மொத்தப் பக்கக்காட்சிகள்

வியாழன், 19 மே, 2016

வட்டெழுத்து கற்போம் – 3


வட்டெழுத்துப்பயிற்சி -  உயிரெழுத்துகள்

                

                ஐ          ஒ              ஓ

மெய்யெழுத்துகள் -  வல்லினம்


    க       ச        ட         த          ப      ற



மெய்யெழுத்துகள் -  மெல்லினம்


     ங         ஞ        ண      ந        ம      ன


மெய்யெழுத்துகள் -  இடையினம்


    ய         ர        ல         வ       ழ      ள




து.சுந்தரம், கல்வெட்டு ஆராய்ச்சியாளர், கோவை.

அலைபேசி : 9444939156.

ஞாயிறு, 15 மே, 2016

மொக்கணீசுவரர் கோயிலில் ஆயிரம் ஆண்டுகள் பழமையான வட்டெழுத்துக் கல்வெட்டு கண்டுபிடிப்பு


கல்வெட்டு அறிஞர் மா. கணேசனார்

         அவிநாசியைச் சேர்ந்த மறைந்த கல்வெட்டு அறிஞர் முனைவர் மா.கணேசன் அவர்கள் 1980களில் கோவை மாவட்டக் கல்வெட்டுகளைப் படியெடுத்து நூலாகப் பதிப்பித்தவர். அவரது ஆய்வுகளில், சேவூருக்கருகில் அமைந்துள்ள குட்டகம் என்னும் ஊரில் இருக்கும் மொக்கணீசுவரர் கோயிலும் ஒன்று. அக்கோயிலில், வட்டெழுத்துகளால் பொறிக்கப்பட்ட ஒரு கல்வெட்டினை அவர் கண்டறிந்தார். ஆனால், அக்கல்வெட்டு நீண்டகாலமாகப் படிக்கப்படாமலேயே இருந்தது. இக்கட்டுரை ஆசிரியரிடம் இக்கல்வெட்டைப்பற்றிக் குறிப்பிட்டுச் சொல்லியிருக்கிறார்.

2014-ஆம் ஆண்டில் வட்டெழுத்துக்கல்வெட்டு ஆய்வு

         2014-ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் இக்கல்வெட்டு, கட்டுரையாசிரியரால் ஆய்வு செய்யப்பட்டுக் கல்வெட்டின் பாடமும் பெருமளவு படிக்கப்பட்டது. முழுமையாகப் படித்தபின்பே சரியான செய்தி வெளிப்படும் என்னும் காரணத்தால், மீண்டும் கல்வெட்டு ஆய்வுக்குட்படுத்தப்பட்டது. அண்மையில், 2016 மே மாதம் 8-ஆம் தேதி, தஞ்சை-தொல்லியல் கழகத்தைச் சேர்ந்த கல்வெட்டு ஆராய்ச்சியாளர் விழுப்புரம் வீரராகவன் அவர்கள் திருப்பூருக்கு வந்திருந்தபோது, நானும் (இக்கட்டுரை ஆசிரியர்) அவரும் இணைந்து இகல்வெட்டினை முழுமையாக ஆய்வு செய்துவிடவேண்டும் என்னும் முனைப்போடு செயலில் இறங்கினோம். (கட்டுரை ஆசிரியரும் தஞ்சை-தொல்லியல் கழக உறுப்பினரே.) வீரராகவன் அவர்கள் ஓர் அற்புதமான தொல்லியல் ஆய்வாளர். முறைப்படி கல்வெட்டுகளையும் புடைப்புச் சிற்பங்களையும் வெள்ளைத்தாளில் படியெடுத்து கல்வெட்டுகளின் வடிவங்களையும், புடைப்புச் சிற்பங்களின் வடிவங்களையும் நம் கண்முன்னே உயிரோட்டமாக ஆக்கித்தருவதில் வல்லவர். அவிநாசியைச் சேர்ந்த வரலாறு மற்றும் கல்வெட்டு  ஆராய்ச்சியில் ஈடுபட்டுவரும் தன்னார்வலர் ஜெயசங்கரும் எங்களுடன் இணைந்துகொண்டார். வீரராகவன் அவர்களது பணி வாயிலாகக் கல்வெட்டு முழுமையாகப் படியெடுக்கப்பட்டு அதன் பாடம் படிக்கப்பட்டது. கல்வெட்டின்மேல் ஒட்டிய வெள்ளைத்தாளுடன் எடுக்கப்பட்ட கல்வெட்டின் ஒளிப்படத்தைப் பார்த்தாலே, படியெடுத்ததன் நேர்த்தி புலப்படும்.

கோயிலின் தோற்றம்

         மொக்கணிசுவரர் கோயில் ஒரு பழமை வாய்ந்த கோயிலாக இருந்துள்ளது. கி.பி. 12 அல்லது 13-ஆம் நூற்றாண்டளவில் கட்டப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது. தற்காலக் கட்டுமானத்துடன் தற்போது கோயில் தோற்றமளித்தாலும் பழமையான் கட்டுமானத்தின் எச்சங்கள் தற்போதும் கோயிலில் உள்ளன. சேவூர்ப்பகுதியில் ஒரு வணிக வழி இருந்துள்ளதாகக் குறிப்புகள் கிடைத்துள்ளன. சிவ வழிபாட்டில் மிகுந்த ஈடுபாடுகொண்ட வணிகர் ஒருவர் இப்பகுதிக்கு வருகையில் இங்கு இளைப்பாறி உணவு உண்ணுமுன் சிவ பூசை செய்ய முனைந்தார். உதவிக்கு வந்தவர், தாம் எப்போதும் கொண்டுவரும் சிவலிங்கத்திருமேனியைக் காணாது, குதிரைக்கு உணவான கொள்ளுப்பயறு நிரம்பிய பையை லிங்க வடிவில் திரட்டி மண்ணில் பதித்து விட்டதாகவும், வணிகர் சிவபூசையை முடித்தெழுந்தபோது, உதவியாளர் மீண்டும் கொள்ளுப்பையை எடுக்க முனைந்ததில், கொள்ளுப்பை சிவலிங்கமாக உருவெடுத்திருந்ததைக் கண்டு வியப்பெய்தி வணிகரிடம் சொல்ல, அங்கு ஒரு சிவன் கோயில் எழுப்பப்பட்டதாகவும் செவி வழி வரலாறு ஒன்று இக்கோயிலைப்பற்றி நிலவிவருகிறது.. இச்செவிவழிச் செய்திக்கு வேறு மாற்று வடிவங்கள் முன்வைக்கப்படலாம். எனினும், அடிபடைக்கருத்து மொக்கணி சிவலிங்கமாக வழிபடப்பட்டது என்பதேயாகும். கொள்ளுப்பை, மொக்கணி என்னும் பெயரால்  வழங்கப்பட்டதன் காரணமாக இறைவன் பெயர் மொக்கணீசுவரர் என்றாயிற்று.  

                          கோயிலின் தோற்றம்  
  



12-13 -ஆம் நூற்றாண்டு எச்சங்கள்






                வட்டெழுத்துக் கல்வெட்டு - மூலத்தோற்றம்

                கல்வெட்டு படித்தல் - முதல் முயற்சியின்போது


கல்வெட்டின் பழமை ஆயிரம் ஆண்டுகள்

         கோயிலின் திருச்சுற்றுப்பாதையில் தளத்தில் நிறுத்தப்பட்டுள்ள ஒரு பலகைக்கருங்கல்லில் வட்டெழுத்துக் கல்வெட்டு காணப்படுகிறது. வட்டெழுத்து என்பது இரண்டாயிரத்து ஐந்நூறு ஆண்டுகள் பழமையுள்ள தமிழி (அல்லது தமிழ் பிராமி) என்னும் தமிழ்த் தொல்லெழுத்திலிருந்து தோன்றிய எழுத்து வடிவமாகும். தமிழி எழுத்திலிருந்து தோன்றிய மற்றொரு எழுத்து வடிவம் தமிழ் எழுத்து. இரண்டு எழுத்துகளும் ஒன்றாகத் தோன்றி வளர்ச்சியுற்றாலும், சோழர் ஆட்சியின்போது தமிழகம் முழுதும் தமிழ் எழுத்துக்கு முதன்மை இடம் அளிக்கப்பட்டதால், காலப்போக்கில் வட்டெழுத்தின் பயன்பாடு மறைந்தது. இருப்பினும், வட்டெழுத்து, மக்கள் எழுத்தாக நீண்ட காலம்வரை அதாவது கி.பி. 12-ஆம் நூற்றாண்டுவரை கொங்குநாட்டில் வழக்கில் இருந்துள்ளது. கொங்குநாட்டை ஆட்சி செய்த கொங்குச்சோழ அரசன் வீரராசேந்திரன் காலத்திலும் (கி.பி. 1207-1256) கொங்கு நாட்டில் வட்டெழுத்து வழக்கில் இருந்தது. பிரமியத்தில் இவன் காலத்து வட்டெழுத்துக் கல்வெட்டு இருக்கிறது.

                            கல்வெட்டு படியெடுத்தல்







         மொக்கணீசுவரர் கோயில் வட்டெழுத்துக் கல்வெட்டில் இருபது வரிகள் காணப்படுகின்றன. எழுத்துகள் மிக அழகாகப் பொறிக்கப்பட்டுள்ளன. கல்வெட்டின் முதல் வரி, “ (ர பதி) மூர்க்கஸ்ரீ பராக்கிரம சோழ தேவர்க்குத் திருவெழுத்திட்டு”  என்று தொடங்குகிறது.  முதல் ஒன்பது வரிகளில் இவ்வரசனுடைய மெய்க்கீர்த்தி கூறப்படுகிறது. பதினோராவது வரியில் இந்த அரசனது ஆட்சியாண்டு “அஞ்சாவது என்று குறிப்பிடப்படுகிறது. கோவை மாவட்டக்கல்வெட்டுகள் நூலில் கொங்குச்சோழ அரசர்களில், மூர்க்க பராக்கிரம சோழன் பெயர் காணப்படாமையாலும், அதேபோழ்து, கலிமூர்க்க விக்கிரம சோழன் என்னும் அரசன் கி.பி. 1004 முதல் கி.பி. 1047 வரை ஆட்சியில் இருந்துள்ளதாகக் குறிப்புள்ளதாலும் அவனைப்பற்றிய குறிப்புகளைத்தேடியபோது, திருப்பூர் மாவட்டக்கல்வெட்டுகள் நூலில், தாராபுரம் வட்டம் பிரமியம் என்னும் ஊரின் வலஞ்சுழிநாதர் கோயிலில் உள்ள வட்டெழுத்துக் கல்வெட்டுகளில் “கோக்கலிமூர்க்க விக்கிரமச்சோழன்”  என்னும் அரசனின் கல்வெட்டில் மேற்படி மொக்கணீசுவரர் கோயில் வட்டெழுத்துக்கல்வெட்டில் வருகின்ற அதே மெய்க்கிர்த்தி வரிகள் காணப்ப்டுவதைப் பார்த்தேன். அரசனின் பெயர் மாறினாலும் மெய்க்கீர்த்தி ஒன்றே. அரசன்பெயரைத் தெளிந்துகொள்ள தொல்லியல்துறையில் உதவி இயக்குநராகப் பணியாற்றிய முனைவர் அர.பூங்குன்றன் அவர்களைத் தொடர்புகொண்டபோது, கலிமூர்க்க விக்கிரமச்சோழனுக்கு “பராக்கிரமச் சோழன்என்று வேறொரு பெயரும் இருந்ததாகவும், அன்னூர்க்கோயிலில் ஒரு வரி மட்டும் உள்ள வட்டெழுத்துக்கல்வெட்டொன்றில் பராக்கிரம சோழன் பெயர் வருவதாகவும், ஆனால் இக்கல்வெட்டு நூலில் சேர்க்கப்படவில்லை என்றும் சொன்னார். எனவே, கல்வெட்டு, கலிமூர்க்க விக்கிரமச்சோழன் காலத்தைச் சேர்ந்தது என்பது உறுதியாயிற்று. ஆட்சியாண்டு ஐந்து என்பதால்  இக்கல்வெட்டு கி.பி. 1009-ஆம் ஆண்டில் பொறிக்கப்பட்டது என்று உறுதியாகிறது. ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலான பழமை கொண்டது என்பது கல்வெட்டின் சிறப்பு. 
         வழக்கமாக அரசர்களின் மெய்க்கீர்த்திகளில், அரசனது போர் வெற்றியும் புகழும் இடம்பெறும். ஆனால், இவ்வரசனின் மெய்க்கீர்த்தியில், இவன், குடிமக்களிடம் ஆறில் ஒன்றை வரியாகக் கொண்டான் என்றும், அல்லவை கடிந்து குடிபுறம் காத்தான் என்றும், பெற்ற குழவிக்கு உற்ற நற்றாய் போல் குடிமக்களைக் காத்து நாடு வளம் பெருக்கினான் என்றும் கூறப்படுகிறது. இதுவும் இக்கல்வெட்டில் காணப்படும் சிறப்பாகும். கொங்குநாட்டை நாற்பது ஆண்டுகளுக்கு மேல் ஆண்ட அரசர் இருவரில் இவன் ஒருவன். இன்னொருவன் வீரராசேந்திரன் ஆவான்.

கல்வெட்டின் செய்தி

         கல்வெட்டில், இக்கோயில் எழுப்பப்பட்ட செய்தி காணப்படுகிறது. கொங்கு நாட்டில் பழங்காலத்து இருந்த இருபத்து நான்கு நாட்டுப்பிரிவுகளில் வடபரிசார நாடும் ஒன்று. இந்த் நாட்டுப்பிரிவில், பேரூர், அவிநாசி, சேவூர் போன்ற ஊர்கள் அடங்கும். வடபரிசார நாட்டில் இருந்த குடவோடான இராசவிச்சாதிர நல்லூரில் வாழும், முள்ளிகள் என்னும் வெள்ளாளர் பிரிவைச் சேர்ந்த கோவன் விச்சாதிரன் என்பானின் மனைக்கிழத்தி  எறுளங்கோதை என்னும் பெண்மணி இக்கோயிலை எடுப்பித்தாள் என்று கல்வெட்டுச் செய்தி கூறுகிறது. இதனால், மொக்கணீசுவரர் கோயில் கி.பி. 12 அல்லது 13-ஆம் நூற்றாண்டளவில் கட்டப்பட்டிருக்கலாம் என்னும் கருத்து மாற்றம் பெறுகிறது. கி.பி. 11-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலேயே இக்கோயில் கட்டப்பட்டது என அறிகிறோம். வெள்ளாளர் குலப்பெண் ஒருத்தி கோயில் கட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது. 10, 11-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த பெண்டிரின் சமூக நிலை இக்கல்வெட்டின் மூலம் அறியப்படுகிறது. அவர்களுக்கு இருந்த பொருளாதார உரிமை, கோயில் கட்டுதல் போன்ற செயல்களில் ஈடுபடும் உரிமை ஆகியன தெளிவாகின்றன. கொங்குப்பகுதியில் பழங்காலத்தில் எழுப்பப்பட்ட சிறு கோயில்கள் (கற்களால் கட்டப்பெற்றவை) எளிமையான வடிவில் கட்டப்பட்டன என்று வரலாற்று அறிஞர்கள் கருதுகிறார்கள். கருவறையும் அதனை அடுத்து அர்த்தமண்டபமும் மட்டும் எழுப்பப்பட்டன. பெரும்பாலும், கருவறையின்மேல் பகுதியில் விமானம் கட்டப்படவில்லை. வெள்ளாளர் குலப்பெண் கோயில் கட்டும்போது, அதுபோலவே எளிமையாகக் கட்டப்பெற்றுப் பின்னர் கி.பி. 12-ஆம் நூற்றாண்டளவில் சற்றே விரிவாகக் கட்டப்பட்டிருக்கலாம் எனக் கருதத் தோன்றுகிறது. ஆனால், கோயிலில், கி.பி. 12-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டுகள் எவையுமில்லை. இருப்பினும், கோயில் வளாகத்தில் கி.பி. 12-13 நூற்றாண்டைச் சேர்ந்தன எனக் கருதத்தக்க சில சிற்பங்களூம், உடைந்த தூண்களும், பழமையான ஒரு மண்டபப் பகுதியும் காணப்படுவது இக்கருத்தை ஏற்கத் துணைசெய்கிறது. இக்கோயில் வளாகத்தில் விசயநகர அரசர் காலத்தைச் சேர்ந்த ஒரு பலகைக்கல்வெட்டும் காணப்படுகிறது. இக்கல்வெட்டு, கி.பி. 16-ஆம் நூற்றாண்டு விசயநகர அரசர் அச்சுதராயர் காலத்தைச் சேர்ந்தது. மொக்கணீசுவரர் கோயிலுக்குச் சேவூரில் இருக்கும் நிலங்கள் தானமாகக் கொடுக்க்ப்பட்ட செய்தியைச் சொல்லும் இக்கல்வெட்டில், கோயில் அமைந்திருக்கும் குட்டகம் ஊரானது குடக்கோட்டூர் என்று குறிப்பிடப்படுகிறது.

                     படியெடுத்தல் - பாதிப்பணியில்


                                  படியெடுத்தல் - முழுமை பெற்றபின்


குடவோடு என்னும் இராசவிச்சாதிர நல்லூர்

         மொக்கணீசுவரர் கோயில் வட்டெழுத்துக் கல்வெட்டில், குட்டகம் ஊரானது, குடவோடான இராசவிச்சாதிர நல்லூர் என்று குறிப்பிடப்பெறுகிறது. எனவே, இவ்வூர் குடவோடு என்னும் பெயரிலிருந்து குடக்கோடு (குடக்கோட்டூர்), குட்டகம் என்று பல்வேறு காலகட்டங்களில் பல்வேறு பெயர்மாற்றம் பெற்றுள்ளதை அறிகிறோம். இராசவிச்சாதிரன் என்பான் கலிமூர்க்க பராக்கிரம சோழனின் கீழ் இப்பகுதியில் ஆட்சி அதிகாரம் பெற்ற ஒரு தலைவனாய் இருந்திருக்கலாம்; அரசன், குடவோடு ஊருக்கு இந்த இராசவிச்சாதிரன் பெயரில் சிறப்புப் பெயர் வழங்கியிருக்கலாம் எனக் கருத வாய்ப்புண்டு. முள்ளிகள் என்னும் வெள்ளாளர் குலப்பிரிவு இருந்துள்ளதைக் கல்வெட்டு தெரிவிக்கிறது.

எறுளங்கோதை
கோயில் எடுப்பித்த வெள்ளாளர்குலப் பெண்ணின் பெயர் அழகிய தமிழ்ப்பெயராக அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. எறுளம் என்பது ஒரு மரத்தையும், அதன்வழி ஒரு மலரையும் குறிப்பதாகத் தமிழ் அறிஞரும் மொழி ஆய்வாளருமான நா.கணேசன் அவர்கள் கூறுவது எறுளங்கோதை என்னும் தமிழ்ப்பெயரும், மனைக்கிழத்தி என்னும் அழகான தூய தமிழ்ச் சொல்லும், பழங்கல்வெட்டுகளில் நல்ல தமிழ் வளர்க்கப்பட்டதை எடுத்துரைக்கின்றன.

மொக்கணீசுவரர் கோயில் வட்டெழுத்துக்கல்வெட்டு பாடம்

  1. (ர பதி) மூர்க்க ஸ்ரீபராக்ரம சோழ(தே)
  2. வர்க்குத் திருவெழுத்திட்டுச் செ
  3. ங்கோலோச்சி வெள்ளிவெண்குடை மி
  4. ளிரவேன்தி ஆறில் ஒன்று கொ
  5. ண்டல்லவை கடின்து நாடு வள
  6. ம் படுத்து நை குடியோம்
  7. பிக் கோவீற்றிருன்து குடி
  8. புறங்காத்துப் பெற்றகுழ
  9. விக்குற்ற நற்றாய்போல் செ
  10. ல்லாநின்ற திருநாள் யாண்டு
  11. அஞ்சாவதில் இத்திருக்கோ
  12. யில்லெடுப்பிச்சேந் வட
  13. பரிசாரத்தில் குடவோ
  14. டாந இராசவிச்சாதிர நல்
  15. லூரிருன்து வாழும் வெள்
  16. ளாளந் முள்ளிகளில் கோ
  17. வன் விச்சாதிரந் மநை
  18. க்கிழத்தி எறுளங்கோ
  19. தையேன் என் நி
  20. ............  ந் தாந்

குறிப்பு : சிவப்பு வண்ண எழுத்துகள் கிரந்தம்.


முடிவுரை

         வரலாற்றுச் சிறப்பும், ஆயிரம் ஆண்டுப் பழமைப்பின்னணியும் உள்ள குட்டகம் ஊரும், அதன் கோயிலும், வட்டெழுத்துக் கல்வெட்டும் நம் செல்வங்கள் என்னும் பெருமையுடன் இவ்வரலாற்றுச் சின்னங்களைப் பாதுகாப்போம்.




  














து.சுந்தரம், கல்வெட்டு ஆராய்ச்சியாளர், கோவை.
அலைபேசி : 9444939156.

புதன், 4 மே, 2016

கோயம்பேடு குறுங்காலீசுவரர் கோயில்
        
கோயம்பேடு

        சென்னையின் மிகப்பெரிய அடையாளங்களுள் கோயம்பேடு பகுதியும் ஒன்று. தமிழகத்தின் மிகப்பெரிய காய்கறிகள் விற்பனைச் சந்தையும்,  மிகப்பெரிய ஒருங்கிணைந்த பேருந்து நிலையமும் அங்கேதான் உள்ளன. இவற்றின் அருகே நெடிதுயர்ந்த அடுக்குமாடி வீடுகள் அடங்கிய ஒரு பெருந்தொகுதியும் உண்டு. வளைந்து,வளைந்து மேலும் கீழுமாய்ப் பல மலைப்பாம்புகள் நெளிந்தோடுவதன் தோற்றத்தையொத்த கான்கிரீட்சாலைகளை இணைக்கும் மிகப்பெரிய பாலங்களின் தொகுதியும் அங்கே உண்டு. பரபரப்பான இப்பகுதியில், சிவன் கோயில் ஒன்று, தான் இருக்குமிடம் சொல்லாமல் அமைதியாக நிற்பதைச் சென்னையில் ஏழு ஆண்டுகள் வாழ்ந்தும் நான் கண்டிலன். தற்போது, பணி ஓய்வில், சென்னையை விட்டு நீங்கிக் கோவை வந்துசேர்ந்து, கல்வெட்டுகளை ஆய்வு செய்யும் திறம் பெற்ற பின்னர், சென்னை சென்றபோது, ஒரு நாள் கோயம்பேட்டில் இருக்கும் சிவன் கோயிலுக்குச் சென்றேன்.

கோயம்பேடு குறுங்காலீசுவரர் கோயில்



         கோயிலுக்குச் சென்றிருந்த நேரம் மாலை மங்கி இருள தொடங்கும் நேரம். கோயிலின் கருவறை கஜபிருஷ்டம்”  என்னும் அமைப்பை உடையது. அழகாகத் தமிழில் தூங்கானை மாடம் என்று வழங்கும். கருவறை, சதுரமாக அமையாமல் வட்டமாக யானையின் பின்புறத்தை ஒத்த வடிவத்தில் அமைந்திருக்கும். கருவறையைச் சுற்றியுள்ள திருச்சுற்றுக்கும் கருவறை அதிட்டானப்பகுதிக்கும் இடையில் அகழி போன்ற ஒரு பள்ளம். திருச்சுற்றில் போதிய வெளிச்சம் இல்லை. கைப்பேசியின் ஒளியில் சுவரில் உள்ள சில கல்வெட்டுப்பகுதிகளை ஒளிப்படங்கள் எடுத்துக்கொண்டேன். ஒளிப்படங்களை இல்லத்தில் கணினியில் பார்த்துப்பார்த்து கல்வெட்டுப் பாடங்களைப் படித்தேன்.

கல்வெட்டுகள் சொல்லும் நாட்டுப்பிரிவு

         கல்வெட்டுப்பாடங்கள் பல்வேறு செய்திகளைக் கூறின. சென்னைப்பகுதியானது, சோழர் ஆட்சியின்போது ஜயங்கொண்டசோழ மண்டலத்தில் அமைந்திருந்தது. சோழர் ஆட்சியின்போது மண்டலம், வளநாடு, கோட்டம் அல்லது கூற்றம், நாடு ஆகிய நிலப்பிரிவுகள் இருந்தன. தொண்டை மண்டலம் முழுதும் ஜயங்கொண்டசோழ மண்டலம் என்னும் பெயரில் இருந்தது. எனவே சென்னைப்பகுதியும் ஜயங்கொண்டசோழ மண்டலத்துள் அடக்கம். வளநாட்டுப்பிரிவில் இப்பகுதி குலோத்துங்கசோழவளநாட்டிலும், புலியூர்க்கோட்டத்திலும் சேர்ந்திருந்தது. நாட்டுப்பிரிவாக மாங்காடு நாடு என்னும் பிரிவு கல்வெட்டில் குறிப்பிடப்பெறுகிறது. மாங்காடு, இப்போதும் இப்பகுதியில் இருப்பதைக் காண்கிறோம். கோட்டத்தைக் குறிக்கும் புலியூரும் (பல நாடுகளை உள்ளடக்கியதால்) சென்னையைச் சுற்றியுள்ள பெரும்பரப்பில் எங்கோ இருக்கவேண்டும். (சரியான தகவல்களைத் தேடியிருக்கவேண்டும்; ஆனால் செய்யஇயலவில்லை.) கல்வெட்டுகளில், கோயம்பேடுஎன்றே இவ்வூர் குறிப்பிடப்படுகிறது. இக்கோயிலில் எழுந்தருளியிருக்கும் இறைவன் “குறுங்கால் ஆண்டார்என்னும் பெயரில் குறிப்பிடப்பெறுகிறார். (இங்கேயுள்ள “ஆண்டார்என்னும் வழக்கு, கொங்கு நாட்டுக் கல்வெட்டுகளில் “ஆளுடையார்என்று வழங்குவதைக் காண்கிறோம். பெரும்பாலான கோயில்களில் இறைவனின் பெயர், கல்வெட்டுகளில் குறிப்பிடப்பெறும் பெயரினின்றும் வேறுபடும். இங்கே, இப்பொழுதும் இறைவனின் பெயர் “குறுங்காலீசுவரர் என்னும் பெயரால் பழமையை இழக்காமல் இருப்பது குறிப்பிடத்தக்கது. கோயம்பேடு என்னும் ஊர்ப்பெயரும் தன் பழம்பெயரை இழக்காமல் இருப்பது சிறப்பு. இறைவன் பெயர் குறுங்கால்”  ஈசுவரர் என்று எவ்வாறு அமைந்தது? குறுங்கால்என்பது எதைக்குறிக்கும்? என்பன போன்ற குறிப்புகள் தெரியவில்லை. சரியான காரணத்துடன் கூடிய செவிவழிக்கதை இருக்கக்கூடும்.

மூன்றாம் குலோத்துங்கன்

         கல்வெட்டுகளில் சோழ அரசன் மூன்றாம் குலோத்துங்கன் பெயர் காணப்படுகிறது. இவ்வரசன் கி.பி. 1178 முதல் கி.பி. 1218 வரை நாற்பது ஆண்டுகள் ஆட்சி செய்துள்ளான். பாண்டியரை வென்று “மதுரையும் பாண்டியன் முடித்தலையும் கொண்டருளிய என்ர விருதினைத் தன் பெயருடன் இணைத்துக்கொண்டவன். இந்த விருதுப்பெயர், இக்கோயில் கல்வெட்டுகளில் வருகின்றது. கல்வெட்டுகளில் இவனுடைய ஆட்சியாண்டு 25 என வருவதால், இக்கோயில் கல்வெட்டுகள் கி.பி. 1203 ஆண்டளவில் பொறிக்கப்பட்டவை என்பது உறுதியாகின்றது. எனவே, கோயில் 800 ஆண்டுகள் பழமைகொண்டது எனத்தெளியலாம்.

கல்வெட்டுகள் சொல்லும் செய்திகள்

·         ஒரு கல்வெட்டு, இதே ஊரைச்சேர்ந்த பேரையன் மகன் காளி ஆண்டான் என்ற திருஞானசம்பந்தன், கோயிலில் சந்திவிளக்கு எரிப்பதற்காகப் பசு ஒன்றையும் காசுகள் சிலவும் கொடையாகத் தந்துள்ளான் எனத் தெரிவிக்கிறது. கோயிலில் பூசைப்பணி புரிந்த சிவப்பிராமணர்கள், கொடையாளி கொடுத்த பசுவையும் காசுகளையும் பெற்றுக்கொண்டு சந்திவிளக்கு எரிக்கும் அறச்செயலை இடையூறின்றிக் கதிரவனும், நிலவும் உள்ளவரை பொறுப்பேற்றி நடத்துவதாக உறுதிமொழி அளிக்கும் செய்தி கல்வெட்டில் குறிப்பிடப்படுகிறது. அவ்வாறு பொறுப்பேற்ற சிவப்பிராமணர்கள் பலரது பெயர்கள் கல்வெட்டில் காணப்படுகின்றன.
·         சிவப்பிராமணர் பெயர்கள்:
ஆளும்பிரான் பட்டன், குழைச்சோனாண் குலோத்துங்கசோழ பட்டன், சிவஞானதேவன், பெருமாள் பட்டன்.                                    
·         சிவப்பிராமணர்களிப்பற்றிக் குறிப்பிடுகையில், அவர்கள் “காணியுடைய சிவப்பிராமணர்கள்  என்று சுட்டப்பெறுகின்றனர். கோயிலில் பூசைசெய்யும் பணியினை வழிவழியாக உரிமை பெற்றவர்களே காணியுடையவர்.
·     ஆளும் பிரான் பட்டனின் பெயர் அவனுடைய கோத்திரமான “கவுதம”  கோத்திரத்துடன் சேர்த்துச் சொல்லப்படுகிறது.
· இன்னொரு கல்வெட்டில், கோயம்பேடு ஊரைச்சேர்ந்த வடுகநாதன் என்பாரின் மகள் கோயிலில் சந்தி விளக்கெரிக்க “மாடை”  என்னும் காசு இரண்டை “உபையமாக (கொடையாக)க் கொடுத்த செய்தி வருகிறது.
   கல்வெட்டில், இப்பெண்ணின் பெயர் “றியாண்டாள்”  எனக் காணுகிறது. இப்பெயர், காறியாண்டாள் என்பதாக இருக்கக் கூடும். காரியாண்டாள் என்னும் பெயர் காறியாண்டாள் என ரகர, றகர வேறுபாடு பெற்றது.
 
·         “மாடைஎன்பது ஒரு காசு வகை. பொன்னால் ஆனது எனக்கருதலாம். பல்வேறு அரசர்களின் காலங்களில் பல்வேறு பெயர்களுடன் மாடைக்காசு புழக்கத்தில் இருந்தது. இங்கேயுள்ள கல்வெட்டில், “புசபலப்புதுமாடை  என்ர பெயருள்ள மாடைக்காசு குறிக்கப்பெறுகிறது.

                        “புசபலப்புதுமாடை    இடம்பெறும்  கல்வெட்டு



கல்வெட்டின் பாடம்

1.       ஸ்வஸ்திஸ்ரீ திரிபுவனச்சக்கரவத்திகள் மதுரையும் பாண்டி....
2.       தலையுங்கொண்டருளிய சீ குலோத்துங்கசோழ தேவற்கு யாண்டு...
3.       ஜயங்கொண்டசோழ மண்டலத்துப் புலியூர்க்கோட்டமான குலோத்து.....
4.       னாட்டு  மாங்காடு நாட்டுக் கோயம்பேட்டு உடையார் குறுங்காலாண்டார்க்கு இவ்............
5.       ன் வடுகநாதன் மகள் (கா)றியாண்டாள்   சந்திராதித்தவரை செல்வதாக வைத்த சந்திவிள.........
6.       ...................இக்கோயிற்காணி உடை(ய) ....... பிரான் ..............
7.       .............................சோழ(பட்டன்) உள்ளிட்டோமும் இக்கோத்திரத்து........
8.       (ப)ட்டன் சிவஞானதேவன் உள்ளிட்டோமும் கைக்கொண்ட புசபலப்புது....
9.       ....இம்மாடை இரண்டும் உபையமாகக் கைக்கொண்டு இவ்விரண்டை........
10.    மாதமுதல் இச்சந்திவிளக்கு ஒன்று   சந்திராதித்தவரை எரிப்போமாக ....
11.    டோம் பெருமாள் பட்டன் குழை(ச்)சோனாண் குலோத்துங்கசோழ பட்(டன்)....
12.    மும் ஆளும்பிரான் பட்டன் சிவஞானதேவன் உள்ளிட்டோமும் இவ்வனை(வோ)...
13.    பன்மாஹே(ஸ்வ)ர (ரக்ஷை)


குறிப்பு : சிவப்பு வண்ண எழுத்துகள் கிரந்த எழுத்துகள். மற்றவை கி.பி. 13-ஆம் நூற்றாண்டுத் தமிழ் எழுத்துகள்.


                                                             மேலும் சில கல்வெட்டுப் படங்கள் 






         இதுகாறும் கூறியவற்றால், 800 ஆண்டுப்பழமையான குறுங்காலீசுவரர் கோயிலைப்பற்றியும் அதற்கும் பழமையான கோயம்பேடு ஊரைப்பற்றியும் வரலாற்றுப்பின்னணியில் பல செய்திகளை நாம் அறிய இக்கோயில் கல்வெட்டுகள் சான்றாக விளங்குவதைக் காண்கிறோம். வரலாறு சொல்லும் இக்கல்வெட்டுகளை, வருங்காலத்தில், திருப்பணிகள் செய்யும் பேரால் அழித்துவிடாமல், சிதைந்து போகாமல் பாதுகாப்புடன் பேணுவதற்குரிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இக்கட்டுரையின் அடிப்படைக் கருத்து. இதைக் கண்ணுறும் சென்னைவாழ் கோயம்பேட்டு அன்பர்கள் மேற்படி வரலாற்றுச் செய்திகளைச் சுருக்கமாக பிளெக்ஸ்”  பதாகையொன்றில் அச்சிட்டு, பொதுமக்களின் பார்வைக்கு வைத்தால் அத்தகு அறச்செயலுக்காக அவர்களை வணங்குகிறேன்.

  
 ------------------------------------------------------------------------------------------------------------------------------------------------- 
து.சுந்தரம், கல்வெட்டு ஆராய்ச்சியாளர், கோவை.
அலைபேசி : 9444939156.

ஞாயிறு, 1 மே, 2016

கல்வெட்டு எழுத்துகள் கற்போம்  17


கல்வெட்டு படிக்கும் பயிற்சியில் மேலும் சில கல்வெட்டுகள் இங்கு தரப்பட்டுள்ளன. வழக்கம்போல், படங்களை உருப்பெருக்கம் செய்து படியுங்கள். எழுத்துகளை அதன் வடிவத்திலேயே (பார்வைப்படி) எழுதிப்பார்ப்பது நல்ல பயன் தரும்.

கல்வெட்டு  1


கல்வெட்டுப் பாடம்:

1 ஸ்வஸ்திஸ்ரீ வீரராசேந்
2 திர தேவற்கு யாண்டு 40
3 வது வைகாசி திங்க வடபரிசா
4 ர நாட்டில் சேவூரில் வெள்ளா
5 ன் உகையரில் தேவந்தேவநேந் 
6 ஆளுடையா திருமுருகந்பூண்டி
7 நாயநாற்கு சந்தியாதீபம் ஒந்(று)
8 க்கு சீபண்டாரத்தில் ஒடுக்கி(ன)
9 பழஞ்சலாகை அச்சு ஒன்றுக்
10 கும் சந்திராதித்தவரை செல்
11 வதாகக் கல்வெட்டுவித்தே
12 ந் இது பந்மாஹேஸ்வர
13 க்ஷை

குறிப்புகள் :

  • சிவப்பு வண்ண எழுத்துகள் கிரந்தம்
  • கல்வெட்டின் காலம் கி.பி. 1247. அரசன் வீரராசேந்திரன், கொங்குச்சோழன்.
  • வடபரிசார நாடு - கொங்குப்பகுதியில் பண்டு வழங்கிய இருபத்து நான்கு நாட்டுப்பிரிவுகளில் ஒன்று.
  • உகையர் - கொங்கு வெள்ளாளர்களில் ஒரு பிரிவு
  • சீபண்டாரம் - கோயில் கருவூலம்; ”ஸ்ரீ” என்பது வடமொழி எழுத்தைத் தமிழாக்கியது.
  • ப்ழஞ்சலாகை அச்சு - கொங்குப்பகுதியில் புழக்கத்தில் இருந்த பழங்காசு.
  • வெள்ளாளன் தேவன் தேவன் என்பவன், திருமுருகன்பூண்டி கோயிலுக்குச் சந்திவிளக்கு எரிப்பதற்காகக் காசு கொடை அளித்த செய்தி கூறப்படுகிறது.

 கல்வெட்டு  2


கல்வெட்டுப் பாடம்:

1 ஸ்வஸ்திஸ்ரீ விசையாபுதைய சாலிவாகன சகாத்தம் (உ)
2 1458ன் மேல் செல்லாநின்ற துன்
3 முகி வரு. அற்பசி மீ 7 தேதி துவாதெசியும் புத
4 வாரமும் உத்திர நக்ஷரமும் பெற்ற னாள் ஸ்ரீ
5ன் ராசாதிராசன் ராசபரமேசுரன் ஸ்ரீ வீரப்பி
6 றதாப ஸ்ரீவீர அச்சுத்தராயமகாராயர் பிறுது
7 வி ராச்சியம் பண்ணி அருளாநின்ற காலத்து அந்
8 த அச்சுதராயமகாராயற்கு தெக்ஷிணாபுமாதெ
9 ண்டமான் காவேரிவல்லபன் கடகசூறைக்காற்
10 றன் விருதன் வாயுவந்தி விருதுகஜாசிங்கன் பெ
11 க்கெத்துராசுல ஒக்கெத்துகண்டன் மண்டலி
12 க மகலராசன் உறையூற்புரவாதீசுரன் பொன்னா
13 ம்பலநாத ஸ்ரீபாதசேகர காசிபகோத்திரத்
14 து ஆபஸ்தம்ப சூத்திரத்து சூரிய வங்கித்தில் சோ
15 ழகுல ஒங்கர சென்னையதேவ மகாராசாவின் பு
16 த்திரரான ஸ்ரீமன்மகாமண்டலேசுர வாலையதேவமகா
17 ராசா நம்முடைய சுவாமி அச்சுத்தராயமகாராயற்கு பு

குறிப்புகள் :

  •  கல்வெட்டின் காலம், கல்வெட்டில் சாலிவாகன சகாத்தம் 1458 எனக்குறிப்பிடப்பெறுகிறது. சாலிவாகன ஆண்டு, சக வருடம், சகரை ஆண்டு ஆகிய அனைத்தும் சாலிவாகன சகாப்தத்தைக்குறிப்பதாகும். இந்த ஆண்டுடன் 78 ஆண்டுகளைச் சேர்க்க கிறித்தவ ஆண்டு பெறப்படும். எனவே இக்கல்வெட்டின் காலம் கி.பி. 1536. விஜய நகர அரசர்கள் காலம். இங்கு, அரசர் அச்சுதப்ப நாயக்கர். கல்வெட்டில் கொடுக்கப்பட்ட துன்முகி தமிழ்வட்டத்து ஆண்டு கி.பி. 1536-ஆம் ஆண்டுடன் மிகச்சரியாகப்பொருந்துவதைக் காணலாம். ஒரு சில், கல்வெட்டுகளில், இக்காலக் குறிப்புகள் பொருந்தாமல் போவதுண்டு. (இந்த 2016-ஆம் ஆண்டும் துன்முகி/துர்முகி என்பதை நோக்குக.) தமிழ் மாதமான ஐப்பசி மாதம், கல்வெட்டில் அற்பசி மாதம் எனக்குறிக்கப்பெறுகிறது. இது போன்ற பெயர்களை நினைவில் கொள்ளுதல் கல்வெட்டுகள் படிக்க் உதவும். காலக்குறிப்பில், புதவாரம், துவாதசி திதி, உத்திர நட்சத்திரம் ஆகிய குறிப்புகள் விளக்கமாகத் தரப்பட்டுள்ளதை நோக்குக.
  • கல்வெட்டுக்காலத்தில், விஜயநகர அரசரின் சார்பாக கொங்குமண்டலத்தின் மகாமண்டலேசுவரனாக நிர்வாகம் செய்தவன் வாலையதேவமகாராசன். அவனுடைய கோத்திரமும், சூத்திரமும் தரப்பட்டுள்ளன. 
  • விஜயநகர அரசருக்கும், மண்டலாதிபதிக்கும் பல்வேறு விருது/சிறப்பு அடைமொழிகள் தரப்பட்டுள்ளன. 

------------------------------------------------------------------
து.சுந்தரம், கல்வெட்டு ஆராய்ச்சியாளர், கோவை.
அலைபேசி : 9444939156.
வட்டெழுத்து கற்போம் – 2


வட்டெழுத்துப்பயிற்சி -  உயிரெழுத்துகள்


இ     




ஈ   





எ / ஏ





து.சுந்தரம், கல்வெட்டு ஆராய்ச்சியாளர், கோவை.
அலைபேசி : 9444939156.