மொத்தப் பக்கக்காட்சிகள்

வியாழன், 19 மார்ச், 2020


திருப்புக்கொளியூர் அவிநாசியும் சீனாவும்


அவிநாசி

ஒருங்கிணைந்த கோவை மாவட்டத்தில் அமைந்திருந்த ஊர் அவிநாசி. இது தற்போது திருப்பூர் மாவட்டத்தில் இணைக்கப்பட்டுள்ளது. இவ்வூர் ஒரு புண்ணிய பூமியாகக் கருதப்படுகிறது.  விநாசம் என்னும் சமற்கிருதச் சொல்லுக்கு அழிவு என்பது பொருள்.  வினைக்கோட்பாடு என்னும் ஒரு மெய்யியல் கோட்பாடு உண்டு. நாம் ஆற்றும் வினைகளுக்கேற்ப நம் வாழ்க்கை அமையும் என்பது அதனுடைய எளிய விளக்கம். நல்வினை நன்மையையும், தீவினை தீமையையும் பயக்கும். விநாசம் என்னும் அழிவுக்கு எதிர்ச்சொல் அவிநாசம். நாம் ஆற்றிய தீவினைகளை அழித்து என்றும் அழியா நன்மையை (புண்ணியம்) நமக்கு அளிக்கும் அழிவிலாப் பூமியாக அவிநாசி ஊர் விளங்குவதால் அப்பெயர் பெற்றது எனலாம். அத்தகு ஊரில் கோயில் கொண்டு எழுந்தருளியுள்ள ஈசன் அவிநாசியப்பன். அவிநாசி என்னும் நிலையான பெயர் கொண்ட இவ்வூருக்கு ஓர் இயற்பெயர் இருந்தது. இப்பெயர் பலரும் அறியாப் பெயராகும். திருப்புக்கொளியூர் என்பதே அவ்வியற்பெயர். சைவ சமயக் குரவர் நால்வரில் ஒருவரான சுந்தரர் இவ்வூர்க் கோயிலுக்கு வந்து வழிபட்டுப் பாடிய தேவாரப் பதிகத்தில் ”திருப்புக்கொளியூர் அவிநாசி”  என்றே குறிப்பிடுகிறார். கி.பி. 1350-ஆம் ஆண்டுக் கல்வெட்டு ஒன்றும் இவ்வூரை  “வடபரிசார நாட்டுப் புக்கொளியூர்  என்றே குறிப்பிடுகிறது.

அவிநாசிக் கோயிலின் பழமை

வரலாற்று ஆய்வாளர் குடந்தை சேதுராமன், சுந்தரரின் காலத்தை கி.பி. 700-728 எனக் கணித்துள்ளார். எனவே, அவிநாசிக்கோயில் ஆயிரத்து முன்னூறு ஆண்டுகளுக்கு முந்தையது எனக் கொள்ளலாம். ஆனாலும், கோயில், கல்கட்டுமான அமைப்பைப்பெற்றுக் கல்வெட்டுகள் பொறிக்கப்படும் காலகட்டத்தைக் கொங்குச் சோழர்  ஆட்சியின்போதே அடைந்தது. காலத்தால் பழமையான கல்வெட்டு கொங்குச் சோழ அரசன் முதலாம் குலோத்துங்கனின் காலத்தைச் சேர்ந்தது. (கி.பி. 1152).

கல்வெட்டுச் செய்திகள்

சிறப்பான செய்திகளைத் தாங்கிய பல கல்வெட்டுகள் இக்கோயிலில் உள்ளன. அவிநாசி, கொங்குநாட்டில் இருந்த நிருவாகப் பிரிவுகளான இருபத்து நான்கு நாட்டுப்பிரிவுகளில் ஒன்றான வடபரிசார நாட்டில் அமைந்திருந்தது. இந்த நாடுகளுக்கு நாட்டுச் சபைகள் என்னும் நிருவாகச் சபைகள் இருந்தன.  இருப்பினும், வெள்ளானூர், பூலுவனூர் ஆகிய இரு ஊர்களுக்குத் தனித்து ஊரளவில் சபைகள் இருந்ததாகக் கல்வெட்டுகள் கூறுகின்றன.  இச்சபையினர் வரியாகக் கிடைத்த கம்பினை (கண்பு என்று கல்வெட்டு குறிக்கிறது) அவிநாசிக் கோயிலுக்குக் கொடையளித்துள்ளனர்.  கோயிலுக்கு அரசன் பசுக்களைக் கொடையாக அளித்த செய்தி, கொங்கு நாட்டில் இக்கோயில் கல்வெட்டில் மட்டுமே காணப்படுகிறது. மற்றொரு கல்வெட்டு, பாண்டிமண்டலத்தைச் சேர்ந்த காளையார்கோயில் அதளையூர் நாடாள்வான் என்னும் தலைவன் கோயிலுக்கு விளக்கெரிக்க காசுக்கொடை அளித்ததைக் கூறுகிறது. காளையார்கோயிலின் பழம்பெயர் திருக்கானப்பேறு என்பதாக இக்கல்வெட்டால் அறிகிறோம். இன்னொரு கல்வெட்டு, கோயிலில் பணி செய்து வருமானம் பெறுவதற்கான உரிமையான “காணி” யுடைய தச்சர், கொல்லர், தட்டாருக்கு அரசன் நேரடி ஓலை ஆணை பிறப்பித்துச் சில உரிமைகளை அளிக்கிறான் என்பதைக்கூறுகிறது. இவர்கள், தங்கள் வீடுகளில் நன்மை தீமை நிகழ்வுகளின் போது பேரிகை என்னும் இசைக்கருவியைக் கொட்டிக்கொள்ளலாம் என்பதும், சங்கு ஊதிக்கொள்ளலாம் என்பதும் அந்த உரிமைகளாகும். 16-ஆம் நூற்றாண்டு விஜய நகரர் ஆட்சிக்காலத்துக் கல்வெட்டு ஒன்று, குளம் வெட்டி, அதன்மூலம் பாசன வசதி பெற்ற நிலங்களின் வருவாயில் அரசனுக்குச் செலுத்தவேண்டிய வரியில் பாதியை அவிநாசிக் கோயிலுக்கு அளித்ததைக் கூறுகிறது.  சுந்தரர் முதலை வாய்ப்பிள்ளையை மீட்ட நிகழ்வைக் குறித்து ஒரு கல்வெட்டு, “முதலைக் குளத்திலே முதலைவாய்ப் பிள்ளைக்கு   என்று கூறுகிறது.

சீனக்குடை பற்றிய கல்வெட்டு

மிகச் சிறப்பான கல்வெட்டுச் செய்தி ஒன்றை இங்கு குறிப்பிடுதல் வேண்டும்.  கொங்குச்சோழ அரசரில் வீரராசேந்திரன் காலத்துக் கல்வெட்டு ஒன்று.  கி.பி. 1222-ஆண்டில் பொறிக்கப்பட்டது. வடபரிசார நாட்டில் இருந்த பார்ப்பார் சான்றார்க்குச் சில உரிமைகளை வழங்கி அரசன் ஓலை வழி ஆணை பிறப்பிக்கிறான்.  அரசன் யானை மீது அமர்ந்து உலா வருகையில் அவனுக்கு முன்னும் பின்னும் சாமந்தர், படை வீரர், பிரதானிகள் புடை சூழ உலா வருதல் நடைமுறையாய் இருந்துள்ளது.  பொது மக்களின் காட்சிக்காக எனலாம்.  இதைக் கல்வெட்டு உலாகம்  என்று குறிப்பிடுகிறது. அது சமயம், மேற்சுட்டிய பார்ப்பார் சான்றார் அரசனின் ஊர்வலத்தில் குதிரை மீதமர்ந்து செல்லும் உரிமையை அவர்களுக்கு அளிக்கிறான். மேலும் அவர்கள் சீனக்குடை பிடித்துக்கொண்டு வரும் உரிமையையும் அளிக்கிறான். அந்நாள்களில், அணி மணிகளால் அழகுபடுத்தப்பட்ட குடைகள் பிடித்து அணிவகுப்பில் கலந்துகொள்ளல் மிகப்பெரிய சிறப்பாகவும், பெருமையாகவும் கருதப்பட்டது. அதிலும், சீனக்குடையான பட்டுக்குடை பிடித்துக்கொள்ளும் உரிமை மேன்மைக்குரியது. இவ்வுரிமையைப் பார்ப்பார் சான்றார் பெற்றார்கள்.  பல்வேறு வரிசைகள் (உரிமைகள்) மற்ற சாதியார்க்கு அளிக்கப்பட்டிருந்த போதிலும் சீனப்பட்டுக்குடை பிடித்துக்கொள்ளும் உரிமை அளித்தது குறிப்பிடத்தக்கது. வேறு பல உரிமைகளும் பார்ப்பார் சான்றார் பெற்றார்கள். தழைக்குடை (பனையோலைக் குடை) பயன்படுத்திக்கொள்ளலாம். வீட்டின் சுவர்களுக்குச் சாந்து (காரை அல்லது சுதை) பூசிக்கொள்ளலாம். வீட்டின் இரு வாசல்களிலும் கொடி கட்டிக்கொள்ளலாம். படை அணிவகுப்பின்போது ஆரம் பூணலாம். நன்மை தீமை நிகழ்வுகளில் சேகண்டி ஒலிக்கும் உரிமை உண்டு. பச்சைப்பட்டு மேலாடையாக அணிந்துகொள்ளலாம். அவர்களின் குழந்தைகளுக்குப் பொன்னாலான காறை என்னும் அணிகலன் அணிவிக்கலாம். திருமணத்தின்போது கட்டணம் கட்டி ஊர் சூழ வலம் வரலாம்.



அவிநாசிக்கோயில்-சீனக்குடை பற்றிய கல்வெட்டு

இந்த உரிமைகளை எல்லாம் பார்ப்பார் சான்றார்கள் இலவசமாகப் பெறவில்லை.  அரசனுடைய கருவூலத்தில் பொருள்(பொன்) வைத்த பின்பே இத்தகைய வரிசைகள் அளிக்கப்பட்டன. தற்காலத்தில் உலகப்புகழ் பெற்ற வெளிநாட்டுப் பல்கலைக் கழகங்களில் தமிழுக்காகப் பல கோடிப் பணம் முதலீடு போலச் செலுத்தி இருக்கை அமைக்கும் சூழ்நிலையைப் பார்க்கிறோம். அண்மையில், இவ்வாறு அமெரிக்க ஹார்வர்டு பல்கலையில்  இருக்கை அமைக்கப்பட்டுள்ளது. இது போலத்தான், சில குடிகள் தங்கள் உரிமைக்காக அரசனின் கருவூலத்தில் பொருள் செலுத்தியுள்ளனர் என்பதைக் கல்வெட்டுகளின் வாயிலாக அறிகிறோம். அரசனுடைய கருவூலம் கல்வெட்டில் “சரக்கு”  என்னும்  பெயரில் குறிக்கப்பட்டுள்ளது. கல்வெட்டு, அரசன் நேரடியாகக் கூறுகின்ற பாணியில் அமைந்திருப்பதால், கல்வெட்டில் “நம் ஓலை குடுத்தபடியாவது” என்றும், “நம் சரக்குக்குப் பொருள் வைத்தமையால்”  என்றும், “நாம் குடுத்த வரிசையாவது”  என்றும்  எழுதப்பட்டுள்ளது.  

கல்வெட்டின் பாடம்-முதல் படம்



கல்வெட்டின் பாடம்-இரண்டாம் படம்



கல்வெட்டறிஞர் மா.கணேசனார்

அவிநாசிக் கோயிலின் கல்வெட்டுகளை ஆய்வு செய்த பேராசிரியர் முனைவர் மா.கணேசன் அவர்கள், 1980களில் இக்கல்வெட்டினை ஆய்வு செய்து சீனக்குடை பற்றிய செய்தியை நாளிதழில் வெளியிட்டுக் கோயிலின் பெருமையை எடுத்துரைத்தார். அச் செய்திக் குறிப்பில், சீனாவுடன் இக் கொங்குப்பகுதிக்கு வணிகத்தொடர்பு இருந்திருக்கவேண்டும் என்னும் ஆய்வுக்கருத்தை முன்வைத்தார். சீனாவுடனான வணிகத்தொடர்பால் சீனப்பட்டு இங்கு வந்திருக்கவேண்டும் என்பது அவருடைய ஆய்வுக்கணிப்பு.  இதற்கு மாற்றுக்கருத்தாக,   சீனம் என்னும் சொல் “ஜைனம்  என்னும் சொல்லின் மாற்று வடிவம் என்றும், சீனக்குடை என்பது “ஜைனக்குடை  என்பதைக் குறிக்கும் என்றும் சில ஆய்வாளர்கள் கருதுகிறார்கள்.  இரண்டுமே ஆய்வுக்குரியன.  ஜைனம் -  அதாவது சமண சமயம் -   கொங்குப்பகுதியில் செல்வாக்குடன் இருந்துள்ளது என்பதில் யாதொரு ஐயமும் இல்லை. அதற்கான சான்றாதாரங்கள் கொங்குப்பகுதியில் மிகுதியும் கிடைத்துள்ளன.   விஜயமங்கலம் என்னும் ஊரருகில் சீனாபுரம் என்னும் ஓர் ஊர் உள்ளது.  அவ்வூருக்கும் சீனத்துக்கும் தொடர்பேதுமில்லை என்றும், அவ்வூர் “ஜைனபுரம்  என்று வழங்கிப் பின்னர், “ஜீனபுரம்  என்று மருவி இறுதியில் “சீனாபுரம்  என்று திரிந்துள்ளது எனக் கூறப்படுகிறது.  சீனாபுரத்தில் ஜைன சமயத்து எச்சங்கள் உள்ளன.  இருப்பினும், “ஜைனக்குடை  என்பது யாது என விரிவாக ஆராயப்படல் வேண்டும். ஜைனத் தீர்த்தங்கரர் சிற்பங்களில் அவ்வுருவங்களுக்கு மேற்புறம் தலைக்கு மேல் மூன்று குடைகள் ஒன்றை அடுத்து ஒன்றாகச் செதுக்கப்பட்டுள்ளதைக் காணலாம்.  ஜைன மதத்துத் துறவிகளுக்கும் பெரியார்களுக்கும் இவ்வகையான முக்குடைச் சிறப்பு வழங்கப்படுவதில்லை.  தீர்த்தங்கரர் நிலைக்கு உயர்ந்த இருபத்து நான்கு பேர்க்கு மட்டுமே இச் சிறப்பு வழங்கப்பட்டுள்ளது.  முக்குடை அமைப்பு சிற்பங்களில் மட்டுமே காணப்படுவதொன்று.  ஜைனக்குடை என்று ஒரு குடை இருந்துள்ளது என்பதற்கும், அது எவ்வகையில் சமுதாயத்தில் பயன்பாட்டில் இருந்தது என்பதற்கும் சான்றாதாரங்கள் உள்ளனவா என்பது தெரியவில்லை. இந்நிலையில், கல்வெட்டில் வரும் குடை சீனப்பட்டுக்குடை அல்ல என்று அறுதியாக மறுக்க இயலாது.  ஜைனக்குடை பயன்பாட்டில் இருந்திருந்தாலும், அக்குடையை ஜைனரல்லாத பார்ப்பார் சான்றார்க்கு அரசன் ஏன் உரிமையாக வழங்க வேண்டும் என்னும் கேள்விக்குத் தகுந்த விடை தேடப்படல் வேண்டும். சீனப்பட்டு ஒரு வணிகப்பொருளாக இங்கு புழக்கத்தில் இருந்துள்ளது என்பதைப் புறம் தள்ள இயலாது. சோழர் காலத்தில் கடல் கடந்து வணிகம் நடைபெற்றது. வணிகம் 13-ஆம் நூற்றாண்டிலும் தொடர்ந்து இருந்திருக்கலாம். வணிகப் பொருளாகச் சீனப்பட்டு இங்கு வந்திருக்கலாம். 


முடிவுரை

கட்டுரையின் முடிப்பாக, ஜைனக்குடை பற்றிச் சமண அறிஞர் ஒருவரிடம் கருத்துக் கேட்டபோது அவர் தெரிவித்த செய்திகளை இங்கு குறிப்பிடுதல் நலம். சமணத்தில் போற்றப்படும் முக்குடை என்பது தீர்த்தங்கரர்களுக்கு மட்டுமே உரித்தானது. தீர்த்தங்கரர்களின் சிற்பங்களில் முக்குடை அமைப்பைக் காணலாம். சமணப்பெரியார்களைக் கற்சிலையாக வடிக்கும்போது, ஒற்றைக் குடை காட்டப்படுவதுண்டு. சமணத்தில் விழாக்களின்போதோ, சடங்குகளின்போதோ சமணப்பெரியோருக்குக் குடை நிழல் காட்டும்  நிகழ்வுகள் வழக்கத்தில்  இல்லை. இச்செய்திகள், கல்வெட்டறிஞர் கணேசனார் அவர்களின் ஆய்வுக்கணிப்புக்கு வலு சேர்க்கின்றன. கி.பி. பதின்மூன்றாம் நூற்றாண்டில் சீனத்தில் தமிழ் வணிகர்களின் செயல்பாடுகள் இருந்துள்ளமைக்குச் சான்றாக, அண்மையில் சீனாவின் ஃபியூஜி (FUJIYAN) மண்டலத்தில் குவான் ஜௌ (QUANZHOU) நகரத்தில் கி.பி. பதின்மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்த தமிழ்க்கல்வெட்டு கண்டறியப்பட்ட செய்தி வெளியானதைக் குறிப்பிடலாம். இவ்வாறாக, அவிநாசிக் கோயிலின் சீனக்குடை பற்றிய கல்வெட்டு ஒரு சுவையான வரலாற்றுச் செய்தியை முன்வைத்து ஆய்வுக் களத்துக்கு வழியமைக்கிறது  எனலாம்.



நன்றிக்குரியவர்கள் :  

1    மறைந்த கல்வெட்டு அறிஞர்  முனைவர் மா. கணேசனார்.

2   திரு பானுகுமார் அவர்கள்,  சமண அறிஞர், சென்னை.






துரை.சுந்தரம், கல்வெட்டு ஆராய்ச்சியாளர், கோவை.
அலைபேசி :  9444939156.

புதன், 4 மார்ச், 2020


பழங்கால ஓடுகளும் பண்பாடும்

முன்னுரை

கோவையில் ’பாரதீய வித்யா பவன்’  வளாகத்தில் அமைந்துள்ள ஓர் அரங்கு சிந்தனை அரங்கம்.  18-02-2020 அன்று, இந்த அரங்கத்தில் ஒரு சொற்பொழிவு நிகழ்ச்சி நடந்தது. கோவையில் உள்ள ’இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரி’யில் மொழித்துறையில் உதவிப்பேராசிரியராய் இருக்கும் முனைவர் ந.இராஜேந்திரன் அவர்கள் சிறப்புச் சொற்பொழிவாற்றினார். ஒளிப்படங்களின் தொகுப்புக் காட்சிகளைக்கொண்டு அவரது பேச்சு அமைந்தது. ’வணக்கம்’  என்னும் தலைப்பில் அவருடைய பெயர், பதவிப்பெயர், பணியாற்றும் கல்லூரி, மின்னஞ்சல் முகவரி, பேசியின் எண் ஆகியன கொண்ட காட்சிப்படம் வழியே தம்மை அறிமுகப்படுத்தினார். மின்னஞ்சலில் ’இளையவன்’  என்னும் பெயர் இருந்தது போலவே, அவர் ஓர் இளைஞர்.  மதுரை-கீழடிக்கருகில் அமைந்த எட்டிசேரி என்னும் ஊரினர். தொல்லியலில், பெருங்கற்கால எச்சங்களை அவருடைய ஊர்ப்பகுதியில் அடையாளம் காணும் ஆய்வு ஆர்வத்தால் பல ஆண்டுகள் களப்பணி மேற்கொண்டு நிறைய எச்சங்களக் கண்டறிந்து தம் இல்லத்தில் சேர்த்து வைத்துள்ளார் என்பதை அவருடைய காட்சிப்படங்கள் சான்றளித்தன.

தொல்லியலில் அவரை வழி நடத்திய காரைக்குடியிலிருக்கும் பேராசிரியை வள்ளி சொக்கலிங்கம் அவர்களைத் தம் ஆசான் என்று அவர் குறிப்பிட்டார். தொல்லியல் கழகத்தில் இணைந்து அதன் தலைவராகப் பணியாற்றிய இப்பேராசிரியை அவர்களைக் கண்டு பேசும் வாய்ப்பு தொல்லியல் கழக 22-ஆம் ஆண்டுக் கருத்தரங்கு காரைக்குடி-கோட்டையூரில் நிகழ்ந்தபோது இக்கட்டுரை ஆசிரியருக்குக் கிடைத்தமையும் அதனைத் தொடர்ந்த பல ஆண்டுக்கருத்தரங்களில்  அவரோடு உரையாடி மகிழும் வாய்ப்பு அமைந்தமையும் இங்கு நினைவு கூறப்படுகிறது. நல்ல பண்பாளர். அவரது மாணாக்கரான முனைவர் ந.இராஜேந்திரன் இன்றுள்ள இளைஞர்க்கு வழிகாட்டும் தகவு கொண்டவராகத் தொல்லியலில் வளர்ந்து நிற்பது பாராட்டுக்குரியது. அவரது உரைத்தலைப்பு ’பழங்கால ஓடுகளும் பண்பாடும்’ என்பதான ஒரு பொதுத் தலைப்பாகத் தோன்றினும் அவரது உரை முழுதும் அவருடைய பகுதியின் இரண்டு ஊர்களில் கண்டறிந்த தொல்லியல் எச்சங்கள் பற்றி இருந்தது. ஆனால், இவ் எச்சங்களைப்பற்றிய உரையின் வழியே தலைப்புப் பொருள் விளக்கப்பட்டமை அவரது சிறப்பைக் காட்டும்.  அவருடைய உரையும் காட்சி விளக்கமும் நமக்களித்த செய்திகளின் பதிவே இக்கட்டுரை.


பெருங்கற்காலம்

’பழங்கால ஓடுகளும் பண்பாடும்’ என்னும் தலைப்பில் பொதுமக்கள் எளிதாகப் புரிந்துகொள்ளும் வகையில், அவர் பழங்காலம் என்று குறித்தது ‘பெருங்கற்கால’த்தையே (MEGA LITHIC PERIOD).  கி.மு. 1000- கி.மு. 300 என்கிற காலக்கட்டம் பெருங்கற்காலம்  என உலகத் தொல்லியல் அறிஞர்கள் வரையறுத்துள்ளனர். இதன் இறுதிப்பகுதியில், தமிழின் சங்ககாலம் அமைகிறது. பெருங்கற்காலம் என்னும் பெயர் எப்படி வந்தது? பெரும் பெரும் கற்களால் ஈமச் சின்னங்களை அமைத்ததனால்தான். ஈமச் சின்னங்கள், கல்வட்டம், கல் பதுக்கை, கல் கிடை, பரல் உயர் பதுக்கை, நெடுநிலைக்கல் எனப் பல்வேறு வடிவில் அமைக்கப்பட்டன. இவை கற்களால் ஆனவை. மண்ணாலான முதுமக்கள் தாழிகளும் ஈமச் சின்னங்களே. கொடுமணல் பகுதியில் பல ஈமச் சின்னங்களைக் காணலாம். இவையெல்லாம் மக்களைப் புதைத்த இடங்கள் அல்லது இறந்தவர்களின் எலும்புகளைப் புதைத்த இடங்கள் ஆகும்.

                                                  பெருங்கற்காலச் சின்னங்கள்















பானை ஓடுகள்

பெருங்கற்காலச் சின்னங்களில் பானை ஓடுகள் கிடைக்கின்றன. இரண்டு வகையாக இவற்றைப் பிரிக்கலாம். ஒன்று, மக்களின் வாழ்விடம். இன்னொன்று, மக்களின் நினைவிடம். இவை, மக்களின் புழங்கு பொருள்களாகும். கருப்பு, சிவப்பு ஆகிய இரு நிறங்களும் கொண்ட கருப்பு-சிவப்புப் பானை ஓடுகள். இவற்றைச் செய்தவர்கள் மண்ணீட்டாளர்கள் என அழைக்கப்பட்டனர். (கலம் செய் கோ எனச் சங்கப்பாடல்கள் குறிக்கின்றன). பானை செய்தல் ஒரு கலையாக வளர்ந்துள்ளது.

எட்டிசேரி

சொற்பொழிவாளர் தம் ஊராகிய எட்டிசேரிப்பகுதியில் இவ்வகையான பானை ஓடுகளைக் கண்டறிந்து சேர்த்திருக்கிறார். எட்டிசேரி என்னும் ஊர்ப்பெயர், எட்டி என்னும் வணிகர்களின் சிறப்புப் பெயரின் அடிப்படையில் வழங்கியிருக்கக்கூடும் எனக் கருதுகிறார். இவ்வூர் கீழடிக்கு அருகில் அமைந்துள்ள ஓர் ஊர் என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வூரின், நாட்டார் கால்வாய் என்னும் பெயரமைந்த இடத்தில் பெரிய இயந்திரங்கள் கொண்டு தோண்டியபோது பானை ஓடுகள் கிடைத்துள்ளன. இவற்றைப் பார்க்கையில் மலைப்பு (பிரம்மிப்பு)  ஏற்பட்டது. மிக நுணுக்கமாகச் செய்திருக்கிறார்கள். 

கருப்பு சிவப்பு பானை ஓடுகள்

ஒரே ஓட்டில் எவ்வாறு கருப்பு வண்ணமும் சிவப்பு வண்ணமும் வந்திருக்கும்? களிமண்ணைப் பதப்படுத்தி வடிமைத்துச் சுட்டெடுத்திருக்கிறார்கள். அவ்வாறு சுட்டெடுக்கும்போது பானையின் உட்புறத்தில் கருப்பு வண்ணப் பொடியைச் சேர்த்த காரணத்தால் பானையின் உட்புறம் முழுதும் கருப்பு நிறமும், வெளிப்புறத்தில் திறந்த நிலையில் சிவப்பு நிறமும் ஏற்பட்டிருக்கலாம். பானையின் மேற்புறத்திலேயே ஒரு பகுதி கருப்பாகவும் அதனை அடுத்துக் கிழே சிவப்பாகவும் காணப்படுவதும் இது போன்ற ஒரு நுணுக்கத்தால் செய்திருப்பார்கள் எனலாம். இரண்டாயிரத்தைந்நூறு ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த மக்களின் இந்த நுணுக்கமான கலைத்திறனை இன்றைய அறிவியல் சார்ந்த கண்டுபிடிப்புகளோடு ஒப்பிட்டால் மீண்டும் மலைப்பே ஏற்படுகிறது. கீழடிக்கு அருகிலே அமைந்துள்ள எட்டிசேரியிலும் கீழடியில் கிடைத்த பானை ஓடுகளை ஒத்த ஓடுகள் கிடைத்துள்ளன. கீழடி, தற்போது நடைபெற்ற அகழாய்வுகளின் பின்னர் மிகப்பெரிய வெளிச்சம் பெற்ற நிலையில், எட்டிசேரியில் கீழடி அகழாய்வுகளுக்கு முன்னரே சொற்பொழிவாளர் கண்டறிந்த ஓடுகள் கீழடிக் கூறுகளைக் கொண்டிருந்தன என்பதைக் குறிப்பிடவேண்டும்.







தாங்கிகள்

மண்பானைகளை வீட்டுத் தரையில் வைத்துப் புழங்கிய காலத்தில் அவற்றைத் தாங்கி நிற்கப் பயன்ப்ட்ட வட்டவடிவப் பொருள்கள் தாங்கி எனப்பட்டன. நம் வீடுகளில் இவற்றைப் பிரிமணை எனச் சொல்வதுண்டு. எட்டிசேரியில் கிடைத்த தாங்கியின் படம் கீழே தரப்பட்டுள்ளது. இது வாழ்விடத்தில் கிடைத்த ஒன்று. இந்தத் தாங்கியும் அனைத்திடங்களில் கிடைத்தது போலவே இருக்கின்றது.




பானை ஓடுகளில் குறியீடுகள்

பானை ஓடுகளில் குறியிடுகள் கண்டறியப்பட்டுள்ளன. சிந்துவெளிப் பண்பாட்டுமக்கள் யார்?  அவர்கள் பேசிய மொழி எது? பல்வேறு வினாக்கள். சிந்துவெளி, ஈரானிலிருந்து மக்கள் புலம் பெயர்ந்த இடம் என்றும்,  தென்னிந்தியாவிலிருந்து மக்கள் புலம் பெயர்ந்த இடம் என்றும் இருவேறு கருத்துகள் நிலவுகின்றன. புலம் பெயர்ந்த இவ்விரு மக்களும் சேர்ந்து வாழ்ந்த இடம் சிந்துவெளி என்கிற கருத்தும் உண்டு. சிந்துவெளியில் கிடைத்த முத்திரைகள் இவ்விருவகை மக்களுக்கும் சொந்தமானவை. பானைக் குறியீடுகள்  குறியீடுகள் மட்டுமே; எழுத்தல்ல என்று இராஜன் அவர்களும், பானைக்குறியீடுகள் சிந்து எழுத்துகளே என்று மதிவாணன் அவர்களும் கருதுகிறார்கள். 




எட்டிசேரிப் பானை ஓடுகளில் இருக்கும் குறியீடுகளும், கீழடிப் பானை ஓடுகளில் இருக்கும் குறியீடுகளும் ஒன்றாக இருப்பதன் காரணம் யாது? இக்குறியீடுகள் குறிப்பது என்ன?  இவை எழுத்துகளா? அன்றி வேறா? இவற்றின் பயன்பாடு என்னவாக இருந்தது? இராஜன் அவர்கள் அனைத்துக் குறியீடுகளையும் தொகுத்து வகைப்படுத்தி ஆய்வு செய்துள்ளார். இக்குறியீடுகள் மக்களின் குலக்குறியீடுகளாக இருக்கலாம்; அல்லது ஒரு கூட்டத்தாரின் குறியீடுகளாக இருக்கலாம். எல்லா நாடுகளின் குறியீடுகளை ஒப்பிட்டுப்பார்த்தாலும் குறியீடுகளிடையே உள்ள ஒற்றுமை புலப்படும். பாண்டிய நாட்டிலிருந்து வெளியேறிப் பெயர்ந்து உலகின் பல இடங்களுக்குச் சென்றிருக்கிறார்கள்; பின்னர் அங்கிருந்து புலம் பெயர்ந்து வந்திருக்கிறார்கள் என்கிற கருத்து சிந்தனைக்குரியது. சான்றுகளும் கிடைத்திருக்கின்றன. அன்றேல் குறியீடுகள் எப்படிப் போயின? எவ்வாறு ஒன்றுபோல் அமைந்தன?

குறியீட்டில் ”ம” எழுத்து

”ம”  என்ற எழுத்தைக்குறிக்கும் குறியீடு பொறித்த பானை ஓடு எட்டிசேரியில் கிடைத்துள்ளது. இதே போன்ற குறியீடு கீழடியிலும் கிடைத்துள்ளது.



”ம” எழுத்தைக் குறிக்கும் குறியீடு


எட்டிசேரியில் கிடைத்த சில குறியீடுகள், கீழடி, கொடுமணல், சிந்துவெளி ஆகிய இடங்களில் கிடைத்த குறியீடுகளை ஒத்துள்ளன என்பதைக் கீழுள்ள படங்கள் காட்டுகின்றன.








ஸ்வஸ்திகம்


எட்டிசேரியில் ஸ்வஸ்திக வடிவில் இரண்டு மூன்று கோடுகள் நெருக்கமாகக் கீறப்பட்ட ஓடு கிடைத்துள்ளது. சிந்துவெளிக்குறியீட்டு முத்திரைகளாகக் காணும் பல வகை ஸ்வஸ்திக் வடிவக் குறியீடுகளில் ஒன்றுடன் எட்டிசேரி ஓடு பொருந்திப்போவதைக் காணலாம். 

ஸ்வஸ்திகக் குறியீடு

பானை ஓட்டில் முப்பரிமாணத் தோற்றம்

எட்டிசேரியில் கிடைத்த சில பானை ஓடுகள் வேறொரு வகையில் சிறப்பானதாகக் காட்சியளிக்கின்றன. இவற்றில் காணப்படும் நீரோட்டத் தோற்றத்தில் அமைந்த வரிவடிவங்கள் முப்பரிமாணத் தோற்றம் (3D EFFECT) கொண்டவையாக நுட்பத்துடன் செய்யப்பட்டுள்ளதைக் காண்க. இந்த முப்பரிமாணத் தோற்றம், பானை ஓட்டினைக் குறிப்பிட்ட கோணங்களில் வைத்து ஒளிப்படம் எடுத்தால் மட்டுமே புலப்படும் வகையில் அமைந்துள்ளது. பழங்கால மக்கள்தாம்  எப்படிப்பட்ட சிந்தனையாளர்கள்? வியப்பு ஏற்படுகிறது.

பானை ஓட்டில் முப்பரிமாணத்தோற்றம்

சிறிய பானை-அதற்கொரு தாங்கி!

எட்டிசேரியில் கிடைத்துள்ள வியத்தகு மட்கலன்களில் மிகச்சிறிய அளவிலான பானைகள் அடங்கும். இரண்டே கால் அங்குல அளவில் தொடங்கிச் சிறு சிறு அளவில் உயர்ந்து செல்லும் ஆறுவகைப்பானைகளும், அந்தப்பானைகளுக்கேற்ற சிறிய தாங்கிகளும் நம்மை வியப்பிலாழ்த்தும். இவை எல்லாம் எதற்குப் பயன்பட்டன? கேள்வியும் வியப்பையே எழுப்பும். பயன்பாடு பற்றிச் சிந்திக்கவேண்டும்.


துளை கொண்ட பானை

எட்டிசேரியில் கிடைத்த மற்றொரு பானை ஓட்டில் நேர்த்தியான துளை காணப்படுகிறது.  துளை எதற்காக?  நாம் நம் காலத்தில் பயன்படுத்திய பானை-உரிப் பயன்பாட்டினக் கற்பனை செய்கையில், ஒருவேளை முழுப்பானையில் மேலும் துளைகள் (மூன்று துளைகள்?)  இருந்து பானைகளை உரியில் தொங்கவிடும் பயன்பாடு பழங்காலத்தில் இருந்திருக்குமோ என்று யூகிக்க வைக்கின்றது. அல்லது மூன்று துளைப் பானை, இறப்புச் சடங்காகச் சுடுகாடு நோக்கிச் செல்கையில்  கையில் எடுத்துச் செல்லும் தீச்சட்டியாய்ப் பயன்பட்டிருக்குமோ என்றும் எண்ணவைக்கின்றது.  மொத்தத்தில், பழங்கால மக்களுடைய வாழ்க்கை முழுவதும் மண்; மண்; மண். அருமையானதொரு வாழ்க்கை. மண் சார்ந்த வாழ்க்கை.


எடைக்கல்லா? குண்டா?

அடுத்து, எட்டிசேரியில் கிடைத்த ஒரு பழம்பொருள். உருண்டை வடிவிலான கல்.  இது எடைக்கல்லாகப் பயன்பட்டிருக்கலாம். ஆனால், எதை நிறுக்கப் பயன்பட்டது? அறியக்கூடவில்லை. இது ஒரு குண்டாக இருக்கலாம். அவ்வாறெனில் எதற்குப்பயன்பட்டது?



மாட்டுவண்டிச் சக்கரம்

அடுத்துக் கிடைத்த ஒரு பொருள் மண்ணாலான சக்கரம். இதன் மையத்தில் ஒரு துளை. விளையாட்டுப் பொருள்களில் ஒன்றான வண்டிக்குப் பயன்படுத்திய சக்கரம். செய்திதாள்களில் இது பற்றிச் செய்தி தருகையில் பிழையாகப் பெண்கள் அணிந்திருந்த தோடு எனக் குறிப்பிட்டுவிட்டார் சொற்பொழிவாளர். பின்னர், இது வண்டிச்சக்கரமாக இருக்கக் கூடும் என்னும் கருத்துத் தோன்றியது.



வட்டுச் சில்லுகள்

எட்டிசேரியில் நிறைய வட்டுச் சில்லுகளைக் கண்டறிந்து சேர்த்து வைத்துள்ள சொற்பொழிவாளர், சிறிது முதல் மூன்றங்குலம் அளவு பெரிது வரை கிடைத்துள்ளன என்கிறார். இவை, பெண்கள் விளையாடப் பயன்பட்டிருத்தமை பொதுக் கருத்தாகக் கொண்டாலும், இவை காசாகப் பயன்பட்டிருக்கலாம் என்னும் ஐயமும் எழுகிறது.




முதுமக்கள் தாழி

முதுமக்கள் தாழியின் பயன்பாடு இரண்டு வகையாக அமைந்தது எனக்கருதுகிறார்கள். ஒன்று, இறந்தவர்களின் உடலை அதில் அப்படியே வைத்து மண்ணில் புதைத்து விடல்; மற்ரது, இறந்தவர்களின் உடல் நாள்கள் சென்றபின் மிஞ்சும் எலும்புகளைத் தாழியில் வைத்துப் புதைத்தல். பெருந்தாழிகள் கிடைத்த இடங்களில், அவற்றுக்கு அருகிலேயே சிறு தாழிகளும் கிடைத்துள்ளன. முதுமக்கள் தாழி ஒன்றின் அடிப்பகுதியில் அடுக்கடுக்காகச் சில பதிவுகள் காணப்பட்டன. இவை, தாழிகளை ஓலைத்தடுக்குகளின்மீது வைத்ததால் ஏற்பட்ட சுவடுகளாக இருக்கக்கூடும்.




விலங்கு மற்றும் மனித எலும்புகள்

எட்டிசேரியில் பெருங்கற்காலத்தைச் சேர்ந்த விலங்குகளின் பற்கள், எலும்புகள் மற்றும் கருகிய நிலையில் மனித எலும்புத்துண்டு -  கை விரல் பகுதியை நினைவூட்டியது -  ஆகியவை கிடைத்துள்ளன.  மனித எலும்பின் கருகிய நிலை, இப்பகுதியில் ஏதோ ஒரு அழிவு நிகழ்ந்திருப்பதைச் - குறிப்பாகத் தீயால் நிகழ்ந்த அழிவு -  சுட்டுகிறது எனலாம்.





நாகமுகுந்தன் குடி

எட்டிசேரியை அடுத்துள்ள இன்னொரு ஊர் நாகமுகுந்தன் குடி. இங்கும் பெருங்கற்காலத்தைச் சேர்ந்த சில பொருள்கள் கிடைத்துள்ளன. கையில், பெருவிரலுக்கும் சுட்டு விரலுக்கும் இடையில் பிடித்துக்கொள்ளும் அளவிலான சிறு சிறு மட்பாண்டங்கள் கிடைத்துள்ளன. ஒன்றேகால் அங்குல அளவிலிருந்து இரண்டு அங்குல அளவு வரையிலானவை. இவ்வளவு சிறிய பாண்டங்களின் பயன்பாடு என்னவாக இருக்கும்?  பாண்டங்கள் செய்யப்பட்ட அமைப்பு மிக நேர்த்தி கொண்டது. விளக்காக இருக்கலாமோ? 





தாழி வடிவில் அமைந்த சிறு சிறு பாண்டங்கள், ஆதிச்ச நல்லூரிலும், கீழடியிலும் கிடைத்தவற்றைக் காட்டிலும் நாகமுகுந்தன் குடியில் கிடைத்தவை மிக நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டுள்ளமை மிகுந்த வியப்பைத் தருகிறது. சிறு பாண்டங்களுக்கும் மூடிகள் செய்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

தாழி வடிவில் சிறு பாண்டம்


மூடிகளும் கைப்பிடிகளும்





இவ்வாறான மூடிகள் ஆதிச்சநல்லூரில் கிடைத்துள்ளவற்றை ஒத்துள்ளன. மூடிகளை விரல்களால் பிடிக்கும் வண்ணம் குமிழ்கள் அமைத்துச் செய்திருக்கிறார்கள். மூடியும் குமிழ்களும் பல வடிவங்களில் உள்ளன. சில மூடிகள் சதுரங்க விளையாட்டுக் காய்களை நினைவூட்டுகின்றன. மூடிகளின் குமிழ்கள் சில பறவையின் தோற்றத்தை நினைவூட்டுகின்றன. 

நாகமுகுந்தன் குடியில், கையில் பிடித்துக்கொள்ளும் வகையில் அமைந்த சிறு குடுவைகள் கிடைத்துள்ளன. இவை, மருந்துக் குடுவைகளாகலாம். மதுக்குடுவைகள் என்றும் கூறலாம். ஆனால், மதுவை இவ்வளவு சிறிய குடுவையில் அருந்தினார்களா? ஐயம் எழுகிறது.



கற்காலக் கருவி ஒன்று

இறுதியாக, நாகமுகுந்தன் குடியில் கற்காலக் கருவி ஒன்றும் கிடைத்திருப்பதைச் சொற்பொழிவாளர் பதிவுசெய்துள்ளார். இதன் காலம் கி.மி. 4000 – கி.மு. 1000.


முடிவுரை

தமிழகத்தில், ஆதிச்சநல்லூர், கீழடி ஆகிய இடங்களுக்குச் சமமான தொல்லியல் இடங்கள் – அகழாய்வுத்தகுதிக்குரிய இடங்கள் - பல பகுதிகளில் பல உள்ளன என்பதுதான் உண்மை. அதற்குச் சான்றாக, எட்டியூர் மற்றும் நாகமுகுந்தன் குடியில் கிடைத்த தொல்பொருள்கள் அமைந்துள்ளன என்று உணர்த்தும் வகையில் முனைவர் ந.இராஜேந்திரன் அவர்களின் சொற்பொழிவு அமைந்தது. அவருடைய நீண்ட உழைப்பு, ஆர்வம், வரலாற்று அறிவு ஆகியவை இன்றைய இளைஞர்கள் பின்பற்றத்தக்கவை. நிறைய இளைஞர்கள் ஊக்கமுடன் முன்வருவர் என்று நம்பலாம்.

குறிப்பு :  சொற்பொழிவாளரின் படங்கள் திரையில் காட்டப்பட்டபோது
          கட்டுரையாளர் எடுத்த ஒளிப்படங்களே மேலே கட்டுரையில் 
          இடம்பெற்றுள்ளன. எனவே, படங்களில் ஒளி மற்றும் வடிவக் 
          கூர்மை அமையவில்லை.


துரை. சுந்தரம், கல்வெட்டு ஆராய்ச்சியாளர், கோவை.
அலைபேசி :  9444939156.
மின்னஞ்சல் : doraisundaram18@gmail.com