மொத்தப் பக்கக்காட்சிகள்

செவ்வாய், 23 செப்டம்பர், 2014

மருத்துவம் சொல்லும் கல்வெட்டு
                                                      

         நேற்று (19.09.2014) தொல்லியல் ஆர்வலரும் பள்ளி ஆசிரியருமான கிருஷ்ணகுமார், கோவை-சத்தியமங்கலம் சாலையில் அமைந்துள்ள சரவணம்பட்டியில் ஒரு சிறிய கல்வெட்டு இருப்பதாகவும், எழுத்துகள் அண்மைக்காலத்தனவாக இருப்பதாகவும் அங்கு சென்று அதைப்படித்துத் தருமாறும் கேட்டிருந்தார். எனவே, இன்று காலை (20.09.2014) அங்கு சென்றிருந்தேன். ஊருக்குள் செல்லும் ஒரு சிறிய சாலையில்  மளிகைக்கடை ஒன்றின் முன்புறம் அக்கல் நிறுத்தப்பட்டிருந்தது. சாலையை விட்டுத்தள்ளியிருந்த மண் பகுதியில் பதிக்கப்பட்டிருந்தாலும் கல்லைச் சுற்றி சிமெண்ட்கொண்டு பூசப்பட்டிருந்தது. கல்லின் மேற்புறம் பூமாலை சாத்தப்பட்டிருந்தது. கல்லின் அடியில் ஓரிரு அகல் விளக்குகள் காணப்பட்டன. மேற்புறம் அகன்றும் கீழ்ப்புறம் குறுகியும் காணப்பட்ட அக்கல்லில் எழுத்துகள் எழுதப்பட்ட பரப்பு நன்கு மட்டப்படுத்தப்படாமல் சற்றே குழியும் மேடுமாக இருந்ததாலும், எழுத்துகள் தெளிவான வடிவத்தில் வெட்டப்படாததாலும் முதல் பார்வையில் படிக்க இயலவில்லை. எனவே, கல்லைத் தண்ணீர் விட்டு  நன்கு கழுவித் தூய்மையாக்கி சுண்ணப்பொடி பூசிக் காயவைத்தபின் பார்க்கையில் எழுத்துகள் ஓரளவு புலப்பட்டன.

         கல்லில் ஐந்து வரிகளில் எழுத்துகள் இருந்தன. உச்சியில் இரு எழுத்துகளின் வடிவம் இருப்பினும் இனம் காண இயலவில்லை. ஐந்து வரிகள் முடிந்த நிலையில் ஆறாவது வரியில் ‘ம்  என்னும் ஒற்றை எழுத்து இருந்தது. முதல் இரு வரிகள் படிக்க இயன்றது. அடுத்த இருவரிகள் படிக்க இயலவில்லை. ஐந்தாவது வரி மற்றும் இறுதியில் உள்ள ஒற்றை எழுத்தும் சேர்ந்து படிக்கமுடிந்தது. கல்வெட்டுப்பாடம் வருமாறு:


                    ............................................
   1 கால்லு
               2 தைத்து  ( தைத்தா)
                    3 ..........................................
                    4 ...........................................
5 நீங்கு
ம்

         அப்பகுதியில் சந்தித்த, அகவையில் மூத்த ஒரு சிலரிடம் இக்கல் பற்றிக்கேட்கையில் சுவையான ஒரு செய்தியைச் சொன்னார்கள். முன்பு இங்கு
வாழ்ந்திருந்த வேளாளர் வகுப்பைச் சேர்ந்த பெரியவர் ஒருவர் இப்பகுதி மக்களின் சிறு சிறு உடல் நலக்குறைகள் நீங்க மருந்து கொடுத்தும், உடல் நலத்தில் சுணக்கம் அடைந்த  குழந்தைகளுக்கு ஓதியும் ( கொங்குப்பகுதியின் நாட்டார் வழக்கில் இதை மந்திரித்தல் என்பார்கள்) மருத்துவப்பணியில் ஈடுபட்டு வந்துள்ளார் என அறிகிறோம். அவர், இந்தக் கல்லை நட்டுவைத்தார் என்று கூறுகிறார்கள். கால்வலி போன்ற கால் தொடர்பான துன்பங்கள் நீங்க கல்லில் ஏதோ ஒரு ஆற்றலை ஏற்றி நட்டுவைத்தார் என்றும் அவ்வாறே  இந்தக்கல்லின் மீது காலை வைத்துச் சிறிது நேரம் மனத்தில் அமைதி காத்தால் துன்பம் நீங்கும் என்னும் நம்பிக்கையில் இப்பகுதி மக்கள் செய்து வந்துள்ளனர் என்றும் சொன்னார்கள். பலரும் இச்செவிவழிச் செய்தியைச் சொன்னமை கல்வெட்டில் காணப்படும் சொற்றொடரோடு பொருந்திவருவதைக் காண்கிறோம். கால் கொண்டு கல்லை மிதித்தலைக் கல்வெட்டு “கால்லுதைத்து  என்றும், நோய்த்துன்பம் அகலும் என்பதைக் கல்வெட்டு  நீங்கும் என்றும் குறிப்பிடுகிறது.

         இவ்விடத்தில், விவேக சிந்தாமணிஎன்னும் தமிழ் நூலில் காணப்படும் செய்தி ஒன்று நினைவுக்கு வருகிறது. புலவர் ஒருவருக்குக் காலில் நெருஞ்சி முள் தைத்துவிட்டது. ஆனால், அதை மிகைப்படுத்தி ஊர் மருத்துவரிடம் சென்று பாம்புக்கடிக்கு மருத்துவம் நாடி வந்ததைப்போலத் தன் புலமையை நுழைத்து, முள் தைத்ததைப் பாடல்வழியே அவர் புலப்படுத்தினார்.
அப்பாடல் வருமாறு
                                               முக்காலைக் கையில் எடுத்து
                       மூவிரண்டுக்கு ஏகையிலே
                       அக்காலை ஐந்துதலை நாகம்
                       ஆழ்ந்து கடித்தது காண்.

மருத்துவரும் மதிநுட்பம் நிறைந்தவர். புலவரின் பாணியிலேயே அவரும் ஒரு
புதிர்ப்பாடல் வழியே முள் தைத்தமைக்கு மருத்துவம் சொன்னார். மருத்துவரின் மருந்து பின் வரும் பாடலில் காண்க.
                                                               

                     


                     பத்துரதன் புத்திரனின் மித்திரனின்
                     சத்துருவின் பத்தினியின்
                     கால் வாங்கித் தேய்.

முள் தைத்ததைப் புலவர் சொன்ன பாங்கை நோக்குக. முக்கால் என்பது மூன்றாவது காலான தடி அல்லது கோல். மூவிரண்டு என்பது ஆறு. ஐந்துதலை நாகம் என்பது ஐந்து பிரிவாகப் பிரிந்த தோற்றத்தில் அமைந்துள்ள நெருஞ்சி முள். கோலை ஊன்றியவாறு ஆற்றுக்குப் போகும் வழியில் நெருஞ்சி முள் தைத்துவிட்டது என்பது செய்தி.
இப்போது மருத்துவரின் மருத்துவம் என்ன என்று பாருங்கள். பத்துரதன் என்பவன் பத்து ரதங்களையுடைய தசரதன். அவனுடைய புத்திரன்(மகன்) இராமன். இராமனின் மித்திரன்(நண்பன்) சுக்கிரீவன். சுக்கிரீவனின் சத்துரு(பகைவன்) வாலி. வாலியின் பத்தினி(மனைவி) தாரை என்பாள். தாரை என்பதில் காலை எடுத்துவிட்டால் தரை என்றாகிறது. எனவே, முள் தைத்த காலைத் தரையில் தேய்க்க முள் அகன்றுவிடும் என்பது இதன் பொருள். என்னே புலமை தரும் இன்பம்!




குறிப்பு : விவேக சிந்தாமணி”  நூலில் வரும் பாடல் குறிப்பைத் தந்து
         உதவியவர் திரு. வெ.சின்னராசு, கருவம்பாளையம், திருப்பூர்.





து.சுந்தரம், கல்வெட்டு ஆராய்ச்சியாளர், கோவை.
அலை பேசி: 9444939156.



















செவ்வாய், 2 செப்டம்பர், 2014

தேவனாம்பாளையம் அமணலிங்கேசுவரர் கோயில்
                                                        து.சுந்தரம், கோவை

                                                                               கோவைப்பகுதியில் நெகமம் என்னும் ஊருக்கு அருகில் 
தேவனாம்பாளையத்தில் அமைந்திருக்கும் இச் சிவன்கோவில்       அமண             
லிங்கேசுவரர் கோயில் அல்லது “ அமணீசுவரர் கோயில் ”  என அழைக்கப்படுகிறது. இப்பெயரை நோக்கும்போது, பழங்காலத்தில், இக்கோயிலானது ஜைனக்கோயிலாக இருந்திருக்கவேண்டும் எனக்கருதவேண்டியுள்ளது. பிற்காலச் சோழர்கள் காலத்தில் ( அதாவது  கி.பி. 10 
-ஆம் நூற்றாண்டு முதல் கி.பி. 12 ஆம் நூற்றாண்டு வரையிலான கால கட்டத்தில் ) நிகழ்ந்த சைவசமயத்தின் மறுமலர்ச்சியின் விளைவாகத் தமிழகத்தில் பல ஜைனக்கோயில்கள் சிவன் கோயில்களாக மாற்றம் பெற்றன. அவ்வாறு மாற்றம் பெற்ற கோயில்களுள் இதுவும் ஒன்றாக இருக்கக்கூடும். சிவன் கோயிலாக மாற்றம் பெற்றதும் இக்கோயில் கொங்கு நாட்டை ஆண்ட மூன்றாம் விக்கிரம சோழனால் புரக்கப்பட்டிருக்கவேண்டும். ஏனெனில், மூன்றாம் விக்கிரம சோழனின் கல்வெட்டுகள் இக்கோயிலில் காணப்படுகின்றன. வேறு அரசர்களின் கல்வெட்டுகள் எவையும் இங்கு காணப்படவில்லை என்பது கவனிக்கத்தக்கது.

         மன்னர் காலத்தனவாக மொத்தம் எட்டு கல்வெட்டுகள் இங்குள்ளன. அவற்றில், மூன்று கல்வெட்டுகளில் விக்கிரமசோழன் பெயர் காணப்படுகிறது. மற்றவற்றில் அரசன் பெயர் வருகின்ற வரிகள் அழிந்து போயின. ஆனாலும், இவை விக்கிரமசோழனின் இருபத்தொன்பதாம் மற்றும் முப்பதாம் ஆட்சியாண்டுகளில் பொறிக்கப்பட்டவை எனக்கருதலாம்.. விக்கிரமசோழனின் ஆட்சிக்காலம் கி.பி. 1273 கி.பி. 1305 ஆகும். ஆட்சியாண்டுகள் இருபத்தொன்பதும், முப்பதும் முறையே கி.பி. 1302, கி.பி. 1303 என அமைகின்றன. எனவே, சிவன்கோயில் என்னும்  நிலையை எழுநூறு ஆண்டுகளுக்கு முன்பு இக்கோயில் அடைந்தது என்பதும், ஜைனக்கோயிலாக முன்பே இருந்ததால், கோயில் எழுநூறு ஆண்டுகளுக்கும் மேலான பழமை வாய்ந்தது என்பதும் உறுதியாகின்றன.

          இனி, கல்வெட்டுகள் உணர்த்தும் செய்திகள் யாவை எனக்காண்போம்.
ஒரு கல்வெட்டில், கோயிலின் திருநிலைக்கால் வெள்ளாளன் ஒருவனால்  செய்து தரப்பட்டது என்னும் செய்தி உள்ளது. இச்செய்தி, கோயிலில் திருப்பணி நடைபெற்றிருக்கவேண்டும் என்பதைக்காட்டுகிறது. இந்த அறச்செயலைக் குறு நீலி என்ற ஊரைச்சேர்ந்த வெள்ளாளனின் தந்மம்  எனக்கல்வெட்டு குறிப்பிடுகிறது. மற்ற கல்வெட்டுகளிலும், கோயிலுக்குக் கொடைகள் வழங்கப்பட்ட குறிப்புகள் காணப்பட்டாலும், கொடைகள் இன்னவையென்று தெளிவாகத்தெரியவில்லை. காரணம், முழுமையான வரிகளைக்கொண்ட கல்வெட்டுகள் இருக்கும் கற்கள் பல காணப்படவில்லை. எழுநூறு ஆண்டுகளின்



இடைப்பகுதியில் நடைபெற்ற பல்வேறு திருப்பணிகளின்போது கற்கள் காணாமல் (பேணப்படாமல்) போயிருக்கலாம்.
விக்கிரமசோழனின் இருபத்தொன்பது, முப்பது ஆகிய ஆட்சியாண்டுகளில் இக்கொடைகள் யாவும் தரப்பட்டன என்பதை நோக்கும்போது, கி.பி. 1302 ஆம் ஆண்டுக் காலகட்டத்தில் கோயிலில் திருப்பணி நடைபெற்றது என அறிகிறோம். மேலும் கி.பி. 1303-ஆம் ஆண்டுக்கல்வெட்டில், “ திருக்கற்றளியில் “ என்னும் தொடர் வருவது, மேலே குறிப்பிட்ட திருப்பணியானது, செங்கற்கட்டுமானத்திலிருந்து கல் கட்டுமானமாகக் கட்டப்பெற்றதைக் குறிப்பால் உணர்த்துகிறது. இத்திருப்பணியின்போது, வெள்ளாளர் குலத்தைச் சேர்ந்த சோழன் தேவன், எக்கன் கோவனான நீதிபாலன், தேவன் கேசுவன், தேவன் பெம்மான், சந்தனான கொத்துப்பிச் சோழன், கோவன் பூவன் ஆகிய பலர்  கொடையாளிகளாகக் குறிப்பிடப்படுகின்றார்கள். இதில் குறிப்பிடத்தக்க ஒரு செய்தி என்னவெனில், கொடையாளிகள் குறுநீலி “  என்னும் ஊரைச்சேர்ந்தவர்களாகக் குறிப்பிடப்படுகிறாகள். ஒரு கல்வெட்டில், “ குறு நீலியிற் காணியுடைய சிவப்பிராமணர் “  என்னும் தொடர் காணப்படுகிறது. இது, தேவனாம்பாளையத்துச் சிவன்கோயிலைச் சேர்ந்த சிவப்பிராமணர், குறுநீலி கிராமத்தில் காணிக்கான நிலம் பெற்றிருந்தார் என்பதைக் குறிக்கிறது. ஆக, கோயிலுக்குக் கொடை அளித்தவர்கள், கோயிலின் பூசை மற்றும் நிர்வாகம் நடத்தியோர் யாவரும் குறுநீலி கிராமத்துடன் தொடர்புள்ளவர்களாகவே காணப்படுவதனின்றும், குறுநீலி கிராமம் தேவனாம்பாளையத்து அமணலிங்கேசுவரர் கோயிலின் அனைத்து விஷயங்களுக்கும் முதன்மையாகத் திகழ்ந்தது என அறியமுடிகிறது.

         எனவே, குறுநீலி என்னும் பெயருடன் தொடர்புடைய ஊர், தேவனாம்பாளையத்துக்கு அருகில் எங்காவது உள்ளதா எனத் தகவல் திரட்டும்போது, அருகிலே குருநல்லிபாளையம் என்னும் ஊர் இருப்பது தெரிய வந்தது. அங்கு ஏதேனும் கல்வெட்டுச் சான்றுகள் கிடைக்குமா  எனத்தேடத்தொடங்கியதும், அவ்வூரில் பைரவர் கோயிலுக்கு எதிர்ப்புறத்தில் விவசாய நிலத்தில் ஒரு சூலக்கல் கல்வெட்டு கண்டறியப்பட்டது. அந்தக் கல்வெட்டின் பாடத்தைப்படித்ததில், தேவனாம்பாளையத்துச் சிவன் கோவிலுக்கு ( குறிப்பாக அச்சிவன்கோவிலில் இருந்த ஷேத்ரபாலப்பிள்ளையாற்கு அதாவது கால பைரவர்க்கு )  குறுநீலி கிராம நிலங்கள் தேவதானமாக, சர்வ மானியமாகக் கொடுக்கப்பட்டது என்னும் செய்தி தெரியவருகிறது. இதிலிருந்து, தற்போதுள்ள குருநல்லிபாளையம் கிராமமே பழங்காலத்தில் குறுநீலி என வழங்கியது என்பது உறுதியாகின்றது.






         இந்த மானிய நிலங்கள், குறுநீலியில் இருந்தமையால், காலபைரவர் வழிபாட்டையே குருநல்லிபாளையத்துக்கு மாற்றியிருக்கக்கூடும் எனக் கருதவேண்டியுள்ளது. இக்கருத்தினை உறுதி செய்வதுபோல, குரு நல்லிபாளையத்தில் காலபைரவருக்குத் தனிக்கோயில் எழுப்பப்பட்டிருப்பதைப் பார்க்கிறோம். தேவனாம்பாளையத்துச் சிவன்கோயிலுக்குக் குறுநீலி கிராமத்தார் செய்த தானங்களை நோக்கும்போது, கோயில் திருப்பணியில் தற்போதைய குரு நல்லிபாளையத்து கிராமத்தார்க்குப் பெரும் பங்கும் கடமையும் இருப்பது புலப்படும்.
         ஒரு கல்வெட்டில், ஆளுடையார் ஸ்ரீகயிலாயமுடையார் “ என இறைவன் பெயர் காணப்படுவதால், “ அமணலிங்கேசுவரர் “ என்னும் பெயர் பின்னாளில் வழங்கப்பட்ட பெயராகவே தோன்றுகிறது. ஆனால், இப்பெயர், ஜைனக்கோயிலாக இருந்து சிவன் கோயிலாக மாற்றம் பெற்றசமயத்தில், ஜைனத்தின் எச்சமாகத் தங்கிவிட்டது என்பதில் ஐயமில்லை. தமிழகத்தில் பல கோயில்களுக்கு இந்த நிலை ஏற்பட்டுள்ளதைப்பார்க்கிறோம். அருகில் அமைந்துள்ள கரப்பாடி அமணலிங்கேசுவரர் கோயில் மற்றும் திருமூர்த்திமலை அமணலிங்கேசுவரர் கோயில் ஆகியன சான்றுகள். தற்கால மரபுப்படி, இறைவனை “ கைலாச நாதர் “  என  அழைக்கலாம்.
         அடுத்து, கோயிலுக்குக் கொடை அளித்த வெள்ளாளர்களில் பல பிரிவினரைக் காண்கிறோம். வப்புலர், குலாந்தர், மணிகள் ஆகிய குலப்பிரிவினர் பழங்காலத்தில் இருந்துள்ளனர். இது ஒரு சமுதாயச் செய்தியாகும். பின்னாளிலும் தொடர்ந்து இந்த வெள்ளாளர்கள் கோயிலுக்குக் கொடையளித்ததையும், திருப்பணி செய்ததையும் ஒரு கல்வெட்டின் வாயிலாக அறிகிறோம். கலி ஆண்டு 5015 ( கி.பி. 1914 ) பிரமாதீச வருடம், தை மாதம் 1-ஆம் தேதி  அமணீஸ்வரசுவாமி கோவில் முழுதும் ஜீரண உத்தாரணம் செய்யப்பட்டது என்று அந்தக்கல்வெட்டு கூறுகிறது. அதாவது, கோவில் முழுமையும் திருப்பணி செய்யப்பட்டது. தேவனாம்பாளையத்து பொன்ன கோத்திரத்தைச் சேர்ந்த கு.ஆ. பழனிச்சாமிக்கவுண்டன், கு.பெ. பழனிக்கவுண்டன், கு.சி. பழனிக்கவுண்டன் ஆகிய மூவரால் இத்திருப்பணி செய்யப்பட்டது எனக்கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.
         கி.பி. 1303-ஆம் ஆண்டுக் கல்வெட்டு ஒன்றில் கொடையாளி ஒருவரின் பெயர்  சோழந்  தேவநான மண்டல (முதலி) “  என்று வருவதைப்பார்க்கையில், அரசாங்கத்தில் உயர் பதவியில் இருந்தவரும் கோயிலுக்குக் கொடை அளித்துள்ளார் என்று அறிகிறோம்.

து.சுந்தரம், கல்வெட்டு ஆராய்ச்சியாளர், கோவை.

9444939156.



















தேவனாம்பாளையம் அமணலிங்கேசுவரர் கோவில்
கல்வெட்டுகள்

                                                                 து.சுந்தரம்,
                                       கல்வெட்டு ஆராய்ச்சியாளர், கோவை.

கல்வெட்டு எண் : 1
இருப்பிடம் : கருவறையின் தென்புறம்-தட்சிணாமூர்த்தி சன்னதிக்கு   
             இடப்பக்கம்- ஒரு முழுக்கல். அடுத்த கல்லில் ஒரு சிறிய
             பகுதியில் உள்ள எழுத்துகள் கல்வெட்டு எண் 2 உடன்
             சேர்த்துக்கொள்ளவேண்டும்.
குறிப்பு :     இக்கல்வெட்டு கோவை மாவட்டக்கல்வெட்டுகள் நூலில்
             காணப்படவில்லை.

கல்வெட்டு வரிகள் : முழுக்கல்             அடுத்த கல்
                  
             ண்டு முப்பதாவதில் அத்        ந்தரி
             ந்தரில் கோவந் பூவநான        டயார்
                                            ஸ்வர ர

கல்வெட்டு எண் : 2
இருப்பிடம் : கருவறையின் தென்புறம்-தட்சிணாமூர்த்தி சன்னதிக்கு   
             வலப்பக்கம்- ஒரு முழுக்கல்.

குறிப்பு :     மேலே கல்வெட்டு எண் 1 இல் குறிப்பிட்ட சிறிய பகுதியும்
             சேர்த்து. கோவை மாவட்டக்கல்வெட்டுகள் நூலில் பக்கம் 46
             தொடர் எண் : 929/2003

கல்வெட்டு வரிகள் : முழுக்கல்


             நீலியில் வெள்ளாளன் குலாந்தரி
             ஆளுடையார் ஸ்ரீகைலாயமுடையார்
             செலுத்தக்கடவன் ஸ்ரீமாயேஸ்வர ர


கல்வெட்டு எண் : 3
இருப்பிடம் : கருவறையின் கிழக்குப்பக்கம் முதல் கல்
குறிப்பு :     கோவை மாவட்டக்கல்வெட்டுகள் நூலில் பக்கம் 39,40
             தொடர் எண் : 922/2003

கல்வெட்டு வரிகள் : முழுக்கல்- மேல் பகுதி.(தொடர் எண் : 922/2003)
                 ஸ்வஸ்திஸ்ரீ விக்கிரம சோழ தேவற்  
                 ந்று செலுத்துகைக்கு ஓரச்சுக்கொண்டு
                 னுஞ் செலுத்தக்கடவர் ஸ்ரீமாயேஸ்வர ர

கல்வெட்டு வரிகள் : முழுக்கல்- கீழ்ப்பகுதி. (தொடர் எண் : 923/2003)



                  ஸ்வஸ்திஸ்ரீ விக்கிரம சோழதேவற்கு யாண்டு
                  த்திருநிலை கால் குறுநீலியில் வெள்ளாளந்
                  ந்மம்

கல்வெட்டு எண் : 4
இருப்பிடம் : கருவறையின் கிழக்குப்பக்கம் இரண்டாவது கல்
குறிப்பு :     கோவை மாவட்டக்கல்வெட்டுகள் நூலில் பக்கம் 41
             தொடர் எண் : 924/2003

கல்வெட்டு வரிகள் : முழுக்கல்


                  விக்கிரம சோழதேவற்கு யாண்டு முப்ப
                  வப்புலரில் சோழந்தேவநான மண்டல


கல்வெட்டு எண் : 5
இருப்பிடம் : கருவறையின் கிழக்குப்பக்கம்
குறிப்பு :     இது கோவை மாவட்டக்கல்வெட்டுகள் நூலில்   
             காணப்படவில்லை.            

கல்வெட்டு வரிகள் : முழுக்கல்


             யில் வெள்ளாளன் மணிகளில் எக்கந்கோவந் அமரகோநி                
             மணந் தேவந்கேசவநுந் தேவன் பெம்மானும் கல்வெட்டி

        
கல்வெட்டு எண் : 6
இருப்பிடம் : கருவறையின் வடக்குப்பக்கம்
குறிப்பு :     கோவை மாவட்டக்கல்வெட்டுகள் நூலில் பக்கம் 44,45
             தொடர் எண் : 927/2003,928/2003

கல்வெட்டு வரிகள் : முழுக்கல்- மேல் பகுதி.(தொடர் எண் : 927/2003)

                 ற்கு யாண்டு இருபத்தொந்பதாவது குறு
                 மணன் தேவன் கேசுவனும் தேவந் பெம்மானும்
                 குடங்கொடு கோயில் புகுவான் யாவந்னாயிலும்
                
கல்வெட்டு வரிகள் : முழுக்கல்- கீழ்ப்பகுதி. (தொடர் எண் : 928/2003)


                  யாண்டு முப்பதாவதில் திருக்கற்றளியில் வட
                  ளந் குலாந்தரில் கள்ளந் சந்தனான கொத்தப்பிச்சோ

கல்வெட்டு எண் : 7
இருப்பிடம் : கருவறையின் வடக்குப்பக்கம்

கல்வெட்டு வரிகள் : முழுக்கல்


                          த்தாம குறுநீலியில்


கல்வெட்டு எண் : 8
இருப்பிடம் : கருவறையின் வடக்குப்பக்கம்

கல்வெட்டு வரிகள் : முழுக்கல்
குறிப்பு :     கோவை மாவட்டக்கல்வெட்டுகள் நூலில் பக்கம் 42,43
             தொடர் எண் : 925/2003,926/2003


கல்வெட்டு வரிகள் : முழுக்கல்- மேல் பகுதி.(தொடர் எண் : 925/2003)

             கு யாண்டு இருபத்தொன்பதாவதில் குறுநீலி
             டாம் குறுநீலியிற் காணியுடைய சிவபிர
             க்‌ஷை


கல்வெட்டு வரிகள் : முழுக்கல்- கீழ்ப்பகுதி.(தொடர் எண் : 926/2003)


              முப்பதாவதில் அத்தமண்டபத்தில் தெக்கு
              மணிகளில் எக்கந் கோவனான நீதிபாலந்


து.சுந்தரம்,
கல்வெட்டு ஆராய்ச்சியாளர், கோவை.
9444939156.