மொத்தப் பக்கக்காட்சிகள்

புதன், 25 டிசம்பர், 2019



கோவை - தமிழ் சுவிசேஷ லுத்தரன் கிறித்து ஆலயம்
(THE TAMIL EVANGELICAL LUTHERAN CHURCH - COIMBATORE)

முன்னுரை

நண்பர் துரை.பாஸ்கரன், என்னைப்போல்  நடுவண் அரசுப் பணிநிறைவு செய்தவர். வரலாறு, தொல்லியல் மற்றும் சூழலியல் ஆர்வலர். இன்றும் கிராமப்பகுதிகளில் மரக்கன்றுகளை வழங்கி மரம் வளர்க்க மக்களை ஊக்கப்படுத்தி வருபவர். தாவரங்கள் பற்றிய செய்திகளை அறிந்துவைத்திருப்பவர். இளமையில், மலையேற்றப் பயிற்சிக்குழுவில் இணைந்து மலையேற்றத்தில் (TREKKING) ஈடுபட்டவர். என்னோடு தொல்லியல் களப்பணிகளில் இணைந்து பல புதிய கல்வெட்டுகளைக் கண்டறிந்த நிகழ்வுகளில் பங்கு கொண்டவர். அவர் அவ்வப்போது மேற்கொள்ளும் பயணங்களின்போதும், முன்பு மேற்கொண்ட பயணங்களின்போதும் தாம் பார்த்த, பெருங்கற்காலச் சின்னங்களான கல்திட்டைகள், நெடுங்கற்கள், நடுகற்கள் ஆகிய தொல்லியல் தடயங்கள் பற்றித் தகவல்களைப் பரிமாறிக்கொள்ளும் வழக்கமுடையவர்.  அவர் ஒரு முறை, கோவையில் உள்ள தமிழ் சுவிசேஷ லுத்தரன் திருச் சபையைச் (THE TAMIL EVAGELICAL LUTHERAN CHURCH) சேர்ந்த கிறித்து நாதர் தேவாலயத்தைக் குறிப்பிட்டு, அத்தேவாலயம் தன் நூற்றிருபதைந்தாவது ஆண்டு நிறைவை முடித்துள்ளது என்றும், 1992-ஆம் ஆண்டு நூற்றாண்டு நிறைவுக்கு விழா எடுத்து விழா மலரையும் வெளியிட்டுள்ளது என்றும் அது தொடர்பாக ஒரு பதிவினை எழுதலாம் என்னும் கருத்தைப் பகிர்ந்துகொண்டார். அவரோடு அந்தத் தேவாலயத்துக்கு நேரில் சென்று அறிந்த செய்திகள் இங்கு பகிர்ந்துகொள்ளப்படுகின்றன.

லுத்தரன் திருச்சபை (LUTHERAN CHURCH)

16-ஆம் நூற்றாண்டில் கிறித்தவச் சமயத்தில் நிகழ்ந்த புரோடஸ்டண்ட் (PROTESTANT) மறுமலர்ச்சியின் போது, ஜெர்மனியைச் சேர்ந்த மார்ட்டின் லூத்தர் (MARTIN LUTHER) என்பவரின் சீர்திருத்தக் கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டு தோன்றிய புதிய வடிவம் லுத்தரன் திருச்சபையாகும். இறையியல் மற்றும் திருச்சபை செயல்பாடுகளில் லூத்தர் சீர்திருத்தங்களைக் கொண்டுவந்தார்.

ஸ்வீடன் (SWEDEN)  நாட்டில் லுத்தரன் திருச்சபை

16-ஆம் நூற்றாண்டில் ஸ்காண்டிநேவியன் (SCANDINAVIAN) என்னும் பெயரில் ஸ்வீடன், நார்வே, டென்மார்க்  ஆகிய நாடுகள் கொண்ட கூட்டமைப்பு நிலவியது. ஸ்வீடன் நாட்டு அரசர் முதலாம் கஸ்டவ் (GUSTAV I) என்பார், கூட்டமைப்பிலிருந்து விலகி (விடுதலை பெற்று) லுத்தரன் கொள்கை அடிப்படையில் லுத்தரன் திருச்சபையை நிறுவினார். 1887-ஆம் ஆண்டில் ஸ்வீடன் லுத்தரன் அமைப்பில் இருந்த டேவிட் பெக்செல் (DAVID BEXELL)  என்பவர் தமிழகத்துத் தரங்கம்பாடிக்கு வந்தார். 1893-ஆம் ஆண்டு கோவைக்கு வந்து ஆறு ஆண்டுகள் கோவையிலேயே இருந்து இறைப்பணியை ஆற்றினார். 1928-ஆம் ஆண்டு தரங்கம்பாடியின் இரண்டாவது பிஷப்பாகப் பொறுப்பேற்றார். 1934-ஆம் ஆண்டு கோவைக்குத் திரும்பி வந்து மறைவு (05.07.1938) வரை இறைத்தொண்டாற்றினார்.

கோவை - தமிழ் சுவிசேஷ லுத்தரன் சபை மற்றும் தேவாலயத்தின் தோற்றம்

சுவார்ச் ஐயர் (C.F. SCHWARTZ)

கி.பி. 1784.  சுவார்ச் ஐயர் (C.F. SCHWARTZ) கோவைக்கு வருகை தருகிறார். இவர் ஒரு ஜெர்மன் நாட்டு லுத்தரன் சமயப் பரப்பாளர் (GERMAN LUTHERAN MISSIONARY). புரோடெஸ்டண்ட் சமயப்பரப்பு வரலாற்றில் பெரிதும் அறியப்படுகின்ற சீகன்பால்கு (ZIEGENBALG) என்னும் ஜெர்மன் சமயப் பரப்பாளரை முன்னோடியாகக் கொண்டு, கி.பி. 1750-ஆம் ஆண்டு இந்தியாவுக்கு வந்தவர். தரங்கம்பாடியில் தம் பணியைத் தொடங்கியவர். தஞ்சை சரபோஜி மன்னரான துளஜியிடம் அமைச்சருக்குரியதொரு  மதிப்புறு நிலையில் நெறியாளராக இருந்தவர்.  துளஜிக்குப் பின்னர் இளம்வயதில் அரசுப்பட்டத்துக்கு வந்த சரபோஜி மன்னருக்கு ஆசானாகவும் தந்தை போன்றும் துணையாக இருந்தவர். இவர் 1798-ஆம் ஆண்டு இறந்தபோது, தஞ்சைத் தேவாலயத்தில் துளஜி மன்னர் தாமே ஆக்கிலத்தில் இயற்றிய போற்றிப் பாட்டைப் (EULOGY) பாடித் தம் அன்பைக் காட்டினார். ஐயர், இலத்தீன், கிரேக்கம், ஹீப்ரு, போர்த்துகீசியம், சமற்கிருதம், தமிழ், உருது, பாரசீகம், மராத்தி, தெலுங்கு ஆகிய பன்மொழி வல்லுநராக அறியப்படுவதோடு பிரிட்டிஷாரால் பெரிதும் மதிக்கப்பட்டவர். பிரிட்டிஷார் இவரை அமைதித் தூதுவராக ஐதர் அலியின் அரசவைக்கு அனுப்பியதுண்டு.  கிழக்கிந்தியக் கம்பெனியார் அவரைத் தம் பணியில் அமர்த்தினர். இவரது நினைவுச் சின்னம் சென்னைக் கோட்டையில் உள்ள செயிண்ட் மேரீஸ் தேவாலயத்தில் (St.MARY’s CHURCH) உள்ளது.



சுவார்ச் ஐயர் - நினைவுச்சின்னம்


கோவையில் சுவார்ச் ஐயர் (C.F. SCHWARTZ)

கி.பி. 1784-ஆம் ஆண்டு கோவைக்கு அவர் வந்தது திப்பு சுல்தானைப் பார்க்க. நோக்கம் இன்னதெனத் தெரியவில்லை. நோக்கம் கைகூடாமலே தஞ்சை திரும்பினார். திரும்பும் முன்னர் சில நாள்கள் அவர் கோவையில் தங்கினார். இந்தக் காலகட்டத்தில், கோவை மிகவும் எளிமையான ஒரு சிற்றூர். அதன் அண்மையில் உள்ள பேரூர்தான் புகழ் பெற்ற ஊர். கோவையில் சுவார்ச் ஐயர்  தங்கியிருந்த சில நாள்களில், அவரைக் கண்டு உரையாடிய – ஏழு பேரைக்கொண்ட – ஒரு சிறிய கத்தோலிக்கக் குடும்பத்தினர், சுவார்ச் ஐயரின் இனிமையான தமிழ்ப் பேச்சால் ஈர்க்கப்பட்டு ஐயரின் லுத்தரன் சமய நெறியைப் பின்பற்ற முடிவு செய்தனர்.

கோவை - தமிழ் சுவிசேஷ லுத்தரன் சபையின் தொடக்கப்புள்ளி

1799-ஆம் ஆண்டு திப்பு சுல்தான் இறந்தவுடன், கோவை முற்றிலுமாக ஆங்கிலேயரின் கைக்குள் வந்தது. அப்போது, தரங்கம்பாடியில் ‘துபாஷியாகப் பணியில் இருந்த தானியேல் பிள்ளையின் (DANIEL PILLAI) உடன்பிறந்தாரான யாக்கோபுப் பிள்ளை (JACOB PILLAI) என்பவர் கோவையில் குடியேறினார். இவரது வீட்டில் நற்செய்திச் சபை (சுவிசேஷச் சபை) கூடி ஆராதனை நடத்தத்தொடங்கினர். 1853-ஆம் ஆண்டு. கோவைப்பகுதியில் இரயில் பாதைப் பணி தொடங்கிய காலம். தரங்கம்பாடியிலிருந்து அனுப்பப்பட்ட ஷான்ஸ் (SCHANZ)  என்பவரும் நல்லதம்பி என்பவரும் மேற்கொண்ட முயற்சியால் 1867-ஆம் ஆண்டு பள்ளி ஒன்று தொடங்கப்பட்டது. ஆராதனை இப்பள்ளியில் தொடர்ந்தது.

தேவாலயம் எழுந்தது

கத்தோலிக்கத் திருச்சபையை விட்டு விலகி லுத்தரன் சபைக்கு வந்த ஆரோக்கியசாமிப்பிள்ளை, ஜேக்கப் பிள்ளையார் ஆகியோரின் முயற்சியால் தேவாலயம் கட்டுவதற்கான பொருள் சேர்க்கப்பட்டு ஸ்டேன்ஸ் ஆலை நிறுவனத்தில் முதலீடாக வைக்கப்பட்டது. 1884-ஆம் ஆண்டில் தொடங்கிய முயற்சி பல தடைகளைத்தாண்டி 1890-இல் முழுமை பெற்று ஆலயம் கட்டும் பணி நடந்தது. 1892-ஆம் ஆண்டு, நவம்பர் 10-ஆம் நாள் ஆலயம் விழாக்கோலத்துடன் எழுந்தது. இந்த நாள், மார்ட்டின் லூத்தரின் (MARTIN LUTHER)  பிறந்த நாள் என்பது சிறப்பு. இதன் தனிச் சிறப்பு, கோபுரத்தின் உச்சியிலுள்ள சேவல் சின்னமும் ஆலய மணியும்.  



கோவை லுத்தரன் தேவாலயம்


நூற்றாண்டு விழா

1892-ஆம் ஆண்டு நவம்பர் 10-ஆம் நாள் தேவாலயத்தின் நூற்றாண்டு விழா தொடங்கி ஐந்து நாள்கள் நடந்தது.

கிறித்து நாதர் ஆலயம் -  பார்வையிடல்

தற்போது, நூற்று இருபத்தைந்து ஆண்டுகள் பழமையான இத்தேவாலயத்துக்கு நண்பர் துரை. பாஸ்கரன் மற்றும் நண்பர் இதழியலாளர் மீனாட்சி சுந்தரம் ஆகியோருடன்  2017, நவம்பர் 20 அன்று நேரில் சென்று பார்வையிட்டேன்.

ஆலயத்தின் நுழைவு வாயிலிலேயே  1892-ஆம் ஆண்டில் கட்டப்பட்ட “கிறிஸ்து ஆலயம்”   என்னும்  பலகைக் கல் பொறிப்புக் காணப்பட்டது.



ஆலய நுழைவாயில்


பழமை கூறும் பலகை

ஆலயத்தின் உள்பகுதி

தொடர்ந்து ஆலயத்தின் உள்பகுதிக்குள் சென்று அதன் நடுமேடையை நோக்கிச் செல்லும்போதே தரையில் டேவிட் பெக்செல் ஐயரின் கல்லறைக் கல்வெட்டும் நினைவுக் கல்வெட்டும் இருந்தன.



டேவிட் பெக்செல் - கல்லறைக் கல்வெட்டு

டேவிட் பெக்செல் - நினைவுக்கல்

தனியறை ஒன்றில் டேவிட் பெக்செல் ஐயரின் முழு உருவப்படம் ஒன்று வைக்கப்பட்டிருந்தது.

டேவிட் பெக்செல் ஐயர்
ஆலயத்தின் நடுக்கூடத்தில் நின்றுகொண்டு கூடத்தின் இருபுறமும் மேலே
சுவர்ப்பகுதியைப் பார்வையிட்டபோது உச்சியில் வட்டவடிவத்தில், வண்ணக் கண்ணாடிகொண்டு அழகூட்டப்பட்ட குழிவுச் சன்னல்கள் காணப்பட்டன. சன்னல்கள் என்று இவற்றைக் குறிப்பிட இயலாது. ஏனெனில், காற்று வரும் திறப்பு இவற்றில் இல்லை.  இவை அழகுக்காக அமைக்கப்ப்ட்ட  கட்டுமானக் கலை வடிவங்கள்.  இவற்றின் சிறப்பு என்னவெனில், வட்ட வடிவத்தின் மையத்தில் மிக அழகாக வரையப்பெற்ற ஹீப்ரு மொழியின் எழுத்துகளே.   


ஹீப்ரு எழுத்து -  DALET

ஹீப்ரு எழுத்து - CHET

ஹீப்ரு எழுத்து - LAMED


ஞானஸ்நானத்தொட்டி

அடுத்து அங்கே நாம் பார்வையிட்டது ஞானஸ்நானத் தொட்டி.  அழகான மர வேலைப்பாடுடன் கூடியது.  பழமையானதொன்று எனப் புலப்பட்டது. 

பழமைத் தோற்றம்  மாறாத பள்ளி வகுப்பறை ஒன்றையும் பார்வையிட்டோம்.


பள்ளி வகுப்பறை - பழமை மாறாத்தோற்றம்

பள்ளி வகுப்பறை - பழமை மாறாத்தோற்றம்

இறுதியாக நாங்கள் பார்த்தது பிஷப்பின் பழமையான குடியிருப்பு வீடு.   



முடிவுரை

சேவல் கோழி தேவாலயம் என்று முன்னாளில் மக்கள் வழங்கிய இத்தேவாலயத்தில் இன்று அதன் உச்சியில் சேவல் சின்னம் காணப்படவில்லை. தற்போது சிலுவைச் சின்னத்தை அமைத்திருக்கிறார்கள். நூற்றிருபத்தைந்து ஆண்டுகளாக நிற்கும் இத்தேவாலயத்தைப்பற்றித் தெரிந்துகொள்ளும் நம் முயற்சியில், 18-ஆம் நூற்றாண்டின் சூழலில் (1784)  கோவையில் திப்பு சுல்தான் தங்கியிருந்தமையும் கிழக்கிந்தியக் கம்பனியாரின் தூதுவராக சுவார்ச் ஐயர் அவரைச் சந்தித்த நிகழ்வும், சுவார்ச் ஐயர் தஞ்சை அரசரிடம் பெற்றிருந்த பெருமதிப்பும், கோவையில்   லுத்தரன் திருச்சபையின் தோற்றத்துக்கு சுவார்ச் ஐயர் அடித்தளமாக அமைந்தார் எனபதுவும் புதிய செய்திகள்.  கோவை வரலாற்றின் ஒரு உறுப்பாகத் திகழும் இத்தேவாலயம் தொல்லியல் நோக்கில் ஒரு தொன்மைச் சின்னம்.  வரலாறு மற்றும் தொன்மைச் செய்திகளை இன்றைய தலைமுறையினர் அறிந்துகொள்ள இந்தப் பகிர்வு சற்றேனும் பயன்படும் என்பது நம் நம்பிக்கை.





துரை.சுந்தரம், கல்வெட்டு ஆராய்ச்சியாளர், கோவை.
அலைபேசி :   9444939156.



ஞாயிறு, 15 டிசம்பர், 2019



                                                                 சிவன்படவன்

முன்னுரை

இந்தியத் தொல்லியல் ஆய்வுத்துறையின் (ARCHAELOGICAL SURVEY OF INDIA) கல்வெட்டியல் ஆண்டறிக்கைகளைப் (ANNUAL REPORTS ON INDIAN EPIGRAPHY) படித்துக்கொண்டிருக்கையில், 1945-ஆம் ஆண்டிலிருந்து 1952 –ஆம் ஆண்டுவரை துறையின் செயல்பாடுகளை விளக்கும் ஆண்டறிக்கைத் தொகுதியில் ஒரு கல்வெட்டுச் செய்தி என்னைக் கவர்ந்தது. அது பற்றிய பதிவை இங்கு பகிர்ந்துகொள்கிறேன்.

திருக்குவளை -  திருக்கோளிலி

தற்போது நாகப்பட்டினம் மாவட்டத்தில் அமைந்த இவ்வூர், மேற்குறித்த ஆண்டறிக்கை வெளியான ஆண்டுகளின்போது, தஞ்சை மாவட்டத்தில் நாகப்பட்டினம் வட்டத்தில் அமைந்திருந்தது. தற்போது திருக்குவளை என்னும் பெயர் வழங்கினாலும் இவ்வூரின் பழம்பெயர் திருக்கோளிலி என்பதாகும்.  ஆண்டறிக்கையில் இவ்வூரில் இருக்கும் தியாகராசர் கோயில் கல்வெட்டுகள் பதிவாகியுள்ளன. மொத்தம் இருபத்து நான்கு கல்வெட்டுகள் பதிவாகியுள்ளன.  கல்வெட்டுகளில் கோயிலின் இறைவன் பெயர் ஊர்ப்பெயரோடு சேர்த்துத் திருக்கோளிலி உடையார் என வழங்குகிறது. மனித வாழ்க்கையில் நேரும் உயர்வு தாழ்வுகளும், இன்பமும் இடர்ப்பாடும்  ஒன்பது கோள்களின் தாக்கத்தால் நிகழ்வன என்னும் கருதுகோள் மக்களிடையே நம்பிக்கை மரபாக இருந்து வந்துள்ளது.  அத்தகு வலிமை பெற்ற கோள்களே இவ்வூர்க்கோயிலின் இறைவனை வணங்கியதாலும், கோள்களால் ஏற்படும் குற்றங்கள் இவ்வூர் இறைவனால் நீங்குவதாலும் இவ்வூர் “கோளிலி”  என்னும் பெயர் பெற்றது எனத் தொன்மைப் புனைவுகள் கூறுகின்றன.

கல்வெட்டுகள்

இக்கோயிலில் பதிவாகியுள்ள இருபத்து நான்கு கல்வெட்டுகளில் பெரும்பாலானவை சோழர் காலத்தவை. மூன்றாம் இராசராசன், இராசாதிராசன், இராசேந்திர சோழதேவன், குலோத்துங்க சோழன், வீரராசேந்திரன் ஆகியோர் கல்வெட்டுகளில் குறிக்கப்பெறும் சோழ அரசர்கள் ஆவர். பாண்டியர் காலக் கல்வெட்டுகள் மூன்றில், இரண்டு கல்வெட்டுகள் சடையவர்மன் சுந்தரபாண்டியன் காலத்தவை. ஒன்று மாறவர்மன் குலசேகரபாண்டியன் காலத்தது.  கொடைகளில் பெரும்பாலானவை விளக்கெரிக்க அளிக்கப்பட்டன. சில, விழாக்காலச் சிறப்பு வழிபாடு, பஞ்சதிரவியம் கொண்டு திருமஞ்சனம், செப்புத்திருமேனிகளின் ஊர்வலம், தேவாரப் பண்ணிசைத்தல் ஆகிய நிகழ்வுகளுக்காகக் கொடுக்கப்பட்டன.  ஒரு கல்வெட்டு, புதியதொரு நிகழ்வைச் சுட்டுகின்றது. ஊர்ப்பகுதியில் பாய்ந்து செல்கின்ற பெருவாய்க்கால் ஒன்று,  மழை வெள்ளம் காரணமாக நீர்ப்பெருக்கெடுத்துக் கோயிலுக்கருகில் உள்ள தெருவில் புகுந்து சேதம் விளவித்ததால்  திருமறைக்காடுடையான் என்பவன் வாய்க்காலின் மேட்டுப்பகுதியில் இருந்த கோயில் நிலங்கள் சிலவற்றின் ஊடே புதிதாக வெட்டிய பாதை வழியாக வாய்க்காலைத் திசை திருப்பும் பணியைச் செய்தான் என்று கல்வெட்டு குறிப்பதோடு, கோயில் நிலங்களின் இழப்பை ஈடு செய்ய இரண்டு வேலி நிலம் கோயிலுக்கு உரிமையாகும் செயலையும் செய்தான் என்கிறது.   சிறப்பான செய்தியைக் கூறும் இக்கல்வெட்டின் படம் நூலில் தரப்படாமையால், கல்வெட்டின் பாடத்தை இங்கு குறிப்பிட இயலவில்லை. இக்கட்டுரையில் பகிர்ந்துகொள்ளவிருக்கும்  கல்வெட்டின் படம் அதன் சிறப்புச் செய்தி காரணமாக நூலில் தரப்பட்டுள்ளதால் அதன் பாடத்தைக்கொண்டு செய்தி விளக்கப்படுகிறது.

அதிபத்த நாயனார்

சைவ சமய அடியார் அறுபத்துமூவருள்  ஒருவர் அதிபத்த நாயனார்.  அவர் மீனவர் குலத்தவர். அவர் எவ்வாறு இறையன்பு செலுத்தினார் என்பதையும் எவ்வாறு அவரை இறைவன் ஆட்கொண்டான் என்பதையும் யாழ்ப்பாணத்து நல்லூர் ஆறுமுக நாவலர் எழுதிய கதைக் குறிப்பு கீழே தரப்பட்டுள்ளது.


சோழமண்டலத்திலே, நாகப்பட்டணத்திலே, சமுத்திர தீரத்திலே உள்ள நுளைப்பாடியிலே, பரதவர் குலத்திலே, அதிபத்தநாயனாரென்பவர் ஒருவர் இருந்தார். அவர் பரதவர்களுக்குத் தலைவராகி, அவர்கள் வலைப்படுத்துக் குவிக்கும் மீன்குவைகளைப் பெற்றுவாழ்வார். சிவபத்தியின் மிகச் சிறந்தவராதலால், அகப்படும் மீன்களிலே ஒருதலைமீனை "இது பரமசிவனுக்கு" என்று மிகுந்த அன்பினோடு எப்பொழுதும் விட்டு வந்தார். ஒருநாளிலே ஒருமீனே வரினும் அதனைப் பரமசிவனுக்கு என்றே விடுவார். இப்படி ஒழுகுநாட்களிலே அடுத்தடுத்து அநேக நாட்களிலே ஒவ்வொருமீனே அகப்பட; அதனைக் கடலிலே விட்டுவந்தார். மீன்விலையினாலே மிகுஞ்செல்வம் மறுத்தமையால், தம்முடைய சுற்றத்தார்கள் உணவின்றி வருந்தவும்; தாம் வருந்தாது பட்டமீனைப் பரமசிவனுக்கு என்றே விட்டு மகிழ்ந்தார். இப்படி நெடுநாள் வர, உணவின்மையால் திருமேனி தளரவும் தம்முடைய தொழிலிலே நிலை நின்றமையைப் பரமசிவன் அறிந்து, அவரது அன்பென்னும் அமுதை உண்பாராயினார். இப்படி நிகழுநாளிலே, வேறு ஒருநாள் பரதவர்கள் அவ்வொரு மீனையும் அவ்வாறே விட்டு, விலைமதிப்பில்லாத மகாதிவ்யப்பிரகாசங்கொண்ட நவரத்தினங்களால் உறுப்பமைந்த அற்புதமயமாகிய ஒரு பொன்மீனை வலைப்படுத்து, கரையில் ஏறியபோது, அம்மீன் சூரியன் உதித்தாற்போல உலகமெல்லாம் வியக்கும்படி மிகப் பிரகாசிக்கக் கண்டு, அதனை எடுத்து, "ஒருமீன் படுத்தோம்" என்றார்கள். அதிபத்த நாயனார் அம்மீனைக்கண்டு, "இது இரத்தினங்களால் உறுப்பமைந்த பொன்மீனாதலால், என்னை ஆட்கொண்டருளிய பரமசிவனுக்கு ஆகும்" என்று கடலிலே விட்டார். அப்பொழுது பரமசிவன் இடபாரூடராய் ஆகாயத்திலே தோன்றியருள; அதிபத்தநாயனார் ஆனந்தவருவி சொரிய மனங்கசிந்துருகி நமஸ்கரித்து, சிரசின்மேலே அஞ்சலி செய்தார். சிவபெருமான் தமது உலகத்திலே அடியார்களோடு இருக்கும்படி அவருக்கு அருள்செய்தார்.

திருக்குவளைக் கல்வெட்டில் அதிபத்த நாயனார்

தொல்லியல் ஆண்டறிக்கை நூலில் உள்ள திருக்குவளைக் கல்வெட்டின் படம் கீழே தரப்பட்டுள்ளது.



  
கல்வெட்டின் பாடம்

1    ஸ்வஸ்திஸ்ரீ திரிபுவனச்சக்கரவத்திகள்
2    ஸ்ரீராஜராஜதேவர்க்கு யாண்டு 4
3    வது மார்கழி மாதத்தொருநாள் உ
4    டையார் திருக்கோளிலி உடை
5    யார் கோயிலில் முன்னாளில் சிவன்
6    படவரில் ஆலன் எழுந்தருளிவித்த
7    அதிபத்த நாயனார்க்கு திருப்படிமா
8    ற்றுக்கு இவன் தன் சாதியார் பக்க
9    ல்  இரந்து பெற்ற காசா(ய்)…..
10  ..காவசேரி ஐ.யன்னைய பட்டன்
11  மகன் தாமோதரபட்டன் பக்கல்
12  நெல் பொலிசைக்கு குடுத்த காசாய்
13  இவன் ஒடுக்கின காசு (2100) இக்கா
14  சு இரண்டாயிரத்தொருநூறும்
15  கைக்கொண்டு திருப்படிமாற்றுக்
16  கு நாள் ஒன்றுக்கு இரு நாழி அரிசி
17  அமுதுபடிக்கு அளப்போமாகவு
18  ம் நாங்கள் இப்படி செய்வோ
19  மாக ம்மதித்தோம்


குறிப்பு : சிவப்பு வண்ண எழுத்துகள் கிரந்தம்.



சிவன்படவர் - கல்வெட்டு - திருக்குவளை




கல்வெட்டுச் செய்திகள்

கல்வெட்டில் குறிப்பிடப்பெறும் ஸ்ரீராஜராஜதேவர் மூன்றாம் இராசராசன் என்பதாக நூலின் பதிப்பாசிரியர் குறித்துள்ளார். இவ்வரசனின் ஆட்சிக்காலம் கி.பி. 1216-1246. கல்வெட்டில், இவனுடைய ஆட்சியாண்டு நான்கு என இருப்பதால் கல்வெட்டு எழுதபட்ட காலம் கி.பி. 1220 என அமைகிறது. கோயிலின் பெயர் இறைவனின் பெயரைக்கொண்டு திருகோளிலி என அறிகிறோம். இக்கோயிலில்,  சிவன் படவரில் ஆலன் என்பவன் முன்னரே அதிபத்த நாயனார் திருமேனியை எழுந்தருளச் செய்திருக்கிறான். இப்போது, அந்தத் திருமேனிக்கு அமுது படைத்து வழிபாடு செய்ய 2100 காசு முதலாக வைக்கிறான். இக்காசை அவன் தன் குலத்தவரிடம் இரந்து பெற்றுக் கோயிலுக்குக் கொடையாக அளித்திருக்கிறான். தெய்வத்திருமேனியாக அவன் தான் எழுந்தருளுவித்த அதிபத்தனாருக்கு நாள்தோறும் அமுது படைத்து வழிபாடு செய்தல் தடையின்றி நடைபெறவேண்டும் என்பதற்காகத் தன் குலத்தாரிடம் இரந்து காசு சேர்த்தது குறிப்பிடத்தக்கது. கோயில் சிவப்பிராமணனாகிய தாமோதர பட்டன் என்பவன் மேற்படி 2100 காசுகளைப்பெற்றுக்கொண்டு அதன் மூலம் கிடைக்கப்பெறும் பொலிசை (வட்டி) வருவாயைக்கொண்டு நாள் ஒன்றுக்கு இரண்டு நாழி அரிசியால் அமுது படைப்போம் என்று பொறுப்பேற்றுக்கொள்கிறான்.

சிவன்படவர்

அதிபத்த நாயனார் ஒரு மீனவர்.  அவருக்கு ஒரு மீனவனான ஆலன் என்பவன் வழிபாட்டுத் திருமேனியைக் கோயிலில் நிறுவி வழிபாட்டுச்செலவுக்கு வகை செய்கிறான் என்பது பெருமைக்குரியது.  கல்வெட்டில் உள்ள சிறப்புச் செய்தி என்னவெனில் மீனவர்,  சிவன்படவர் என அழைக்கப்பெற்றார்கள் என்பதுதான். நாம் இன்றைய நாளில் மீனவர் என்று அழைத்தாலும் சங்ககாலத்தில் மீனவர் என்னும் சொல்லாட்சி இல்லை என்பதாகத் தெரிகிறது. அகநானூற்றுப் பாடல் ஒன்று (அகம்-320) திமிலோன் என்றும், புறப்பாடல் ஒன்று (புறம்-24) பரதவர் என்றும் சுட்டுகிறது. மற்றொரு புறப்பாடல் (புறம்-249) வலைஞர் என்று குறிப்பிடுகிறது. மேலும், பரவர், முக்குவர், பட்டினவர், வலையர், கரையார், மரக்காயர் எனப் பல்வேறு பெயர்களில் மீனவர் தாம் சார்ந்த தொழிலின் அடிப்படையில் அறியப்படுகிறார்கள்.

கல்வெட்டில் மீனவர்களைச் சுட்டும் “சிவன்படவர் என்னும் பெயர் 13-ஆம் நூற்றாண்டில் வழங்கியது என்பது புதிய செய்தி. சிவன்படவர் என்னும் இப்பெயர் காலப்போக்கில் “செம்படவர்  எனத் திரிந்திருக்கலாம் எனக் கருதத்தோன்றுகிறது. கல்வெட்டின் காலம் இடைக்காலம். இடைக்காலச் சோழர் ஆட்சியின்போதே வலங்கை,இடங்கைப் பிரிவுகள் ஏற்பட்டு வெவ்வேறு தொழில் சார்ந்தோரிடையே பகைமையும் பிளவுகளும் ஏற்பட்டன. சாதியப் பாகுபாடுகள் அப்போதிருந்தே கிளைக்கத் தொடங்கின எனலாம். திருக்குவளைக் கல்வெட்டில், சாதி என்னும் சொல் (வரி-8) ஆளப்பட்டுள்ளதை நோக்கும்போது 12-ஆம் நூற்றாண்டுக்குப் பின்னர் சாதிபிறந்துவிட்டதை அறிகிறோம்.

மீனவரில் பல்வேறு பிரிவினர்

முக்குவர் என்னும் பெயர் முத்துக்குளிக்கும் தொழிலோடு தொடர்புடைய சொல்லாகலாம். கரையார் என்பவர் படைவீரராகவும், கப்பல் கட்டும் தொழில் அறிந்தவர்களாகவும் கருதப்படுகிறார்கள். கி.பி. முதல் நூற்றாண்டிலிருந்து கடல் வணிகத்தோடு தொடர்புடைய கடலோடிகளாக மீனவர் அறியப்படுகிறார்கள். தமிழகக் கடற்கரையோர மக்கள் கரையாளர்கள், பரவர்கள், செம்படவர்கள், வலையர்கள், முக்குவர்கள், பட்டனவர்கள் என்னும் ஆறுவகைப் பிரிவினராக இருந்தனர் என்று எஸ். ஜெயசீல ஸ்டீபன் என்பவர் தாம் எழுதிய ‘காலனியத் தொடக்கக் காலம்  என்னும் நூலில் குறிப்பிடுகிறார். அவர்களது கடல்சார் அறிவுத்திறனும் தொழில் நுட்பமும் தொன்று தொட்டு மரபு வழி வந்தவை. தோணி, வள்ளம், சலங்கு என்னும் பல்வகைப் படகுகள் இருந்துள்ளன. பாய்மரம் உள்ள படகு தோணியாகும். சாம்பன் என்னும் ஒருவகைப் படகு கடல் வணிகத்தில் ஈடுபடுத்தப்பட்டது. கரையார் என்னும் மீனவ இனத்தவர் கரையோரப் பகுதியில் வாழ்ந்ததால் அப்பெயர் பெற்றனர். 1530களில் ஃபிரான்சிஸ்கன் சபை பரப்பாளர்களால் முதன்முதலில் கிறித்தவத்தைத் தழுவியோர் கரையாளர்களே ஆவர். பரவர்கள் (பறவர்கள்)  பெரும்பாலோர் முத்துக்குளிப்பவர் ஆவர். வலையர் (வலைஞர்),  செம்படவர் ஆகியோர் ஆறு, குளங்களில் மீன் பிடிக்கும் தொழிலில் ஈடுபட்டவர் ஆவர். கடலில் மீன் பிடிக்கும் பட்டனவர் வலங்கைப் பிரிவினராகக் குறிப்பிடப்படுகின்றனர். அவர்களது இருப்பிடம் பட்டினச்சேரி என்னும் பெயருடையது.  பட்டினவர் இனத்தாரிடை மட்டிலுமே தூக்க ஊஞ்சல் திருவிழாவைக் கொண்டாடும் வழக்கம் இருந்துள்ளது. உயரே தொங்கும் மரச்சட்டத்தில் கயிற்றிணைப்பின் மூலம், முதுகில் கொக்கியை  மாட்டித் தொங்கிய வண்ணம்  உடல் சுழலப்பெறும் இந்தச் சடங்கு வேட்டைத் தொல்குடிகளின் சடங்கை நினைவூட்டுவதாக உள்ளது. மீன் பிடித்தலில் அவர்களது பெண் தெய்வமான எல்லம்மாளின் ஆசியைப் பெறும் நேர்ச்சி நோன்பாகக் இத்திருவிழா கொண்டாடப்பட்டாலும், இச்சடங்கு, “போலச் செய்தல்  என்னும் தொல்மாந்தர் மரபின் நீட்சி எனக் கருதுகின்றனர்.

ஆங்கிலேயர் ஆட்சியில், சென்னைக் கருப்பர் நகரத்தில் (BLACK TOWN) இருபத்தொன்பது சாதியினர் குடியேறியிருந்தனர். அவர்களில் மூன்று மீனவ இனங்களான செம்படவர், கரையாளர், முக்குவர் ஆகியோரும் அடக்கம். முக்குவர் வலங்கைப் பிரிவினராய் இருந்தனர். முக்குவர்கள் கடலின் நடுவில் நிற்கும் கப்பலுக்கும் கடற்கரைக்குமாகப் படகைச் செலுத்தி கப்பல் சரக்குகளை இரு இடங்களிலும் ஏற்றி இறக்கும் பணியைச் செய்தனர்.

முடிவுரை

சிவன்படவர் என்னும் சொல் திருக்குவளைக் கல்வெட்டில்  பயின்று வருதல் புதுமையாய் இருப்பதை வியந்து தொடங்கிய இந்தப் பதிவு, மாந்த வாழ்வின் முதல் தொழில்களில் ஒன்றான மீன் பிடித்தல் தொழிலை நேற்கொண்ட மீனவர் பற்றிய ஓர் அறிமுகப் புரிதலை நமக்கு உணர்த்தியது எனில் மிகையல்ல.

துணை நின்ற நூல்களும் பார்வைக் குறிப்புகளும்:

1       இந்தியக் கல்வெட்டியல் ஆண்டறிக்கை – தொகுதி 1945-1952)
[ANNUAL REPORTS ON INDIAN EPIGRAPHY  (1945-1952) ]

2       காலனியத் தொடக்கக் காலம் 9கி.பி. 1500-1800) –
எஸ். ஜெயசீல ஸ்டீபன் – நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்

3       SHAIVAM.ORG


4       இணையம் – Wikipediya

  
   





துரை.சுந்தரம், கல்வெட்டு ஆராய்ச்சியாளர், கோவை.
அலை பேசி :  9444939156.

திங்கள், 25 நவம்பர், 2019



வெள்ளலூரில் மேலும் சில தொல்லியல் தடயங்கள்

முன்னுரை

கோவைப்பகுதியில் அமைந்துள்ள வெள்ளலூர், சங்ககாலந்தொட்டுச் சிறப்புடன் திகழ்ந்த பழமை வாய்ந்த ஓர் ஊராகும். வணிகப் பின்னணியுள்ள ஒரு நகரமாகவே இவ்வூரைக் கருதலாம். சங்க நூலான பதிற்றுப்பத்தில் ”காஞ்சி நதி”  என்று குறிப்பிடப்பெறும் நொய்யலாற்றங்கரையில் அமைந்த ஊர். கொங்கு நாட்டுப் பாலக்காட்டுக் கணவாயிலிருந்து பிரிந்து சென்ற பண்டைப் பெருவழிகள் மூன்றில் இராசகேசரிப் பெருவழி பேரூர், வெள்ளலூர், சூலூர், பல்லடம், காங்கயம், கரூர், உறையூர், குடந்தை ஆகிய ஊர்களைக் கடந்து பூம்புகாரை அடைந்தது. இவ்வழியைப் பயன்படுத்திய யவன வணிகர்கள் விட்டுச் சென்ற உரோமானிய நாணயங்கள் பெருமளவு வெள்ளலூரில் கிடைத்துள்ளன. மேலைக்கடற்கரையில் வந்திறங்கிய யவனர்கள் (கிரேக்கர், உரோமானியர் ஆகிய இரு நாட்டாரையும் “யவனர்” என்னும் பொதுப்பெயர்கொண்டு பழந்தமிழர் அழைத்தார்கள்), வெள்ளலூரிலும் கொடுமணலிலும்  கல்மணிகளாலான அணிகலன்களைப் பொற்காசுகளும் வெள்ளிக்காசுகளும் கொடுத்து வாங்கிக்கொண்டு போனார்கள். தொல்லியல் நோக்கில், MEGALITHIC  AGE என்று கூறப்படும் பெருங்கற்காலத்தைச் சேர்ந்த பழந்தடயங்களும் இங்கு கிடைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.  இத்தகு சிறப்புப்பெற்ற வெள்ளலூர், கல்வெட்டுகளில் வேளிலூர்த் தென்னூர் என்னும் பெயரிலும், அன்னதான சிவபுரி என்னும் பெயரிலும் குறிப்பிடப்படுகிறது.

வெள்ளலூர்ப் பகுதியில் கட்டுரை ஆசிரியர் கண்டறிந்த புதிய கல்வெட்டுகள்  பற்றியும்,  இப்பகுதியின் தொல்லியல் தடயங்கள் பற்றியும் ஏற்கெனவே கட்டுரைகள் பதிவாகியுள்ளன எனினும்,  கட்டுரை ஆசிரியர் கண்ணுற்ற, மேலும் சில தொல்லியல் தடயங்களைப் பற்றிய பதிவு இங்கு பகிர்ந்துகொள்ளப்படுகின்றது.

13-ஆம் நூற்றாண்டுக் கல்வெட்டுக் கண்டுபிடிப்பு

2018, அக்டோபர் மாதத்தில், நண்பரும் வரலாற்று ஆர்வலருமான துரை.பாஸ்கரன் தொடர்புகொண்டு வெள்ளலூரில் கல்வெட்டு ஒன்று கண்டறியப்பட்டுள்ளதாகக் கூறி அதைக்காண வெள்ளலூர் போகலாம் என அழைத்தார்.  நாங்கள் இருவரும் புறப்பட்டோம்.  வெள்ளலூரை அடைந்து அங்கிருக்கும் வ.உ.சி. வீதியில் குடியிருக்கும் சாந்தப்பா அவர்களைச் சந்தித்தோம். அவர் பணி நிறைவு பெற்ற ஆசிரியர்.  அவர் வீட்டுக்கருகிலேயே ஒரு சிறிய கோயில்.  முக்கண் விநாயகர்  என்னும் பெயரமைந்த ஒரு பிள்ளையார் கோயில். தற்காலக் கட்டுமானம். சிறு சதுரக்கற்களைக்கொண்டு கட்டப்பெற்ற கருவறைச் சுவர்கள். வடக்குப் பார்த்த சுவரின் தரைப்பகுதியில், தனிக்கல் ஒன்று பதிக்கப்பெற்றிருந்தது. மூன்றடிக்கு, இரண்டடி அளவில் நீள் சதுரமாக உள்ள அக்கல்லின் மையத்தில் மீன் சின்னம் என்று கருதத்தக்க அளவில், ஒரு புடைப்புச் சிற்ப முயற்சியாக, முற்றுப்பெறாத புடைப்புருவம் ஒன்று காணப்பட்டது. கல்லின் மையப் பரப்பு முழுதும் இச்சிற்ப முயற்சி இடம் கொண்டுவிட்டது. மீதமுள்ள, கல்லின் இடப்பக்க விளிம்பிலும், தரை மட்ட விளிம்பிலும் எழுத்துகளைப் பொறித்திருக்கிறார்கள். எனவே, தரைமட்டத்தில் பொறிக்கப்பட்ட எழுத்துகள் நம் நேர்ப்பார்வையில் படிக்கும் வகையிலும்,  பக்கவாட்டுப் பொறிப்புகள் வேறு திசையிலும் காணப்பட்டன.


முக்கண் விநாயகர் கோயில் முகப்பும் சாந்தப்பா அவர்களும்

கல்வெட்டு அமைந்த பகுதி


தனிக்கல்லாகையால், சரிந்துவிடாமல் இருக்கும் பொருட்டுக் கட்டிடப்பணியில் பயன்படுத்தும் இரும்புக்கம்பியின் துண்டுகள் இரண்டைக் கீழ்ப்பகுதியில் அணைத்துப் பதித்துள்ளனர். கல்லின் மீது சுண்ணாம்புப் பற்று இருந்ததால் எழுத்துகள் நன்கு புலப்படவில்லை. சுண்ணாம்புப் பற்றை நீக்கிக் கழுவித் தூய்மை செய்து, வெள்ளை மாவு பூசிய பின்னர் எழுத்துகள் தெளிவாகப் புலப்பட்டன. கல்லின் கீழ்ப்பகுதியில் இரண்டு வரிகளும், பக்கப் பகுதியில் இரண்டு வரிகளும் ஆக நான்கு வரிகளில் எழுத்துகள் பொறிக்கப்பட்டுள்ளன. கல்வெட்டின் பாடம் (வாசகம்) கீழ்க்கண்டவாறு;

கல்லின் கீழ்ப்பகுதி:

வரி 1     ஸ்வஸ்திஸ்ரீ கோப்பரகேசரி பன்மரா(ந) திரிபுவந
வரி 2     [தே]வற்கு யாண்டு ..வது வெள்ளலூர்


கீழ்ப்பகுதிக் கல்வெட்டு


கல்லின் பக்கப்பகுதி:

வரி 1    (டை)யார் திருவாசிராமம் உடை
வரி 2    யான் ஆவுடை பிள்ளையான்


பக்கப்பகுதிக் கல்வெட்டு

கல்வெட்டுச் செய்திகள்

கீழ்ப்பகுதியில் உள்ள கல்வெட்டு வாசகம் முற்றுப்பெறவில்லை ஆதலால், மீதமுள்ள சில எழுத்துகள் இருந்த பகுதி உடைந்து போயிருக்கக்கூடும். அல்லது, மீதமுள்ள சில எழுத்துகள் அடுத்து ஒரு கல்லில் எழுதப்பட்டிருக்கவேண்டும்; அக்கல் கிடைத்தால், கல்வெட்டு எந்த அரசன் காலத்தது என்று அறிய இயலும்.  பக்கப்பகுதியில் உள்ள எழுத்துகள் ஒரு தொடர்ச்சியுடன் உள்ளன. கல்வெட்டின் எழுத்தமைதியைக் கொண்டு, கல்வெட்டின் காலம் கி.பி. 13-ஆம் நூற்றாண்டு எனக் கருதலாம்.

கல்வெட்டு குறிப்பிடும் பொதுச் செய்தியைக் கல்வெட்டுகளின் பொதுக் கட்டமைப்பு கொண்டு அறிந்துகொள்ளலாம். கல்வெட்டுகளின் தொடக்கம் ஒரு மங்கலச் சொல். அது வழக்கமாக எழுதப்படும் ஸ்வஸ்திஸ்ரீ”.  அதை அடுத்து, கல்வெட்டு எழுதப்பெறும் காலத்தில், ஆட்சியிலிருக்கும் அரசன் பெயரும், அவனது ஆட்சியாண்டும் குறிக்கப்பெறும். இக்கல்வெட்டில் இந்தக் குறிப்பு காணப்பட்டாலும் அரசனின் இயற்பெயர் அமைகின்ற எழுத்துகள் இல்லை. ஆனால், அரசனின் பெயருக்கு முன்னால் எழுதப்பெறும் அவனது பட்டப்பெயரும் விருதுப்பெயரும், பெயரைத் தொடர்ந்து “தேவர்என்னும் சொல்லும் இக்கல்வெட்டில் உள்ளன. அடுத்து, அரசனின் ஆட்சியாண்டைக்குறிக்கும் வகையில் “யாண்டு ..வது  என்னும் தொடரும் உள்ளது. அரசனின் பட்டப்பெயரையும், விருதுப்பெயரையும் அடிப்படையாகக் கொண்டு அரசன் யார் என்பதை ஒருவாறு யூகம் செய்து அறிந்துகொள்ள முடிந்தது. தற்போதைய கோவை மாவட்டத்தில் உள்ள ஊர்களின் கல்வெட்டுகள் தொகுக்கப்பெற்ற, தொல்லியல் துறையினரின் வெளியீடான “கோவை மாவட்டக் கல்வெட்டுகள்என்னும் நூலின் முன்னுரையில் தரப்பட்டுள்ள செய்திகளையும், கல்வெட்டுகளையும் அடிப்படையாகக்கொண்டு சிறிது ஆய்ந்து பார்க்கும்போது, அரசன், கொங்குச் சோழனாகிய  இரண்டாம் விக்கிரம சோழன் என்னும் முடிவை எட்டலாம். கோப்பரகேசரி பன்மர்என்னும் கல்வெட்டுத் தொடரில் உள்ள பரகேசரி  என்னும் பட்டப்பெயரையும், திரிபுவநச் சக்கரவத்திகள்  என்னும் விருதுப்பெயரையும் ஒரு சேரக் குறிக்கும் வகையில் இரண்டாம் விக்கிரம சோழனின் பெயரே மிகுதியாக மேற்படி நூலில் காணப்படுவதால், கல்வெட்டில் குறிப்பிடப்பெறும் அரசன் கொங்குச் சோழனாகிய  இரண்டாம் விக்கிரம சோழன் எனக்கருதலாம். அவனது ஆட்சிக்காலம் கி.பி. 1256 – 1265. அவ்வாறெனில், கல்வெட்டின் காலம் கி.பி. 13-ஆம் நூற்றாண்டு என்பது பெறப்படுகிறது.

அடுத்து, கல்வெட்டுகளில், கொடைச் செய்தி எழுதப்படும். இதில், கொடையாளியின் பெயர், கொடைப்பொருள், கொடையைப் பெறுகின்றவர் அல்லது எந்தக்கோயிலுக்குக் கொடை அளிக்கப்படுகிறது போன்ற செய்திகள் இருக்கும். ஆய்வுக்குரிய நம் கல்வெட்டில், கொடையாளியின் பெயர் மட்டும் காணப்படுகிறது. கொடை தரப்பட்ட கோயிலின் பெயர், கொடையின் தன்மை ஆகிய செய்திகள் இல்லை. கொடையாளி, ஆவுடை பிள்ளை என்பவன் ஆவான். அவன், திருவாசி என்னும் ஊரைச் சேர்ந்தவன் என்பதை “திருவாசிராமம் உடையான்என்னும் தொடர் குறிப்பிடுகிறது. திருவாசிராமம் என்னும் ஊர் தற்போது திருவாசி என்னும் பெயரில், திருச்சி மாவட்டம் முசிறிக்கருகில் அமைந்துள்ள ஊராகும். வேறு மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவர் வெள்ளலூரில் கொடையளிக்கிறார் எனில், கொடை அளிக்கப்பட்டது சிறப்பான நிலையில் இருந்த ஒரு கோயிலுக்கு எனக் கருதவேண்டியுள்ளது. கோயில் எது என்று கல்வெட்டு வாயிலாக நாம் அறிய இயலவில்லை என்றாலும் அது வெள்ளலூர் தேனீசுவரர் கோயில் என்று கருத வாய்ப்பு மிகுதியாக உள்ளது. தேனீசுவரர் கோயில் ஆயிரம் ஆண்டுப்பழமை கொண்டது. சேர அரசன் கோக்கண்டன் வீரநாராயணன் காலத்து 10-ஆம் நுற்றாண்டுக் கல்வெட்டு ஒன்று, தேனீசுவரர் கோயில் தரையில் பதிக்கப்பட்டிருந்தது தற்போது பாதுகாப்பாகக் கோவை அகழ்வைப்பகத்தில் வைக்கப்பட்டுள்ளது. அதில் “வேளிலூர் தென்னூர் எம்பெருமானடிகள் ஸ்ரீகோயில்   என்று வெள்ளலூர் சிவன் கோயில் குறிக்கப்படுகிறது. அண்மையில், சென்ற 2017-ஆம் ஆண்டு, வெள்ளலூர் காசி அப்பச்சி கோயிலில் கண்டுபிடிக்கப்பட்ட தனிக்கல்லொன்றில் பொறிக்கப்பட்ட 13-ஆம் நூற்றாண்டுக் கல்வெட்டு, இறைவனை வேளிலூர் தென்னூராண்டார்என்று குறிப்பிடுவதோடு, வெள்ளலூரின் ஒரு பகுதியாகிய அன்னதான சிவபுரியில் கைக்கோளர் நிலைப்படையொன்று இருந்ததைக் கூறுகிறது. இக்காரணங்களால், கொடை அளிக்கப்பட்ட கோயில் வெள்ளலூர் சிவன் கோயிலாக இருக்கவேண்டும் என்னும் கருத்து உறுதியாகிறது. கொடையாளி திருவாசிராமம் (தற்போது திருவாசி) என்னும் ஊரைச் சேர்ந்தவன் என்பதைப்பார்த்தோம். வெள்ளலூரில் அமைந்துள்ள அழகு நாச்சியம்மன் கோயிலில் காணப்படும் கல்வெட்டு ஒன்றிலும் திருவாசிராமம் ஊர் குறிப்பிடப்படுகிறது. அக்கல்வெட்டில், திருவாசிராமம் கோயிலைச் சேர்ந்த தேவகன்மிகள் (கோயில் பணியாளர்கள்)  வெள்ளலூர் கோவிலுக்குக் கொடை யளித்த செய்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.

முக்கண் விநாயகர்

பிள்ளையார் - முன்பக்கத்தோற்றம்


பிள்ளையார் -பின்பக்கத்தோற்றம்


முக்கண் விநாயகர் சிற்பம் மிகவும் பழமையான தோற்றத்தைக் கொண்டிருப்பதோடு, வழக்கமாக நாம் காணும் விநாயகர் சிற்பத்திலிருந்து சற்று மாறுபட்டுள்ளது. சிற்பத்தின் பின்புறப்பகுதியிலும் விநாயகரின் உருவம் கரண்ட மகுடத்தோடு கூடிய தலைப்பகுதி, குழல் கற்றைகளோடு கூடிய தலைமுடி, மற்றும் இரண்டு கைகள் ஆகியவற்றோடு வடிக்கப்பட்டுள்ளது. முன்புற நெற்றியில் ஒரு கண்ணின் அமைப்பு காணப்படுவது சிறப்பு. இதை ஒட்டியே, இங்குள்ள மக்கள் முக்கண் விநாயகர் என்னும் பெயரைச் சூட்டியிருக்கவேண்டும்.

மேற்படி பிள்ளையார் கோயில் கல்வெட்டினை ஆய்வு செய்வதற்கு முன்னர், கடந்துவிட்ட 2017-ஆம் ஆண்டிலும், நண்பர் பாஸ்கரன் வெள்ளலூருக்கு அழைத்துச் சென்றார். இந்தப் பயணத்தில், அவருடைய நண்பர் இருவரின் வீடுகளில் பாதுகாத்து வைக்கப்பட்டிருந்த பெருங்கற்கால எச்சங்களைப் பார்வையிடுவதே நோக்கம். வெள்ளலூர் செல்லப் பல வழிகள் இருந்தபோதிலும், போத்தனூர் வழியாகச் செல்லலாம் என்றும், போத்தனூரில் ஆங்கிலேயர் காலத்துக் கல்வெட்டு ஒன்றைக் காட்டுவதாகவும் கூறி ஆவலைக் கூட்டினார்.

புலியோடு போராடிய இரயில் வண்டி ஓட்டுநர்

வெள்ளலூரை அடையும் நெருக்கத்தில், சற்று முன்னதாகவே, போத்தனூர் ஊருள் நாங்கள் சென்றோம். தார்ச்சாலையின் ஓரத்தில் மண் தரைப்பகுதியில் தரையோடு தரையாகப் பதிக்கப்பெற்ற ஒரு கல் மேடையை நண்பர் காட்டினார். சிலுவை வடிவத்தில் அமைக்கபெற்றிருந்த அந்த மேடைக்கல்லில் எழுத்துகள் பொறிக்கப்பட்டிருந்தன. அது ஒரு கல்லறைக் கல்வெட்டுப் போன்றது. ஆனால், அந்த இடம் கல்லறைத் தோட்டம் அல்ல. கிறித்தவ ஆலயமும் அல்ல. மக்கள் நடமாட்டமுள்ள சாலை. எனவே, அது, பொதுமக்கள் பார்வையில் இடம் பெறவேண்டும் என்னும் நோக்கத்தில் பதிக்கப்பட்ட ஒரு நினைவுக்கல் என்றே கருதவேண்டும். முதல் பார்வையில், எழுத்துகள் முற்றாகப் படிக்கும் வண்ணம் தெளிவாக இல்லை. எழுத்துப் பொறிப்பிலும் ஆழமில்லை.  கல்லின் பரப்பைத் துடைத்து, வழக்கம்போல், மாவு பூசிப்படித்தோம். ஆங்கிலத்தில் எழுதப்பெற்றிருந்தது.


                                         கல்லறைக் கல்வெட்டு -  சில தோற்றங்கள்







கல்வெட்டின் பாடம்

          SACRED TO THE MEMORY OF
              JOHN WILSON
       ENGINE DRIVER MADRAS RAILWAY
  WHO WAS KILLED AT WALLIAR BY A TIGER
             ON THE 10TH  APRIL 1868
                 AGED 29 YEARS








1868-ஆம் ஆண்டில், கோவை மாவட்டத்தை அடுத்துள்ள வாளையாறு என்னுமிடத்தில் நிகழ்ந்த ஒரு நிகழ்ச்சி அது.  வாளையாறு கேரளத்தைச் சேர்ந்த ஊர். கேரளத்தை நோக்கிச் சென்ற இரயில் வண்டியாக இருக்கவேண்டும். இன்றைக்கு நூற்றைம்பது ஆண்டுகளுக்கு முன்னர் இந்த இரயில் தடம் அமைந்த பகுதி, காட்டுப் பகுதியாக இருந்திருத்தல் வேண்டும். வாளையாற்றில்,  புலி ஒன்று இரயில் எஞ்சின் இருந்த பகுதியில் பாய்ந்து நுழைந்தது யாரும் எதிர்பாராத நிகழ்வாக இருந்திருக்கும். வண்டி ஓட்டுநர் புலியோடு போராடி உயிரிழந்தார். அவர் நினைவாக எழுப்பப்பட்ட  நினவுக்கல்லைப் பார்க்கையில் அந்நிகழ்ச்சி நம் கற்பனையில் காட்சியாக விரிந்தது. 

இரயில் நிருவாகத்தினர் ஜான் வில்சன் என்னும் அந்த ஓட்டுநரின் நினைவைப் போற்றிக் கல் எடுத்துள்ளனர். அந்த ஓட்டுநர் ஒரு ஆங்கிலேயர் (BRITON) என்பதாக அறிகிறோம். போத்தனூர், ஆங்கிலோ-இந்தியக் குடியிருப்புப் பகுதிகளில் ஒன்றாக விளங்கியது. பிரிட்டிஷார், போர்த்துக்கீசியர், டச்சுக்காரர் ஆகிய ஐரோப்பியரோடு மண உறவின் வழி வந்தோரே ஆங்கிலோ-இந்தியர் ஆவர். கி.பி. 1860-இல் பிரிட்டிஷ் இரயில்வேத் துறையில் போத்தனூர் சந்திப்பு ஏற்படுத்தப்பட்டது. அப்போது கோவை, சந்திப்பு நிலையில் இருக்கவில்லை. பயணிகள் ஏறி இறங்கும் ஒரு எளிய நிலையமாக மட்டுமே இருந்தது. கோவைக்கு முதல் இரயில் 1874-ஆம் ஆண்டு விடப்பட்டது. ஐரோப்பியரும் ஆங்கிலோ-இந்தியரும் பெரும்பாலும் போத்தனூர் இரயில்வேத்துறையில் பணியாற்றியுள்ளனர் எனலாம். 1950-60 பதின்ம ஆண்டுகளில் ஏறத்தாழ ஆயிரம் ஆங்கிலோ-இந்தியக் குடும்பங்கள் போத்தனூரில் இருந்தன என அறியப்படுகிறது. நூற்றைம்பது ஆண்டுகள் பழமையான – மேற்குறித்த கல்லறைக்கல்வெட்டு - தொல்லியல் எச்சமாக  இன்றும் கவனம் ஈர்க்காமல், ஒரு சிலர் மட்டுமே அறிந்ததாக இருக்கின்றது.  (அண்மையில், 12-10-2019 அன்று தொல்லியல் அறிஞர் திரு பூங்குன்றன் அவர்கள் தலைமையில் நடந்த கொங்கு மரபு நடைப் பயணத்தில் இக்கல்லறைக் கல்வெட்டு காண்பிக்கப்பட்டு வரலாற்றுக் குறிப்புகள் பயண உறுப்பினர்க்கு விளக்கப்பட்டன.)

பெருங்கற்கால எச்சங்கள்

முதுமக்கள் தாழி

2017-ஆம் ஆண்டில், நாங்கள் பார்வையிட்ட தொல்லியல் எச்சங்களில் ஒரு முதுமக்கள் தாழியும், மட்கலன்களும் அடங்கும். வெள்ளலூரில்  பல ஆண்டுகளுக்கு முன்னர், தனியார் ஒருவர், வீடு கட்டுவதற்காகத் தோண்டியபோது அடித்தளக் குழியில் ஒரு முதுமக்கள் தாழி வெளிப்பட்டுள்ளது. அதைப் பாதுகாப்பாக எடுத்து அவ்வீட்டில் வைத்துள்ளனர். அரிசிப்பானையாகப் பயன்பாட்டில் இருக்கும் அந்த முதுமக்கள் தாழியைப் பார்வையிட்டோம். சுண்ணம் பூசி வைத்திருந்த அந்தத் தாழி பார்க்க அழகு. தாழியின் தொன்மையையும், வரலாற்றுத் தடயத்தையும் எடுத்துக்கூறினோம். அரசு அருங்காட்சியகத்தில் சேர்ப்பதாக வீட்டுக்குரியவர் கூறியுள்ளார். (சேர்ந்ததா என்று தெரியவில்லை). 














மட்கலன்கள்

இன்னொருவரும் வீடு கட்டும் முயற்சியின்போது கண்டெடுத்த பெருங்கற்கால மட்கலன்களைப் பாதுகாப்பாக வீட்டில் வைத்திருக்கிறார்.   முழுதும் சிவப்பு நிறங்கொண்ட அகன்ற வயிறு கொண்ட குடுவை, உட்புறம் கருப்பு நிறமும், வெளிப்புறம் சிவப்பு நிறமும் கொண்ட – கருப்பு சிவப்பு நிரமுள்ள -  மற்றொரு சிறிய குடுவை, இரண்டு அழகான தாங்கிகள் (மட்கலன்களைத் தாங்கும் தாங்கிகள்),  நான்கு சிறிய தட்டுகள் (அவற்றில் இரண்டு கருப்பு நிறங்கொண்டவை)  ஆகியவை காட்சிப்படுத்தப்பட்டன.


பெருங்கற்கால மட்கலன்கள்






குறிப்புதவி:

1    The Hindu - COIMBATORE:, JUNE 11, 2012
2     Pradeep damodaran’s blogspot
3     இந்து-தமிழ் திசை நாளிதழ் – 24-11-2019.







துரை.சுந்தரம், கல்வெட்டு ஆராய்ச்சியாளர், கோவை,
அலை பேசி :  9444939156.