மற்றவரிகள் யாவும் அவ்வப் பகுதிகளைப் பொறுத்தன. மேலும் பல்வேறு காலங்களில் பல்வேறு வரிகள் நடைமுறையில் இருந்தன. கரஷிமாவின் ஆய்வு புள்ளிவிவரங்களைக் கொண்டு அமைந்தவை. அவரது ஆய்வு நெறிமுறை விஞ்ஞான அடிப்படையிலானது. அது பல ஆய்வுகளுக்கு உற்ற துணையாக இருக்கும். 1984-இல் முதல் நூல்; அதுவும் தமிழக வரலாற்றைப்பற்றியது. முன்னர் ஆய்வு செய்த அறிஞர்களைப்பற்றிய குறிப்புகள் அந்நூலில் உண்டு. காட்டாக, இந்திய ஆய்வறிஞர் திரு. டாங்கேயின் நூல் பற்றிய குறிப்பைச் சொல்லலாம். அவருக்கென்று ஒரு நெறிமுறை இருந்தது. ஜப்பானில் ஆய்வு நடைபெற்றாலும் ஜப்பான், மைசூர் ஆகிய இரு பகுதிகளைச் சேர்ந்த அறிஞர்குழுவினர் ஆய்வு செய்தனர். இங்கிருந்து பல அறிஞர்களை அழைத்துச் சென்று ஆய்வுகள நடத்தினார்.

         ஆய்வுச் சொற்களைப் பொருள்கொள்வதில் காலமும்,புலமும் (context meaning) இன்றியமையாதன என்றார். அவரது “காணியாட்சிபற்றிய ஆய்வு சிறப்பானது. காணியாட்சி பற்றிய தமிழ்க்கல்வெட்டுகளில் “குடும்பு”  என்னும் சொல் பயில்கிறது. அது நிலம் என்னும் பொருளையும், ஆங்கிலச் சொல்லான “ward” என்னும் பொருளையும் கொண்டது. அதுபோல், “கரை”  என்னும் சொல்லையும் நுணுக்கமாக ஆய்வு செய்தவர் அவர். 2013-இல் வெளியான “Concise History of South India” என்னும் நூல் மிகச் சிறந்த ஒன்று. அவரது நூல் ஒன்று இறுதியாக 2014-இல் வெளியானது.

உரையின் கட்டுரை வடிவாக்கம்: து.சுந்தரம், கல்வெட்டு ஆராய்ச்சியாளர், கோவை. அலைபேசி : 9444939156.




வெள்ளி, 4 டிசம்பர், 2015



குருவித்துறைக் கோவில் கல்வெட்டுகள்


         அண்மையில் இணையத்தில் அனபர் ஒருவர் குருவித்துறைக் கோவில் கல்வெட்டுப்படங்களைப் பகிர்ந்துகொண்டார். அவற்றைப்படித்துப் பார்த்தபோது கல்வெட்டு வரிகள் மூலம் தெரியவந்த சில செய்திகளையும் அவற்றோடு தொடர்புடைய சில செய்திகளையும் இங்கே பகிர்ந்துகொள்கிறேன். இரண்டு தூண் கல்வெட்டுகள் படிக்கப்பட்டன.

முதல் தூண் கல்வெட்டின் பாடம்:

1         சோழ குலாந்தகச்ச
2         (துர்வேதி) மங்கலத்(தி)ல் இ
3         ன்னாயனார் சிவநாமத்தா
4         ல் அனுபவித்து வருகிற
5         பாடகம் இருபதாலுள்ள
6         பாடிகாவல் ஸ்ரீ ஸுந்தர பா
7         ண்டிய தேவற்கு யாண்டு
8         20 ஆவது முதல் இன்னா
9         யனாற்கு அமுதுபடியாக
10     க்குடுத்தோம் இவ்வோ

குறிப்பு : வரி 6-இல் உள்ள “ஸ்ரீ ஸுந்த”  என்பது கிரந்த எழுத்துகளால் ஆனது.


இரண்டாம் தூண் கல்வெட்டின் பாடம்:

  1. தென்னவன் மூவே
  2. ந்த வேளா(ந்) எழுத்
  3. து இந்த சிலா
  4. லே(கை) பண்ணி
  5. னேந் இந்நாயனார்
  6. கோயில் தச்சாசாரி
  7. யன் (சீயன்) சிவலவ
  8. னான பாகனூர் கூற்ற
  9. த்து ஆசாரியன் எழு
  10. த்து இந்த சிலா(லே)



குறிப்பு : வரிகள் 3,4,10-இல் உள்ள “சிலாலேகை”  என்பது கிரந்த எழுத்துகளால் ஆனது.


முதல் கல்வெட்டு மூலம் பெறப்படும் செய்திகள்:

சோழகுலாந்தகச் சதுர்வேதி மங்கலம் தற்போதைய சோழவந்தான் ஊரின் பழம்பெயர். சோழவந்தான் பண்டு சதுர்வேதி மங்கலமாக (பிராமணர்குடியேற்றம்) இருந்தது. சதுர்வேதிமங்கலங்கள் உருவாக்கப்படும்போது அரசன் ஒருவனின் பேராலே அமைக்கப்படுவது வழக்கமாக இருந்துள்ளது. அவ்வகையில் இவ்வூரும் சோழகுலாந்தகன்என்னும் அரசனின் சிறப்புப் பெயராலே அமைந்துள்ளது. சோழகுலாந்தகன் என்னும் சிறப்புப் பெயர் எந்த அரசனின் பெயர் என்னும் கேள்வி எழுகிறது. பாண்டியன் இரண்டாம் வரகுணனின் தம்பியான சடையவர்மன் பராந்தக பாண்டியனின் பேரனான வீரபாண்டியன் என்னும் அரசனின் சிறப்புப் பெயரே சோழகுலாந்தகன். அதாவது சோழகுலத்துக்குக் காலன். இவன் கி.பி. 946 முதல் கி.பி. 966 வரை ஆட்சி செய்தவன். இவனைப்பற்றி டாக்டர் கே.கே.பிள்ளை தம் “தமிழக வரலாறு-மக்களும் பண்பாடும்”  என்னும் நூலில் கீழ்வருமாறு குறிப்பிடுகிறார்.

“இராசசிம்மன் மகன் வீரபாண்டியன் பாண்டி நாட்டுக்கு ஏற்றம் புரிந்தவர்களுள் ஒருவனாவான். பராந்தக சோழன் ஆட்சியில் சோழப்பேரரசின் ஆட்சிக்குட்பட்டிருந்த பாண்டி நாட்டுப்பகுதிகளை அவன் மீட்டுக்கொண்டான். அவன் ‘சோழன் தலைகொண்ட கோவீரபாண்டியன்என்று தன்னைப்பாராட்டிக்கொண்டுள்ளான். அவன் கொண்டது சோழ இளவரசர்களுள் ஒருவனது தலையே போலும். முதலாம் இராசராசனின் தமையனாகிய ஆதித்த கரிகாலன் வீரபாண்டியனை வென்று அவன் முடியைக்கொண்டிருக்கவேண்டும் என்று சோழர்களின் கல்வெட்டுகளிலிருந்து விளங்குகிறது. வீரபாண்டியன் கி.பி.966-இல் போரில் உயிர் துறந்தான்.

         மேற்படி சதுர்வேதிமங்கலத்து நாயனார் (இறைவன்)  பெயரில் உள்ள இருபது பாடகம் அளவுள்ள நிலத்தின் விளைவிலிருந்து பெறப்படும் வரிவருமானம் பாடிகாவல் செலவினங்களுக்குத் தற்போது பயன்பட்டு வருகிறது. அவ்வருமானம் ஸ்ரீ சுந்தரபாண்டிய தேவரின் இருபதாவது ஆட்சியாண்டிலிருந்து இக்கோயில் இறைவற்கு அமுதுபடிச் செலவினங்களுக்குப் பயன்படுத்தப்படவேண்டும் எனக் கல்வெட்டு ஆணை கூறுகிறது.
பாடகம் ஒரு நில அளவு.
பாடிகாவல் ஊர், நாடு முதலியவற்றைக் காத்தல்; அதன்பொருட்டுத் தண்டும் வரி.
அமுதுபடி படையல் சோறு (நைவேத்தியம்?)

முன்னர் நான் எழுதிய குறிப்பில் இக்கல்வெட்டு அரசனின் நேரடி ஆணையைக் குறிப்பதாகச் சொல்லியிருந்தேன். அது தவறான குறிப்பு. சதுர்வேதிமங்கலத்துச் சபையார் பாடிகாவல் வருமானத்தை அமுதுபடிச் செலவினங்களுக்கு மாற்றிக்கொடுத்ததைக் கல்வெட்டு தெரிவிக்கிறது.

         கல்வெட்டு, சுந்தரபாண்டியன் என்னும் அரசனின் இருபதாம் ஆட்சியாண்டுக் காலத்தது. மாறவர்மன் சுந்தரபாண்டியன் மற்றும் சடையவர்மன் சுந்தரபாண்டியன் என இரு அரசர்கள் சிறப்பானவர்கள் உளர். அவர்களுள் முதலாமவன் கி.பி. 1219 முதல்  கி.பி. 1239 வரை ஆட்சியிலிருந்தவன். இரண்டாமவன் கி.பி. 1251 முதல் கி.பி. 1268 வரை ஆட்சியிலிருந்தவன். கல்வெட்டு இருபதாம் ஆட்சியாண்டைக்குறிப்பதால் கல்வெட்டு மாறவர்மன் சுந்தரபாண்டியனின் ஆட்சிக்காலத்தைச் சேர்ந்தது என்பது பெறப்படுகிறது. எனவே, கல்வெட்டு கி.பி. 1239-ஆம் ஆண்டைச் சேர்ந்தது எனக்கொள்ளலாம்.

இரண்டாம் கல்வெட்டு மூலம் பெறப்படும் செய்திகள்:

         இக்கல்வெட்டு முதல் கல்வெட்டின் இறுதிப்பகுதியா எனத்தெரியவில்லை. வேறொரு கல்வெட்டின் இறுதிப்பகுதியாகவும் இருக்கக்கூடும். எவ்வாறெனினும், இக்கல்வெட்டு வரிகள், ஒரு கல்வெட்டின் இறுதிப்பகுதியைச் சேர்ந்தன. கல்வெட்டின் முடிவில் அரச ஆணையைத் தெரிவித்துச் சான்றுக் கையெழுத்து (கையொப்பம்) இடுபவர்களின் பெயர்கள் விளக்கமாகக் குறிப்பிடப்பெறும். அவ்வாறே, இக்கல்வெட்டிலும் சான்றுக் கையெழுத்திட்டவர்களின் பெயர்கள் காணப்படுகின்றன.

1. தென்னவன் மூவேந்த வேளான் எழுத்து -   அரச அலுவலர்களில் உயர்ந்த பதவி வகித்தவர்களின் பட்டங்களில் “மூவேந்தஎன்னும் முன்னொட்டுபெயர் வருவதுண்டு. அவ்வகையில் வேளான் ஒருவரின் பெயர் இது. தென்னவன் என்பது பாண்டியனைக் குறிக்கும் முன்னொட்டு.
2. கோயில் தச்சாசாரியன் சிவலவன் எழுத்து -  தச்சாசாரியன் என்பவர் தற்காலத்து வழக்கிலுள்ளதுபோல் மரவேலை செய்கின்ற தச்சர் அல்லர். இவர் கல்தச்சர். அதாவது சிற்பி (ஸ்தபதி). கோயிலில் காணி உரிமை பெற்ற தச்சராயிருக்கவேண்டும். சான்றுக் கையெழுத்திட்டதோடு, இக்கல்வெட்டைப் பொறித்தவரும் இவரே. இவர் பாகனூர் கூற்றத்தைச் சேர்ந்தவர். (சோழ நாடு  கூற்றங்கள் என்னும் பல நிருவாகப்பிரிவுகளைக் கொண்டிருந்தது என்பது நாம் அறிந்த ஒன்று.) இவர் பெயர் சிவலவன் என்பது. ஸ்ரீவல்லபன் என்னும் இப்பெயர் தமிழ்ப்படுத்தப்பெற்று ஸ்ரீ>சீ ,   வல்லபன் > வல்லவன் > வலவன் என மருவியது. (நா.கணேசன் அவர்கள், கேரளத்தில் கண்டுபிடிக்கப்பட்ட தமிழிக் கல்வெட்டு குறித்து “ஸ்ரீ பழமிஎன்பது சீ பழமிஎன எழுதப்பட்டுள்ளது என நிறுவியுள்ளதை நினைவு கூர்க.)

3. சிலாலேகை சிலா=கல் லேகா (லேகை) = ரேகா, ரேகை, கோடு, எழுத்து. (Graph).

ஆசிரியரின் நன்றி : செய்திகள் தந்துதவிய தொல்லியல் துறை அறிஞர் முனைவர் சொ.சாந்தலிங்கம் அவர்களுக்கு.

து.சுந்தரம், கல்வெட்டு ஆராய்ச்சியாளர், கோவை.
அலைபேசி : 9444939156.