மொத்தப் பக்கக்காட்சிகள்

சனி, 13 மே, 2017

வீரக்கை என்னும் சதிக்கல்

முன்னுரை
இரண்டு ஆண்டுகளுக்குமுன், திருப்பூர் மாவட்டம், அவிநாசி வட்டத்திலிருக்கும் சேவூரில் “தினமலர்”  நாளிதழின் திருப்பூர்ப் பகுதிச் செய்தியாளர் மகேஷ் அவர்கள் தாம் பார்த்திருந்த ஒரு நடுகல் சிற்பத்தைப்பற்றித் தந்த தகவலின் அடிப்படையில், கட்டுரை ஆசிரியரும் அவிநாசியைச் சேர்ந்த வரலாற்று ஆர்வலரான ஜெயசங்கரும் சேவூரில் கள ஆய்வு மேற்கொண்டனர்.

வெட்டப்பட்ட ஒரு கையின் சிற்பம்
சேவூர்-புளியம்பட்டிச் சாலையில் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்துக்கு அருகில் சாலையோரம், “தினமலர்செய்தியாளர் குறிப்பிட்ட அந்த நடுகல் சிற்பம் இருந்தது. இது 13.4.2014 அன்று வைக்கப்பட்ட நடுகல். தேதி, நடுகல்லில் பொறிக்கப்பட்டிருந்தது. கருங்கல்லில் நேர்த்தியாகச் செதுக்கப்பட்ட சிற்பத்துடன் கூடிய நெடிய பலகைக்கல். சந்திரன் மற்றும் சூரியன் ஆகியவற்றின் உருவங்கள் கல்லின் உச்சிப்பகுதியில் செதுக்கப்பட்டு, அதன் கீழ்ப்புறம் இரு பெண்கள் மலர்கொண்டு பூசிக்கும் தோற்றத்தில் ஒரு சிவலிங்கமும் அதன் கீழாக உயர்த்திய நிலையில் ஒரு கையும் செதுக்கப்பட்டிருந்தன. அங்குள்ள மக்களிடம் இந்த நடுகல்லைப்பற்றிக்கேட்டபோது, அவர்கள் சொன்னதாவது:


                                              சேவூர்  நடுகல் 



மக்களிடை வழங்கும் செய்தி
இந்த நடுகல்லில் காணப்படுவதுபோலவே சிற்பங்கள் செதுக்கப்பட்ட பழங்கால நடுகல் ஒன்று முன்பு இங்கு சாலையோரம் இருந்தது. சரக்குந்து ஊர்தியொன்றால் அது தாக்குண்டு உடைந்து போனது. உடைந்த துண்டுகளை ஆற்றில் எறிந்துவிட்டனர். பழமையான நடுகல் திப்புசுல்தான் காலத்ததாகும். வீரன் ஒருவன் கை வெட்டுப்பட்ட நிலையில் இறந்துபடுகிறான். அவன் நினைவாக, கையை முன்னிலைப்படுத்தி எழுப்பப்பட்ட நடுகல். பழங்கல்லில் இருந்தவாறே உருவங்களை அமைத்து, தற்போது இக்கல் எழுப்பப்பட்டுள்ளது.  மக்கள் சாமிக்கல் என்று அழைத்து வழிபடுகின்றனர். பழங்கல் பாதுகாக்கப்படவில்லையே என்னும் வருத்தம் தோன்றினாலும் அதன் நினைவைக் காக்கின்ற முயற்சியாகப் புதியதொரு கல்லையாவது பழமையின் கருத்து மறையாமல் இருக்கும் வண்ணம் நாட்டியுள்ளனர் என்பது ஆறுதல் தருகிறது. பழங்கல்லின் காலம் கி.பி. 18-ஆம் நூற்றாண்டு ஆகும்.

மீளாய்வு
மேற்படி நடுகல்லில், வீரனின் உருவம் எதுவும் காணப்படாததும், கை மட்டுமே மையப்படுத்தப்பட்டுள்ளதும், இந்நடுகல் வழக்கத்துக்கு மாறாயுள்ள ஒரு நடுகல் என்ற எண்ணத்தை ஏற்படுத்தியதோடல்லாமல், மீளாய்வு நோக்கில் கருத்துகளைத் தேடவேண்டும் என்ற எண்ணத்தையும் வலுவாக்கியது. நடுகல்லில் காணப்படும் கை ஓர் ஆணின் கையல்ல. பெண்ணின் கை. கையில் வளையல்கள் காணப்படுகின்றன. வீரர்களுக்கு எடுக்கப்படும் நடுகற்களில், குறிப்பாகக் கையை மட்டும் புடைப்புச் சிற்பமாகக் கொண்ட நடுகல் பற்றிய செய்தி கேள்விப்பட்டிராத ஒன்று. எனவே, இந்த நடுகல் வேறு வகையினதாக இருக்கவேண்டும்; இதுபற்றி மக்களிடையே வழங்கும் செய்திகள் சரியானவையாக இருக்கவாய்ப்பில்லை. இந்தக்கோணத்தில் தேடுதல் தொடர்ந்த வேளையில், 1918-ஆம் ஆண்டின் தொல்லியல் ஆண்டறிக்கையில் ஒரு குறிப்பு, மேற்படி நடுகல்லைப்பற்றிய தெளிவைத் தந்தது. 1917-ஆம் ஆண்டு, ஆந்திரப்பகுதியில் அனந்தபூர் மாவட்டத்தில் வனவோலு என்னும் ஊரில் கோட்டைகருகில் ஒரு சதிக்கல் கல்வெட்டு கண்டறியப்பட்டுப் பதிவானது பற்றி எழுதப்பட்டிருந்தது.    

வீரக்கை (HERO-HAND) என்னும் சதிக்கல்

பெனுகொண்டா என்னும் ஊரில், இராமதேவ நாயக்கன் என்பான் இறந்ததும், அவன் மனைவி கங்காசானி என்பவள் தீப்பாய்ந்தாள். அவளுடைய இச்செயலைப் பெருமைப்படுத்தும் வகையில், திப்ப நாயக்கன் என்பவன் ஒரு நந்தவனத்தை அமைத்து அதன் முன்பாக ஒரு வீரக்கை  (HERO-HAND) நடுகல்லை நிறுவினான். இச்செய்தியைக் கொண்ட கல்வெட்டு கன்னட மொழியில் எழுதப்பட்டுள்ளது. கல்வெட்டின் காலம் கி.பி. 1405

குற்றாலத்தைச் சேர்ந்த சொ. சந்திரவாணன் என்பவர், தம்முடைய “தமிழகத்தில் சதி”  என்னும் ஆய்வுக்கட்டுரையில் குறிப்பிடுவதாவது: உடன் உயிர் விடும் ப்ழக்கம் மன்னரில் தொடங்கி அனைவரிடமும் பன்னெடுங்காலம் இருந்துள்ளது. தீப்பாய்ந்த அம்மன், மாலையிட்ட அம்மன், பாவாடைக்காரி என்று பலவாறு வணங்கப்படும் பெண் தெய்வங்கள் இவ்வாறு உடன் உயிர் நீத்த “சதிப் பெண்களே. கணவனோடு சுமங்கலியாகச் சுவர்க்கம் புகுதல், சமுதாயம் சதிப்பெண்களைத் தெய்வமாகப் போற்றுதல் ஆகிய நம்பிக்கையின் அடிப்படையில் “சதிஎன்னும் மரபு சமுதாயத்தில் தொடர்ந்தது.

தமிழகத்தில் பெரும்பாலும், கையில் வாள் பிடித்த நிலையில் ஆணின் உருவமும், பூச்செண்டு, கண்ணாடி, குங்குமச்சிமிழ், அல்லது பழம் போன்றதோர் உருண்டைப்பொருளைக் கையில் பிடித்த நிலையில் பெண்ணின் உருவமும் பொறிக்கப்பட்ட சதிக்கற்கள் காணப்படுகின்றன. சில சதிக்கற்களில் கல்வெட்டுப் பொறிப்பும் உண்டு. பொறிப்புகளில் கணவனைப் பிரியாதாள்”,  “துணைவனைப் பிரியாதாள் ஆகிய தொடர்கள் காணப்படுகின்றன. ஆளுருவங்களே அன்றி, ஒருசில மங்கலப்பொருள்களால் உணர்த்தியும் சதிக்கற்கள் அமைவதுண்டு. ஒரு பெண்ணின் வலது கை, தோளிலிருந்து “டவடிவம் போல உயர்த்திக்காட்டப்பட்டு,  பூணிடப்பட்ட கம்பத்தில் அந்தக்கை இணைக்கப்பட்டுக் காணப்படுவதுண்டு. சென்னை அருங்காட்சியகத்தில் இது போன்ற கம்பங்கள் உள்ளன. இக்கம்பங்கள் உள்ள இடங்கள், வீரமாத்தி என்னும் பெயரில் அழைக்கப்படுகின்றன. ஒரு கல்வெட்டு “தோளும் கையும் கொடுத்த கம்பம்”  என்று இதைக்குறிப்பிடுகிறது.

இந்திய அளவில் சதிக் கற்கள்







                இறந்த கணவனின் காலைத் தழுவியவாறு “சதி”


இந்திய அளவில், இந்தியாவின் மைய மாநிலப்பகுதி, குஜராத், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் சதிக்கற்கள் மிகுதியாகக் காணப்படுகின்றன. இவ்விடங்களில் பெரும்பாலும், சதிக்கற்கள் ஓரிரு அடுக்குகள் கொண்டதாக உள்ளன. மேல் அடுக்கில், ஒரு பெண்ணின் கை புடைப்புச் சிற்பமாக வடிக்கப்பட்டிருக்கும். செங்கோணத்தில் (90 பாகை) மடித்த நிலையில் தோளும், செங்குத்தாக உயர்த்திய நிலையில் முன்கையும் காணப்படும். சில போது, பெண் தன் கையில் பெருவிரலுக்கும் முன்விரலுக்கும் இடையில் எலுமிச்சம் பழமொன்றை ஏந்தியிருப்பாள். கைக்கு மேற்புறம், நிலவும், கதிரும் வடிக்கப்பட்டிருக்கும். சில போது, நிலவு, கதிர் ஆகியவற்றோடு பூச்செண்டு, தேங்காய் ஆகியன காணப்படும். அருகில் சிவலிங்கம் இருப்பதும் உண்டு. இன்னொரு அடுக்கில், வீரன் வாளொடு நின்ற நிலையிலும், அவனருகில் அவன் மனைவி (சதி) நின்ற நிலையிலும் இருப்பது போன்ற தோற்றம். சில போது, மற்றுமொரு அடுக்கில், வீரன் குதிரையின் மீது அமர்ந்த நிலையில் (போர்க்காட்சியை உணர்த்துவது) இருப்பது போன்ற தோற்றம். வீரனின் தலைக்குமேல் குடை இருந்தால், அவன் அரசனாகவோ அல்லது படைத்தலைவனாகவோ இருப்பான். இறந்துபோன கணவனின் காலைத் தழுவிய நிலையில் மனைவி இருப்பதாக வடிக்கப்பட்ட சதிக்கற்களும் உள்ளன. சதிப்பெண்ணை வணங்குகின்றவர்களுக்கு அவள் நலமும், வளமும் சேர்ப்பாள் என்பது மக்கள் நம்பிக்கை.

கருநாடகத்தில் சதிக்கற்கள்

                                  சாமராஜநகர் சதிக்கல் - தோளும் கையும் கொடுத்த கம்பம் 
                                                             கையில் ஏந்திய எலுமிச்சை


கருநாடகத்தில் வீரக்கற்கள் என்னும் நடுகற்களைப்போலவே சதிக்கற்கள் என்னும் நடுகற்கள் மிகுதியும் காணப்படுகின்றன. சென்ற ஆண்டு நண்பர்களோடு “ஹம்பி”  என்னும் விஜயநகரம் சென்றபோது, சாமராஜ நகரம் என்னும் ஊருக்கு நாலுகல் தொலைவில் சாலையோரம் ஒரு நடுகல்லைப் பார்த்தோம். மகிழுந்தை நிறுத்தி அதனை ஒளிப்படம் எடுத்துக்கொண்டோம். அப்போது அது ஒரு நடுகல் என்ற பொதுக்கருத்து மட்டுமே மனதில் நின்றது. சேவூர் நடுகல்லை மீளாய்வு செய்கையில், சாமராஜநகரத்து நடுகல், “தோளும் கையும் கொடுத்த கம்பம் என்ற வகையைச் சேர்ந்த “சதிக்கல்லுக்குச் சிறந்த எடுத்துக்காட்டு என்பது உணரப்பட்டது. இந்தச் சதிக்கல் சிதைவு ஏதுமின்றித் தெளிவான புடைப்புச் சிற்பங்களைக் கொண்டுள்ளது. சதிஎன்னும் மரபுப்படி, உயிர் நீத்த பெண்ணின் வளைகள் அணிந்த வடிவக் கை; அக்கை பிணைக்கப்பட்ட, வேலைப்பாடுகளோடு காணப்படும் கம்பம்; இறந்து பட்ட வீரனைத் தேவமகளிர் விண்ணுலகத்துக்கு அழைத்துச் செல்லும் காட்சி; வீரன் விண்ணுலகு அடைந்ததைக் குறிப்பால் உணர்த்தும் சிவலிங்க வழிபாடு; நடுகல்லின் கீழ்ப்பகுதியில் “சதிப் பெண்ணை வணங்குகின்ற பெண்மக்கள் ஆகிய அனைத்துக் கூறுகளும் இச்சிற்பத்தில் உள்ளன.. இந்தச் சதிக்கல்லில் சதிப்பெண் தன் கையில் பெருவிரலுக்கும் முன்விரலுக்கும் இடையில் எலுமிச்சம் பழமொன்றை ஏந்தியிருப்பது சிறப்பான கூறு.

சதிக்கற்களில் உள்ள உருவங்கள் உணர்த்தும் உள்ளுறைக் கருத்துகள்

சதிக்கற்களில் காணப்பெறும் புடைப்புச் சிற்ப உருவங்கள் பல கருத்துகளை உணர்த்துவதாக அமைகின்றன. நிலவு, கதிர், சிவலிங்கம் ஆகியவை சுவர்க்கம் என்னும் விண்ணுலகைக் குறிப்பன. பெண்ணின் கையில் உள்ள வளை, “சதிப்பெண்ணை வணங்குவோருக்கு அவள் அருளும் ஆசியைக்குறிக்கும்.

சேவூர் நடுகல்லும் சதிக்கல்லே

மேற்குறித்த செய்திகளின் அடிப்படையில், சேவூரில் காணப்படும் நடுகல், ஒரு சதிக்கல் என்பது தெளிவாகிறது. நடுகல்லில் மேற்பகுதியில் நிலவும், கதிரும் காணப்படுகின்றன. அதனை அடுத்து, இரு பெண்கள் சிவலிங்க வழிபாடு செய்யும் காட்சி உள்ளது. அதனை அடுத்து, வளை அணிந்த “சதிப்பெண்ணின் கை. வீரக்கை (HERO-HAND) என்னும் சதிக்கல்லின் உள்ளடக்கத்தைக் கொண்டுள்ளதில் ஐயமில்லை. திப்புசுல்தான் காலத்தைச் சேர்ந்த ஒரு சதிக்கல்லின் மூல நடுகல்லான அரியதொரு தொல்லியல் சின்னத்தை நாம் இழக்க நேர்ந்தது வருத்தமளித்தாலும், வியப்பை அளிக்காது. காரணம், தொல்லியல் சார்ந்த எவ்வளவோ எச்சங்களை அவ்ற்றின் அருமை அறியாதார் அழிப்பதும், அருமை அறிந்தவர் அவற்றை அழிவிலிருந்து காக்கும் வழியறியாது விழிப்பதும் தொடர்ந்து நடைபெறுகின்றனவே. தொல்லியல் துறையும், அரசும் அக்கறை கொள்ளவேண்டும். சேவூரின் வீரக்கை வகைச் சதிக்கல்லின் மூலவடிவத்தை மறந்துபோகாமல் நினைவூடும் வண்ணம் அதே வடிவில் படியெடுத்ததுபோல் மற்றொரு நடுகல்லை மக்கள் அதே இடத்தில் வைத்து வழிபடுவதைப் பாராட்டியே ஆகவேண்டும்.


நன்றி –1 இணையம் வழி பார்த்த ஓர் ஆய்வுப்பதிவு.
        The  iconography of Sati: An Archaeological study of sati memorial
                    Pillars of Central Asia-by Ameeta Singh, Sarojini Naidu Govt. Girls
                    College, Bhopal.

               2    தமிழகத்தில் சதி-ஆய்வுக்கட்டுரை-சொ.சந்திரவாணன்.

               3    இணையத்தில் கிடைத்த படங்களுக்காக. 





து.சுந்தரம், கல்வெட்டு ஆராய்ச்சியாளர், கோவை.
அலைபேசி : 9444939156.
  

வியாழன், 4 மே, 2017


திருநந்திக்கரைக் குடைவரை-வட்டெழுத்துக் கல்வெட்டு 
(THIRUNANTHIKKARAI  ROCK-CUT CAVE  VATTEZHUTHTHU INSCRIPTION)

திருவாங்கூர் தொல்லியல்துறை
     திருவாங்கூர் தொல்லியல் துறையினர், திருவாங்கூர் தொல்லியல் வரிசை என்னும் கல்வெட்டுத் தொகுப்பினை வெளியிட்டுள்ளனர். திருவாங்கூர் மாகாணத்துத் தொல்லியல் துறைத் தலைவராயிருந்த கே.வி. சுப்பிரமணிய ஐயர் பதிப்பித்த தொகுதி மூன்றில் வெளியாகியுள்ள திருநந்திக்கரைக் குடைவரைக் கல்வெட்டு, வட்டெழுத்துக் கல்வெட்டு என்னும் முறையில் ஈர்த்தது. அது பற்றிய ஒரு பகிர்வு இங்கே.  

திருநந்திக்கரைக் குடைவரை




         தற்போது இதன் அமைவிடம் கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகில். ஆனால், மேற்படி பதிப்பு நூலில், திருநந்திக்கரை, பத்மநாபபுரம் கோட்டம் கல்க்குளம் வட்டத்தில் இருந்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. குடைவரையின் நுழைவு வாயிலில் வலப்புறத்தில் கல்வெட்டு வெட்டப்பட்டுள்ளது. கல்வெட்டு வட்டெழுத்தில் தமிழ் மொழியில் அமைந்துள்ளது. இக்குடைவரைக்கோயிலின் பெயர் திருநந்திக்கரை பட்டாரர் கோயில் என்பதாகும். கோயிலில் ஒரு நந்தாவிளக்கு எரிப்பதற்காக ஒன்பது எருமைகள் கொடையளிக்கப்பட்டுளதைக் கல்வெட்டு தெரிவிக்கிறது. கொடையாளி, சித்தகுட்டி அம்பி ஆகிய ஐந்நூற்றுவ முத்தரையன். என்னும் ஒரு தலைவன். இவன் நாஞ்சிநாட்டு வேய்கோட்டுமலையைச் சேர்ந்தவன். கல்வெட்டில் உள்ள காலக்குறிப்பு, கறைக்கண்டீசுவரத்துக் கலங்கள் அழிக்கப்பட்ட ஆண்டு எனக் கூறுகிறது. ஆனால், இந்த நிகழ்வு எப்போது நிகழ்ந்தது எனத் தெரியவில்லை. கறைக்கண்டீசுவரம் என்பது இரணியல் வட்டத்தில் கடிகைப்பட்டினம் என்னும்  ஊரின் அருகில் அமைந்த ஒரு சிற்றூர். எழுத்தமைதியைக் கொண்டு, கல்வெட்டின் காலம் கி.பி. 12-ஆம் நூற்றாண்டுக்கு முற்பட்டதல்ல என வரையறுத்திருக்கிறார்கள்.

                   கல்வெட்டு - தொல்லியல் நூலில் உள்ளவாறு

கல்வெட்டின் பாடம்

 1 ஸ்வஸ்திஸ்ரீ கறைக்கண்
2  ட ஈச்வரத்துக் கலம
3  ற்ற யாண்டு திருநந்தி
4  க்கரை ட்டாரகர்க்கு
5  நாஞ்சிநாட்டு வெய்கோ
6  ட்டு மலையுடைய
7  சித்தகுட்டி அ
8  ம்பியாயின அஞ்ஞூ
9  ற்றுவ முத்தரையன்
10 நிசதம் உரிய் நெய்
11 எரிவதாக வைச்ச திரு
12 நந்தாவிளக்கு ஒன்று
13 க்கு வைச்ச சாவா மூவா எ
14 ருமை ஒன்பது இவை பெ
15 ருமக்களுக்குச் சமைஞ்(ச)
16 இடையன் ....... மங்கல
17  வன் வய்த்(தா)ன்

குறிப்பு :  சிவப்பு வண்ண எழுத்துகள் கிரந்தம்.

                                              கல்வெட்டு -  பார்வைப்படி


குறிப்புகள்

1 பட்டாரகர்
     பட்டாரகர் -  இது ஒரு சமற்கிருதச் சொல். “ப4ட1”   (Bhata),  “ப4ட்1ட1 (Bhatta)  ஆகிய இரு சொற்களைச் சமற்கிருத அகரமுதலி குறிக்கிறது. முதலாம் பட”  ஒரு போர்வீரனைக் குறிக்கும்; இரண்டாம் “பட்ட”  என்பது ஒரு எஜமானன், சிரந்த அந்தணன் ஆகிய இரு பொருள் தரும். இதேபோல், பட்டாரக(ர்) (“Bhattaraka”)   என்னும் சொல் மதிப்புக்குரியவர், தேவர்களின் தேவர் என இரு பொருளைக் குறிப்பதாக அகரமுதலி சுட்டுகிறது. கல்வேட்டுகளில், இச்சொல் கடவுளைக் குறிக்கவும்  சமண அறிஞர்களைக் குறிக்கவும் பயன்படுகிறது. (கொங்கு நாட்டு உடுமலை அருகேயுள்ள ஐவர்மலைக் கல்வெட்டில் “குணவீரக்குரவடிகள் மாணாக்கர் சாந்திவீரக் குரவர் திருவயிரை பாரிச்வ படாரரையும் இயக்கி அவ்வைகளையும் புதுக்கிஎன்று குறிக்கப்பெறுவதைக் காண்க.) பெரும்பாலும் “பட்டார(ர்)”  என்பதாகவே “கஎழுத்து நீங்கிய நிலையில் - கல்வெட்டுகளில் பயில்கிறது. “பட்டாரிக  “Bhattarika” என்பது பட்டாரக”  என்பதன் பெண்பாற்பெயர். எனவே, பெண் தெய்வத்தையும், பெண் அறிஞரையும் (பெண் துறவி?) குறிக்கும். பெண்தெய்வத்தைக் குறிக்கும் இப்பெயர், படாரி, பிடாரி எனத் திரிந்து ஒலிக்கும். சோழர் காலக் கல்வெட்டுகளில் கொற்றவை அல்லது அம்மன் கோயில்களில் உள்ள பெண் தெய்வம் பிடாரி என்றே வழங்கப்பட்டது. நிலக்கொடை தொடர்பான சோழர் கல்வெட்டுகளில், நிலத்தின் எல்லைகளைக் குறிப்பிடும்போது பல இடங்களில் “பிடாரி கோயில்  என்னும் தொடரைக் காணலாம். கொற்றவை என்பவள் கடுஞ்சினத்தையும் வீரத்தையும் கொண்ட பெண்தெய்வம் என்பதால், நம் வீடுகளில் பெண் குழந்தைகள் வன்மையான ஓர் இயல்பை, போக்கை வெளிப்படுத்தும்போது, அவர்களைப் பிடாரிஎனத்திட்டுவதைக் காண்கிறோம். இங்கே, நமது கல்வெட்டில் இறைவனின் பெயர் திருநந்திக்கரை பட்டாரகர் என்றே குறிப்பிடப்பெறுகிறது.

2. நாஞ்சிநாடு
          நாஞ்சில் நாடு என்பது இக்கல்வெட்டில் நாஞ்சிநாடு என்று குறிப்பிடப்படுகிறது. கி.பி.800 முதல் கி.பி. 1300 வரையிலான காலகட்டத்தில், கல்வெட்டுகளில் நாஞ்சில் நாடு பற்றிய குறிப்புகள் உள. இன்றும் நாஞ்சில் நாடு என்னும் வழக்கு உள்ளது. நாகர்கோயில் பகுதியே நாஞ்சில் நாடு. திருவாங்கூர் அரசின் கீழ் இருந்த நாடு.

3 வெய்கோட்டுமலை/வேய்கோட்டுமலை
   ல்வெட்டில் குறிப்பிடப்பெறும் வேய்கோட்டுமலை தற்போது எந்த மலையைக்குறிக்கும் எனத்தெரியவில்லை

4 அஞ்ஞூற்றுவ முத்தரையன்
      பண்டு இருந்த வணிகக் குழுக்களில் ஐந்நூற்றுவர் என்பவரும் ஒரு பிரிவினர். கொடையாளியின் இயற்பெயர் சித்தகுட்டி அம்பி என்பதாகும். இவன் ஐந்நூற்றுவர் வணிகப் பிரிவைச் சேர்ந்தவன். முத்தரையன் என்னும் சிறப்புப் பெயருடைய ஒரு தலைவன் எனத்தெரிகிறது. ஐந்நூற்றுவர் என்பது கல்வெட்டுகளில் சற்றே திரிந்து அஞ்ஞூற்றுவர் எனப் பயின்று வருவதைக் காண்கிறோம்.

5 சாவா மூவா எருமை
     கோயிலில் நந்தாவிளக்கு எரிக்கக் கொடையாகத் தொண்ணூறு ஆடுகளைக் கொடுப்பது பெரும்பாலும் கல்வெட்டுகளில் காண்கின்ற ஒன்று. ஒரு சில கல்வெட்டுகளில், பசுக்கள் கொடையும் காணப்படுகிறது. எருமை கொடையாக அளிக்கப்படுவது குறைவு. இக்கல்வெட்டில், ஒன்பது எருமை கொடையளிக்கப்படுகிறது. ஒருவேளை, நாஞ்சில் நாட்டுப்பகுதியில் எருமைகள் நிறைய இருந்திருக்கலாம். சாவா மூவா என்பது கொடையளிக்கப்பட்ட எருமைகளின் எண்ணிக்கையான ஒன்பது, தொடர்ந்து மாற்றமின்றி இருக்கும் என்பதன் குறிப்பாகும். தொடக்கத்தில் கொடுக்கப்பட்ட எண்ணிக்கை, சாவினால் குறையும். தொடக்கத்தில் உள்ள கன்றுகள் மூப்படையும். ஆனாலும், காலப்போக்கில், புதிதாகப் பிறக்கும் கன்றுகளின் எண்ணிக்கையால் சாவும் மூப்பும் ஈடு செய்யப்பெற்று தொடக்க எண்ணிக்கை குறையாமல் இருப்பதை ”சாவா மூவா” என்பது சுட்டும்.

6 இடையன் மங்கலவன்
      கோயிலில் விளக்கெரிக்கக் கொடுக்கப்படும் ஆடுகள், எருமைகள் ஆகியவை, கோயில் சார்பாக, ஊர்ச்சபையினர் நியமித்த இடையர்களுக்கு வழங்கப்படும். இடையர்கள், இவற்றைத் தம் வாழ்வாதாரமாகக் கொண்டு, கோயிலுக்கு நிசதம் (நாள்தோறும்) உரி நெய் அளிக்கும் பொறுப்பை ஏற்கிறார்கள். உரி என்பது முகத்தலளவைக் குறியீடு. சென்ற நூற்றாண்டு வரை சொல் வழக்கிலிருந்த படி என்னும் அளவில் அரைப்பங்கு உரியாகும். ஆழாக்கு என்பது ஒரு சிறிய அளவு.

இரண்டு ஆழாக்கு = ஓர் உழக்கு                    
இரண்டு உழக்கு = ஓர் உரி
இரண்டு உரி = ஒரு நாழி (படி)

கல்வெட்டில், இடையனின் பெயராக மங்கலவன் பவித்திரன் எனக் குறிப்பிட்டிருக்கிறார்கள். இதில், பவித்திரன் என்ற பாடம் உறுதியில்லை எனக் கருதுகிறேன். காரணம் இறுதி வரியின் மூன்றாம் நான்காம் ஐந்தாம் எழுத்துகள் “வ”, “ய்”, “த்”  என உள்ளன. இறுதி எழுத்து “ன்”.  எனவே, ”வய்த்(தா)ன்”  என்ற பாடம் சரியாகத் தோன்றுகிறது.. கல்வெட்டின் பதினாறாம் வரியில், இடையன் என்னும் சொல்லுக்கும், மங்கல என்னும் சொல்லுக்கும் இடையில் “வெ” , “ன்”  என்னும் எழுத்துகள் காணப்படுகின்றன. அவை இடையனின் இயற்பெயரைக் குறிக்கும் எழுத்துகள் ஆகலாம். 
பாட பேதம் கீழ்வருமாறு :

16 இடையன் வெ - - ன் மங்கல
17. வன் வய்த்(தா)ன்


7 கிரந்த எழுத்துகள்
      கல்வெட்டில் மிகக் குறைந்த எண்ணிக்கையில் கிரந்த எழுத்துகள் உள்ளன. முதல் வரியில் முதற்சொல் “ஸ்வஸ்திஸ்ரீ”  முழுதும் கிரந்த எழுத்துகளே. நான்காம் வரியில், பட்டாரகர் என்னும் சொல்லின் முதல் எழுத்து கிரந்தம்.

8 எழுத்துகளின் அமைதி/வடிவம்
       வளர்ச்சியுற்று நிலைபெற்ற வட்டெழுத்துகளின் பொது வடிவம், சில எழுத்துகளில் இக்கல்வெட்டில் மாற்றம் பெற்றுள்ளது. அவை , ”,  “ன ஆகிய மூன்று எழுத்துகள். மூன்றிலுமே, எழுத்துகளின் கோடுகள் இடைவெளியின்றி மூடப்பட்டுள்ளன. கீழே தந்துள்ள படத்தின் உதவிகொண்டு இது விளக்கம்  பெறும். லைஎன்னும் எழுத்து, இன்றுள்ள வடிவத்திலிருந்து முற்றும் மாறுபட்டுக் காணப்படுவது குறிப்பிடத்தக்கது. மூன்றாம் வரியில் “ணஎழுத்தும் வடிவத்தில் சற்றே மாற்றம் கொண்டுள்ளது. “ஞ”, “ஞூ” எழுத்துகளும் மாற்றம் கொண்டுள்ளன. 



  



குறிப்பு:  குடைவரையின் ஒளிப்படங்கள் இணையத்திலிருந்து எடுத்தவை.
 ------------------------------------------------------------------------------------------------------------
து.சுந்தரம், கல்வெட்டு ஆராய்ச்சியாளர், கோவை.
அலைபேசி : 9444939156.