மொத்தப் பக்கக்காட்சிகள்

சனி, 20 அக்டோபர், 2018


கோவைப்பகுதியில் ஒரு வரலாற்றுச் சிற்றுலா

முன்னுரை
கோவை அரசுக் கலைக் கல்லூரியின் முன்னாள் மாணவன் என்ற முறையில் எனக்கு அக்கல்லூரியுடன் தொடர்பு உண்டு. குறிப்பாக வரலாற்றுத்துறையுடன். முதுகலை வரலாறு படிக்கும் மாணவர்கள், வரலாற்றுத் தொடர்புள்ள இடங்களுக்குச் செல்லுதல் மூலம் அவர்கள் நூற்சூழலோடு களச்சூழல் உணர்வையும் பெறுகின்ற வாய்ப்பு ஏற்படும் என்று பேராசிரியர்களிடம் உரையாடுவது வழக்கம். அவ்வாறான களப்பயணங்கள் ஏனோ பெரும்பாலும் நிகழுவதில்லை. கல்லூரிகளின் நிருவாக முறையில் ஏதேனும் நடைமுறை இடர்ப்பாடுகள் இருக்கக் கூடும். எனவே, அண்மையில், அக்கல்லூரியின் வரலாற்றுத்துறைப் பேராசிரியர் முனைவர் ஜூலியானா அவர்கள் என்னைத் தொடர்பு கொண்டு, கோவையின் சுற்றுப்பகுதியில் வரலாற்றுத் தடயங்கள் உள்ள ஒரு சில இடங்களுக்கு மாணவர்களை அழைத்துச் செல்கிறோம்; நீங்களும் உடன் வாருங்கள் என அழைத்தபோது மகிழ்ச்சியுற்றேன்.

தமிழக மரபுசார் ஆர்வலர்கள் சங்கம்
மேற்படிப் பயணத்தில் பார்க்கவேண்டிய இடங்களைத் தெரிவு செய்து, வழிகாட்டி அழைத்துப்போனது  கோவையில் உள்ள தமிழக மரபுசார் ஆர்வலர்கள் சங்கம் என்னும் ஓர் அமைப்பு. இது, தமிழக மரபிலும், கோவை வரலாற்றிலும் ஆர்வமுள்ள ஓர் இளைஞர் அணி.  அண்மையில் வரலாற்றுத் தேடல் மூலம் சில தொல்லியல் கண்டுபிடிப்புகளை இவர்கள் இனம் கண்டுள்ளனர். பள்ளி, கல்லூரி மாணவர்களை இது போன்ற பயணங்களில் ஈடுபடுத்தி வரலாறு, தொல்லியல் பற்றிய விழிப்புணர்வையும், அறிமுக அறிவையும் வழங்கி வருகின்றனர்.

பயணம் தொடங்கியது
பயண நாளன்று காலை, அரசு கலைக்கல்லூரியிலிருந்து ஒரு சிற்றுந்தில் புறப்பட்டோம். இருபது மாணவர்களுடன் பேராசிரியரும் நானும்.  பார்வையிடவேண்டிய இடங்களில் முதலாவது உக்கடம் பகுதியில் அமைந்துள்ள புலிகுத்திக்கல். உக்கடம் புறவழிச்சாலையோரத்தில் இந்தப்புலிகுத்திக்கல் அமைந்துள்ளது.  சிற்றுந்து அந்த இடத்தை அணுகும் முன்பே அங்கு நமது மரபுசார் சங்கத்து இளைஞர் அணி வந்திருந்தது. நான்கு பேர் கொண்ட அணி. இரு சக்கர வண்டிகள் இரண்டு. அமைப்பின் பொறுப்பில் செயல்படும் விஜயகுமார், ஆனந்தகுமார் ஆகிய இருவர்; மற்றுமிருவர் உறுப்பினர்.  அனைவரும் தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் இளையர். விடுமுறை நாள்களில் வரலாற்றைத் தேடும் பயணர்கள்.

உக்கடம் புலிகுத்திக்கல்
கொங்குநாட்டின் கோவைப்பகுதி ண்டைய நாள்களில், மலை சார்ந்த குறிஞ்சி நிலத்தை அரணாகக் கொண்ட காடு சூழ்ந்த முல்லை நிலமாக இருந்த காரணத்தால், கால்நடை வளர்ப்புச் சமுதாயமே மேலோங்கியிருந்தது. கால்நடைகளே செல்வமாகக் கருதப்பட்ட காலங்களில், கால்நடைகளைக் காத்தல் பெரும்பணியாயிருந்தது. கால்நடைகளைக் கவர்வதிலும், அவற்றைக் காத்தலிலும் வீரர்கள் போரிடுதல் இயல்பான சமூக நிகழ்வாயிருந்தது. அது போலவே, கால்நடைகளைக் காட்டு விலங்குகளினின்றும் காப்பதற்காகக் காவல் வீரர்கள் விலங்குகளோடு சண்டையிட்டு விலங்குளைக் கொல்லுதலும், சண்டையின்போது வீரர்கள் இறந்துபடுதலும் மிகுதியாக நிகழ்ந்தன. இவ்வகை வீரர்களுக்கு நடுகல் எடுப்பித்து வழிபடுதல் நாட்டார் மரபு. 


உக்கடம் -புலிகுத்திக்கல் கோயில்
இவ்வகை நடுகற்கள், கோவைப்பகுதியில் புலிகுத்திக்கல் என்னும் பெயரில் வழங்கும். இடைக்காலக் கொங்குச் சோழரின் ஆட்சியின் கீழ் கொங்குப்பகுதி வந்த பின்னர் வேளாண்மை செழிப்புற்றது. கொங்குச் சோழர் ஆட்சிக்கு முன்புவரை கோவைப்பகுதி முன்னிலையில் ஒரு நகரப்பகுதியாக் இருந்திருக்கவில்லை. கோவைக்கருகில் அமைந்துள்ள பேரூரே பெரியதொரு நகரமாக இருந்தது. கொங்குநாட்டின் இருபத்து நாலு நாட்டுப்பிரிவுகளில் பேரூர் நாடும் ஒன்றாக இருந்தது. கோவைப்பகுதி, காடுகள் சூழ்ந்த பகுதியாகவும், கால்நடை வளர்ப்புப் பகுதியாகவும் இருந்துள்ளது. பின்னரே, கொங்குச்சோழர்காலக் கல்வெட்டுகளின்படி, கி.பி. 10-ஆம் நூற்றாண்டுக்குப் பின்னர் கோவன்புத்தூர் என்று புதியதாக ஓர் ஊர் அமைக்கப்பட்டதாகவும், அது பேரூர் நாட்டில் இருந்ததாகவும் செய்தி காணப்படுகிறது. காடழித்து ஊராக்கப்பட்ட கோவன்புத்தூர், நாயக்கர் காலத்திலும், காடுகள், கால்நடை வளர்ப்பு, கால்நடைகளை விலங்குகளிடமிருந்து காத்தல் ஆகிய கூறுகளைக் கொண்டிருந்தது. எனவே, மேற்படி உக்கடம் புலிகுத்திக்கல் நாயக்கர் காலத்தில் எழுப்பப்பட்ட நடுகல்லாகும்.


புலிகுத்திக்கல் சிற்பம்-முழுத்தோற்றம்
அண்மைத் தோற்றம்


உக்கடம் நடுகல் மதுரை வீரன் சாமிஎன்னும் பெயரில் வழிபடப்பட்டுவருகிறது. ஒரு வகையில், வழிபாடு காரணமாகவே இந்த நடுகல் இதுவரை அழிவுக்குட்படாமல் ஒரு தொல்லியல் எச்சமாகப் பாதுகாக்கப்பட்டுவந்துள்ளது எனலாம்.

ஒத்தக்கால் மண்டபம்
அடுத்து நாங்கள் சென்ற இடம். ஒத்தக்கால் மண்டபம். கோவை - பொள்ளாச்சி சாலையில் அமைந்துள்ள ஓர் ஊர். நூறு கால் மண்டபம், ஆயிரங்கால் மண்டபம் எனப் பல மண்டபங்கள் இருக்கையில், இங்கே, ஒற்றைக்கால் கொண்ட மண்டபம் எவ்வாறு இருக்கமுடியும்? ஊர்ப்பெயருக்கு ஏதோ ஒரு காரணம் இருக்கவேண்டும். இங்குள்ள நவகோடி நாராயணப் பெருமாள் கோயில்தான் எங்கள் வரலாற்றிலக்கு. கோயிலைச் சுற்றியுள்ள இடம் பெருங்கற்காலத்தைச் சேர்ந்த (MEGA LITHIC PERIOD) ஓரிடம். இவ்வகை இடங்கள் “சாம்பல் மேடுஎன்று மக்கள் வழக்காற்றில் வழங்கும். இங்கு, பழங்கால மக்களின் வாழ்விடமும், ஈமக்காடும் இருந்துள்ளன என்பதற்குச் சான்றாக, முதுமக்கள் தாழிகள், கருப்பு சிவப்புச் சிறு பானைகள் ஆகியவற்றின் துண்டுப்பகுதிகள் எச்சங்களாக மண்மேடுகளில் காணப்படுகின்றன.  இங்குள்ள மற்றுமொரு சிறப்பு, இம்மண்மேடுகளில் உள்ள மண்ணைக் கொண்டே கோட்டைச் சுவர் போல எழுப்பப்பட்ட, இடிந்த நிலையில் உள்ள சுவர்ப்பகுதிகள். இச்சுவர், திப்பு சுல்தான் காலத்தில் ஏதோ ஒரு பாதுகாப்புக் கருதி இப்பகுதி மக்கள் எழுப்பியது எனக் கருதப்படுகிறது. சுவர்க் கட்டுமானத்தின் சரியான பின்னணிக்காரணம்  தெரியவில்லை.

ஒத்தக்கால் மண்டபம் - பெருமாள் கோயில்-முன்புறத்தோற்றம்


சாம்பல் மேடும் கோட்டை மண் சுவரும்


இங்குள்ள பெருமாள் கோயிலில், கல்வெட்டு பொறிக்கப்பட்ட பல பலகைக் கற்கள் முன்பு இருந்துள்ளன.  தற்போது இரண்டு கல்வெட்டுப்பலகைகளைக் கோயில் வளாகத்தில் வைத்துள்ளனர். இவை நாயக்கர் காலத்தவையாக இருக்கலாம். தொல்லியல் துறையினர் வெளியிட்ட கோவை மாவட்டக் கல்வெட்டுகள் நூலில் இவை பதிக்கப்படவில்லை. ஆனால், பேராசிரியர் அவிநாசி மா.கணேசன் அவர்கள், முனைவர் சூலூர் இரா.ஜெகதீசன் அவர்களோடு இணைந்து வெளியிட்ட கொங்குநாட்டுக் கல்வெட்டுகள்-கோயம்புத்தூர் மாவட்டம்  என்னும் நூலில் ஒரே ஒரு கல்வெட்டு பதிவாகியுள்ளது. கல்வெட்டின் பெரும்பகுதி சிதைந்துள்ளது; கல்வெட்டில் அரசர் காலக் குறிப்பு இல்லை; கல்வெட்டில் குறிப்பிடப்பெற்ற சக ஆண்டும், தமிழ் ஆண்டும் பொருந்தி வரவில்லை என்பதாக நூலாசிரியர் குறிப்பிடுகிறார். எங்களது பயணத்தில் பார்த்த முதல் கல்வெட்டு இதுதான் என்பதாலும், இக்கல்வெட்டின் பாடம் தொல்லியல் துறையின் நூலில் இடம்பெறாததாலும் அதன் பாடத்தையும் செய்தியையும் இங்கு தந்துள்ளேன்.

ஒத்தக்கால் மண்டபம் பெருமாள் கோயிலின் கல்வெட்டின் பாடம்:

1     ஸ்வஸ்திஸ்ரீ செகாப்த்தம் 1410
2     1410 இதன்மேல் செ
3     ல்லாய் நின்ற பார்த்திப
4     வருஷம் அற்பசி மாதம்
5     15 நவகோடி நாரா
6     யணப் பெருமாளுக்கு அ
7      ன பத்த வதொ.................
8     ருமம் ..........மை மு.........ஆளுக்கட்டி
9     ..................விட்டபடிக்கு வழக்கப்பட்டு
10    தங்காரிக்கன் சந்தனம்
11    12 மா பாக்குமிழகும் அரை மா ..........
12    ப்பறுசே வெல்லம் மாகாணி எ
13    பேற்பட்ட தீர்வையில்
14    ட்டன் அரை மாவரை
15    யால் கூடி வருகையில் விரப
16    .............யக் கரையல்வர்களு
17    ..............ம்மக் கையிலாசப்
18    ..................ல்ல பட
19    நாயகன் ...........யந்கட
20    காயிந
21    மாதநட்டார் மாந்தான்
22    மம் பாபால .........நடத்த வரு
23    வதாகளு செல் பாகம் .....முட்
24    டாமல்த் தேவக் காரியத்தை 
25    விலக்கினவன் கெங்கை கரையில்




கல்வெட்டின் தோற்றங்கள்


நவகோடி நாராயணப் பெருமாள் கோயிலுக்கு வழிபாட்டிற்காகக் கொடை கொடுக்கப்பட்டுள்ளது என்பது கல்வெட்டுச் செய்தி. பாக்கு, மிளகு, வெல்லம், சந்தனம் ஆகியவை கொடைப்பொருள்கள். கல்வெட்டில் குறிக்கப்பெறும் காலக் கணக்கு சரியில்லை. சக ஆண்டு 1410-க்கு இணையான ஆங்கில ஆண்டு 1488. பார்த்திப ஆண்டு தொடங்குவது 1405-இல். இரண்டும் பொருந்திவரவில்லை. நேரில் கல்வெட்டைப் பார்க்கும்போது 12-ஆவது வரியில் உள்ள “வெல்லம்என்னும் சொல் தெளிவாகத் தெரிந்தது. ஒளிப்படத்தைக் கணினியில் பெரிதுபடுத்திப் பார்த்தாலும் கல்வெட்டைப் படிக்க இயலவில்லை. வரி 22-இல் வருகின்ற “பாபால  என்ற சொல் கணினியில் “பரிபால  என்பதாகப் புலப்பட்டது. கோயிலுக்கு அளிக்கப்பட்ட தன்மம் காக்கப்படவேண்டும் என்பதைக் குறிக்கப் “பரிபாலனம்  என்னும் வடசொல் எழுதப்படும். எனவே “பாபால  என்பது “பரிபால(னம்)  என்பதாகவே இருக்கக் கூடும். கல்வெட்டின் இறுதியில் (25-ஆவது வரியில்) உள்ள “கெங்கைஎன்னும் சொல், தன்மத்துக்கு அழிவு செய்வோர் கங்கைக் கரையில் காராம்பசுவைக் கொன்ற பாவத்தை அடைவார்கள் என்பதைக் குறித்து வருகின்ற கலவெட்டுத் தொடரின் ஒரு பகுதியாகும்.

குமுட்டிபதிப் பாறை ஓவியம்
அடுத்து நாங்கள் செல்லவேண்டிய இடம் குமுட்டிபதி. தொல்லியல் தடயங்களில் ஒன்றான பாறை ஓவியங்கள் அமைந்த பகுதி. ஒத்தக்கால் மண்டபத்திலிருந்து பிரியும் சாலை ஒன்று அவ்வூருக்குச் செல்கிறது. சிறிது தொலைவு சென்றதுமே, சாலையோரத்தில், மீண்டும் ஒரு புலிகுத்திக்கல் கண்டோம். மேலும் சற்றுத்தொலைவு சென்றதுமே சாலையோரத்தில் கருப்பராயன் கோயில் வீதி முனையில், எழுத்துகள் உள்ள ஒரு கல்லைப் பார்த்தோம். சிற்றுந்திலிருந்து இறங்கி நெருங்கிப் பார்க்கையில், எழுத்துகள் மிகத் தேய்ந்துபோன நிலையில் கல்வெட்டு இருந்ததை அறிந்தோம். மூன்று வரிகள் இருந்தன. குமரன்” , “முருகன்  போன்ற சொற்கள் காணப்பட்டன. மிகப் பிற்காலத்துக் கல்வெட்டு. அருகில் ஊர் மக்களும் சூழ்ந்துகொண்டு கல்வெட்டுச் செய்தியை அறியும் ஆவலைத்தெரிவித்தார்கள். ஆனால், கல்வெட்டு படிக்கும்படியாயில்லை என்பதில் அனைவர்க்குமே ஏமாற்றம்தான். மேலே பயணம் தொடர்ந்தது. குமுட்டிபதி ஊரை அடைந்து, அங்கிருக்கும் குன்றை நெருங்கினோம். குன்றின் அடிவாரத்திலேயே தரைப்பகுதியிலிருந்து சற்றே பாறையின்மீது ஏறியவுடன், எதிரே பெரும் சுவர் போலச் சரிந்த ஒரு பாறைப்பரப்பு. பாறைப்பரப்பு முடியும் இடத்தில் பாறை கவிந்து இயற்கையாக ஒரு பெரிய குகைத்தளத்தை உருவாக்கியிருந்ததைக் கண்டோம். குகைக்குள் கூரைப்பகுதியில் ஓவியங்கள் வரையப்பட்டிருந்தன. மூவாயிரம் முதல் ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரான ஒரு காலகட்டத்தில் இவ்வோவியங்கள் வரையப்பட்டிருக்கலாம் என்பது தொல்லியலாரின் கணிப்பு. ஓவியங்கள், வெள்ளை நிறக்கோடுகளால் அமைந்தவை. White Ochre என ஆங்கிலத்தில் சொல்வார்கள். செங்காவி வண்ணத்திலும் பாறை ஓவியங்கள் வரையப்படுவது உண்டு. குமுட்டிபதியில் உள்ள ஓவியங்களில் ஒரு யானை உருவமும், தேர் போன்ற ஒரு உருவமும் காணப்படுகின்றன.  தேரைப் பலர் கூடி இழுத்துச் செல்வதைப்போல் ஓவியம் காணப்படுகிறது. அருகிலேயே உள்ள மற்றொரு பாறையில் மனித உருவங்கள் வரையப்பட்டுள்ளன. வரலாற்றுக்க் காலத்துக்கு முந்தைய தொல்லியல் எச்சங்களும் கோவை நகரின் அருகிலேயே இருப்பது சிறப்பு.

                     ஓவியங்கள் இருக்கும் குகைப்பகுதி





                                                         ஓவியங்கள்     





குமுட்டிபதிப் பாறை ஓவியங்களைப் பார்த்து முடியும்போது பகலுணவு நேரம் நெருங்கியிருந்தது. அன்று முழுதுமே கோடை வெயிலின் தாக்கம் கடுமையாக இருந்தது. களைப்போடு பசியும் சேர்ந்து கொண்டபோது, கல்லூரிப் பேராசிரியரின் ஏற்பாட்டில் சுவையான உணவு உண்டதும் களைப்பு கலைந்து புத்துணர்வோடு தொல்லியல் பயணத்தின் அடுத்த இடம் நோக்கி நகர்ந்தோம். இங்கே ஒன்றைக் குறிப்பிடவேண்டும். மரபு சார் சங்கத்து இளைஞர்கள், கடும் வெயிலிலும் இரு சக்கர வண்டிகளில் தொடர்ந்து சிற்றுந்துக்கு வழிகாட்டியவாறே பயணத்தைத் தொடர்ந்தார்கள் என்பதுதான் அது. வரலாற்றின்மீது உள்ள ஆர்வமும், சேவைப்பண்பும்.

சுண்டக்காமுத்தூர்-நாயக்கர்காலக் கிணறு
குமுட்டிபதியை அடுத்து நாங்கள் சென்ற இடம் சுண்டக்காமுத்தூர். குமுட்டிபதியிலிருந்து ஒரு குறுக்குச்சாலை வழியே கோவைப்புதூரைக் கடந்ததும் வருகின்ற ஊர். அங்கே, “பிளேக்மாரியம்மன் கோயிலின் பின்புறம் ஒரு பழங்காலக் கிணறு. இக்கிணறு, நீண்ட காலமாகத் தூர்ந்து போய் மண்ணும், புதர்களும் மூடிய நிலையில் இருந்துள்ளது. நமது மரபுச் சங்கத்து இளைஞர் குழு, நீண்ட உழைப்புக்குப்பின்னர் இக்கிணற்றைத் தூர் நீக்கிப் பலரும் பார்த்து மகிழுமாறு வெளிப்படுத்தியுள்ளார்கள். இது போன்ற தன்னார்வலரின் பணிகளாலேயே தொல்லியல் தடயங்கள் பலவும் வெளிப்படுத்தப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. ஊத்துக்குளியில், நாயக்கர் காலப் படிக்கிணறு ஒன்று இயல் வாகைஎன்னும் இளைஞர் அமைப்பினரால் இவ்வாறு வெளிப்பட்டதும், அதைச் சென்று பார்த்ததும் நினைவுக்கு வந்தது.  


நாயக்கர் காலக் கிணறு
மீன் - புடைப்புச் சிற்பமும், வரிச் செதுக்கலும்
தோரணச் சிற்பம்-மனித முகத்துடன்
தலை உடைந்த நந்திச் சிற்பம் 

சுண்டக்காமுத்தூர் கிணறும் நாயக்கர் காலத்தைச் சேர்ந்தது. சதுரமாக வெட்டப்பட்ட ஆழமான கிணற்றுப் பகுதியின் சுற்றுச் சுவரும், கிணற்றுப்பகுதிக்குக் கீழிறங்கிச் செல்லும் படிகளைக்கொண்ட குறுகலான நீள் வழியும் அதன் சுற்றுச் சுவரும் ஆகிய அனைத்தும் கல் கட்டுமானங்கள். கற்கள் செம்மையான நிறத்தில் அமைந்து அழகான தோற்றத்தை அளித்தன. கட்டுமானச் சுவர்ப்பகுதியில், ஆங்காங்கே புடைப்புச் சிற்பங்கள். அவற்றில் பெரும்பாலானவை மீன் உருவங்கள். வளமைச் சின்னங்களைக் குறிப்பதான குறியீடாக மீன் உருவங்களைப் படைப்பது மரபு. சுவர்ப்பகுதியின் மேல் பகுதியில் வரி வரியாகச் செதுக்கல்கள். இந்தச் செதுக்கல்களைப் பல மண்டபங்களில் காணலாம். கிணற்றைச் சுற்றியுள்ள வளாகத்தில் உடைந்த நிலையில் ஒரு சிறிய நந்திசிலையும், கோயில்களில் காணப்படும் கோட்டம் என்னும் பகுதியில் அமைந்த ஒரு தோரணச் சிற்பக்கல்லும் இருந்தன. இத்தோரணச் சிற்பத்தில் பேரூர்க் கோயிலில் உள்ளதுபோல மனித முகம் ஒன்று செதுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. நந்தியும், தோரணமும், வேறெங்கோ இருந்த ஒரு கோயிலின் துண்டுச் சிற்பங்களாக இருக்கக்கூடும்.

வேடபட்டிக் குளம்
சுண்டக்காமுத்தூர் நாயக்கர்காலக் கிணற்றைப் பார்த்துவிட்டு அடுத்து நாங்கள் சென்ற இடம் வேடபட்டிக் குளம். இது கோவைக்கருகிலுள்ள பெரிய குளங்களுள் ஒன்று. இதன் ஒரு பகுதி கோளராம்பதிக் குளம் என்னும் பெயரால் அழைக்கப்படுகிறது. குளம் முழுதும் கருவேல மரங்களின் தொகுப்பு. ஒவ்வொரு மரத்தைச் சுற்றிலும் மண்மேடு. மற்ற இடங்கள் யாவும் பள்ளம். கடந்த சில மாதங்களாகக் குளத்தில் தூர் எடுக்கப்பட்டு, அதன் காரணமாகக் குவிந்த மண் முழுதும் குளத்தின் கரையிலேயே கொட்டப்பட்டதன் மூலம் குளத்தின் கரை நன்கு உயர்த்தப்பட்ட நிலையில் உள்ளது.  மரங்களின் அண்மையைத் தவிர்த்து மற்ற இடங்களில் மண்ணைத் தோண்டியதாலேயே பள்ளமும் மேடும். குளத்துள் இறங்கிச் சற்று நடந்ததுமே, மரபுச் சங்க இளைஞர்குழு ஓரிடத்தில் எங்களை நிறுத்தி, ஒரு மரத்தடி மண்மேட்டைக் காண்பித்தார்கள். அங்கே, மண் தாழிகளின் சிறு சிறு துண்டு ஓடுகள். அவை தடித்துக் காணப்பட்டன. தொல்லியல் எச்சங்களான முதுமக்கள் தாழிகளின் ஓடுகளே அவை. இந்த இடத்தில்தான், அண்மையில் இந்த மரபு சார் சங்கக் குழுவினர், தொல்லெழுத்தான ‘தமிழ் பிராமி எழுத்துப் பொறிப்புக் கொண்ட தாழிப்பகுதியைக் கண்டெடுத்தார்கள். கொங்குப்பகுதியில் கிடைத்த தமிழ் பிராமிப் பொறிப்புகளில் இக்கண்டுபிடிப்பு சிறப்புக்குரியது. இதற்கு முன்னர் கிடைத்த எழுத்துப் பொறிப்புகளில் ஆள் ஒருவரின் பெயர் மட்டுமே காணப்பெறும். ஆனால், இங்கே கிடைத்த தாழித்துண்டில்,  “ஈமத்தாழி   என்னும் சொல்லே இருந்தமை இதற்கு முன்னர் கண்டிராத புதுமை. இந்தச் சொல்லைத் தொடர்ந்து “ன  என்னும் எழுத்தும் உள்ளது. இபகுதியை முறையாகத் தொல்லியல் துறையினர் ஆய்வு செய்யவேண்டும். தொல்லியல் ஆய்வுகளுக்கு ஏனோ அரசு முன்னுரிமை அளிப்பதில்லை.


வேடபட்டிக் குளம்
மண்மேட்டில் தாழி புதைந்திருந்த இடம்


”ஈமத்தாழி” - பொறிப்பு


வேடபட்டித் தூம்பு (மதகு)
வேடபட்டிக் குளத்தின் இன்னொரு பகுதியில், அண்மையில் நமது மரபுசார் சங்கக் குழுவினர் கண்டுபிடித்த ஒரு மதகைப் (தூம்பு) பார்வையிட்டோம். தென் மாவட்டங்களில் மதகு, தூம்பு, கலிங்கு என்னும் பெயர்களில் வழங்கும் நீர்ப்பாசன அமைப்புகளின் எண்ணிக்கை மிகுதி. கோவைப்பகுதியில் மதகுகளின் எண்ணிக்கை குறைவே.  எனவே, வேடபட்டிக் குளத்தில் மதகு கண்டுபிடிக்கப்பட்டதும் சிறப்பானதே. இந்த மதகில் சில புடைப்புச் சிற்பங்கள் உள்ளமை, வழக்கமாகக் காணும் மதகுகளினின்றும் இதை வேறுபடுத்துகிறது. ஒட்டகம், பாண்டியரின் இலச்சினை, கத்தி ஆகிய மூன்று சிறு புடைப்புச் சிற்பங்கள் ஒருசேர இதில் காணப்படுவது குறிப்பிடத்தக்கது. மூன்று வேறுபட்ட பொருள்கள். ஒட்டகம், ஒரு சில கோயில்களில் காணப்படும் வளமைச் சின்னங்களான மீன், முதலை ஆகியவற்றோடு தொடர்புடையது. எனவே, ஒட்டகம் வளமைச் சின்னத்தைக் குறிக்கும் என்பது ஒரு கருத்து. ஒட்டகம், அரேபிய வணிகர்களோடு தொடர்புடையது எனக் கொள்வோமானால் அரேபிய வணிகர்கள் இந்த மதகினை அமைப்பதில் பங்கேற்றனர் எனலாம். பாண்டியரின் மீன் இலச்சினை உள்ளதால் 13-ஆம் நூற்றாண்டில் கொங்கு நாட்டை ஆண்ட கொங்குப் பாண்டியரோடு இந்த மதகு தொடர்புடையது எனலாம். 

                                                                             தூம்பு
                                                   

இவற்றுக்கு முற்றிலும் வேறான கத்தியின் உருவம் எதைக் குறிக்கிறது எனத் தெரியவில்லை. இது ஆய்வுக்குரியது. மதகைக் கண்டுபிடித்த மரபுச் சங்கத்தவரான விஜயகுமார், இது ஒரு “ஆண்டெனா  (ANTENNA) கத்தி என்று கருதுவதாக நம்மிடம் கூறினார். “ஆண்டெனா  (ANTENNA) கத்தி என்பது பின்-வெண்கலக் காலக் கருவி என்று அறிகிறோம். 10-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த HALLSTATT காலத்ததான ஒரு “ஆண்டெனா  கத்தியின் படத்தையும், இந்திய “ஆண்டெனா  கத்தி என்று ஒரு செப்புக் கத்தியின் படத்தையும் இங்கே பார்க்க. பின்னதன் காலம் கி.மு.1500-500 எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இப்படங்கள் யாவும் இணையத்திலிருந்து எடுக்கப்பட்டவை. வேடபட்டி மதகுச் சிற்பத்திலுள்ள கத்தி, “ஆண்டெனாவகைக் கத்தியா என்பது ஆய்வுக்குரியது. இம்மதகைத் தொல்லியல் துறையினர் வந்து பார்வையிட்டுள்ளனர் என அறிகிறோம். அத்துறையின் ஆய்வு முடிவுகள் என்ன என்பது தெரியவில்லை.


”ஆண்டெனா”  கத்தி





ஆண்டெனா கத்தி - விக்கிபீடியா



ஆண்டெனா கத்தி-இந்தியா-கி.மு.1500-500

                                                             


பாண்டியர் இலச்சினை

ஒட்டகம்

குளத்துள் அனைவரும் குழுமி நின்று ஒளிப்படம் எடுத்துக்கொண்டோம். மாணவர்கள் வழக்கமாகத் தங்களின் இயல்புக் கல்விச் சூழலில், வரலாற்றுப் பாடம் என்னும் வலைப்பின்னலில் நிலைத்திருப்பர் எனலாம். அந்தச் சூழலிலிருந்து அவர்கள் வெளியே வந்து மகிழ்ந்ததை இப்பயணத்தின்போது நேரில் கண்டேன். வரலாற்றறிவும் சிறிது பெற்றிருப்பார்கள் என்பதில் ஐயமில்லை. இவ்வகையில், கோவை மரபு சார் ஆர்வலர் சங்கத்தவர் பெரும் தூண்டுகோலாக இருந்தனர் என்பதிலும் ஐயமில்லை. ஏனெனில் மாணவர்கள் வரலாற்றுப் பயணம் பற்றிய தங்கள் கருத்துகளை விழியப் பதிவு செய்தமையே சான்று. வேடபட்டிக் குளத்துடன், மரபுச் சங்கத்தினர் தம் பங்களிப்பை முடித்துக்கொண்டு விடைபெற்றனர். இதுபோன்ற களப்பணி தொடரவேண்டும் என்பதான எண்ண முடிவு இரு சாராரிடமும் ஏற்பட்டது.

பயணத்தின் இறுதியில் பேரூர்க் கோயில்
பயணத்தின் இறுதிக்கட்டத்தில், பேரூர்க் கோயிலைப் பார்த்து ஓரிரு கல்வெட்டுகளைக் கண்டறிதலும் ஒரு நிகழ்வாக இருந்தது. கோயிலின் தென்புறச் சுவர்களில் ஒன்றிரண்டு கல்வெட்டுகளைப் படித்துக்காண்பித்து சில எழுத்துகளை மாணவர்களுக்கு அறிமுகப்படுத்தினேன். வடபுறச் சுவரில், நீர்மேலாண்மை பற்றிய சிறப்பு வாய்ந்த ஒரு கல்வெட்டு உள்ளது. அதை, ஆர்வமுள்ள சில மாணவர்க்குக் காண்பித்துச் செய்தியைப் பகிர்ந்துகொண்டேன்.

தேவி சிறை என்றோர் அணை
13-ஆம் நூற்றாண்டில், கி.பி. 1224-ஆம் ஆண்டு. கொங்குச் சோழன் வீரராசேந்திரன் கொங்குநாட்டை ஆண்டுகொண்டிருந்தான். அது அவனது பதினேழாவது ஆட்சியாண்டு. நொய்யல் நீர் பெருகி வளமாக ஓடிக்கொண்டிருந்ததில் வியப்பில்லை. நொய்யலின் குறுக்கே ஏற்கெனவே கோளூர் அணை என்றோர் அணை இருக்கின்றது. இந்நிலையில், வேளாண்மைத் தேவைக்கென இன்னொரு அணை தேவைப்பட்டதன் காரணமாகத் தேவிசிறை என்னும் பெயரில் புதியதோர் அணை கட்டப்பெற்றது. இதுவும் அப்பகுதி மக்களின் வேண்டுகோளை ஏற்று அரசன் ஆணையிட்ட பின்னரே நிகழ்ந்தது. புதிய அணை, கோளூர் அணைப்பகுதியின் மேற்பகுதியில் கட்டப்பெற்றதால் தேவி சிறை அணை மேட்டிலும், கோளூர் அணை பள்ளத்திலும் அமைந்தன. தேவி சிறை அணையில் நீர் தேக்கினால் கோளூர் அணைக்கு நீர் வராது. ஆனால், அரசன் தன் ஆணையில், கோளூரணைக்குச் சேதம் வாராதபடிப் புது அணை கட்டப்படவேண்டும் என்று குறிப்பிடுகின்றான். தேவி சிறையில் நீரைத் தேக்கும்போது கீழுள்ள கோளூர் அணை நீர் நிரம்பிய பின்னரே தேக்கவேண்டும் என்று அரசன் ஆணையிடுகிறான். நீர் மேலாண்மையில் மன்னர் காலத்தில் இருந்த அறமும், அறிவும், அக்கறையும் தற்காலத்தே சற்றும் கற்பனையிலும் காண இயலா.

கல்வெட்டின் பொன் வரிகள:      (க.வெ.எண்: 116/2004-கோவை மா. கல்வெட்டுகள்)

1                    1     ஸ்வஸ்திஸ்ரீ திரிபுவனச் சக்கரவத்திகள் கோனேரின்மை
2    கொண்டான் பேரூர் நாட்டு புகலிடங் குடுத்த சோ
3    ழச் சதுர்வேதி மங்கலத்துச் சபையாற்கும்
4    பேரூர் ஊரார்க்கும் நம்மோலை குடுத்தபடியா
5    வது  இவர்கள் தங்களூற்கு நீர்த்தட்டப் பெறவே
6    நமக்கு வந்தறிவித்தமையிலிவர்கள் தங்களூரெல்
7    லையில் தேவி சிறையென்கிற அணையடைத்து வாய்க்காலும்
8    வெட்டிக் கோளூரணைக்குச் சேதம் வாராதபடி யவ்வணைக்கு
9    ப் பின்பாக நீர் விட்டுக்கொள்ளப்பெறுவார்களாகவும்........

முடிவுரை
பேரூர்க் கோயிலும் கல்வெட்டும் பார்த்த, படித்த நல்ல நினைவுகளோடு பயணம் நிறைவு பெற்றது. மாணவப் பருவத்தை நினைவூட்டும் வகையில், நான் பயின்ற கல்லூரியின் நிகழ்காலப் பேராசிரியர், மாணவர் ஆகியோருடன் பயணம் நிகழ்ந்தமை மறக்கவியலாப் பொழுது.  




துரை.சுந்தரம், கல்வெட்டு ஆராய்சியாளர், கோவை. 
அலைபேசி : 9444939156.

வியாழன், 4 அக்டோபர், 2018


உத்தமம்-கே.ஜி. பொறியியல் கல்லூரி கோவை இணைந்து நடத்திய
கல்வெட்டு-ஆவணப்படுத்துதல் பயிலரங்கு
UTHTHAMAM-KCT WORKSHOP ON EPIGRAPHY 


உத்தமம்
தமிழ் மொழியையும் தமிழ் எழுத்தையும் கணினிக்குள்ளும் கணினி வழி இணையத்துள்ளும் கொண்டு சேர்க்கத் தனி ஒருவராகவும், குழுவாகவும் பல்வேறு அமைப்புகள் பணியாற்றியுள்ளனர்; பணியாற்றிக்கொண்டும் வருகின்றனர். இவ்விருவகைப் பயன்பாடுகளையும் நாம் பயன்படுத்திக்கொண்டு வருகின்றோம். கணினி யுகத்துக்கேற்றவாறு  தமிழ் மொழியை தகவமைக்கும் வளர்த்தெடுக்கும் பணியாகும் இது. தமிழின் தொல்லெழுத்தான ‘தமிழி”  அல்லது “தமிழ் பிராமி” , தமிழ் வட்டெழுத்து ஆகிய எழுத்துருக்கள் இணைய வழிப் பயன்பாட்டில் உள்ளன. ”அன்றாள் கோ”, “அன்றாடு நற்காசு”  என்னும் தொடர்களைக் கல்வெட்டுகளில் காணலாம். கல்வெட்டு எழுதப்பெற்ற காலத்தில் ஆட்சி செய்துகொண்டிருந்த அரசனையும் (கோ), அக்காலத்தே புழக்கத்திலிருந்த நாணயத்தையும் (காசு) குறிக்கும் தொடர்கள் இவை. அதுபோல, அன்றாடு தமிழ் எழுத்துகளில் நாம் எழுதுவனவற்றைத் தமிழி எழுத்து வடிவத்திலும், வட்டெழுத்து வடிவத்திலும் நாம் காணுமாறு மாற்றித்தருகின்ற கணினி நுட்பங்கள் பல நடைமுறையில் வந்துவிட்டன.

தமிழ் மொழி, தமிழ்ப்பண்பாடு ஆகியவற்றைத் தகவல் தொழில் நுட்பம் வாயிலாக உயர்த்தும் ஒரு நோக்கத்தில் இயங்கிவருகின்ற ”உத்தமம்” (உலகத் தமிழ் தகவல் தொழில்நுட்ப மன்றம் – INTERNATIONAL FORUM FOR INFORMATION TECHNOLOGY IN TAMIL),  தமிழ் மொழி, எழுத்து சார்ந்த பல நுட்பங்களில் ஒன்றாகக் கல்வெட்டுகளைக் கணினிக்குள் கொணர்ந்து ஆவணப்படுத்தும்  முயற்சியில் களமிறங்கியுள்ளது.

அப்பாசாமி முருகையன்
உத்தமம் அமைப்பின் தலைவரான அப்பாசாமி முருகையன் அவர்கள், 29-09-2018 அன்று, கோவை குமரகுரு பொறியியற் கல்லூரியில் நடத்திய ஒரு நாள் பயிலரங்கில் கல்வெட்டுகளின் தொகுப்பு, ஆவணப்படுத்துதல், பகுத்தாய்தல் ஆகியவற்றைப் பற்றி உரை நிகழ்த்தினார். கல்வெட்டுகளைப் பற்றிய அவரது இருபத்தைந்து ஆண்டுக்கால உழைப்பு நம்மை வியப்பில் ஆழ்த்தியது. குழந்தையும் தெய்வமும் கொண்டாடும் இடத்திலே என்பார்கள். இரண்டையும் போற்றிக் கொண்டாடினால்தான் அவற்றின் மதிப்புப் புலப்படும். கல்வெட்டுகளை அவர் போற்றிக் கொண்டாடியதை என்னால் நன்கு உணரமுடிந்ததது. காரணம், கல்வெட்டுகளைப் படித்துத் தெரிந்துகொண்ட சில ஆண்டுகளில் எனக்குக் கிடைக்கபெற்ற பட்டறிவே.  அது பற்றிய ஒரு பகிர்வே இந்தக் கட்டுரை.

பயிலரங்கு
பயிலரங்கு நடந்த இடம் முன்னர்க் குறித்தவாறு, கோவை குமரகுரு பொறியியற் கல்லூரி. கல்லூரியின் வளாகம் மிகப்பெரியதொரு வளாகம்.  சாலையில் அதன் நுழைவுத் தோரணத்திலிருந்து வளாகத்துள் செல்லும் பாதை நீண்ட தொலைவு செல்கிறது. பாதையின் ஒரு புறம் மரங்கள் அடர்ந்த சோலை. சோலையைக் கடந்த பின்னரே கல்லூரியின் முதன்மைக் கட்டிடம் தொடங்குகிறது. ஓர் அரண்மனையை நினைவூட்டும் பழங்கால மாட மாளிகை அமைப்பில் கட்டபெற்ற மாபெரும் கட்டிடம். அதன் மூன்றாவது தளத்தில், விரிவுரை அரங்கு ஒன்றில் நிகழ்வு.  ஐம்பது பேர் கலந்துகொண்ட பயிலரங்கு, வருகைப்பதிவு நிறைவுற்றதும் பத்து மணிக்கு முன்னரே தொடங்கியது. அறிமுகங்கள் நடந்தேறியதும் மேல் நிகழ்வுகள் அ.முருகையன் அவர்கள் பொறுப்பில்.

தமிழ்க் கல்வெட்டுகள் பற்றிய ஓர் அறிமுகம், அடுத்து நடுகற்கள், அதனை அடுத்துத் தமிழ்க்கல்வெட்டுகளின் மொழியும் அதன் புரிதலும் என மூன்று அடுக்குகளாக அ.முருகையன் அவர்களின் காலை நேர விளக்கவுரை அமைந்தது.  தம் இருபத்தைந்து ஆண்டுக்கால உழைப்பின் அறிவை ஓர் ஐந்து மணிக் கூற்றுக்குள் எவ்வளவு வெளிப்படுத்தமுடியும்? கேள்வியும் இயல்பானது; அவர் முயற்சியும் இயல்பானது. அயர்வு சிறிதும் உணரப்படவில்லை.

கல்வெட்டுகளின் மொழி
கல்வெட்டுகளில் காணப்படுகின்ற மொழி தூய்மையானதல்ல என்று சற்றே தாழ்த்திப்பார்க்கும் பார்வை வெகு காலம் இருந்துள்ளது. ஆனால் மெய்யாக அவ்வாறில்லை. நல்ல இலக்கியத் தமிழுக்கு எவ்வாறு ஓர் இலக்கணம் உள்ளதோ அவ்வாறே கல்வெட்டுத் தமிழுக்கும் ஓர் இலக்கணம் உண்டு. உயர்வு தாழ்வு அங்கே இல்லை. ஊர்திகளின் உலகம் என்றாகிவிட்ட இன்றைய சாலைகளில் ஊர்தியில் பயணம் செய்கையில் நாம்(நமது ஊர்தி), சாலை இருவருக்குமாக ஒரு தொடர்பு மொழியும் இலக்கணமும் உள்ளன. சாலைக் குறியீடுகளும் விதிகளும் அந்த இலக்கணத்தில் அடங்கும்; அதைப் புரிந்து கொண்டால்தான் பாதுகாப்பான பொருள் பொதிந்த பயணம். அது போலவே, கல்வெட்டுகளைப் புரிந்துகொள்ள அவற்றின் இலக்கணம் அல்லது விதிமுறை நமக்குத் தெரிந்திருக்கவேண்டும்.  நாம் அறிந்துள்ள தமிழ் மொழிக்கும் கல்வெட்டுகளில் பயிலும் தமிழ் மொழிக்கும் வேறுபாடு உண்டு.

தொல்லியல் துறை
தொல்லியல் துறை ஆங்கிலேயரால் முதன்முதலில் ஆசியக் கழகம் (ASIATIC SOCIETY) என்னும் பெயரில் 1784-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டுப் பின்னர் சர். அலெக்சாண்டர் கன்னிங்காம் (ALEXANDER CUNNINGHAM)  என்பவரால் தொல்லியல் ஆய்வுக் கழகமாக (ARCHAEOLOGICAL SURVEY OF INDIA), 1861-இல் இத்துறை வளர்ச்சியுற்றது. 

கல்வெட்டுகள்
தமிழ் நாட்டு (அரசர்) வரலாறு, மக்கள் வாழ்க்கை, மக்கள் பண்பாடு, மொழி ஆகிய பல்வேறு கூறுகளை அறிந்துகொள்ள மிகவும் இன்றியமையாத சான்றாதாரங்களுள் கல்வெட்டுகள் மிக முதன்மையானவை.  கல்வெட்டுகளைப் படிக்கத் தற்காலம் நிறையக் கருவிகள் உள்ளன. முற்காலம் போல் அல்ல. கல்வெட்டுகள் தவிர செப்பேடுகள் அடுத்து முதன்மையானவை. தமிழ் மொழியல்லாது அரபு மொழிக் கல்வெட்டுகளும் இங்கே உள்ளன. பெரும்பாலான செப்பேடுகள் இரு மொழி கலந்து பொறிக்கப்பட்டவை. அவற்றின் தொடக்கத்தில் சமற்கிருத மொழியும் அதனைத் தொடர்ந்து தமிழ் மொழியும் காணப்படுகின்றன. சமற்கிருத மொழியை எழுதக் கிரந்த எழுத்து பயன்பட்டது. தமிழ் மொழியை எழுத வட்டெழுத்தும் தமிழ் எழுத்தும் பயன்பட்டன. தமிழ் பிராமி எழுத்துகளால் எழுதப்பெற்ற கல்வெட்டுகள் மிகக் குறைவான சொற்களைக் கொண்டவை. இவற்றில், பிராகிருதம், சமற்கிருதம், தமிழ் ஆகிய மூன்று மொழிச் சொற்களும் கலந்து காணப்படும். தமிழ் நாட்டின் வரலாற்றையும், தமிழ் மொழியின் வரலாற்றையும் அறிந்துகொள்ள இவை இன்றியமையாதவை.

இந்திய நாடு முழுமையும் கி.மு. 3-ஆம் நூற்றாண்டு முதல், இரண்டு நூற்றாண்டுக் காலம் பிராகிருத - இந்தோ ஆரிய மொழிகள் (PRAKRIT MIDDLE INDO ARYAN LANGUAGES - MIA) செல்வாக்குப் பெற்றிருந்தன. அசோகனின் பிராமி எழுத்துக் கல்வெட்டுகள் கி.மு. 3-ஆம் நூற்றாண்டு அளவிலானவை. ஆனால், தமிழ் நாட்டில் தேனி மாவட்டம் புலிமான் கோம்பையில் கிடைத்த தமிழ் பிராமிக்கல்வெட்டு, அசோகனின் காலத்துக்கும் முற்பட்டது என நிறுவப்பட்டுள்ளது. எனவே, சங்ககாலம் எது என்பதற்கு இக்கல்வெட்டு ஒரு சான்று. 

கல்வெட்டுகளில் காணப்பெறும் மொழி வடிவம் வேறு. கி.பி. 4 – கி.பி. 5   நூற்றாண்டு அளவில்தான் கல்வெட்டுகளில் சமற்கிருதம் நுழைகின்றது. அதுவரை, தமிழ் மொழி மட்டுமே. காரணம், இந்திய நாடு பண்பாட்டளவில் வட நாடு, தென்னாடு என்னும் அமைப்பில் மாறுபட்டிருந்தது. எனவே, கல்வெட்டுகள், இந்திய வரலாற்றுக்கும், தமிழக வரலாற்றுக்கும் மூலச் சான்றுகளாக உள்ளன. கல்வெட்டுகளை யார் எழுதினர்? யாருக்காக எழுதினர்? என்பது தெரிந்துகொள்ளவேண்டும். மக்கள் பார்க்கவேண்டும் என்னும் நோக்கத்தில், கோயில்களில் நம் பார்வை அளவில் கல்வெட்டுகள் எழுதப்பெற்றன. தாராசுரம் ஐராவதீசுவரர் கோயிலில், நம் பார்வை அளவில் நாயன்மாரின் வரலாற்று நிகழ்வுகளை எடுத்துக் கூறும் கல்வெட்டுகளும் சிற்பங்களும் பொறிக்கப்பட்டுள்ளதைக் காணலாம். அவை நம்மைப் பார்க்கவும் படிக்கவும் தூண்டுபவை.

கல்வெட்டுகளைப் படிக்கையில் சமூகச் சூழல் சார்ந்த உண்மைகளின் துணையும், மொழி சார்ந்த விதிமுறைகளின் துணையும் தேவைப்படும். கல்வெட்டுகளைப் படிக்கையில் நமக்கு இயல்பாகவே ஒரு பொறையுடைமைப் (TOLERANCE) பண்பு ஏற்படுதலைக் காணலாம். கல்வெட்டுகளின் தோற்றத்தைச் சற்றே ஆய்ந்தால், கல்வெட்டுகளில் தமிழ்க்கல்வெட்டுகளே மிகத் தொன்மையானவை என்னும் உண்மை பெறப்படுகிறது. 

கல்வெட்டுகளின் தோற்றம் – காலம் ஒரு பார்வை:

மொழி                    தோற்றம்(காலம்)

வங்காளம்           கி.பி. 15-ஆம் நூற்றாண்டு
குஜராத்தி             கி.பி. 14-ஆம் நூற்றாண்டு
மராத்தி                 கி.பி. 11-12-ஆம் நூற்றாண்டு
ஒடியா                  கி.பி. 11-12-ஆம் நூற்றாண்டு
இந்தி                              ?
கன்னடம்            கி.பி. 6-ஆம் நூற்றாண்டு
தெலுங்கு            கி.பி. 6-ஆம் நூற்றாண்டு
மலையாளம்    கி.பி. 8-ஆம் நூற்றாண்டு
தமிழ்                   கி.மு. 3-ஆம் நூற்றாண்டு


கல்வெட்டுகள், ஆட்சியிலிருக்கும் அரசருக்கும் பொது மக்களுக்கும் இடையில் உள்ள தொடர்பைக் குறிப்பன.  நாடு முழுதும் கிடைக்கப்பெற்ற கல்வெட்டுகளில்  தமிழ்க் கல்வெட்டுகளே எண்ணிக்கையில் மிகுதியானவை. தமிழ்க் கல்வெட்டுகளில் ஏறத்தாழ மூன்றில் ஒரு பங்கு சோழர் காலக் கல்வெட்டுகளாகும்.

கல்வெட்டுகள் குறித்த ஆய்வுக்குப் பயன்பட்ட சான்று மூலங்களும், நிறுவனங்களும் கீழுள்ளவாறு:

1 தொல்லியல் ஆய்வுத் துறை (ARCHAEOLOGICAL SOCIETY OF INDIA) 1890-ஆம் ஆண்டிலிருந்து வெளியிட்ட  கல்வெட்டுத் தொகுதிகள் 37. (SOUTH INDIAN INSCRIPTIONS – VOLUMES).

2  தொல்லியல் கழகம், தஞ்சை (ARCHAEOLOGICAL SOCIETY, THANJAVUR).
3  தமிழ்நாடு அரசு – தொல்லியல் துறை 1961-ஆம் ஆண்டிலிருந்து வெளியிட்ட நூல்கள்.

4  கல்வெட்டியல் பேரா. எ.சுப்பராயலு அவர்களின் கல்வெட்டு அகராதி.

5 கல்வெட்டு அகராதி – மதுரைப் பல்கலை வெளியீடு – ஆசிரியர் கோவிந்தராஜ்.

6  தமிழ் பிராமிக் கல்வெட்டுகள் 110.  கி.மு. 2 – கி.பி. 4  நூ.ஆ.

7  நடுகல் கல்வெட்டுகள் 317.  கி.மு. 3 – கி.பி. 5-15  நூ.ஆ.

8  கோயில் கல்வெட்டுகள், செப்பேடுகள்  28,000-க்கும் மேற்பட்டவை.
   கி.பி. 5 – கி.பி. 19  நூ.ஆ.

கோயில் கல்வெட்டுகள் மற்றும் செப்பேடுகளில்,

பல்லவர்                                     காலம்  6 - 9 நூ.ஆ.
முற்காலப் பாண்டியர்          காலம்  6 - 9 நூ.ஆ.
பிற்காலப் பாண்டியர்            காலம்  12 - 14 நூ.ஆ.
சோழர்                                         காலம்  9 - 13 நூ.ஆ.

இவற்றில் சோழர் கல்வெட்டுகள் எண்ணிக்கையில் மிகுதி என்பதோடு மெய்க்கீர்த்தி என்னும் கல்வெட்டுப்பகுதியின் தோற்றமும் வளர்ச்சியும் கொண்டவை.

கல்வெட்டுகளின் அமைப்பு
கல்வெட்டுகள் மிகுந்த கட்டமைப்பைக் (STRUCTURE) கொண்டவை.  அவையாவன:

1    இறைவழிபாடு அல்லது மங்கலத் தொடக்கம்
2    மெய்க்கீர்த்தி
3    விரிவான கொடைச் செய்தி – கொடையாளி, பயனாளி போன்றவை.
4    சான்றாளர்கள், கொடையறத்தின் காப்பு

நடுகற்கள்
கருநாடகத்தில் “வீரகல்லு”  என்று வழங்கும் நினைவுக்கற்கள் (HERO STONES), தமிழகத்தில் நடுகற்கள் என வழங்கும். நாட்டுப்புறப் பகுதிகளில் பொது நிலை மக்களில் ஒருவராய் இருக்கும் வீரர்கள் ஒரு பூசலின்போது இறந்துபடும் நிலையில் அவர் நினைவாக  எடுக்கப்படும் நினைவுக்கற்கள் நடுகற்களாகும்.  கல் நாட்டப்படுவதால் நடுகல் (PLANTED STONES).  வடபுலத்தார் இதை “சாயா ஸ்தம்பா”  (SHADOW PILLARS) என்பர். பூசல் என்பது ஒரு சிறு சண்டை என்னும் நிலையைக் குறிக்கும். போர் என்னும் அளவில் பெரிய சூழல் இதில் இல்லை. ஆங்கிலத்தில் உள்ள “SKIRMISH“ என்னும் சொல்லை இதற்கு இணையாகக் குறிப்பிடலாம். பெரும்பாலும் இந் நடுகற்கள் தனிப்பட்டவர் ஒருவரின் புலத்தில் இருக்கும். பூசல், பெரும்பாலும் ஆநிரை கவரும் நிகழ்வாகவோ அல்லது ஆநிரை மீட்டல் நிகழ்வாகவோ அமையும். ஆநிரை கவர்தல், ஆநிரை மீட்டல் ஆகிய இரு நிகழ்ச்சிகளும் தொல்காப்பிய இலக்கண வகையில் குறிக்கப்பெறுகின்றன. சங்க இலக்கியங்களில் காணப்பெறும் “ஆகோள்”  என்னும் சொல், இவ்விருவகைப் பூசல்களையும் குறிக்கும். சங்க இலக்கியச் சொல்லான “ஆகோள்” , புலிமான் கோம்பை நடுகல்லில் கையாளப்பட்டமை கண்டறியப்பட்டதாலும், இச்சொல் தமிழ் பிராமி எழுத்துகளால் பொறிக்கப்பட்டுள்ளதாலும், தமிழ் பிராமி எழுத்து அசோகனின் காலத்துக்கு முற்பட்டது என்று நிறுவப்பட்டுள்ளது. இதன்வழி, சங்ககாலத்தின் தொன்மையும் அறியப்பட்டுள்ளது. பெரும்பாலான நடுகற்கள் ஊர் மக்கள் எடுப்பித்தவை; அமைவிடம், பெரும்பாலும் தமிழகத்தின் வட மாவட்டங்கள்; கருநாடகத்தையும், ஆந்திரத்தையும் ஒட்டியுள்ள பகுதிகள். சோழ நாடு மற்றும் பாண்டிய நாட்டுப் பகுதிகளில் நடுகற்கள் மிகக் குறைவு. நடுகற்கள், கருநாடகத்துத் தாக்கம் கொண்டவை எனலாம். பெரும்பாலும் ஊரின் புறத்தே காணப்படும்.

                                                   நடுகல் சிற்பம் - எடுத்துக்காட்டு


குறிப்பு :   கருநாடகத்துப்பாணியில் நிறுவப்பட்ட நடுகற்கள் மூன்று அடுக்குகள் கொண்ட புடைப்புச் சிற்பங்களைக்கொண்டிருக்கும்.  கீழ் அடுக்கில் வீரன் இறந்துபடக் காரணமான சூழல் காட்டப்பெற்றிருக்கும் .  அதாவது போர் அல்லது பூசலின் சூழல். அதர்கு அடுத்த அடுக்கில், இறந்த வீரனை விண்ணுலகுக்குத் தேவ மாதர் அழைத்து செல்வது போன்ற குறிப்புடன் சிற்பம் இருக்கும். இறுதி அடுக்கில், விண்ணுலகை அடைந்த வீரன் சிவலிங்கத்தை வணங்கும் காட்சி வடிக்கப்பட்டிருக்கும். (வைணவத்தில் வைணவம் சார்ந்த காட்சி இருக்கும்).

நடுகற்களில் வட்டெழுத்து
நடுகற்களில் வட்டெழுத்து பொறிக்கப்பட்டுள்ளது. கி.பி. 9-ஆம் நூற்றாண்டு வரையிலான நடுகல் வட்டெழுத்துப் பொறிப்புகளில் தமிழ் மொழி மட்டுமே காணப்படுகிறது. சமற்கிருதம் முற்றாக இல்லை என்பது சிறப்பு. 9-ஆம் நூற்றாண்டு அளவில் சமற்கிருதத்தின் உள்ளீடு இந்தோ-ஆரிய மொழிகளிலும் பரவியது.  நடுகற் கல்வெட்டுகள் ஏறத்தாழ 450 கல்வெட்டுகள். இவற்றின் காலம் கி.பி. 5-ஆம் நூற்றாண்டு முதல் கி.பி. 15-ஆம் நூற்றாண்டு வரையிலானவை. இவற்றில் தொண்ணூறு விழுக்காடு திருவண்ணாமலை, சேலம், தர்மபுரி மாவட்டங்களில் உள்ளன. எண்பது விழுக்காடு பல்லவர் காலத்தவை.  நடுகற்கள், முன்னர்க் குறிப்பிட்டவாறு, ஆநிரை தொடர்பான பூசல் பற்றியன. ஆநிரை, தொறு என்னும் சொல்லாலும் குறிக்கப்பெறும். எனவே, நடுகல் கல்வெட்டுகளில், தொறுப்பூசல், தொறு கோள், தொறு மீள் என்னும் குறிப்புத் தொடர்களும், தொறுப்பூசல் அல்லாத வேறு பூசல்கள் பற்றிய கல்வெட்டுகளில் “நாடு பாவுதல்”  என்னும் குறிப்புத் தொடரும் காணப்படும்.

கல்வெட்டுகளில் சமற்கிருதக் கலப்பு
முன்னர்க் குறித்தவாறு 9-ஆம் நூற்றாண்டு வரை, கல்வெட்டுகளில் சமற்கிருத மொழியின் தடயம் காணப்படவில்லை. சமற்கிருத மொழியைக் கடன் வாங்கும் சூழலும் நிகழவில்லை.  9-ஆம் நூற்றாண்டுக்கு மேல் சமற்கிருதம் இந்தியாவின் வடபுலம் தென்புலம் ஆகிய இரு பகுதிகளிலும் கல்வெட்டுகளில் கலந்து வருவதைக் காண்கிறோம். அரசர்கள் தம் விருதுப்பெயராகச் சமற்கிருதப் பெயர்களை அணிந்துகொண்டனர். ‘பாண்டிய குலாசனி’, ‘பாண்டிய குலாந்தக’, “பாண்டிய குலபதி”, “பராந்தக”  என்பன போன்ற பெயர்களைக் காண்க. தமிழ்ச் சொற்களைச் சமற்கிருதச் சொற்களாக மாற்றும் சூழலும் உண்டு. நிலமடந்தை, பூமாதேவியாகிறாள். பெண்ணோர் பாகன், அர்த்தநாரி ஆகிறான். பல்லவர் கல்வெட்டுகளில் சமற்கிருதச் சொற்கள் தமிழ் ஒலிப்புடன் தமிழ் எழுத்துகளில் எழுதப்பட்டன. “மஹேந்திர” , ’மயீந்திர”  எனவும், “ஹஸ்தி கோஸ”  என்பது “அத்திகோயத்தார்”  எனவும் எழுதப்பட்டன. சமற்கிருதச் சொற்களின் ஒலிப்பைச் சரியாக எழுதும் முயற்சியில் கிரந்த எழுத்து முறை பயன்பாட்டுக்கு வந்தது. அந்த வகையில், “மஹாஸபை”, “ஸிலாலேகை”  போன்ற சொற்கள் எழுந்தன. சில போது, வடசொல்லின் ஈற்றில் தமிழ் ஒட்டுகளும் சேர்த்து எழுதப்பெற்றன. எடுத்துக்காட்டாக “ஸபையோம்”  என்னும் சொல். இதை, ஸபை + ய்  + ஓம் எனப்பிரிக்கலாம்.  இதில் ஸபை என்பது வடசொல். மற்றொரு சொல் அல்லது தொடர் “பிராப்தியினாலே”  என்பது. இதை, ப்ராப்தி + இன் + ஆல் + ஏ  எனப்பிரிக்கலாம். இதில், “ப்ராப்தி”  என்பது வடசொல். சில தமிழ்ச் சொற்கள், சமற்கிருதச் சொல்லுக்குத் தமிழ் வடிவம் கொடுத்துள்ளனர் எனக்கருதுமாறு அமைகின்றன. எடுத்துக்காட்டாக, “அதுல்” (ATUL) என்னும் சமற்கிருதச் சொல்லுக்கு “ஒப்பற்ற”  என்று பொருள் அமையும். ஒப்பற்ற அரசன் எனக் குறிப்பதற்கு இந்த “அதுல்” சொல்லைக் கையாண்டு, தமிழ் வடிவம் கொடுத்து “கோநேரின்மைகொண்டான்” என எழுதினர் எனலாம். [கட்டுரை ஆசிரியர் குறிப்பு : ”துல்” என்பது “துலாம்”  என்பதன் அடிப்படையில் ஒரு பால் கோடாமல் நிறை காட்டுதலைக் குறிக்கும். துலாக்கோலின் தட்டுகள், இணைத்தட்டுகள்; எனவே, இணை அற்ற என்னும் நிலையைக் குறிக்க ”அதுல்” என்று குறிப்பர். நேர்மறைச் சொற்களை எதிர்மறைச் சொற்களாக்கச் சமற்கிருதச் சொற்களில் “அ” எனும் ஒரு முன்னொட்டைச் சேர்ப்பர். எடுத்துக்காட்டாக, “நியாயம்” -> ”அநியாயம்” ;  “தர்மம்” -> “அதர்மம்”  என்பன போல், ”துல்” -> “அதுல்”  (இணையற்ற, ஒப்பற்ற).]

மணிப்பிரவாளம்
தமிழில் சமற்கிருதக் கலப்பு மிகுந்தபோது அது, மணிப்பிரவாளம் என அழைக்கப்பட்டது. மணியும் பவளமும் கலந்தது போன்று என்று அதைப் பெருமைப்படுத்தியதுண்டு. மணிப்பிரவாளத்தைப் பற்றி வீரசோழியம் என்னும் நூல் குறிப்பிடுகிறது.

கல்வெட்டு மொழி
நாம் அறிந்துள்ள தமிழ் மொழிக்கும் கல்வெட்டுகளில் பயிலும் தமிழ் மொழிக்கும் வேறுபாடு உண்டு. கல்வெட்டுகளின் இலக்கணமும் வேறுபடும். ஒரு சில எடுத்துக்காட்டுகள் வழி இவை விளக்கப்படுகின்றன. மொழி இலக்கணத்தில், மொழியின் புறவடிவமைப்பைச் சார்ந்து பல வகைகளில் பொருள் காணல் நிகழும். இதை ஆங்கிலத்தில் (MORPHOLOGICAL CASE MARKING) எனக் குறிக்கலாம். தமிழில் உள்ள எட்டு வேற்றுமைகளில் ஒன்று இடவேற்றுமை (LOCATIVE CASE). எங்கு, எப்போது என்னும் கேள்விகளுக்கு விடையளிப்பது போல் அமையும் தொடர்களை இதற்கு எடுத்துக்காட்டாகச் சொல்லலாம். ”நான் கோவையில் குடியிருக்கிறேன்” என்னும் தொடரில், எங்கு என்னும் கேள்விக்கு “கோவையில்” என்பது விடையாக அமையும். இங்கு, “இல்” என்னும் வேற்றுமை இடவேற்றுமையாகும். இந்த இடவேற்றுமை, கல்வெட்டுகளில் இல்லாமல் போவதுண்டு (ABSENCE OF LOCATIVE). எடுத்துக்காட்டாக,

”தஞ்சாவூர் எடுப்பித்த திருக்கற்றளி” 

என்னும் கல்வெட்டுத் தொடரில், ”இல்” என்னும் இடவேற்றுமை உருபு இல்லை. தஞ்சாவூர் என்னும் ஒருவர் கட்டுவித்த கோயில் என்னும் பொருள் இக்கல்வெட்டுத் தொடரில் அமைகிறதேயன்றித் தஞ்சாவூரில் கட்டுவித்த கோயில் என்னும் பொருள் நேரடியாக அமையவில்லை. அடுத்து, தமிழில் உள்ள இரண்டாம் வேற்றுமை பற்றியது. யார், எது என்னும் கேள்விகளுக்கு விடையளிப்பது போல் அமையும் தொடர்களை இதற்கு எடுத்துக்காட்டாகச் சொல்லலாம்.  மற்றொரு கல்வெட்டில், கோயிலில் நந்தா விளக்கெரிக்கத் தொண்ணூற்றாறு ஆடுகளைக் கொடையாக அளித்தது பற்றிக் குறிப்பிடுகையில்,

”…… ஆடு தொண்ணூற்றாறு”

என்னும் தொடர் உள்ளது. இதில், இரண்டாம் வேற்றுமை காட்டப்படாதது மட்டுமன்றி, எண்ணிக்கையைக் குறிக்கும் சொல் இடவல மாற்றம் பேறுள்லதைக் காணலாம். இதை ஆங்கிலத்தில், (ABSENCE OF ACCUSATIVE AND QUANTIFIER FLOATING) என்பார்கள்.  “தொண்ணூற்றாறு ஆடு”  என்றமையவேண்டிய வடிவம்,  ”ஆடு தொண்ணூற்றாறு” என மாற்றமடைந்துள்ளது.

அடுத்து, மொழி அமைப்பில், ஒரு சொற்றொடரில் எழுவாய், செயப்படுபொருள், பயனிலை(வினை முற்று) என்னும் மரபு உண்டு. ஆங்கிலத்தில் இதை SUBJECT-OBJECT-VERB , SOV  என்பர். இந்த அமைப்பு முறை கல்வெட்டுகளில் இல்லை. இது, பின்வரும் கல்வெட்டுத் தொடர்களின் வாயிலாக அறியப்படும்;

எ-டு 1.
“யாண்டு நந்திப்போத்தரையர்க்கு பத்தொன்பதாவது”

எ-டு 2.
”நம் பிராட்டியார் கைவழி கொடுத்த காசு இருநூறு”


எ-டு 3.
”திருச்சுற்று மாளிகை எடுப்பித்தான் சேநாபதி இராமன் கிருஷ்ணன்”        

அடுத்து, மொழி ஒலிப்புத் தொடர்பானது. இரண்டு சொற்களின் சந்திப்பில் ஏற்படும் சந்தி, கல்வெட்டுகளில் இல்லாமல் போவது (ABSENCE OF SANDHI).  கீழ் வரும் எடுத்துக்காட்டுகளைக் காண்க.

“பொற்றொக்கை ஆர்”

”பெரும்புலி ஊர்”

”கோ இல்”

இவற்றைப் பழகு தமிழில், பொற்றொக்கையார், பெரும்புலியூர், கோயில் என நாம் வழங்குவோம். கல்வெட்டுகளில் அவ்வாறில்லை.


கல்வெட்டுகளின் கணினியாக்கமும் தரவு மேலாண்மையும்
(CORPUS LINGUISTICS AND DATABASE COMPILATION)
கல்வெட்டுகளைக் கணினிக்குள் கொணர்ந்து அதன் செய்திகளைத் – தரவுகளை -  தொகுத்தல், மேலாண்மை செய்தல், அதற்கான  தேடு பொறி அமைத்தல் ஆகிய தொழில் நுட்பம் பற்றிய கருத்துப் பகிர்வு பிற்பகல் நிகழ்வாய் அமைந்தது. ஒரு மொழி (MONOLINGUAL), ஒரு காலம் (SYNCHRONIC), வரலாற்றுப் பார்வை (DIACHRONIC) ஆகிய பல நிலைகளைப்பற்றி முருகையன் அவர்கள் எடுத்துரைத்தார்கள். கணினி மற்றும் கணினியாக்கம் தொடர்பான நுட்பமான செய்திகள். கணினித் தொழில் நுட்ப ஆய்வாளர்களைக்கொண்டு பல நிரல்களை (PROGRAMS) உருவாக்கிக் கல்வெட்டுகளின் தரவுத்தொகுப்பினை அமைத்துக் கல்வெட்டுகளின் பாடங்கள், கல்வெட்டுகளை நாம் புரிந்துகொள்ளும் நுட்பத்தைக் கணினிக்குள் புகுத்துதல் ஆகிய பல்வேறு கூறுகளை முருகையன் அவர்கள் பகிர்ந்துகொண்டார்.

முன்னர் அவர் குறிப்பிட்டவாறு, கல்வெட்டுகளைப் புரிந்துகொள்ள அவற்றுக்கான இலக்கணத்தையும் விதிகளையும் அறிந்திருத்தல், கணினிக்குள் பதிவு செய்யப்பட்ட தரவுத்தொகுப்பிலிருந்து தரவுகளை மீட்டெடுத்தல் (INFORMATION EXTRACTION) ஆகிய செயல்பாடுகளைக் கையாள என்னென்ன செய்யவேண்டும் என்பது பற்றிய ஓர் அலசல். இலக்கியம் மட்டுமே அறிந்த தமிழ்ப் பேராசிரியர்களுக்கும், கல்வெட்டியல் அறிந்த என் போன்றோருக்கும் இந்தக் கணினி நுட்பங்கள் புதியன.  ஆனால், கணினிப் பொறியாளர்களுக்கு இது வழிகாட்டும் கல்விமுறை. மேற்குறித்த வெவ்வேறு மூன்று தளங்களிலும் பயிற்சியுடைய மூவகையினரும் ஒருங்கிணைந்து பணியாற்றும்போது கல்வெட்டுகளின் கணினியாக்கம் வரலாற்றையும் ஒருங்கிணைக்கவல்லது.

கல்வெட்டுகளைக் கணினிக்கு எவ்வாறு புரியவைத்தல் என்பதற்குச் சில எடுத்துக்காட்டுகள் விளக்கப்பட்டன. செங்கம் நடுகற்கள் ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. கல்வெட்டுப் பாடம் (TEXT), பல பகுதிகளாகப் (SEGMENTATION) பிரிக்கப்படுகின்றன. முழுப்பொருள் தருகின்ற சொற்களாகவோ, இடத்தைப் பொறுத்துப் பொருள் கொள்ளும் சொற்களாகவோ பிரிக்கப்படுகின்றன. பின்னர் அவை, ஆள் பெயர், இடப்பெயர், எண்ணுப்பெயர் என்பது போன்ற அடையாளப்படுத்தும் பெயர்களாகக் குறிக்கப்படுகின்றன.

கல்வெட்டு -1

கோவிசைய  மயீந்திர  பருமற்கு  முப்பத்தெட்டாவது
    1             2          3              4
1, 2, 3 -  ஆள் பெயர்  (pn.dat  PERSON NAME)
4    - 38 – எண்ணுப்பெயர்  ( 38.ord )  
கல்வெட்டு -2

வாணகோ   அரைசரு  மருமக்கள்    கந்தவிண்ணனார்    கூடல்    
    1                       2                        3                                  4                         5
தொறுக்கொண்ட     ஞான்று
6                                       7

1, 2  -- ஆள் பெயர்  -  (pn)
3  -  உறவு  -  (kindred)
4  -   ஆள் பெயர்  -  (pn)
5  -  இடப்பெயர்  -  (pln PLACE NAME)
6  -  ஆநிரை கொள்ளல் – (cattle-lift)
7  -  போது  -  (while)

   
கல்வெட்டுகள் சில
முருகையன் அவர்கள் சிறப்பான சில கல்வெட்டுகளின் படங்களைக் காண்பித்துச் செய்திகளைச் சொன்னார்.  அவற்றுள் சில இங்கே காட்டப்பெறுகின்றன:




கல்வெட்டு-1

1    பகாப்பிடுகு லளிதாங்குரன்







கல்வெட்டு-2   (வல்லம் குடைவரைக் கோயில்)

1    சத்துரும் மல்லன் குணபரன்
2    மயேந்திரப் போத்தரைசரு அடியான்
3    வயந்தப்பிரி அரைசரு மகன் கந்த சேன
4    ன் செயிவித்த தேவகுலம்






குறிப்பு :  முதல் இரு கல்வெட்டுகளும் பல்லவ மன்னன் மகேந்திர வர்மனுக்குரியது.  மஹேந்திர என்பது மயேந்திர என்று மாற்றம் பெற்றது. அது போலவே, வஸந்த என்பது வயந்த என மாற்றம் பெற்றது. இரண்டாம் கல்வெட்டில் தேவகுலம் என்பது கோயிலைக்குறிக்கும்.


கல்வெட்டு-3   (பள்ளன் கோயில் கல்வெட்டு)

1    டுத்து விடுதகவென்று நாட்டார்க்குத் திருமுகம் விட நாட்டா
2    ருந் திருமுகங் கண்டு தொழுது தலைக்கு வைத்துப் படா
3    கை நடது கல்லுங் கள்ளியு நாட்டி நாட்டார் விடுந்த
4    அறையோலைப் படிக்கெல்லை கீழ்பா
5    லெல்லை ஏந்தலேரியின் கீழைக்கடற்றி
6    ன் மேற்குமோமைக்கொல்லை எல்லை இன்னு
7    ம் தென்பாலெல்லை வேள் வடுகன் கேணியி
8    ன் வடக்கும் கடற்றினெல்லை இன்னுந் நீலபாடி






குறிப்பு : பள்ளன்கோயில் செப்பேடு, பல்லவ அரசன் மூன்றாம் சிம்மவர்மன் தன் 6-ஆம் ஆட்சியாண்டில் (கி.பி. 550) பருத்திக்குன்றில் வாழ்ந்த வஜ்ரநந்திக் குரவர்க்குப் பள்ளிச்சந்தமாக அமண்சேர்க்கை என்னும் சிற்றூரைத் தந்த செய்தியைக் கூறுகிறதுமேலே நாம் பார்க்கும் செப்பேட்டுப் பாடத்தில் வரும் சில தொடர்களுக்கு விளக்கம்—வருமாறு: 

நாட்டார்-நாட்டுச்சபையார்
திருமுகம்-அரசனின்ஆணை எழுதப்பெற்ற ஓலை
தொழுது தலைக்கு வைத்து - நாட்டார் அரசனின் திருமுகம் வரக்கண்டு தொழுது தலைமேல் வைத்துக்கொண்டனர்.
படாகை-பிடாகை=உட்கிடை ஊர்
படாகை நடந்து  கல்லுங்கள்ளியு(ம்நாட்டி - பிடாகையாகிய ஊர்ப்பகுதியில் யானைகொண்டு சுற்றிவந்து  எல்லையைக் குறித்துஎல்லைகள் புலனாகுமாறு அடையாளக்கற்களையும் கள்ளியையும் நட்டனர்சிவன்கோயிலாக இருப்பின் சூலம் பொறித்த கற்களும்திருமால்கோயிலாக இருப்பின் சக்கரம் (ஆழிபொறித்த கற்களும் நடுவது மரபு.
விடுத்த அறையோலை - கல்லும் கள்ளியும் நாட்டி எல்லை வகுத்த பின்னர்ப் பொதுமக்களுக்கு அச்செய்தியை அறிவித்தனர்.


முடிவுரை
கல்வெட்டுகள் மெய்யானவையா? கல்வெட்டுகள் நம்பிக்கைக்குரியனவா? என்று சில கேள்விகள் எழுந்தன. கல்வெட்டுகள் எவ்வாறு பொறிக்கப்பட்டன என்பதை அறிந்தால் ஐயங்கள் அகலும். அரசன் நிலக்கொடை பற்றிய ஆணையை நேரடியாக வாய் மொழி அறிவிக்கிறான். வாய்மொழி ஆணையைக் குறிக்கும் சொல் திருவாய்க்கேழ்வி. அதைச் செவிமடுத்துக் கேட்டு எழுதும் அரசு அதிகாரி ஒருவர் இருக்கிறார். அவர் பெயர் திருமந்திர ஓலை. எழுதப்பட்ட ஓலையின் படி (நகல்) ஒன்று கொடை நிலம் இருக்கும் ஊரின் நாட்டார் சபைக்குச் செல்கிறது. அரசனின் ஆணையாதலால் அது திருமுகம் எனப்படுகிறது. திருமுகம் கிடைக்கப்பெற்ற நாட்டார் அதனைத் தொழுது தலைமேல் வைத்துக் கொள்கின்றனர். பிடாகையாகிய ஊர்ப்பகுதியில் யானைகொண்டு சுற்றிவந்து  நிலத்தின் எல்லையைக் குறித்து, எல்லைகள் புலனாகுமாறு அடையாளக்கற்களையும் கள்ளியையும் நடுகின்றனர். கல்லும் கள்ளியும் நாட்டி எல்லை வகுத்த பின்னர்ப் பொதுமக்களுக்கு அச்செய்தியை அறிவிக்கின்றனர்.  கோயில் சுவரில் அரசனின் ஆணை, கல்வெட்டாகப் பொறிக்கப்படுகிறது. கல்லின்மேல் பொறிக்கும் முன்பு கல்வெட்டு வாசகம் கல்லில் செங்காவி கொண்டு எழுதப்படுகிறது. மக்கள் பார்வைக்கு அரசனின் ஆணை எட்டுவது இவ்வகையில்தான்.

கல்வெட்டுகள் மிக முதன்மையான சான்றாதாரங்கள்.  கல்வெட்டுகளைப் படித்தறிதல் ஓர் அருமையான கலை. கல்வெட்டுகளைக் கணினிக்கும் இணையத்துக்கும் கொண்டு சென்று தரவுத் தொகுப்பாக்கிப் பயன்படுத்தும்போது வருங்காலத்தவர் வரலாறு அறியவும் பாதுகாத்து முன்னெடுத்துச் செல்லவும் மிகப்பயன்படும்  என்றும், இலக்கியப் பேராசிரியர்கள், கல்வெட்டு அறிந்தவர்கள், கணினித் தொழில் நுட்பம் அறிந்தவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டுகோள் விடுத்தும் முருகையன் அவர்கள் கல்வெட்டியல் பயிலரங்கை நிறைவு செய்தார்.






துரை.சுந்தரம், கல்வெட்டு ஆராய்ச்சியாளர், கோவை.
அலைபேசி : 9444939156.