மொத்தப் பக்கக்காட்சிகள்

செவ்வாய், 27 மார்ச், 2018

தஞ்சைப் பெரியகோயில் கல்வெட்டுகள்-2

தமிழ்நாடு சுற்றுலாத் துறையின் இணையதளத்தில்தஞ்சைப்பெரியகோயிலில் உள்ள கல்வெட்டுகளின் சில படங்கள் அழகுற வெளியிடப்பட்டிருந்தனகல்வெட்டு எழுத்துகளைச் சிற்பிகள் வடித்ததில் இருந்த அழகும்தெளிவும் கல்லின் சிவப்பு வண்ணப் பின்னணியில் பொலிந்தனகல்வெட்டு எழுத்துகளில் பயிற்சி இல்லாதவர்கள் கூடப் படங்களைப் பார்த்துக்கொண்டே படித்துவிடக்கூடும்ஒரு பன்னிரண்டு ஒளிப்படங்களில் உள்ள எழுத்துப்பொறிப்புகளின் பாடங்களை அவற்றில் உள்ள வரிகளின்படி தந்துள்ளேன். (சற்றே படத்தைப் பெரிதுபடுத்திப் பார்க்க). கண்டும் படித்தும் மகிழ்க:

குறிப்பு:  அடைப்புக்குறிக்குள் காட்டப்பட்ட எழுத்துகள் படத்தில் காணப்படாவிட்டாலும்கல்வெட்டில் உள்ளவையேபொருள் எளிதில் விளங்கவேண்டி இங்கே காட்டப்பட்டுள்ளன.





கல்வெட்டின் பாடம்:
1    (த)னக்கேய் உரிமை பூண்டமை மநக்கொளக் காந்த(ளூர்)
2    ம் முரட்டெழில் சிங்களர் ஈழமண்டலமும் இ
3    (எ)ல்லாயாண்டுந் தொழுதக விளங்கும் யாண்டேய்
4    திருக்கற்றளி ஸ்ரீராஜராஜீச்0வரம் உடைய பரம(ச்0வாமி)
5    (நத்)தமும் ஸ்ரீகோயில்களுங் குளங்களும் ஊடறுத்துப் போன வ
6    (ராஜகேஸரியோ)டொக்கும் ஆடவல்லானென்னும் மரக்காலால் அளக்க க(டவ)
7    பள்ளியுங் கணிமுற்றூட்டும் உட்பட அளந்தபடி
8    ங் கம்மாணசேரியும் பறைச்சேரியும் சுடுகாடு
9    (க)லம் நூற்று ஒருபத்து ஐஞ்சேய் எழு மாவரை முந்

குறிப்பு: சிவப்பு வண்ண எழுத்துகள் கிரந்தம்.


சிறு விளக்கங்கள்:
முதல் மூன்று வரிகள் இராசராசனின் மெய்க்கீர்த்தி வரிகள். அரசனை அறிமுகப்படுத்தும் புகழுரை. தமிழகம் முழுதும் ஆண்ட பெருநிலத்துக்குரிய கோ. இவனுடைய ஆட்சி நிலம் திருமகளுக்கு ஒப்பிடப்படுகிறது. மெய்க்கீர்த்தி வரியில்,

“திருமகள் போலப் பெருநிலச்செல்வியுந் தனக்கே உரிமை பூண்டமை”  என வரும்.
முதல் வரியில் காணப்படும் “காந்தளூர்”  என்பது “காந்தளூர்ச் சாலைக் கலமறுத்தறுளி”  என்னும் மெய்க்கீர்த்தி வரியின் ஒரு பகுதி. இராசராசன்  முதலில் ஆற்றிய வீரச் செயல் காந்தளூர் சாலையைப் படைகொண்டு சீரமைத்ததுதான்.  பெரியகோயில், ஸ்ரீராஜராஜீச்0வரம் என்று, இராஜராஜனின் பெயரில் குறிக்கப்படுகிறது. கோயில் கல்லால் எழுப்பப்பட்ட கோயில்; எனவே, திருக்கற்றளி (கல்+தளி -> கற்றளி. தளி=கோயில்). இறைவன், பரமச்0வாமி என்று குறிக்கப்படுகிறார். இராசராசன், பெரிய கோயிலுக்குக் கொடையாகச் சில தேவதான ஊர்களைத் தருகிறான். அவற்றின் வருவாய், கோயிலுக்குரியவை. இக்கொடை ஊர்களில், வரி நீக்கம் செய்யப்பட்ட பகுதிகள் வருவாய்க்குள் அடங்கா. எனவே, அவை கோயில் கணக்கில் சேரா. அத்தகைய பகுதிகள் யாவை எனக் கல்வெட்டில் குறிப்புகள் உள்ளன. அவற்றைக் கல்வெட்டில் “இறையிலி” எனக்குறிப்பர். இக்கல்வெட்டில் அவ்வாறு குறிக்கப்பெறும் பகுதிகளாவன:  நத்தம் (குடியிருப்புக்கான நிலம்), ஸ்ரீகோயில்கள் (ஊரிலுள்ள மற்ற கோயில்கள்-சேட்டையார் கோயில், பிடாரியார் கோயில், ஐயனார் கோயில் போன்றவை), குளங்கள், வாய்க்கால்கள். அதுபோலவே, ஊர் வருவாய்க் கணக்கில் சேராதவை, பள்ளி (சமண, பௌத்தப் பள்ளிகள்), கம்மாணசேரி (கம்மாளர் குடியிருப்பு), பறைச்சேரி (பறையர் குடியிருப்பு), கணிமுற்றூட்டு (பஞ்சாங்கம் சொல்பவர்க்குக் கொடுக்கப்பட்ட மானிய நிலம்), சுடுகாடு ஆகியன.

கோயிலுக்கு இவ்வளவு கலம் நெல் அளக்கவேண்டும் என்னும் குறிப்பும் கல்வெட்டில் கூறப்படுகிறது. நெல் அளக்க ராஜகேஸரி”,  “ஆடவல்லான்”  என்னும் பெயரில் இரண்டு வகை மரக்கால்கள் (அளவைக் கருவிகள்) வழக்கில் இருந்தன. ஒன்று இராசராசனின் பெயரிலும், மற்றது இறைவன் பெயரிலும் வழங்கியமை கருதத்தக்கது. சிதம்பரம் நடராசர் மேல் மிகுந்த பற்றுடைய இராசராசன், “ஆடவல்லான்” என்னும் பெயரை மரக்காலுக்கு இட்டது குறிப்பிடத்தக்கது. ஆடவல்லானின் செப்புத்திருமேனிகளை மிகுதியாகச் செய்தமை சோழர் காலத்தில்தான்.

  
----------------------------------------------------------------------------------
துரை.சுந்தரம், கல்வெட்டு ஆராய்ச்சியாளர், கோவை.
அலைபேசி : 9444939156.

செவ்வாய், 20 மார்ச், 2018

தஞ்சைப்பெரிய கோயில் கல்வெட்டுகள்-1

தமிழ்நாடு சுற்றுலாத் துறையின் இணையதளத்தில், தஞ்சைப்பெரியகோயிலில் உள்ள கல்வெட்டுகளின் சில படங்கள் அழகுற வெளியிடப்பட்டிருந்தன. கல்வெட்டு எழுத்துகளைச் சிற்பிகள் வடித்ததில் இருந்த அழகும், தெளிவும் கல்லின் சிவப்பு வண்ணப் பின்னணியில் பொலிந்தன. கல்வெட்டு எழுத்துகளில் பயிற்சி இல்லாதவர்கள் கூடப் படங்களைப் பார்த்துக்கொண்டே படித்துவிடக்கூடும். ஒரு பன்னிரண்டு ஒளிப்படங்களில் உள்ள எழுத்துப்பொறிப்புகளின் பாடங்களை அவற்றில் உள்ள வரிகளின்படி தந்துள்ளேன். (சற்றே படத்தைப் பெரிதுபடுத்திப் பார்க்க). கண்டும் படித்தும் மகிழ்க:

குறிப்பு:  அடைப்புக்குறிக்குள் காட்டப்பட்ட எழுத்துகள் படத்தில் காணப்படாவிட்டாலும், கல்வெட்டில் உள்ளவையே. பொருள் எளிதில் விளங்கவேண்டி இங்கே காட்டப்பட்டுள்ளன.


கல்வெட்டுப் பாடம்
1  று கழஞ்சரை ஒட்டுவட்டில் ஒன்று பொ(ன்)...........
2  (ஒ)ன்று பொன் இருநூற்றுத்தொண்ணூ(ற்).....
3  (ண்)ணூற்று எழு கழஞ்சேய் கால் - கல(சப்பானை)...
4  (கழஞ்)சேய் கால் வெண்சாமரைக்கைய் ...
5  (பொற்)பூ ஒன்று பொன் ஐங்கழஞ்சாகத் திரு....
6  (தி)ருப்பொற்பூ ஆறிநால் பொன் இருப(த்)...
7  (பொ)ற்பூ மூன்றிநால் பொன் பதிநாற்க(ழஞ்சு)

சிறு விளக்கங்கள்;
ஒட்டுவட்டில் - ஒரு குழிவுப்பாத்திரம்
வெண்சாமரைக்கைய் -  சாமரம் என்னும் விசிறியின் கைப்பிடி (பொன்னால் செய்யப்பட்டதாகலாம்).
பொற்பூ - பொன்னாலான பூ
கழஞ்சு - பொன்னின் எடை. 
ஒரு கழஞ்சு = 20 மஞ்சாடி = 40 குன்றி(மணி) = 4.4 கிராம்
கழஞ்சரை = தற்கால வழக்கில் ஒன்றரைக் கழஞ்சு எனக் கூறுகிறோம். சோழர் காலக்கல்வெட்டுகளில் முழு எண்களுக்கும் “கழஞ்சு” என்னும் எழுத்துத் தொடருக்கும் பிற்பகுதியில் பின்னக் குறிப்பு இடம்பெறும். எனவே கழஞ்சரை. இதுபோலவே, ஐந்தரைக் கழஞ்சு என்பது ஐங்கழஞ்சரை என எழுதப்படும்.

(தொடரும்)
------------------------------------------------------------------
துரை.சுந்தரம், கல்வெட்டு ஆராய்ச்சியாளர், கோவை.
அலைபேசி : 9444939156.

சனி, 17 மார்ச், 2018

திப்பு சுல்தானும் மதச்சார்பின்மையும்

முன்னுரை
அண்மையில் நவம்பர், 10 (2017) தேதியிட்ட “தி இந்து”  நாளிதழில், “திப்பு சுல்தான்: மதச்சார்பின்மையின் மகத்தான முன்னோடி”  என்னும் பெயரில் செல்வ புவியரசன் என்பவர் ஒரு கட்டுரை எழுதியிருந்தார். “கருத்துப்பேழை” என்னும் பகுதியின் கீழ் வந்திருந்த இக்கட்டுரையில், திப்பு சுல்தான் நஞ்சன்கூடு கோயிலில் கொடுத்த மரகதலிங்கமும், மேல்கோட்டை நரசிம்மர் கோயிலில் கொடுத்த முரசும் இன்றும் பார்வைக்கு இருக்கின்றன எனக் குறிப்பிட்டிருந்தார். அக்கொடைகளின் கல்வெட்டுச் சான்றுகள் உள்ளனவா எனத் தேடியதில், “எபிகிராஃபியா கர்நாடிகா”  என்னும் கல்வெட்டுத் தொகுதியில் சில செய்திகள் கிடைக்கப்பெற்றன. அவற்றின் பகிர்வு இங்கே.





நஞ்சன்கூடு-நஞ்சுண்டேசுவரர் கோயில்
நஞ்சன்கூடு கோயில் கல்வெட்டுகளில், திப்பு சுல்தான் மரகதலிங்கத்தைக் கொடையாக அளித்த செய்தி காணப்படவில்லை. ஆனால், நஞ்சன்கூடு வட்டத்தில், கழலை (கன்னடத்தில் கழலெ”  என்று பயில்கிறது. சொல்லின் முடிவில் தமிழில் ஒலிக்கும் ஐகாரம், சில போது, கன்னடத்தில் எகரமாக ஒலிக்கின்றதைக் காண்கிறோம். எடுத்துக்காட்டாக, கடலை, கடலெ ஆகிறது. மழை, மழெ ஆகிறது) என்னும் ஊரில் உள்ள இலட்சுமிகாந்தர் கோயிலில் இருக்கும் வெள்ளியாலான நான்கு கிண்ணங்களிலும் (silver cups), ஒரு எச்சிற்படிக்கத்திலும் (silver spittoon) இரண்டு வரிகள் கொண்ட எழுத்துப்பொறிப்புகள் உள்ளன.

எழுத்துப்பொறிப்பு: (கன்னட எழுத்துகளில்) க.வெ. எண்: 34/1946

1 டிப்புசுல்தான பாத3சா0ர த3ர்ம
2 . தூக்க க3 84

தமிழில் கீழ்க்கண்டவாறு பெயர்க்கலாம்.

1 திப்புசுல்தான் அரசருடைய கொடை (தன்மம்)
2 எடை 84 க

தமிழில் திப்பு என நாம் ஒலித்தாலும், ஆங்கிலத்தில் ‘டிப்பு’  என்பதாகவே ஒலிக்கப்படுகிறது. இசுலாமியப்பெயர் டிப்பு என்னும் ஒலிப்பில் இருக்கக் கூடும்; எனவே தான், கன்னடத்தில் ‘திப்பு’  எனக் குறிப்பிடாமல் ‘டிப்பு’ என்பதாக எழுதியிருக்கிறார்கள் எனக் கருதலாம்.
  
அடுத்து இன்னொரு கொடைப்பொருள் பெரியதொரு வெள்ளித் தட்டாகும். அதன் எடை 422 க. 

எழுத்துப்பொறிப்பு: (கன்னட எழுத்துகளில்) க.வெ. எண்: 35/1946

1 சுல்தானி பாத3சா0ஹர த4ர்ம
2 . தூக்க க3 422

தமிழில்:
1 சுல்தானி அரசருடைய கொடை (தன்மம்)
2 எடை 422 க

‘பாத3சா0’  என்னும் சொல் ‘Bhadshah’  என்னும் அரபுச் சொல்லின் கன்னடப் பெயர்ப்பு. அரசனைக் குறிக்கும் சொல். பொறிப்பின் இரண்டாவது வரியில் கொடைப்பொருளின் எடை காட்டப்பட்டுள்ளது. எடை என்பதற்குத் ‘தூக்கம்’  என்னும் சொல்லும் தமிழில் வழங்கும். இந்த நல்ல தமிழ்ச் சொல் கன்னடத்தில் இயல்பாய் வழங்குவது குறிப்பிடத்தக்கது. 84 க’ என்பதில் உள்ள ‘க’ என்பது ஓர் எடையின் அளவுப்பெயர். தமிழ்க் கல்வெட்டுகளில் காணப்படும் ‘பலம்’   என்பது போல. தஞ்சைக்கல்வெட்டுகளில், கோயில் கொடைப் பொருள்களான சர்க்கரை, புளி ஆகியன பலம் என்னும் அளவால் குறிக்கப்படுகின்றன.. எச்சிற்படிக்கம் கொடைப்பொருள்களுள் ஒன்றாகக் குறிக்கப்படுகின்றது. வெற்றிலை பாக்கு உண்போர், எச்சிலைத் துப்புதற்காகப் பயன்படுத்துவது எச்சிற்படிக்கமாகும். எச்சிற்படிக்கத்தைக் கோயிலுக்குக் கொடையாக அளிக்கும் வழக்கத்தைத் தமிழகம், கருநாடகம் ஆகிய இரு பகுதிகளின் கல்வெட்டுகளும் உணர்த்துகின்றன. 

மேல்கோட்டை நம்மாழ்வார் கோயில்
மாண்டியா மாவட்டம், மேல்கோட்டையில் உள்ள நம்மாழ்வார் கோயிலில் இரண்டு வெள்ளிக் கிண்ணங்கள் திப்புசுல்தானால் கொடையாக அளிக்கப்பட்டுள்ளன. அவற்றில் காணப்படும் பொறிப்பு கீழ்வருமாறு:

கன்னட எழுத்துகளில்:
1 டிப்புசுல்தான பாத30ஹர த3ர்ம

 தமிழில்:

1 திப்புசுல்தான் அரசருடைய கொடை (தன்மம்)

கொடைப்பொருளின் எடை அளவு இதில் கொடுக்கப்படவில்லை.

மேல்கோட்டை நரசிம்மர் மலைக்கோயில்

மேல்கோட்டை நரசிம்மர் கோயிலில் ஒரு பாறையில் பொறிக்கப்பட்ட கல்வெட்டு கீழ்க்கண்டவாறு உள்ளது:

1 ஸ்ரீ திருநாராய
2 ணஸ்வாமி ந்ருஸிம்ஹ ஸ்வாமிகெ3
3 மாஹெ தா3ரா இ
4 சால ஜலௌ
5 நம்
6 பிஜால்
7 விச்0வாவசு நாம ஸம்வத்ஸரத3 ஆஷாட3 சு0 7 லு
8 நவாப3 டிப்புசுல்தான் பா3ஷாயி அதி3ல்
9 ஆனெ 2 ஹெண்ணானெ 10 ஸ ஸ்ரீரங்கபட்ட
10 ணதிந்த3 ஹுஜூரநாயக்க ஸ்ரீநிவாசாச்சாரி ஹரிகா
11 ரப3க்‌ஷி சஹா மேலுகோட்டெ பாரபதி காசி0ராஉ மீ
12 ரஜைனு உன் முந்திட்டு வபிசி0யிதெ3


மேல்கோட்டை நரசிம்மர் மலைக்கோயிலுக்குத் திப்பு சுல்தான் இரண்டு ஆண் யானைகளையும், பத்துப் பெண்யானைகளையும் கொடையாக அளித்துள்ளார். திப்புசுல்தானின் அரசு அதிகாரி ஹுஜுர் நாயக்கன் என்னும் பதவியிலிருக்கும் சீநிவாசாச்சாரி என்பவரும், ஹரிகார பக்‌ஷி என்னும் பதவியிலிருப்பவரும், கோயில் நிருவாகிகளான (பாரபதி) காசிராவ், மீராஜைனு  ஆகியோரிடம் கொடைப்பொருள்களை ஒப்படைக்கிறார்கள். ஜலௌ நம்பிஜால் என்னும் இசுலாமிய ஆண்டு, தாராய் மாதத்தில் கொடை அளிக்கப்படுகிறது. அதற்கு ஈடான இந்திய ஆண்டு விசுவாவசு. மாதம் ஆஷாடம். நாள், வளர்பிறையில் 7-ஆம் நாள். இதற்கு ஈடான ஆங்கிலத் தேதி ஜூலை 13, 1785 என நூல் குறிப்பு கூறுகிறது.

வரி-3 மாஹெ- மாதத்தைக் குறிக்கும் சொல்லாகலாம்.
வரி-8 திப்பு சுல்தான், நவாப் திப்பு சுல்தான் பாத்ஷா அதில் எனக் குறிக்கப்படுகிறார்.
 வரி-9 ஆனெ=ஆனை=யானை;  ஹெண்ணானெ=பெண் யானை. தமிழில் பெண்,
கன்னடத்தில் ஹெண்  ஆனது.

கோயில் முரசில்-பாரசீக எழுத்துப் பொறிப்பு
மேல்கோட்டை நரசிம்மர் மலைக்கோயிலின் முரசின் மீது பாரசீக எழுத்துப் பொறிப்பு காணப்படுகிறது. அதன் பாடம் ஆங்கில எழுத்துகளில் கீழ்வருமாறு தரப்பட்டுள்ளது.

பாடம்:

Ya-Karrar
2 qita I duam nakkara I  Zafar Ashar Ali
3 baksha nam Sirkar  I hydari
4 Sal I Shita  san 1215 Muhammad wazan Kham
5 haft
6 a(ra)tal si o haft nim dak

கல்வெட்டில் முரசு, நக்காரா எனக் குறிக்கப்படுகிறது. நகரா என்னும் வழக்கு, தமிழகத்தில் பரவலாக வழங்கும் பிறமொழிச்சொல் வழக்காகும். கல்வெட்டில் உள்ள 1215 என்பது  நூல் குறிப்புப்படி மௌலூதி ஆண்டுக்கணக்காகும். அதற்கு ஈடான ஆங்கில ஆண்டு 1786. இது திப்பு சுல்தானின் ஆட்சிக்கால ஆண்டாகையால், இக்கொடை திப்புசுல்தானால் அளிக்கப்பட்டிருக்க வேண்டும் எனலாம். ஆனால், நூலில் கொடுக்கப்பட்டுள்ள விளக்கம், கொடை ஹைதர் அரசின் மேற்பார்வையில் செய்து முடிக்கப்பட்டது என்றும், முரசின் எடை ஏழு அதல் (ராத்தல்) முப்பத்தேழரை த3க் (தா3ங்கு) என்றும் கூறுகிறது. (ராத்தல் என்னும் எடை அளவு 1950-இன் பதின் ஆண்டுகளில் நம் ஊர்களில் பயன்பாட்டில் இருந்துள்ளதை நான் கண்டிருக்கிறேன்).

ஸ்ரீரங்கபட்டணம்-அரங்கநாதர் கோயில்
ஸ்ரீரங்கபட்டணம் அரங்கநாதர் கோயிலில் ஏழு வெள்ளிக் கிண்ணங்களிலும், பஞ்சாரத்தி என்னும் பூசைப் பொருளிலும் திப்பு சுல்தானின் கொடைச் செய்தி பொறிக்கப்பட்டுள்ளது. ஒரு பெரிய கிண்ணத்தில் திப்பு சுல்தானின் கொடைச் செய்தி கீழ் வருமாறு பொறிக்கப்பட்டுள்ளது.

1 டிப்பு சுல்தான பாச்சாரவர த4ர்ம
2 ஸ்ரீகிருஷ்ண

இதிலும் ‘திப்பு’ என்னும் ஒலிப்பு இல்லை; டிப்பு’ என்னும் ஒலிப்பே உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்தப் பொறிப்பில் கூடுதலாக ஸ்ரீகிருஷ்ண’  என எழுதப்பட்டுள்ளது. திப்பு சுல்தான் அளித்த கொடையை மைசூர் அரசரான மூன்றாம் கிருஷ்ணராஜ உடையார் மீண்டும் வழங்கினார் என நூல் குறிப்பு சொல்கிறது. பொறிப்பில் காணப்படும் பாச்சா’  என்னும் சொல், ‘பாத்3ஷா’  என்னும் சொல்லின் கன்னடத் திரிபாகும்.

அடுத்து மூன்று கிண்ணங்களில், ஒரே ஒரு வரிப்பொறிப்பு உள்ளது.

1 டிப்பு சுல்தான பாச்சாரவர த4ர்ம

அடுத்து இன்னும் மூன்று கிண்ணங்களில் இரண்டு வரிகள் எழுதப்பட்டுள்ளன.

1 களுலெ காந்தைய்யனவர சேவெ
2 டிப்புசுல்தான பாச்சாரவர த4ர்ம

தமிழாக்கம் :

1 கழலை என்னும் ஊரைச் சேர்ந்த காந்தைய்யன் என்பவரின் சேவை
2 திப்புசுல்தான் அரசரின் தன்மம்

கொடை காந்தைய்யன் அளித்தது; அது, மீண்டும் திப்பு சுல்தானால் வழங்கப்பட்டது என்பது குறிப்பு. ஏற்கெனவே அளிக்கப்பட்ட கொடையை மீண்டும் வழங்கும் செயல் பற்றிய காரணம் தெரியவில்லை.

அடுத்து, பூசையின்போது பயன்படுத்தப்படும் “பஞ்சாரத்தி”  (பஞ்ச+ஆரத்தி)யில் மூன்று வரிகள் பொறிக்கப்பட்டுள்ளன. அவை,

1 களல காந்தையன சேவெ
2 த3ண்டி3 சஹா தூக்க 167
3 டிப்புசுல்தான் பாச்சாரவர த4ர்ம

தமிழாக்கம் :

1 கழலை என்னும் ஊரைச் சேர்ந்த காந்தைய்யன் என்பவரின் சேவை
2 தண்டோடு சேர்ந்து எடை 167
3 திப்புசுல்தான் அரசரின் தன்மம்

காந்தைய்யன் அளித்த கொடை மீண்டும் திப்புசுல்தானால் வழங்கப்படுகிறது.
  
திப்புசுல்தானின் இறப்பு பற்றிய கல்வெட்டு
திப்பு சுல்தான், தன் தந்தை ஹைதர் அலி கானுக்கு எழுப்பிய மசோலியம் (MAUSOLEUM) என்னும் சமாதி சீரங்கபட்டணத்து வட்டத்தில் க3ஞ்சாம் என்னும் ஊரில் உள்ளது. சமாதியில், திப்புசுல்தானின் இறப்பு பற்றிய ஒரு கல்வெட்டு உள்ளது. மொத்தம் பதிநான்கு வரிகளைக் கொண்ட இக்கல்வெட்டு, பாடல் வடிவில் எழுதப்பட்டுள்ளது. பாரசீகம், அரபு ஆகிய இரு மொழிகளிலும் எழுதப்பட்டுள்ளது. பாரசீகப் பாடல்களை இயற்றியவர்கள் மீர், உசைன், ஷஹீர் ஆகிய மூவர். அரபுப் பாடல்களை இயற்றியவர் சய்யித் ஷைக் ஜஃபரீ என்பவர்.  

கல்வெட்டின் பாடல் வரிகள் கூறுவதை நூலின் பதிப்பாசிரியர் ஆங்கிலத்தில் பெயர்த்து எழுதியுள்ளார். அதன் கருத்துச் சுருக்கம் தமிழில் கீழ்வருமாறு:

“இறைவன் தன் கருணையைப் பெருமைமிகு சுல்தானுக்கு அருளியிருக்கிறான். சுல்தான் ஒரு வீரத் தியாகியாய் வீழ்ந்துபட்டனன். அவனுடைய குருதி இறைவனின் பாதையில் சிந்தியது. எதிர்பாராவண்ணம் இந்த நிகழ்வு ஜிகதா3 மாதத்தில் இருபத்தெட்டாம் நாள் நடந்தேறியது. (ஜிகதா3 மாதம் “தி4கதா3” என்றும் ஒலிக்கப்பெறுகிறது).

மீர் சொல்கிறார் : ஐதரின் மகன் சுல்தான் கொல்லப்படுகின்ற நாளில் இசுலாத்தின் ஒளியும் நம்பிக்கையும் ஒரு சேர இவ்வுலகை விட்டுப் பிரிந்தன. முகம்மதுவின் சமயத்துக்காகவே திப்பு வீழ்ந்தான். அவ்வீரன் உலகிலிருந்து மறைந்த போது ஒரு குரல் கேட்டது-” வாள் மறைந்து விட்டது”.

ஷஹீர் சொல்கிறார் : (இசுலாத்தின்) நம்பிக்கை-நம் யுகத்தின் அரசன் மறைந்தனன்.

திப்பு இறந்த ஆண்டு
திப்பு இறந்த ஆண்டு, இக்கல்வெட்டுப் பாடலில் நேரடியாக எண்களால் குறிக்கப்படாமல், பாரசீக எழுத்துகளுக்கு எண் வடிவம் கொடுத்து எழுதப்படும் ஒரு வாய்ப்பாடு வழியே குறியீடாகக் குறிக்கப்பட்டுள்ளது இக்கல்வெட்டின் சிறப்பாகும். இத்தகைய முறைக்கு ஆங்கிலத்தில் “CHRONOGRAM”  என்பது பெயர். குறியீட்டு முறையில் கல்வெட்டுப் பாடலில் குறிக்கப்பட்ட ஹிஜிரி ஆண்டு 1213 என்பதாகும். ஹிஜிரி ஆண்டு 1213, ஜிகதா3 மாதம், இருபத்தெட்டாம் நாளுக்கு இணையான ஆங்கில நாள் 1799, மே மாதம் 4-ஆம் நாள். 

எழுத்துக் குறியீட்டில் காலக்கணக்கு
இக்கல்வெட்டில் காணப்படுவது போன்ற, குறியீட்டு முறையில் காலக் கணக்கை எழுதும் மரபு நம் நாட்டிலும் வடமொழியாளர்களிடையே உள்ளது. மூன்று வகையான முறைகள் வழக்கத்தில் உள்ளன. அவையாவன:

  1. கடபயாதி3
  2. சித்3த4மாத்ரிகா
  3. பூ4த சங்(க்)யா


கடபயாதி3 முறை
இந்த முறையில், சமற்கிருத உயிர்மெய்எழுத்துகள் ஒரு வடிவத்துள் அமைக்கப்படுகின்றன.

க-ச  வரிசை:    க1   க2   க3   க4   ங    ச1   ச2   ஜ1   ஜ2   ஞ
குறியீட்டெண் :   1    2     3     4    5    6    7     8    9     0


ட-த  வரிசை:    ட1   ட2   ட3   ட4   ண    த1   த2   த3   த4    ந
குறியீட்டெண் :   1     2     3     4    5     6     7     8    9     0

ப வரிசை :       ப1    ப2     ப3     ப4     ம
குறியீட்டெண் :    1     2      3      4      5


சித்3த4மாத்ரிகா முறை
இந்த முறையில் சமற்கிருத உயிர் எழுத்துகள் ஒரு வடிவத்துள் அமைக்கப்படுகின்றன.

அ   ஆ    இ    ஈ     உ    ஊ    ஏ    ஐ    ஓ     ஔ    அம்    அஹ   
 1    2     3    4     5      6     7    8     9      10      11       12


இம்முறையில் பன்னிரண்டு எண்கள் வரை குறிக்கப்படுவதால், பா3ராக2டி3 (Baaraakhadi) எனவும்,  து3வாத3சாக்ஷரி (dvaadasaakshari) எனவும் அழைக்கப்படுவதுண்டு. 

பூ4த சங்(க்)யா முறை
இந்த முறையில், சொற்களுக்கு எண் மதிப்பு அளிக்கப்படும். அதாவது, எண்களோடு தொடர்புடைய சொற்கள் குறியீடாக அமையும். எடுத்துக்காட்டாக, விசும்பு (ஆகாசம்)  ஒன்று.  
கண்கள் (நயனம்)  இரண்டு.
உலகு (லோகம்)   மூன்று.
மறைகள் (வேதங்கள்)  நான்கு.
பொறிகள் (இந்திரியம்) ஐந்து.
காலம் (பருவம்-ருது)  ஆறு.
இசை (ஸ்வரம்)  ஏழு.
மங்கலம் எட்டு
கோள் (கிரகம்)  ஒன்பது.
உரு (அவதாரம்)  பத்து.
உருத்திரர் பதினொன்று.
கதிரவன் (ஆதித்யா)  பன்னிரண்டு.


மேற்படி சொற்குறியீடுகள் இடமிருந்து வலமாகக் காணப்படும். அவற்றுக்கான  எண்களை இடமிருந்து வலமாக எழுதியபின்னர், மற்றொரு முறை வலமிருந்து இடமாக எழுதக் கிடைப்பது நம் இலக்குக்குரிய எண்ணாகும். எடுத்துக்காட்டாக, சக ஆண்டு 1536.  சொற்குறியீட்டில் இது, 

ருது லோகம் இந்திரியம் ஆகாசம்
  6    3        5          1     -> 6351

என்பதாக அமையும். 6351 என்னும் இந்த எண்ணை வலம்-இடமாக மாற்றி எழுத, சரியான சக ஆண்டு (1536) கிடைக்கும்.

நஞ்சன்கூடு இராகவேந்திரர் மடத்தில் பதினாறு செப்புப் பட்டையங்கள் உள்ளன. அவை சமற்கிருத மொழியில் தெலுங்கு எழுத்தில் எழுதப்பெற்றவை. அவற்றில் பலவற்றில் பூ4தசங்(க்)யா முறையில் சக ஆண்டு குறிக்கப்பட்டுள்ளது. ஒரு செப்பேட்டில், கீழ்க்காணும் வரிகளில் சக ஆண்டுக்குறிப்பு வருவதைக்காண்க:

வரி 42  ...சின்ன சவப்பாக்2ய மஹீப தி
வரி 43  லக ஸ்வயம்|  ரித்வக்3நிபா3ணபூ4ஸங்க்யாக3ணிதே
வரி 44 |ச0கஜந்மநா

இதில்,  ரித்வக்3நிபா3ணபூ4  என்பது சக ஆண்டுக்குறிப்பு. இதை,

ரித் வக்3நி பா3ண பூ4  என்று முதலில் பிரித்துப் பின்னர்,
ரிது அக்3நி பா3ண பூ4 என அமைத்துப் பொருள் காணவேண்டும்.

ரிது – பருவம் = 6
அக்3நி – தீ = 3
பா3ண – அம்பு = 5
பூ4 – புவி (பூ4மி) = 1

கிடைக்கப்பெறும் எண் :  6351. வலம்-இடமாக மாற்றி எழுத, சரியான சக ஆண்டு (1536) கிடைக்கும். 

ரிது (ருது) – ஆறு: வசந்த, கிரீஷ்ம, வர்ஷ, சரத், ஹேமந்த, ச்சி.
அக்3நி (தீ) – மூன்று. புறநானூற்றின் இரண்டாம் பாடலில், பொற்கோட்டு இமயத்தில்,

 சிறு தலை நவ்விப் பெருங்கண் மாப்பிணை
அந்தி யந்தணர் அருங்கட னிறுக்கும்
முத்தீ விளக்கிற் றுஞ்சும்

என வரும் வரிகளுக்கு விளக்கவுரை அளிக்கும் ஔவை சு.துரைசாமிப்பிள்ளை அவர்கள், “முத்தீயாவன : ஆசுவனீயம், காருகபத்தியம், தென்றிசையங்கி”  எனக் கூறுவார்.

பூ4 (புவி) ஒன்று என நாம் அறிவோம். ஆனால், பா3ண (அம்பு) ஐந்து யாவை எனத் தெரியவில்லை.  


குறிப்புதவி :
1 எபிகிராஃபியா கர்நாடிகா (EPIGRAPHIA CARNATICAதொகுதிகள்-3, 6.
2 தென்னிந்தியக் கோயில் சாசனங்கள்  தி.நா. சுப்பிரமணியன்.
(SOUTH INDIAN TEMPLE INSCRIPTIONS-By T.N. SUBRAMANIAN)




--------------------------------------------------------------------------------------------------
து.சுந்தரம், கல்வெட்டு ஆராய்ச்சியாளர், கோவை.
அலைபேசி: 9444939156.
மின்னஞ்சல்  : doraisundaram18@gmail.com

ஞாயிறு, 4 மார்ச், 2018

கொங்குநாட்டு நிலத்தியல்
(GEOLOGY OF KONGU  NADU)


முன்னுரை
கோவை வாணவராயர் அறக்கட்டளையினர் மாதந்தோறும் நடத்திவருகின்ற சொற்பொழிவுகள், கொங்கு நாட்டைச் சார்ந்த வரலாறு, தொல்லியல், நிலவளம், மக்கள் கலை ஆகியன பற்றி அமைவன. அவ்வகையில் இம்மாத (ஃபிப்ரவரி”, 2018 )  நிகழ்ச்சியாகக் கொங்கு நாட்டு நிலத்தியல் குறித்து நிலத்தியல் பேராசிரியர் முனைவர். கி.கதிர்வேலு அவர்கள் ஆற்றிய சொற்பொழிவு பற்றிய ஒரு பதிவை இங்கு பகிர்கிறேன். இவர் திருப்பூரைச் சேர்ந்தவர். நிலத்தியல் படிப்பு சென்னையில் மாநிலக் கல்லூரியில் மட்டுமே இருந்த நாள்களில் முதுகலை நிலத்தியல் படித்து முனைவர் பட்டமும் பெற்றவர்.

நிலத்தியல் ஓர் அறிமுகம்
நிலத்தியல் என்பது புவியைப் பற்றிய அறிவியல் என்றாலும், அதன் கீழ் உட்பிரிவுகள் பல உள. கட்டமைப்பு நிலத்தியல்”  (STRUCTURAL GEOLOGY) என்று ஒரு பிரிவு. பாறைகள், அவற்றின் தோற்றம் ஆகியவை பற்றிய அறிவியல் துறை. கனிமவியல் (MINEROLOGY) என்றொரு பிரிவு. கனிமங்களைப் பற்றிக் கூறுவது. இவை போன்று பல்வகைப் பிரிவுகள். புவி (EARTH)  தோன்றி 4567 மில்லியன் ஆண்டுகள் ஆயின என்று கணிக்கப்படுள்ளது. புவியின் தோற்றத்துக்குப் பெருவெடிப்பு (BIG BANG) என்னும் நிகழ்வு காரணமாயிருந்துள்ளது என்று அறிவியலார் கண்டறிந்துள்ளனர். கோள்களின் மோதல்களாலும், விண் கற்களின் மோதல்களாலும் ஏற்பட்ட வெடிப்பின் காரணமாகவே புவி தோற்றம் பெற்றது.

புவி, கதிரவனிடமிருந்து 15 கோடி கிலோ மீட்டர் தொலைவுக்கப்பால் அமைந்துள்ளது. 3476 கி.மீ. விட்டம் கொண்டது. 5 கோடி 10 மில்லியன் சதுர கி.மீ. அளவு  பரப்புக்கொண்டது. புவி தோன்றி 4567 மில்லியன் ஆண்டுகள் ஆயின என்பது அறிவியலாளர்கலின் கருத்து. புவியின் தோற்றத்தைப் பற்றிய குறிப்பு “பைபிளில் உள்ளது. அதன்படி 6000 ஆண்டுகளுக்கு முன் புவி தோன்றியது என்றும், 12000 ஆண்டுகளுக்கு முன் புவி தோன்றியது என்றும் இரு குறிப்புகள் பைபிள் வழி அறியப்படுகின்றன. இந்தியக் கணிப்பில் பத்து யுகங்களுக்கு முன்னர் புவி தோன்றியிருக்கவேண்டும் என்று கருதப்படுகிறது. கி.பி. 1403 வரை, அதாவது கோபர்னிகஸ் (COPERNICUS) என்னும் அறிவியலாளரின் கண்டுபிடிப்புக்கு முன்பு வரை, புவியை மையமாகக் கொண்டு மற்ற கோள்கள் சுற்றுவதாகக் கருதப்பட்டது. அதே போல், கலிலியோ (GALILEO) என்னும் அறிவியலாளர் கண்டறிந்து சொன்ன பின்னரே, புவி உருண்டை வடிவுடையது என்பது ஒப்புக்கொள்ளப்பட்டது. ஆனால், மாணிக்கவாசகப் பெருமான், தம் திருவண்டப் பகுதியில், அண்டம், பேரண்டம் ஆகிய சொற்களால் உலகத்தைக் குறித்துச் சொல்லியிருக்கிறார். பேரண்டம் என்பது எண்ணற்ற கோளங்களை உள்ளடக்கியது. கதிரவனின் ஒளிக் கற்றைகளுக்கிடையில் நாம் காணுகின்ற தூசிப் படலத்தைப் போல் அண்டத்தில் கோளங்கள் இயங்குகின்றன என்று மாணிக்கவாசகர் கூறுவது கருதத்தக்கது. 19-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த வள்ளலாரும் தம் அகவலில் அண்டம் உருவாகியதைக் குறிக்கிறார். கதிரவனை மையமாகக் கொண்டுள்ள விண்ணியல் அமைப்பில் (SOLAR SYSTEM),  கதிரவனைச் சுற்றும் முதலிரு கோள்களாகிய வெள்ளியிலும் புதனிலும் (VENUS, MERCURY)  அவற்றின் மிகு வெப்பம் காரணமாக உயிரினம் இல்லை. மூன்றாவதாகச் சுற்றும் புவியில் மட்டுமே உயிரினம் தோன்றியது.

புவியின் உட்புறத்தை மூன்று பிரிவுகளாகப் பிரித்துள்ளனர். முதற்பகுதி, மேற்பரப்பு. இதனை ஆங்கிலத்தில் CRUST என்பர். இதன் ஆழம் 50 கி.மீ.. அதற்கடுத்த பகுதி 50-2980 கி.மீ. ஆழம் கொண்டது இதனை ஆங்கிலத்தில் MANTLE என்பர். மூன்றாவது பகுதி 6378 கி.மீ வரையிலான ஆழம். இதனை ஆங்கிலத்தில் CORE என்பர். புவியின் மேற்பரப்பில் எட்டு அடுக்குகள் (PLATES) உள்ளன. கடலுக்கு அடியில் அமைந்துள்ள நிலத்தின் அடர்த்தியை விடப் புவியின் மேற்பரப்பு (எட்டு அடுக்குகள் கொண்ட 50 கி.மீ. ஆழம் கொண்ட பகுதி) அடர்த்தி குறைவானது. எனவே, இந்த எட்டு அடுக்குகளும் கடலில் மிதக்கின்றன. இந்த அடுக்குகளில்தான் கண்டங்களின் நகர்வுகள் நிகழ்ந்துள்ளன. இந்த எட்டு அடுக்குகளில் அன்ட்டார்டிகா, ஆர்க்டிக் ஆகியன இரு அடுக்குகள்; ஆஸ்திரேலியா, ஆப்பிரிக்கா, நியூசிலாந்து, இந்தியா போன்றவை ஆறு அடுக்குகள். இந்தியக்கண்டம் வடக்கு நோக்கி நகர்ந்ததுண்டு. இந்த அடுக்குகளின் நகர்வின்போது, இந்தியக்கண்டம் யூரேசியாவின் மீது மோதியபோது இமயமலை தோன்றியது.  இவ்வடுக்குகள் உட்பகுதியில்  பாறைகளைக் கொண்டுள்ளன. CORE  எனப்படும் மூன்றாவது   பகுதியில், திடப்பொருள் வடிவிலான இரும்பு, நிக்கல் ஆகியன இருக்கும். மரியானா அகழி (MARIANA TRENCH) என்னும் இடம்தான் கடலின் மிக ஆழமான பகுதி எனக் கண்டறியப்பட்டுள்ளது.  ஏறத்தாழ 11 கி.மீ. ஆழம் கொண்டது.

பூமிக்கடியில் செல்லச் செல்ல வெப்பமும் அழுத்தமும் மிகுதி. எனவே, பூமிக்குக் கீழ் செல்வது இயலாது. பூமியின் மேற்பரப்பில் ஏறத்தாழ 115 தனிமங்கள் (ELEMENTS) உள்ளன. சிலிக்கான், அலுமினியம், மெக்னீசியம், சோடியம், பொட்டாசியம், நிக்கல், சல்ஃபர் என்பன போன்ற இருபது தனிமங்கள் மட்டும் 98 விழுக்காடு உள்ளன. 1638 வகையான பாறைகள் உள்ளன. 700 கி.மீ. ஆழத்தில், பாறைகள் உருகி “மாக்மா”  (MAGMA) என்னும் பாறைக்குழம்பு உருவாகிறது. அதுவே குளிர்ந்து பின்னர் கனிமப் பாறைகளாக மாறுகின்றது. பாறைகளில் தீப்பாறைகள் (IGNEOUS ROCKS),   படிவுப்பாறைகள் (SEDIMENTARY ROCKS),  உருமாற்றுப் பாறைகள் (METAMORPHIC ROCKS)  எனப் பல்வேறு பாறை வகைகள் உள்ளன.

கொங்கு நாட்டு நிலத்தியல்
கொங்கு நாடு, நான்கு புறமும் மலைகள் அரணாகச் சூழ்ந்து மிகுந்த பாதுகாப்பாக அமைந்துள்ளது. காவிரி, அமராவதி, நொய்யல், குடவனாறு, சண்முக நதி, பவாநி, உப்பாறு, நல்காஞ்சி போன்ற பன்னிரண்டு ஆறுகள் ஓடுகின்ற நாடு. “கொங்கு செழித்தால் எங்கும் செழிக்கும்”  என்று பழமொழி உள்ளது. கொங்கு” என்னும் சொல்லுக்குத் தேன் என்றும், சாரல் என்றும் பொருள் உண்டு. மேற்கு மலைத் தொடரில், கிழக்குச் சாரலில் அமைந்துள்ளது கொங்கு நாடு. சேர, சோழ, பாண்டியரின் நாடுகளின் ஓரத்தில் கொங்கு நாடு அமைந்திருந்ததால் “கங்கு  என்று பெயரமைந்தது எனலாம். கங்கு”  என்னும் சொல், எல்லை, கரை, வரம்பு ஆகியவற்றைக் குறிக்கும். (கங்கு, கொங்காகத் திரிந்திருக்கலாம்). கொங்கு நாட்டுப் பாறைகள் பெரும்பாலும் தீப்பாறைகள் (IGNEOUS ROCKS) வகையைச் சேர்ந்தன. உருமாற்றுப் பாறைகளும் உண்டு. படிவுப்பாறைகளோ, எரிமலைப் பாறைகளோ கொங்கில் இல்லை. இதன் காரணமாகவே, கொங்கு நாட்டில் நில நடுக்கங்கள் ஏற்பட வாய்ப்புகள் இல்லை.

கொங்கு நாட்டில் பச்சைக் கல் (BERYL) ஒட்டன் சத்திரம், சித்தம்பூண்டி ஆகிய இடங்களில் கிடைத்துள்ளன. ஊத்துக்குளிப் பகுதியில் படிகக் கற்கள் (QUARTZ)  கிடைக்கின்றன. கோவையில் பெருமளவில் செய்யப்படும் மாவரைக்கும் பொறிக்கான (GRINDER) கற்களான “பேசிக் சார்னக்கைட்”  (BASIC CHARNOCKITE) ஊத்துக்குளிப்பகுதியில்தான் உள்ளன. பல்லடத்தில் “ஜிப்சம்”  என்னும் கல் கிடைக்கின்றது. ஆங்கிலேயரான இராபர்ட் புரூஸ்ஃபுட் (ROBERT BRUCE FOOTE) என்னும் நிலத்தியல் அறிஞர், 1905-இல் சிவன் மலைப்பகுதியில் ஆய்வு செய்து, இப்பகுதியில் நெஃப்லைன் சைனைட்” (NEPHELINE SYENITEமற்றும் கொரண்டம் சைனைட் (CORUNDUM SYENITEஆகிய பாறைகள இருப்பதைக் கண்டறிந்தார். இவை, ALKALINE ROCKS வகைக் கற்களைச் சேர்ந்தன. இக்கற்கள் தமிழகத்தில் வேறெங்கும் காணக்கிடைப்பதில்லை என்பதோடு, இந்தியாவிலேயே இல்லை என்று சொல்லலாம். சேலத்தில், ட்யுனைட் (DUNITE), பெரிடோடைட் (PERIDOTITE) ஆகிய கற்கள் இருப்பதையும் இவர் கண்டறிந்தார். இவையும் கொங்கு நாட்டில் மட்டுமே உள்ளன. ட்யுனைட் (DUNITE) என்பது, மாக்னசைட்டின் நரம்புகள் எனப்படுவன. தொழிற்சாலைகளில் வெப்பம் தாங்கிகளாகப் பயன்படுவன. இராமயணத்தில், சீதையைக் கடத்திச் செல்லும் இராவணனுடன் போரிட்டு மடியும் ஜடாயுவின் இறக்கைகளே இந்த மாக்னசைட் நரம்புகள் என்னும் ஒரு புனைவு உண்டு. 

               நெஃப்லைன் சைனைட்”  பாறைக்கல் 
                                           சிவன் மலையில்  இராபர்ட் புரூஸ்ஃபுட் கண்டறிந்தது
                        படம் - இணைய தளம்
கொங்கு நாட்டின் கொடுமணல் பகுதியில், மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் நம் முன்னோர் நிறுத்தியிருக்கும் நடுகற்கள் BIOTITE GRANITE GNEISS என்னும் உருமாற்றுப்  பாறைக்கற்களால் ஆனவை. நெடிதுயர்ந்த அக்கற்கள் பெருந்துறை, சென்னிமலைப் பகுதியிலிருந்து கொண்டுவரப்பட்டவை. இடம் பெயர்ந்து கொண்டுவரத் தக்க தொழில் நுட்பம் அப்போதே இருந்துள்ளமை வியக்கத்தக்கது. கொடுமணலில், பச்சைக் கற்கள், படிகக் கற்கள் ஆகியவற்றைக் கொண்டு அழகிய மணிகளைச் செய்து மாலைகளாக்கி உரோமாபுரிக்கு ஏற்றுமதி செய்யும் தொழிற்கூடங்கள் இருந்தன என்பதை நாம் அறிவோம். கொடுமணலில், பெருங்கற் சின்னங்களான கல்பதுக்கைகளில் (CIST), சார்னக்கைட்”  (CHARNOCKITE)  வகைக் கற்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. (குறிப்பு:  "சார்னக்கைட்”  (CHARNOCKITE)  வகைக் கற்களுக்கு அப்பெயர் வந்த பின்னணி கருதத்தக்கது. 1656-இல் கல்கத்தாவில் முதல் வைஸ்ராயாகப் பதவியேற்ற ஜாப் சார்னக்”  (JOB CHARNOCK) என்பவர் கல்கத்தா நகரை உருவாக்கியவர். 1693-இல் மறைந்த அவருக்குக் கல்கத்தாவில் கல்லறை கட்டப்படும்போது, சென்னைக்கருகிலுள்ள பல்லாவரத்திலிருந்து ஒரு வகைக் கற்கள் கொண்டு செல்லப்பட்டன. ஹாலந்து (T.H. HOLLAND) என்னும் நிலத்தியல் அறிஞர் 1893-இல் இவ்வகைக் கற்களுக்குச் சார்னக்கின் பெயரையே சூட்டினார்.) கொடுமணலில் காணப்படும் கல்வட்டங்களில் (CAIRN CIRCLE) பயன்படுத்தப்பட்ட கற்கள் மாக்னடைட் (MAGNETITE)  என்னும் இரும்புத்தாது கொண்ட கற்களாகும்.

                BIOTITE GRANITE GNEISS   பாறைக் கல்  
                                                 (கொடுமணல் நடுகற்களில் காணப்படுவது)
                            படம் - இணைய தளம்

                      "சார்னக்கைட்  கல் 
         (பல்லாவரத்தில் இராபர்ட் புரூஸ்ஃபுட் கண்டறிந்தது)    
                           படம் - இணைய தளம்

                 ஜாப் சார்னக்”கின் கல்கத்தாக் கல்லறை  
                                                   படம் - இணைய தளம் 

கொங்குநாட்டில் சேலத்தில் கஞ்சமலைப்பகுதியில்,  மாக்னடைட் (MAGNETITE)  என்னும் இரும்புத்தாது கொண்ட கற்கள் கிடைக்கின்றன. ஆனால், சுரங்கம் அமைத்து இரும்பு எடுக்கும் தொழில் தொடங்கப்படவில்லை.

                            கொடுமணல் - பெருங்கற்காலச் சின்னங்கள்   
                                               படம் - இணைய தளம்

                                                    படம் - கட்டுரை ஆசிரியர்

                                               படம் - இணைய தளம்

கனிமங்களும் சித்தமருத்துவமும்
சித்தர்கள், கனிமங்களைப் ( MINERALS) பற்றி நன்கு அறிந்திருந்தனர். குறிப்பாக, போகர் கனிமங்களைச் சித்தமருத்துவத்தில் பயன்படுத்தியுள்ளார் என்பது ஆய்வு வழி வெளிப்பட்டுள்ளது. அவர் பல நூல்களை எழுதியுள்ளார். அவருடைய “போகர் ஏழாயிரம்” என்னும் நூலில், அவர் பயன்படுத்திய கனிமங்களைப் பற்றிய செய்திகள் உள்ளன. சென்னையைச் சேர்ந்த சித்தமருத்துவர் திருமதி சொர்ண மாரியம்மாள்  என்பவர், போகர் ஏழாயிரத்தில் பயன்படுத்திய கனிமங்கள்”  என்னும் நூலில் இக்கனிமங்கள் பற்றி எழுதியுள்ளார். இவர் தமிழக அரசின் இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதித் துறையின் இணை இயக்குநராகப் பணியாற்றியவர்.

வேறு செய்திகள்
அமெரிக்காவில், அரிசோனா பகுதியில் “பெரும் பள்ளத்தாக்கு”  (GRAND  CANYON)   அமைந்துள்ளது. 446 மைல் நீளமும், 24 மைல். அகலமும், 5000 அடி ஆழமும் கொண்டது. நிலத்தியல் அறிவியலாளர்களின் சொர்க்கம் என்று அதனைக் குறிப்பிடுவர். ஏனெனில் அங்கு புவி தோன்றிய நாளிலிருந்து இன்று வரையிலான காலத்துக் கற்கள் அனைத்தும் காணக்கிடைக்கின்றன.  1925-45 காலக்கட்டத்தில், அமெரிக்கர் அங்கு சுரங்கம் அமைத்து “யுரேனியம்”  (URANIUM) எடுத்தனர். இந்தக் கனிம வளமே அமெரிக்கா வளர்ந்த நாடாக உருவாகக் காரணமாயிற்று. இந்தப் பள்ளத்தாக்கில் “LORD SHIVA”  என்னும் பெயரமைந்த குன்று உள்ளது. இங்கிருந்த தொல்குடிகளான செவ்விந்தியருக்குச் சிவனைப் பற்றிய அறிவு இருந்துள்ளது என்பதையே இது சுட்டுகின்றது. பெரும் பள்ளத்தாக்கில் 5000 அடி ஆழத்தில் விஷ்ணு பெயரில் அமைந்த பகுதி VISHNU GNEISS என்பபடுகிறது. இப்பள்ளத்தாக்கில் உள்ள இரண்டு மலைகள், தோற்றத்தில் கருடப் பறவை போல் இருக்கின்றன. இந்தத் தோற்றத்தையே அமெரிக்கர் தம் நாட்டுச் சின்னமாகக் கொண்டுள்ளனர் எனலாம்.

             “பெரும் பள்ளத்தாக்கு”  (GRAND  CANYON) - சிவன் மலை
                      படம் - இணைய தளம்

கொடுமணல் காலத்திலிருந்து சிவன் மலையாக அடையாளம் கொண்ட சிவன் மலை, பின்னாளில் முருகன் மலையாக மாற்றப்பட்டிருக்கலாம். இன்றுவரை, சிவன் மலை என்னும் பெயரே வழங்குவதைக் காண்க.

திருப்பதி மலைப்பகுதி முன்பு கடலாயிருந்தது. இந்த மலை, படிவுப்பாறைகள் கொண்டது. இப்படிவுப்பாறைகள் சார்ந்த மண்ணில் செம்மரம் வளரும். திருப்பதி மலை தோன்றி 120 மில்லியன் ஆண்டுகள் ஆயின. திருவண்ணாமலை தோன்றி 2800 மில்லியன் ஆண்டுகள் ஆயின.

நொய்யல் ஆறு கிழக்கிலிருந்து மேற்கு நோக்கி ஓடியது என்றொரு நிலத்தியல் கருதுகோள் உள்ளது. இது ஆய்வுக்குரியது.

ஆண்டாள் தன் பாசுரத்தில் “வெள்ளி எழுந்து வியாழன் உறங்கிற்று”   என்பதாகப் பாடியிருக்கிறாள். வெள்ளிக் கோள், வியாழக் கோள் (VENUS, JUPITER) பற்றிய வானியல் அறிவு, கோபர்னிகஸ் காலத்துக்கு முன்பே இங்கு இருந்துள்ளதை இது புலப்படுத்துகிறது எனலாம்.

முடிவுரை-கட்டுரை ஆசிரியர் கருத்து.
நிலத்தியல் பற்றிய அறிவு, அதன் துறை சார்ந்த படிப்புப் படித்தவர்க்கே கிடைப்பது இயல்பு. அவ்வகைப் படிப்பு அற்றவர்க்கும் நிலத்தியல் பற்றிய புரிதலுக்கும், நிலத்தியலின் அடிப்படையில் கொங்கு நாட்டமைப்பைப் பற்றிய புரிதலுக்கும் ஏதுவாக எளிமையாக ஆனால் ஆழ்ந்த செய்திகளைத் தம் உரை மூலம் எடுத்துச் சொன்ன பேராசிரியர் கி. கதிர்வேலு அவர்கள் பாராட்டுக்குரியவர். மூப்பின் காரணமாக உரை நிகழ்த்துவதற்குத் தளர்வு ஏற்பட்டாலும்  நெடு நேரம் நின்று உரையாற்றியது சிறப்பு. கொங்கு மக்கள் பேறு பெற்றவர்கள். பேரிடரான நில நடுக்கம், நம்மை அண்டாது என்னும் நம்பிக்கையை அவரது உரை ஊட்டியது எனில் மிகையல்ல.




படங்கள் உதவி : இணைய தளம் 

------------------------------------------------------------------------------------------------
துரை.சுந்தரம், கல்வெட்டு ஆராய்ச்சியாளர், கோவை.
அலைபேசி : 9444939156.
மின்னஞ்சல் : doraisundaram18@gmail.com