மொத்தப் பக்கக்காட்சிகள்

திங்கள், 24 டிசம்பர், 2018



தொல்லியல் அறிஞர் ஐராவதம் மகாதேவன் நினைவேந்தல் உரை

முன்னுரை






அண்மையில் 16-12-2018 அன்று கோவையில் “களம்”  அமைப்பினர் நடத்திய, தொல்லியல் அறிஞர் ஐராவதம் மகாதேவன் நினைவேந்தல் நிகழ்ச்சியில் தொல்லியல் அறிஞர் திரு சுப்பராயலு அவர்கள் உரை நிகழ்த்தினார்கள். ஐராவதம் மகாதேவன் அவர்களை நினைவுகூரும் வகையிலும், தொல்லியலைப் பற்றிய வரலாற்றுப் புரிதலை உணர்த்தும் வகையிலும் அவர் ஆற்றிய உரை மிகச் சிறப்பானதொன்று. ஆங்கிலேயர் காலம் தொட்டுப் பல்லாண்டுகள் தொல்லியல் ஆய்வுகள் மேன்மையுடன் திகழ்ந்த நிலை மாறி அண்மைக்காலத்தில் ஒரு வெறுமையை எட்டியுள்ள சூழ்நிலையில், தற்கால இளைய சமுதாயம் அவற்றை மீட்டெடுத்துப் புத்தாக்கம் தரவேண்டிய கடமையை வலியுறுத்தும் வண்ணம் உரை அமைந்திருந்தது. தொல்லியல் துறையிலும்,  மூத்த அறிஞர்கள் இல்லாத நிலை. துறை வெறுமையாகக் காணப்படுகிறது. கல்வெட்டு, வரலாறு, மொழியியல், இலக்கியம் ஆகிய பன்முனைகளும் இணைந்து ஆழமான ஆய்வுகள் நடைபெற்றால்தான் தமிழ் மொழியின் பழமை, தமிழர் நாகரிகத்தின் பழமை ஆகியவை நிலை நிறுத்தப்பெறும் என்பதான ஒரு கருத்தை சுப்பராயலு அவர்களின் உரை நமக்குச் சுட்டிக்காட்டியது. அவர் உரையின் கருத்துகள் இங்கு பகிர்ந்துகொள்ளப்படுகின்றன.


சிறப்புரை ஆற்றிய திரு. சுப்பராயலு அவர்கள்

தொல்லியல் அறிஞர் ஐராவதம் மகாதேவன்

ஐராவதம் மகாதேவன் அவர்கள் பிராமி எழுத்துகளின் ஆய்வுக்காகவே அறியப்படுகின்ற அறிஞர். பிராமிக் கல்வெட்டுகள் அமைந்திருந்த எல்லா இடங்களுக்கும் நேரில் சென்று, கல்வெட்டுகளைத் தொட்டுத் தடவிப் பார்த்துப் படித்தவர். திருவாதவூர் பிராமிக் கல்வெட்டைப் படிக்கையில், கட்டிடங்களுக்குச் சாரம் அமைப்பதுபோல் சாரம் அமைத்து அதன் மேலமர்ந்து எழுத்துகளைப் படித்தவர். அவரது மறைவை ஒட்டி வெளியான பல ஒளிப்படங்களில் இந்தக் காட்சியைக் காட்டும் ஒளிப்படமும் வெளியானதை நாம் அறிவோம். குளித்தலை அருகே ஐயர் மலை (ஐவர் மலை அல்ல) மீது ஏறுவது மிகக் கடினம். அக் கடினத்தையும் தாங்கிக்கொண்டு கல்வெட்டைப் படித்தவர்.



சாரத்தில் ஏறித் திருவாதவூர் பிராமிக்கல்வெட்டு படித்தல்


சென்னையில் ஐராவதம் மகாதேவன்

1964-ஆம் ஆண்டு. சுப்பராயலு அவர்கள் சென்னைப் பல்கலையில் ஆய்வு மாணவராய் இருந்த காலம். சென்னை அருங்காட்சியகத்தில் SOUTH INDIAN ARCHAELOGICAL SOCIETY என்னும் பெயரில் ஒரு கழகம் (ASSOCIATION) தோற்றுவிக்கப்பட்டு, மாதந்தோறும் கூட்டங்கள் நிகழ்த்தப்பெற்ற காலம். அக்கூட்டங்களுக்கு ஐராவதம் மகாதேவன் அவர்கள் வருகை தருவதுண்டு. அருங்காட்சியகத்தில் அப்போது தொல்லியல்-கல்வெட்டு அறிஞர் டி.வி. மகாலிங்கம் அவர்கள் பணியில் இருந்தார். (சுப்பராயலு அவர்களின் ஆசிரியர் இவர்). ஐராவதம் மகாதேவன் அவர்களுக்கு அப்போது கல்வெட்டுகளைப் பற்றித் தெரியாது. நாணயவியலில் (NUMISMATICS)  ஆர்வம் கொண்டிருந்தார். 1965-ஆம் ஆண்டு புகளூர் பிராமிக்கல்வெட்டை நேரில் சென்று பார்த்துப் படித்து ‘இந்து’ நாளிதழில் கட்டுரை வெளியிட்டார். கல்வெட்டு ஆராய்ச்சியில் அது அவரது முதல் படி. புகளூர்க் கல்வெட்டு, தொல்லியல் துறையினரால் முதலிலேயே பார்க்கப்பட்டிருந்தது; ஆனால், படிக்கப்பட்டு அதன் பாடம் வெளியாகவில்லை. ஐராவதம் மகாதேவன் அவர்கள் கல்வெட்டுச் செய்தியை வெளியிட்டது அக்காலத்தே பெரிதும் பாராட்டப்பெற்ற நிகழ்வு. காரணம், புகளூர்க்கல்வெட்டில் சேர மன்னர்களின் வரிசை கூறப்படுகிறது.

தமிழ் நாடு தொல்லியல் துறை – நாகசாமி – ஐராவதம் மகாதேவன்

1961-ஆம் ஆண்டில் தமிழ்நாடு தொல்லியல் துறை தொடங்கப்பட்டது, 1962-ஆம் ஆண்டு நாகசாமி அவர்கள் துறையின் தலைவரானார். தமிழ்க் கல்வெட்டியல் துறை நாகசாமி அவர்களால் பரவலாக்கப்பட்டது; “ஜனரஞ்சகம்என்று அதைக் குறிப்பிடலாம். ஐராவதம் மகாதேவன் அவர்கள் நாகசாமி அவர்களுடன் இணைந்துகொண்டார்.  துறை வளரும்போது அவரும் வளர்ந்தார். அப்போது துறையில் இருந்தவர்களுக்குப் பிராமி எழுத்துப் படிக்கத்தெரியும்; ஆனால், கல்வெட்டுகளை நேரில் பார்க்கும் வாய்ப்புகள் இல்லை. இந்நிலையில், 1966-ஆம் ஆண்டில், ஐராவதம் மகாதேவன் அவர்கள் நாற்பது பிராமிக் கல்வெட்டுகளை நேரில் சென்று பார்த்து TRACING முறையில் படியெடுத்துக் கல்வெட்டுகளின் பாடங்களை CORPUS OF BRAMI INSCRIPTIONS என்னும் தலைப்பில் நூலாக வெளியிட்டார்.  பின்னர், 1968-ஆம் ஆண்டு அது SEMINAR  ஒன்றில் வெளியாகியது. அண்மையில், பிராமிக் கல்வெட்டுகளைப் பற்றிய விரிவான நூலுக்காகத் தாம் பார்த்த இடங்களுக்கெல்லாம் மீண்டும் சென்று படித்தே எழுதினார். திருத்தமாக அமையவேண்டும் என்பதே நோக்கம்.

தொல்லியல் துறையும் கே.வி. சுப்பிரமணிய அய்யரும்

இந்தியக் கல்வெட்டுத் துறை தொடங்கி (1890-இலிருந்து) நூற்று இருபது ஆண்டுகள் ஆயின. தென்னிந்தியா முழுமைக்குமான கல்வெட்டுத் துறை 1967 வரை ஊட்டியில் இயங்கிவந்தது. நாடு முழுமைக்குமான கல்வெட்டுகளின் எண்ணிக்கையில் மூன்றில் ஒரு பகுதிக்கும் மேற்பட்டவை தமிழ்க் கல்வெட்டுகள். தென்னிந்தியக் கல்வெட்டுகளின் எண்ணிக்கையில் பாதிக்கும் மேற்பட்டவை தமிழ்க்கல்வெட்டுகள். கல்வெட்டுகளின் எண்ணிக்கை மிகுதி. படிக்கும் பணியில் இருந்தவர் எண்ணிக்கை மிகக் குறைவு. எனவே, கல்வெட்டுகளைப் படித்தலிலும், பதிப்பித்தலிலும் தேக்க நிலை உருவானது. 1914-ஆம் ஆண்டில் படி எடுத்த கல்வெட்டுகள் பல 2014-ஆம் ஆண்டு சுப்பராயலு அவர்களால் பதிக்கப்பட்டன என்பதைக்கொண்டு இத்தேக்க நிலையைப் புரிந்து கொள்ளலாம். போக்குவரத்து எளிதாக இல்லாதிருந்த காலம் அது. மதுரையில், கே.வி. சுப்பிரமணிய அய்யர் மாட்டுவண்டியில் போய் கல்வெட்டுகளைப் படித்த வரலாறு உண்டு. பிராமிக் கல்வெட்டுகளைப் படிக்க அடிப்படை வகுத்தவர் கே.வி. சுப்பிரமணிய அய்யரே ஆவார். ஐராவதம் மகாதேவன் அவர்கள் பொள்ளாச்சியில் (1990-96) பணியாற்றியபோது, கே.வி. சுப்பிரமணிய அய்யரின் மகனார் வைத்தியநாத அய்யர் கோவையில் இருந்தார். அவருடன் ஐராவதம் அவர்கள் தொடர்பு கொண்டிருந்தார். பொள்ளாச்சி மகாலிங்கம் அவர்களின் உதவியும் அவருக்குக் கிட்டியது. 2003-ஆம் ஆண்டு, பிராமிக் கல்வெட்டுகள் பற்றிய நூலைச் செம்மைப்படுத்தி மறு TRACING முறையில் படியெடுத்து முழு நூலைப் பதிப்பித்தார். பணியில் இவருக்கு உதவியவர்கள் தொல்லியல் துறையைச் சேர்ந்த சாந்தலிங்கம், வேதாசலம் ஆகியோர் ஆவர். TRACING முறை என்பது எழுத்துகளின் மேல் வெள்ளை மையால் எழுதுவது. அதாவது விளம்பல் படி. இந்த TRACING முறை சரியான முறையல்ல.  எழுத்துகளோடு அவற்றின் அருகில் கல்லின் இயற்கைப் பொறிப்பும் இருக்கும்.  எனவே எழுத்துகளைப் படிப்பதில் தெளிவு கிட்டாது

பிராமி எழுத்து – வரலாற்றுப் பின்னணி

வட இந்தியாவில் பிராமி எழுத்து எழுதப் பயன்பட்ட மொழி பிராகிருதம் ஆகும். பிராகிருதம் மக்கள் மொழி; அக்காலத்திய உலகியல் மொழி. சமற்கிருத மொழி, சமயச் சடங்குகளுக்காகப் பயன்பட்ட மொழியாக மட்டும் இருந்தது. கி.மு. நான்காம் நூற்றாண்டில் பாணினி, வட இந்திய மொழிகளை ஆய்ந்து “அஷ்டத்தியாயிஎன்னும் இலக்கண நூலை எழுதி, வட இந்திய மொழிகளின் பயன்பாட்டை வரையறுத்துக் கொடுத்தார். அந்த இலக்கண மரபுக்குப் பின்னர் மேற்கொண்டு சமற்கிருதம் வளர்ச்சியுறவில்லை. பின்னர், சமற்கிருதம் செப்பனிடப்பட்டு, கி.பி. முதல் நூற்றாண்டிலிருந்து இலக்கியங்களில் பயிலத் தொடங்கியது.

மகத நாட்டில் வழங்கிய பிராகிருத மொழியை அசோகர் தம் ஆட்சியில் நிருவாக மொழியாக ஆக்கினார். அப்போது சமற்கிருதம் இருந்தது. ஆனால், அரசனின் சாசனங்கள் மக்களை எட்டுவதற்கு மக்களுக்குத் தெரிந்த மொழியே வேண்டியிருந்தது என்னும் காரணத்தால் பிராகிருதம் பயன்பட்டது. பின்னர் வந்த குப்தர்கள் காலத்தில் சமற்கிருதம் நிருவாக மொழியாக உருவெடுத்தது. அசோகர் பிராமிக் கல்வெட்டின் அடிப்படையில், கல்வெட்டியலாளர்களுக்குத் தெரிந்த மொழி பிராகிருதம். எனவே, தமிழ் நாட்டில் கிடைத்த பிராமி எழுத்துகள் கொண்ட கல்வெட்டுகளைப் படிப்பதில், பிராகிருத அணுகுமுறை பின்பற்றப்பட்டது. ஆனால், தமிழ் நாட்டுப் பிராமிக் கல்வெட்டுகள் பிராகிருத மொழியோடு பொருந்தாமையால் தெளிவற்ற நிலையே இருந்தது. கே.வி. சுப்பிரமணிய அய்யர்தாம் இக்கல்வெட்டுகளில் இருப்பது தமிழ் மொழியே என்று கண்டார். 1924-ஆம் ஆண்டில், கல்வெட்டுகளைப் படித்து வெளியிட்டார்.


அடுத்த கட்டமாக, 1935-ஆம் ஆண்டில், அறிஞர் தி.நா.சுப்பிரமணியம் அவர்கள் தமிழ்க்கல்வெட்டுகள் பற்றிய நூலை அவர் சார்ந்திருந்த சுதேசமித்திரன் அச்சகத்தில் வெளியிட்டார். அவரே அந்நூலைப் பின்னர் ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்து வெளியிட்டார். அந்நூலில் அவர், எழுத்துகளின் வளர்ச்சி குறித்த பட்டியலைக் கொடுத்திருந்தார். தமிழகத்தின் தமிழ் பிராமி, ஆந்திரத்தில் பட்டிபுரோலு என்னுமிடத்தில் கிடைத்த பிராமி இரண்டையும் ஒப்புமைப் படுத்தி தி.நா.சு. அவர்கள் ஒரு கட்டமைப்பைக் குறித்திருந்தார். அசோகன் பிராமியில் கூட்டெழுத்து முறை இருந்தது. மெய்யெழுத்து இரட்டிக்கும்போதும், இரண்டு மெய்யெழுத்து ஒன்றாக வரும்போதும் இக்கூட்டெழுத்து முறையைப் பயன்படுத்தினார்கள். (கட்டுரை ஆசிரியர் குறிப்பு : எடுத்துக் காட்டாக, ‘மக்கள் என எழுதுவதற்கு “மகள்  என்பதாக எழுதி, ‘கஎழுத்தின் கீழ் ‘க்  எழுத்தை எழுதுவார்கள். கல்வெட்டுகளில் நாம் காணும் “ஸ்வஸ்திஸ்ரீ  என்பதை எழுத, “ஸஸிஸ்ரீ  என்னும் மூன்றெழுத்துகளை மேல்பகுதியில் அமைத்து, முதல் ‘ஸஎழுத்தின் கீழ் ‘வஎழுத்தையும், இரண்டாவதாக உள்ள ‘ஸிஎன்னும் எழுத்தின் கீழ் த் எழுத்தையும் எழுதுவார்கள்). இந்தக் கூட்டெழுத்து அமைப்பு தமிழ் பிராமியில் இல்லை. தமிழ் பிராமியில், மெய்யெழுத்தைக் குறிப்பதற்கே உயிர்மெய் எழுத்து எழுதப்பட்டது. உயிர்மெய் எழுத்தைக் குறிக்க, அவ்வெழுத்தின் மேல் ஒரு கோடு எழுதப்படும். (மெய்யெழுத்துகளுக்குப் புள்ளியிடும் முறை இல்லை). டி.வி. மகாலிங்கம் அவர்கள், தமிழ் பிராமிக் கல்வெட்டுகளைப் படிக்கத்தொடங்கி 1968-ஆம் ஆண்டில் நூல் வெளியிட்டார். ஐராவதம் அவர்களின் CORPUS OF BRAMI INSCRIPTIONS நூலுக்குப் பின்னரே டி.வி. மகாலிங்கம் அவர்களின் நூல் வெளியானது குறிப்பிடத்தக்கது.

சிந்துவெளி எழுத்துகள் – ஆராய்ச்சி

1968-ஆம் ஆண்டுக்குப் பின்னர், ஐராவதம் மகாதேவன் அவர்கள் சிந்துவெளி எழுத்துகளைப் படிக்க முயற்சி செய்தார். முத்திரைப் பொறிப்புகளைத் தொகுத்து வரிசைப்படுத்தி அட்டவணைப் (CONCORDANCE)  படுத்தினார். இது ஒரு முதன்மையான பங்களிப்பாகக் கருதப்படுகிறது. சர். ஜான் மார்ஷல் (SIR JOHN MARSHAL), ஃபாதர் ஹீராஸ்  (FATHER HERAS),  ஆஸ்கோ பர்ப்போலா (ASKO PARPOLA)  போன்றவர்கள் சிந்து சமவெளி எழுத்துகளை ஆய்ந்துள்ளனர்.  ஃபாதர் ஹீராஸ்  (FATHER HERAS) அவர்கள் சிந்து சமவெளி எழுத்துகள் தமிழ் எழுத்துகளாக இருக்கலாம் என்று கருதினார். சிந்து வெளியில் தமிழ் மொழி இருந்தது என்பதாக 1965-இல் ஆஸ்கோ பர்ப்போலா (ASKO PARPOLA) தம் ஆய்வுக்கட்டுரையில் குறித்துள்ளார்.  தமிழ் நாட்டில் ஐந்தாறு பேர் – மதிவாணன் போன்றோர் - சிந்து எழுத்துகளைப் படிக்கும் ஆய்வில் ஈடுபட்டனர். 1960-இல், சோவியத் ரஷ்யாவிலும் சிந்துவெளி எழுத்துகளை ஆய்ந்துள்ளனர். ஐராவதம் மகாதேவன் அவர்கள் முதலில் சிந்து எழுத்துகளைப் படிக்கவில்லை. CONCORDANCE என்னும் எழுத்துகளின் தொகுப்பை வெளியிட்டார். இது ஒரு நிகண்டு போன்ற தொகுப்பு எனலாம். வடமொழியில் “கோசம்  என்பார்கள்; அது போன்றது. சிந்து சமவெளி எழுத்துகளின் ஆய்வு தொடர்பாக இந்நூல் ஒரு கொடை என்பதில் ஐயமில்லை. அது போலவே, அண்மையில், பிராமி எழுத்துகளைப்பற்றி முன்னரே எழுதிய நூலை மேம்படுத்தி வெளியிட்டுள்ளார். இந்நூலும் அவர் வழங்கிய கொடையாகும். ஆஸ்கோ பர்ப்போலாவும் (ASKO PARPOLA) CONCORDANCE தொகுப்பை எழுதியுள்ளார். 1994-இல் ஒரு நூலும் எழுதியுள்ளார்.

CONCORDANCE  நூலுக்குப் பிறகு, ஐராவதம் மகாதேவன் அவர்கள் சிந்து எழுத்துகள சிலவற்றைப் படிக்கவும் தொடங்கினார். 2003-ஆம் ஆண்டுக்குப் பின்னர், உடல் நலக் குறைவு காரணமாக நூல் வெளியிடாது, நோட்டுப்புத்தகங்களில் எழுதி வைத்துள்ளார். தற்போது, அவரது எழுத்து நோட்டுகள் அனைத்தும் ரோஜா முத்தையா நூலகத்துக்குக் கொடையாக அளிக்கப்பட்டுள்ளன.

சிந்துவெளி எழுத்துகள், LOGO WRITING அல்லது LOGO GRAPH என்பதான ஒருவகைக் குறியீட்டெழுத்து முறையில் அமைந்துள்ளன. ஒரு பெயர்ச்சொல் போலவும், அதே சமயத்தில் சொல்லின் விகுதி போலவும் பொருள் கொள்ளுமாறு அமைந்துள்ளன எனலாம். எடுத்துக் காட்டாக, “இல்  என்னும் தமிழ்ச் சொல் வீடுஎன்னும் பொருள் தந்தாலும், ‘ஊரில்’, ‘தெருவில்  ஆகிய சொற்களில் காணப்படுவது போல் ஒரு விகுதியாகப் படிக்குமாறும் அமைகிறது. சிந்து வெளி எழுத்துகள் இது போல் ஒரு சிக்கலைக் கொண்டுள்ளன.

LOGO GRAPH  எழுத்துகளை சித்திர எழுத்துவகை எனலாம். இவ்வகை எழுத்துகளைக் கிரேக்கர்கள் ஃபினீசியரிடமிருந்து (PHOENICIANS) பெற்றார்கள். ஃபினீசியருக்கும் முன்பு  இவ்வகை எழுத்துகளை சுமேரியர்கள் பயன்படுத்தினர். ஃபினீசியர்கள், கடல்சார் வணிகர்கள். அவர்கள், LOGO GRAPH சித்திர வடிவங்களை எழுத்தாக்கினார்கள். இவ்வகை எழுத்துகளில் உயிர் எழுத்துகள் இரா. மெய் எழுத்துகள் மட்டுமே உண்டு. வேறு வேறு வகையில் படிக்கும்படி அவை அமையும். எடுத்துக்காட்டாக, ஆங்கில எழுத்துகள் K T B  ஆகிய மூன்றெழுத்துகள் கொண்ட ஒரு தொகுதியை, இந்தி மொழியில், ‘கிதாப்’,  என்றோ ‘குதுப்  என்றோ இரு வேறு முறையில் படிக்கலாம்.  ஆனால், இவ்வெழுத்துகளைப் படிக்க மொழி ஒன்றின் அடிப்படை மிகத் தேவை. மொழி இன்னதென்று தெரிந்தால் மட்டுமே மேலே குறித்தவாறு படிக்க இயலும். சிந்து வெளி எழுத்துகளின் மொழி இன்னதென்று தெரியாததாலேயே இன்னும் படிக்க இயலவில்லை. எடுத்துக்காட்டாக, ‘கெ ட ட து   என்பதை மொழி அறிந்தவர் மட்டுமே ‘கெட்டது  எனப்படித்தல் இயலும். சிந்து வெளி ஆய்வில் எழுத்துகளைப் படிக்க முயலும் பெரும்பாலோர் வெளிநாட்டினர் என்பது குறிப்பிடத்தக்கது.

மொழி இயல் அடிப்படை ஆய்வு இப்போது இல்லை என்பது குறையாக உள்ளது. மொழி ஆய்வுக்கு மொழி இயல் மிகத் தேவை. மூல மொழி பற்றிய ஆய்வு தற்காலம் தேவை. அடிப்படை மொழி ஆராய்ச்சிக்கு முதலில் இடமளிக்கவேண்டும். பல பல்கலைக்கழகங்களில் மொழி இயல் ஆய்வுகள் இல்லை. சிந்து வெளி எழுத்துகள் பற்றிய புதிரை விடுவிக்க நாம் சுமேரியாவுக்குச் செல்லவேண்டும். சுமேரிய மொழி அறிவு வேண்டும்.

ஐராவதம் மகாதேவன் ஆய்வு செய்த சில பிராமிக் கல்வெட்டுகள்

அ) சித்தன்ன வாசல் கல்வெட்டு

தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை வெளியிட்ட “தமிழ் – பிராமி கல்வெட்டுகள்
நூலில் உள்ள கல்வெட்டுப் பாடமும் குறிப்பும் கீழே:





கல்வெட்டுப் பாடம்

எருமிநாடு குமுழ்ஊர்  பிறந்த காவுடிஈ
தென்குசிறுபோசில் இளயர் செய்த அதிட்அனம்    

இக்கல்வெட்டில் கன்னட மொழித்தாக்கம் இருப்பதாகக் கருதப்படுகிறது. காரணம், எருமி நாடு என்பதை எருமை நாடு எனக் கொள்வதே. எருமை நாடு, மகிஷ மண்டலம் எனச் சமற்கிருதத்தில் குறிப்பிடப்பெறும் மைசூர் நாட்டைக் குறிக்கும். அப்பகுதியில் இருந்த ஊர் குமிழூர். இச்சொல், குமிழ் என்று தேக்கு மரவகையின் அடியாகப் பெயர் பெற்றிருக்கலாம். காவுடிஈ என்பது காவுண்டன் என்ற சொல்லின் பெண்பால் பெயர்.  ‘கௌடிஎன்ற கன்னடப் பெண் துறவியின் பெயர், தமிழில் ‘காவுடிஎன்று எழுதப்பட்டுள்ளது.  இறுதியில் உள்ள ‘இ’ , பளிஇ, கணிஇ என்ற பிற தமிழ்-பிராமி கல்வெட்டுகளில் வரும் வகையில் இகர இறுதிச் சொல்லான காவுடி என்பதிலும் எழுதப்பெற்றுள்ளது. தென்கு சிறுபோசில் என்பது தெற்கு சிறுவாயில் என்று பிற்காலத்தில் வழக்கில் இருந்த நாட்டுப்பிரிவின் பண்டைய வடிவம். வாயில் என்ற தமிழ்ச்சொல் ‘ஹொசிலுஎன்று கன்னடப் படுத்தப்பட்டு, அதன் தமிழ் வடிவமான ‘போசில்என்று இடம் பெறுகிறது என்கிறார் ஐராவதம் மகாதேவன்.

இளயர் என்ற சொல் வீரர் பிரிவினரைக் குறிக்கும். இவர்களைத் துளு நாட்டிலிருந்து வந்தவர் என்று மகாதேவன் வழக்கினை ஆதாரமாக்கிக் கூறுகிறார். இளயர் என்போர் வீரர் குழுவினர் என்பதில் கருத்து வேற்றுமை இல்லை.

சித்தன்ன வாசல் கல்வெட்டு தனித்தன்மை வாய்ந்தது. இக்கல்வெட்டின் மூலமே, தமிழகத்திற்கும் கன்னட நாட்டிற்கும் இருந்த தொடர்பினை நேரடியாக அறிகிறோம். எருமைநாடு என்ர பெயர் சங்க இலக்கியங்களிலேயே இடம்பெறும் ஒன்றாகும். அடுத்த ‘காவுடிஎன்ற சொல் சமண மதத்தில் இருந்த பெண்பாற் துறவியைக் குறிக்கிறது. சமண மதத்தில் அவ்வளவு பண்டைக் காலத்திலேயே பெண்குரத்தியர் இருந்ததற்கான முதற்சான்றாக இது அமைகிறது. சிறுபோசில் என்ற சொல்லும் ‘சிறுவாயில்என்பதன் கன்னட வடிவம் என்றாகும் நிலையில், இக்கல்வெட்டில் இடம்பெறும் கன்னட மொழியின் தாக்கத்தினை முதன் முதலாகக் காட்டும் சான்றாக இது அமைகிறது.

கட்டுரை ஆசிரியர் குறிப்பு :

தமிழ் பிராமியில், மெய்யெழுத்தைக் குறிப்பதற்கே உயிர்மெய் எழுத்து எழுதப்பட்டது. மெய்யெழுத்துகளுக்குப் புள்ளியிடும் முறை இல்லை. உயிர்மெய் எழுத்தைக் குறிக்க, அவ்வெழுத்தின் மேல் ஒரு கோடு எழுதப்படும் என்பதாகப் பார்த்தோம். இந்த அமைப்புமுறை இக்கல்வெட்டில் இருக்கிறது. இக்கல்வெட்டில், ழ், ர், ந், ன், ல், ய், ட், ம்  என்னும் மெய்யெழுத்துகள் புள்ளி பெறாமல் உயிர்மெய் எழுத்துகளாகவே எழுதப்பட்டுள்ளன. உயிர்மெய் எழுத்துகளான – அகர அல்லது ஆகார எழுத்துகள் – நா, ற, த, கா, ள, த, ன  ஆகியவற்றின் மேற்புறம் ஒரு கோடு எழுதப்பட்டுள்ளது.  அனைத்திலும் ஒன்றுபோல் கோடு இருப்பினும்,  நா, கா என்னும் இரு நெடில் எழுத்துகள் மட்டும் அவ்வெழுத்துகள் அமைந்த ‘நாடு’,  காவுடி  என்னும் சொற்களின் பொருள் சுட்டு நோக்கி நெடிலாகப் படிக்கப்பட்டுள்ளன.  ஆனால், மெய்யெழுத்துகளை உயிர்மெய் எழுத்துகளாக எழுதும் விதி முறை இக்கல்வெட்டில் ஓரிடத்தில் மட்டும் பின்பற்றப்படவில்லை. ‘இளயர்’,  செய்த  ஆகிய இரு சொற்களில் வருகின்ற ‘ய  உயிர்மெய், ஒன்றில் மெய்யாகவும், மற்றதில் உயிர்மெய்யாகவும் எழுதப்பட்டுள்ளன.

மற்றொன்று, பிராமியில் ‘இஎழுத்துக்கும், ‘ஈஎழுத்துக்கும் தனித்தனி எழுத்துகள் இருக்கும்போது, இக்கல்வெட்டில் ‘ஈ  எழுத்தை ‘இகரமாகப் படித்திருக்கிறார். காவுடி  என்னும் சொல்லை அடுத்து ‘ஈ  எழுத்து உள்ளது; ஆனால் ‘இகரமாகப் படித்திருக்கிறார்.



அடுத்து, மேற்படி நூலின் குறிப்பில்,

//காவுடிஈ என்பது காவுண்டன் என்ற சொல்லின் பெண்பால் பெயர்.  ‘கௌடிஎன்ற கன்னடப் பெண் துறவியின் பெயர், தமிழில் ‘காவுடிஎன்று எழுதப்பட்டுள்ளது.//

என்று பதிப்பாசிரியர்கள் கூறியிருக்கின்றனர்.  காவுண்டன் என்பதன் பெண்பால் பெயரே காவுடி என்னும் கருத்தும், கௌடி என்பது பெண் துறவியின் (இயற்) பெயர் என்னும் கருத்தும் முரணாக உள்ளன.



ஆ) ஆனைமலைக் கல்வெட்டு

கல்வெட்டுப் பாடம்    (மேற்படி நூலில் உள்ளவாறு)





இவகுன்றது உறையுள் பாதந்தான் ஏரி ஆரிதன்
அத்துவாயி அரட்ட காயிபன்

குறிப்பு :     (மேற்படி நூலில் உள்ளவாறு)

இவகுன்றம் என்னும் இம்மலையில் ஏரிஆரிதன், அத்துவாயி அரட்ட காயிபன் என்னும் இரு துறவியர் தங்குவதற்கான கற்படுக்கை என்பது இதன் பொருள்.

இவம் என்னும் சொல் இபம் என்னும் சமஸ்கிருதச்சொல்லின் மறுவடிவமாகும்.   யானை என்பது இதன் பொருள். உறையுள் என்பது உறைவிடம் என்பதைக்குறிக்கும். பாதந்தான் என்பதைப் பாய் அல்லது படுக்கை தந்தான் எனக் கொள்ளலாம்.  ஆனால் இச்சொல்லைப் பதந்தன் எனக்கொண்டு மரியாதைச் சொல்லாகக் கருதுவர் ஐ.மகாதேவன். ஏரி என்னும் ஊரைச் சேர்ந்த ஆரிதன் என்பது ஒரு துறவியின் பெயர். அட்டவாயி என்பதன் தமிழ் வடிவமாக அத்துவாயி என்பதைக் கொள்ளலாம். அர்த்தம் உரைப்பவன், சமயச் சொற்பொழிவு நிகழ்த்துபவன் என்றும் இதற்குப் பொருள் கூறலாம். அரட்டன் என்பது அத்துறவியின் பெயராகவும் காசிபன் என்பது கோத்திரப் பெயராகவும் கொள்ளப்படும். ஆரிதன், அரட்ட காயிபன் என்னும் இரு துறவியருக்கான தங்குமிடமாக இக்குகைத் தளத்தைக் கொள்ளலாம்.                                                                                                                           

சுப்பராயலு அவர்களின் கருத்து:  ஐராவதம் மகாதேவன் ‘இவ  எனப்படித்து யானை  எனப் பொருள் கூறுகிறார். ஆனால், ‘இவ் குன்றம்  என்றும் படிக்கலாம். இவ்  என்பது வேறு பாடம்.

கட்டுரை ஆசிரியர் குறிப்பு :   இக்கல்வெட்டில், பா, தா, வா, கா ஆகிய உயிர்மெய் நெடில் எழுத்துகளுக்கு மட்டும் எழுத்துகளின் மேற்புறம் கோடு உள்ளது. இக்கல்வெட்டில் ‘இகர  உயிர் எழுத்து எழுதப்பட்டு இகரமாகவே (குறிலாக) படிக்கப்படுகிறது. ட்என்னும் மெய்யெழுத்து மட்டும் புள்ளி பெற்று மற்ற மெய்யெழுத்துகள் புள்ளி பெறாமல் உயிர்மெய் எழுத்துகளாகவே எழுதப்பட்டுள்ளன என்பது சிந்தனைக்குரியது.

பிராகிருதம் பற்றி சுப்பராயலு அவர்களின் கருத்து:

தமிழர்களுக்கு முதலில் அறிமுகமானது பிராகிருதம். பின்னரே சமற்கிருதம் அறிமுகமாகிறது. எழுத்துகளைப் பரப்புபவர் வணிகர்கள்தாம். தமிழ் பிராமிக் கல்வெட்டுகளில் உள்ள ஆள் பெயர்கள் பிராகிருதம். பிராகிருதத்தில் மெய் இரட்டிக்காது.










துரை.சுந்தரம், கல்வெட்டு ஆராய்ச்சியாளர், கோவை.
அலைபேசி : 9444939156. 

புதன், 12 டிசம்பர், 2018

திருநாதர் குன்று - வட்டெழுத்துக் கல்வெட்டு

இன்று முகநூலில் திருச்சி பார்த்தி ஓர் அருமையான கல்வெட்டுப்படத்தைப் பதிவு செய்திருந்தார்.  விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகிலுள்ள திருநாதர் குன்றில் பாறைக் கல்வெட்டு ஒன்றின் படம்.  வட்டெழுத்தால் எழுதப்பட்ட கல்வெட்டு.  கல்வெட்டு அறிஞர்கள் பலரும் சிறப்பாகக் குறிப்பிடுகின்ற ஒரு கல்வெட்டு. தமிழ்த் தொல்லெழுத்தான ‘தமிழி”  எழுத்தின் வடிவத்திலிருந்து வளர்ந்த வட்டெழுத்தின் முதல் கட்ட எழுத்து.  ”தமிழி” எழுத்து முறையில் காணப்படாத ”ஐ”  எழுத்தை முதன் முதலாகக் கொண்ட ஒரு கல்வெட்டு. இக்கல்வெட்டின் படம் இதற்கு முன்னர் சில நூல்களில் பார்த்திருக்கிறேன். ஆனால், நேரடியாகக் கல்வெட்டு அமைந்திருக்கும் இடத்தில் எழுத்துகளின் மீது வெள்ளைப்பொடி பூசித் தெளிவாக எழுத்துகள் தெரியும் நிலையில் இந்தப் படம் மிக அருமையாக இருந்தது.  கல்வெட்டின் காலம் கி.பி. 5-6 -ஆம் நூற்றாண்டு. 

மேலே குறித்தவாறு, முதன் முதலில் “ஐ”  எழுத்தின் வடிவத்தை இக்கல்வெட்டில் காணலாம். ஒரு சூலம் போன்ற வடிவில் அமைந்துள்ள எழுத்து. திருச்சி பார்த்தியின் கல்வெட்டுப்படம் கீழே: 



திருநாதர் குன்று-வட்டெழுத்துக் கல்வெட்டு - முதல் எழுத்து “ஐ”


கல்வெட்டின் பாடம் :

1   ஐம்பத்தேழன 
2  சனந்நோற்ற 
3   சந்திர நந்தி ஆ
4   சிரிகரு நிசீதிகை


விளக்கம் :  கல்வெட்டுப் பாடத்தைக் கீழ் வருமாறு பிரித்துப் பொருள் கொள்ளவேண்டும்.

1   ஐம்பத்து ஏழு  அனசனம்  நோற்ற
2  சந்திர நந்தி ஆசிரிகரு
3   நிசீதிகை

திருநாதர் குன்றில் இயங்கிவந்த  சமணப்பள்ளியின் ஆசிரியருள் ஒருவரான சந்திர நந்தி என்னும் துறவியார் ஐம்பத்தேழு நாள்கள்  உண்ணா நோன்பிருந்து உயிர் நீத்த இடம் என்னும் செய்தியை இக்கல்வெட்டு கூறுகிறது.  அனசனம் என்னும் சொல் உண்ணாதிருத்தலைக் குறித்தது. அசனம் என்னும் சமற்கிருதச் சொல் உண்ணுதலைக்குறிக்கும். அதன் எதிர்ப்பொருளைக் குறிக்க “அன்”  என்னும் முன்னொட்டு சேர்க்கப்படல் சமற்கிருத மொழி இலக்கண மரபு. எனவே, ‘அன்”+’அசனம்”  என்பது  “அனசனம்”  என்றாயிற்று. 


வட்டெழுத்து வளர்ச்சியுற்று இரண்டாம் கட்டத்தை அடையும்போது, ‘ஐ”  எழுத்தின் வடிவம் மாறவில்லை. மற்ற எழுத்துகள் பெரும் மாற்றத்தைக் கொண்டுள்ளன. மேற்படிக் கல்வெட்டு இரண்டாம் கட்ட எழுத்து வடிவத்தில் எழுதப்பட்டால் எவ்வாறிருக்கும் என்பதைக் கீழுள்ள  கல்வெட்டுப் படம் காட்டும்.


கி.பி. 8-9 -ஆம் நூற்றாண்டு வட்டெழுத்து வடிவம்

பின் குறிப்பு :

வட்டெழுத்தில் அமைந்துள்ள இக்கல்வெட்டைத் தமிழ்நாடு சுற்றுலாத்துறை இணையத்தில் வெளியிட்டுள்ள ஒரு பதிவில், தமிழ் பிராமி எழுத்தில் எழுதியுள்ளதாகப் பிழையாகக் குறித்துள்ளது.  துறையினர் தகுந்த திருத்தத்தைச் செய்யவேண்டும்.  தமிழ்நாடு சுற்றுலாத்துறையின் பதிவைக் கீழ்க்கண்ட சுட்டி வழி பார்க்கலாம். 


https://tamilnadu-favtourism.blogspot.com/2015/12/theerthangarargul-thirunathar-kundru.html


இப்பதிவைப் பார்த்துத்தானோ என்னவோ,  வேலுதரன் அவர்களும் தம் இணைய வலைப்பூவில் மேற்படிக் கல்வெட்டு பிராமியில் எழுதப்பட்டுள்ளது எனப் பிழையாகக் குறிப்பிடுகிறார்.  அவரது பதிவைக் கீழ்க்கண்ட சுட்டி வழி பார்க்கலாம்.

https://veludharan.blogspot.com/2015/02/reach-heritage-tour-to-thirunathar.html




துரை.சுந்தரம், கல்வெட்டு ஆராய்ச்சியாளர், கோவை.
அலைபேசி :  9444939156.

வெள்ளி, 7 டிசம்பர், 2018

ஐவர் மலை -  ஒரு கள ஆய்வு


முன்னுரை

ஐவர் மலை, திண்டுக்கல் மாவட்டம் பழனி வட்டத்தில் பழனியிலிருந்து பதினைந்து கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள மலை. இருப்பினும், கோவைப்பகுதியிலிருந்து செல்கின்றவர் திருப்பூர் மாவட்டம் உடுமலை -கொழுமம் வழியாகவே செல்லவேண்டும்.  பழங்காலத்தில் இது ஒரு ஜைனக் குடியிருப்பாக இருந்துள்ளது எனத் தொல்லியல் துறையினரின் தென்னிந்தியக் கல்வெட்டுகள் நூலின் பதிநான்காம் தொகுதி குறிப்பிடுகிறது. கி.பி. 8-10 நூற்றாண்டுகளில் அயிரை மலை சமண முனிவர்களும் அவர்களது மாணவர்களும் நிறைந்த சமணப்பள்ளியாக இருந்துள்ளது என்றும், இச்சமணப்பள்ளியோடு பாண்டிய நாட்டின் பிற சமணப்பள்ளிகளுக்கும் தொடர்பு இருந்துள்ளது என்றும் இங்கு வைக்கப்பட்ட தொல்லியல் துறையினரின் அறிவிப்புப் பலகை கூறுகிறது. இங்கு, திரௌபதியம்மன் கோயில், உச்சிப்பிள்ளையார் கோயில், முருகன் கோயில் ஆகிய கோயில்களும் இருக்கின்றன. இணையத்தில் இம்மலையைப் பற்றி நிறையச் செய்திகள் காணப்படுகின்றன. நமது கட்டுரை, கல்வெட்டுகளைக் கண்டு அவை கூறும் செய்திகளை அறிய உதவும் களப்பணி பற்றியது.


2009-ஆம் ஆண்டு- களப்பணி

தொல்லியல் சார்ந்த நூல்கள் வாயிலாகக் கல்வெட்டுகளை அவை இருக்கும் இடங்களுக்குச் சென்று பார்த்துப் படிக்கும் ஆர்வலராக 2009-ஆம் ஆண்டு ஐவர் மலைக்குச் சென்று ஜைனத் தடயங்களைக் கண்டு மகிழ்ந்தது ஐவர் மலை தொடர்பான தொடக்கம். அப்போது கையில் ஒளிப்படக்கருவி இல்லை. இயற்கையாக அமைந்த குகைத்தளத்தில், ஒரு பகுதியில் படுக்கைகள் இருந்த இடமும், இன்னொரு பகுதியில் பதினாறு ஜைனத் தீர்த்தங்கரர்களின் புடைப்புருவச் சிற்பங்களும் இருந்தன. சிற்பங்களின் கீழ் வட்டெழுத்துக் கல்வெட்டுகள் பொறிக்கப்பட்டிருந்தன. கல்வெட்டுகள் தெளிவாகத் தெரியாவண்ணம் சுவர் எழுப்பப்பட்டுச் சுண்ணம் பூசப்பட்டிருந்தது. இந்தத் தடைகளைத் தாண்டிச் சில எழுத்துகள் படிக்கும் தோற்றம் பெற்றிருந்தன.  அரைகுறையாகப் புலப்பட்ட எழுத்துகளைக் கையோடு எடுத்துச் சென்ற நோட்டுப் புத்தகத்தில் எழுதிப்பார்த்துப் பிழையான பாடத்தோடு படித்தது இங்கே நினைவுகூரப்படுகிறது. தீர்த்தங்கரர் ஒருவருடைய சிற்பத்தின் கீழ் சரியான பாடமாகக் கீழுள்ளவாறு வட்டெழுத்து அமைந்துள்ளது:



சரியான பாடம்

1  ஸ்ரீ வடபள்ளி ஆ
2  ரம் விச்சி வர
3  தபாணி செயல்    

ஆனால், பிழையாகப் படித்த முயற்சியைக் கீழுள்ள ஒளிப்படத்தில் (1) என்று அடையாளமிட்ட  கல்வெட்டு வரியில் காணலாம். 





பிழையாகப் படித்த பாடம்:

1  ஸ்ரீ வ(ப)ய பள்ளி ப
2  ரம வி(பி)ச்சி பர
3  தமாதி செயல்

மற்றொரு கல்வெட்டு சரியாகப் பிழையின்றி படிக்கப்பட்டது. மேலே, ஒளிப்படத்தில் (2) என்று அடையாளமிட்ட  கல்வெட்டு வரியில் காணலாம்.  


                                                           
வரி  1  - ஸ்ரீ அச்சணந்  வரி  2  - திசெயல்
(ஸ்ரீ அச்சணந்தி செயல்)

                                           

2013-ஆம் ஆண்டு- களப்பணி

தஞ்சையைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் தமிழகத் தொல்லியல் கழகம் வழி நண்பரானவர் திரு. வீரராகவன். விழுப்புரத்தில் பள்ளியாசிரியராய்ப் பணி நிறைவு செய்தவர். மேற்படிக் கழகத்தின் தோற்றக்காலத்திலிருந்து அக்கழகத்தோடு இணைந்துள்ளவர். இருபத்தைந்து ஆண்டுகளுக்கும் மேலாகத் தொல்லியல் தடயங்களை வெளிப்படுத்தித் தொல்பொருள்களைப் பல்லாண்டு சேர்த்துச் சொந்தமாக ஒரு அருங்காட்சியகத்தையே வைத்திருப்பவர். 2013-ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் அவர் கோவை வந்திருந்தபோது, கோவைப்பகுதியில் தொல்லியல் சார்ந்த இடங்கள் ஒன்றிரண்டைப் பார்வையிட விருப்பம் தெரிவித்தபோது உடுமலை ஐவர் மலைக்கு அழைத்துச் சென்றேன். வழியிலேயே பல்லடம்-உடுமலைப் பாதையில் கோட்டமங்கலம் என்னும் ஊரில் கி.பி. 1693-ஆம் ஆண்டைச் சேர்ந்த வீரக்கம்பம் என்னும் தூண் நடுகல்லைக் கண்டறிந்தோம். அது பற்றிய பதிவு வலைப்பூ தளத்தில் 2014, ஜனவரியில் வெளியாயிற்று. தினமணி நாளிதழிலும் வெளியாயிற்று. (மின் தமிழில் இன்னும் வெளியாகவில்லை)

ஐவர் மலைச் சமணத்தீர்த்தங்கரர் சிற்பங்களைப் பார்வையிட்டதோடு மட்டுமல்லாமல் நண்பர்  தாம் கொண்டுவந்திருந்த கரிய நிற மை தடவிச் சிற்பங்களின் கீழே உள்ள பல வட்டெழுத்துக் கல்வெட்டுகளையும், ஓரிரண்டு தமிழ் எழுத்துக் கல்வெட்டுகளையும் தெளிவாகப் புலப்படும் வண்ணம் ஆக்கினார். கல்வெட்டுகளைப் படித்தோம். கல்வெட்டுகளைப் படியெடுக்கும் பணியைப் பார்த்துக்கொண்டிருந்த இளைஞர் ஒருவர் தம்மை அறிமுகப்படுத்திக்கொண்டார். அவர் பெயர் சேக்கிழார் என்பது. அரிதாகக் கேள்வியுறும் பெயராக இருக்கவே, பெயர்க்காரணம் கேட்டதற்கு அவ்விளைஞர், தாம் சேக்கிழார் மரபினர் என்றும், பற்றின் காரணமாகத் தம் இயற்பெயரை விடுத்துச் சேக்கிழார் என்னும் பெயரையே வைத்துக்கொண்டதாகச் சொன்னார். அவர், தீர்த்தங்கரர் சிற்பங்கள் இருக்கும் இடத்தைத் தவிர இங்குள்ள சுனைக்குளத்தின் அருகில் பாறைப்பரப்பில் கல்வெட்டு ஒன்றைக் கண்டதாகக் கூறி அங்கு அழைத்துச் சென்றார். பாறைத்தரையில் ஒரு சிறிய, ஐந்து வரிகளைக்கொண்ட கல்வெட்டு. வட்டெழுத்தினால் பொறிக்கப்பட்டிருந்தது. தொல்லியல் சார்ந்த இடங்களைக் கண்டு மகிழ வந்த நண்பருக்கும் எனக்கும் புதிய கண்டுபிடிப்புகளாக இரண்டு கல்வெட்டுகள் கிடைத்தமை பெரு மகிழ்ச்சியை அளித்தது.  எதிர்பாரா நிகழ்ச்சி. இந்தக் கல்வெட்டின் மீதும் கரிய மை பூசிப் படிக்க முயன்றோம். திறந்த வெளியில் தரையில், வெயிலும், மழையும், காற்றும் பட்டுப்பட்டுக் கால மாற்றத்தால் எழுத்துகளின் தெளிவின்மை காரணமாகச் சரியான பாடத்தைப் படிக்கக் கூடவில்லை. கி.பி. 9-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஒரு வட்டெழுத்துக் கல்வெட்டு கிடைத்த மகிழ்ச்சியில் திரும்பினோம்.


                           
கண்டறிந்த புதிய வட்டெழுத்துக் கல்வெட்டு                

                                               
 சேக்கிழாருடன் ஆய்வாளர்கள்



2014-ஆம் ஆண்டு- களப்பணி

2014-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் மீண்டும் ஐவர் மலை செல்லும் ஒரு வாய்ப்பு ஏற்பட்டது. நாளிதழ் நண்பர் மீனாட்சிசுந்தரம், நண்பர் பாஸ்கரன் ஆகிய இருவருடன் ஐவர் மலை சென்றேன். கோவை-பல்லடம்-குடிமங்கலம்-கோட்டமங்கலம்-துங்காவி-வயலூர் வழியாக ஐவர் மலைக்குப் பயணம். துங்காவியில் அமராவதி ஆற்றின் வாய்க்காலின் அருகிலேயே ஒரு சிறிய செங்கல் கட்டுமானக் கோயில் (கருவறை மட்டுமே) இருந்தது. அதன் வளாகத்தைச் சுற்றிலும் பெரிய கற்களைக் கொண்டு சுற்றுச் சுவர் வேலி அமைத்திருந்தனர். வளாகத்தில் ஒரு சிறிய மாடம் போன்ற அமைப்பு இருந்தது. அதில் புடைப்புச் சிற்பமாக அழகானதொரு நடுகல் சிற்பம் காணப்பட்டது. 




துங்காவி-வாய்க்கால் அருகில் கோயில் 




நடுகல் சிற்பம்

ஐவர் மலையில் சமணச் சிற்பங்களையும் கல்வெட்டுகளையும் கண்டு களித்தோம். முன்னர் 2013-இல் கண்டறிந்த வட்டெழுத்துக் கல்வெட்டைக் கண்டுபிடித்து மீண்டும் படித்தறியும் முயற்சியில் கல்வெட்டைப் பாறைப்பரப்பில் தேடினோம். சுனைக்குளத்தின் அருகில் இருந்ததான நினைவில் அதன் அருகில் தேடிப்பார்த்துப் பயனில்லாமல் போயிற்று.

2018-ஆம் ஆண்டு- களப்பணி

11-11-2018 அன்று கோவை வருவதாகக் கல்வெட்டு ஆராய்ச்சியாளர் நண்பர் வீரராகவன் அவர்கள் கூறவே, 2013-ஆம் ஆண்டு- களப்பணியின்போது கண்டறிந்த  வட்டெழுத்துக் கல்வெட்டினை முதன்முதலாகப் படிக்கும் முயற்சியைத் தொடங்கிய நாங்களிருவருமே மீண்டும் படித்து முடிக்கவேண்டும் எனத் திட்டமிட்டு, 12-11-2018 அன்று ஐவர் மலை நோக்கிப் பயணப்பட்டோம். உடுமலையில் நண்பர் தென்கொங்கு சதாசிவம் எங்களுடன் இணைந்துகொண்டார். அவரும் ஐவர் மலைப்பகுதியில் ஒரு பாறைக்கல்வெட்டைப் பார்த்துவைத்திருப்பதாகக் கூறவே அக்கல்வெட்டையும் நேரில் சென்று பார்த்துப் படிக்கவேண்டும் என்னும் திட்டத்தையும் சேர்த்துக்கொண்டோம். உடுமலையிலிருந்து கொழுமம் வழியாக ஐவர் மலை சென்றடைந்தோம். வெயில் மிகுதியாக ஏறும் முன்னரே காலை பதினொரு மணியளவில் மலை ஏறிவிட்டோம். முதற்பணியாக வட்டெழுத்துக் கல்வெட்டைத் தேடும் முயற்சி தொடங்கியது. சுனைக்குளத்தின் முன்புறம்  பாறைப்பகுதியில் தேடியதில் கல்வெட்டு புலப்படவில்லை. கல்வெட்டு அமைந்திருந்த இடம் மிகச் சரியாக நினைவில் இல்லை. சுனைக்குளத்தைச் சுற்றிலும் பாறைத்தரை சமப்பரப்பாக ஓரிடத்திலும் இல்லை. ஆனால் சுனைக்குளம் அமைந்திருந்த பகுதியின் மட்டத்திலிருந்து கீழே இருந்த இன்னொரு பள்ளமான பகுதியில் சமதளப்பரப்பு காணப்பட்டது. அங்கு சென்று தேடியதில் சிறிது நேரத்தில் கண்டுபிடித்துவிட்டோம். அளவற்ற மகிழ்ச்சி. ஐந்து ஆண்டுகளுக்குப் பின்னர் கிட்டிய கல்வெட்டாயிற்றே.

கண்டுபிடிக்கப்பட்ட புதிய வட்டெழுத்துக் கல்வெட்டு

சமப்பரப்பாயிருந்த ஓரிடத்தில், ஒன்றரை அடி நீளம், முக்காலடி அகலம் கொண்ட சிறிய பரப்பில் எழுத்துகள் பொறிக்கப்பட்டிருந்தன. எழுத்து, வட்டெழுத்து வகையினது. பாண்டியர்களின் கல்வெட்டுகள் மட்டுமே கொடுக்கப்பட்டுள்ள  தென்னிந்தியக் கல்வெட்டுகளின் பதிநான்காம் தொகுதி நூலில் ஐவர் மலைக் கல்வெட்டுகள் பதிவாயுள்ளன. அந்நூலின் குறிப்புப்படி, இங்குள்ள வட்டெழுத்துக் கல்வெட்டுகள் கி.பி. 9-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தன.  அவ்வகையில், இக்கல்வெட்டும் கி.பி. 9-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகவே இருக்கவேண்டும். கல்வெட்டின் எழுத்தமைதியும் அவ்வாறே உள்ளது. முன்னரே குறிப்பிட்டவாறு ஐந்து வரிளைக்கொண்ட கல்வெட்டு. இறுதி வரியில் இரண்டு எழுத்துகளே புலப்படுகின்றன. கல்வெட்டின்மீது மாவு பூசியதில் எழுத்துகள் ஓரளவு புலப்பட்டன. இருப்பினும் கல்வெட்டினை முழுதாகப் படித்து முழுச்செய்தியையும் அறியமுடியவில்லை.  கல்வெட்டில், வடபள்ளி என்னும் ஊரின் பெயர் காணப்படுகிறது. ”மாணாக்கர்” என்று படிக்கும்படியாக ஒரு சொல் காணப்படுகிறது. சமணப் பெண் துறவியார் ஒருவர் செய்த பணியைக் கல்வெட்டு குறிப்பதாகக் கருதுகிறோம். அந்தத் துறவியின் பெயர் “ஆவேரி அடிகள்  என்பதாக இருக்கக்கூடும் என்றும் கருதுகிறோம். கல்வெட்டில் “வடபள்ளி”,  அடிகள்  ஆகிய சொற்கள் மிகத் தெளிவாக உள்ளன.  பெண் துறவியார் செய்த செயல் என்ன என்பதை அறிய இயலவில்லை. கல்வெட்டு ஒரு தரைப்பரப்பில் உள்ளதால், சற்றுத் தொலைவில் அமைந்திருக்கும் சிறு சிறு குகைத் தளங்களுடன் இக்கல்வெட்டைத் தொடர்பு படுத்தவும் இயலவில்லை.  கல்வெட்டு அறிஞர்களின் துணையோடு இக்கல்வெட்டு மீளாய்வு செய்யப்பட்ட பின்னர் கல்வெட்டுச் செய்தி என்ன என்பது அறியவரலாம்.

ஐவர் மலையின் பிற கல்வெட்டுகள்

ஐவர் மலைக் குகைப் பாறையில் மொத்தம் பதிநான்கு கல்வெட்டுகள் தொல்லியல் துறையினரால் படிக்கப்பட்டுப் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவற்றுள் ஒன்பது கல்வெட்டுகள் தீர்த்தங்கரர்களின் சிற்பத்திருமேனிகளின் அடிப்புறத்தில் பொறிக்கப்பட்டுள்ளன.  திருமேனிகளைச் செய்வித்தவர் யார் என்பதை இக்கல்வெட்டுகள்  கூறுகின்றன.  செய்வித்தவர் என்பதைக்குறிக்க அவர் பெயருடன், “செயல்” என்னும் சொல் எழுதப்பட்டுள்ளது. எடுத்துக்காட்டாக, 

“ஆரம் விச்சி வரதபாணி செயல்”
”ஸ்ரீ அச்சணந்தி செயல்”
“ஸ்ரீ இந்திர சேனன் செயல்”
“குடியன் மூவேந்தன் செயல்”
“(பாத)மூலத்தான் ஆரி செய்த செயல்”
“மல்லிசேனப் பெரியான் செயல்”
“விரிச்சி நாகன் செயல்”

என்பனவற்றைக் குறிப்பிடலாம். 

எடுத்துக்காட்டுக்கு இரு படங்கள். 
ஸ்ரீ இந்திர சேனன் செயல்

மூவேந்தன் செயல்


மீதி ஐந்து கல்வெட்டுகள் வேறு சில செய்திகளைக் கூறுவனவாய் அமைந்துள்ளன.  அவற்றின் கல்வெட்டுப் பாடங்களும் விளக்கங்களும் கீழ்வருமாறு:

க.வெ. எண்-700  தொல்லியல் ஆய்வுத்துறை 1905-ஆம் ஆண்டறிக்கை .
பாடம்:

1  . . . . .  எழுநூற்றுத் . . . .
2  . . . . .  ற்கு யாண்டெ . . . 
3  . . . . .  கொழுமத்து சா . .
4  . . . . .  ர்ச்0வ படாரற் . . . 
5  . . . . .  த்திரண்டா . . . 
6  . . . . .  வைத்த பொ . . . 


குறிப்பு :  சிவப்பு எழுத்துகள் கிரந்த எழுத்துகள்.


வட்டெழுத்துக் கல்வெட்டு


விளக்கம்:  கல்வெட்டு முழுமையாக இல்லை. ஐவர் மலையில் முதல் சிற்பம் பார்சுவ நாதருடையது. பார்சுவ நாதரின் வழிபாட்டுக்காகச் சிலர் கொடைப்பொருளாகப் பொன்  அளித்துள்ளனர். இக்கல்வெட்டு, கொழுமததைச் சேர்ந்த ஒருவர் பொன் கொடையளித்துள்ளதைக் குறிப்பிடுகிறது. படாரர் என்னும் சொல் பட்டாரக(ர்)  என்னும் சொல்லின் திரிபு எனலாம். பட்டாரகர் என்பது சமண மதத்தில் தலைவரைக் குறிப்பதாகும். ஐவர் மலைச் சமணச் சிற்பங்களில் முதற்சிற்பமாகக் காணப்படுவது (பா)ர்ச்0வ படாரர்  சிற்பமே. சமணத்துறவிகளைக் குறிக்கவும், இறைவனைக்குறிக்கவும் ”படாரர்” என்னும் சொல்லே வழக்கில் இருந்தது. 


க.வெ. எண்-701  தொல்லியல் ஆய்வுத்துறை 1905-ஆம் ஆண்டறிக்கை .
பாடம்:

ஸ்ரீ பெரும்பத்தி 
2  ஊர் பட்டிநிக்குர
3  த்தியார் மாணாக்கியா
4  ர் அவ்வணந்திக்
5  குரத்தியார் செய்
6  வித்த தேவர்


குறிப்பு :  சிவப்பு எழுத்து கிரந்த எழுத்து.


வட்டெழுத்துக் கல்வெட்டு


விளக்கம்:  தீர்த்தங்கரர் ஒருவரின் சிற்பத்திருமேனியைச் செய்வித்தவர் பற்றிய - மேலே குறிப்பிட்ட ஒன்பது கல்வெட்டோடு பத்தாவது -  கல்வெட்டாக இது இருப்பினும் கூடுதல் செய்திகளை அறியச்செய்யும் கல்வெட்டாகத் திகழ்கிறது. சமணத்தில் பெண் துறவியர் இருந்தமை அறியப்படுகிறது. அவர்கள் குரத்தியர்  என்று அழைக்கப்பெற்றனர்.  ஆண் துறவியர் குரவர் என்னும் சொல்லால் அழைக்கப்பட்டனர்.  சைவ சமயப் பெரியோரையும் குரவர் என அழைக்கும் மரபு  சமணத்திலிருந்து ஏற்பட்டிருக்கக் கூடும். சமணச் சமயத்தின் தானக்கொள்கைகளில் ஒன்றான கல்வியுடன் இணைந்த ஒரு சொல் மாணாக்கர்/மாணாக்கியர் என்னும் சொல். பெரும்பத்தியூரைச் சேர்ந்த பட்டிநிக்குரத்தியாரின் மாணாக்கியரான அவ்வணந்திக் குரத்தியார் செய்வித்த சிற்பத்திருமேனியை இக்கல்வெட்டு குறிக்கிறது. வழிபடும் கடவுளுக்கு நிகரான ஒரு சொல்லாகத் “தேவர்”  என்னும் சொல் ஆளப்பட்டு வந்துள்ளது. இதன் காரணமாகவே  கோயிலைக் குறிக்கையில் சில கல்வெட்டுகளில் “தேவ குலம்”  என்னும் சொல்லும்,  கடவுளுக்கு ஒப்பாகக் கருதும் நிலையில் அரசனைக் குறிக்கத் “தேவர்” என்னும் சொல்லும் பயின்று வருவதைக் காண்கிறோம்.  சோழர் கல்வெட்டுகள் அனைத்திலும், அரசனைக் குறிக்கும்போது பெயரோடு சேர்த்து “தேவர்”  என்னும் பின்னொட்டுச் சொல் காணப்படுகிறது. சமணத்தில்  பெண்களை உயர்வாகக் கருதி அழைக்கையில் அவ்வை என்று குறிப்பிடுவதை இக்கல்வெட்டு மூலம் அறிகிறோம். சங்ககாலப் பெண்பாற் புலவர்களில் பல “அவ்வை”கள் இருப்பது இக்காரணத்தால்தான் எனலாம். 

க.வெ. எண்-702  தொல்லியல் ஆய்வுத்துறை 1905-ஆம் ஆண்டறிக்கை .

பாடம்:

1  குவணச்சேரித் தட்டார்ச் சா
2  விகித்தி வட்டம் வடு
3  கி ஸ்ரீ அயிரை மலை தேவர்
4  க்கவிப்புறமட்டி
5  ன பொன்னிரு கழஞ்சு ||-


குறிப்பு :  சிவப்பு எழுத்துகள் கிரந்த எழுத்துகள்.





வட்டெழுத்துக் கல்வெட்டு


விளக்கம்:  குவணச்சேரி என்னும் ஊரினைச் சேர்ந்த வட்டம் வடுகி என்பவர் அயிரை மலைக் கடவுளுக்குத் திருவமுது படைப்பதற்காக இரண்டு கழஞ்சு பொன் கொடையளித்தது பற்றி இக்கல்வெட்டு கூறுகிறது.  இன்று இம்மலை ஐவர் மலை என்று மருவி அழைக்கப்பட்டாலும், 8-9-ஆம் நூற்றாண்டில் இந்த மலை “அயிரை மலை”  என அழைக்கப்பெற்றதை இக்கல்வெட்டு உறுதி செய்கிறது. பதிற்றுப்பத்து இலக்கியத்தில் சுட்டப்பெறும் அயிரை மலை இந்த மலையாகலாம்  என்னும் கருத்தும் உண்டு.  கல்வெட்டுகளில், ”புறம்”  என்னும் சொல்லாட்சி உண்டு.  இது, கோயில் வழிபாடு மற்றும் பிற அறங்களுக்காகக் கொடையாக அளிக்கப்படும் இறையிலி நிலத்தைக் குறிக்கும். (இறையிலி  என்பது அரசுக்குச் செலுத்தும் வரியிலிருந்து நீக்கம் பெறுதலைக் குறிக்கும்)  விளக்குப் புறம், மடப்புறம் போன்ற பல்வகை இனங்களுக்கு நிலம் அளிக்கப்படுவதைக் கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன. இக்கல்வெட்டில் உள்ள “தேவர்க்கவிப்புறமட்டின பொன்” என்பதை, ”தேவர்க்கு-அவிப்புறம்-அட்டின-பொன்”  எனப்பிரித்துப் பொருள் கொள்ளல் தெளிவுண்டாக்கும்.  அவி என்பது  கடவுளுக்குப் படைக்கும் உணவு (அமுது). அட்டுதல் என்பது கொடுத்தல், தானம் செய்தல். எனவே, அயிரை மலைத் தேவர்க்கு அமுது படைக்க ஏற்படும் செலவினத்துக்காக நிலம் தானம் செய்யப்படுதலையும் அதற்கு முதலாக இரண்டு கழஞ்சுப்பொன் அளிக்கப்பட்டதையும் கல்வெட்டு தெரிவிக்கிறது. குவணச்சேரி என்னும் ஊர் தற்போது உள்ளதா எனத்தெரியவில்லை. 

க.வெ. எண்-703  தொல்லியல் ஆய்வுத்துறை 1905-ஆம் ஆண்டறிக்கை .

பாடம்:

1  . . . .  னுக்குச் செல்லாநி . . .  .  ருந்
2  . . . .  றலூர் வாழுந்திணை . . . .  சந்திரு . . . 
3  . . . .  ருவயிரைக்கு  இரண்டு கலம் பெய்தா(ன்)
4  . . . .  விக்கும் ஓரடிகளுக்கும் ||-




தமிழ் எழுத்துக் கல்வெட்டு




விளக்கம்:  கல்வெட்டு முழுமையாக இல்லை.  தென்னிந்தியக் கல்வெட்டுகள் நூலின் பதிநான்காம் தொகுதி குறிப்பிடுவதுபோல் அயிரை மலை, பண்டு பெயர் பெற்ற சமணக்குடியிருப்பாக இருந்ததோடு, பார்சுவ நாதரை முதன்மை இறைவராகக் கொண்ட வழிபாட்டிடமாகவும் இருந்துள்ளது; வழிபாட்டுக்காகப் பலர் கொடையளித்துள்ளனர். அது போன்ற ஒரு கொடையை இக்கல்வெட்டு குறிக்கிறது. கலம் என்னும் சொல்லைக்கொண்டு கொடைப்பொருள் நெல் எனக் கருதலாம். நெல் கொடை, இறைவற்குப் படைக்கும் அவிக்காகவும் (அமுது), சமணத் துறவியார் ஒருவருக்குச் சோறு படைக்கவும் அளிக்கப்பட்டது. 4  . . . .  விக்கும் ஓரடிகளுக்கும் ||-   என்னும் தொடர் இக்கருத்தை உறுதியாக்குகிறது. .  விக்கும்   என்பது  “அவிக்கும்”  என்னும் சொல்லின் குறை வடிவமே. அடிகள் என்னும் சொல் சமணத் துறவியரைக் குறிக்கும் இன்னொரு சொல்.  

தமிழ் எழுத்துக் கல்வெட்டுகளில் “ணை”  எழுத்து, தனிவடிவம் பெற்று - அதாவது, மற்ற எழுத்துகளின் ஐகார வடிவத்தில் எழுத்துக்கு முன்புற ஒட்டாக எழுதப்படும் இரட்டைக்கொம்பு  போல் எழுதப்படாமல் -  எழுதப்படும். ஆனால், மேற்கண்ட கல்வெட்டில் இரண்டு ஒற்றைக்கொம்பு சேர்த்து எழுதப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. (வரி 2)

”ணை”   எழுத்தின் தனி வடிவம்
 
”ணை” எழுத்து ஐவர் மலைக் கல்வெட்டில் வேறு வடிவம்
அதேபோல,   இக்கல்வெட்டின் மூன்றாம் வரியில் உள்ள “யி”  எழுத்து வழக்கமாக எழுதப்படும் முறைக்கு  மாறுபட்டுள்ளதைக் காணலாம்.


”யி”  வழக்கமான முறையில்


”யி” எழுத்து ஐவர் மலைக் கல்வெட்டில் வேறு வடிவம்

      

க.வெ. எண்-703  தொல்லியல் ஆய்வுத்துறை 1905-ஆம் ஆண்டறிக்கை .

பாடம்:

1  சகரயாண்டு எழுநூற்றுத் தொண்ணூற்றிரண்டு 
2  போந்தன வரகுணற்கு யாண்டு எட்டு குணவீரக்கு
3  ரவடிகள் மாணாக்க(ர்) காழத்து சாந்திவீரக்
4  குரவர் திருவயிரை பார்ச்0வ படாரரையு மியக்
5  கி அவ்வைகளையும் புதுக்கி இரண்டுக்கு முட்
6  டாவவியு மோரடிகளுக்கு சோறாக அமைந்தன
7  பொன் ஐந்நூற்றைந்து காணம்


வட்டெழுத்துக் கல்வெட்டு


விளக்கம்:  பார்சுவ படாரரை முதன்மை  தேவராகக் கொண்டு வழிபாடுகள் அயிரை மலையில் நிகழ்ந்துள்ளதை மேலே சுட்டியுள்ளோம். பார்சுவநாதரின் சிற்பத்திருமேனியைச் செய்வித்தவர் பற்றிய குறிப்பு அடங்கிய கல்வெட்டு சிற்பத்தின் கீழ் பொறிக்கப்பட்டுள்ளது. ஆனால், கல்வெட்டு மிகவும் சிதைந்து போனமையால் கல்வெட்டின் பாடத்தைப் படித்துச் செய்தியை அறிய இயலவில்லை.  ஆனால், இக்கல்வெட்டு, பார்சுவ நாதரின் சிற்பத்திருமேனியையும் அவருடன் காணப்பெறும் இயக்கியரின் சிற்பங்களையும் சாந்திவீரக் குரவர்  என்பவர் சீர் செய்துள்ளார் என்றும், பார்சுவ நாதருக்கும் இயக்கியருக்கும் ஆன அமுது படிக்கும், ஒரு துறவியாருக்குச் சோறு படைக்கவும் வேண்டிய செலவினங்களுக்காக ஐந்நூற்றைந்து காணம் பொன் வைத்தார் என்றும் கூறுகிறது. இக்கல்வெட்டு, வரலாற்றுச் சிறப்புப்  பெற்ற  கல்வெட்டாக வரலாற்று ஆசிரியர்களால் பாராட்டப்பெறுகிறது. பாண்டிய மன்னன் இரண்டாம் வரகுணபாண்டியன் ஆட்சி ஏற்ற ஆண்டினைக் கணக்கிட இக்கல்வெட்டு சான்றாய் அமைகிறது.  

கல்வெட்டில் குறிப்பிடப்பெறும் சக(ர) ஆண்டு  792 என்பதற்கு ஈடான பொது ஆண்டு கி.பி. 870 ஆகும். கலவெட்டின்  காலமான கி.பி. 870-ஆம் ஆண்டை வரகுணபாண்டியனின் எட்டாம் ஆட்சியாண்டு எனக் கல்வெட்டு குறிப்பதால், வரகுண பாண்டியன் ஆட்சியில் அமர்ந்த ஆண்டு கி.பி. 862 என உறுதி செய்யப்படுகிறது.  சக ஆண்டு 792 கழிந்தது என்னும் நிலையைக் கல்வெட்டில்  வரும் “போந்தன”  என்னும் சொல் குறிப்பிடுவது கருதத்தக்கது. இரண்டுக்கு முட்டாவவியு மோரடிகளுக்கு என்பதை  “இரண்டுக்கும்-முட்டா-அவியும்-ஓர்-அடிகளுக்கு”  எனப் பதம் பிரித்தல் எளிதில் பொருள் உணர்த்தும்.  முட்டா என்பது தடையின்றித் தொடர்தல் என்பதைக்குறிக்கும்.  அடிகள் என்னும் சொல் சமணத்துறவியைக் குறிக்கும்.  கொடை நல்கிய சாந்திவீரக் குரவர், குணவீரக் குரவடிகள் என்னும் ஆசிரியரின் மாணாக்கர் ஆவார். தீர்த்தங்கரர்களோடு இணைத்துக் கூறப்படும் இயக்கியரை (யக்ஷி)  இயக்கி அவ்வைகள் என்று கல்வெட்டு குறிப்பதைக் காண்க. சமணத்தில் ,  உயர்ந்த பெண்களை அவ்வை எனக் குறிப்பிடும் வழக்கு இருப்பதை அறிகிறோம்.  சைவ வைணவப் பெருஞ்சமயங்களில்  இவ்வழக்கு சற்றே மாறுபட்டு  “அம்மையார்” என்றும், “நாச்சியார்”   என்றும் உள்ளதைக் காணலாம். எடுத்துக்காட்டாக, காரைக்கால் அம்மையார், பரவை நாச்சியார் என்பதைக் குறிப்பிடலாம்.  சங்கப் பெண்பாற் புலவர் அவ்வையார் சமணராய் இருக்கக் கூடும் எனலாம். புதுக்கி என்னும் சொல் சீர் செய்து எனப் பொருள் தரும்.  புதுப்பித்தல் எனவும் பொருள் தரும். காணம் என்பது நடப்பில் புழங்கிய நாணயத்தைக் குறிக்கும். மக்கள் வழக்காற்றில் உள்ள சோறு என்னும் தூய தமிழ்ச் சொல் கல்வெட்டில் பயின்று வந்துள்ளமை எண்ணி மகிழத்தக்கது. 

தென்னிந்தியக் கல்வெட்டுகள் தொகுதி-14 - இல் காணப்படாத ஒரு கல்வெட்டு நேரில் படிக்கப்பட்டது.  அதன் பாடம்:


ஸ்வஸ்திஸ்ரீ  அண்ட நாட்டுக் கூ
2  டலூர் சிலைய மாணிக்கன் 
3  செய்வித்த தேவர்

குறிப்பு :  சிவப்பு எழுத்துகள் கிரந்த எழுத்துகள்.



தமிழ் எழுத்துக் கல்வெட்டு



விளக்கம் :    இக்கல்வெட்டும் ஒரு சிற்பத்தின் கீழ் பொறிக்கப்பட்ட  ஒன்றே. சிற்பத்தை அண்ட நாட்டுக் கூடலூரைச் செர்ர்ந்த சிலைய மாணிக்கன் என்பவர் செய்வித்ததாகக் கூறுகிறது. அண்ட நாடு என்பது தற்போதுள்ள ஒட்டன்சத்திரம் வட்டம் ஆகலாம். அண்டநாடு, வைகாவி நாட்டை அடுத்துள்ள பகுதி. வைகாவி நாடு, பழநிப்பகுதி. ஐவர் மலை பழனிப்பகுதியில் உள்ளது. சிற்பத்திருமேனியை அண்ட நாட்டுக் கூடலூரைச் சேர்ந்தவர் செய்வித்துள்ளார்.  கூடலூர் தற்போது எந்த ஊர் எனத் தெரியவில்லை. 


ஒரு வட்டெழுத்துக் கல்வெட்டு மீள் படிப்பு

க.வெ. எண்-691 தொல்லியல் ஆய்வுத்துறை 1905-ஆம் ஆண்டறிக்கை .
தென்னிந்தியக் கல்வெட்டுகள் தொகுதி-14  - க.வெ. எண் :  107


பாடம்:


1  ஸ்ரீ வடபள்ளி ஆ
2  ரம் விச்சி வர


3  தபாணி செயல்    

மேற்படிக் கல்வெட்டை மீள் படிப்புக்குள்ளாக்கியதில்,  ஒரு பாட பேதம் காண முடிந்தது.  “பாணி”   என்னும் சொல்லில் “பா”  எழுத்து “மா”  என்னும் எழுத்தாகப் படிக்கப்பட்டது.  ”மா”  என்னும் எழுத்து தெளிவாக உள்ளது. ”பாணி”  என்பதைவிட  ”மாணி”  என்பது கூடுதல் பொருத்தம் உடையது. மாணி  என்னும் சொல் கல்வெட்டுகளில் மிகுதியும் பயிலும் சொல்லே. ஒரு மாணாக்கரின் நிலையில் ஆசிரியரிடம் பயிற்சி பெறுகின்ற ஒருவரைக் குறிக்கும் சொல்லாகக் கருதலாம். சிவன் கோயில் கல்வெட்டுகளில் மாணி என்னும் சொல் கோயில் பணிகளில் ஈடுபடும் ஒரு பிராமணப் பிரமச்சாரியைக் குறிக்கும். எனவே, திருத்தப்பட்ட பாடம் கீழுள்ளவாறு:

1  ஸ்ரீ வடபள்ளி ஆ
2  ரம் விச்சி வர

3  தமாணி செயல் 


ஆரம் விச்சி வரத மாணி செயல்



ஆரம் விச்சி வரத மாணி செயல்

பார்சுவ நாதர் சிற்பத்தின் கீழுள்ள கல்வெட்டு

பார்சுவ நாதர் சிற்பத்தின் கீழுள்ள கல்வெட்டு மிகவும் தேய்மானம் கொண்டுள்ளதாலும் சுண்ணாம்புப் பற்று மிகுந்துள்ளதாலும் படிக்க இயலவில்லை. கல்வெட்டுத் தொகுதி நூலிலும் கல்வெட்டின் பாடம் இல்லை. ஆனால், சிற்பத்திருமேனியைச் செய்வித்தவர் ஓர் ”அடிகள்”  என்பது புலப்படுகிறது.  “அடிகள்”  என்னும் சொல் சற்றுத் தெளிவாகக் காணப்படுகிறது. 



பார்சுவ நாதர் சிற்பமும் கல்வெட்டும்

முடிவுரை


ஐவர் மலை பற்றிய நாளிதழ்ச் செய்தி

ஐவர் மலையில் பிராமிக்கல்வெட்டுகள் - செய்திப்பிழை


நாளிதழ்களில் வரலாற்றுச் செய்திகளை வெளியிடுகையில்  இயன்றவரையிலும் பிழைகள் தவிர்த்தல் நலம் என்பது தற்போது பல செய்திகளைப் பர்ர்க்கையில்  தோன்றும் கருத்து. ஐவர் மலைக் கல்வெட்டுகள் அனைத்துமே - ஓரிரு தமிழ் எழுத்துக் கல்வெட்டுகள் தவிர -  பாண்டியர் கால வட்டெழுத்துக் கல்வெட்டுகள்.  ஆனால் இங்கு   பதின்மூன்று பிராமிக் கல்வெட்டுகள் உள்ளன என்பதாக வரலாற்று ஆய்வாளர் கே.ராஜா என்பவர் ”தினமலர்”  நாளிதழில்  (08-08-2010)  எழுதியிருந்தது  எனக்கு வியப்பை மட்டுமே அளித்தது.  வட்டெழுத்துக் கல்வெட்டுகளைப் பிராமிக் கல்வெட்டுகள் என்று பிழையாகப் புரிந்துகொள்வதே இதற்குக் காரணம். 




துரை.சுந்தரம், கல்வெட்டு ஆராய்ச்சியாளர், கோவை.
அலை பேசி :  9444939156.