மொத்தப் பக்கக்காட்சிகள்

வியாழன், 24 நவம்பர், 2016

சேவூர் அழகப்பெருமாள் கோயில்

        உலக மரபு வார விழாவையொட்டி கோவை “தினமலர் நாளிதழில் வெளியான செய்தியில்,

       தினமலர்-கோவைப்பதிப்பு-24-11-2016. 



“அவிநாசி-சேவூரில் 13-ஆம் நூற்றாண்டுக் காலத்துப் பெருமாள் கோயில் கும்பாபிஷேகம் சமீபத்தில் நடந்தது. இக்கோவிலில் உள்ள கல்வெட்டுகளை, இயந்திரம் கொண்டு பெயர்த்துள்ளனர். இதுபோன்ற செயல்களில் ஈடுபடாமல் இருக்க விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டியது அவசியம்.

என்று குறிப்பிட்டிருந்தார்கள். அதைப்பார்த்ததும், 2013-ஆம் ஆண்டு ஆகஸ்ட்”  மாதம் இக்கோயிலைச் சென்று பார்த்த நினைவு வந்தது. அப்போது, பழைய கோயில் முழுதும் இடிக்கப்பட்டு, கருவறையும், அர்த்தமண்டபமும் கட்டிமுடிக்கப்பட்ட நிலையில் பணி நின்றுபோயிருந்தது. கோயிலில் மொத்தம் பதினாறு கல்வெட்டுகள் இருந்துள்ளன. கி.பி. 1276-ஆம் ஆண்டிலிருந்து தொடங்கி, கி.பி. 1342-ஆம் ஆண்டுவரையிலான கால இடைவெளியில், பதினாறு கல்வெட்டுகள்; கொங்குச் சோழன் மூன்றாம் விக்கிரமன் (1273-1305), கொங்குப்பாண்டியன் வீரபாண்டியன் (1265-1285), கொங்குப்பாண்டியன் சுந்தரபாண்டியன் (1285-1312), போசள அரசன் வீரவல்லாளன் (1292-1342) ஆகிய அரசர்கள் காலத்தவை.

      கொங்குநாட்டில் வடபரிசார நாட்டு சேவூரான செம்பியன் கிழானடி நல்லூர் என இவ்வூர் வழங்கியது. கோயில், திருமேற்கோயில் அழகப்பெருமாள் விண்ணகரம் என்ற பெயராலும், சுந்தரபாண்டிய விண்ணகரம் என்ற பெயராலும் வழங்கப்பட்டது.

      மேற்குறித்த பதினாறு கல்வெட்டுகளில் சில கல்வெட்டுகளை முன்பிருந்த பகுதிகளான கருவறை மேற்குச் சுவரும் வடக்குச்சுவரும் சந்திக்கும் இடத்தில் வைத்துக் கட்டியிருந்தார்கள். சில கல்வெட்டுகள் தெற்குப்பகுதி அதிட்டானத்தில் ஜகதிப்படையில் வைத்துக் கட்டியிருந்தார்கள். இருப்பினும், பல கல்வெட்டுத்துண்டுகளைக் கருவறையிலோ, அர்த்தமண்டபத்திலோ முறையாக வைத்துக் கட்டாமல் கோயில் வளாகத்தில், பிரித்தெறிந்த கற்களுக்கிடையில் வீணாகும்படி போட்டிருந்தார்கள். அர்த்தமண்டப முகப்புப் பகுதியும். கருவறையின் மேல் எழுப்பப்பட்ட விமானமும் கலை அழகின்றி மிக எளிமையான தோற்றத்தில் கட்டப்பெற்றிருந்தன. அவற்றிலிருந்து தொலைவில் முன்புறம் இருந்த பலிபீடமும், ஒரு மண்டபமும் (கருடாழ்வார் மண்டபம்?), ஆங்காங்கே இடிந்துவிட்ட தோற்றத்தில் காணப்பட்ட அழகிய சுற்றுச் சுவரும் மட்டுமே பழமையின் எச்சங்கள். கீழே தரப்பட்டுள்ள படங்கள், புனரமைப்பின் தன்மையை விளக்கும்.







அர்த்தமண்டபம், கருவறை விமானம் - எளிய தோற்றத்தில்




















-------------------------------------------------------------------------------
கல்வெட்டு ஆராய்ச்சியாளர், கோவை.
அலைபேசி : 9444939156.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக