மொத்தப் பக்கக்காட்சிகள்

வெள்ளி, 14 அக்டோபர், 2016

புதுக்கோட்டை-கீரனூர் கோவில் கல்வெட்டு


காரைக்குடி நண்பர் கல்வெட்டுப்படம் ஒன்றை அனுப்பியிருந்தார். அதைப்படித்துப்பார்த்ததில் கிடைத்த செய்திகள் இங்கு பகிர்ந்துகொள்ளப்படுகின்றன.




கல்வெட்டுப்பாடம்

  1. ஸ்ரீமண் சோளர்வீமன் சோழற்யாண்
  2. அக்கலதேவ சோழமகாராசாவும் நாட்(டாரும்)
  3. ஏவிளம்பி வரு தை மாதம் .... கீரனூர் உள்ள
  4. ..... இசை(ந்)த ஊரவரும் உப்பலி குடி ஊராயினார்
  5. ந்த ஊரவரும் மேலை புதுவயல் கீழை புதுவயல்
  6. .... பள்ளத்தூ(ர்) மதியத்தூ(ர்) விருதூர் யாகு(வ)
  7. ச்சி ஊர்க்கு இசைன்த ஊரவரும்
  8. அக்கால சோழ மா
  9. த்தலைவரும் நகராற்றுமலை
  10. சில்மருதூ(ர்) பெருநசை ஊர்
  11. யாகுடி ஊரவரும் உடையவர் உத்தமசோழரீசு
  12. ரமுடைய தம்பிரானாக்கு அய்யன் (வ)சவாசய்
  13. யன் தன்மம் ஆக யிரஞ் குடி தேவமண்
  14. டலம் ஆக திருவிளம் பற்றுகையில் அந்த
  15. நின்றையற்றிலே தேவமண்டலம் ஆக வி
  16. ட்டபடியிதுக்கு அகுதம் சொல்லி யாதாம்
  17. ஒருவன் தேவமண்டலம் அகக்காரியம் என
  18. (என்று) ஆவது ... ஊ குடுற்ற தேவண்டா
  19. னால் யிரசதெண்டமதுற்று யிருபற்று
  20. நலு பொன்னும் குடுற்று அவன் அவன் மண்
  21. று மனை கணியாஷியும் தேவமண்டல அக
  22. க்கடவோம் ஆகவும் யிதுக்கு யிராண்(டு) நினை
  23. ற்றவன் கெங்கைரையில் கரா பசுவை கொண்
  24. றப் (பறதெவோச) கடவன் அகவும் யிதுக்கு யிண்
  25. டு நினைற்றவன்
விளக்கங்கள்:

·         கல்வெட்டின் காலம் நாயக்கர் காலம் எனக் கருதத்தக்கவகையில் சில அகச்சான்றுகள் கல்வெட்டுப்பாடத்தில் காணப்படுகின்றன.  ஒன்று கல்வெட்டு தொடங்கும்போது ஸ்ரீமன் என்று தொடங்குகிறது. (கல்வெட்டில் மிகுதியாகப் பிழைகள் உள்ளன; அவற்றில் “ஸ்ரீமன் என்பது “ஸ்ரீமண்என எழுதப்பட்டுள்ளது.) ஸ்ரீமன்என்னும் தொடக்கம் நாயக்கர் காலக்கல்வெட்டுகளில் மிகுதியும் காணப்படுகிறது. இரண்டாவது,  அக்கல தேவ மகாராசா”  என்னும் பெயர். நாயக்கர் ஆட்சிக்காலங்களில், நாயக்கர்களின் பிரதிநிதிகளாக இருந்து ஆட்சியை நிருவாகம் செய்துகொண்டிருந்தவர்கள் மண்டலத்தலைவர் ஆவர். அவர்கள் மகாமண்டலேசுவரர், மகாராசா என்ற பெயர்களைக்கொண்டிருந்தனர். எடுத்துக்காட்டாக, (கொங்கு மண்டலத்தில்) கோவைப்பகுதியில், வாலையதேவ மகாராசா என்ற நாயக்கர் பிரதிநிதியான மண்டலதலைவர் பெயர் குடிமங்கலக் கல்வெட்டில் வருகிறது. அதுபோல், புதுக்கோட்டைப்பகுதியில் ஒரு அக்கல/அக்கால தேவமகாராசா இருந்திருக்கலாம். புதுக்கோட்டைப்பகுதியில் வேறு ஊர்களின் கல்வெட்டுகளில் இப்பெயர் வரக்கூடும்.
·         கல்வெட்டில் ஏவிளம்பி என்னும் ஆண்டு குறிப்பிடப்பெறுகிறது. மேற்சொன்ன நாயக்கர் காலத்தை ஒட்டி இந்த ஏவிளம்பி வருடத்தை கி.பி. 1537-38 –ஆம் ஆண்டுடன் இணைக்கலாம். கி.பி. 1597-98 ஆம் ஆண்டுக்கும் ஏவிளம்பி வருடம் பொருந்தும்.
·         கீரனூரில் உள்ள உத்தமசோழரீசுவரர் கோயிலுக்கு ஒர் ஊர் கொடையாகச் சேர்க்கப்படுகிறது. முதலாம் இராசராசனுக்கு முன் ஆட்சி செய்த உத்தம சோழன் (கி.பி. 970-985) பெயரால் அமைந்த கோயில். கொடையாகச் சேர்க்கப்பட்ட ஊரின் பெயர் தெளிவாக இல்லை. “யிரஞ் குடி’ (இரஞ்சிக்குடி?) என்னும் பெயர் கல்வெட்டில் உள்ளது. கோயிலைச் சேர்ந்த ஊர்கள் தேவமண்டலங்கள் என அழைக்கப்பெற்றன. எனவே தேவமண்டலமாக மேற்படி ஊர் திருவுளம் பற்றப்படுகிறது. கொடையாளி அய்யன் வசவாசய்யன் எனக்குறிக்கப்படுகிறார். (பெயர், விசுவாசய்யன் என்பதாகவும் இருக்கலாம்)
·         கீரனூர்ப்பகுதியின் நாட்டாரும், அப்பகுதியில் இருந்த ஊர்களின் தலைவர்களும் (ஊரவர்) கூடி ஒப்புதலளித்து (கல்வெட்டில், “இசைந்துஎன்று வரும் தொடர் ஒப்புதலைக்குறிக்கும்.) கொடை தீர்மானிக்கப்படுகிறது. வரி 15-இல், நின்றையற்றிலே தேவமண்டலம் ஆக விட்டபடி என வருகிரது. இதில், “நின்றைஎன்பது “நின்றிறை என்னும் கல்வெட்டுச் சொல்லாக இருக்கக்கூடும்.
·         வரி 15-இல், நின்றையற்றிலே தேவமண்டலம் ஆக விட்டபடி  என்றொரு தொடர் அமைகிறது. இது, தேவமண்டலமாக விட்ட ஊரானது, நின்றையத்தில் விடப்பட்டது என்னும் பொருளைத் தருகிறது. முன்பே கூறியதுபோல், கல்வெட்டில் மிகுதியும் பிழைகள் காணப்படுகின்றன. ற்ற, “ற்று”  என்னும் எழுத்துச் சேர்க்கை கல்வெட்டில் “த்த”,  “த்து” ,  “க்கு”  என்னும் சேர்க்கைக்கு மாற்றாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது.
வரி 15 :  நின்றயத்திலே -> நின்றையற்றிலே
         வரி 18 :  குடுத்த -> குடுற்ற
   வரி 19 :  யிரசதெண்டமதுற்று -> யிரசதெண்டமதுக்கு
   யிரசதெண்டமதுக்கு -> யிரச தெண்டம் + அதுக்கு= யிராச தெண்டம்   
  அதுக்கு.
 
  வரி : 19-20  யிருபற்று நலு -> யிருபத்து நலு = யிருபத்து நாலு
   இப்பிழைகளை நீக்கிப்படிக்கையில், நின்றையத்திலே, குடுத்த,  
        யிருபத்து நாலு, யிராச தெண்டம் அதுக்கு ஆகிய சரியான பொருள்
        தருகின்ற சொற்கள் கிடைக்கின்றன. மேலும், “இஎன்னும் எழுத்தில்
        தொடங்கும் சொற்கள் “யி என்னும் எழுத்தில் தொடங்குவதையும்
        காணலாம். எனவே, இராச தெண்டம், இருபத்துநாலு ஆகியன
        சரியானவை என்பது பெறப்படுகிறது. “நின்றைஎன்பதும், “நின்றிறை
        என்பதன் பிழையான வடிவம் எனக் கருதவேண்டியுள்ளது. காரணம்,
        கல்வெட்டு அகராதிப்படி, “நின்றிறை”  என்பது “மாறாத வரி
        யைக்குறிக்கும் சொல்லாகும்.
இவை அனைத்தையும் ஒன்றுகூட்டிப்பொருள் கொள்ளும்போது,    தேவமண்டலமாகச் சேர்க்கப்பட்ட ஊர், மாறாத வரி வருவாயைக்கொண்டதாக அமைக்கப்பட்டது எனவும், இந்த தன்மத்துக்கு அகுதம் (தீமை) சொன்னவர்கள் இராசதெண்டம் (அரசக்குற்றம்) செய்தவராகக் கருதப்படுவார்கள் எனவும், அவ் இராசதெண்டத்துக்கு இருபத்துநாலு பொன் அபராதம் விதிப்பதோடு, அவர்களுடைய மன்று, மனை, காணியாட்சி நிலம் ஆகியன பறிக்கப்பட்டுத் தேவமண்டலமாக இணைக்கப்படும் எனவும் விளக்கம் அமைகிறது. ( காணியாட்சி என்பது கணியாஷி எனப் பிழையாக எழுத்தப்பட்டுள்ளதை நோக்குக.)

  •  இந்த தன்மத்துக்கு “இரண்டு நினத்தவன்”  (கல்வெட்டில் யிராண்டு நினைற்றவன்)  கங்கைக்கரையில் காராம்பசுவைக்கொன்ற பாவத்தை அடைவான் எனக்கல்வெட்டு  முடிகிறது.
இரண்டு நினைத்தவன் = தீங்கு செய்ய நினைத்தவன். 
இரண்டு நினைத்தல் என்பது இரண்டகம் செய்தல் என்று நாம் தற்போதும்
கூறுகின்ற வழக்கை ஒட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

------------------------------------------------------------------------
து.சுந்தரம், கல்வெட்டு ஆராய்ச்சியாளர், கோவை.
அலைபேசி : 9444939156.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக