மொத்தப் பக்கக்காட்சிகள்

செவ்வாய், 28 மார்ச், 2017

ஆச்சிப்பட்டியில் பாளையக்காரர் காலத்து நடுகற்கள்

முன்னுரை

        அண்மையில், நந்தகுமார் என்னும் இளைஞர், ஆச்சிப்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள பெருமாள் கோவிலில் பழங்காலச் சிற்பங்கள் சில உள்ளன என்றும், இரண்டு சிலைகளில் எழுத்துகள் காணப்படுகின்றன என்றும் தகவல் தந்து நேரில் வந்து பார்க்கும்படிச் சொன்னார். கல்வெட்டு ஆராய்ச்சியாளரான கட்டுரை ஆசிரியரும், தஞ்சைப்பல்கலையில் பயிலும் தொல்லியல் ஆய்வு மாணவரான இரமேஷ் என்பவரும் நந்தகுமாருடன் நேரில் சென்று ஆய்வு செய்தவகையிலும், நந்தகுமார் தம்மிடமுள்ள ஆவணங்களிலிருந்து திரட்டிய குறிப்புகளின் அடிப்படையிலும் தெரியவரும் செய்திகள் கீழே தரப்பட்டுள்ளன.  

ஆச்சிப்பட்டி

               கோவை-பொள்ளாச்சி சாலையில் ஆச்சிப்பட்டி என்னும் கிராமம் அமைந்துள்ளது. இங்கு அமைந்துள்ள கோயில், கல்யாண வெங்கடேசப் பெருமாள் கோயில் என்று அழைக்கப்படுகிறது. எழுநூறு ஆண்டுப் பழமையான கோயில் என்று கருதப்படுகிறது. கோயிலின் பழமை, இராமப்பட்டிணம் பாளையக்காரர்களின் காலத்துடன் இணைத்துப் பேசப்படுகிறது.

கல்யாண வெங்கடேசப் பெருமாள் கோயில்




      கோவை-பொள்ளாச்சி சாலைக்கருகிலேயே அமைந்துள்ள இக்கோயில், கருவறை, அர்த்தமண்டபம், முன்மண்டபம் என்னும் அமைப்போடு விளங்குகிறது. கருவறை, கல் கட்டுமானத்துடன் உள்ளது. அர்த்தமண்டபமும், முன்மண்டபமும் செங்கல் கட்டுமானங்கள். கோயிலுக்கு முன்புறம் கருட கம்பம் என்றழைக்கப்படும் விளக்குத் தூண் உள்ளது. இது கல்லால் ஆனது. கருவறையின் கல்கட்டுமானம் கூரைப்பகுதியுடன் நிறைவு பெற்றுள்ளது. அதை அடுத்து, வழக்கமாயுள்ள செங்கல் கட்டுமான விமானம் காணப்படவில்லை. விமானத்தின் இடத்தில், நாற்புறமும் சரிந்த ஓடு வேய்ந்த கூரைப்பகுதியும் கூரையின் உச்சியில் கலசமும் காணப்படுகின்றன. கோயிலுக்குச் சுற்றுச் சுவர் இல்லை. கற்களும் கம்பிகளும் கொண்டு அமைக்கப்பட்ட வேலியே கோயிலின் சுற்றுச் சுவர். கருவறை, அர்த்தமண்டபம், முன்மண்டபம் ஆகியவற்றின் வெளிப்புறச் சுவர்கள் யாவும் சுண்ணம் பூசப்பெற்று வெண்ணிறமாகக் காணப்படுகின்றன.

பழங்காலச் சிற்பங்கள்

     முன்மண்டபத்தின் தென்புறச் சுவரையொட்டி இரண்டு பெரிய பலகைக் கற்களில் புடைப்புச் சிற்பங்கள் உள்ளன. ஒன்றில், நடுவில் ஓர் ஆண் சிற்பமும், ஆணுக்கு இருபுறமும் இரு பெண்களின் சிற்பங்களும் உள்ளன. இது ஒரு நடுகல் சிற்பம்; அதாவது நினைவுக்கல் சிற்பம். ஆணின் உருவம், ஒரு தலைவனின் சிற்பம் என்று கருதுமாறு அமைந்துள்ளது. நெற்றிக்கு மேலே தலையில், அலங்கரித்த தலைப்பாகை. தலைமுடியை உயரத்தூக்கிச் சற்றே இடப்புறமாய்ச் சாய்த்து முடித்த தலைப்பாகை. கழுத்தை ஒட்டிய (முத்து)மாலைகளும், மார்பு வரை தொங்கும் ஆரங்களும் அணிகலன்களாக விளங்குகின்றன. தோளிலும், முன்கைகளிலும்  வளைகள் உள்ளன. செவிகளிலும் குழைகள் உள்ளன. இடது கை இடையில் வைக்கப்பட்டுள்ளது போலத் தோன்றுகிறது. வலது கை, தோளை நோக்கி மடக்கிய நிலையில், வலப்புறமுள்ள பெண்ணிடமிருந்து எதையோ பெற்றுக்கொள்வது போலத் தோன்றுகிறது.

                                   நடுகல் சிற்பம்-1

    இரு பெண்களின் சிற்பங்களும் தலைவனின் இரு மனைவியர் என்று கருதுமாறு உள்ளன. இருவரின் தலைமுடியும் முடியப்பட்டு வலப்புறமாகக் கொண்டையிட்ட தோற்றத்தில் உள்ளன. பெண்களும், செவிகள், கைகள், மார்பு ஆகிய பகுதிகளில் அணிகலன்களை அணிந்துள்ளனர். ஆணின் வலப்புறமுள்ள பெண்ணின் இடது கை உயரத்தூக்கிய நிலயில் உள்ளது. கையில் உள்ள பொருள் இன்னதென்று புலப்படவில்லை. இன்னொரு கையில்  ஏதோவொரு பொருளை ஆணின் கையில் கொடுப்பது போலத்தோன்றுகிறது. இடப்புறமுள்ள பெண் தன் வலதுகையில் ஒரு மதுக்குடுவையை ஏந்தியிருக்கிறாள். இன்னொரு கையில் என்ன பொருள் உள்ளது எனப் புலப்படவில்லை. மூன்று சிற்பங்களின் தலைப்பகுதிகளுக்கு மேல், கல்லின் விளிம்புகளில் தோரணம் போன்றதொரு பூ வேலைப்பாடு காணப்படுகிறது. சிலைகளின் இடைப்பகுதியிலிருந்து கால்கள் வரையுள்ள பகுதி நிலத்தின் கீழ் புதைந்துள்ளது. நிலத்திலிருந்து முழுதாகத் தோண்டி வெளிக்கொணரும்போது சிற்பங்களின் முழு உருவங்களும் புலப்படும்.

                                நடுகல் சிற்பம்-2

    அருகில் உள்ள இன்னொரு பலகைக் கல்லில் நான்கு உருவங்கள் சிற்பமாகச் செதுக்கப்பட்டுள்ளன. ஆனால், இவை தலைப்பகுதி வரை மட்டுமே வெளியில் தெரிகின்றன. மீதிப்பகுதி முழுதும் தரைக்குக் கீழ் புதைந்துள்ளது. இந்தச் சிற்பக் கல்லையும் முழுதாகத் தோண்டி வெளிக்கொணர்ந்தால் முழு உருவங்களும் புலப்படும். இரண்டு பலகைக்கற்களின் பெரிய அளவுள்ள தோற்றம், சிற்பங்களின் அமைப்பு, வேலைப்பாடுகள், சிற்ப நேர்த்தி ஆகியவை கொண்டு இந்த நினைவுக்கற்கள் பழமையானவை என்பதும், இவை பாளையக்காரர்கள் காலத்தைச் சேர்ந்தவை என்பதும் புலப்படுகின்றன. இதற்குச் சான்றாக, இக்கோயிலுக்கும் இராமபட்டிணம் பாளையக்காரர்களுக்கும் உள்ள தொடர்பு அமைகிறது. இக்கோயில், இராமபட்டிணம் ஜமீன் வழியினர் பண்டு தொட்டு வணங்கிவரும் கோயிலாக உள்ளது.
ஜமீனின் முன்னோர்கள் எழுப்பிய கோயில் என்றும் கருதப்படுகிறது. 

எழுத்துப் பொறிப்புள்ள நினைவுக்கல் சிற்பங்கள்


    கோயிலின் முன் மண்டபத்தில், அர்த்தமண்டபத்தின் நுழைவாசலுக்கு இடப்புறம், இரு கற்சிலைகள் காணப்படுகின்றன. உயர்நிலைத் தலைவர்களின் தோற்றத்தில் இச்சிலைகள் உள்ளன. கைகள் கூப்பிய நிலையில் இரு ஆண்களின் சிற்பங்கள். கொண்டையுடன் கூடிய இருவரும் மார்பு, தோள், கைகள், செவிகள் ஆகிய இடங்களில் அணிகலன்களைச் சூடியுள்ளனர். இடைக்கச்சில் குறுவாளோடு காட்சி தரும் இருவரின் ஆடைகள் மடிப்புடன் பாதம் வரையில் உள்ளன. சிற்பங்களின் பீடப்பகுதியில், திம்மண கவுண்டர்என்றும் “அமண கவுண்டர்”  என்றும் பொறிக்கப்பட்ட எழுத்துகள் காணப்படுகின்றன. எழுத்துகள், பிற்கால எழுத்துகளாக உள்ளன. எனவே, இந்த நினைவுக்கற்கள், இக்கோயிலுக்குத் திருப்பணி செய்த ஜமீன் வழியினர் எனக்கருதலாம். “நாயக்கர்என்னும் பெயருடன் விளங்கிய பாளையக்காரர் வழியினர், பின்னாளில் ஊர்த்தலைவர்களாய் மாற்றம் பெற்றபோது “கவுண்டர்”  என்னும் பெயரால் அழைக்கப்பெற்றனர். ஊர்த்தலைவர்கள், கருநாடகத்திலும், தமிழகத்திலும் “காமுண்டர்”  என்று அழைக்கப்பட்டனர் என்பது இரு மாநிலக் கல்வெட்டுகளிலும் காணப்படும் செய்தியாகும்.

இராமபட்டணம் பாளையம் (பாளையத்தார்)

   மதுரை விசுவநாத நாயக்கர் ஆட்சிக்காலத்தில், கி.பி. 1529-ஆம் ஆண்டிலிருந்து தமிழகத்தில் 72 பாளையங்களை 72 பாளையக்காரர்கள் விசுவநாத நாயக்கரின் கீழ் ஆட்சி செய்துவந்தனர். கோவை மாவட்டத்தில் ஊத்துக்குளி, சமத்தூர், கொட்டாம்பட்டி, புரவிபாளையம், ஆவலப்பம்பட்டி, ஆச்சிப்பட்டி, நெகமம், மெட்ராத்தி, துங்காவி, மைவாடி எனப் பல பாளையங்கள் இருந்துள்ளன. ஆச்சிப்பட்டி பாளையத்தார், சில காரணங்களால் பொள்ளாச்சி-இராமபட்டணத்துக்குக் குடிபெயரவேண்டிய சூழல் ஏற்பட்டது. ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில், பாளையம் என்னும் பெயர் ஜமீன் என்றும், பாளையக்காரர் என்னும் பெயர் ஜமீந்தார் என்றும்  மாற்றம் பெற்றன. ஆச்சிப்பட்டி பாளையத்தில், கோட்டையும், சிறைச்சாலையும் அமைந்திருந்தன என அறியப்படுகிறது. ஆச்சிப்பட்டியிலிருந்து இராமபட்டணத்துக்குப் புலம்பெயர்ந்த பாளையக்காரர்கள் இராமபட்டணம் பாளையத்தார் என்றும், பிறகு இராமபட்டணம் ஜமீந்தார் எனவும் அழைக்கப்பெற்றனர். கோவை, பாலக்காடு ஆகிய மாவட்டங்களின் பல ஊர்கள் இராமபட்டணம் ஜமீனுக்குக் கீழ் இருந்தன.

ஜமீந்தாரிணி குமர அம்மாள்

       இராமபட்டணம் ஜமீனைச் சேர்ந்தவர்கள், தம் வருவாயில் பல்வேறு கொடைகள் நல்கியுள்ளனர். ஜமீன் குடிவழியில், ஒரு கட்டத்தில், பட்டத்துக்கு வந்தவர் சிறுவனாய் அமையவே, சிறுவனின் தாயான குமர அம்மாள் என்பவர் ஜமீந்தாரிணியாகப் பொறுப்பேற்றார். இவர் வீரமிக்க பெண்மணி ஆவர். தம் ஆட்சிக்குக்கீழ் உள்ள ஊர்ப்பகுதிகளுக்குக் குதிரைமீது பயணம் சென்று நாடு காக்கும் பணியாற்றியுள்ளார் என்று அறிகிறோம். இவர், பாலக்காடு சாலையில் நிழல் மரங்கள் நட்டுவித்துள்ளார். ஆச்சிப்பட்டி கோட்டைப்பகுதியில் இருந்த பெருமாள் கோயில், இராமபட்டணத்து ஜமீன் குடியினர் வந்து வழிபடும் கோயிலாக அமைந்தது.

குமரகுருபர இராமநாத மலையாண்டி எர்ரப்ப கவுண்டர்

     இந்த ஜமீனின் இறுதி ஜமீந்தார் குமரகுருபர இராமநாத மலையாண்டி எர்ரப்ப கவுண்டர் என்பவர் ஆவார். இவர் இராமபட்டணத்திலிருந்து கோவைக்குக் குடி பெயர்ந்தார். இவர், கோவை காரனேஷன் பூங்கா உருவாவதற்குக் கொடை அளித்துள்ளார். இவர், ஒரு ‘மோட்டர் கார்ப் பிரியர்எனத்தெரியவருகிறது. இவர், தம் காலத்தில் புழங்கிய கெடிலாக்”, ”டாட்ஜ்”, ”லாண்ட் ரோவர்ஆகிய வண்டிகளில் திம்பம் பகுதியில் வேட்டைக்குச் செல்வதுண்டு. இவர், பல ஆண்டுகள் ஒரு யானையை வளர்த்துவந்தார் என்றும் கூறப்படுகிறது. தம் வாழ்நாளின் இறுதிப்பகுதியில் ஆன்மிகத்தில் மிகுதியும் ஈடுபட்ட இவர், ஒரு துறவி போல் வாழ்ந்தவர். ஆங்கிலப் புலமை பெற்ற இவர், வேதாந்தம் பற்றிப் பல நூல்களை ஆங்கிலத்தில் இயற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் வழி வந்தவரே (இவரின் மகனுக்குப் பேரன்), மேலே நாம் குறிப்பிட்ட நந்தகுமார் என்னும் இளைஞர்.

கோயில் பராமரிப்பு

    கோயில், ஆங்கிலேயர் காலத்திலிருந்து சிதைவுற்றுக் கிடந்துள்ளது. அதை ஒருவாறு பேணிப்பாதுகாத்து வந்தவர்கள் கோயிலின் பூசைப் பரம்பரையினரே. பல தலைமுறைகளுக்குப் பின்னர் தற்போது பாலகிருஷ்ணன் என்பவர் பூசைப்பணியை மேற்கொண்டுள்ளார். கோயில், திருப்பணிகளால் தற்போதுள்ள நல்ல நிலைமைக்கு வந்ததும், ஆங்கிலேயர் காலத்தில் கோயிலின் நிலைமை, கோயிலைச் சேர்ந்த சொத்துகள் ஆகியன பற்றியும் கோயில் பூசையாளரிடம் செய்திகள் பெறப்பட்டதும் பின்னர் குறிப்பிடப்படும்.          

முடிவுரை

     ஆச்சிப்பட்டி, பாளையக்காரர் வரலாற்றோடு தொடர்புடைய ஊர் என்பதும், இங்குள்ள பெருமாள் கோயில், பாளையக்காரர்கள் காலத்தில் உருவாகி, அவர்தம் குடியினர் தொடர்ந்து வழிபடும் கோயிலாக உள்ளது என்பதும், இக்கோயிலில் பாளையக்காரர்கள் காலத்து நினைவுக்கல் சிற்பங்கள் வரலாற்றுத் தடயங்களாக இன்னும் காணப்படுகின்றன என்பதும் அறியப்படுகின்றன. இந்தப் பெருமாள் கோயில், இன்றளவும் கோட்டைக்கோயில் என்னும் பெயரால் அழைக்கப்பெறுவதனின்றும், ஆச்சிப்பட்டியில் கோட்டை இருந்துள்ளமை புலப்படுகிறது.

------------------------------------------------------------------------------------------------------------
து.சுந்தரம், கல்வெட்டு ஆராய்ச்சியாளர், கோவை.
அலைபேசி : 9444939156.

திங்கள், 20 மார்ச், 2017


              மானாமதுரை வைகையாற்றின் கரையில் இராசராசன் கல்வெட்டு

           அண்மையில், பேராசிரியர் திரு காளைராசன் அவர்கள், மானாமதுரையில் 
வைகைஆற்றில் கிடந்த கல் தூண் ஒன்றை அவ்வூர் மக்கள் எடுத்து வைத்துள்ளதாகவும், அத்தூணில் கல்வெட்டு எழுத்துகள் காணப்படுவதாகவும் குறிப்பிட்டு, ஒரு தூணின் படத்தைப் பகிர்ந்திருந்தார்.  அக்கல்வெட்டின் வரிகளைப் படித்தபோது அதன் சிறப்பு புலப்பட்டது.
சோழப்பேரரசன் முதலாம் இராசராசனின் கல்வெட்டு அது. முதலாம் இராசராசனின் 
கல்வெட்டு ஒன்றை இனங்கண்டு வெளிப்படுத்தியுள்ள திரு. காளைராசனுக்கு நன்றி பகர்ந்து, கல்வெட்டின் செய்தியை இங்கே பகிர்ந்துகொள்கிறேன்.
                                                     
                                                              முதல் படம்

கல்வெட்டுப் பாடம் - முதல் படம்

ஸ்வஸ்திஸ்ரீ ... ரு ... ச
2 ..த்து வேங்
3 டியுந் தடிகை..
4 செந்த ........
5 முடையார்.......
6 யம்மை
7 .. ஒன்றுக்கு
8 (வா)ழு (பா) செ
9 டு 25 இருபத்..
10 கொண்டு 
11 நெய் அட்டு..
12 (இ)ரு (காசு)


                                                          இரண்டாம் படம்

        

கல்வெட்டுப் பாடம்   இரண்டாம் படம்

1                        ஸ்வஸ்தி
2                       ஸ்ரீ (கோ)
3 ன உடையார் ஸ்ரீ
4 கு யாண்டு 5 ஆ
5 ண்டலத்து  கா
6 (பா) ..தானந்திச்ச
7 (த்த) ஸுப்ரஹ்மண்ய
8 .................................
9 புலியனைச் சாத்(தி)
10 னாராயணனான
11 (செ)ங்குடி நாட்டு
12 தி ச நுந்தாவிள(க்)


கல்வெட்டுச் செய்திகள்

        கல்வெட்டு, முதலாம் இராசராசன் காலத்தது என வரையறை செய்ய  கல்வெட்டிலேயே அகச்சான்று இருக்கிறது. இராசராசனின்  மெய்க்கீர்த்தியில், அவன் வெற்றிகொண்ட நாடுகளின் பெயர்கள் குறிப்பிடப்பெறும். அவ்வாறு குறிப்பிடப்பெறுகின்ற நாடுகளில், வேங்கை நாடு, கங்கபாடி, தடிகைப்பாடி, நுளம்பபாடி  ஆகியவை அடங்கும். இக்கல்வெட்டில், வேங்கை நாடு, தடிகைப்பாடி  ஆகிய சொற்களின் துண்டுப்பகுதிகள் காணப்படுகின்றன. இராசராசனைக் குறிக்கும் உடையார் என்னும் சொல்லும் இகல்வெட்டில் உள்ளது. தூணின் இரு பக்கங்களில், இரண்டு கல்வெட்டுகள் பொறிக்கப்பட்டுள்ளன. ஒன்றில் இராசராசனின் ஆட்சியாண்டு ஐந்து என்றும், அடுத்த கல்வெட்டில் ஆட்சியாண்டு இருபத்தைந்து என்றும் உள்ளது. இருபது ஆண்டுகள் இடைவெளியில், ஒரு தூணிலேயே  இருமுறை கல்வெட்டு பொறிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. கோயிலுக்கு நுந்தா விளக்கு (நந்தா விளக்கு) எரிக்கக் கொடை அளிக்கப்பட்டதை இரு கல்வெட்டுகளுமே  கூறுகின்றன. முதல் கல்வெட்டில் விளக்கெரிக்கக்  கொடுக்கப்பட்ட கொடை, காசுகளாக இருக்கலாம் என்று தோன்றுகிறது . ஆனால், கொடையாளியின் பெயர் தெரியவில்லை. கொடையாகக் கொடுக்கப்பட்ட முதலைக்கொண்டு (CAPITAL), நெய் அளந்து தரவேண்டும் என்னும் குறிப்பு உள்ளது. நெய்யின் அளவு தெரியவில்லை. இரண்டாம் கல்வெட்டிலும் விளக்கெரிக்கவே கொடை அளிக்கப்படுகிறது. ஆனால், கொடை, ஆடுகளா, அல்லது காசுகளா எனத்தெரியவில்லை. கொடை அளிக்கப்பட்டுள்ளது. கொடையளித்தவன் நாராயணன் என்பவனாகலாம். புலியன் என்பானின் நலனுக்காகக் கொடையளிக்கப்பட்டுள்ளது. இது, “புலியனைச் சாத்தி” என்னும் கல்வெட்டுத் தொடரால் அறியப்படுகிறது. (பெரும்பாலும், ஒரு விளக்குக்குத் தொண்ணூறு ஆடுகள் கொடை தரப்படுவதைக் கல்வெட்டுகளில் காண்கிறோம்.)
         கல்வெட்டில், கிரந்த எழுத்துகளும் காணப்படுகின்றன. அவை சிவப்பு வண்ண எழுத்துகளால் காட்டப்பட்டுள்ளன. மற்றவை தமிழ் எழுத்துகள். கிரந்த எழுத்தில் உள்ள  “ஸுப்ரஹ்மண்யம்” என்னும் பெயர், கொடைக்கான (காசுகளை)ப் பெற்றுக்கொண்ட - கோயில்
காணியுடைய - சிவப்பிராமணன் பெயராகவும் இருக்கக் கூடும். உறுதியில்லை.  கல்வெட்டின் பெரும்பகுதி, எழுத்துகள் மறைந்து  போகுமளவு தேய்மானம் கொண்டுள்ளது.

         ஆயிரம் ஆண்டுகளுக்குமேல் பழமையான ஒரு கல்வெட்டைக் கண்ட ஊர்மக்கள், அதில்
உள்ள எழுத்துக்ளைப் பார்த்துக் கல்வெட்டின் சிறப்பை உணர்ந்து பாதுகாப்பாக எடுத்து வைத்துள்ளார்கள் என்பது பாராட்டப்படவேண்டிய ஒன்று. 

-----------------------------------------------
து.சுந்தரம், கல்வெட்டு ஆராய்ச்சியாளர், கோவை.
அலைபேசி : 9444939156.



வியாழன், 9 மார்ச், 2017

கருவலூர்க் கல்வெட்டு-காஞ்சிப்பெரியவர்-தி இந்து நாளிதழ்
ஒரு முக்கூடல்


கருவலூர் பெருமாள் கோயில்

         கோவை மாவட்டம், அவிநாசி-அன்னூர் சாலையில் அமைந்துள்ள ஓர் ஊர் கருவலூர். தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை வெளியிட்ட “கோவை மாவட்டக் கல்வெட்டுகள் நூலில் இந்த ஊரைச்சேர்ந்த ஒரே ஒரு கல்வெட்டு பதிவாகியுள்ளது. அக்கல்வெட்டு இவ்வூரில் அமைந்திருக்கும் பெருமாள் கோயிலில் உள்ளது. இப்பெருமாள்கோயில், தற்போது ஸ்ரீ கருணாகர வெங்கடரமணா திருக்கோயில் என அழைக்கப்படுகிறது.

                     கோயிலின் தோற்றங்கள்





கோயில் கல்வெட்டு

        இரு ஆண்டுகளுக்கு முன், இக்கோயிலுக்குச் சென்று கல்வெட்டைக்கண்டு ஒளிப்படம் எடுத்து வந்தேன். கல்வெட்டின் பாடம் பின்வருமாறு:
கல்வெட்டு தொடர் எண் : 846/2003. ஆண்டறிக்கை எண் : 594/1922.
நூலில் கொடுக்கப்பட்ட குறிப்புரை :
அரசன் (கொங்குச்சோழன் வீரராசேந்திரன்) கருவலூரில் உள்ள புரோசக்குளத்தையும் அதன் கீழ் உள்ள விளைநிலங்களையும் கருவலூர் பெருமாள் கோயிலுக்குத் திருவிடையாட்டமாக அளித்த செய்தி கூறப்பெறுகின்றது. இக்கோயில் வீரராசேந்திர விண்ணகரம் என்று அழைக்கப்பெறுகின்றது.

                           கல்வெட்டுப் படங்கள் 










1             ஸ்ரீராஜகேசரி கோனேரின்மை கொண்டான் வடபரிசார நாட்டுப்பழங்கருவலூர் வீரராசேந்திர விண்ணகரெம்பெருமான் கோயிலில் ஸ்ரீகாரிய
2    ஞ் செய்வார்களுக்கு நம்மோலை குடுத்தபடியாவது இவ்வெம்பெருமானுக்கு அமுதுபடிக்கும் பலபடி நிமந்தங்களுக்கும் திருவிளக்குக்கும்
3       குடுத்த குளமாவது கருவலூர் புரோசக்குளம் குடுத்தோம் இக்குளம்  தாங்களே அடைத்து இக்குளத்தால் விளைந்த நிலம் இவ்வெம்பெ
4     ருமானுக்குத் திருவிடையாட்டமாக இறையிலி முற்றூட்டும் செல்வதாகவும் இப்படி செம்பிலும் சிலையிலும் வெட்டிக் கொள்வார்களாக நமக்கு இரு
5    பதாவது முதல் நம்மோலை குடுத்தோம் இவை சோழ குலமாணிக்க மூவேந்த வேளான் எழுத்து இவை யிலாடத்தரையன் எழுத்து இவை கோதவராயன் எழுத்து இவை வில்லவராயன் எழுத்து

கல்வெட்டில் “புரோசக்குளம்  ஒன்றைக் கோயிலுக்குக் கொடையாக அளித்த செய்தி காணப்பட்டது. குளத்தால் விளைந்த நிலமும் கோயில் எம்பெருமானுக்குத் திருவிடையாட்டமாக இறையிலியாகக் கொடுக்கப்பட்டது. கல்வெட்டில் வரும் புரோசக்குளம் என்னும் பெயர் சற்றே புதுமையாகத் தோன்றியதோடு குளத்தைக் குறிப்பாகப் புரோசக்குளம்  எனக் கல்வெட்டில் குறிப்பிட்டிருப்பதன் பொருள் என்ன என்று இதுவரை புரியாமலே இருந்தது. கோவை, திருப்பூர், ஈரோடு ஆகிய மூன்று மாவட்டக் கல்வெட்டுகள் அடங்கிய நூல்களில் வேறெங்கும் இச்சொல் காணப்படவில்லை. கல்வெட்டுச் சொல்லகராதியில் தேடியும் இச்சொல் காணப்படவில்லை. நூலில், ஒவ்வொரு கல்வெட்டின் பாடத்துக்கு முன், கல்வெட்டு அமைந்துள்ள ஊர், கல்வெட்டின் மொழி, எழுத்து, அரசு, மன்னன், கல்வெட்டு அமைந்துள்ள இடம் ஆகிய செய்திகள் தரப்பட்டிருக்கும். பின்னர், குறிப்புரை என்னும் பகுதியில் கல்வெட்டின் செய்தி சுருக்கமாகத் தரப்பட்டிருக்கும். இந்தக் குறிப்புரையிலும் புரோசக்குளம் பற்றிய விளக்கக் குறிப்பு இல்லை.

தி இந்து’  தமிழ் நாளிதழும் காஞ்சிப்பெரியவரும்

    நீண்ட நாள்கள் “புரோசக்குளம்”  பற்றிய விளக்கம் என்ன என்பதனை அறிந்துகொள்ளவேண்டும் என்ற தூண்டுதல் உள்ளத்தில் தோன்றாமலே கழிந்துகொண்டு வரும் வேளையில், ஒரு நாள், மார்ச்சு 24, 2016-ஆம் ஆண்டு, “தி இந்து”  தமிழ் நாளிதழைப் படித்துக் கொண்டிருந்தபோது (முகவர் மூலம் நாளிதழை நாளும் வரவழைத்துக் கொண்டிருக்கிறேன்), “தெய்வத்தின் குரல்என்னும் தலைப்பில் காஞ்சிப்பெரியவரின் கருத்துகள் வெளியாகியிருந்த பகுதி, வெகு இயல்பாய் ஈர்த்ததால் அதைப் படித்தேன். அன்றைய கட்டுரையின் தலைப்பு “ஐந்து வகை ஸ்நானம்”.  குளிப்பதில் ஐந்து வகையா? சற்றே வியப்பு. மேற்கொண்டு படித்ததில், பெரியவர் பட்டியலிட்டிருந்தார்.


                                      ”தி இந்து”  நாளிதழ்ச் செய்திக்கட்டுரை


  1. நீரை மட்டும் கொண்டு குளிப்பது “வாருணம்”.  வருணன் என்னும் கடவுளோடு தொடர்புடையது.
  2. “விபூதி ஸ்நானம். அதாவது திருநீற்றுக் குளியல். நீர் விட்டுக் குழைக்காமல் வாரிப்பூசிக் கொள்தல். தீயுடன் தொடர்புடையது. நீறு என்னும் சாம்பல் தீயின் சுடுதல் உண்டாக்கும் விளைவு.
  3.  “வாயவ்யம்”.  வளி என்னும் காற்றுடன் தொடர்புடையது. பசு மந்தை ஒன்று போகும்போது, அவை கூட்டமாகப் போவதாலேயே, காற்றின் செலவு (சலனம்) அங்கே மிகுதியாகிப் பசுக்களின் குளம்படி மண் தூளாகக் கிளம்பும். இந்தக் “கோதூளி,  திருமஞ்சனம் செய்யும்படியாக நாம் அங்கே நின்றுகொண்டால், அதுவும் ஒரு குளியல்.
  4. ஆனால், இக்குளியலையே நிலத்துடனும் தொடர்பு படுத்தலாம். பசுக்களின் குளம்படி மண், உண்மையில் நிலம் அல்லவா?
  5. எப்போதாவது வெயில் அடிக்கும்போதே மழையும் பெய்வதுண்டு. அந்த மழை நீர் வானுலகிலிருந்து வரும் நீருக்கொப்பானது. அந்த மழை நீரில் குளிப்பதற்கு “திவ்ய ஸ்நானம்”  என்று பெயர். இப்படி மழை பெய்துவிட்டால் உடனே நாம் அதில் போய் நின்றுவிடவேண்டும். எனவே, இது விசும்பின் தொடர்புடையது.

மேற்குறித்த ஐந்துவகைக் குளியல்களும் முறையே, நீர், தீ, வளி, நிலம், விசும்பு என்னும் “ஐம்பெரும் பூதத்து இயற்கைக்கானவை.

அடுத்து, இன்னொரு செய்தியைப் பெரியவர் குறிப்பிடுகிறார். அவர் குரலிலேயே பார்ப்போம்:

      “மந்திர ஜலத்தைப் புரோக்ஷித்துக் கொள்கிறோம். தலையோடு கால் விட்டுக்கொள்ளாமல் அதை விரலால்தான் தெளித்துக் கொள்கிறோம். பூஜை, ஹோமம், யாகம் முதலானவற்றிலும் கலசம் வைத்து அதிலுள்ள ஜலத்தை அபிமந்திரித்துக் கடைசியில் புரோஹிதர் தர்ப்பைக் கட்டால் அதை எல்லாருக்கும் தெளிக்கிறார். இதுவும் ஐந்து ஸ்நானங்களில் ஒன்று. இதற்கு “ப்ராஹ்மம்என்று பெயர். “ப்ரம்மம்என்றால் வேதம், வேதமந்திரம் என்பது ஓர் அர்த்தம். இதற்கு “ப்ராஹ்ம ஸ்நானம் என்று பெயர்.

புரோக்ஷம்

மேலே சுட்டிய, காஞ்சிப்பெரியவரின் கருத்திலிருந்து, புரோக்ஷம் என்பது, மந்திர நீர்த் தெளித்தலைக் குறிப்பது என்பதும், இவ்வகைக் குளியல், “பிரம்மக் குளியல்”  என்பதும் பெறப்படுகின்றன.  புரோக்ஷம்”  என்னும் சமற்கிருத ஒலிப்புடைய சொல், தமிழ் வடிவத்தில் “புரோசம்”  என்றாதல் மொழி மரபு. எனவே, புரோசக்குளம்”  என்பதற்கு மந்திர நீர்த் தெளித்தலாகிய குளியலுக்குரிய குளம் என்று பொருள் கொள்வது ஏற்புடையது எனலாம். எனவே, கருவலூர்க் கல்வெட்டின் பொருளறியப்படாத “புரோசக்குளம்”  என்னும் சொல், எதிர்பாராத ஒரு பொழுதில் விளக்கம் உற்றது. கல்வெட்டுப்படி, கருவலூர்க் குளம், கருவலூர் விண்ணகர எம்பெருமானுக்கு அமுதுபடி, திருவிளக்கு, மற்றும் பல்வேறு நிமந்தங்களுக்கு இறையிலியாகக் கொடுக்கப்பட்ட குளம் என்பதோடு, “புரோசக்குளியலுக்கும் உரியதான ஒன்று என்பது பெறப்படுகிறது. காஞ்சிப்பெரியவரும், “தி இந்துநாளிதழும் ஒரு கல்வெட்டுச் செய்தி விளக்கமுற உதவினர் என்பது நான் வியந்துபோன ஒரு நிகழ்வு.

பின் குறிப்பு

தொல்லியல் அற்ஞர் திரு. பூங்குன்றனாரிடம் பழகும் வாய்ப்புப் பெற்றிருந்தும், இது பற்றி அவரிடம் கலந்துகொள்ளவில்லை என்பது வியப்புக்குரியது. கேட்கத் தோன்றவில்லை என்பது மெய். காஞ்சிப்பெரியவரின் கருத்தைப் படித்த பின்னர், பூங்குன்றன் அவர்களைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு புரோசக்குளம் பற்றிக் கேட்டபோது, புரோசம் என்பது வேதம், வேத மந்திரம் என்னும் பொருளுடையது என நொடிப்பொழுதில் விடை பகர்ந்ததைக் கண்டு பின்னும் வியந்துபோனேன். அவரது விரல் நுனியில், நுண் மாண் நுழை புலமும், அரிதான நினைவாற்றலும் கோலோச்சுகின்றன என்றால் மிகையல்ல.


------------------------------------------------------------------------------------------------------
து.சுந்தரம், கல்வெட்டு ஆராய்ச்சியாளர், கோவை.
   அலைபேசி : 9444939156.