மொத்தப் பக்கக்காட்சிகள்

வியாழன், 18 ஜூலை, 2019


அசோகனின் கிர்னார் பாறைக்கல்வெட்டில் சங்ககாலத் தமிழ் அரசர் 

முன்னுரை

அண்மையில் முகநூல் பகுதியில், முனைவர் பவானி அவர்கள் (கல்வெட்டியல் துறை), கிர்னாரில் அமைந்துள்ள இரண்டாம் பாறைக்கல்வெட்டு பற்றிய செய்தியைப் பகிர்ந்து கொண்டிருந்தார். அதில், கல்வெட்டில் கூறப்பட்ட முதன்மைச் செய்திகளோடு, அதன் சிறப்புச் செய்தியாக ஒரு செய்தியைக் குறிப்பிட்டிருந்தார். அசோகரின் இணைக்காலத்தில் சங்ககாலத் தமிழ் மன்னர் வாழ்ந்துள்ளனர் என்பதற்கான அகச்சான்றாகக் கல்வெட்டின் பாடம் அமைந்துள்ளது என எழுதியிருந்தார். மேற்படிப் பாறைக்கல்வெட்டு, பிராகிருத மொழியில் (அசோக)பிராமி எழுத்தில் பொறிக்கப்பட்டுள்ளது.  கல்வெட்டின் பாடத்தைத் தமிழ் எழுத்துகளால் எழுத்துப் பெயர்ப்பு (Transliteration)  வடிவாக்கி வெளியிட்டிருந்தார்.  வடபுல மக்களின் வர்க்க’ எழுத்துகளின் மிகச் சரியான ஒலிப்பைத் தமிழ் எழுத்துகள் வாயிலாகக் காட்டுவது கடினம். ஆகவே, பல்லவ கிரந்த எழுத்துகளில் ‘ஸ’, ‘’, ‘  ஆகியவற்றை மட்டிலும் கையாண்டிருக்கிறார். அசோகனின் இந்தக் கல்வெட்டினைப் பற்றிச் சற்றுக் கூடுதலாகச் செய்திகளை அறியும் தேடுதலில் கிடைத்த செய்திகளையும் இங்கே பகிர்ந்துகொள்கிறேன்.

முனைவர் பவானி அவர்களின் முகநூல் பகிர்வு


அசோகரின் கிர்னார் இரண்டாம் பெரும்பாறைக் கல்வெட்டு
முனைவர் மா.பவானி
உதவிப் பேராசிரியர்
கல்வெட்டியல் துறை

அசோகரது கிர்னார் இரண்டாம் பெரும்பாறைக் கல்வெட்டு குஜராத் மாநிலம் கத்தியவாரில் கிடைக்கப்பெற்ற முக்கியமான ஒரு கல்வெட்டாகும்.
அரசன் : அசோகன்
வம்சம் : மௌரியர்
காலம் : கி.மு. 3 ஆம் நூற்றாண்டு
மொழி : பிராகிருதம்
எழுத்து : அசோகன் பிராமி
நோக்கீடு : Inscriptions of Asoka by D.C. Sircar, 1957, Corpus Inscriptionum Indicarum

அசோகர் கல்வெட்டு பாடம் (தமிழில்)
1. ஸர்வத் விஜிதே(ம்)ஹி தேவாநாம்பிர்யஸ பிர்யதர்ஸினோ ராஞோ
2. ஏவமபி ப்ர சந்தேஸீ யதா சோடா, பாடா ஸதியபுதோ கேதளபுதோ ஆ தம்ப
3. பர்ணி அன்தியோகோ யோன ராஜா யே வாபி அன்தியகஸ் ஸாமிநோ
4. ராஜானோ ஸவத தேவனாம் பியஸ ப்ரிய (பிய) தஸினோ ராஞோ த்வே சிகீச்சா கதா
5. மனுஸ சிகிச்சா ச பஸீ சிகிச்சா ச ஔஸீதானி ச யாநி மனுசோபதானி ச
6. பஸோ ப கானி ச யத் யத் நாஸ்தி ஸர்வத்ர ஹாரா பிதானி ச ரோபா பிதானிச
7. முலானி ச ஃபலானிச யத் யத் நாஸ்தி ஸர்வத் ஹாரா பிதானி ச ரோபாபிதானி
8. பந்தேஸீ கூபா ச கானாபிதா வ்ருச்சா ச ரோபா பிதா பரிபோக்ய பஸீ மனுஸாநம்

செய்தி :
அசோகர் வழக்கம்போல் இக்கல்வெட்டிலும் தேவனுக்குப் பிரியமானவன் என கவுதம் குறிப்பிடப்பெறுகின்றார். அசோகர் தமது ஆட்சிக்குட்பட்ட பகுதியில் மட்டுமின்றி அண்டை நாடுகளான சேர, சோழ, பாண்டிய, ஸத்தியபுத்திரர், யோன அரசரான அன்டியோகஸ் மற்றும் அவருடைய அண்டைநாடுகளுக்கும் இரு வகைச் சிகிச்சைகள் அளிக்கப்படவேண்டும் என்பதை வலியுறுத்தியுள்ளதை இக்கல்வெட்டு உணர்த்துகிறது. அதாவது மனிதருக்கும் விலங்கினங்களுக்கும் சிகிச்சை அளிக்கப்பெறுதல் வேண்டும். எங்கெல்லாம் மூலிகைச் செடிகளும் பழம் தரும் மரங்களும் இல்லையோ, கிடைக்கும் இடங்களிலிருந்து தருவித்து இல்லாத இடங்களில் நடப்படவேண்டும் என்றும் பசுக்கள் நீர் அருந்த கிணறு போன்ற நீர் நிலைகள் ஏற்படுத்தவேண்டும் என்றும் அறிவுறுத்துகின்றது. இவ்விதமாகப் பசுக்களும், மனிதர்களும் பரிபோக்யமாக, சுபமாக வாழவேண்டும் என்று கல்வெட்டு கூறுகிறது.

முக்கியத்துவம் :

இக்கல்வெட்டில் தமிழகத்தில் சங்க காலத்தில் வாழ்ந்த அரசர்களின் வம்சம்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.

இதனால் அசோகருக்கு இணையான காலத்தில் (பொ.ஆ.மு 3ஆம் நூற்றாண்டுகளில்) தமிழ் மன்னர்கள் வாழ்ந்தது விளங்கும்.

தமிழக வரலாற்றை குறிப்பாக சங்க காலத்தை பொ.ஆ.8ஆம் நூற்றாண்டு என மிகவும் பின்னோக்கி கொண்டு செல்லும் “டிக்கன்” போன்ற அறிஞர்களின் கருத்துக்களைத் தவறானவை என இக்கல்வெட்டு கொண்டு மெய்ப்பிக்கலாம்.

தமிழ் மன்னர்கள் மட்டுமின்றி தமிழ் அரசர்களின் சிற்றரசர்காளாக விளங்கிய அதியமான் போன்றோரும் அசோகர் அறியும் வண்ணம் சிறப்புற்று விளங்கியுள்ளனர் என்பது தெளிவு.

அசோகருக்கு அண்டை நாடாகக் குறிப்பிடப்படுவதால் அசோகரின் ஆட்சியோ படையெடுப்போ தமிழகத்தில் நிகழவில்லை என்பதை அறியலாம். தமிழ் மன்னர்கள் இக்காலத்தில் மிக வலிமைகொண்டு விளங்கியுள்ளனர் எனக் கூறலாம்.

குஜராத்-கத்தியவார்-கிர்னார்

குஜராத் மாநிலத்தின் கத்தியவார் பகுதியைச் சேர்ந்த கிர்னார் (GIRNAR) என்னும் ஊரில் அமைந்துள்ள பாறைக்கல்வெட்டு அசோகனின் பாறைக்கல்வெட்டுகளில் இரண்டாவதாக வரிசைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த இரண்டாம் பாறைக்கல்வெட்டின் பாடம் (வாசகம்), ஷாபாஜ்கடி (SHAHBAZGARHI), கால்சி (KHALSI), கிர்னார் (GIRNAR), தவுலி (DHAULI), ஜவுகதா (JAUGADA)  ஆகிய ஐந்து இடங்களிலும் ஒன்றுபோல் பொறிக்கப்பட்டுள்ளது. சிறு சிறு சொற்கள் மாறுபடுகின்றன. 



அசோகரின் கிர்னார் பாறைக்கல்வெட்டு


                              
அசோகரின் கிர்னார் பாறைக்கல்வெட்டு - பாடம்



கல்வெட்டின்  முதன்மைச் செய்தி

மனிதருக்கும், விலங்கினங்களுக்கும் ஒன்றுபோல் மருத்துவ உதவி அளிக்கப்படவேண்டும் என்னும் அசோகனின் முதன்மை நோக்கத்தைக் கல்வெட்டு இயம்புகிறது. எனவே, ஆதுல சாலைகள் அமைப்பதற்கான அசோகனின் ஆணை என்றே இதைக் கொள்ளலாம்.  அதற்கான மருந்துச் செடிகள் (மூலிகைச் செடிகள்), மூலங்கள் (ROOTS), பழமரங்கள் ஆகியன மருத்துவ உதவி அளிக்கப்படும் இடங்களில் அமையவேண்டும்; அவ்வாறு இவை அவ்விடங்களில் இல்லாத போது, அவை வேறிடங்களிலிருந்து வரவழைக்கப்பட்டுப் பயிரிடப்படல் வேண்டும். பெருவழிகளில், மனிதர்க்கும் விலங்கினங்களுக்கும் பயன் தருகின்ற வகையில் மரங்கள் நடப்படுதல் வேண்டும்; மேலும், அப்பெருவழிகளில் மனிதர்க்கும் விலங்குகளுக்கும் பயன்படுகின்ற கூவல்கள் (கிணறுகள்) தோண்டப்படுதல் வேண்டும். இந்த ஆணையைத் தெரிவிக்கும் அசோக மன்னன் பியதசி” என அழைக்கப்படுகிறான். அவன் கடவுளின் அன்பைப் பெற்றவன். 

எங்கெல்லாம் மருத்துவச் சாலைகள்?

அசோகன் வென்றுகொண்ட நாட்டுப்பரப்புகளிலெல்லாம் இந்த மருத்துவ உதவி அமையவேண்டும் என்று கல்வெட்டு கூறுவதோடு வேறு சில நாட்டுப் பகுதிகளிலும் இம்மருத்துவ அமைப்பு செயல்படவேண்டும் என்று கூறும் வகையான் சங்ககாலத்தமிழ் மன்னர்களின் பெயர்கள், இலங்கையின் நாட்டுப் பெயர், யவன அரசன் அந்தியாகோவின் பெயர் ஆகியன இக்கல்வெட்டில் குறிப்பிடப்படுகின்றன. இக்குறிப்பில், சோடா, பாண்டா, சதியபுத, கேதலபுத ஆகியோர் காணப்படுகின்றனர்.

கல்வெட்டில் காணப்பெறும் பிற அரசர்கள்-
சோடா, பாண்டா, சதிய புத, கேதல புத

இக்கல்வெட்டினை, பிரின்செப் (PRINSEP), வில்சன்  (WILSON) என்னும் மேலை நாட்டு அறிஞர் இருவர் படித்துப் பொருள் அறிந்துள்ளனர். அவர்களுள் பிரின்செப் என்பார், அசோகனின் மேற்படி அரசாணை அறிவிப்பானது அசோகன் வென்ற நாட்டுப் பரப்பு அனைத்திலும் (CONQUERED PROVINCE) மற்றும் நம்பிக்கைக்குரிய  (FAITHFUL) அரசர்களின் ஆட்சிப்பகுதிகளிலும் செயல்படுத்தப்படுகிறது என்பதாகக் குறிப்பிடுகிறார். நம்பிக்கைக்குரிய அரசர் வரிசையில் மேற்படி சோடா, பாண்டா, சதியபுத, கேதலபுத மற்றும் தொலைவில் இருக்கும் தாம்பபண்ணி (THANBAPANNI) என்னும் இலங்கை  (பிரின்செப், CEYLON  என்று குறிப்பிடுகிறார்) ஆகியோர் குறிப்பிடப்படுகிறார்கள். மேலும், ஆண்ட்டியோக்கஸ் (ANTIOCHUS)  என்னும் கிரேக்க அரசனின் ஆளுகைக்குட்பட்ட பகுதியும் குறிப்பிடப்படுகிறது.


                                    (மூன்றாம் வரியில்)-கிரேக்க அரசன் ஆண்டியோக்கஸ் பெயர்
                                                                     அ   ந்   தி    ய   கோ
  குறிப்பு :       ”ந்”   எழுத்து,  எழுத்து வடிவில் அல்லாது   ”அனுஸ்வாரம்”                                             என்னும் அமைப்பில் எழுதப்பட்டுள்ளது.


              (இரண்டாம் வரியில்)     தமிழ் மன்னர்களின் பெயர்கள்

       சோ டா       பா   ண்டா ஸ    தி        ய           பு      தோ        கே    த      ல     பு     தா


இப்பெயர்களின் சரியான பாடம்  சோழா, பாண்டியா, சதியபுத்ர, கேதலபுத்ர ஆகிய அரசர் என்றும், தாம்பபனி நாடு என்றும் கன்னிங்காம் (CUNNINGHAM) குறிப்பிடுகிறார். இவ்வரசர்கள், அசோகனின் ஆட்சி எல்லையில் அமைந்த நாடுகளின் தலைவர்கள் என்பதும் அவர் தருகின்ற குறிப்பு.  முதலிரண்டு பெயர்கள், இந்திய நாட்டின் தென்கோடியில் அமைந்த ஆட்சிப்பகுதிகள். தாம்பபனி என்பது சிலோன்’ தீவு; கிரேக்கர் இதைத் தாப்ரொபனே  (TAPROBANE) என்று அழைப்பர். கேதலபுத்ர என்பது மேலைக்கடற்கரையின் கேரளாவைக் குறிக்கும். சதியபுத்ர என்னும் பெயர் யாரைக் குறிக்கும் என்பது உறுதியாகவில்லை.  ஆனால், லாசன் (LAASSEN) என்பார் சதியபுத்ர என்னும் பெயர் பிடா/பிதா (PIDA) எனப்படும் பாண்டியனின் பௌத்தப்பெயராகும் எனக்கருதுகிறார். கோதாவரி ஆற்றுப்பகுதியில் அமைந்திருந்த பைத்தான் (BAITHANA or PAITHAN)  பகுதிக்கு மேற்குக் கரையில் இருந்த சாதினி (SADINI) என்பவரைக் குறிக்கும் என்பது கன்னிங்காம் (CUNNINGHAM) அவர்களின் கருத்தாக உள்ளது. இதற்குச் சான்றாக அவர் சுட்டுவது தாலமியின் வரைபடமாகும் (PTOLEMY’s MAP) .  இவர்கள் கடற்கொள்ளையர் என்னும் கருத்தும் உள்ளது. கோதாவரிப்பகுதியில் வழங்கும் ஆந்த்ரி பைரேட்டி (ANDRI PIRATAE) என்னும் பெயரையும் நோக்குகையில், சாதினி (SADINI), சாதவாகனர் (SADAVAHANS), சாதகர்னி (SATAKARNIS) ஆகிய மூன்று பெயர்களும் ஆந்த்ரி (ஆந்திரர்) என்னும் பெயரும் ஒருவரையே குறிக்கும் எனலாம். அசோகன் காலத்தில் ஆந்திரர் ஒரு வலுவான நாட்டை ஆண்டவர்கள் என்பதைக் கன்னிங்காம், தாம் படித்த ஷாபாஜ்கடி (SHAHBAZGARHI), கால்சி (KHALSI) கல்வெட்டுகள் (அசோகனின் 13-ஆம் பாறைக் கல்வெட்டு) வாயிலாக நிறுவியுள்ளதாகக் குறிப்பிடுகிறார். நாசிக் கல்வெட்டு ஒன்றில், சாதகர்னி என்பது சாதவாகன என்று எழுதப்பட்டுள்ளது.  சாதகர்னி என்பதே தாலமியின் நூலில் சாதனி என மருவி வந்துள்ளது. பெரிப்ளூஸ்  (PERIPLUS) நூலில் காணப்படும் சரகனோஸ்’ (SARAGANOS)  என்னும் சொல் சாதவாகனரையே குறிக்கும்.

சதியபுத -  அதியமான்

சதியபுத என்பது மேற்குறித்தவரையெல்லாம் சுட்டாது என்பதும், அதியமான் என்னும் குறுநில மன்னனையே குறிக்கும் என்பதும் பின்னாளில் நிறுவப்பட்டுள்ளது. அதிய” என்னும் தமிழ்ச் சொல் வட இந்தியச் சாயல் பெறும்போது “சதிய” என மாற்றம் பெறுவது இயல்பு. அதியமான், தொண்டைமான், மலையமான் போன்ற தமிழ்ச் சொற்களில் காணப்பெறும் மான்” என்னும் சொல் “மகன்” என்னும் பொருள் ஏற்றுப் பிராகிருத மொழியில் “புத” என்று வழங்கியிருத்தல் வேண்டும். இச்சொல் சமற்கிருத வடிவம் பெறும்போது “புத்ர” என அமையும். பிராகிருதச் சொல்லான “தம்ம” என்பது சமற்கிருதத்தில் “தர்ம” என அமைவதை ஒப்பிடுக. சமண->ஸ்ரமண, சுத்த->சூத்ர ஆகிய சொற்களையும் இவ்வகையில் ஒப்பீடு செய்யலாம். விழுப்புரம் மாவட்டம், திருக்கோயிலூருக்கருகில் உள்ள ஜம்பை என்னும் ஊரில் அமைந்த குகைத்தளத்தில் தமிழி (தமிழ் பிராமி) எழுத்துகளால் வெட்டப்பட்ட கல்வெட்டு ஒன்று அதியமானைப் பற்றியதாகும். 1987-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை கல்வெட்டுப் பயிற்சி மாணவரான  கே.செல்வராஜ், தனது கள ஆய்வின்போது இக்கல்வெட்டு இருப்பதைக் கண்டறிந்தார். அப்போதைய துறை இயக்குநர் இரா. நாகசாமியால் இது படிக்கப்பட்டுத் தமிழிலும், ஆங்கிலத்திலும் படத்துடன் கட்டுரையாக நாளிதழ்களில் வெளியிடப்பட்டது. அண்மைக் காலத்தில் கண்டுபிடிக்கப்பட்ட மிகச் சிறப்பு வாய்ந்த அரிய கல்வெட்டு இது. வரலாற்றை வரையறை செய்யத் துணை நின்ற சிறப்புடைய கல்வெட்டு இந்த ஜம்பைக்கல்வெட்டாகும்.  



ஜம்பை-அதியமான் கல்வெட்டு
கல்வெட்டுப்பாடம்


சதியபுதோ அதியந் நெடுமாந் அஞ்சி ஈத்த பளி


   ஸதிய புதோ -  ஜம்பைக்கல்வெட்டில்
               
               




       




 ஸதிய புதோ -  கிர்னார்   கல்வெட்டில்    







அசோகனின் கல்வெட்டில் இடம்பெறும் சதியபுத என்பது மேற்படி ஜம்பைக் கல்வெட்டில் சதியபுத’ அடைமொழியோடு கூறப்பட்ட அதியமான் நெடுமான் அஞ்சியையே குறிக்கிறது என்னும் செய்தி நூறு ஆண்டுகளுக்குப் பின்னர் நிறுவப்பட்டுள்ளது. மூவேந்தர்களான சேர, சோழ, பாண்டியருக்கு இணையாக ஒரு குறுநில மன்னனான அதியனும் அசோகன் போன்றதொரு பேரரசனால் சுட்டப்பெறுகிறான் என்பது அதியனின் சிறப்பு நிலையைக் காட்டுகிறது.

கல்வெட்டில் வரும் பாண்ட என்னும் சொல்லை வில்சன்  (WILSON), பலய (பழய?) என்று படித்துள்ளார். ஆண்ட்டியோக்கஸ் (ANTIOCHUS) என்னும் பெயர் யோன என்கிற யவன ராஜா என்று குறிக்கிறார். கல்வெட்டிலும் “அந்தியகோ (நாம) யோன ராஜயே  என்னும் தொடர் உள்ளது.  இந்திய நாட்டில் இருந்த சேர, சோழ, பாண்டிய, அதிய அரசரை அசோகன் சுட்டுவது எதற்காக? தன்னுடைய ஆட்சிக்குட்பட்ட நாட்டுப்பரப்பு மட்டுமல்லாது தன் எல்லையில் தனியாட்சியில் இருக்கும் இந்தத் தமிழரசர் நாட்டிலும் மருத்துவம் சார்ந்த பணிகள் நடக்க வேண்டும் என்று அசோகன் விழைந்தான் என்று கொள்ளலாமா? அவ்வாறெனில், அசோகன் தமிழரசர்களோடு ஒரு பிணைப்பை ஏதோ ஒரு வகையில் கொண்டிருந்தான் எனக் கொள்ளலாம்.  அந்தத் தொடர்பு, அவன் அனுப்பிய தூது வழி ஏற்பட்டிருக்கக் கூடும். இத்தொடர்புக்கான சான்றுகள் எங்கேயும் கிடைத்துள்ளனவா? தெரியவில்லை.

ஆண்ட்டியோக்கஸ் (ANTIOCHUS) - கிரேக்க அரசன்

அசோகனின் கல்வெட்டில் ஆண்ட்டியோக்கஸ் (ANTIOCHUS) என்னும் கிரேக்க அரசனின் பெயர் இடம்பெறக் காரணம் என்ன? அசோகனின் மருத்துவம், மரம் நடுதல் ஆகிய பணிகள் எவ்வாறு கிரேக்க நாட்டுப்பகுதியோடு தொடர்புள்ளவை? இக்கேள்விகளுக்கு, கல்வெட்டில் இடம்பெறும் சில சொற்றொடர்களிலிருந்து விளக்கம் பெறுகிறோம். அசோகனின் ஆட்சிக்காலம் கி.மு. 268 – கி.மு. 232.  இக்காலத்தில் இருந்த கிரேக்க அரசன் இரண்டாம் ஆண்ட்டியோக்கஸ் (ANTIOCHUS) ஆவான். (கி.மு.261-கி.மு.246) இவனது ஆட்சிக்காலத்தில் கிரேக்க ஆட்சியின் ஒரு பகுதியாக கிரீக்கோ பாக்ட்ரியா’ (GRECO BACTRIA) என்னும் நாட்டுப்பகுதி விளங்கியது என அறிகிறோம். இப்பகுதியை  இரண்டாம் ஆண்ட்டியோக்கஸ் (ANTIOCHUS) சார்பில் அவனுடைய சாமந்தர்கள் ஆட்சி செய்தனர் என அறிகிறோம். இந்த சாமந்தரின் ஆளுகையில் இருந்த கிரீக்கோ பாக்ட்ரியா’ (GRECO BACTRIA) தற்போதைய வடக்கு ஆப்கானிஸ்தான் ஆகும். இது அசோகனின் ஆட்சிப்பகுதியின் வடமேற்குப் பகுதியில் அமைந்துள்ளதால் கல்வெட்டில் இந்தப் பகுதியையும் அசோகன் சேர்த்திருக்கிறான் எனலாம். அசோகன் ஆண்ட்டியோக்கஸ் (ANTIOCHUS) என்னும் கிரேக்க அரசனுடன் உறவு/தொடர்பு கொண்டிருந்தான் என்னும் கருத்து காணப்படுகிறது.  இதற்குச் சான்றாகக் கல்வெட்டில் ஆண்ட்டியோக்கஸ் (ANTIOCHUS) பெயரும் தொடர்ந்து இப்பெயரோடு சாமந்தர் அரசர் பற்றியும் குறிப்பிட்டுள்ளதைக் கொள்ளலாம்.




ஆண்ட்டியோக்கஸ் உருவம் பொறித்த நாணயம்


கல்வெட்டு வரிகள்:

அந்தியகோ (நாம) யோன ராஜயே வாபித ஸ  அந்தியக ஸ சாமினம் ராஜனோ சவத

இவ்வரிகளில் உள்ள ” அந்தியக ஸ ஸாமினம் ராஜ” என்னும் தொடர் சாமந்தரின் ஆட்சியைக் குறிக்கிறது எனலாம். ஷாபாஜ்கடி (SHAHBAZGARHI), கால்சி (KHALSI), ஜவுகதா (JAUGADA) ஆகிய இடங்களில் உள்ள கல்வெட்டுப் பொறிப்புகளில் ‘சாமந்த  என்னும் சொல்லே எழுதப்பட்டுள்ளமை உன்னுதற்குரியது.

தம்பபண்ணி

அடுத்து, ”தம்பபண்ணி”  என்னும் சொல் இலங்கையைக் குறிக்கிறது என்று கன்னிங்காம் (CUNNINGHAM) சுட்டுகிறார்.  தம்பபண்ணி அல்லது தாம்பபண்ணி என்னும் சொல் தாமிரவர்ணி என்னும் சொல்லின் பாலி வடிவமாகும். தாம்ரபர்ணி, தாம்பபண்ணி எனத் திரிந்தது. தாமிரம் அல்லது செம்புக் கனிமத்தின் நிறத்தைக் குறிக்கும் இச்சொல், பழங்கால இலங்கையில் அமைந்த முதல் அரசைக்குறிக்கும். ராஜரதா அரசு என்னும் பெயரும் இதற்கிருந்தது. இவ்வரசின் தலை நகரின் பெயரும் தாம்ரபர்ணியாகும். இவ்வரசின் அரசன் விஜயன் என்பானின் ஆட்சிக்காலம் கி.மு. 543 – கி.மு. 505 என்றும், ஓர் அரசன், ஓர் அரசு என்பதோடு இவ்வரசு முடிந்தது எனவும் ஒரு வரலாற்றுக் குறிப்புள்ளது.

கல்வெட்டில் காணப்பெறும் சில பிராகிருதச் சொற்கள்

விஜிதம் -   அசோகன் வெற்றி கொண்ட பரப்பைக் குறிப்பதாகக் கொள்ளலாம். பிரின்செப் CONQUERED PROVINCE எனப் பொருள்கொள்ள இச்சொல்லையே அடிப்படையாகக் கையாண்டிருக்கலாம். ஆனால், அவர் குறிப்பிடும் FAITHFUL என்னும் சொல்லுக்கு நேரான பிராகிருதச் சொல் எது எனத் தெரியவில்லை. அதுபோலவே அவர் ‘countries bordering on the dominions of Asoka  என்று தமிழகத்தைச் சுட்டுகின்ற பொருளுக்குரிய பிராகிருதச் சொல் கல்வெட்டில் எது எனவும் தெரியவில்லை.

சோடா -  சோழா என்பதன் வடமொழிச் சாயல். சிறப்பு ‘ழகரம் வடவர் ஒலியில் ‘ட  என ஒலிப்பதுண்டு. இச்சொல் அனைத்துக் கல்வெட்டுகளிலும் ‘சோடா’ என்றே பொறிக்கப்பட்டுள்ளது.

பாண்டா -   பாண்டா என்பது பாண்டியரைக் குறிப்பதாகப் பிரின்செப் எழுதுகிறார். இரண்டாம் பாறைக்கல்வெட்டின் பாடம் (வாசகம்), ஷாபாஜ்கடி (SHAHBAZGARHI), கால்சி (KHALSI), கிர்னார் (GIRNAR), தவுலி (DHAULI), ஜவுகதா (JAUGADA)  ஆகிய ஐந்து இடங்களிலும் ஒன்றுபோல் பொறிக்கப்பட்டுள்ளது; சிறு சிறு சொற்கள் மாறுபடுகின்றன என முன்னரே குறிப்பிட்டுள்ளோம். பாண்டா அல்லது பாண்ட என்னும் சொல் அவ்வகையானது. கிர்னார் கல்வெட்டில் ‘பாண்டா’ என்று எழுதப்பட்டிருப்பினும் தவுலியைத் தவிர்த்து மற்ற மூன்று இடங்களில் ‘பாண்டிய  என்றே எழுதப்பட்டுள்ளது. 

கேதலபுத -  சேர அரசரைக்குறிக்கும் இச்சொல் அனைத்துக் கல்வெட்டுகளிலும் ஒன்றுபோலவே பொறிக்கப்பட்டுள்ளது. கேரளபுத என்பதன் மருவிய வடிவமே கேதலபுத.

சதியபுதோ -  ஷாபாஜ்கடி (SHAHBAZGARHI) கல்வெட்டில் மட்டும் ஸதியபுத்ர  என எழுதப்பட்டுள்ளது. மற்றவற்றில் சதியபுதோ.

தம்பபண்ணி -  இச்சொல் ஷாபாஜ்கடி (SHAHBAZGARHI) கல்வெட்டில் தம்பபனி எனவும், கால்சி (KHALSI) கல்வெட்டில் தம்பபன்னி’ எனவும் எழுதப்பட்டுள்ளது. ஆனால், கிர்னார் (GIRNAR) கல்வெட்டில், தம்பபண்ணி என ‘டண்ணகரத்தில் எழுதப்பட்டுள்ளது. அது மட்டுமல்லாது இச்சொல்லின் ‘பண்ணி  என்னும் எழுத்துச் சேர்க்கை,  ப + அனுஸ்வாரம் + ணி என்னும் அமைப்பில் எழுதப்பட்டுள்ளது.  அனுஸ்வாரம் என்பது எழுத்தல்ல. வடமொழி எழுத்துகளில் ‘டகர வர்க்க எழுத்துகளில் இரண்டாவதான ‘ட  எழுத்தின் சிறிய வடிவமே அனுஸ்வாரமாகப் பயன்படுத்தப்படுகிறது. இந்த ‘டகரம் ஒரு பெரிய வடிவ வட்டம் என்றால், அனுஸ்வாரம் என்பது ஒரு சிறிய வடிவ வட்டமாகும். ஓர் எழுத்தின் முன்னொட்டாக அது எழுதப்பெறும்போது அவ்வெழுத்தின் இரட்டிப்பாகவோ, அல்லது மெல்லோசையாகவோ ஒலிக்கும். அவ்வாறே, ப + அனுஸ்வாரம் + ணி” என்பது “பண்ணி  என அமைந்தது. தமிழில் க-ங,  ச-ஞ, ட-ண த-ந ஆகிய இசைவெழுத்துகளைப் போல அனுஸ்வாரம் பயன்படுகிறது எனவும் கூறலாம். எடுத்துக்காட்டாக “ச + அனுஸ்வாரம் + கு   என்பது சங்கு  என அமையும்.

த்வெ -  இரண்டு என்னும் பொருளுடைய சொல்; இரண்டு வகையான மருத்துவம் பற்றிக் கல்வெட்டு குறிப்பிடுவது. மனிதர்க்கும், விலங்குகளுக்கும் ஆனது.

சிகீச்ச -   நாம் தற்போது தமிழிலும் பரவலாகப் பயன்படுத்தும் ‘சிகிச்சை’ என்னும் வடசொல்.

மநுஸ -  மனித(ன்)  என்பதன் மாற்று வடிவம்.  மனுசன் என்று நாட்டுப்புறங்களிலும் வழங்கும் எளிய சொல்.

பஸு -  பசு என நாம் வழங்கும் மற்றோர் எளிய சொல்.  ஆனால், விலங்கு என்னும் பொருளுடையது. முனைவர் பவானி அவர்கள் தம் கட்டுரையில் பஸீ  என எழுதியுள்ளார்.

ஒஸுதாநி -  ஔஷத என்னும் வடசொல்லின் பிராகிருத வடிவமாகலாம். முனைவர் பவானி அவர்கள் தம் கட்டுரையில் “ஔஸீதானி  என எழுதியுள்ளார். அசோகன் பிராமியில் ‘ஔ’ எழுத்து இல்லை எனத்தோன்றுகிறது. உறுதி செய்யவேண்டும்.

மூலாநி -  மூலம் – நிலத்தடியில் இருக்கும் வேர் அல்லது கிழங்கைக் குறிக்கும் சொல்.  இங்கே மருத்துவ வேரைக் குறிக்கிறது எனலாம்; பிரின்செப் அவர்களும் ‘ROOTS’ என்றே குறிப்பிடுகிறார்.

கூபா -   பிரின்செப் ‘WELL’ -  கிணறு எனக்குறிக்கிறார்.  கூவல் என்பது தமிழிலும் கிணற்றைக் குறிக்கும் ஒரு சொல் என்பது கருதுவதற்குரியது.  கொங்கு நாட்டில் காஞ்சிக்கோவில் என்றோர் ஊர் உள்ளது.  இப்பெயர் ‘காஞ்சிக்கூவல்  எனபதன் திரிபாகலாமோ என்னும் ஐயம் எழுகிறது.

யோன ராஜா -   யோன என்பது ‘யவன  என்பதன் இன்னொரு வடிவம். கிரேக்க, ரோம நாட்டாரை ‘யவனர்’ என்று பழங்காலத்தில் தமிழர் அழைத்தனர். சங்ககால  நூல்களில் ‘யவனர்’ பற்றிய குறிப்புகள் உள்ளன.


அசோகனின் சாரநாத் தூண் கல்வெட்டு- பார்வைக்காக


அசோகனின் லும்பினி கல்வெட்டு- பார்வைக்காக



அசோகன்  -  பிராமி 



அசோகனின் உருவப்படம்





துணையாக  நின்றவை:


     CORPUS INSCRIPTIONUM INDICARUM – Vol-I by A. CUNNINGHAM

      2   தமிழ் - பிராமி கல்வெட்டுகள் - தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை.
           முதல் பதிப்பு-2006.


      3   இணையம் - விக்கிபீடியா


துரை.சுந்தரம், கல்வெட்டு ஆராய்ச்சியாளர், கோவை.
அலைபேசி :  9444939156.

ஞாயிறு, 7 ஜூலை, 2019



பச்சையப்ப முதலியார் கல்வெட்டு

முன்னுரை

அண்மையில் திருச்சி சென்றிருந்தபோது கிடைத்த சிறிதளவு கால இடைவெளியில் திருச்சிக்கருகில் இருக்கும் திருவானைக்கா செல்ல இயன்றது. கோயிலைச் சற்றுப் பரபரப்புடன் சுற்றியபோது அதன் மேற்கு கோபுரத்தின் வாயிலில் பெண்மணி ஒருவர் கீரை விற்றுக்கொண்டிருந்ததைக் கண்டேன். அவர் அருகிலே இருந்த இரண்டு பொருள்கள் கருத்தைக் கவர்ந்தன. ஒன்று, நடுகல் சிற்பம். இன்னொன்று ஒரு கல்வெட்டு. அவற்றின் தோற்றத்தை மறைத்துக்கொண்டதாய்ச் சுற்றிலும் முருங்கைக் கீரையும் அகத்திக் கீரையும்.  அந்தப்பெண்மணியிடம் பேசிக் கீரைகளைச் சற்று அகற்றிய பின்னர் நடுகல்லின் தோற்றமும், கல்வெட்டின் முழு உருவமும் புலப்பட்டன. நடுகல் சிற்பம் ஒரு நவகண்டச் சிற்பம்.




திருவானைக்கா மேலக்கோபுரம் - ஒரு தோற்றம்


நவகண்டம்

கோயிலின் இறைவற்கு நேர்ந்து கொண்டதற்காகவோ அன்றி அரசனின் உயிர்க் காப்புக்காகவோ ஒரு வீரன் தன் உயிரை மாய்த்துக்கொள்ளத் தன் உடலை ஒன்பது பகுதிகளில் அரிந்து வைக்கும் ஒரு செயலைத் தொல்லியல் நவகண்டம் என்னும் சொல்லால் குறிக்கிறது. உடலின் ஒன்பது இடங்களில் அரிந்துகொள்வதைச் சிற்பமாக வடித்துக் காண்பிக்க இயலாததால், பொதுவாகத் தலையை அரிந்துகொள்ளும் செயலைக் காட்டும் வகையிலேயே நவகண்டச் சிற்பங்களை அமைத்தார்கள் எனலாம். நவகண்டம் கொடுக்கும் வீரன், உடம்பின் எட்டு இடங்களை வாளால் அரிந்துகொண்ட பின்னர் இறுதியாகத் தலையை அரிந்துகொள்கிறான் என்னும் கருத்து ஏற்புடையது. கண்டம் என்பது கழுத்தைக் குறிக்கும். கழுத்து, தலைக்கு ஆகுபெயராய் இங்கு அமைந்தது எனலாம். எனவே, நவகண்டச் சிற்பம், தலைப்பலி என்றும் அழைக்கப்பட்டது. பலி என்பது ஒன்றைப் படைப்பதைக் குறிப்பது. ஆனால், பரவலாகக் “காவு/சாவு  என்னும் பொருளில் வழங்குகிறது. கோயிலில் ஸ்ரீபலி என்னும் ஒரு சடங்கு நடைபெறுதலை இன்றும் காணலாம். கோயிலின் சுற்றாலையில் ஆங்காங்கே இறைவற்கு அமுது (உணவு) படைத்தலே ஸ்ரீபலி எனப்படுகிறது. (எதிர்பாராத் தீமைச்சூழலில் நிகழும் உயிரிழப்பைக் குறிக்க இன்றைய நாளிதழ்ச் செய்திகளில், பலி  என்னும் சொல் கையாளப்பெறுகிறது. இந்தச் சொல்லாட்சி பிழையாகவே தோன்றுகிறது. யாரும் பலி ஆவதில்லை. ‘பலிஎன்னும் சொல்லுக்குத் தலைமாறாகச் [பதிலாக] ‘சாவு  என எளிமையாக அனைவர்க்கும் தெரிந்த ஒரு சொல்லைப் பயன்படுத்தலாம். (இக்கருத்தை எழுதும் நாளிலேயே, “இந்து-தமிழ் திசைநாளிதழில், “பலியைத் தவிர்த்து நல்ல தமிழில் “உயிரிழப்புஎனச் செய்தியில் குறிப்பிட்டிருந்தமை வியப்போடு மகிழ்ச்சியைத் தந்தது.) நவகண்டம் அல்லது தலைப்பலியில் வீரன் தன்னுயிரையே கொடுக்கிறான் என்பதால் “பலி”.  



நாளிதழில் ‘பலி”யைத் தவிர்த்து நல்ல தமிழில் “உயிரிழப்பு”




திருவானைக்கா - நவகண்டச் சிற்பம்


பூட்கை

மனித உடம்பில் இது மோதிரம் அணிகிற இடம், இது பூ வைத்துக்கொள்கிற இடம், இது காப்புப் போட்டுக்கொள்கிற இடம் என்று அணிபவற்றுக்கும், அணிவதற்கு ஏற்பவும் பகுதிகள் இருப்பதுபோல் கொள்கைகளைப் பூணுவதற்கு இதயம் இடமாக இருக்கிறது. கழற்றாமல் பூணுவது என்ற பொருள் நயம் கிடைக்கும்படி கொள்கைக்குப் பூட்கை  (பூணுவது) என்று பழைய தமிழில் பெயர் வைத்திருக்கிறார்கள்.  என்று தமிழாசிரியரும் எழுத்தாளருமான  நா.பார்த்தசாரதி குறிப்பிடுகிறார்.  அதுபோல, ஒரு கொள்கையைப் பூண்ட வீரர்கள், தாம் பூண்ட கொள்கையைக் கடைப்பிடிக்கத் தவறிவிடும் நிகழ்வு ஏற்படுகையில் உயிரை மாய்த்துக்கொள்ளும் வீரச்செயலே பலி  ஆகிறது.  இவ்வகையாகப் பூட்கை உடைய வீரர் பெருமக்கள் கல்வெட்டுகளில் குறிக்கப்படுவதைக் காணுகிறோம்.

சோழர் படைகளில் கைக்கோளர் படை

சோழர் படைகளில், கைக்கோளர் படை என்னும் ஒரு படைப்பிரிவு இருந்துள்ளது. அரசர்க்கு அணுக்கமாக இருந்து அரசர், அரசு இரு பாலார்க்கும் நேரும் பேரிடரிலிருந்து காப்பதாகப் பூட்கை” (உறுதி) பூண்டு காக்கும் வீரர்கள் கொண்ட படை கைக்கோளர் படை என்னும் பெயரால் அழைக்கப்பெற்றது. பூட்கை என்னும் கொள்கையை இவ்வீரர்கள் கைக்கொண்டதால் இவர்கள் “கைக்கோளர்”  எனப் பெயர் பெற்றனர் என்பது பொருத்தமுடையதே. கொள்ளுவது கோள் ஆகின்றது.  சங்க இலக்கியங்களிலும், தொறுப்பூசல் நடுகல் கல்வெட்டுகளிலும் ஆகோள்”  என்னும் சொல் ஆளப்பெற்று வருவதை இங்கு நினைவு கூரலாம். இக் கைக்கோளப்படையினர்  தம் காவல் பணியில் இணையும்போது பூணுகின்ற ஓர் உறுதி மொழி பற்றித் திருவரங்கத்துக் கோயில் கல்வெட்டு ஒன்று கூறுகிறது. இக்கல்வெட்டு, கோயிலின் நான்காம் சுற்றாலையில் (பிராகாரம்) உடையவர் திருமுற்றத்துக்கு (சந்நிதி) எதிரில் அமைந்துள்ளது. இந்தியத் தொல்லியல் ஆய்வுத்துறையின் 1930-ஆம் ஆண்டுக்கான ஆண்டறிக்கை, இக்கல்வெட்டு கைக்கோளர் படை முதலி ஒருவன் பூட்கைக் கடப்பாடாக ஏற்கும் உறுதிமொழியைப் பதிவு செய்கிறது என்று குறிப்பிடுகிறது. கல்வெட்டுப் பாடம் கீழே:

கல்வெட்டுப் பாடம்;

1    ஸ்வஸ்திஸ்ரீ வீற்றிருந்தாந் சேமனாந அகளங்க நாடாழ்வா(ர்)
2    ற்கு திருவரங்கத்து கைக்கோள முதலிகளில் நாயநான அழகிய ம
3    ணவாள மாராயநேந் இவற்கு பிந்பு சாவாதே இருந்தேநாகில் எந்
4    மிணாட்டியைப் பறையற்குக் குடுத்து எங்களம்மைக்கு நானே
5    …………….
                                            -  A.R. 267- 1930 





அகளங்க நாடாள்வான் என்னும் ஒரு தலைவனுக்கு வேளைக்காரனாகப் பணிசெய்யும் அழகிய மணவாள  மாராயன் என்பான் உறுதிமொழி எடுத்துக் கொள்ளும் பான்மையைக் கல்வெட்டு கூறுகிறது. கைக்கொண்ட கடமையிலிருந்து வழுவினால் கடும் பழியை எதிர்கொள்வேனாக என்று தன்னையே கடுமையாகத் தண்டித்துக்கொள்ளும் கைக்கோளனை இங்கு காண்கிறோம். கல்வெட்டில், இவற்கு பிந்பு சாவாதே இருந்தேநாகில் என்னும் தொடரால், கைக்கோளன், அவனது தலைவனுக்கு ஊறு நேர்ந்து தலைவன் இறந்த பின்னர் தான் உயிர் வாழமாட்டான் என்னும் உட்பொருள் சுட்டப்படுவதை அறியலாம். ஒரு வேளை, சாவாது இருந்தால் மேற்சுட்டிய பழி தன்னைப் பற்றட்டும் என்பதாக அவன் கூற்று அமைகிறது.  (அரசர் அன்றி உயர்நிலைத் தலைவன் ஒருவனுக்கும் கைக்கோளர் படை இருந்தது என்று இக்கல்வெட்டால் அறிகிறோம்.)

சோழர் படைகளில் வேளைக்காரர் படை

சோழர் படைகளில் வேளைக்காரர் படை என்னும் ஒரு படைப்பிரிவும் இருந்துள்ளது.  இவர்களும் கைக்கோளப் படையினரைப்போன்றே உறுதி பூண்டவர ஆவர். வேளைக்காரர் படையைப் பற்றிப் “பொன்னியின் செல்வன்நூலில் கல்கி அவர்கள் வண்ணனை செய்திருப்பதை அந்நூலைப் படித்த யாரும் மறப்பதற்கில்லை. மேற்குறித்த கல்வெட்டை அடுத்து வரும் இன்னொரு கல்வெட்டில் வேளைக்காரப்படையைச் சேர்ந்த கைக்கோளன், தலைவன் இறந்துபடும் அதே வேளையில் உடன் சாவேனாகுக என்பதை அழுத்தமாகச் சொல்கிறான். தலைவன் இறக்கும் அதே வேளையில் உடன் சாவதால் இவ்வீரர்கள் “வேளைக்காரர்  என்னும் பெயர் பெறுகிறார்கள் என்பது பெறப்படும்.  இக்கல்வெட்டின் பாடம் வருமாறு:



கல்வெட்டின் பாடம்:

1 ஸ்வஸ்திஸ்ரீ வீற்றி[ரு]ந்தா[ந்] சேமநாந அகளங்க நாடாழ்வாற்கு திருவரங்
      2  கத்துக் கைக்கோளரி லரியாநாந கிடாரத்தரையனேந் இவற்கு உட
3    ந் [வே]ளையாகச் சாவக்கடவேநாகவும் இவற்கு பிந்பு சாவாதே இருந்
4  தேநாகில் எந் மிணாட்டியை பறையற்கு [கு]டுத்து எங்களம்மைக்கு நா
5  நே மிணாளநாவேந்

                                                                  -  A.R. 268- 1930 






பின்னாளில்,  இந்தக் கைக்கோள முதலிகள் படைத்தொழிலை இழந்து மாற்றுத்தொழில்களில் ஈடுபட்டனர் என்று சோழர் வரலாறு பற்றிப் படிக்கையில் அறிகிறோம். காலப்போக்கில், முதலிகள் என்னும் சிறப்புச் சொல் ஒரு குடிப்பிரிவைக் குறிப்பதாய் மாற்றம் பெறுகிறது.

திருவானைக்கா நவகண்டச் சிற்பம்

மேற்குறித்த விளக்கங்களுடன்,  திருவானைக்கா நவகண்டச் சிற்பத்தைப் பார்க்கையில், இச்சிற்பமும் ஒரு கைக்கோள வீரனாக இருக்கக்கூடும் என்று எண்ணத் தோன்றுகிறது.  அல்லது கோயிலுக்காகத் தலையை அரிந்துகொண்ட வீரனாகவும் இருக்கக்கூடும்.  இந்த நவகண்டச் சிற்பத்தில், வீரன் தன் இடது கையால் தலையை அழுத்திப்பிடித்துக்கொண்டு வலது கையால் வாளொன்றைக் கழுத்தின் பின்புறமாக வைத்து அரிந்துகொள்ளும் நிலையில் தோற்றமளிக்கிறான். உடல் அளவை ஒப்பிடுகையில் சற்றே பெரிய அளவில் முகப்பகுதி அமைந்துள்ளது எனலாம். தடித்த மூக்கும் வாயும். செவிகளும் நீண்டு தடித்துள்ளன. கழுத்தில், கைகளில், கால்களில் அணிகலன்கள் உள்ளன. ஆடை அமைப்பு முழங்காலுக்குச் சற்று மேல் பகுதியோடு நின்றுவிடுகிறது. இடைப்பகுதி ஆடையில் கச்சும் நீண்ட தொங்கலும் காணப்படுகின்றன. கச்சில் நன்கு செருகப்பட்ட குறுவாள் காணப்படுகிறது.  சிற்பம் தெளிவாக உள்ளது. சிற்பத்தின் மீது எண்ணெய் பூசி, நெற்றியில் சந்தனம்-குங்குமம்  பொட்டு வைத்துத் தலைப்பகுதியில் மலரும் இலையும் சூடி மக்கள் வழிபட்டுவருவதும் தெரிகிறது. ஒரு வகையில் வழிபடுதல் இல்லையேல், புறக்கணிப்பாலேயே இந்தத் தொல்லியல் எச்சம் காணாமல் போகும் வாய்ப்பு மிகுதி.


                                      நவகண்டச்சிற்பம்-மற்றோர் எடுத்துக்காட்டு
கீழப்பழுவூர் காளிகோயிலில் உள்ள நவகண்டச் சிற்பம்


பச்சையப்ப முதலியார் கல்வெட்டு

தொடக்கத்தில் கூறப்பட்ட இரண்டாவது பொருள் கல்வெட்டு. ஒரு பெரிய பலகைக் கல்லில் பொறிக்கப்பட்டது. பலகைக் கல்லின் மேற்புறம் ஆரம்போல வளைவாக வடிக்கப்பட்டுள்ளது.  கல்வெட்டின் பாடம், இக்கல்வெட்டு பச்சையப்ப முதலியார் பற்றிய கல்வெட்டு எனக்கூறுகிறது. அதன் பாடம் பின்வருமாறு :



பச்சையப்ப முதலியார் கல்வெட்டு


கல்வெட்டுப்பாடம் :

1   
2    ஜம்புகேசுவரம்
3    காஞ்சிபுரம் பச்சையப்ப முதலியா
4    ருடைய தர்மம் சகலருக்கும் பிரசி
5    த்தமாய்த் தெரியும் பொருட்டும் நிர
6    ந்தரமான ஞாபகத்தின் பொருட்டு
7    ம் செய்யும் விளம்பரமாவது இற
8    ந்துபோன புண்ணிய புருஷரா
9    கிய மேற்படி பச்சையப்ப முதலி
10  யாரவர்களாலே வைக்கப்பட்
11  டிருக்கும் லக்ஷம் வராகனுக்கு வ
12  ரப்பட்ட வட்டிப்பணத்தில் நி
13  ன்றும் ஜம்புகேசுவரத்தில் ஸ்ரீஅ
14  கிலாண்டேசுவரி அம்மன் சன்னி
15  தியில் அர்த்த சாமக்கட்டளைத்தர்
16  மமானது கனம் பொருந்திய சூப்ரீ
17  ம் கோர்ட்டுக் கவர்ன்மெண்டு அதி
18  காரிகளால் தர்ம விசாரணைக் கர்
19  த்தர்களாக நியமிக்கப்பட்டு சென்
20  னபட்டணத்திலிருக்கும் இந்துச
21  பையாரவர்களுடைய உத்தரவின்படி
22  சாலிவாகன சகாப்தம் 1764ம்
23  வரு.(ஷ)த்துக்குச் சரியான சுபகிருது வரு(ஷம்) முத
24  ல் வரு(ஷம்) 1க்கு 120 வராகன் செலவுள்ள
25  தாக நடந்துவருகின்றது மேற்படி மூலதன
26  ம் சூப்ரிம் கோர்ட்டு அதிகாரிகளுடைய
27  உத்தரவின்படி சென்னபட்டண
28  த்திலிருக்கும் ஜென[ர]ல் திரேசரியென்
29  னும் கவர்ன்மெண்டாருடைய பொ
30  க்கிஷத்தில் வைக்கப்பட்டிருக்கி
31  ன்றது மேற்படி தர்மம் கிரமமாக நடவாவி
32  ட்டால் தர்மத்தில் சிரத்தையுள்ளவர்
33  கள் மேற்படி சபையாரவர்களு
34  க்குத் தெரிவிக்க வேண்டுவது


கல்வெட்டுச் செய்திகள்

கல்வெட்டு பொறிக்கப்பட்ட ஆண்டு சாலிவாகன ஆண்டு 1764. இதற்குச் சமமான கிறித்தவ ஆண்டு கி.பி. 1842-ஆம் ஆண்டாகும். கல்வெட்டில் குறிக்கப்பெற்ற தமிழ் வியாழ வட்ட ஆண்டான சுபகிருது ஆண்டு 1842 ஏப்ரல் மாதத்தில் பிறக்கிறது. எனவே, கல்வெட்டில் குறிக்கப்படுகின்ற காலக்கணக்கு மிகவும் சரியாக அமைகிறது.  திருவானைக்கா அகிலாண்டேசுவரி அம்மனின் அர்த்தசாமப் பூசை வழிபாட்டுக்கென பச்சையப்ப முதலியார் ஒதுக்கியுள்ள நூறாயிரம் வராகன் முதலீட்டிலிருந்து பெறுகின்ற வட்டிப்பணம் 120  வராகன் செலவளிக்கப்படும் வகையில் நடைபெற்றுவருகின்ற இந்தத் தன்மம் சரியாக நடக்கவில்லை எனில், பச்சையப்ப முதலியார் அறக்கட்டளை சார்பாக இயங்கிவரும் இந்து சபையாரிடத்தில் தெரிவிக்கவேண்டும் என்று கல்வெட்டு கூறுகிறது. பச்சையப்ப முதலியார் ஒதுக்கியுள்ள நூறாயிரம் வராகன் பணம் முதலீடாகச் சென்னையிலிருக்கும் “GENERAL TREASURY”  என்னும் அரசுக் கருவூலத்தில் வைப்புக் கணக்கில் உள்ளது. “GENERAL TREASURY”  என்னும் ஆங்கிலச் சொல் தமிழில்   ஜெனரல் திரேசரி  என்று குறிப்பிடப்பட்டுள்ளமை அக்காலத்து மொழிப் பயன்பாட்டினைக் காட்டுகிறது.

வராகன்

தமிழகம் விஜயநகரர் ஆட்சியின் கீழ் வந்த பின்னர், திருமலைதேவராயர் காலத்தில்  (கி.பி. 1570-ஆம் ஆண்டளவில்) வெளியிடப்பெற்ற பொன் நாணயமே வராகன். வராகம், விஜயநகரரின் ஆட்சி முத்திரையாகும். இந்நாணயம் வராக உருவம் பொறித்த காசு ஆகும். இது முப்பத்திரண்டு குன்றிமணி எடையுள்ளதாகவும், மூன்றரை ரூபாய் மதிப்புள்ளதாகவும் குறிக்கப்படுகிறது. பச்சையப்ப முதலியார் அறக்கட்டளை சார்பில் நூறாயிரம்  வராகன் பணம் அரசுக் கருவூலத்தில் மூலதனமாக வைக்கப்பட்டு அதனின்றும் பெறப்படுகின்ற வட்டிப் பணம், கோயில்களுக்கும், கல்விச்சாலைகளுக்கும் செலவளிக்கப்பட்டது.




பகோடா என்னும் வராகன் நாணயம்


பச்சையப்ப முதலியார்- 1754-1794

பச்சையப்ப முதலியார் பற்றி ஓரளவு அனைவர்க்கும் தெரியும். எழைக்குடும்பத்தில் பிறந்து, சென்னை வணிகச் செல்வரான நாராயண பிள்ளையின் அரவணைப்பில் வளர்ந்து துபாஷியாக உயர்ந்தவர். துபாஷ்” என்னும் சொல் “த்3வி பா4ஷ் என்னும் வடசொல்லின் திரிபு. இரண்டு மொழிகள்  என்னும் பொருளுடையது. ஆங்கிலேய வணிகருக்கும் தமிழ் நாட்டு வணிகருக்கும் பாலமாக ஆங்கிலம், தமிழ் ஆகிய இரு மொழிகளும் தெரிந்த ஒருவர் செயல்பட்டமையின் அவர் “துபாஷி” (இரு மொழிகள் அறிந்தவர்) என அழைக்கப்பட்டார். நார்ட்டன் நிகோலஸ் என்னும் வணிகருக்குப் பச்சையப்ப முதலியார்தாம் “துபாஷி”.  காலப்போக்கில், வணிகம் பற்றிய கூர்ந்த அறிவுகொண்ட பச்சையப்ப முதலியார் வணிகத் தரகராகச் செயல்பட்டுப் பெரும் செல்வராகத் திகழ்ந்தார். கோயில் சார்ந்த கொடைகளுக்கு நானூற்றைம்பது ஆயிரம் ரூபாயும், இந்துக்குழந்தைகளும், இளைஞரும் ஆங்கிலக் கல்வி பெற எழுநூறு ஆயிரம் ரூபாயும் வழங்கி வள்ளல் எனப்பெயர் பெற்றார்.  ’உயில்” எழுதிய முதல் தமிழர் அவரே என்று கருதப்படுகிறார். அவரைபற்றிய விரிவான செய்திகளை உள்ளடக்கி அவரது அறக்கட்டளையான “PACHAIYAPPAS TRUST BOARD”  என்னும் நிறுவனம் அவர்களது வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளது.  அதன் சுட்டியாவது : http://pachaiyappastrustboard.org/index.php/founder/pachaiyappa-mudaliar   




பச்சையப்ப முதலியாரின் உருவச் சிலை - சிதம்பரம் கோயில்




திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் பச்சையப்ப முதலியார் கல்வெட்டு

தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை, 1970-ஆம் ஆண்டு, முனைவர் இரா.நாகசாமி அவர்களைப் பதிப்பாசிரியராகக் கொண்டு வெளியிட்ட ”சென்னை மாநகர்க் கல்வெட்டுகள்  நூலில் (இரண்டாம் பதிப்பு 2009), திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் ஒரு தனிக்கல்லில் பொறிக்கப்பட்ட கல்வெட்டு பதிவாகியுள்ளது. அக்கல்வெட்டின் பாடம், திருவானைக்கா கல்வெட்டின் பாடத்தையே கொண்டுள்ளது. கொடைச் செய்தி மட்டிலும் வேறுபடுகிறது. நூலில் காணப்படும் கல்வெட்டின் படங்கள் கீழே காண்க.


                         திருவல்லிக்கேணி கோயிலில் பச்சையப்ப முதலியார் 
                                                                                     கல்வெட்டு 



இந்தக் கல்வெட்டில், 120 வராகன் வட்டிப்பணம், பார்த்தசாரதி கோயிலுக்கு வருகை தரும் வெளியூர்ப் பயணிகளுக்கு உணவு வழங்குவதற்கும், நூறாயிரம் வராகன் பணத்துக்கு மேல் இருக்கும் பணத்தின் வாயிலாகக் கிடைக்கும் வட்டிப்பணம், இந்துப் பிள்ளைகளுக்கு இந்நாட்டுச் சாத்திரங்களையும் ஆங்கில மொழியையும் கற்பிப்பதற்குக் கொடையாக அளிக்கப்படுகிறது என்னும் செய்தி கூறப்படுகிறது.  ஆங்கிலம் கற்பிக்கும் ஆசிரியர் ஐந்து வராகன் ஊதியம் பெறுவதும், மற்ற கல்வியைக் கற்பிக்கும் (தமிழ்) ஆசிரியர் பத்து வராகன் ஊதியம் பெறுவதும் குறிப்பிடத்தக்கவை.

ஆவுடையார் கோயில் கல்வெட்டு

ஆவுடையார் கோயிலிலும் பச்சையப்ப முதலியாரின் கல்வெட்டு ஒன்று உள்ளது. இணையத்தில் கிடைக்கப்பெற்ற அக்கல்வெட்டின் பாடமும் மேற்கண்ட கல்வெட்டுகளின் பாடத்தையே கொண்டுள்ளது. ஆவுடையார் கோயிலின் மாலைச் சந்தி வழிபாட்டுக்காக இக்கொடை அளிக்கப்பட்டுள்ளது. கொடைப்பணம் அதே 120 வராகன்.

ஆவுடையார் கோயில்-கல்வெட்டுப் பாடம்

இறந்துபோன புண்ணிய புருஷராகிய மேற்படி பச்சையப்ப முதலியார் அவர்களால் வைக்கப்பட்டிருக்கும் லட்சம் வராகனுக்கு வரப்பட்ட வட்டிப் பணத்தினின்னும் ஆவுடையார்கோயிலில் சாயரக்ஷ கட்டளைத் தர்மமானது கனம் பொருந்திய சுப்ரீம் கோர்ட் கவர்ன்மெண்டு அதிகாரிகளால் தர்ம விசாரணைக் கர்த்தர்களாக நியமிக்கப்பட்டுச் சென்னப்பட்டினத்திலிருக்கும் இந்து சபையாரவர்களுடைய உத்திரவின்படி சாலிவாகன சகாப்தம் 1764-ஆம் வருஷத்து சரியான சுபகிருது முதல் வருஷம் 1க்கு 120 வராகன் செலவுள்ளதாக நடந்து வருகின்றது. மேற்படி மூலதனம் சுப்ரீம் கோர்ட்டு அதிகாரிகளுடைய உத்திரவின்படி சென்னப் பட்டணத்திலிருக்கும் ஜெனரல் திரேசரி (General Treasury) என்னும் கவர்மெண்டாருடைய பொக்கிஷத்தில் வைக்கப்பட்டிருக்கின்றது. மேற்படி தர்மம் கிரமமாக நடவாவிட்டால் தர்மத்தில் சிரத்தையுள்ளவர் மேற்படி சபையாரவர்களுக்குத் தெரியப்படுத்த வேண்டியது. 
  


கல்விக்கொடையாளர்

நன்றி : இணைய தளங்கள்.  பச்சையப்பர்  தொடர்பான படங்கள், வராகன் படம் , ஆவுடையார் கோயில் கல்வெட்டுச் செய்தி ஆகியவற்றுக்கு.
                 



-----------------------------------------------------------------------------------------------
துரை.சுந்தரம், கல்வெட்டு ஆராய்ச்சியாளர், கோவை.
அலைபேசி :  9444939156.