மொத்தப் பக்கக்காட்சிகள்

வியாழன், 23 ஆகஸ்ட், 2018




                 இராசேந்திர சோழனுக்கு உணவு சமைத்த பெண்மணி யார்?



குமரி நகரில் ஒரு கோயில்
கோயில் கல்வெட்டுகளிலிருந்து பல்வேறு செய்திகளை அறிந்துகொள்கிறோம். அரசன், அவனுடைய போர் வெற்றிகள், கோயிலுக்கு வழங்கப்பட்ட கொடைகள் எனப் பல்வகையான செய்திகள்.  ஆனால், குமரி மாவட்டத்துக் குமரியில் இருக்கும் குகநாதசுவாமி கோயிலில் உள்ள ஒரு கல்வெட்டு முற்றிலும் மாறுபட்டு நிற்கிறது. கங்கையும் கடாரமும் கொண்ட பேரரசன் முதலாம் இராசேந்திர சோழன், யார் சமைத்த உணவை உண்டான் என்னும் ஒரு சுவையான செய்தியை இக்கல்வெட்டு கூறுகிறது. குமரியில் உள்ள குகநாதசுவாமி கோயிலின் அர்த்தமண்டபத்தில் தெற்கு அதிட்டானத்தில் இக்கல்வெட்டு பொறிக்கப்பட்டுள்ளது.






T.A. கோபிநாத ராவும் குகநாதசுவாமி கோயிலும்
திருவாங்கூர் தொல்லியல் வரிசை நூல் தொகுதிகளில் எட்டாம் தொகுதியில், தொல்லியல் அறிஞர் T.A. கோபிநாத ராவ் அவர்கள் சோழர் கல்வெட்டுகள் ஆறு என்னும் தலைப்பில் தொகுத்துள்ள கல்வெட்டுகளில் மேற்படிக் கல்வெட்டும் ஒன்று. குமரியில் நாம் அறிந்த கோயில் குமரி அன்னையின் கோயில் மட்டுமே. 1911-ஆம் ஆண்டு பதிப்பிக்கப்பட்ட இந்த நூல் தொகுதியில் ராவ் அவர்கள் குறிப்பிடும்போது, ”குகநாதசுவாமி கோயில், தற்போது கன்னியாகுமரியின் பிராமணக் கிராமத்திலிருந்து அரைப் பர்லாங்கு தொலைவில் அமைந்துள்ளது. கோயில் மிகவும் சிதிலமடைந்து காணப்படுகிறது. கோயிலின் சுற்றுப்பகுதி முழுதும் வௌவால்களும், பாம்புகளும் கொண்ட ஒரு குகை போலத் தோற்றமளிப்பதால் இக்கோயிலைக் குகநாதசுவாமி கோயில் என அழைக்கிறார்கள் போலும்”  எனக் குறிப்பிடுவது கருதத்தக்கது. அவர் காலத்தில், தொல்லியல் சார்ந்த பணிச் சூழல் எவ்வாறு இருந்தது என்றும், எல்லாவகையான இடர்ப்பாடுகளையும் சந்தித்துக் கொண்டே பணியாற்றியவர்களின் கடமை உணர்வையும் நாம் ஒருவாறு உணர இயலும். 1911-ஆம் ஆண்டில் வௌவால்களும் பாம்புகளும் சூழ்ந்து சிதைவுற்ற நிலையில் இருந்த அக்கோயிலின் இன்றைய நிலை என்ன என்று அறிய இணையத்தில் தேடியபோது, கோயில் புதுப்பொலிவுடன் மீளக் கட்டப்பெற்றுள்ளதைக் காண்கிறோம்.  தமிழ் நாட்டுச் சுற்றுலாத்துறையின் தளத்தில், இக்கோயிலை முதலாம் இராசராசன் கட்டுவித்தான் என்னும் குறிப்பு உள்ளது. இந்தத் தளத்தில் உள்ள கோயிலின் ஒளிப்படங்களைப் பதிவிறக்கம் செய்ய இயலவில்லை. சில முக நூல் பதிவுகளில் உள்ள படங்களும் அவ்வாறே. படங்களைக் காணும்போது, முக நூல் பதிவுகளில் சிலர் குறிப்பிட்டவாறு கோயில், வட இந்தியப் பாணியில் அமைந்த தோற்றத்தைத் தருகிறது. ஓர் ஆசிரமத்தைப்போலத் தோற்றமளிப்பதாகவும் ஒருவர் குறிக்கிறார். கல்வெட்டுகளின் நிலை என்ன என்பது தெரியவில்லை.





கல்வெட்டுப் பாடம்
      குறிப்பு:  சிவப்பு வண்ண எழுத்துகள் கிரந்த எழுத்துகள். 

1   ஸ்வஸ்தி ஸ்ரீ பூர்வ்வதேசமும் ங்கையுங் கடாரமுங்கொண்டருளின  கோ
2     ப்பரகேசரி பன்மராயின உடையார் ஸ்ரீ ராஜேந்திர சோழ தேவர்க்
3     கு யாண்டு இருபத்து நாலாவது ராராப்பாண்டி நாட்டு உத்த
4     ம சோழவளநாட்டுப் புறத்தாய நாட்டு குமரி ராரா [ஈ] ச்வர
5  ம் உடையார்க்கு உடையார் ஸ்ரீ ராஜேந்திர சோழதேவர்க்கு திருவமுது அடும்
6    பெண்டாட்டி அருமொழிதேவ வளநாட்டுப் புலியூர் நா [ட்] டுப் பாலையூர் தி
7     ட்டை சோழகுலவல்லி வைச்ச திருநூந்தாவிளக்கு ஒன்றுக்கு வைச்ச சா
8    வா மூவாப் பேராடு ஐம்பது இவ்வாடு ஐம்பதுங்கொண்டு இத்தேவர்

கல்வெட்டுச் செய்திகள்
முதலாம் இராசேந்திரன் பரகேசரிப் பட்டம் சூடியவன். கல்வெட்டில் அவனது நீண்ட மெய்க்கீர்த்திப் பகுதி இல்லை. கீழ்த்திசை நாட்டையும் கங்கையையும் கடாரத்தையும் வென்றவன் என்று மட்டுமே சுருங்கச் சொல்கிறது. கல்வெட்டின் காலம் அவனுடைய இருபத்து நாலாவது ஆட்சியாண்டான கி.பி. 1036-ஆம் ஆண்டு. குமரிப் பகுதி ராஜராஜப்பாண்டி நாட்டில் (மண்டலப்பிரிவில்) உத்தம சோழ வளநாட்டில் புறத்தாய நாட்டைச் சேர்ந்ததாக இருந்தது. மேற்படி குகநாதசுவாமி கோயில் 11-ஆம் நூற்றாண்டில் ராஜராஜ ஈச்வரம் என்னும் பெயர் பெற்றிருந்தது. இக்கோயிலில் நுந்தாவிளக்கு எரிப்பதற்காக ஐம்பது ஆடுகளைக் கொடையாக அளித்த பெண்மணி இங்கு குறிப்பிடத்தக்கவள். அவளுடைய பெயர் சோழகுலவல்லி என்பதாகும். அவள் சோழநாட்டு அருமொழிதேவ வளநாட்டைச் சேர்ந்த புலியூர் நாட்டுப் பாலையூர் திட்டையைச் சேர்ந்தவள். தற்போது தஞ்சைக்கருகில் திட்டை என்னும் ஊர் உள்ளது. இருப்பினும், “இடைக்காலத் தமிழ்நாட்டில் நாடுகளும் ஊர்களும்” என்னும் நூலில், புலியூர் நாடு திருவாரூர்ப் பகுதியில் இருந்ததாகக் குறிப்புள்ளது. எனவே, சோழகுலவல்லி என்னும் இந்தப் பணிப்பெண் திருவாரூர்ப் பகுதியைச் சேர்ந்தவள் எனலாம். 

இந்தச் சோழகுலவல்லி என்பவள், இராசேந்திர சோழனின் பணிப்பெண்களுள் ஒருத்தி. பணிப்பெண்களில் சற்றுச் சிறப்புப் பெற்ற பெண்மணி. இராசேந்திர சோழனுக்கே உணவு சமைக்கும் பணியில் இருந்தவள்.  இதை, ” உடையார் ஸ்ரீ ராஜேந்திர சோழதேவர்க்கு திருவமுது அடும் பெண்டாட்டி”  என்று கல்வெட்டு குறிப்பிடுகிறது. “அடுதல்”/”அட்டுதல்” என்பது சமைத்தலைக் குறிக்கும் சொல்லாகும். உணவு சமைக்கும் இடம் “அட்டில் பள்ளி” என்றும், ‘அடுக்களம்” என்றும் “மடைப்பள்ளி” என்றும் பலவாறாகக் கல்வெட்டுகளில் குறிப்பிடப்படும். தற்போதைய வழக்கில் நாம் அடுக்களை என்று குறிக்கிறோம். ”பெண்டாட்டி”  என்னும் சொல் சோழர் காலத்தில், பணிப்பெண்களைக் குறித்தது. சமையற்கூடங்களில் பணி செய்யும் பெண்களைக் கல்வெட்டுகள் “மடைப்பள்ளிப் பெண்டாட்டி” என்று குறிப்பிடும். சோழர் காலக் கல்வெட்டுகளில் “வேளத்துப் பெண்டாட்டி” என்னும் சொற்றொடரும் காணப்படுகிறது. இது அரண்மனைப் பணிப்பெண்டிரைக் குறிப்பதாகலாம். வேளம் என்பது (அரண்மனையில்?) பணிப்பெண்களின் இருப்பிடத்தைக் குறிக்கும். (கட்டுரை ஆசிரியர் கருத்து :  வேளம் என்பது வேளகம் என்பதன் திரிபாகலாம். திருவாங்கூர் தொல்லியல் வரிசை நூலின் நான்காம் தொகுதியில் பதிப்பாசிரியர், கோட்டயம் ஊரின் பழம்பெயர் கோட்டையகம் என்று குறிக்கிறார். இக்கருத்தை அடியொற்றிப் பார்க்கையில், வேளகம் என்பது வேளம் எனத் திரிந்திருக்கக் கூடும் எனக் கருதத் தோன்றுகிறது).  



துணை நின்ற நூல்கள்:

1   TRAVANCORE ARCHAEOLOGICAL SERIES.
2  இடைக்காலத் தமிழ்நாட்டில் நாடுகளும் ஊர்களும்.
    (கி.பி. 800 - 1300)
    -  எ.சுப்பராயலு, கௌ. முத்துசங்கர், பா. பாலமுருகன்





துரை.சுந்தரம், கல்வெட்டு ஆராய்ச்சியாளர், கோவை.
அலைபேசி : 9444939156.

புதன், 15 ஆகஸ்ட், 2018


                                                       தக்கோலப்போர்


போர்ப்பின்னணி
முதலாம் பராந்தகன், பிற்காலச் சோழப் பேரரசை நிறுவிய விசயாலயனின் பேரன்; முதலாம் ஆதித்தனின் மகன். பராந்தகனின் ஆட்சிக்காலம் கி.பி. 907-955. ஆதித்தனையடுத்துச் சோழப்பேரரசின் எல்லையை விரிவாக்கிய பராந்தகனுக்குப் பகைச் சூழல்கள் மிகுந்தன. இராட்டிரகூடர்கள், கீழைச் சாளுக்கியர்கள், வாணர், வைதும்பர் எனப் பல்வேறு பகையரசர்கள்.  இந்நிலையில், மேலைக்கங்கரும் ஆநிரை கவர்தலில் ஈடுபட்டுத் தொல்லை தரத்தொடங்கினர். வரலாற்றுப் பேராசிரியர் கே.கே.பிள்ளையவர்கள் தம்முடைய “தமிழக வரலாறு - மக்களும் பண்பாடும் என்னும் நூலில் கீழ்வருமாறு எழுதுகிறார்:

“வட ஆர்க்காடு மாவட்டத்தில் நிகழ்ந்த கங்க மன்னனின் பசுக் கவரும் படையெடுப்பு ஒன்றின்போது சோழ மறவன் ஒருவன் அவனை எதிர்த்துப் போராடிப் போர்க்களத்தில் புண்பட்டிருந்தான். அவனுடைய தொண்டின் சிறப்பையும், வீரத்தையும் பாராட்டிய பராந்தகன் அவனுக்கு வீரக்கல் ஒன்று எடுப்பித்தான். சோழ நாட்டின்மேல் சுழன்று, புரண்டு வீசத் தொடங்கிய   பகைப்புயலைப் பராந்தகன் நன்கு அறிந்துகொண்டு முன்னராகவே தற்பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளலானான். திருமுனைப்பாடி நாட்டில் திருநாவலூரில் அவன் தன் மூத்த மகன் இராசாதித்தனை ஒரு பெரும் படையின் தலைமையில் நிலைப்படுத்தியிருந்தான்.  அப்படையில் யானையணிகளும், குதிரையணிகளும் அடங்கியிருந்தன. பகைப்படைகள்  இராசாதித்தனைத் தக்கோலம் என்னும் இடத்தில் எதிர்த்து நின்றன.  அங்குப் பெரும் போர்  விளைந்தது (கி.பி. 949).”

தக்கோலம்
தக்கோலம், அரக்கோணத்துக்கருகில் அமைந்துள்ள ஓர் ஊர். இவ்வூருக்குத் திருவூறல் என்னும் பழம்பெயர் ஒன்றுண்டு. இங்குள்ள கங்காதீசுவரர் கோயிலில் உள்ள நந்திச் சிற்பத்தின் வாய்ப்பகுதியினின்றும் எப்போதும் நீர் வடிந்துகொண்டிருப்பதன் காரணமாக இவ்வூருக்குத் திருவூறல் என்னும் பெயர் அமைந்தது என்பர்.

போரும் இராசாதித்தனும்
தக்கோலத்துப் போர் மிகக் கடுமையாக நிகழ்ந்தது என்று குறிப்பிடப்படுகிறது. இராட்டிரகூட மன்னன் மூன்றாம் கிருட்டிணன் (இவன் கன்னரதேவன் என்றும் அழைக்கப்பெறுகிறான்), கங்க அரசன் இரண்டாம் பூதுகன், வைதும்ப அரசன் ஆகியோர் ஒன்றாய் இணைந்து இராசாதித்தனை எதிர்க்கின்றனர். இருபுறமும் நூற்றுக்கணக்கான யானைகளும், ஆயிரக் கணக்கான குதிரைகளும் போரில் ஈடுபடுத்தப்பட்டன.  போர் மும்முரமாக நடைபெற்றுக்கொண்டிருந்தபோது, யானை மேல் அமர்ந்து போரிட்டுக்கொண்டிருந்த இராசாதித்தன் கொல்லப்படுகிறான். இந்நிகழ்ச்சியை, பேராசிரியர் கே.கே. பிள்ளை,  இராஷ்டிரகூடப் படைத்தலைவர்களுள் பூதுகன் என்பான் ஒருவன் இராசாதித்தன் அமர்ந்திருந்த யானையின்மேல் துள்ளியேறி இராசாதித்தனைக் கத்தியால் குத்திக்கொன்றான். போரின் முடிவில் வெற்றிவாகை இராஷ்டிரகூடனுக்குக் கிடைத்தது. அவனும், தன் படைத்தலைவனான பூதுகன் தனக்காற்றிய அரிய தொண்டுக்காகவும் அவன் துணிவைப் பாராட்டியும் அவனுக்கு வனவாசி - 12000, வெள்வோணம் – 300 ஆகிய நாடுகளை வழங்கித் தன் நன்றியைத் தெரிவித்துக்கொண்டான்   என்று குறிப்பிடுகிறார்.

பூதுகன் யார்?
இந்தப் பூதுகன் யார் என்று சற்றுத் தேடுதல் பணி மேற்கொண்டதில், கூடுதலாகச் சில செய்திகள் தெரியவந்தன. விக்கிப்பீடியா இவனை மேலைக் கங்க அரசன் இரண்டாம் பூதுகன் என்று குறிப்பிடுகிறது. இவன் இராட்டிரகூட மன்னன் அமோகவர்சனின் உதவியோடு, அரசபதவியிலிருந்த தன் அண்ணன் மூன்றாம் இராச்சமல்லனை ஆட்சியிலிருந்து இறக்கிவிட்டு ஆட்சியைக் கைப்பற்றிகொண்டான் என்றும், தக்கோலப் போரில் இராட்டிரகூடனுக்குப் படை உதவி அளித்துப் போரில் நஞ்சு தோய்ந்த அம்புகொண்டு இராசாதித்தனைக் கொன்றான் என்றும்  விக்கிப்பீடியா குறிப்பிடுகிறது. இராசாதித்தன் அமர்ந்து போரிட்ட யானை மீதே பாய்ந்து ஏறிக் கத்திகொண்டு அவனைக்கொன்றான் என்னும் பேராசிரியர் கே.கே. பிள்ளையவர்களின் கூற்றுக்கு இது முரணாக அமைகிறது.

கருநாடகக் கன்னடக்கல்வெட்டு
கருநாடகக் கல்வெட்டுகளின் தொகுதிகள் (தமிழ்க் கல்வெட்டுகள் அடங்கியவை)  சிலவற்றை அவ்வப்போது படிப்பதுண்டு. அவற்றில் ஏழாம் தொகுதியில் (EPIGRAPHIA CARNATICA-Vol 7), மண்டியா மாவட்டத்து மத்தூர் வட்டத்தில் இருக்கும் ஆதக்கூர் என்னும் ஊரில் உள்ள ஒரு கன்னடக் கல்வெட்டு, மேற்குறித்த  தக்கோலப் போரினைப்பற்றிக் கூறுகிறது. இக்கல்வெட்டு, ஆதக்கூரில் இருக்கும் சல்லேசுவரர் கோவிலின் முன்புறம் உள்ள ஒரு தனிக்கல்லில் பொறிக்கப்பட்டுள்ளது. கல்வெட்டின் காலம் சக ஆண்டு 872. இந்தச் சக ஆண்டுக்கிசைந்த ஆங்கில ஆண்டு கி.பி. 949-950 –ஆகும். 
தற்போது, இக்கல்வெட்டு பெங்களூர் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது.

கல்வெட்டுச் செய்தி
இரண்டாம் பூதுகன் என்பான், இராச்சமல்லனைக் கொன்று கங்க நாடு - 96000 என்னும் பகுதியை ஆண்ட கங்க அரசன் ஆவான். இவன், இராட்டிரகூட மன்னன் கன்னரதேவன் சோழர் மீது போர் தொடுத்தபோது, இராசாதித்தன் அமர்ந்து போரிட்ட யானையின் அம்பாரியிலேயே  ஏறி இராசாதித்தனுடன் போரிட்டுக் கொன்றான் என்று இக்கல்வெட்டு கூறுகிறது. கன்னரதேவனைப் பற்றிக் குறிப்பிடும் கல்வெட்டு, அவனை இராட்டிரகூட அரசன் கன்னரதேவன் என்றும், கச்சக கிருஷ்ணராஜா என்னும் பெயரும் அவனுக்கிருந்தது என்றும், அவன் தக்கோலப்போரில் மூவடிச் சோழனை வென்று வெற்றி வலம் வந்தவன் என்றும் குறிப்பிடுகிறது. பூதுகனைப் பற்றிக் கூறும்போது, கல்வெட்டு, கங்கன் பெர்மானடி பூதுகன்  என்று குறிப்பிடுகிறது. இராசாதித்தனைக் கொலை செய்ததைப் பாராட்டிக் கன்னரதேவன், பூதுகனுக்கு பனவாசி-12000 (BANAVASI), பெ-ளவொல-300 (BELVOLA) , கிசுக்காடு-70 (KISUKAADU), பாகிநாடு-70 (BAGI-NAD) ஆகிய நாட்டுப்பகுதிகளைக் கொடையாக அளித்தான். பூதுகன் நேரடியாக இராசாதித்தனை எதிர்த்துப் போரிடும்போது அவன் முன்பு நின்று வீரத்துடன் போரிட்ட பூதுகனின் அணுக்கப் பணியாளனாகிய (அங்ககாரன்) மணலெரா என்பவனை மெச்சி அவனுக்குப் (மணலெராவுக்கு) பூதுகன் ஆதக்கூர்-12 , பெ-ளவொல பகுதியில் இருக்கும் காடியூர் ஆகிய பகுதிகளைக் கொடையாக அளித்தான்.  தமிழகத்தில் இருக்கும் கன்னரதேவனின் கல்வெட்டுகள் அவனைக் “கச்சியும் தஞ்சையும் கொண்ட  என்னும் அடைமொழித் தொடரால் குறிக்கின்றன. ஆனால், ஆதக்கூர் கல்வெட்டு, “கச்சக  என்று குறிப்பதால், கி.பி.949-50-இல் தக்கோலத்தில் சோழரை முறியடிக்கும் வரை, அவன் கச்சி என்னும் காஞ்சியை மட்டும் வென்றான் எனக்கொள்ளுதல் தகும். எனவே, கன்னர தேவன் பற்றிய தமிழகக் கல்வெட்டுகள் கி.பி.949-50-ஆம் ஆண்டுக்குப் பின்னரே “தஞ்சையும்கொண்டஎன்பதைச் சேர்த்து எழுதப்பட்டிருக்கவேண்டும். கன்னடச் சொல் “கச்சகஎன்பது “காஞ்சிகொண்ட  என்பதன் திரிபு (குறுகிய வடிவம்) எனக் கல்வெட்டுத்தொகுதியின் பதிப்பாசிரியர் கருதுகிறார்.

கட்டுரை ஆசிரியர் கருத்து
கங்கநாடு-96000, பனவாசி-12000 ஆகியவற்றில் உள்ள எண்கள் குறிப்பிடுவது எதை என்னும் ஐயம் எழுவது இயல்பு. பலவாறான கருத்துகள் உள்ளன.  கருநாடகக் கல்வெட்டுகளில், கங்கநாட்டைப் பற்றிய  குறிப்புகளில் கங்கநாடு-32000 என்றும், கங்கநாடு-96000 என்றும் இரண்டு குறிப்புகள் காணப்படுகின்றன. சில இடங்களில் கங்கநாடு-96000 கொங்குப் பகுதியையும் சேர்த்து என்று பதிப்பாசிரியரின் குறிப்புள்ளது. கொங்குப்பகுதி கங்கநாட்டில் சேர்க்கப்படுவதற்கு முன்பு 32000 என்றும், கொங்குப்பகுதி சேர்க்கப்பட்ட பின்னர் 96000 என்றும் குறிக்கப்படுவதால், இந்த எண்ணிக்கைப் பெயர், நாட்டின் ஆட்சிப்பரப்பைக் குறிப்பது கண்கூடு. கொங்குப்பகுதியின் பரப்பு 64000 என்பது பெறப்படுகிறது. இந்த எண்ணிக்கைப் பெயர்கள் ஊர்களைக் குறித்தன எனில், கொங்கில் 64000 ஊர்கள் இருந்தன என்று பொருள் கொள்ளவேண்டியுள்ளது. அவ்வாறு 64000 ஊர்கள் இருக்க வாய்ப்பில்லை எனத் தோன்றுகிறது. கால்நடை வளர்ப்புச் சமுதாய நிலையை அடுத்து, நிலத்தை மையமாகக் கொண்ட மன்னர் ஆட்சி நிலை ஏற்பட்டபின்னர், நிலவுடைமை என்பது முதன்மை இடத்தைப் பெற்றது. நிலம் பற்றியே போர்களும் நிகழ்ந்தன. நிலமும் நிலவருவாயுமே அரசர்களின் மேம்பாட்டை நிலை நிறுத்தின. எனவே, மேற்குறித்த எண்ணிக்கைப் பெயர்கள் நில வருவாயை அடிப்படையாய்க் கொண்ட வருவாய்ப் பிரிவுகள் அல்லது நிலப்பரப்பைக் குறித்தன எனக் கருதலாம். கங்கநாடு-32000 என்பது, கொங்கு நாடு இணைந்ததும் கங்கநாடு-96000 என மாறியது இக்கருத்தை வலியுறுத்துகிறது.

கல்வெட்டு கூறும் கூடுதல் செய்திகள்
பூதுகனின் அணுக்கப்பணியில் இருந்த மணலெரா, சகர குடிவழியினன்; வளபீ புரவரேசுவர(ன்) என்னும் பட்டப்பெயர் கொண்டவன். அவன், பூதுகனிடம் ஒரு வேண்டுகோள் வைக்கின்றான். போரில் அவன் காட்டிய வீரத்துக்கு அடையாளமாக இவ்வேண்டுகோள் வைக்கப்படுகிறது. காளி என்னும் பெயருடைய நாய்தான் அந்த வேண்டுகோள் மூலமாகக் கேட்கப்பட்ட பரிசு. பூதுகன் அதை ஏற்றுக் காளி என்னும் நாயைப் பரிசாக அளிக்கிறான். களலெ நாடு (களலை நாடு) என்னும் நாட்டுப்பிரிவைச் சேர்ந்த பெ-ளத்தூரை ஒட்டியுள்ள ஒரு குன்றுப்பகுதியில், காட்டுப்பன்றி ஒன்றுடன் போட்டியாக மோதுவதற்கு காளி என்னும் அந்த நாய் ஏவப்பட்டது. கடுமையாகச் சண்டையிட்டு, இரண்டுமே ஒன்றையொன்று கொன்று உயிர் துறந்தன. இந்த நிகழ்ச்சியின் நினைவாக நடுகல் ஒன்று சல்லேசுவரர் கோவில் முன்பு எழுப்பப்பட்டது. அந்த நடுகல்லே மேற்குறித்த கல்வெட்டாகும்.  நடுகல் வழிபாட்டுக்காக நிலக்கொடையும் அளிக்கப்பட்டது. நாய், பன்றியுடன் சண்டையிடும் காட்சி புடைப்புச் சிற்பமாக அந்த நடுகல்லில் வடிக்கப்பட்டு, அதன் கீழே கல்வெட்டு பொறிக்கப்பட்டது. கல்வெட்டின் இந்தப்பகுதியில், மேற்சொன்ன வேண்டுகோள், நாய்-பன்றிச் சண்டை பற்றிப் பொறிக்கப்பட்டது. சிற்பப் பகுதிக்கு மேற்புறத்திலும், கல்லின் பக்கவாட்டுப் பகுதியிலும், பூதுகன் ராச்சமல்லனைக் கொன்றது, கன்னர தேவன் சோழனை எதிர்த்துப் போரிட்டது, இராசாதித்தனைப் பூதுகன் கொன்றது, கன்னர தேவன் பூதுகனுக்குக் கொடை அளித்தது ஆகிய செய்திகள் பொறிக்கப்பட்டுள்ளன.


                                                ஆதக்கூர்-கன்னடக்கல்வெட்டு


கல்வெட்டின் பாடம்

1     ஸ்வஸ்தி சக நிருப காலாதீத ஸம்வத்ஸர ஸதங்கள் எண்ட்டுநூறு
     எற்பத்தெரடனெய சோம்யம் எம்ப
2      சம்வத்ஸரம் …………………………………பிரிதுவி வல்லப ……………
3    ………………………………………….கச்செக கிருஷ்ணராஜ ஸ்ரீமத்
4     கன்னரதேவ மூவடிசோழ ராஜாதித்யன மேலெ [வ]ந்து தக்கோலதொள்
     காதி கொந்து விஜயம் கெய்யுத்திர்து
5    ஸ்வஸ்தி ஸத்யவாக்ய கொங்குணிவர்ம தர்ம மஹாராஜாதிராஜ\
     கோளால புரவரேச்வர நந்தகிரிநாத
6    ஸ்ரீமத் பெர்மனடிகள் நன்னிய கங்க ஜயதுத்த ரங்க கங்க காங்கேய கங்க
    நாராயணநாதன் ஆளுத்திர்து
7     …………………………………………………..ஸகர வம்ச வ
8        ளபீ புரவரேச்வர ……………………………………………………………………………
9         ………………………பூதுகனங்ககார ஸ்ரீமத் மணலெர அனுவரதொள் மெச்சி பேடிக்கொள் எந்தொ
10    டெ …………………….காளிய ……………………நாய கெ-ளலெ நாட பெ
      ளத்தூர…
11       ……………..மொரடியொள் பிரிதும் பந்திகெ விட்டொடெ பந்தியும் நாயும்
       மொடசத்துவதர்க்கெ
12   ……. சல்லேச்வரத முந்தெ கல் நடிசி …………………………கண்டுக
13       மண்ணு கொட்டரா ……………………….


20 ஸ்வஸ்திஸ்ரீ எறெயப்பன மக ராச்சமல்லன பூதுக காதி கொந்து தொம்பத்தறு ஸாஸிரமும் ஆளுத்திரெ கன்னரதேவ சோழன காதுவந்து பூதுக ராஜாதித்யன பிசுகெய களனாகி சுரிகி இறிது

21  காதி கொந்து பனவசெ பன்னிரு ஸாஸிரமும் பெள்வொல  முனூறும் புரிகெரெ முனூறும் கிசுகாடு எற்பத்தும்  பாகி நாடு எற்பத்தும் பூதுகங்கெ கன்னரதேவ மெச்சு கொட்ட பூதுகனு மணலெர த

22  ன்ன முந்தெ நிந்திறிதுதர்க்கெ மெச்சி ஆதுக்கூர் பன்னெரடும் பெள்வொலத காடியூரமும் ..

23  …..கொட்ட மங்கள மஹாஸ்ரீ

கல்வெட்டின் தமிழாக்கம்

1    ஸ்வஸ்தி(ஸ்ரீ)  சக மன்னர்களின் காலத்து ஆண்டுகளில் எண்ணூற்று
எழுபத்திரண்டு சௌம்ய

2 ண்டு …………………………………………………………………………………… பிருதிவி வல்லபன்….

3 ……………………………………………………..கச்சக கிருஷ்ணராஜன் ஸ்ரீமத்

4    கன்னரதேவன் மூவடி சோழ ராஜாதித்தனை தக்கோலத்துள்
போரிட்டுக் கொன்று வெற்றி கொண்டான்

5 ஸ்வஸ்தி(ஸ்ரீ) சத்தியவாக்கியன் கொங்குணிவர்மன் தர்ம மஹாராஜாதிராஜன் கோளால புரவரேசுவரன் நந்தகிரி நாதன்

6    ஸ்ரீமத் பெர்மானடிகள் ..கங்கன் …….. கங்ககாங்கேயன்  கங்கநாராயண நாதன் ஆட்சிசெய்திருந்தான்
7    ………………………………………………………………….. சகர வம்சத்து

8    வளபீ புரவரேசுவரன்……………………………………….

9    ………………….பூதுக(னி)ன் அங்ககாரன் ஸ்ரீமத் மணலெரனை … மெச்சி வேண்டிக்கொள் என்றதும்

10  ……………….. காளி என்னும் நாய்……………கெ-ளலெ நாட்டு பெ-ளத்தூர்

11  …………..குன்றுனுள் பன்றி மேல் (ஏவி)விட்டபோது பன்றியும் நாயும்
இறந்து போனதற்காக

12  ………………. சல்லேசுவரர் (கோயில்) முன்பு கல் நட்டுவித்து  …. கண்டுக
13     நிலம் கொடுத்தான்



20  ஸ்வஸ்திஸ்ரீ எறெயப்பனின் மகன் ராச்சமல்லனைப் பூதுகன் போரிட்டுக் கொன்று தொண்ணூற்றாறு ஆயிரம் ஆண்டுகொண்டிருக்கையில் கன்னரதேவன் சோழனோடு போரிடும்போது பூதுகன் ராஜாதித்தனை …..

21  போரிட்டுக் கொன்று பனவாசி பன்னிரு ஆயிரமும் பெள்வொல முன்னூறும் புரிகெரெ முன்னூறும் கிசுக்காடு எழுபதும்  பாகி நாடு எழுபதும் பூதுகனுக்குக் கன்னரதேவன் மெச்சிக் கொடுத்தான் பூதுகன் மணலெர

22   தன்முன்பு நின்று போரிட்டதற்கு  மெச்சி ஆதக்கூர் பன்னிரண்டும் பெள்வொலத்துக் காடியூரும்

23   …..கொடுத்தான்  மங்கள மஹாஸ்ரீ

விளக்கம்:
வரி-1 எண்ட்டுநூறு- தமிழில் உள்ள எட்டு நூறு என்பதன் வடிவம், கன்னடத்தில் ஏறக்குறைய அதே வடிவில் வந்துள்ளது. அதே போல் எழுபது- எற்பத்து.

வரி-4  இராசாதித்தன், மூவடிச் சோழன் என்று குறிப்பிடப்படுகிறான். மும்முடிச் சோழன் என்பதன் திரிபாகலாம். சோழஎன்னும் சொல்லில் உள்ள சிறப்பு ‘ழகரம் ஆய்வுக்குரியது. பழங்கன்னட எழுத்துகளில் ‘ழஎழுத்துக்குத் தனியே ஒரு வடிவம் கல்வெட்டுகளில் இருந்துள்ளது. காலப்போக்கில், கன்னட எழுத்துகளில் இந்த சிறப்பு ‘ழகரம் மறைந்துபோனதன் பின்னணி தெரியவில்லை. தக்கோலதொள் என்பது தக்கோலத்தில் என்பதன் திரிபு. பழங்கன்னடத்தில் பயின்ற சொல். பழங்கன்னடம், தமிழின் ஒரு வடிவம் என்று சொல்லலாம்.  காதி என்பது போரிட்டு (சண்டையிட்டு) என்னும் பொருளுடைய கன்னடச் சொல்.  தமிழ்ச் சொல்லின் சாயல் இதில் இல்லை.  ஆனால், அடுத்து வரும் ‘செய்யுத்திர்துஎன்னும் சொல், தமிழின் வேர்ச்சொல்லான “செய்  என்னும் வினையின் அடிப்படையில் பழங்கன்னடமாக வழங்குகிறது. இதேபோல், வரி ஆறில், “ஆளுத்திர்துஎன்பது “ஆள்என்னும் வினையின் அடிப்படையாக எழுந்த பழங்கன்னடச் சொல். அடுத்து, கொந்து  என்னும் சொல், கொன்று  என்பதன் திரிபு எனலாம். கன்னடத்தில் பயிலும் பல தமிழ்ச் சொற்களில் இதுவும் ஒன்று. இறத்தலைக் குறிக்கும் ‘சாவு’, செத்து என்னும் வினை வடிவம் கொள்கிறது. அதுவே, கன்னடத்தில் “சத்துஎன்றாகிறது (வரி-11). கொன்று – கொந்து என்னும் திரிபு, மன்று – மந்து,  குன்றி மணி – குந்து மணி ஆகியவற்றிலும் காணலாம். “என்று  என்னும் தமிழ்ச்சொல், கன்னடத்தில் எந்து  என்று வருவதையும் (வரி-9), ‘பன்றிஎன்னும் தமிழ்ச் சொல் பழங்கன்னடத்தில் ‘பந்திஎன்று வருவதையும் (வரி-11) காண்க.  தற்காலக் கன்னடத்தில் இச்சொல் ‘ஹந்திஎன்று வழங்கும். ப->ஹ எழுத்துத் திரிபு கன்னடத்தில் பல சொற்களில் காணப்படுகிறது. எடுத்துக்காட்டு : பல்-ஹல்லு, பால்-ஹாலு. பம்பாநதி, ஹம்பிஎன மாற்றமுற்றதும் இவ்வகையே.


                       பழங்கன்னட எழுத்து - சிறப்பு “ழ”கரம் - வட்டமிட்டது.


வரி-5  கோளால புரவரேசுவரன் – கோளால என்பது குவளால என்பதன் திரிபு. குவளால என்பது குவளாலபுரம் ஆகும். இது இன்றைய கோலார் ஊரின் பழம்பெயர் ஆகும். தமிழ்க் கல்வெட்டுகளில் கோலார், குவளாலபுரம் என்றே வழங்குகிறது. கோலார், கங்கர்களின் தலைநகராக இருந்துள்ளது.

வரி-6  பெர்மானடிகள் -   தமிழில் வழங்கும் பெருமானடிகள் என்னும் சொல், கன்னடத்தில் பெர்மானடிகள் எனத் திரிந்தது எனலாம்.

வரி-9  அங்ககாரன் -  மெய்க்காப்பாளன் என்னும் பொருள் தருகிறது எனலாம்.  பேடிக்கொள் எந்தொடெ – பேடிக்கொள் எந்து -  வேண்டிக்கொள் என்று. தமிழின் திரிந்த வடிவம் கன்னடத்தில் பயில்கிறது. மெச்சிஎன்னும் தமிழ்ச் சொல்லும் மாற்றமின்றிக் கன்னடத்தில் பயின்றுவந்துள்ளது.

வரி-11 சத்துவதர்க்கெ – செத்துப்போனதற்காக. பந்தியும் நாயும் – பன்றியும் நாயும். மீண்டும் பழங்கன்னடத்தில் தமிழின் சாயலைக் காண்கிறோம். 

வரி-12  கல் நடிசி -  கல் நட்டுவித்து.  நடுகல்லைக் குறிப்பது.

வரி-21  ஸாஸிரம்-ஆயிரம். பழங்கன்னடத்தின் ஸாஸிரம், தற்போதைய கன்னடத்தில் சாவிரஎனப் பயில்கிறது.  கொட்ட-கொட்ட(னு). கொடு  என்னும் தமிழ் வேர்ச்சொல் கன்னடத்திலும் அவ்வாறே பயில்கிறது. கொடை என்பது கன்னடத்தில் கொடகெஎன்று வழங்குவது இதன் அடிப்படையில்தான்.

காளி என்னும் வேட்டை நாய்
காளி என்னும் நாய் பற்றிப் புதுமையான செய்தியொன்றைக் கல்வெட்டுத்தொகுதியின் பதிப்பாசிரியர் கூறுகின்றார். சீதாராம் ஜாகிர்தார் என்பவர் தெரிவித்த கருத்தாக இக்கூற்று அமைகிறது.  சீதாராம் ஜாகிர்தார் என்பவர், ‘காவ்யாவலோகன  என்னும் நூலில் உள்ள செய்யுள் வரியொன்றின் அடிப்படையில் ‘க3ண்ட3 மார்த்தாண்ட3 என்னும் மூன்றாம் கிருட்டிணன் (கன்னரதேவன்) வேட்டை நாய்களின் ஒரு தொகுப்பைக் காவலுக்கு வைத்திருந்தான் என்றும், கல்வெட்டில் குறிப்பிடப்பெறும் காளி என்னும் நாய், கன்னரதேவனின் நாய்களுள் ஒன்று என்றும், அதை விரும்பிக்கேட்ட பூதுகனின் பாதுகாவலனான மணலெரனுக்குக் கொடையாகக் கொடுத்திருக்கவேண்டும் என்றும் குறிப்பிடுகிறார்.  வேட்டை நாய்களை அரசர்கள் வளர்த்திருந்தனர் என்பதும், அவற்றுக்குப் பெயர்களும் சூட்டப்பட்டன என்பதும், நடுகல் எழுப்பும் தகுதியை அவை பெற்றிருந்தன என்பதும் நாம் அறியலாகும் செய்திகள்.

தக்கோலம் கோயிலும் சில கல்வெட்டுகளும்
தக்கோலம் கோயிலில் எத்தனை கல்வெட்டுகள் பதிவாகியுள்ளன எனத்தெரியவில்லை. ஆனால், தற்போதைய நிலையில் கல்வெட்டுகள் மிகக் குறைவாகவும், தேய்ந்தும், துண்டுப்பகுதிகளாகவும், படிக்கும் வகையில் புலப்படா நிலையிலும் உள்ளன. ஒளிப்படங்கள் எடுத்துக் கணினியில் பெரிது  படுத்திப் பார்க்கும்போதுகூட எழுத்துகள் புலனாவதில்லை என்பது வருத்தமளிக்கத் தக்கது. பல நிலைகளில் திருப்பணிகளின்போது கல்வெட்டு உள்ள கற்களையும் பொறிகளைக்கொண்டு செம்மைப்படுத்தும் வழிமுறைகளாலேயே இவ்வாறான சேதங்கள் நிகழ்கின்றன. 2017, செப்டம்பர் மாதத்தில் நான் தக்கோலம் சென்றபோது, ஒளிப்படமாக எடுத்த துண்டுக்கல்வெட்டுகளின் படங்களையும், பாடங்களையும் இங்கு தந்துள்ளேன்.


கல்வெட்டு-1

1    ஸ்வஸ்திஸ்ரீ கோ..
2    தித்த பன்மற்கு யாண்டு 2 ஆ
3    வது தக்கோலத்துத் திருவூ
4    றல் தேவநார் மகள் திருவூறல் நங்
5    கை மகள் அத்தியூர் ந[ங்]கை திருவூற
6    ல் மாஹாதேவர்க்கு வைத்த நொந்
7    தா விளக்ககொன்றினுக்கு
8    . . . . . . . . . . . . . . . . . .
9    [சா]வா மூவாப் பேராடு
10  இவ்வி(ளக்) கிட்டக்கட
11  (வான்) நாட்டு மன்றாடி

                                                               கல்வெட்டு-1


விளக்கம்:
கல்வெட்டில் அரசர் பெயர் தெளிவாகத் தெரியவில்லை. எனினும், தித்த பன்மற்குஎன்னும் தொடரின் அடிப்படையில், கல்வெட்டு முதலாம் ஆதித்தன் காலத்தது எனக் கருதலாம். முதலாம் ஆதித்தனின் ஆட்சிக்காலம் கி.பி. 871-907. எனவே கல்வெட்டின் காலம் கி.பி. 873. தக்கோலத்தைச் சேர்ந்த தேவனார் என்பவரின் மகளான திருவூறல் நங்கையின் மகள் அத்தியூர் நங்கை தக்கோலத்து இறைவனான திருவூறல் மகாதேவருக்கு நொந்தா விளக்கு வைத்ததற்காக சாவாமூவாப் பேராடு கொடை அளித்திருப்பதைக் கல்வெட்டு கூறுகிறது. கொடையாகக் கொடுத்த ஆடுகளை ஏற்றுக்கொண்டவன் அவ்வூர் மன்றாடி (இடையன்) ஒருவனாவான்.

கல்வெட்டு-2

1    (ஸ்வஸ்தி)ஸ்ரீ சாலைக்கலமறுத்த
2    . . . ற்கு யாண்டு (. .3) 
3    . . . . . தேவநார் மகள் திரு . . .
4    . . . . . .  கைய்யால் பங் . .
5    . . . . . . தன்ம கட்டளைக்கல் . .
6    . . . . [நி]றை (இருப)த்து முக்கழஞ்சு
7    . . . . (வூர்) தேவற்க்கு திருவமி[ர்து]
8    . . . .  (வ)ரிசி குறுணி இ . . .
9    . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
10  . . . . . . . . து சந்த்ராதி(த்தவற்)
11  . . . . . . . . நோம் . . . .
12  . . . . . . . . (கு)டுத்தோம் சி . . . .


                                                         கல்வெட்டு-2                                        



விளக்கம்:
கல்வெட்டு தெளிவாயில்லை. ‘சாலைக்கலமறுத்த  என்னும் தொடர் முதலாம் இராசராசன், காந்தளூர்ச் சாலை வெற்றிக்குப் பின்னர் தன் மெய்க்கீர்த்தியில் இணைத்துக்கொண்ட தொடராகும். ஆனால், அவனுடைய மெய்க்கீர்த்தியில். காந்தளூர்ச் சாலை என்றே காணப்படும். அவனுக்குப் பின்னர் ஆட்சிக்கு வந்த அவன் மகன் முதலாம் இராசேந்திரன், பெயரன் முதலாம் இராசாதிராசன், இன்னும் முதலாம் குலோத்துங்கன் ஆகிய பல அரசர்கள் ‘சாலைக்கலமறுத்தபுகழைத் தங்களுக்கு ஏற்றிக்கொள்கிறார்கள். எனவே, இக்கல்வெட்டில் வரும் அரசன் இவர்களில் ஒருவராக இருக்கக் கூடும். முதல் கல்வெட்டில் குறிப்பிடப்பெறும் நங்கை என்பவளே இக்கல்வெட்டிலும் குறிப்பிடப்பெறுகிறாள் எனக் கருதலாம். இறைவர்க்குத் திருவமிர்து படைப்பதற்கான பரிகலன்களுள் (பாத்திரம்) ஒன்றோ பலவோ கொடைப் பொருளாக அளிக்கப்பட்டிருக்கவேண்டும். அதன் நிறையும் குறிப்பிடப்பட்டுள்ளது எனலாம். நிறை காணப் பயன்படுத்தப்பட்ட பொன் எடைக்கல் தன்ம கட்டளைக்கல்  என்னும் பெயரால் வழங்கியது. 


கல்வெட்டு-3

1    . . . . . . . . . . . . . . . . . .
2      . . க்கு மேற்கும் வட(பா)ற்
3      . . புளிக்கும் பெரிய கு . .
4      .  தெற்கும் மேல்பா(ற்)[கெல்லை]
5      . . . தாவாய் சூலக்க(ல்)
6      . . . நல்லாற்றுக்கு ..
7      . .  பாற்கெல்(லை)


                                                                 கல்வெட்டு-3



விளக்கம்:
நிலக்கொடை அளிக்கப்பட்டுள்ளது; நிலத்தின் எல்லைகள் விளக்கப்பட்டுள்ளன.
நல்லாறு என்னும் ஓர் ஆற்றின் பெயர் குறிக்கப்பட்டுள்ளது.

கல்வெட்டு-4

1    . . . .  கு யாண்டு . . .
2    . . . . . . . . . . . . . . . . . .
3    . . . . ட்டி காமுண்[ட]
4    . . .  (மி மான) கேசுவைய . .
5    . ப்பல்லவன் ப்ரஹ்மாதரா(யன்)
6    . . தக்கோலத்துத் திருவூறல்



                                                   கல்வெட்டு-4


விளக்கம்:
அரசு உயர் அதிகாரிகளில் ஒருவனான பல்லவன் பிரம்மாதராயன் என்பான் தக்கோலத்துத் திருவூறல் இறைவர்க்குக் கொடை அளித்துள்ளான் எனத் தெரிகிறது.

கல்வெட்டு-5

கல்வெட்டின் படம் தெளிவாக இல்லை. படிக்க இயலாதவாறுள்ளது. இருப்பினும், முதல் வரியில் இராசநாராயண சம்புவரயர் என்னும் பெயரைக் காண முடிகிறது. எனவே, இக்கல்வெட்டு சம்புவரையர் காலத்துக் கல்வெட்டு எனக் கொள்ளலாம். 


                                                           கல்வெட்டு-5



துரை.சுந்தரம், கல்வெட்டு ஆராய்ச்சியாளர், கோவை.
அலைபேசி :  9444939156.

வியாழன், 2 ஆகஸ்ட், 2018

பெருந்துறைப் பகுதியில் ஒரு தொல்லியல் பயணம்

முன்னுரை
அண்மையில் 2018, மார்ச்சு மாதத் தொடக்கத்தில் (பவானி) குமாரபாளையத்தில் தமிழ் மரபு அறக்கட்டளை சார்பில் நடைபெற்ற கருத்தரங்கின் ஒரு நாள் நிகழ்வுக்குச் சென்றிருந்தபோது, பவானி, ஈங்கூர், காஞ்சிக்கோவில், பரஞ்சேர்வழி ஆகிய ஊர்களின் தொன்மைக் கோயில்களுக்கும் தொல்லியல் தடயங்கள் அமைந்துள்ள சில இடங்களுக்கும் செல்லும் வாய்ப்பை உருவாக்கிக்கொண்டேன். அதுபோழ்து அறிந்துகொண்ட தொல்லியல் செய்திகளின் பகிர்வு இங்கே.

காஞ்சிக்கோவில்
ஈரோடு மாவட்டம், பெருந்துறை-கவுந்தப்பாடி சாலையில் அமைந்துள்ள ஊர் காஞ்சிக்கோவில். இது பழங்கொங்கு நாட்டின் இருபத்து நான்கு நாட்டுப்பிரிவுகளுள் ஒன்றாக விளங்கியது. காஞ்சிக்கூவல் நாடு என்றும் இதற்கு இன்னொரு பெயர் வழங்கியது.  இவ்வூரில் இரண்டு கோவில்கள் உள்ளன. ஒன்று, நீலகண்டேசுவரர் கோயில்; மற்றது சீதேவியம்மன் கோயில். முதலில் சென்று பார்த்த கோயில் சீதேவியம்மன் கோயில். வேளாளர்களில் செம்பன் குலத்தாருக்கும் முளசி கண்ணன் குலத்தாருக்கும் உரிய கோயிலாக இது திகழ்கிறது. இவர்களில் செம்பன் குலத்தார், கோயிலின் முதல் காணியாளர் ஆவர். காணி என்னும் ஒருவகை உரிமை, கொங்குச் சோழர் காலத்திலிருந்து நடைமுறையில் இருந்துள்ளது என்பதைக் கல்வெட்டுகள் வாயிலாக அறிகிறோம்.

குதிரைச் சிற்பங்கள்-குலக்குறியீடு
கோயிலில் நுழைந்ததும், நம் வலப்பக்கத்தில் நெடிதுயர்ந்து நிற்கும் மூன்று குதிரைச் சிற்பங்கள் நம் பார்வையை ஈர்ப்பன. சுடுமண்ணாலும், காரையாலும் செய்யப்பட்ட இது போன்ற குதிரைச் சிற்பங்களைப் பெரும்பாலும் எல்லா அம்மன் கோயில்களிலும் அமைப்பது மரபு. இக்குதிரைகளுக்குச் செம்பொன், முளசி கண்ணன், கண்ணன் என்று பெயர்கள். இப்பெயர்கள், வேளாளர் குலங்களின் சார்பாக அமைந்தன எனலாம். (செம்ப குலம் என்பது, செம்பொன் குலம் என்பதன் திரிபாகலாம்.)




பரிவாரத் தேவதைகள்
கோயிலில், ஒரு மேடையில் கடவுளர் சிலைகள் சில நிறுவப்பட்டுச் சுவரில் அவற்றின் பெயர்கள் எழுதப்பட்டுள்ளன. தேவதைகள், வேடன் சின்னாரி, வீரமாத்தியம்மன், பச்சியாத்தாள், மாகாளியம்மன் ஆகியவை அப்ப்பெயர்கள். அவற்றுள் தேவதைகளில் இரு சிற்பங்களும், வேடன் சின்னாரி எனப்பெயரிட்ட சிற்பமும் தொல்லியல் பார்வையில் நடுகற்கள் என்னும் நினைவுக்கற்களாகத் தோற்றமளிக்கின்றன.

                            பரிவாரத் தேவதைகள்


புலிகுத்திக்கல் சிற்பம்
மேற்படி சிற்பத்தொகுதிக்கு அருகில் தனிக்கல்லில் வடிக்கப்பட்ட புலிகுத்திக்கல் ஒன்றும் காணப்படுகிறது. வீரன் ஒருவன் புலியைத் தன் இரு கைகளிலும் உள்ள குறுவாள்கள் கொண்டு நெஞ்சுப்பகுதியிலும், வாய்ப்பகுதியிலும் குத்துவது போன்ற தோற்றம். வாள்கள் வெளியில் தோன்றவில்லை. புலி, தன் பின்னங்கால்களைத் தரையில் ஊன்றி முன்னங்கால்களால் வீரனைத் தாக்கும் கோலத்தில் உள்ளது. கொங்குப்பகுதியில் காணப்படும் பெரும்பாலான புலிகுத்திக்கற்கள் இது போன்ற அமைப்பையே கொண்டுள்ளன. இச்சிற்பம் வழிபாட்டில் உள்ளது. சிற்பத்தின் பீடப்பகுதியில், எட்டு வரிகளைக் கொண்ட கல்வெட்டெழுத்துகள் காணப்படுகின்றன.  பத்தாண்டுகளுக்கு முன்னரே, கல்வெட்டு அறிஞர் புலவர் இராசு அவர்கள் கல்வெட்டைப் படித்துள்ளார் என்னும் செய்தியைக் கோயில் பூசையாளர் சொன்னார்.  இந்தக் கல்வெட்டு, தொல்லியல் துறை வெளியிட்ட ஈரோடு மாவட்டக் கல்வெட்டுகள் நூலில் காணப்படவில்லை. இயல்பு நிலையில், கல்வெட்டு எழுத்துகள் புலப்படவில்லை. வழக்கம் போல், மாவு பூசிக் கல்வெட்டைப் படித்தேன்.  கல்வெட்டுப் பாடம் கீழ்வருமாறு :

கல்வெட்டின் பாடம்

1         சிண்ணா மூப்ப
2         ன் மகன் ச
3         டைய மூப்பன் ப
4         ண்ணி வச்ச சி
5         லை
6         செம்பனு(ம) கண்
7         ணனுக் குடுத்த
8         காணியாச்சி


                                             புலிகுத்திக்கல் சிற்பம் - கல்வெட்டுடன்


வழக்கமாகப் புலிகுத்திக்கற்கள், கால்நடைகளைக் காக்கும் வீரன், புலியுடன் போராடிப் புலியைக் கொல்லும் நிகழ்வில் இறந்துபட அவன் நினைவை ஊர்மக்கள் சிலையெடுத்து வழிபடும் மரபில் வந்தவை. அந்த மரபில் செம்பன் என்னும் வீரன் இறந்துபட, நினைவுக் கல் எழுப்பியவர் சிண்ணா மூப்பன் மகன் சடைய மூப்பன் ஆவார். இறந்துபோன வீரனின் மகனாகிய கண்ணனுக்கு நிலக்கொடை (காணியாச்சி) அளித்ததாகக் கருதலாம். செம்பன், கண்ணன் ஆகிய வேளாளர் குலப்பெயர்கள் கல்வெட்டில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
  
தனிக்கல் கல்வெட்டு
குதிரைச் சிற்பங்களின் பீடத்தினருகில் தரைப்பகுதியில் ஒரு தனிப் பலகைக் கல்லில் கல்வெட்டு ஒன்று பொறிக்கப்பட்டுள்ளது. புலவர் இராசு அவர்கள் இதையும் படித்திருக்கிறார். இக்கல்வெட்டின் பாடமும் தொல்லியல் துறை வெளியிட்ட ஈரோடு மாவட்டக் கல்வெட்டுகள் நூலில் காணப்படவில்லை. இந்தக் கல்வெட்டு, மாவு பூசிய பின்பும் படிக்க இயலாதவாறு தேய்ந்து போயுள்ளது. எனவே, இக்கல்வெட்டில் அமைந்துள்ள செய்தி யாது என்பது புலப்படவில்லை.

                          தனிப் பலகைக்கல் கல்வெட்டு


காஞ்சிக்கோவில் நீலகண்டேசுவரர் கோயில்
சீதேவியம்மன் கோயிலுக்குச் சற்று அருகிலேயே அமைந்துள்ளது நீலகண்டேசுவரர் கோயில். கருவறை, அர்த்த மண்டபம், முன் மண்டபம் என்னும் பகுதிகளைக் கொண்டுள்ளது. கோயிலின் முகப்பில், பலி பீடம், நந்தி மண்டபம் ஆகியவற்றுக்கும் முன் மண்டப நுழைவாயிலுக்கும் இடைப்பட்ட வெளியில் நிழல் குடை போலத் தற்கால அமைப்பை ஏற்படுத்தியிருக்கிறார்கள். எனவே, முன்புறத் தோற்றம் ஒரு கொட்டகை போலக் காட்சியளிக்கிறது. கோயிலை வலம் வரும்போதுதான், கருவறை, அர்த்த மண்டபம், முன் மண்டபம் ஆகிய கட்டிடக் கூறுகளைக் காண இயலும். கோயில் கற்றளியாக இருப்பினும், சுவர்ப்பகுதியில் கல்வெட்டுக்ள் எவையுமில்லை. கருவறை விமானம் நாகர (சதுர) அமைப்பைக் கொண்டுள்ளது. சுவர்களில் அரைத்தூண்களும் கோட்டங்களும் உள்ளன. கோட்டங்களில் சிற்பங்கள் இல்லை. கோயில் வளாகத்தில், தனிப்பலகைக் கல் ஒன்றில் கல்வெட்டு உள்ளது. ஆனால், அக்கல்லின்மீது நெடுங்காலம் சுண்ணம் பூசி, எழுத்துகள் புலப்படாவண்ணம் செய்துள்ளனர். இந்தக் கல்வெட்டின் பாடமும் தொல்லியல் துறை வெளியிட்ட ஈரோடு மாவட்டக் கல்வெட்டுகள் நூலில் காணப்படவில்லை. மாவட்ட வரிசையில் வெளிவருகின்ற கல்வெட்டு நூல்களில், பல கல்வெட்டுகள் இவ்வாறு ஏனோ தவிர்க்கப்படுகின்றன. தென்னிந்தியக் கல்வெட்டுகள்”  என்னும் பெயரில் முன்பு எப்போதோ வெளிவந்த நூலகளில் அவை உள்ளன எனக் காரணம் குறிப்பிடப்பட்டாலும், கல்வெட்டு ஆர்வலர்களுக்குத் தற்போது ஒரே இடத்தில் கல்வெட்டுகளைப் படித்துப் பார்க்கும் வாய்ப்பு கிட்டுவதில்லை.

                         நீலகண்டேசுவரர் கோயில்


                               பலகைக் கல் - கல்வெட்டு (சுண்ணம் பூசிய நிலையில்)


சீனாபுரம்-சமணக்கோயில்
பெருந்துறைக்கருகில் அமைந்துள்ள ஒரு சிற்றூர் சீனாபுரம். தொல்லியல் பற்றித் தெரிந்துகொள்ளும் முன்னர், சீனாபுரம் என்னும் ஊர் எப்படி அமைந்தது என்பதான சிந்தனையே எழவில்லை. இந்த ஊருக்கும் சீனத்துக்கும் என்ன தொடர்பு இருக்க முடியும்? எதுவும் இல்லைதான்.  சமண சமயம் கருநாடப் பகுதியிலிருந்து தமிழகம் புகுந்தபோது அருகில் உள்ள விஜய மங்கலம் ஊர், பெரியதொரு சமண மையமாகத் திகழ்ந்தது. சமண சமயம், ஜைனம் என்னும் பெயர் கொண்டது. அதன் காரணமாக ஜைனபுரம் என்றும் ஜினபுரம் என்றும் பெயர்கொண்ட ஊர் தமிழ் ஒலிப்பில் சினபுரம் என்றும், சீன புரம் என்றும் காலப்போக்கில் மருவியிருத்தல் கண்கூடு. இந்தச் சீனாபுரத்தில் சமணத்தின் முதல் தீர்த்தங்கரராகிய ரிஷபதேவர் கோயில் அமைந்துள்ளது. நன்னூல் என்னும் தமிழ் இலக்கண நூலை இயற்றிய பவணந்தி முனிவர் வாழ்ந்து வழிபட்ட இடம் இக்கோயில். நான் சென்றிருந்த போது கோயில் மூடிய நிலையில் இருந்ததால் கோயிலினுள் சென்று ரிஷபதேவரின் சிற்பத்திருமேனியைக் காண இயலவில்லை. தோற்றத்தில் சிறியதொரு கோயில். கருவறையும், அர்த்தமண்டபமும் கொண்ட எளிமையான அமைப்பு. ஒரு நீள் சதுர வடிவத்தில் அமைந்துள்ளது. அடித்தளத்தில் சிறு பகுதி மட்டுமே கற்களால் ஆனது. மேல்பகுதி முழுதும் செங்கல்லாலும் சுதையாலும் கட்டப்பட்டுள்ளது. சுவர்ப்பகுதியில், மிக எளிமையான, வேலைப்பாடற்ற அரைத்தூண்களும், கோட்டங்களும் உள்ளன. கோயில் வெளிப்புறம் முழுதும் மஞ்சள் வண்ணம் பூசப்பெற்றுள்ளது. தமிழ் நாடு அரசு இந்து சமய அறநிலையத் துறையினர் வைத்துள்ள செய்திப் பலகை, இக்கோயிலை ஆதீசுவரர் கோயில் எனச் சுட்டுகிறது. பூனா ஜெயின் சங்கம், மதுரை ஜெயின் மரபு மையம் ஆகிய இரு அமைப்பினரும் சேர்ந்து வைத்துள்ள பலகைத் தூணிலும் சமணக்கோவில் என்னும் பொதுப்பெயர் ஒன்றால் கோயில் குறிக்கப்படுகிறது. சமணத்தின் முதல் தீர்த்தங்கரராகிய ரிஷபதேவர் கோயில் என்றோ ஆதி நாதர் கோயில் என்றோ குறிப்பிட்டிருந்தால் வரலாற்று ஐயம் எழாது.

                         சீனாபுரம்-சமணக்கோயில்


                           சீனாபுரம்-சமணக்கோயில் - பக்கவாட்டுத் தோற்றம்


ஈங்கூர் அல்லாளீசுவரர் கோயில்
பெருந்துறை-சென்னிமலைச் சாலையில் பெருந்துறையை அடுத்து அமைந்துள்ள ஊர் ஈங்கூர். இங்குள்ள சிவன் கோயில் அல்லாளீசுவரர் கோயில் என்று அழைக்கப்படுகிறது. அல்லாள   என்னும் பெயர் இங்கு கருதத்தக்கது. தமிழகத்தில் உள்ள சிவன் கோயில்களில் இறைவன் பெயர் பல்வேறு பெயர்களைக் கொண்டிருக்கின்றன. ஆனால், அல்லாள   என்னும் பெயர் வட சொல்லாகத் தோன்றவில்லை. எந்தத் தமிழ்ச் சொல்லோடு தொடர்புடையது என்று சிந்திக்கத் தூண்டியது.

                             ஈங்கூர் அல்லாளீசுவரர் கோயில்


அல்லாள கருநாடகத்துடன் தொடர்புடைய பெயரா?
கருநாடக் கல்வெட்டுகள் அடங்கிய “எபிகிராஃபியா கர்நாடிகா”  நூல்கள் சிலவற்றை அவ்வப்போது படிப்பதுண்டு. மைசூர்ப் பகுதியில் (கங்க நாட்டில்) காணப்படும் தமிழ்க் கல்வெட்டுகள் இருக்கும் மேற்படி “எபிகிராஃபியா கர்நாடிகா”  நூல்களைப் பார்வையிட்டபோது, “அல்லாள தேவர் “அல்லாள நாதர்  என இரு வகையாகவும் கல்வெட்டுகளில் குறிப்பிடப்பெறும் இறைவன் பெயர், வரதராசப்பெருமாள் கோயில்களிலேயே காணப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. அவை பற்றிய சில குறிப்புகள் இங்கே :


தி.நரசிபுர் வட்டம் ஹெம்மிகெ ஊர் -  வரதராசப் பெருமாள் கோயில்.
கல்வெட்டு எண். 249  கி.பி. 1530.  இறைவன் பெயர் அல்லாள நாதர்

குண்டுலுப்பேட்டை வட்டம் தெற்கணாம்பி ஊர் - வரதராசப் பெருமாள் கோயில். கல்வெட்டு எண். 115  கி.பி. 1504.  இறைவன் பெயர் அல்லாள நாதர்.  

நஞ்சன்கூடு வட்டம் ஹுல்லஹள்ளி ஊர் - வரதராசப் பெருமாள் கோயில்.
கல்வெட்டு எண். 138  16-ஆம் நூற்றாண்டு.. இறைவன் பெயர் அல்லாள நாதர்

மேற்சுட்டிய எடுத்துக்காட்டுகளிலிருந்து, வரதராச(ர்) என்னும் இறைவன் பெயர் கல்வெட்டுகளில் அல்லாள(ர்) எனக் குறிப்பிட்டுளதைக் காணலாம். இக்கல்வெட்டுகளின் காலம் போசளர் காலமாக இருப்பதையும் நோக்குகையில், போசள அரசர்களான “வல்லாள(ர்) பெயரோடு தொடர்புடையதாகத் தோன்றுகிறது. இதை உறுதிப்படுத்தும் வகையில், ஈங்கூர் கோயில் கல்வெட்டில் “வல்லாளயீசுரமுடையார் என்று குறிப்பிட்டுள்ளதைச் சுட்டலாம்.

அல்லாள -  தமிழ்ச் சொல்லோடு தொடர்புடையதா?
வரதராசப் பெருமாள் என்னும் பெயரை வரம் தரும் பெருமாள் என்று பொருள் கொள்ளலாம். தமிழில் இதை அருள் தருகின்ற “அருளாளர் என்றும் அருளாளப் பெருமாள்என்றும் கருதலாம். எனவே, “அல்லாள”  என்பது அருளாள”  என்பதன் திரிபு எனக் கொள்வதில் தவறில்லை. ஆனால், அருளாளர் என்பது பெரும்பாலும் பெருமாளுக்குரிய சொல்லாக இருப்பதைக் காணும்போது, ஈங்கூர் சிவன் கோயில் இறைவற்கும் இதே பெயர் அமைந்தது சற்றே வியப்பைத் தருகிறது. இறைவியின் பெயர், வடிவுள்ள மங்கை என்னும் அழகிய தமிழ்ச்சொல்லால் அமைந்துள்ளது சிறப்பு.

கல்வெட்டு
ஈங்கூர் சிவன் கோயிலில் ஒரே ஒரு கல்வெட்டு, படியெடுக்கப்பட்டுத் (இந்தியக் கல்வெட்டு ஆண்டு அறிக்கை : 173/1967-68.) தமிழகத் தொல்லியல் துறை வெளியீடான “ஈரோடு மாவட்டக் கல்வெட்டுகள்நூலில் (தொடர் எண் : 1085அ/2003) பதிக்கப்பட்டுள்ளது. மேற்படிக் கல்வெட்டு, கோயிலின் அதிட்டானப்பகுதியில், முப்பட்டைக் குமுதப் படையில் பொறிக்கப்பட்டுள்ளது. இயல்பான நிலையில், கல்லின் நிறத்தோடு எழுத்துகளும் ஒன்றிப்போய்விட்டதால் கல்வெட்டு முழுதும் படிக்கும் வகையில் இல்லை. தேய்மானம் உள்ளது. கல்வெட்டின்  மீது மாவு பூசிப் படித்தவாறு அதன் பாடம் இங்கே தரப்படுகிறது :

கல்வெட்டின் பாடம்

படம்-1
வரி 1 (ஸ்வஸ்த்திஸ்ரீ ம(ன்) ம(ஹா)
வரி 2  (க)ருணையில் பி(ரப)

படம்-2
மண்டலீசுர  சிக்கராய உடையார் திருவிரா(ச்சியம்)
(வ)வருசம் வல்லாளயீசுரமுடையா...


                                   கல்வெட்டுகள்





கல்வெட்டின் செய்தி-மேற்படி நூலில் உள்ளவாறு :
மைசூர் உடையார் மரபினரான சிக்கராய உடையார் (1673-1704) காலத்தில் நஞ்சராயர் கொங்கு நாட்டில் அதிகாரம் செய்யும்போது ஈங்கூர் ஊரும் ஊரவரும் வல்லாளீஸ்வரமுடையார்க்குக் குளம் அளித்ததை இக்கல்வெட்டு கூறுகிறது.

பரஞ்சேர்வழி தீர்த்தங்கரர் சிற்பம்
பரஞ்சேர்வழி, காங்கயம் வட்டத்தில் அமைந்துள்ள ஓர் ஊர். இவ்வூரில் மத்தியபுரீசுவரர் கோயில் என்னும் பெயரில் ஒரு பழமையான சிவன் கோயில் உள்ளது. கொங்குச் சோழன் இரண்டாம் விக்கிரம சோழனின் (1256-1265) ஐந்தாம் ஆட்சியாண்டுக் கல்வெட்டு (கி.பி. 1261) ஒன்று திருப்பூர் மாவட்டக் கல்வெட்டுகள் நூலில் பதிவாகியுள்ளது. (இந்தியக் கல்வெட்டு ஆண்டறிக்கை : 559/1908.). அக்கல்வெட்டு, இறைவன் பெயரை “நாயனார் நட்டூர் அமர்ந்தார் என்று குறிப்பிடுகிறது. எத்துணை அழகிய தமிழ்ப்பெயர்! ஆனால், இன்று மத்தியபுரீஸ்வரர் என்று பெயர் பெற்றது எவ்வாறு? விஜயநகரர்,நாயக்கர் கால ஆட்சியில் தமிழ் புறக்கணிக்கப்பட்டதற்கும், சமற்கிருதம் போற்றப்பட்டதற்கும் இது போன்ற எண்ணற்ற சான்றுகளைக் கல்வெட்டுகள் உணர்த்துகின்றன.

மேற்படிக் கல்வெட்டில் இவ்வூர், பரண்சேர்பள்ளி என்று குறிப்பிடப்பட்டுள்ளது. பள்ளி”  என்னும் பெயர் சமணத் தொடர்பைக் குறிக்கிறது. ஒரு சமணப்பள்ளி 13-ஆம் நூற்றாண்டுக்கு முன்னரே இங்கு இருந்திருக்கக் கூடும். தற்போது சமணப்பள்ளி இருந்தமைக்கான சான்றுகள் இல்லையெனினும், இக்கருத்தை சார்ந்து நம்மை நகர்த்தும் வகையில் இங்கு ஒரு சமணச் சிற்பம் இருப்பதைக் காணலாம். சாலையின் ஓரத்தில் ஒரு மேடையில் நிறுவப்பட்ட பலகைக் கல் சிற்பம், தீர்த்தங்கரர் ஒருவருடையது. அர்த்த பரியங்காசனம்”  என்னும் சிறப்புப் பெயரால் அமைந்த ஓர் இருக்கையில் அமர்ந்துள்ள நிலையில் இச்சிற்பத்தின் தலைக்கு மேல் முக்குடை காணப்படுகிறது. முகம் முழுதும் தேய்ந்து கண்கள், மூக்கு, வாய் ஆகிய உறுப்புகளின் புடைப்பு ஒரு சிறிதும் புலப்படவில்லை. கல்வெட்டியல் அறிஞர் புலவர் இராசு அவர்கள், தம் “கொங்கு நாடும் சமணமும்”  நூலில் இச்சிற்பம் மகாவீரருடையது எனக் குறிக்கிறார்.

                         பரஞ்சேர்வழி  தீர்த்தங்கரர் சிற்பம்


பரஞ்சேர்வழி ஆதியம்மன் கோயில்
மேற்படி தீர்த்தங்கரர் சிற்பத்துக்கருகில் சாலையின் எதிர்ப்புறம் மிகப் பழமையான தோற்றத்துடன் ஒரு கோயில் காணப்படுகிறது. சாலையில் நிறுத்தப்பட்ட பலகையில் ஆதி அம்மன் கோயில் என்று எழுதப்பட்டுள்ளது. (புலவர் இராசு அவர்கள், தம் “கொங்கு நாடும் சமணமும் நூலில், இக்கோயிலை ஆயி அம்மன் கோயில் என்று குறிக்கிறார்.) கோயில், செங்கல், சுதை ஆகியவற்றின் கட்டுமானத்தால் ஆனது. ஒரு தள விமானம், சாலை அமைப்புக் கொண்டது. ஒரு சிறிய கருவறையும், அதை ஒட்டி ஒரு அர்த்தமண்டபமும் கொண்டது. முகப்பு வாயிலை மறைத்தவண்ணம் ஒரு திரைச்சீலை. திரைச்சீலையை நீக்கிப்பார்த்தாலும் உள்ளே உள்ள இருட்டில் அம்மனின் உருவம் புலப்படவில்லை. கோவை வாணவராயர் அறக்கட்டளையினர் நடத்திவருகின்ற வரலாற்று உலா ஒன்றில், 2017, திசம்பர் மாதம் இக்கோயிலுக்குச் சென்றிருந்தபோது, முகப்பு வாயிலின் கல்லால் ஆன நிலைக்கால் பகுதியில் புலப்படாத ஒரு கல்வெட்டு தற்போது புலப்பட்டது. காரணம், கற்பரப்பு முழுதும் சுண்ணப்பூச்சு இருந்தமையே. இன்று ஆர்வலர்கள் யாவரோ சுண்ணப்பூச்சை அகற்றிக் கல்வெட்டினைப் படிக்கும் வண்ணம் நல்லதொரு பணியைச் செய்துள்ளனர். அவர்கள் படித்தனரா என்பது தெரியவில்லை. ஆனால், உழைப்பும் முயற்சியும் இன்றி ஒரு கல்வெட்டு எனக்குக் கிடைத்தது. கல்வெட்டில் காலக்குறிப்பு எதுவும் இல்லை. பிற்காலக் கல்வெட்டுதான். எழுத்தமைதி, எகர-ஏகார/ஒகர-ஓகார வேறுபாடின்மை ஆகியவற்றின் அடிப்படையில், கல்வெட்டு 19-ஆம் நூற்றாண்டின் தொடக்க காலத்தைச் சேர்ந்ததாகக் கொள்ளலாம்.

                      பரஞ்சேர்வழி  ஆதியம்மன் கோயில்


கல்வெட்டின் பாடம் :

நிலைக்கால்-ஒன்று

1         பறஞ்
2         சேற்                 (கல்வெட்டில் செற்)
3         வழி
4         க்கிரா
5         மத்
6         துக்க
7         ணக்கு
8         திருப்பா
9         யத்தூ
10     ர் சோழி             (கல்வெட்டில் சொழி)
11     யப் பிறா
12     மணரி
13     ல் மாண்
14     டவியா
15     கோத்தி                (கல்வெட்டில் கொ)
16     ரம் போ                (கல்வெட்டில் பொ)
17     தாயான
18     சூஷ்த்தி
19     ரம் வீர
20     நாரண
21     ய்யன்
22     குமார(ன்)


நிலைக்கால்-இரண்டு 

23     திம்ம
24     ணய்ய
25     ன் ...
26     ........
27     (அம்மன்)
28     சன்ன
29     தியில்
30     மண்ட
31     பம் திரு
32     நிலைக்
33     கால்



       பரஞ்சேர்வழி  ஆதியம்மன் கோயில் - நிலைக்கால் கல்வெட்டு










கல்வெட்டுச் செய்தி
கல்வெட்டில் இவ்வூர் பரஞ்சேர்வழி என்று குறிக்கப்பெறுகிறது (வல்லின “றகரம் பயன்படுத்தப்பெற்றுள்ளது). இக்கிராமத்தின் கணக்கர் பதவியிலிருந்த சோழியப்பிராமணரான வீர நாரணய்யன் மகன் திம்மணய்யன் கோயிலின் மண்டபத்தையும், நிலைக்காலையும் கட்டுவித்தார். இவர் மாண்டவிய கோத்திரத்தையும், போதாயனச் சூத்திரத்தையும் சேர்ந்தவர். இந்தச் சிறப்புச் செய்தி, சோழர் காலத்திலிருந்து பிராமணர்கள் கோத்திரம், சூத்திரம் ஆகியவற்றைத் தம் அடையாளமாக வெளிப்படுத்தி வந்த மரபுத் தொடர்ச்சியைக் காட்டுகிறது. 

கோயிலின் வளாகத்தில் ஆணும் பெண்ணுமாய் உள்ள மூன்று சிற்பத்தொகுதிகள் காணப்படுகின்றன. இவை சதிக்கல் வகையைச் சார்ந்த நினைவுக்கற்களை ஒத்துள்ளன.

பரஞ்சேர்வழி
கரியகாளியம்மன் கோயிலும் கொங்கு வேளாளர் குலங்களும்
இக்கோயிலின் கட்டுமானம் பழமையானதல்ல. எனினும், கொங்கு வேளாளர்கள், கொங்குச் சோழர் ஆட்சியிலிருந்து இருப்ப்வர்கள். தங்கள் குடி மரபின் வழியில் தம் குலக்கோயில்களை அமைத்துக் கொண்டு வழிபட்டு வருபவர்கள். கோயில்கள் பிற்காலக் கட்டுமானங்களாயிருப்பினும், மரபு பழமையானது. கி.பி. 12-14 நூற்றாண்டளவில் கொங்குச் சோழர்களின் கல்வெட்டுகளில், கொடையாளிகளாகப் பல வேளாளர் குலப்பெயர்கள் காணப்படுகின்றன. இந்தப்பகுதியில் (பெருந்துறை வட்டம்) உள்ள கல்வெட்டுக்ளில் காணப்படும் பெயர்கள் ஒரு சில :

கல்வெட்டு உள்ள ஊர்              குலப்பெயர்

பொன்னிவாடி                   செவ்வாயர், ஆந்தை
பார்ப்பனி                       காடை
திங்களூர்                       பனைங்காடர், வண்ணக்கர்
வள்ளிஎறிச்சல்                  கணக்கன்
நத்தக்காரை                     பயிறகள்
ஆதியூர்                         தூறர், குண்டெலிகள்
குன்னத்தூர்                     சாத்துவாயர், கொள்ளி, கணவாளர்,  
                                தேவந்தை, சாத்தந்தை

கரியகாளியம்மன் கோயில், ஆறு குலத்தவரின் கோயில். செம்பகுலம், ஓதாள குலம், ஆடகுலம், ஆவகுலம், விழியகுலம், பயிரகுலம் அகியன அவை. இந்த ஆறு குலத்தவர்க்கும் உரிய ஆறு குதிரைகள் பெரிய சிற்பங்களாகக் கோயிலில் நிற்கின்றன.

                     பரஞ்சேர்வழி  கரியகாளியம்மன் கோயில்

                     ஆறு குலத்தவர்க்கும் உரிய ஆறு குதிரைகள்




பெருந்துறை வட்டம், வெள்ளோடு என்னும் ஊரில் உள்ள சர்வலிங்கேசுவரர் கோயில் கல்வெட்டு ஒன்று இங்கே நினைவுக்கு வருகிறது. இக்கல்வெட்டு சற்றுச் சிறப்பானது. கொங்கு நாட்டின் 24 நாடுகளுள் ஒன்றான பூந்துறை நாட்டுச் சபையார் 32 ஊரவரும் வெள்ளோட்டில் ஒன்று கூடிச் சர்வலிங்கேசுவரர் கோயிலில் தைப்பூச விழாவைப் பதினொரு நாள் கொண்டாட முடிவு செய்தனர். தைப்பூச விழாவுக்கும், அந்தணருக்கு உணவிடவும் தேவையான பொருள்களாக அரிசி, பருப்பு, நெய், பழம், வெல்லம், எண்ணெய், மிளகு, உப்பு, தேங்காய், இளநீர், பாக்கு, வெற்றிலை, மஞ்சள், சந்தனம், கற்பூரம், பரிமளம் ஆகியவையும் ஆயிரத்தெட்டுப் பணமும் கொடையளிக்கின்றனர். தீர்மானத்தில் கையொப்பம் இட்டவர்களாக 24 ஊர்களைச் சேர்ந்த 24 பேர், 16 குலப் பெயர்களோடு  இடம்பெறுகிறார்கள். இக்கல்வெட்டு, உம்மத்தூர் அரசர் வீரநஞ்சராய உடையார் காலத்தது. இவரின் ஆட்சிக்காலம் கி.பி. 1482-1510.


முடிவுரை
பெருந்துறைப் பகுதி, பழங்கொங்கு நாட்டின் இருபத்து நான்கு நாட்டுப் பிரிவுகளில் ஒன்றான பூந்துறை நாட்டைச் சேர்ந்தது. பரஞ்சேர்வழி, காங்கய நாட்டைச் சேர்ந்தது. இரண்டும் அடுத்தடுத்திருக்கும் வகையில் உள்ள சில ஊர்களில் தொல்லியல் சார்ந்த பல இடங்களைக் கண்டு, பல செய்திகளைத் தெரிந்துகொண்ட ஒரு நிறைவு, ஊர் திரும்புகையில் ஏற்பட்டது.










துரை.சுந்தரம், கல்வெட்டு ஆராய்ச்சியாளர், கோவை.
அலைபேசி :  9444939156.