மொத்தப் பக்கக்காட்சிகள்

திங்கள், 28 அக்டோபர், 2019



கருநாடகத்தில் ஒரு தமிழ்க்கல்வெட்டு
முடி ஈசுவரர் கோயில் - ஹுலுகுடி (தொட்டபல்லாபூர்)

முன்னுரை

இன்று (28-10-2019), முகநூல் பதிவுகளைப் பார்வையிட்டுக்கொண்டிருந்த வேளையில் கண்ணில் பட்டுக் கருத்தைக் கவர்ந்தது ஒரு கல்வெட்டின் படம். INSCRIPTION STONES OF BANGALORE  என்னும் குழுமத்தின் உறுப்பினர் ஒருவர் இப்படத்தைப் பதிவிட்டு, அது பற்றிய செய்திகளைத் தெரிந்துகொள்ளும் வகையில் சுட்டி ஒன்றைக் குறிப்பிட்டிருந்தார். கல்வெட்டுப்படம் கருத்தைக் கவர்ந்ததே அது ஒரு தமிழ்க்கல்வெட்டு என்பதாலாகும். படத்தைப் பதிவிறக்கம் செய்து அதன் பாடத்தைப் படித்துவிட்டு அதனோடு தொடர்புடைய செய்திகளைச் சுட்டி வழி இணையத்தில் (teamgsquare.com) சென்று அறிந்த செய்திகளை இங்கு பகிர்ந்து கொள்கிறேன்.

தொட்டபல்லாபூர்-ஹுலுகுடி (DODDABALLAPUR – HULUKUDI)

வெங்களூர் என்று தமிழ்க்கல்வெட்டுக் குறிப்பிடும் பெங்களூரு மாநகரிலிருந்து எண்பது கல் (கி.மீ) தொலைவில் அமைந்துள்ளது தொட்டபல்லாபூர்.  இவ்வூருக்கருகில் அமைந்த ஒரு சிற்றூர் ஹுலுகுடி. இவ்வூரை ஹுலுகடி என்றும் அழைக்கிறார்கள். ’ஹுலு’ (ஹுல்லு) என்பது புல்லையும், ’கடி’ என்பது குச்சியையும் குறிக்கிறது என்கிறார்கள். இங்கு ஒரு சிறிய மலை உள்ளது.  மலையின் மேல், வீரபத்திர சுவாமி  கோயில் என்னும் பெயரில் ஒரு குகைக்கோயில் அமைந்துள்ளது.

ஹுலுகுடி மலைக்கோட்டை


                                              
கண்காணிப்புக் கொத்தளம்
                                                      

                                          

  
சிதைந்துள்ள நிலையில் கோட்டைச் சுவர்கள்
                                                
ஹுலுகுடி மலை மேல், அழிந்துபோன ஒரு கோட்டையின் எச்சங்கள் உள்ளன. மலைமீது ஏறிச்செல்லும் பாதையெங்கும் சிதைந்து போன கோட்டைச் சுவரின் கற்கள் சிதறிக்கிடக்கின்றன. கண்காணிப்புக் கொத்தளம் ஒன்று அதன் வடிவம் மாறாமல் தன்னை அடையாளப்படுத்திக்கொண்டு நிற்கிறது. வீரபத்திர சுவாமி குகைக் கோயிலுக்கு வழி காட்டிய கோயில் பூசையாளர் கூற்றிலிருந்து கோயிலுக்குச் செல்லும் படிக்கட்டுகளோடு கூடிய வழி தற்காலத்தே கோயிலின் அறக்கட்டளையினரால் அமைக்கப்பட்டதென்றும், பழைய வழி வேறொன்று இருப்பதாகவும் அறிகிறோம். 


நந்திக் கோயில்
                                                


நந்திச் சிற்பம்
                                         


பழையவழியில் ஏறிச்செல்கையில் நந்திச் சிற்பம் அமைந்துள்ள நந்திக் கோயில் ஒன்றுள்ளது.  ஒற்றைக் கல்லால் செதுக்கப்பட்ட பெரிய நந்தி. இன்னும் சற்றுக் கடந்து சென்றால் பெரிய உருண்டைக் கற்பாறையைக் காணலாம்  மாமல்லபுரத்தில் காணப்படுகின்ற வெண்ணெய் உருண்டைப் பாறையைப் போன்றே தோற்றமளிக்கும் இப்பாறையும் வெண்ணெய்ப் பாறை என்று அழைக்கப்படுகிறது. கீழிருந்து மேலே செல்லும் வழியில் கற்றூண்களால் அமைந்த தோரணவாயில் ஒன்று அழகுறக் காட்சியளிக்கிறது. 


வெண்ணெய்க் கல் உருண்டை
                                                                                                          


ஹுலுகுடி சிவன்  கோயிலும் பாறைக்கல்வெட்டும்


                                            

மலைமேல் சிதைந்துபோன சிவன் கோயில் ஒன்றுள்ளது. .இக்கோயிலின் பக்கவாட்டில் ஒரு பாறையில் கல்வெட்டு வெட்டப்பட்டுள்ளது.  கல்வெட்டின் படமும் பாடமும் கீழ்க்கண்டவாறு:


                                   
தமிழ்க்கல்வெட்டு



கல்வெட்டின் பாடம்

1 ஸ்வஸ்தி ஸ்ரீமந் மஹாமண்டலேஶவர த்ரிபுவனமல்ல      தழைக்காடுகொண்ட
2    புஜபல வீரகங்க பொய்ஶல தேவர் ராஜ்யமாள் ஸம்வத்ஸரத்
3    தில் விக்கிரமசோழ மண்டலத்தின் மண்ணைநாட்டுக் கா
4    முண்டந் விருதராயபயங்கர மண்ணைநாடாழ்வாந் மகந்.. ..
5    நாந விருதராய பயங்கர மண்ணைநாடாழ்வாநேந் புற
6    கொடியில் மலைக்குக் கிழக்கில் சிகரத்தில் முடீஶவரமுடை
7    மஹாதேவருடை(ய விமாநம்) உதகபூர்வம் பண்ணிநேன் சிவ
8    ப்ராஹ்மணன் (பெண்ணை) பட்டந் மகன் (பன்ம) பட்டநுக்கு விருதரா
9    ய பயங்கர மண்ணைநாடாழ்வாநேந் எந் வம்ஶமும்  பன்ம
10  பட்டந் வம்ஶமுள்ளளவும் பூஜிப்பாறாகவும் பன்ம
11  பட்டந் தந்ணையும் தன் வம்ஶத்தாரையும் முடீஶவ
12  ரமுடையாரை பூஜிக்க வேண்டாவென்றவன் கங்(கையி)
13  டைய்க் குமரிடைய்க் குராற்பசுவைக் கொ(ன்ற) [வன்பு)
14  (குந்) னரகம் புகுவான் இவை (றா?)மாசாரி எழுத்து

  
குறிப்பு :  சிவப்பு வண்ண எழுத்துகள் கிரந்த எழுத்துகள்.


கல்வெட்டுச் செய்திகள்

கல்வெட்டின் காலமும் அரசனும்

கல்வெட்டு, தழைக்காடுகொண்ட வீரகங்க பொய்சல தேவர் என்று குறிக்கும் அரசன் ஹொய்சல விஷ்ணுவர்த்தன் ஆவான். இவனது ஆட்சிக்காலம் கி.பி. 1108-1152.  கல்வெட்டில், ஆட்சியாண்டு தரப்படாததாலும், சக ஆண்டுக்குறிப்பு இல்லாததாலும் கல்வெட்டு எந்த ஆண்டைச் சேர்ந்தது எனத் துல்லியமாகக் கணிக்க இயலாது.  கல்வெட்டில் குரிப்பிடப்படும் அரசன் விஷ்ணுவர்த்தன் என்பதால், கல்வெட்டின் காலம் 12-ஆம் நூற்றாண்டு என்றாகிறது.

சோழர் ஆட்சியின் தாக்கம்

கருநாடகப்பகுதியில் சோழரின் ஆட்சியைத் தொடர்ந்து ஹொய்சலர் ஆட்சி அமைந்தாலும், சோழர் ஆட்சியின்போது ஏற்பட்டிருந்த தமிழ்மொழியின் முதன்மைத் தன்மையும் பெருந்தாக்கமும் தமிழகத்தை ஒட்டி அமைந்த கருநாடகத்தின் இந்தப்பகுதியில் மக்களிடையே மேலாண்மை செலுத்தியது எனலாம். அதன் காரணமாகவே, சோழர் ஆட்சியின்போது பொறிக்கப்பட்டதைப் போன்றே, தொடர்ந்து வந்த ஹொய்சலர் ஆட்சியிலும் தமிழ் மொழியில் கல்வெட்டுகள் பொறிக்கப்பட்டன எனக் கருதவேண்டியுள்ளது.  ஹொய்சலஎன்பதைத் தமிழ்ப்படுத்துகையில் ‘போசல  என்று திரியும். இந்தத் திரிசொல் கல்வெட்டிலும் காணப்படுவது  கருதத்தக்கது. முதலாம் இராசராசன் கருநாடகத்தின் சில பகுதிகளைத் தன் ஆட்சியின்கீழ் கொணர்ந்தபோது, சோழர் ஆட்சிப்பகுதி, சோழ நாட்டின் ஆட்சிப்பிரிவுகளைப் போல் ‘முடிகொண்ட சோழமண்டலம்  என்னும் பெயர் பெற்றது. பின்னர், 12-ஆம் நூற்றாண்டில் விக்கிரம சோழன் காலத்தில்  விக்கிரம சோழமண்டலம்  எனப் பெயர்மாற்றம் பெற்றது எனக் கல்வெட்டின் வாயிலாக அறிகிறோம்.

விக்கிரம சோழமண்டலம் – மண்ணை நாடு

மண்டலத்தை அடுத்து நாட்டுப் பிரிவுகள் இருந்தன. கல்வெட்டில், இப்பகுதி (தொட்டபல்லாபூர்)  மண்ணை நாடு என்னும் பெயரில் வழங்கியது.  மண்ணை நாட்டுப் பிரிவின் ஆட்சித்தலைவனாக இருந்தவன் “மண்ணை நாடாழ்வான்  என்னும் காமுண்டன் ஆவான். சோழர் காலத்துத் தலைவர்க்கு வழங்கிய நாடாழ்வான் என்னும் நாட்டுத்தலைவன் பெயர் போசலர் காலத்திலும் தொடர்ந்தது எனலாம்.

புறக்கொடி

தற்போது, ஹுலுகொடி (HULUKODI) என்றும் ஹுலுகடி (HULUKADI)  என்றும் பெயர்கொண்டுள்ள இவ்வூர் 12-ஆம் நூற்றாண்டில், “புற(க்)கொடி  என்று வழங்கியது. இப்பெயரே, காலப்போக்கில் “புலுகொடியாகிப் பின்னர் “ஹுலுகொடி  எனத் திரிந்தது எனலாம். கன்னட மொழியின் “ஹஎழுத்தை முதலாகக் கொண்ட பெயர்கள் “ஹகரத்தை இழந்து “பகரமாக மாற்றம் பெறுதலும், “ப”கரம் “ஹ”கரமாக மாற்றம் பெறுதலும் இயல்பு.

கோயிலின் பெயரும், இறைவன் பெயரும்

புறக்கொடி ஊரின் மலைமீது (முடியில் அல்லது சிகரத்தில்) கோயில் அமைந்ததால் முடீசுவரம் (முடி-ஈசுவரம்)  என்னும் பெயர் ஏற்பட்டது. ஈசுவரம் என்பது சிவன் கோயிலைக்குறிக்கும் சொல். இறைவன் பெயரும் கோயிலின் பெயராலேயே முடீசுவரர் என்று வழங்கியது. கல்வெட்டு, முடீசுவரமுடைய மஹாதேவர் எனக் குறிப்பிடுவது இதன் காரணமாகவே. இறைவனின் இப்பெயர், தமிழகத்தில் புதுக்கோட்டைக்கருகில் அமைந்துள்ள குடுமியான் மலைக்கோயிலின் பெயரையும் இறைவனின் சிகாநாதர் என்னும் பெயரையும் நினைவூட்டுகிறது. சிகையும் முடி(குடுமி)யைக் குறித்தது; சிகரமும் முடியைக் குறித்தது. புறக்கொடியில் கோயில், மலையின் கிழக்குப் பகுதியில் இருந்தது.

கோயிலை எடுப்பித்தவன் மேலே குறிப்பிட்ட மண்ணை நாடாழ்வான் ஆவான். இதைக் கல்வெட்டு, முடீவரமுடைய மஹாதேவருடைய விமாநம் உதகபூர்வம் பண்ணிநேன்  எனச் சொல்கிறது. கோயிலைப் பாதுகாத்தலையும், வழிபாட்டுக் கடமைகளையும் நிறைவேற்றும் பொறுப்பை முறையே மண்ணை நாடாழ்வானும், கோயில் பூசையாளன் சிவப்பிராமணன் பன்மபட்டனும் ஏற்கிறார்கள். இதைக் கல்வெட்டு, “மண்ணை நாடாழ்வாநேந் எந் வம்சமும் பன்மபட்டந் வம்சமுள்ளளவும் பூஜிப்பாறாக   என்று குறிப்பிடுகிறது.

கோயிலின் காப்பு, வழிபாடு ஆகியவை தடையின்றிக் காலந்தோறும் தொடரவேண்டும் என்பதையே மேற்குறித்த கல்வெட்டு வரிகள் சுட்டுகின்றன. இந்தத் தன்மத்துக்குத் தீங்கு செய்வார் உண்டாகில் அவர்கள் கங்கை-குமரி இடையில் உள்ள நிலப்பகுதியில் பசுவைக் கொன்றவர் அடையும் நரகத்தை அடைவார்கள் என்று கல்வெட்டின் இறுதிப் பகுதி குறிப்பிடுகிறது. கல்வெட்டின் இம்மரபுத் தொடரை “ஓம்படைக்கிளவி  என்று குறிப்பிடுவர்.  கல்வெட்டைப் பொறித்த சிற்பியின் பெயர் இராமாச்சாரி  என்பதாகக் கல்வெட்டின் தொடர்  “இவை (றா)மாசாரி"  புலப்படுத்துகிறது.


பார்வை :   1  INSCRIPTION STONES OF BANGALORE  குழுமம்


                      2   TEAMGSQUARE  இணைய தளம்.




துரை.சுந்தரம், கல்வெட்டு ஆராய்ச்சியாளர், கோவை.
அலைபேசி :  9444939156.

ஞாயிறு, 20 அக்டோபர், 2019



கமுதி அய்யனார் கோயில் வட்டெழுத்துக் கல்வெட்டு

முன்னுரை

நண்பர் திரு. இராஜகுரு, இராமநாதபுரத்தில் இருந்துகொண்டு தொல்லியல் ஆய்வுப்பணிகளை மேற்கொண்டுவருபவர். அப்பகுதியில் வெளிப்படாத தொல்லியல் எச்சங்களையும், கல்வெட்டுகளையும் தேடிச் செய்திகள் கொணர்ந்து வெளிப்படுத்தித் தொல்லியல் கழகத்தின் ஆண்டு வெளியீடான “ஆவணம்”  - வரலாற்றுப் பதிவுகள் கொண்ட -  இதழில் பதிவு செய்துவருபவர். அத்தோடு, பள்ளி மாணாக்கர்க்குத் தொல்லியல், வரலாறு ஆகியன பற்றிய புரிதலை ஏற்படுத்தி அவர்களைக் கொண்டே சிறு வரலாற்றுக் கட்டுரைகளை எழுத வைத்து நூலாக்கி மகிழ்ந்தவர். 

வட்டெழுத்தின் மேல் எனக்கேற்பட்ட ஓர் ஈர்ப்பினால், வாய்ப்புக் கிடைத்தபோதெல்லாம் வட்டெழுத்துகளில் அமைந்த கல்வெட்டுப் படங்களைத் தேடிச் சேர்த்து வருகிறேன். அந்த வகையில், நண்பர் திரு. இராஜகுரு அவர்கள் அண்மையில், என் வேண்டுகோலை ஏற்று ஒரு வட்டெழுத்துக் கல்வெட்டின் படத்தை அனுப்பியிருந்தார். கல்வெட்டு, மிகவும் அருமையானதொரு எழுத்தமைதியைக் கொண்டதாகவும், அழகாகவும் இருந்தது.  வட்டெழுத்துகளைக் கற்று, படிக்கவும் எழுதிப்பழகவும் பயிற்சி செய்வோருக்கு மிகவும் பயன்படுகின்ற ஒரு பாடப்பகுதி என அதைக் குறிப்பிடலாம். தமிழ் பிராமி எழுத்திலிருந்து தமிழகத்தில் முதலில் கிளைத்துப் படர்ந்த எழுத்து முறை வட்டெழுத்தாகவே இருக்கும் எனக் கருதுகிறேன். பல்லவர், தமிழ்க் கிரந்த எழுத்தைப் பயன்பாட்டுக்குக் கொண்டுவரும் முன்பே, இந்த வட்டெழுத்து, கி.பி. 4-ஆம் நூற்றாண்டு அளவில் தமிழக மக்களிடையே புழக்கத்தில் இருந்த வழக்கெழுத்து என்பதில் ஐயமிருக்காது என நம்புகிறேன். காரணம், முற்காலப் பல்லவர், ஆந்திரப்பகுதியில் அரசு இருக்கை அமைத்துக்கொண்டு காஞ்சியைக் கைப்பற்றிய நிலையில், ஆந்திரப்பகுதியில் நிலக்கொடை அளித்த செய்திகளை ஆவணப்படுத்தி வெளியிட்ட செப்பேடுகளில் ஒன்றான சிம்மவர்மனின் விழவட்டிச் செப்பேட்டில், அக்காலத்தே வழக்கிலிருந்த வட்டெழுத்திலிருந்து சிறப்பு “ழகரத்தை எடுத்துக் கையாண்டுள்ளனர் என்பதே. செப்பேட்டின் அந்தப் பகுதியைக் கீழுள்ள படத்தில் காண்க.

நண்பர் இராஜகுரு அவர்கள் அனுப்பியிருந்த மேற்படி வட்டெழுத்துக் கல்வெட்டினைப் பற்றிய பகிர்வே இக்கட்டுரை.

கமுதி அய்யனார் கோயில் வட்டெழுத்துக் கல்வெட்டு

இராமநாதபுரம் மாவட்டம், கமுதியில், கமுதி-அருப்புக்கோட்டை சாலையில் அமைந்துள்ள ஒரு கோயில் வழிவிட்ட அய்யனார் கோயில் ஆகும். இக்கோயிலில் காணப்படும் தனிக்கல் ஒன்றில் வட்டெழுத்துகளாலான கல்வெட்டு பொறிக்கப்பட்டுள்ளது. இக்கல்வெட்டினைப் படித்துக் கல்வெட்டுப்பாடத்தை 2003-ஆம் ஆண்டு “ஆவணம்  இதழில் பதிவு செய்துள்ள தொல்லியல் அறிஞர் முனைவர் சொ. சாந்தலிங்கம் அவர்கள், இக்கல்வெட்டின் காலம் கி.பி. 10-ஆம் நூற்றாண்டு எனக் குறிப்பிடுகிறார். தமிழ் பிராமி எழுத்திலிருந்து பிரிந்து முறையாக வளர்ச்சியுற்ற வட்டெழுத்து, சோழர், தமிழ் எழுத்தைத் தம் ஆட்சிப்பரப்பு முழுதும் நிலை நிறுத்திய பின்னர், தன் (நல்ல) நிலையில் இருந்து வழுவத்தொடங்கிற்று எனலாம். எழுத்துக்கெழுத்துத் தெளிவான வேறுபாடு கொண்டிருந்த - மக்கள் எழுத்தான – வட்டெழுத்துகளை, மக்களே அக்கறைக் குறைவினால், ஒரே வடிவத்தில் இரண்டு மூன்று எழுத்துகளை எழுதியும், வேகமாக எழுதும் ஒரு போக்கைக் கையாண்டும் குழப்பிப் பயன்பாட்டைக் குறைத்துவிட்டனர் எனலாம். அல்லது சோழர் நடைமுறைப்படுத்திய தமிழ் எழுத்தின் ஆதிக்கத்தால் வட்டெழுத்துப்பயன்பாட்டில் தொய்வும், குறைபாடும் ஏற்பட்டன எனலாம். கமுதிக் கல்வெட்டு, வட்டெழுத்தின் நிறைவான வடிவத்தைக் கொண்ட நிலையில் சிறப்புப் பெற்றதாக அமைகிறது. எழுத்துகள் மிக அழகாக எழுதப்பட்டுள்ளன. முன்னரே குறித்தவாறு, இக்கல்வெட்டு எழுத்துகள் பயிற்சி மாணவர்க்கேற்றவை.





கல்வெட்டின் பாடம் (கட்டுரை ஆசிரியர் படித்தவாறு) :

1    ஸ்வஸ்திஸ்ரீ கோச்சடை
2    கு யாண்டு
3    ம் யாண்டு கும்ப ஞா
4    லாகத் திருப்பாற்..
5    அரிகேரி ஈச்வர(தே)
6    ர்க்கு நொந்தா விளக்(கு)
7    கு இவ்வூர் தேவ(னா)
8    நங்கை ஆயின தி(ரு)
9    மகள் சோநைப் பிரா(ட்)
10   த்தி வைத்த நிறைகு(றை)
11   ழங்காசு பதினை
12   காசினால் காசின்வாய்த் திங்
13   கள் நாழி நெய்ப் பொலியா(க)
14   த்திங்கள் பதினைந்நாழி
15   நெய்யாலும் நிசதிப்ப
16   டி உரிய் நெய்யால் ஒரு நொந்
17   தா விளக்கு முட்டாமே எரி
18   ப்பதாக இத்தளிஇல் அக
19   நாழிகையார்க்கு நெய்ப்பொ
20   லி ஊட்டாகக் குடுத்த ..


குறிப்பு :   சிவப்பு வண்ண எழுத்துகள் கிரந்தம். 


கல்வெட்டுச் செய்திகள்

கல்வெட்டின் காலம்

கல்வெட்டு, பாண்டியர் காலக் கல்வெட்டு. கல்வெட்டில் காணப்பெறும் “கோச்சடை  என்னும் பெயர் கோச்சடையவர்மன் என்னும் பாண்டிய அரசனைக் குறிக்கிறது. சடையவர்மன், மாறவர்மன் ஆகிய இரு பட்டப்பெயர்களும் பாண்டிய அரசர்கள் ஒருவரை அடுத்து இன்னொருவர் எனச் சூட்டிக்கொள்கின்ற பெயர்களாகும். அரசனுடைய இயற்பெயரும் அவனது ஆட்சி ஆண்டும் எழுதப்பட்ட வரிகள், கல்வெட்டு ஒரு புறமாக உடைந்துவிட்ட காரணத்தால் புலப்படாது போயின. யாண்டுஎன்னும் சொல் இரு முறை கல்வெட்டில் எழுதப்பட்டுள்ளது. ஒன்று, அரசனின் ஆட்சியாண்டையும் மற்றொன்று, தமிழ் வட்ட ஆண்டையும் குறிப்பனவாய்க் கொள்ளலாம். ‘கும்ப ஞா  என்னும் சொல், கும்ப ஞாயிறு என்பதைக்குறிக்கும். கும்ப ஞாயிறு, மாசி மாதத்தைக் குறிக்கும். இடைக்காலக் கல்வெட்டுகளில், மாதங்களின் பெயர்களைக் குறிக்க, இன்றுள்ள வழக்குப்போல சித்திரை, வைகாசி என எழுதப்படுவதில்லை. மாறாக, வான நூல் அடிப்படையில் மேஷம் முதல், மீனம் முடிய உள்ள பன்னிரண்டு இராசிப்பெயர்களால் குறிக்கப்பட்டன.  சித்திரை மாதம், ஞாயிறு (சூரியன்)  மேஷராசியில் இருக்கும். எனவே, சித்திரை மாதம் மேட ஞாயிறு ஆனது. தொடர்ந்து ஞாயிற்றின் இடம்பெயர்தலை அடிப்படையாகக் கொண்டு மீதி மாதங்களின் பெயர்கள், மீதி இராசிப் பெயர்களை ஏற்று அமையும்.

திருப்பா(பொ)ற்புனத்து அரிகேசரி ஈசுவரர்

அடுத்து, கல்வெட்டில் வருவது ஓர் ஊரின் பெயர் (வரி 4). திருப்பாற்  என்பதாக ஒரு குறைச் சொல்லாய் நிற்கிறது. கல்லின் உடைந்துபோன பகுதியில் மீதி எழுத்துகள் இருக்கும். இதே கல்லின் பின்புறத்தில் பொறிக்கப்பட்ட முதலாம் பராந்தகனின் கல்வெட்டு ஒன்று, ஊரின் பெயரை திருப்பொற்புனம் என்று குறிப்பிடுவதாகச் சாந்தலிங்கம் அவர்கள் தம் பதிவில் குறித்திருக்கிறார். (ஒரே கல்லில் பாண்டியரின் கல்வெட்டும் சோழரின் கல்வெட்டும் பொறிக்கப்பட்டுள்ளமை  வியப்பளிக்கிறது.) வட்டெழுத்துக் கல்வெட்டில், திருப்பாற்என்று தெளிவாக உள்ளதால் ஊர்ப்பெயர் திருப்பாற்புனம் என்று கருத வாய்ப்பு உண்டு. அல்லது, வட்டெழுத்துக் கல்வெட்டில் பிழையாக எழுதியுள்ளனர் என்றும் கருதலாம்.

கோயிலில் எழுந்தருளிய இறைவனின் பெயர் அரிகேசரி ஈசுவரர் என்பதாகும். பராந்தகனின் கல்வெட்டிலும் இப்பெயரே உள்ளது.

கொடை-கொடைப் பொருள்- கொடையாளி

அடுத்து வரும் வரிகளில் (வரி-6, மற்றும் வரி-10-11) நொந்தாவிளக்கும், “ழங்காசு பதினை  ஆகிய குறைச் சொற்களும் வந்துள்ளன. கோயிலில் நொந்தாவிளக்கெரிக்கப் பழங்காசு பதினைந்து கொடையாக அளிக்கப்பட்டது என்னும் செய்தி தெளிவாகிறது. 

கொடை கொடுத்தவர் பெயர் சோனைப்பிராட்டி என்பதாகக் கல்வெட்டுச் சொற்களிலிருந்து  அறியலாம். சோனைப்பிராட்டியின் தாய் பெயரும் கல்வெட்டில் குறிக்கப்பட்டுள்ளது. ஆனால், முழுப்பெயரையும் அறிய இயலாதவாறு கல் உடைந்து போயுள்ளது. அவள் பெயர் நங்கை எனலாம். அவள், ஒரு வேளை கோயிலின் தேவரடியாராக இருக்கலாமோ என்னும் ஐயத்தைக் கல்வெட்டில் வரும் தொடர் “இவ்வூர் தேவ…..நங்கை ஆயின திரு…  எழுப்புகிறது. அடுத்து, த்தி வைத்த  என்னும் தொடர் (வரி-10), மேற்படி சோனைப் பிராட்டி என்பவள் தன் தாய் நங்கையின் நலம் வேண்டி விளக்குக் கொடை அளிக்கிறாள் எனக் குறிப்பதாய்க் கருதலாம். ஒருவரின் நலத்துக்காக என்றும், அரசரின் நன்மைக்காக என்றும் ஒரு நிவந்தம் கோயிலுக்கு அளிக்கப்படுகையில் சாத்திஎனக் கல்வெட்டில் குறிப்பது வழக்கு. நிறைகு………..ழங்காசு   என்னும் தொடர் “நிறைகுறையாப் பழங்காசு   என விரியும். சரியான நிறையுடைய பழைய நாணய வகை என்பது பொருள். 

முதலீடும் வட்டியும்

கொடையாளி,  முதலீடாக வைத்தது பழங்காசு பதினைந்து ஆகும். இக்காசு பதினைந்துக்குப் பொலியாக (வட்டியாக) மாதந்தோறும் பதினைந்து நாழி நெய் பெறப்படும். எனவே, காசு ஒன்றுக்குப் பொலி ஒரு நாழி நெய். நாழி என்னும் முகத்தல் அளவினைச் சென்ற நூற்றாண்டின் “படி  என்னும் அளவீட்டுடன் ஒப்பிடலாம். பதினைந்து காசுக்கு மாதம் பதினைந்து நாழி நெய் என்பதிலிருந்து, ஆண்டுக்கு நூற்றெண்பது நாழி நெய் என்பது பெறப்படும். ஒரு நாழிக்கு இரண்டு உரி என்னும்  கணக்கீட்டுப்படி, நூற்றெண்பது நாழிக்கு முன்னூற்று அறுபது உரி. ஆண்டு முழுதும் முன்னூற்று அறுபது உரி நெய் அளிக்கப்பட்டது. அதாவது ஒரு நாளில் ஓர் உரி. இதைக்  கல்வெட்டு நிசதிப்படி உரிய் நெய்யால்  (வரி-16)  என்று குறிக்கிறது. கல்வெட்டின் இச்செய்தி மற்றும் கணக்கிடுதல் முறை இரண்டிலிருந்தும், ஓர் ஆண்டுக்கு முன்னூற்று அறுபது நாள் என்பதாக அக்காலத்தே கணக்கிட்டுள்ளனர் என அறிகிறோம். ஒரு காசுக்கு மாதம் ஒன்றுக்கு ஒரு நாழி நெய் வட்டி என்பதனைக் குறிக்க “காசின்வாய்  என்னும் தொடர் கல்வெட்டில் பயன்படுத்தப்படுகிறது. இது கல்வெட்டு வழக்குக்கே உரிய ஒரு சொல்லாட்சி. பொலி ஊட்டு என்பது வட்டி வருவாயைக் குறிக்கும் சொல்லாகும் (வரி-20). 

தன்மம் தடைபடாதிருத்தல்

விளக்கெரிக்கும் அறச் செயல், ஆண்டாண்டு தோறும் தடையின்றி நிறைவேற்றப்படல் வேண்டும் என்பதைக் குறிக்கக் கல்வெட்டில் வரும் சொல் “முட்டாமே  என்பதாகும். எனவே, நொந்தாவிளக்கு முட்டாமே எரிப்பதாக  என எழுதப்பட்டுள்ளது. முட்டாமே=முட்டாமல். முட்டாமல் விளக்கெரிதலைக் கண்காணிக்கும் பொறுப்பு கோயிலின் ‘அகநாழிகையார்க்குள்ளது.  அகநாழிகை என்பது கோயிலின் கருவறையைக் குறிக்கும். ‘அகநாழிகையார்என்பவர், கருவறைப் பூசையாளர். பூசனை, பூசாரி ஆகிய சொற்கள் சமற்கிருதம் சார்ந்தன. பூசை என்பதற்கு நல்ல தமிழ்ச் சொல் வழிபாடு. பல்லவ அரசன் முதலாம் பரமேசுவரன் காலத்துக் கூரம் செப்பேடு (கி.பி. 7-ஆம் நூற்றாண்டு) பூசையாளரைத் “தளி வழிபாடு செய்வார்என்று குறிக்கிறது. கல்வெட்டுகளில் அகநாழிகை, உண்ணாழிகை என இரு தொடர்களும் பயின்றுவரும். உள்+நாழிகை-> உண்ணாழிகை.

கோயிலுக்கு இன்னொரு பெயர் தளி

கோயிலைக் குறிக்கும் பழம்பெயர் தளி என்பது. பல்லவர் காலத்திலேயே (கி.பி.7-ஆம் நூ.ஆ.)  ‘தளி  என வழங்கியதை மேலே குறிப்பிட்டுள்ளோம். தளி என்னும் சொல்லாட்சி, கோயில்கள் செங்கற்களைக்கொண்டு கட்டப்பட்ட காலத்தில் இருந்த வழக்கு எனக் கருதலாம். கூரம் செப்பேடு, ஒரு மண்டபம் கட்டவேண்டி நிலம் ஒதுக்கப்பட்டதைக் கூறும்போது,  (செங்கல்) சூளை பற்றிக் குறிப்பிடுகிறது. எனவே, கூரம் கோயில் முதலாம் பரமேசுவரன் காலத்தில் செங்கல் கட்டுமானத் தளியாக இருந்தமை அறிகிறோம். (செங்கற்கள் செய்யும்  தொழில் இடம், சூளை என்னும் பெயரால் வழங்கும் மரபு பண்டு தொட்டே - 7-ஆம் நூற்றாண்டு -  இருந்தது என்பதைக் காண்கிறோம்.)  கமுதி வட்டெழுத்துக் கல்வெட்டு, தனிக்கல்லில் பொறிக்கப்பட்டுள்ளதையும் கல்வெட்டில் தளிஇல் அகநாழிகையார்க்குஎன வரும் தொடரையும் நோக்குகையில், கல்வெட்டில் குறிப்பிடப்பெறுகின்ற அரிகேசரி ஈசுவரம் என்னும் பெயரில் ஒரு செங்கற்கட்டுமானச் சிவன் கோயில் இருந்துள்ளமை புலப்படுகிறது.

சூளை என்னும் சொல் வழக்கு, பண்டைய காலத்தில் இருந்தாலும், செங்கல் என்னும் சொல் பழங்கல்வெட்டுகளில் பயின்று வருகிறதா எனத் தெரியவில்லை. தமிழ்க் கல்வெட்டுச் சொல்லகராதி நூலில் இச்சொல் காணப்படாததால் செங்கல் சொல் வழக்கு பண்டு (கல்வெட்டுகளின் அடிப்படையில்) இல்லை எனலாம். ஆனால், இட்டிகை என்னும் சொல் செங்கல்லைக் குறித்தது என்பதைத் திருக்கோடிக் காவல் கோயில் கல்வெட்டு வாயிலாக அறிகிறோம். இக்கோயில் முன்னர் ஒரு செங்கல் கட்டுமானக் கோயிலாக இருந்துள்ளது. உத்தம சோழனின் தாயாரான செம்பியன்மாதேவி இக்கோயிலைக் கற்றளியாக மாற்றிக் கட்டுவித்தபோது பொறிக்கப்பட்ட கல்வெட்டில், செங்கற் கட்டுமானத்தை “இட்டிகைப்படையாலுள்ள ஸ்ரீகோயில்  எனக் குறிப்பிடுகிறது. (க.வெ. எண் : 292  SII Vol-XIX)  மேலும், செங்கற்கட்டுமானமாய்க் கோயில் இருந்தபோது தனிக்கற்களில் பொறிக்கப்பட்ட கல்வெட்டுகளின் படிகளைப் (பாடம் அல்லது வாசகம்) புதிதாகக் கட்டிய ஸ்ரீவிமானத்தில் மீண்டும் பொறிக்கச் செய்துள்ளார்கள் என்பதையும் இக்கல்வெட்டு கூறுகிறது. வெவ்வேறு கல்லால் பலவிடத்திலாய்க் கிடந்த அவையெல்லாம் இந்த ஸ்ரீவிமானத்தின்மேல் ஏற வெட்டிக்கொள்க என்று அருளிச் செய வெட்டினபடி முன் கிடந்த படிகளில் இது ஒரு படி   என்னும் முன்னுரையோடு பழங்கல்வெட்டு  (பாண்டியனின் கல்வெட்டு) உள்ளவாறே பொறிக்கப்பட்டது. புதிய கல்வெட்டில் “தனிக்கல்  என்னும் சொல் காணப்படுதலும் கருதத்தக்கது.

வட்டெழுத்துக் கல்வெட்டின் எழுத்தமைதி


கீழே இரு ஒளிப்படங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.  முதல் படம்,  விழுப்புரம் மாவட்டம், செஞ்சி வட்டத்தில் உள்ள திருநாதர் குன்றில் இருக்கும் சமணக்கல்வெட்டின் படம். வட்டெழுத்தின் வளர்ச்சி நிலையின் முதல் கட்டத்தைச் சேர்ந்தது. 



திருநாதர் குன்று - 5-ஆம் நூற்றாண்டு
இதில், இறுதி வரியைக் காட்டும் படம் கீழே உள்ளது.  இதன் பாடம் :

சி ரி க ரு  நி சீ  தி  கை.

இவற்றில்,  சி,   ரி,   நி,   தி   ஆகிய  எழுத்துகள்  இகர உயிர்மெய் எழுத்துகள். இவற்றில் இகரத்தைக் குறிக்கும்  இணைப்புக் குறிகள்,  மூல எழுத்துகளின்  தலைப்பகுதியில் வலமிருந்து இடமாக மேல்நோக்கிச் செல்லும் வளைவுகளால் அமைந்திருக்கக் காணலாம்.


                                               சி    ரி                  நி                   தி 



இரண்டாம் படம்,  தூத்துக்குடி மாவட்டம், கழுகு மலையில் உள்ள சமணக் கல்வெட்டின் படம்.  வட்டெழுத்தின் வளர்ச்சி நிலையின் இரண்டாம்  கட்டத்தைச் சேர்ந்தது.  இது முதிர்ந்த நிலை.  


கழுகுமலை -  8-9 நூற்றாண்டு
இதன் பாடம் :

       ஸ்ரீ அச்சணந்தி
       தாயார் குணமதி
       யார் செய்வித்
       த திருமேனி
      

இவற்றில்,  தி,  வி,   னி   ஆகியன இகர உயிர்மெய் எழுத்துகள்.    இவற்றில் இகரத்தைக் குறிக்கும்  இணைப்புக் குறிகள்,  மூல எழுத்துகளின்  பக்கவாட்டுப் பகுதியில்  வளைவுக் கோடுகளைக் கொண்டுள்ளன.   இவை வட்டெழுத்தின் முழு வளர்ச்சியில் அமைந்தவை. 


                                                                       தி




                                                                 
                                                                           வி



                                                                        னி



இவ்வெடுத்துக்காட்டுகள்,  வட்டெழுத்தின் இரண்டு கட்ட எழுத்தின் வடிமைப்பாகும்.   கமுதி வட்டெழுத்துக் கல்வெட்டில் உள்ள எழுத்துகளை  இவற்றுடன்  ஒப்பிடும்போது, கமுதிக் கல்வெட்டின் வட்டெழுத்து இரண்டாம் கட்ட  முதிர்ந்த நிலையில் அமைந்திருந்தாலும்  இகர உயிர்மெய் எழுத்துகளில்  இணைப்பு வளைவுகள்  முதல் நிலையைச் சேர்ந்தவையாகவே இருப்பதைக் காண்கிறோம். 


                                                                           சி
                                 


              
                                                                         தி



                                                                         வி



கமுதிக் கல்வெட்டில் மொழியும், இலக்கணமும்

வரி 16 :       உரிய்


பதினாறாம் வரியில் உள்ள உரி   என்னும் சொல் ,    கல்வெட்டில்  “உரிய்”   என  யகர மெய்யை இறுதியில் இணைத்துக்கொண்ட நிலையில் எழுதப்பட்டுள்ளது.  இதற்கான இலக்கணக் குறிப்பு  தெரியவில்லை.  ஆனால், இவ்வாறு எழுதும் வழக்கு, தொல் தமிழ் எழுத்தான தமிழ் பிராமிக் கல்வெட்டுகளில் இருப்பதைக் காணலாம்.  கி.மு. இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த மாங்குளம் பிராமிக் கல்வெட்டில்,  “கணிய்”  என்றும், அதே நூற்றாண்டைச் சேர்ந்த விக்கிரமங்கலம் பிராமிக்கல்வெட்டில் “அந்தைய்”  என்றும்  பொறிக்கப்பட்டுள்ளன.  படங்கள் கீழே :


கணிய்



அந்தைய்

வரி 18 :       தளிஇல்   

கல்வெட்டின் பதினெட்டாம் வரியில்  ”தளிஇல்”    என்று பொறிக்கப்பட்டுள்ளது.   தமிழ் மொழி இலக்கணப்படி,  தளி,  இல்  ஆகிய இரு சொற்கள் புணரும்போது,   ”தளியில்”    என்றமையும்.   அதாவது, இரு சொற்களுக்கும் இடையில் உடம்படு மெய்யாக யகர மெய் தோன்றும். ஆனால்

கல்வெட்டில், யகர மெய்  இடையில் வராமல் இரு சொற்களும் இயல்பு நிலையில் உள்ளன. கல்வெட்டுகளில் இவ்வாறு  அமைவது  இயல்பாக இருப்பதை ஒரு சில கல்வெட்டுகளில் காண்கிறோம்.  எடுத்துக்காட்டாக,  ஆனைமலை வட்டெழுத்துக்கல்வெட்டில்,  ”மாறன் எயினன்”  என்னும் சொல் ”மாறன்னெஇனன்”  என்று எழுதப்பட்டிருக்கும்.  எனவே, இரு உயிர் எழுத்துகளை  இணைப்பின்றி  உள்ளவாறே எழுதும் வழக்கும் கல்வெட்டுகளில் இருந்துள்ளதை அறிகிறோம்.  (கல்வெட்டுகளில் சந்திப்பிழை என்ரும் கொள்ளலாம்).

முடிவாக,  கமுதி  அய்யனார் கோயில் வட்டெழுத்துக் கல்வெட்டு  பல சிறப்புக்கூறுகளைக் கொண்டுள்ளது என்பதிலும் வட்டெழுத்துப் பயிற்சி மேற்கொள்வோருக்கு அருமையனதொரு களமாக அமைந்துள்ளது என்பதிலும்  ஐயமில்லை.





பார்வை நூல்கள் :

1.   தமிழ்க் கல்வெட்டுச் சொல்லகராதி
      சாந்தி சாதனா, சென்னை - வெளியீடு.
2    கல்லெழுத்துக் கலை       -  நடன. காசிநாதன்
      வெளியீடு- மணிவாசகர் பதிப்பகம், சென்னை.

3   EPIGRAPHIA INDICA Vol-I

4   EPIGRAPHIA INDICA Vol-XXIV

5   SOUTH INDIAN INSCRIPTIONS Vol-XIX

6   ஆவணம் - ஆண்டிதழ்-2003
     வெளியீடு - தொல்லியல் கழகம், தஞ்சாவூர்.

7   தமிழ் - பிராமி கல்வெட்டுகள்
     வெளியீடு - தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை.

நன்றி : திரு. இராஜகுரு,  தொல்லியல் ஆய்வாளர், இராமநாதபுரம்.

படங்கள் உதவி :   திருச்சி பார்த்தி.
                                     இணையம்.






துரை.சுந்தரம், கல்வெட்டு ஆராய்ச்சியாளர், கோவை.
அலை பேசி :  9444939156.

வியாழன், 3 அக்டோபர், 2019


கல்வெட்டுகளில் உப்பளம்


முன்னுரை

கல்வெட்டுகள் தொடர்பாகப் பல நூல்களைப் படிக்கும்போது, கல்வெட்டுகளில் பேசப்படும் முதன்மைப் பொருள் நெல்லாகவே இருக்கக் கண்டிருக்கிறேன். இடையிடையே, உப்பு, உப்பளங்கள் பற்றிய செய்தி எங்கேனும் காணப்படுகின்றதா என்னும் எண்ணம் தோன்றும். அவ்வப்போது திருவாங்கூர் தொல்லியல் வரிசை (TRAVANCORE ARCHAEOLOGICAL SERIES) நூலினைப் படித்தல் வழக்கம். அண்மையில், மேற்படி நூலின் எட்டாம் தொகுதியினைப் படிக்கையில் – தொகுத்துப் பதிப்பித்தவர் தொல்லியல் அறிஞர் கோபிநாத ராவ் அவர்கள் (T.A. GOPINATHA RAO) -  கன்னியாகுமரியில் சோழர் கல்வெட்டு ஒன்றில் உப்பளம் பற்றிய செய்தியைக்  காணநேர்ந்தது. அக்கல்வெட்டுச் செய்தியினைப் பற்றிய பகிர்வு இங்கே.

உப்பும் உப்பளமும்

உப்பு. ஓர் எளிய பொருள் என்று புறந்தள்ள இயலாது. உப்பின்றி உணவில்லை. உணவுண்டு உயிர்வாழ உப்பு இன்றியமையாதது. உண்மையில் அதன் மதிப்பு பெரிது. உப்பின் பயன்பாடு பற்றிப் பேராசிரியர் தொ.பரமசிவன் அவர்கள் கூறுவதைக் காண்க:

"உப்பு விற்பவர்களைச் சங்க இலக்கியத்தில் உமணர்கள் என்று அழைக்கிறார்கள். நெல்லின் நேரே வெண் கல் உப்பு என, உப்பு  விலையும் நெல் விலையும் சமமாக இருந்திருக்கிறது. சோழர் காலத்தில் நெல்லின் விலையும் உப்பு விலையும் அருகருகே இருந்தன. பழந்தமிழ் நாட்டின் மிகப் பெரிய சந்தைக்குரிய உற்பத்திப் பொருளாக உப்புதான் விளங்கியிருக்கிறது. உப்பு விளையும் களத்துக்கு  அளம் என்று பெயர். பெரிய  உப்பளங்களுக்கு அரசர்களின் பட்டப் பெயர்களைச் சூட்டியிருக்கிறார்கள்.  பேரளம், கோவளம் (கோ அளம்) என்ற பெயர்களில் வழங்கப்பட்டுள்ளன. சோழ, பாண்டிய அரசர்கள் உப்புத் தொழிலை அரசின் கட்டுக்குள்ளேயே வைத்திருந்தார்கள்” (எனது இந்தியா- ஜூனியர் விகடன் 29-பிப்ரவரி-2012.)

மேலே உமணர்கள் பற்றிய குறிப்புள்ளது. சிறுபாணாற்றுப்படை இலக்கியத்தில், உப்புப் பண்டமேற்றிய மாட்டு வண்டிகளில் (நோன் பகட்டு ஒழுகை) உமணர் உப்பு விற்கச் சென்றதாகக் குறிப்பு வருகிறது. உமணர்களின் மனைவியர் உமட்டியர் என்றழைக்கப்பெற்றனர்.  உமட்டியரும் அவர் தம் புதல்வரும் உமணரோடு உடன் சென்றனர். உமட்டியர் ஈன்ற புதல்வரோடு மந்திகள் கிலுகிலுப்பை விளையாடும் காட்சியைச் சிறுபாணாற்றுப்படை காட்டுகிறது.

நோன்பகட் டுமண ரொழுகையொடு வந்த
மகாஅ ரன்ன மந்தி…….
....... உமட்டிய ரீன்ற
கிளர்பூட் புதல்வரொடு கிலுகிலி யாடும்
-       சிறுபாணாற்றூப்படை (55-61)

தொ.பரமசிவன் அவர்கள், பழந்தமிழ் நாட்டின் மிகப்பெரிய சந்தை உற்பத்திப்பொருளாக உப்பு விளங்கியதைக் குறிப்பிடுகிறார்.  உப்பு வணிகர்கள் வண்டிகளில் (CARAVAN) பயணம் செய்து வணிகம் செய்துள்ளனர். இவ்வணிகர்கள், கல்வெட்டுகளில் குறிப்பிடப்பெறும் பதினெண்விஷயத்தார் என்னும் வணிகக் குழுவினரைச் சேர்ந்தவராக இருந்திருக்கலாம்.  

தமிழக ஊரும் பேரும்  என்னும் நூலில் பேராசிரியர் ரா.பி. சேதுப்பிள்ளையவர்கள், உப்பு நிலத்தைக் களர் நிலம் என்று கூறுவர் என்றும், உப்பு விளையுமிடம் அளம் எனப்படும் என்றும், தஞ்சையில் நன்னிலத்துகருகில் பேரளம் என்னும் ஊருண்டு என்றும் கூறுகிறார். 

சம்பளம் என்னும் சொல் பற்றிய விளக்கத்தைப் பாவாணர் கூற்றால் அறியலாம். பழங்காலத்தில் சம்பளம் கூலமும் (கூலமாகக் கொடுக்கப்படுவது கூலி.) உப்புமாகக் கொடுக்கப்பட்டது. கூலம் என்பது தானியம் . கூலத்திற் சிறந்தது நெல்லாதலின், நெல்வகையிற் சிறந்த சம்பாவின் பெயராலும், உப்பின் பெயராலும், சம்பளம் என்னும் பெயர் உண்டாயிற்று. சம்பும் அளமும் சேர்ந்தது சம்பளம். சம்பு என்பது சிறந்த நெல்வகைக்கும் சிறந்த கோரை வகைக்கும் பொதுப்பெயர்.

ஓங்கிவளர்ந்த சம்பாநெற்பயிரும் சம்பங்கோரையும் ஒத்த தோற்றமுடையனவா யிருத்தல் காண்க.நெல்லைக் குறிக்கும் சம்பு என்னும் பெயர் இன்று சம்பா என வழங்குகின்றது. உகரவீற்றுச் சொற்கள் ஆகார வீறு பெறுவது இயல்பே.
எ-டு: கும்பு - கும்பா, தூம்பு - தூம்பா, குண்டு - குண்டா. கும்புதல் = திரளுதல்.

கடலை ஒட்டிய கழிமுகப்பகுதி காயல் எனப்படும். இக்கழிமுகப்பகுதி  உவரி நீர் நிரம்பிய பரப்பை உடையது. இவ் உவரி நீர்ப்பரப்பில் உப்பு விளைவிக்கப்படுவதால், காயல் அல்லது கழி  என்னும் பெயர் உப்பளம் என்னும் பொருளிலும் வழங்கும்.  கடற்கரையை ஒட்டி அமைந்த இவ் உப்பளங்கள் தமிழ் நாட்டில் சோழ நாட்டிலும் பாண்டிய நாட்டிலும் மிகுதியும் இருந்துள்ளன எனலாம்.  உப்பு விளைவிக்கும் இடங்களாகத் தற்காலத்தே எண்ணூர்,  மரக்காணம், கோவளம், வேதாரண்யம், தூத்துக்குடி ஆகிய ஊர்கள் அறியப்படுகின்றன.

கன்னியாகுமரி-குஹநாதசுவாமி கோயில் கல்வெட்டு



கன்னியாகுமரி-குஹநாதசுவாமி கோயில் 


குமரி என்றதும் நாம் அறிந்தது குமரிப் பகவதியம்மன் கோயிலே. குமரி நகரில் குஹநாதசுவாமி கோயில் என்றொரு கோயிலும் உள்ளது. இங்கே தமிழில் பொறிக்கப்பட்ட ஆறு கல்வெட்டுகள் உள்ளன. ஒரு கல்வெட்டு, முதலாம் இராசேந்திரனின் ஆட்சியாண்டான கி.பி. 1036-ஆம் ஆண்டைச் சேர்ந்தது. அதில், இராசேந்திரனுக்கு உணவு சமைக்கும் (அடும்) பணிப்பெண் (பெண்டாட்டி) சோழ குலவல்லி என்பவள் ஆவாள் என்ற செய்தி காணப்படுகிறது. (இது பற்றிய கட்டுரை இந்த வலைப்பூவில் 23-08-2018 அன்று பதிவாகியுள்ளது).  மற்றொரு கல்வெட்டு, உப்பளம் பற்றிப் பேசுகிறது. இக்கல்வெட்டு, மேற்படிக் கோயிலின் கருவறையின் மேற்கு அதிட்டானத்தில் பொறிக்கப்பட்டுள்ளது. கல்வெட்டில் குறிக்கப்பெறும் அரசன் இராஜகேசரிவர்மன் இராஜாதிராஜதேவர். ஆட்சியாண்டு முப்பது.  இவன், வீரபாண்டியன் தலையும், இலங்கையும்,  சேரலன் சாலையும் கொண்டவனாகக் குறிக்கப்பெறுகிறான். 

கல்வெட்டுப்பாடம்:

                                                         மணற்குடி உப்பளம்
குஹநாதசுவாமி கோயில் கல்வெட்டு




குமரி ஸ்ரீவல்லபப் பெருஞ்சாலை

கல்வெட்டில், குமரி நகரின் பழம்பெயராகக் கழிக்குடி என்னும் பெயர் குறிக்கப்படுகிறது. கழி என்பது உப்பங்கழியைக் குறிக்கும் சொல்லாதலால், குமரியின் சுற்றுப்புறத்தில் உப்பளங்கள் மிகுந்திருந்தமையின் குமரி என்னும் இயற்பெயருடன் கழிக்குடி என்னும் சிறப்புப் பெயரும் அமைந்ததுபோலும். குமரி, பாண்டிய நாட்டைச் சேர்ந்திருந்தது ஆனால், பாண்டிய நாடு சோழர்  ஆட்சிக்குக் கீழ் இருந்தமையால், பாண்டியநாடு இராஜராஜனின் பெயரால் இராஜராஜப்பாண்டி நாடு என அழைக்கப்பெற்றது. சோழர் கால நாட்டுப்பிரிவுகளில், குமரி நகர் இருந்த பகுதி புறத்தாய நாடு என்னும் நாட்டுப்பிரிவில் அடங்கியிருந்தது. புறத்தாய நாடும், உத்தம சோழ வளநாடு என்னும் பிரிவின் கீழ் அமைந்திருந்தது.

குமரியில் ஒரு சாலை, ஸ்ரீவல்லபப் பெருஞ்சாலை என்னும் பெயரில் இயங்கிவந்துள்ளது. பாண்டியர் காலத்தில், பாண்டிய அரசன் ஸ்ரீவல்லபன் பெயரால் அமைந்த இச்சாலை, முதலாம் இராசராசனின்  ஆட்சிக்காலத்தில் பெயர் மாற்றம் பெற்றது. புதிதாக ஆட்சியைப் பிடித்த அரசர்கள், ஊர்களின் பெயர்கள் போன்றவற்றை மாற்றித் தம் பெயரிட்டு அழைத்தல் மரபு. இருப்பினும், மக்கள் வழக்கினின்று ஒரு பழம்பெயர் விரைவில் அழிந்துபோகாதென்னும் அடிப்படையில் சிறிது காலம் பழம்பெயரோடே அதன் புதுப்பெயரும் வழக்கில் இருக்கும். மிக அரிதாக, காலப்போக்கில் புதுப்பெயர் மறைந்து அதன் பழம்பெயரே நீடித்து நிலைத்துவிடுதலும் நேர்கிறது. எடுத்துக்காட்டாக, கர்நாடகத்தில், மைசூருக்கருகில் உள்ள தலைக்காடு, சோழர் ஆட்சியில் தழைக்காடான இராசராசபுரம் என்னும் பெயரில் வழங்கினாலும், பின்னர் அதன் பழம்பெயரே நிலைத்துவிட்டதைக் காண்கிறோம். இன்றும் தலைக்காடு என்னும் பெயரே உள்ளது.

சாலை என்பது ஒரு பயிற்சி நிலையம் என்று கொள்ளலாம். கல்வி, அரசியல் சார்ந்த மேலாண்மை, போர்ப்பயிற்சி ஆகிய அனைத்தும் ஒருங்கிணைந்த ஒரு சிறப்பு வாய்ந்த இப்பயிற்சிச் சாலைகளை இன்றுள்ள IAS ACADEMY  என்னும் ஆட்சியாளர் பதவிக்குத் தேர்வானவர்கள் பெறுகின்ற உயர்தரப் பயிற்சிக் கூடங்களுடன் ஒப்பிடலாம். இச் சாலைகளில் பயின்றவர்கள், சேர, சோழ, பாண்டிய மூவேந்தர்களிடம் அமைச்சராகவோ, பெரும் படைத்தளபதிகளாகவோ, அல்லது இரண்டு பொறுப்பும் கொண்ட பெரும் பதவிகளிலோ பணியாற்றும் அரசியல் தலைவர் தகுதி பெறுகின்றனர். இவர்கள், மூவேந்த வேளார் என்றும், பிரம்மமாராயர் என்றும் பட்டப்பெயர் கொண்டவர்களாகச் சோழர் கல்வெட்டுகளில் சுட்டப்பெறுகிறார்கள். முதலாம் இராசராசன் மற்றும் அவன் மகன் முதலாம் இராசேந்திரன் ஆகிய இருவரிடமும் அமைச்சராகவும், பெரும் படைத்தளபதியாகவும் பணியாற்றிய சேனாதிபதி ஸ்ரீ கிருஷ்ணன் இராமனான மும்முடிச் சோழ பிரம மாராயன் என்பானை மேற்படி அரசர்களின் கல்வெட்டுகளும் பெரிய லெய்டன் செப்பேடும் குறிக்கின்றன. இவன், தஞ்சைப்பெருவுடையார் கோயிலின் திருச்சுற்று மாளிகையை எடுப்பித்தவன் ஆவான்.


இனி, குமரியில் ஸ்ரீவல்லபப் பெருஞ்சாலை இருந்துள்ளதாக நமது குமரிக் கல்வெட்டில் அறிகிறோம். காந்தளூர்ச் சாலையை அடிப்படைக் கருத்தாகக் கொண்டு பார்த்திவேந்திரபுரம் என்னுமிடத்தில் கருநந்தடக்கன் காலத்தில் ஒரு சாலை அமைக்கப்பட்டதாக வரலாற்றுக் குறிப்புகள் உள்ளன. அது பாண்டிய நாட்டுப்பகுதியாகும். அது போலக் குமரியிலும் பாண்டிய அரசன் ஸ்ரீவல்லபன் பெயரால் சாலை ஒன்று செயல்பட்டு வந்துள்ளது என்பதை இக்கல்வெட்டு வாயிலாக அறிகிறோம். பின்னர், சோழர் ஆட்சியின்போது பெயர் மாற்றம் பெறினும் இரண்டு பெயர்களும் இக்கல்வெட்டில் சுட்டப்படுகின்றன.

மணற்குடி உப்பளமும் குமரி ஸ்ரீவல்லபப் பெருஞ்சாலையும்

குமரி ஸ்ரீவல்லபப் பெருஞ்சாலைக்குத் தேவையான உப்புப் பயன்பாட்டுக்காக, மணற்குடி உப்பளத்திலிருந்து உப்பு நிவந்தமாக வழங்கப்பட்டு வந்துள்ளது என்று குறிப்பிடும் கல்வெட்டு, இந்த உப்பு வழங்கலில் முட்டுப்பாடு (இடை நிறுத்தம்) ஏற்பட்டது என்பதையும் கூறுகிறது. மணற்குடி என்னும் ஊர் நாஞ்சி(ல்) நாட்டில் அமைந்திருந்தது. நாஞ்சில் நாடு இன்றைய நாகர்கோயில் பகுதி எனலாம். ஆனால், குமரி, நாஞ்சில நாட்டுப்பகுதியில் அமையவில்லை. நாஞ்சில்நாட்டைத் தொட்டவாறு அணுகியுள்ள புறத்தாய நாட்டில் அமைந்திருந்தது. மணற்குடி என்பது அவ்வூரின் இயற்பெயர் எனினும், அவ்வூருக்கு “மஹிபால குலகாலப் பேரளம்”  என்னும் சிறப்புப் பெயர் அமைந்திருந்தது. இச்சிறப்புப் பெயர் ஒரு காரணப்பெயர். முதலாம் இராசேந்திரன் வென்ற அரசர்களுள் ஒருவன் மஹிபாலன். அவனை வென்றதால் “மஹிபால குலகாலன்”.  எனவே, மணற்குடிக்கு, இராசேந்திரன் பெயரால் “மஹிபால குலகாலப் பேரளம்”  என்னும் பெயர் உண்டாயிற்று. குமரியைக் காட்டிலும் சிறியதொரு ஊரான மணற்குடியின் பெயரோடு சோழ அரசனின் பட்டப்பெயர் எவ்வாறு இணைந்தது? ஏனெனில், இவ்வூரில் பேரளம் இருந்துள்ளது. உப்பு வணிகத்துப் பெரு மையமாகத் திகழ்ந்த காரணத்தாலே, அதன் வணிக வருவாய்ச் சிறப்புகொண்டு இராசேந்திரன் காலத்தில் முதன்மை அளித்து இப்பெயர் அமைந்தது எனலாம். (மஹிபால  என்பது கல்வெட்டில் மயில்வாள என எழுதப்பட்டுள்ளது).

ஸ்ரீவல்லபப் பெருஞ்சாலையான ராஜராஜப்பெருஞ்சாலைக்கு வழங்கப்பட்டுவந்த உப்பு நிவந்தம் முட்டிக்கிடந்தமையில்’  நிவந்தத்தை மீண்டும் கிடைக்கச் செய்யப் பவித்திரமாணிக்கத் தொங்கப்பேரரையன் என்பவன் அரசனிடம் விண்ணப்பம் செய்து வேண்டிக்கொண்டு அரசனின் ஆணையைப் (திருமுகம்) பெற்றான். பவித்திரமாணிக்கத் தொங்கப்பேரரையன், அரசியார் உலகுடைய பிராட்டியரின் கீழ் பணியாற்றிய ஓர் அதிகாரி ஆவான். இவனது இயற்பெயர் அரிகுலகேசரி. பவித்திரமாணிக்கத் தொங்கப்பேரரையன் என்பது சிறப்புப் பெயர். தஞ்சைக்கருகில் உள்ள திட்டை என்னும் ஊரைச் சேர்ந்தவன்.  கல்வெட்டு இவனை, ”உலகுடைய பிராட்டியார் திருப்பள்ளித்தொங்கலுடையான்” எனக் குறிக்கிறது. அரசியார் பெயரை அடைமொழியாகக்  கொண்டு திருப்பள்ளித்தொங்கலுடையான் என்னும் பெயர் அமைவதால், பதிப்பாசிரியர் கோபிநாத ராவ் அவர்கள், திருப்பள்ளித்தொங்கல் என்னும் தொடர் ஒரு பதவியின் பெயர் எனக்குறிக்கிறார்.  அவர் கூற்று ஆங்கிலத்தில் :

"Tittai Arikulakeesari alias Pavithramanikka-ttonga-pperaraiyan, who was (or held the office of) the tiruppallittongal under Ulagudaiyapirattiyar, the queen of Rajadhirajadeva .."

இக்குறிப்புப்படி,  திருப்பள்ளித்தொங்கல் என்பது ஒரு பதவியைக்குறிக்கும் பெயர் என்றும் திருப்பள்ளித்தொங்கலுடையான் என்பது அப்பதவியைக் கொண்டவன் என்பதும் பெறப்படும்.  சோழப்பேரரசில் பெருந்தன அதிகாரிகள் இருந்தனர். பெருந்தனம் என்பது பெருந்தரம் என்றும் மாறி வழங்கும். அது, சோழ அரசாங்க உயர் அலுவலர்களின் வகை என்று கல்வெட்டுச் சொல்லகராதி கூறுகிறது.

ஆனால், “திருப்பள்ளித்தொங்கல்” என்பதற்குக் கல்வெட்டுச் சொல்லகராதி, ”சுவாமியின் குடை” என்று பொருள் கூறுவதோடு அப்பொருளுக்குச் சான்றாக அல்லது எடுத்துக் காட்டாகக்  கீழ்க்கண்ட கல்வெட்டு வரியைச் சுட்டுகிறது.

“திருப்பள்ளித்தொங்கல் பிடிக்கும் ஆளுக்கு உள்படுவான் ஒருவனுக்குப் பங்கு ஒன்றும்”  -  SII vol-II, 66

அதே அகராதியில்,  “திருப்பள்ளித்தொங்கல் உடையாந்”    என்பதற்கு “(அரசன்) குடையைத் தாங்குபவன்”  என்று குறிப்பிட்டு, எடுத்துக்காட்டாகக் கீழ்க்கண்ட கல்வெட்டு வரியைச் சுட்டுகிறது.

“எயினங்குடையான் ஆன மூத்த வகைத் திருப்பள்ளித்தொங்கலுடையாந்  சிந்தாமணி சங்கரன்”

கல்வெட்டுச் சொல்லகராதியின் அடிப்படையில் திருப்பள்ளித்தொங்கலுடையான்  என்னும் சொல்லின் பொருள் முரண்படுகிறது.

திருப்பள்ளித்தொங்கல் என்பது குடையைக் குறிக்கும் என்றால் -  அது இறைவனுக்கானது எனினும் அரசனுக்கானது எனினும் - அது ஓர் உயர் நிலைக் குறியீடு.  ஒரு பெருமைச் சின்னம்.  இறைவன், அரசன்,  சமயத்தலைவர், பெருந்துறவிகள்  ஆகியோருக்குக் கையில் பிடித்துக்கொள்ளும் கோல் ஒரு சிறப்பு அல்லது பெருமைக்குரிய அடையாளமாய் அமைவது போலக் குடையும் சிறப்புக்குரியது. குடையைப் பயன்படுத்தும் சிறப்பு உரிமையை ஓர் அரசன் தன்னுடைய பெருந்தரத்து அதிகாரிக்கும் வழங்குதல் மிக இயல்பான ஒரு நடைமுறையாய்ப் பண்டு இருந்திருக்கக்கூடும். பல்லக்கு வைத்துக்கொள்ளும் உரிமை, யானை அல்லது குதிரை மேல் ஊர்வலமாகப் போதல், அனுமக் கொடி வைத்துக் கொள்ளும் உரிமை போன்ற சிறப்புரிமைகள் பற்றிய வரலாற்றுக் குறிப்புகள் உள்ளன. வலங்கை-இடங்கை  முரண்பாடு காரணமாகப் போராடிய கண்மாளர்கள் தாங்கள் போகுமிடங்களுக்குச் செருப்பணியலாம் என்பதும், தங்கள் வீடுகளுக்குச் சாந்து பூசிக்கொள்ளலாம் என்பதும், நன்மை தின்மைக்கு இரட்டைச் சங்கு ஊதிக்கொள்ளலாம் என்பதும்  அரசன் வழங்கிய உரிமைகள் எனக் கல்வெட்டுகள்  கூறுவதைக் காண்கிறோம். இந்த அடிப்படையில், கல்வெட்டில் குறிக்கப்பெறும் பெருந்தனத்து அதிகாரி அரசனால் குடை வைத்துக்கொள்ளும் உரிமையைப் பெற்றவன் என்று பொருள் கொள்ளலாம்.

சோழர் கைக்கொண்ட பாண்டி மண்டலம் முழுதும் இராஜராஜப் பாண்டி நாடு என்று வழங்கினாலும், பாண்டி நாட்டின் தென்கோடிப்பகுதி இராஜராஜத்தென்னாடு என்று வழங்கியதாகக் கல்வெட்டு குறிக்கிறது.  குமரிப்பெருஞ்சாலைக்கு உப்பு வழங்குதல் மீண்டும் தொடரக் கொடுக்கப்பெற்ற அரசாணை, இராஜராஜத் தென்னாட்டில் இருந்த எல்லா உப்பளங்களுக்கும் பொறுப்பேற்று வரி விதித்த நிர்வாக அதிகாரிகளான “கூறு செய்வார்”  மற்றும் உப்பளங்களை மேலாண்மை செய்த “கண்காணி செய்வார்”  ஆகியோருக்கு அளிக்கப்பட்டது.

உப்பு அளத்தல் - பண்டைய வழக்கம் - கையுறை

நெல் போன்ற தானியங்களையும், உப்பு போன்ற பொருள்களையும் முகத்தல் அளவுக் கருவிகொண்டு அளக்கும்போது,  ஒவ்வொரு முறையும் அளந்ததன் எண்ணிக்கையை வாயால் உரக்கச் சொல்லி அளத்தல்  வழக்கமாய் இருந்தது. ஒரு குறிப்பிட்ட  எண்ணிக்கையை எட்டியதும்,  அளக்கப்படும் பொருளின் ஒரு கைப்பிடி அளவு தனியே அருகில் வைக்கப்படும். திருச்சி, தஞ்சை போன்ற இடங்களில் இவ்வழக்கம் இன்றும் ந்டைமுறையில் உண்டு என்பதாக, கோபிநாத ராவ் அவர்கள் குறிக்கிறார். எடுத்துக்காட்டாக, மரக்கால் கொண்டு நெல் அளக்கையில்,  ஒவ்வொரு மரக்கால் அளவுக்கும் ஒன்று, இரண்டு என எண்ணிக்கொள்வதும், குறிப்பாக அறுபது மரக்கால்கள் எண்ணி முடியும்போது ஒரு கைப்பிடி அளவு நெல்லைத் தனியே குவித்து வைத்து அடையாளப்படுத்துவது இன்றும் காணுகின்ற வழக்கம். இவ்வகையில்,  கைப்பிடி நெல்லின் எண்ணிக்கை,  நெல்லின் பெருங்கொள்ளளவினை எளிதில் கணக்கிட உதவும். இந்த ஒரு கைப்பிடி அளவு, கை-உறை (கையுறை)  என்னும் பெயரால் குறிக்கப்படுகிறது. நெல் அளப்பவர், அறுபது மரக்கால்கள் அளந்ததும் “அறுபதுக்கு உறை”  என்று உரக்கச் சொல்வார்.

குமரி உப்பளத்திலும் கையுறை


குமரி உப்பளங்களிலும்  மேற்படி அளக்கும் முறையும் கையுறை உப்புக் குவித்தலும் வழக்கத்தில் இருந்ததைக் கல்வெட்டு குறிக்கிறது.  “கலத்துவாய் நாழி கைய்யுறை கொண்டு”  எனக் கல்வெட்டில் வரும் தொடரைக் காண்கஇங்கே, கைப்பிடி அளவு உப்பு தனியே வைக்கப்படவில்லை. ஒரு கலத்துக்கு ஒரு நாழி அளவு உப்புகையுறையாகத் தனியே வைக்கப்படுகிறது. (நாழி என்பதைச் சென்ற நூற்றாண்டில் புழக்கத்திலிருந்தபடிஅளவாகக் கருதலாம்). எட்டு நாழி கொண்டது ஒரு மரக்கால்; பன்னிரண்டு மரக்கால் கொண்டது ஒரு கலம்எனவே, கையுறையாக வைத்த உப்பின் அளவு ஒரு விழுக்காடு எனலாம். ஒரு கலத்துக்கு ஒரு நாழி என்னும் பொருளைக் கல்வெட்டின் “கலத்துவாய் நாழிஎன்னும் தொடர் சுட்டுகிறது. 


ஒரு கலத்துக்கு ஒரு நாழி என்னும் கையுறை உப்பு முன்பு வழங்கப்பட்டதைப் போலவே இப்போதும் வழங்கப்படவேண்டும் என்று அரசாணை அறிவிப்பதன் மூலம் உப்பு விளைச்சலின் மிகுதியை அறியலாம். 


சென்ற நூற்றாண்டில் இக்கல்வெட்டை ஆய்வு செய்த கோபிநாத ராவ் அவர்கள், அக்காலகட்டத்திலேயே மணற்குடி, உப்பு விளைச்சலில் ஒரு பெரும் மையமாகத் திகழ்ந்தது என்று குறிப்பிடுகிறார். மணற்குடி, திருவாங்கூர் மாநிலத்தில் அகத்தீசுவரம் வட்டத்தில் அமைந்திருந்தது.

மதுராந்தகம் – செய்யூர் உப்பளம்

மதுராந்தகம் வட்டத்தில் செய்யூர் என்னும் ஊரில் தொண்ணூறு உப்பளங்கள் இருந்ததாக இவ்வூர் வால்மீகநாதர் கோயில் கல்வெட்டு (A.R. 445/1902) குறிப்பிடுகிறது. கல்வெட்டின் காலம் இரண்டாம் குலோத்துங்கனின் நான்காம் ஆட்சியாண்டான கி.பி. 1137-ஆம் ஆண்டாகும். செய்யூரின் சிறப்புப்பெயர் ஜயங்கொண்ட சோழநல்லூர் என்பதாகக் கல்வெட்டு குறிக்கிறது. இவ்வூர்ச் சபையினர் மேற்படிக்கோயிலுக்கு நிவந்தமாக இவ்வூர் உப்பளங்களில் விளைந்த உப்பில் உப்புப்பிடியாக வைத்த உப்பினைக் கொடையளிக்கின்றனர்.  இக்கல்வெட்டில் வருகின்ற “உப்புப்பிடி”  என்பது குமரிக் கோயில் கல்வெட்டில் உள்ள “கையுறையைக் குறிக்கும்.  தொண்ணூறு உப்பளங்கள் இருந்தமையால் மதுராந்தகப் பகுதி உப்பு உற்பத்தியில் பெரிய வணிக மையமாகத் திகழ்ந்தமை கண்கூடு. உப்பு விளைச்சலைக் கல்வெட்டு “உப்புப் படுத்தல்என்பதாகக் குறிக்கிறது. விளைச்சலில் சிறிதளவு, பரதேசிகளுக்கு விலையில்லாமல் அளிக்கப்பட்டது.  மற்றுள்ளது காசுக்கு விற்பனை செய்யப்பட்டது. கல்வெட்டு இதனைக் காசுக்குக் கொண்டார்என்று குறிப்பிடுகிறது. இவர்கள் உப்பு கொள்முதல் செய்த வணிகர் ஆகலாம்.  கல்வெட்டின் வரிகள் சில:

“1 ஸ்வஸ்திஸ்ரீ குலோத்துங்க சோழதேவற்கு யாண்டு நாலாவது செய்யூரான ஜயங்கொண்ட சோழநல்லூர் ஊரோம் இவ்வூர் தேவ
2 ர்களுக்குத் திருப்படி மாற்றுக்கு உடலாக இவ்வூர் உப்புப் படுக்கும் அளம் தொண்ணூற்றிலும் உப்புப்படுத்த அளங்களில்ப் பரதேசிகளுக்கும் மற்
3 றும் காசுக்குக் கொண்டார்க்கும் அளந்து முற்ப்பட்ட உப்பில் உப்புப்பிடி வைத்த பரிசாவது வேளூரளத்தில் ………
                                

வடமுட்டைகால் அளம், தென்முட்டைகால் அளம், தெற்குத்தாங்குவான் அளம், கங்கைகொண்டான்கால் அளம், தெற்கிற்பெரிய அளம், கங்கைகொண்ட சோழப் பேரளம்  ஆகிய பல உப்பளங்களின் பெயர்கள் கல்வெட்டில் குறிக்கப்படுகின்றன.

ஆந்திரம்-குண்டூர்-பாபட்லா தமிழ்க் கல்வெட்டில் உப்பளம்

முதலாம் இராசராசன் காலத்தில் சோழரின் ஆட்சி கருநாடகம், ஆந்திரம் ஆகிய மாநிலங்களில் தமிழகத்தை ஒட்டியிருந்த பகுதிகள் வரை பரவியிருந்தது. அவ்வகையில், குண்டூர் மாவட்டமும் சோழர் ஆட்சியில் இருந்துள்ளது என்பதை அறிகிறோம். இம்மாவட்டத்தில் பாபட்லா என்னும் ஊரில் பாவநாராயணர் கோவில் என்னும் விண்ணகரம் அமைந்துள்ளது. அங்குள்ள சோழர் காலக் கல்வெட்டு உப்பளத்தைப் பற்றிக் கூறுகிறது. இக்கல்வெட்டு தமிழ் மொழியில் தமிழ் எழுத்துகளில் பொறிக்கப்பட்டுள்ளது.  கல்வெட்டின் காலம் முதலாம் குலோத்துங்கனின் நாற்பத்திரண்டாம் ஆட்சியாண்டான கி.பி. 1112 ஆகும். இக்கோயிலில் சோழர் காலக் கல்வெட்டுகள் இருபத்தைந்து உள்ளன. (SII-Vol VI) அவை கீழ்வருமாறு:

சோழ அரசன்                               காலம்                மொழி                    எண்ணிக்கை
                                                                                    

முதலாம் குலோத்துங்கன்      1107-1113             தெலுங்கு                              2
முதலாம் குலோத்துங்கன்      1107-1113             தமிழ்                                       2
இரண்டாம் குலோத்துங்கன்   1136-1149            தெலுங்கு                             10
இரண்டாம் இராஜராஜன்          1150-1168            தெலுங்கு                             10
பெயரில்லை                    …………                           தமிழ்                                       1

தமிழ்க் கல்வெட்டுகள் வாயிலாக அறியப்படும் செய்திகளாவன:

பாபட்லா (BHAPATLA)

குண்டூர் (GUNTUR) மாவட்டத்தில் உள்ள ஊர் பாபட்லா. பாபட்லா என்பது தற்போதைய பெயர்.  முதலாம் குலோத்துங்கனின் கி.பி. 1107-ஆம் ஆண்டுக் கல்வெட்டில் இவ்வூரின் பெயர் “படுவிறேவான பிரமபள்ளி”  என்று குறிக்கப்படுகிறது. ஊரின் இயற்பெயர் படுவிறேவு என்றும் சிறப்புப்பெயர் பிரமபள்ளி என்றும் அறிகிறோம். தமிழகத்தில் சோழர் கைக்கொண்ட தொண்டை மண்டலம் ஜயங்கொண்ட சோழமண்டலம் என்றும், பாண்டிய நாடு இராஜராஜப் பாண்டி மண்டலம் என்றும், தமிழகம் அல்லாத கருநாடக மைசூர்ப் பகுதி முடிகொண்ட சோழ மண்டலம் என்றும் வழங்கியதுபோல் சோழர் கைக்கொண்ட ஆந்திரப் பகுதி “குலோத்துங்கசோழ மண்டலம்என்று வழங்கியது.  சோழநாட்டுப் பிரிவுகளைப்போல் ஆந்திரத்திலும் வளநாடு, நாடு ஆகிய நிருவாகப் பிரிவுகள் இருந்துள்ளன. குண்டூர்ப் பகுதி உத்தமசோழ வளநாட்டுப் பிரிவில் கம்பை நாட்டில் அமைந்திருந்தது.  (தெலுங்குக் கல்வெட்டுகளில், நாட்டுப்பெயர் கம்ம நாடு என்றும், ஊர்ப்பெயர் பிரேம்பள்ளி என்றும் குறிக்கப்பெறுகின்றன; பதின்மூன்றாம் நூற்றாண்டின் இறுதியில் இவ்வூர் பாவபட்டு என்று வழங்கியுள்ளது).    

தற்போது பாவநாராயணர் (BHAVA NARAYANA) என்னும் பெயருடைய இறைவர், மேற்படி கல்வெட்டுக் காலத்தில் பாவதேவாழ்வார் என்னும் பெயரால் அழைக்கப்பட்டார். கோயிலில் உணவளிக்கும் கொடைக்காக (சாலாபோகம் என்னும் நிவந்தம்) இராஜராஜன் மாடை என்னும் பெயருடைய காசு முப்பது அளிக்கப்பட்டது. கொடை அளித்தவர் சோழ அரசில் பெரும்பதவியில் இருந்த முடிகொண்டசோழப் பிரமமாராயர் என்பவர் ஆவார். முப்பது மாடைக்காசுகளைப் பெற்று நிவந்தத்தை நிறைவேற்றும் பொறுப்பை ஏற்றுக்கொண்டவர்கள் கோயிலின் பொறுப்பதிகாரிகளான பதிபாதமூலத்தார், பட்டுடையார், பஞ்சாசாரியார், தானத்தார் ஆகிய தேவகன்மிகள் ஆவர். இவர்களில், கோயில் கருவூலத்தின் பொறுப்பேற்ற  பண்டாரியும் ஸ்ரீவைஷ்ணவக் கண்காணியும் அடங்குவர். கோயிலின் கருவூலம் சோழர் காலத்தில் ஸ்ரீபண்டாரம் என்று வழங்கிற்று. அதன் நிருவாக அலுவலர் பண்டாரி (பண்டாரம் என்னும் மாற்றுச் சொல்லும் உண்டு) எனப்பட்டார். பதவிப்பெயரான பண்டாரி (பண்டாரம்)  பின்னாளில் ஒரு குடிப்பெயராகவும், சாதிப்பெயராகவும் மாற்றம் பெற்றது.

இன்னொரு தமிழ்க்கல்வெட்டு,  கோயில் இறைவரைப் பாவநாராயண ஆழ்வார் என்று குறிக்கிறது. இப்பகுதியில் திருவகம்படி என்னும் ஊர் இருந்துள்ளமை கருதத்தக்கது.

முதலாம் குலோத்துங்கனின் உப்பளம் பற்றிய கல்வெட்டின் செய்திகள்

இக்கல்வெட்டு, பாபட்லா ஊரைப் படுவூறேவான இராஜமாணிக்கபுரம் என்று குறிப்பிடுகிறது. இங்கு முதலாம் இராஜராஜன் பெயரால் “அருமொழிதேவப் பேரளம்”  என்ற பெரிய உப்பளம் இருந்துள்ளது. இங்கு உப்பு எடுத்தலை “அளம் செய்தல்”  என்று கல்வெட்டு குறிக்கிறது. இந்த அளத்தின் நிலத்தில் சிறிது நிலம் கடல் கொண்டதால், உப்புப் படுத்தும் மாற்று இடமாகக் கோயிலின் தேவதான நிலத்தில் ஒரு பகுதியைத் தேர்வு செய்து அதற்கு சோழன் சக்கரப்பேரளம்”  என்று பெயரிடுகிறார்கள். இப்பகுதியில், சிறிய அளவில் கடல் நீரால் நிலம் அழிந்தமை அறிகிறோம். உப்பள நிலம் கோயிலுக்குரியதாகையால், உப்பு விளைச்சலில் இருபதில் ஒரு பங்கு கோயில் ஸ்ரீபண்டாரத்துக்குச் செலுத்தவேண்டும்.  முன்பு அருமொழிதேவப் பேரளத்தில் உப்புச்செய்து வருகின்ற ஆள்கள் புது நிலத்திலும் வேலை செய்யலாம்.


                                        பாபட்லா -  உப்பளம் பற்றிய கல்வெட்டு-பகுதி-1
நிலம் கடல் கொண்டமை-கல்வெட்டில்  குறிப்பு

கல்வெட்டு குறிப்பிடும் “விலைக்குக் கொள்ளும் சாத்தவர்”  என்பவர், உப்பை விலைக்கு வாங்கி விற்பனைக்குக் கொண்டு செல்லும் வணிகர் என்பது தெளிவு. வணிகப்பண்டங்களைக் கொண்டுசெல்லும் வணிகர் குழு “சாத்து”   என்னும் பெயரால் வழங்கிற்று. உமணர் (உப்பு வணிகர்) குழுவாகச் செல்வதைச் சங்க இலக்கியமான அகநானூறு “உமண் சாத்துஎன்று குறிப்பிடுகிறது (அகம்-119).  வணிகப்பண்டங்களைக் கழுதைகளின் மேல் ஏற்றிச் செல்வதைப் பெரும்பாணாற்றுப்படை “கழுதைச் சாத்து”  என்று குறிப்பிடுகிறது. எனவே, கல்வெட்டு சாத்தவர்என்று குறிப்பது உப்பு வணிகரையே.


                                     பாபட்லா -  உப்பளம் பற்றிய கல்வெட்டு-பகுதி-2
சாத்தவர் - உப்பு வணிகர் - கல்வெட்டில் குறிப்பு


கோயிலில் பிராமணர்க்கு உணவு அளிக்கும் சாலை இருந்துள்ளது. இது அக்ரசாலை எனப்படும். (அக்ரம்-agra- =உணவு). இக்கோயில் சாலையில் உணவளித்தலைக் கல்வெட்டு, “திருவக்ரம்என்று குறிக்கிறது. இதற்கான பொன் முதலீட்டிலிருந்து பெறப்படும் பன்னிரண்டு கலம் (நெல்?) குலோத்துங்கசோழனின் பிறப்பு நாள் (நட்சத்திரம்) பூசத்தன்று “சாலை உண்கைக்குப் பயன்பட்டது. கோயிலுக்குச் சேரவேண்டிய உப்பு கோயிலின் கருவூலமான ஸ்ரீபண்டாரத்தில் செலுத்தப்படவேண்டும். மேற்படி நிவந்தச் செயல்பாடுகள் அனைத்தையும் தானத்தார், தேவகன்மிகள், ஸ்ரீவைஷ்ணவக் கண்காணிகள் ஆகியோர் கண்காணித்து வருவார்கள்.

முடிவுரை

பண்டைய நாளில் உப்பு, நெல்லுக்கு நேரான ஒரு பண்டமாகவும், மிகப்பெரிய வணிகப்பண்டமாகவும் விளங்கியது என்றும், உப்பளங்களுக்கு அரசர்களின் பெயரிட்டு வழங்கியமை அரசு வருவாய் அடிப்படையில் உப்பளங்களின் முதன்மையைக் காட்டுகிறது என்றும், கோயில் நிருவாகத்துக்கென கோயில் கூறு செய்வார் என்பவர் இருந்தது போலவே, உப்பளங்களுக்கு வரி விதித்து நிருவாகம் செய்யக் கூறு செய்வாரும், மேலாண்மை செய்யக் கண்காணி செய்வாரும் பணியில் இருந்தனர் என்றும், சமூக மரபில் உப்பு அளக்கின்ற “கையுறை”  என்னும் வழக்கு இருந்துள்ளது என்றும், கடலை ஒட்டி அமைந்திருந்த உப்பள நிலங்கள் சில போது கடல் நீரால் அழிந்துபோதலும் நிகழ்ந்தது என்றும், பல நகரங்கள் உப்பு வணிகப் பெருமையங்களாகத் திகழ்ந்தன என்றும், கல்விப் பெருஞ்சாலைகளின் பயன்பாட்டுக்கு உப்பளங்களிலிருந்து உப்பு விலையின்றி வழங்கப்பட்டது என்றும் பல்வேறு செய்திகளைக் கல்வெட்டுகளின் வாயிலாக அறிகிறோம்.









துரை.சுந்தரம், கல்வெட்டு ஆராய்ச்சியாளர், கோவை.
அலைபேசி : 9444939156.