மொத்தப் பக்கக்காட்சிகள்

வெள்ளி, 18 செப்டம்பர், 2015

சோழர் ஆட்சியில் தென்னிந்தியா
முனைவர் எ.சுப்பராயலு அவர்களின் சொற்பொழிவு

         கலை மற்றும் பண்பாட்டு மரபுக்கான இந்திய தேசிய அறக்கட்டளையின் (Indian National Trust for Arts and Cultural Heritage) சார்பில் கோவை அன்னலட்சுமி ஓட்டல் அரங்கில் தொல்லியல் மற்றும் கல்வெட்டியல் அறிஞர் முனைவர் எ.சுப்பராயலு அவர்கள் 11.09.2015 அன்று நிகழ்த்திய சொற்பொழிவின் உரை வடிவத்தை இங்கே பகிர்ந்துகொள்கிறேன்

         சோழர் ஆட்சியில் தென்னிந்தியா”  என்னும் நூலின் தலைப்பையே இங்கு பேசுவதற்கும் தந்துள்ளார்கள். இந்தத் தலைப்பு பெரியதொரு தலைப்பு; விரிவாகப் பேசவேண்டியதொன்று. அது இயலாது என்பதால், சோழர் ஆட்சியில் மக்கள் பண்பாடு, கலை, நிருவாகம் ஆகியவற்றில் ஏற்பட்ட மாற்றங்கள் குறித்தும், தென்கிழக்காசிய நாடுகளுக்கும் சோழருக்கும் இடையிலான தொடர்பு குறித்தும் இங்கே காணவிருக்கிறோம்.

சங்கச்சோழர்கள்

         தென்னிந்திய வரலாற்றில்-குறிப்பாகத் தமிழக வரலாற்றில்- சோழர் பங்கு பெரிது. சங்ககாலச் சோழரைப்பற்றி நம் அனைவர்க்கும் நன்கு தெரியும். புகழ்மிக்க கரிகால் வளவனைத் தெரியாதார் இரார். பின்னால் வந்த இடைக்காலச் சோழர்கள், சங்ககாலத்துச் சோழர்களைத் தங்கள் முன்னோர் எனச் சொல்லிக்கொள்கிறார்கள். அதேபோல, சங்ககாலச் சோழரின் வழிவந்தவர்கள் தமிழகத்திலிருந்து இடம் பெயர்ந்து வடக்கே சென்று இராயலசீமா பகுதியை ஆட்சிசெய்தார்கள் என்றும் அவர்களுடைய நாடு  ரேணாடு என்னும் பெயர்கொண்டது என்றும் வரலாற்றுக் கருத்து உண்டு. ரேணாடு, ரேணாண்டு என்றும் வழங்கியது. கி.பி. 7-8 ஆம் நூற்றாண்டில் இவர்களது செப்பேடுகளில் முதன் முதலாகச் சங்ககாலக் கரிகாலன் பற்றிய குறிப்பு வருகின்றது. அதில் காவிரியின் வெள்ளப்பெருக்கைக் கட்டுப்படுத்த கரிகாலன் காவிரியின் கரையை உயர்த்தினான் என்னும் குறிப்பு காணப்படுகிறது. இச்செப்பேடுகள் தெலுங்கு மொழியில் அமைந்தவை. 

இடைக்காலச்சோழர் சோழர் கலைப்பாணி

         சங்ககாலச் சோழர்களை அடுத்து இரண்டாவது சோழர் ஆட்சியைத் தொடங்கியவன் விசயாலயச்சோழன் ஆவான். காலம் கி.பி. 9-ஆம் நூற்றாண்டு. அவனுடைய ஆட்சிக்காலம் கி.பி. 850-870. அவனது ஆட்சியில் தொடங்கிய சோழர் ஆட்சி கி.பி.1250 வரை ஏறத்தாழ நான்கு நூற்றாண்டுகள் தொடர்ந்த வரலாறு. சோழர் ஆட்சியில் பல மாற்றங்கள் நிகழ்ந்தன. பண்பாடு, கலை, இலக்கியம், நிருவாகம் ஆகியவற்றில் பெரும் மாற்றங்கள். சோழர் விட்டுச் சென்றது என்ன என்றொரு கேள்வி எழுந்தால், விடை சோழர்களுக்கே உரிய கோயில்கட்டிடக்கலை, சிற்பக்கலை என்பதாகும். சோழர்கலைப்பாணி என்பது அவர்களின் அரிய அடையாளம். குறிப்பாக, சோழர்களின் செப்புத்திருமேனிகள் அவர்களது கலைப்பாணியைப் பறைசாற்றும். உலகின் பல நாடுகளுக்கும் அவை சென்றுள்ளன. திருட்டு வழியாகச் சென்றவை மிகுதி.
        
1992-ஆம் ஆண்டு ஜப்பான் நாட்டில் டோக்கியோ நகரில் நடைபெற்ற கண்காட்சி ஒன்றில் அமெரிக்கச் செல்வரான ராக்கபெல்லர் தம்முடைய சேர்ப்பாகக் (collection)  காட்சியில் வெண்கலத்தால் ஆன புத்தர் படிமம் ஒன்றையும் வைத்திருந்தார். இப்படிமம், நாகப்பட்டினத்தைச் சேர்ந்தது; கி.பி. 11-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது என்னும் குறிப்பும் இருந்தது. படிமத்தின் பதுமப்பீடத்தில் தமிழ் எழுத்துகள் காணப்படவே, அதனை ஒளிப்படம் எடுத்து ஆய்வு செய்ததில் அது கி.பி. 11-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது என்றும் இராசேந்திரப்பெரும்பள்ளியைச் சேர்ந்த அக்கசாலைப்பெரும்பள்ளி கோயிலுக்கு திருவுத்சவத்துக்காகச் செய்த அக்கசாலை ஆழ்வார் என்னும் பெயரமைந்த திருமேனி என்றும் தெரிய வந்தது.  தொல்லியல் ஆவணங்களை ( சிலைகள், செப்பேடுகள் போன்றவை ) நம்முடைய அருங்காட்சியகங்களை விட வெளி நாடுகளில் நல்லமுறையில் வைத்துப் பாதுகாக்கிறார்கள். தமிழ்நாட்டில் நம் அரசும், அருங்காட்சியகங்களும் தொல்லியல் ஆவணங்களைப் பாதுகாப்பதில் கொண்டுள்ள ஈடுபாடு குறைவு.

         முதலாம் இராசேந்திரனின் கரந்தைச்செப்பேட்டை (இருபத்திரண்டு ஏடுகளைக்கொண்டது) தமிழ் நாட்டு அருங்காட்சியகத்தில் கிடங்கில் குப்பையோடு குப்பையாகப் போட்டுவைத்திருக்கிறாகள். பழம்பொருளுக்கும் நல்லபல ஆவணங்களுக்கும் நாம் கொடுக்கும் மதிப்பு இதுதான். லெய்டன் செப்பேடு நன்கு பாதுகாக்கப்பட்டுவருகிறது. காரணம், அது டச்சுக்காரர்கள் மூலம் லெய்டன் சென்றது. லெய்டன் பல்கலை நூலகத்தில் அது பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளது. அதைப்பார்வையிட விருப்பம் தெரிவித்தபோது, தேர் போன்ற ஒரு வண்டியில் பட்டுத்துணியின் மீது அழகாக வைத்துக் கொண்டுவந்து காண்பித்தனர். இந்த நிலை, இந்திய அருங்காட்சியகங்களுக்கு இல்லாமல் போனது. அவற்றுக்குப் போதிய அரசுப்பண உதவி மற்றும் அரசு ஊழியர் கிடைப்பதில்லை.

சோழர் கல்வெட்டுகள்

         இந்தியாவில் ஏறத்தாழ 60,000 கல்வெட்டுகள்  படியெடுக்கப்பட்டு தொல்லியல் அலுவலகங்களில் சேர்த்துவைக்கப்பட்டுள்ளன.. அவற்றில் பாதி தென்னிந்தியாவில் தமிழ்நாடு, கருநாடகம், ஆந்திரம் ஆகிய மூன்று மாநிலங்களில் உள்ளன. இவற்றில் பாதி தமிழகத்தில் உள்ளன. இவற்றில் பாதி (15000 கல்வெட்டுகள்) சோழருடையவை என்பது குறிப்பிடத்தக்கது. எனவே, இந்திய அளவில் சோழருடைய கல்வெட்டுகளே மிகுதி. அடுத்து எண்ணிக்கையில் இருப்பவை விஜயநகர அரசர் கல்வெட்டுகளாகும். அவை மூன்று மொழிகளில் அமைந்துள்ளன.

         சோழர் கல்வெட்டுகளைப் பல கோணங்களில் ஆராயலாம். முதலில் அவற்றை ஆராய்ந்தவர் நீலகண்ட சாஸ்திரியார் அவர்களே. 1940-இல் “The Cholas” என்னும் ஆய்வு நூலை எழுதினார். அப்போதிருந்த ஆய்வு முறை, தற்போதுள்ள ஆய்வு முறைகளினின்றும் வேறானது. அவர், குடிவழி வரலாறுஎன்னும் Dynastic History  முறையை நன்றாகச் செய்திருக்கிறார். தற்போது சமூகப்பொருளாதார வரலாற்று முறையில் (Socio Economic History – Statistical Methodology) ஆய்வுகள் செய்யப்படுகின்றன. முடிவுகளும் ஒரு பொதுப்படையான நிலையில் (Generalisations) இருப்பன. ஆராய்ச்சி வளர்ந்துகொண்டே உள்ளது.

         கல்வெட்டுகள், பெரும்பாலும் கோயில் சுவர்களில் உள்ளவை, கோயிலுக்கு அளிக்கப்படும் கொடை பற்றியவையே. எல்லாவகைச் சமூகத்தாரும் கொடை அளித்துள்ளார்கள் என்பதால் கோடாமை (bias) இன்றி சமூகப்பொருளாதார வரலாறு அறியப்படாது. கொடைகள், தொடக்கத்தில் பொருளாதாரம் சார்ந்து பணம், தங்கம், கால் நடைகள் ஆகிய வடிவங்களிலேயே கொடுக்கப்பட்டன. போகப்போக நிலத்தை அல்லது நிலவருவாயைக் கொடுப்பது நடைமுறைக்கு வந்தது. பின்னர், நிலம் முழு உரிமையாகக் கொடுக்கப்பட்டது. இதைத் திருநாமக்காணி என்பர். கோயில் இறைவர்தாம் நில உடைமையாளர். கோயில் “டிரஸ்டிகள்  இவ்வகைக் கொடைகளை நிருவாகம் செய்தனர். நிலங்களைப்பற்றி நிறையச் செய்திகள் கல்வெட்டுகளில் காணப்படுகின்றன. நிலத்தின் வகை, விளை திறன் போன்ற ஊர்ப்புறப் பொருளாதாரம் பற்றிய செய்திகள் உள்ளன. நிலங்கள் இருக்கும் ஊர்கள் ஆராயப்பட்டதில், நிலவியல் அடிப்படையில் ஊர்கள் அவற்றின் இருக்கைகள் சேர்ந்தது நாடு என அழைக்கப்பட்டதை அறிகிறோம். கி.பி. 6 முதல் கி.பி. 10 நூற்றாண்டுவரை ஊர் மற்றும் நாடு என்னும் பிரிவுகள் இருந்துள்ளன.

இராசராசனின் நிலச்சீர்திருத்தங்கள் நில அளவீடு

         முதலாம் இராசராசன் இந்த நிலப்பிரிவுகளில் மாற்றத்தை எற்படுத்துகிறான். சில நாடுகளை இணைத்து வளநாடு எனப்பிரிக்கிறான். அதுவரையில், நாடு என்னும் பிரிவிலிருந்த நாட்டு நிலக்கிழார்கள் சேர்ந்த அமைப்பான நாட்டார் என்போரது தன்னாதிக்கம் அல்லது தன்னாட்சி என்பது மேலோங்கியிருந்த நிலை மாறியது. அவர்கள் அரசுக்கு வரி செலுத்தினாலும் அவர்களுக்கென்று உரிமைகள் இருந்தன. வளநாடு உருவானதும் அவர்களது தனி உரிமைகள் குறைந்தன. வளநாட்டில், நீர் வாய்க்கால்களின் இருபுற நிலங்கள் கூறாக்கப்பட்டு இரு புறமும் இரு வளநாடுகள் ஆக்கப்பட்டன. இராசராசனின் ஆட்சிக்காலத்தில்தான் முதன் முதலில் நிலங்கள் அளக்கப்பட்டன. இது நிகழ்ந்தது அவனது 16-ஆம் ஆட்சியாண்டில்; அதாவது கி.பி. 1001-இல். அப்போது சில மாற்றங்களைச் செய்கிறான். சோழ நாட்டின் மையப்பகுதியான காவிரி “டெல்டா பகுதியில் நிறைய ஊர்களும், பிரமதேயங்களும் உருவாக்கப்பட்டன. பிரமதேயங்கள் என்பவை பிராமண ஊர்களாகும். காவிரி “டெல்டாவில் 1300 ஊர்கள் இருந்தன; 70 நாடுகள் இருந்தன. 250 ஊர்களில் பிராமணக்குடியிருப்புகள் இருந்தன. எல்லா ஊர்களிலும் கல்வெட்டுகள் இருக்கின்றன.
இந்த ஊர்களில் நிலங்கள் அளக்கப்பட்டன. அளவையில் (Survey) , ஊர்களில் இருந்த மொத்த நிலங்களும் அளக்கப்பட்டுக் குறிக்கப்பட்டன. ஒவ்வொருவருக்கும் எவ்வளவு நிலம் உரிமையாக இருந்தது என்பது கணிக்கப்பட்டது. ஊர் நத்தமும் கணக்கிடப்பட்டது. விளைச்சலை அடிப்படையாக வைத்து ஒரு பூ நிலம், இரு பூ நிலம் என்று வகைப்படுத்தப்பட்டது. நில அளவையில் வேலி, மா, காணி, மாகாணி, முந்திரி என்பவை முக்கியமானவை. ஒரு வேலி நிலம் இன்றைய அளவீட்டில் 6.6 ஏக்கர் அல்லது 2.25 ஹெக்டேர் பரப்புடையதாகலாம்.

         நிலங்கள் தரம் வாரியாக நிர்ணயம் (Standardisation) செய்யப்பட்டன. மொத்தம் பதினாறு தரங்கள் இருந்தன. நிலங்களின் தரத்தை மாற்றும்போது “மடக்குஎன்று குறித்தார்கள். ஒரு தரத்து நிலத்துக்கு வரியாக வேலி ஒன்றுக்கு 100 கலம் நெல் என வரையறை செய்யப்படுகிறது. தோராயமாக ஓர் ஊர் என்பது 40 வேலிகள் கொண்டதாகவும் 3000 கலம் நெல் விளைச்சலைக் கொண்டதாகவும் கொள்ளலாம். இந்த வளமிக்க காவிரி டெல்டா நிலப்பகுதிதான் சோழர்களின் பெருமைக்கும் அவர்களின் படையெடுப்புகளுக்கும் பெருந்துணையாக நின்றது. இப்பகுதியின் 1000 ஊர்களிலிருந்து 87000 மெட்ரிக் டன் நெல் அரசனுக்கு வரியாகச் சென்றது எனக்கொள்ளலாம். நெல் பணமாக மாற்றப்பட்டும் அரசனின் கருவூலம் சென்றது. கி.பி. 1000 முதல் கி.பி. 1100 வரையிலான காலம் சோழரின் உயர்வான காலம். இக்காலகட்டத்தில், ஆட்சிக்குட்பட்ட நிலப்பகுதி பெரியது. இராசராசன் காலத்தில் வென்ற பகுதிகளை நேரடி ஆட்சிக்குக் கொணர்தல் பெரிய பணி. இப்பணியால் மண்டலங்கள் உண்டாயின. குறுநில அரசுகளின் நிலப்பகுதிகள் கையகப்படுத்தப்பெற்று மண்டலங்களாக மாற்றப்பட்டன.

         மண்டலங்களின் பெயரில் சோழ மண்டலம் என்ற பின்னொட்டு இணைந்தது. தொண்டை நாடு, ஜெயங்கொண்ட சோழமண்டலம் ஆனது. ஈழம் (ஈழத்தின் வடபகுதி), ஈழமான மும்முடிச்சோழமண்டலம் என்றாயிற்று. வேங்கிச் சாளுக்கியர் நாடு (ஆந்திரப்பகுதி), உத்தமச்சோழமண்டலம் ஆனது. ஆனால், பாண்டிய நாடு மட்டும் சோழமண்டலம் என்னும் பின்னொட்டைப் பெறவில்லை. அது, இராஜராஜப் பாண்டிநாடு என்று அழைக்கப்பட்டது. சோழமண்டலம் என்னும் பெயரே வெளியுலகத்தினருக்கு அறிமுகமாயிற்று. எனவே, போர்த்துகீசியர், இத்தாலியர் ஆகியோர் கோரமண்டல்என்று குறிப்பிடலாயினர். சோழமண்டலம் என்னும் பெயரே “ச்சோரமண்டல்என்றும் பின்னர் “கோரமண்டல்என்றும் திரிந்தது. போர் எனில், கூடவே அழிவும் அங்குண்டு. சோழர்களின் போர்களாலும் நிறைய அழிவுகள் ஏற்பட்டன. எனவே, நிலப்பகுதிகள் மறு சீரமைப்புக்கும் ஒருங்கிணைப்புக்கும் உட்படுத்தப்பட்டன. இந்திய விடுதலைக்குப்பின் வல்லப பாய் படேல் சமஸ்தானங்களை இணைத்தது போன்றதொரு பணி.

கடாரப்படையெடுப்பு

         தமிழ்நாட்டுக்கும் தென்கிழக்காசிய நாடுகளுக்கும் நீண்ட காலமாகத் தொடர்பு இருந்துவந்துள்ளது. பர்மா, கம்போடியா, வியட்நாம், மலேசியா, சுமத்திரா (இந்தோனேசியா), பிலிப்பைன்ஸ் ஆகிய இந்நாடுகளில் தமிழ்க்கல்வெட்டுகள் உள்ளன. கி.பி. முதல் நூற்றாண்டு முதல் இப்பகுதியுடன் தொடர்பு இருந்தது. ஸ்வர்ணபூமி என்னும் இப்பகுதிக்கு வங்காளம், குஜராத், தமிழகம் ஆகிய இடங்களிலிருந்து குடி பெயர்ந்திருக்கின்றனர். ஜாவா என்னும் கடாரப்பகுதி காழகம் என்று குறிப்பிடப்பட்டது. தென்கிழக்காசிய நாடுகளிலிருந்து வந்த புத்த யாத்திரிகர்கள் - கடல் வழியாக வந்தவர்கள் நிறையக்குறிப்புகள் இட்டுச்சென்றிருக்கிறார்கள். பல குறிப்புகள் பழைய பிராகிருத எழுத்துகளில் உள்ளன. தாய்லாந்தில் ஒரே ஒரு கல்வெட்டு கிடைத்துள்ளது. தமிழி அல்லது பிராமி எழுத்தில் அமைந்த இக்கல்வெட்டு கி.பி. 5-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது. “பெரும் பதன் கல்என்னும் பொறிப்பு அதில் உள்ளது. பொன்னை உறைத்துப்பார்க்கும் உறைகல்லாக அது இருக்கலாம் எனக்கருதப்படுகிறது. “பதன்என்பது “பத்தன்என்பதைக்குறிக்கலாம். “பத்தன்என்பது பொற்கொல்லனைக் குறிப்பதாகும். தமராக்என்னுமிடத்தில் உள்ள விஷ்ணு கோயில் அருகில் குளம் வெட்டியது பற்றிய ஒரு கல்வெட்டு கிடைத்துள்ளது. அதில், மணிக்கிராமத்தார் என்ற வணிகக்குழு பற்றிய குறிப்பு காணப்படுகிறது. சுமத்திராவின் மேற்குக்கரையில் இருக்கும் பாரூஸ் துறைமுக நகரில் சில கோயில்கள் உள்ளன. அங்குள்ள கல்வெட்டில் “வாரோசான தேசிப்பட்டணம்என்னும் குறிப்புள்ளது. கற்பூரம் போன்ற வாசனைப்பொருள்கள் தமிழகத்திலிருந்து இங்கு இறக்குமதி ஆகியுள்ளன. ஜாகார்த்தா அருங்காட்சியகத்தில் உள்ள  தமிழ்க்கல்வெட்டு, நானாதேசிகள் என்ற வணிகர்கள் அங்கு தங்கியிருந்தமை பற்றிக் கூறுகிறது.

         பர்மாவில் உள்ள 13-ஆம் நூற்றாண்டுக் கல்வெட்டு  ஒன்று மலைமண்டலத்து வணிகரின் கொடையைப்பற்றிக் கூறுகிறது. மலைமண்டலம் என்பது கேரளப்பகுதியைக் குறிக்கும். நானாதேசிகள் என்னும் வணிகக்குழுவினர் தமிழ், கன்னடம், தெலுங்கு ஆகிய மொழிகளைப் பேசிவந்துள்ளனர். ஆனால், கல்வெட்டுகளைத் தமிழ் மொழியிலேயே பொறித்துள்ளனர். ஜாவாவில் உள்ள ஒரு கல்வெட்டில் ஜாவா, தமிழ் ஆகிய இரு மொழிகளும் காணப்படுகின்றன. அக்கல்வெட்டில், தென்னிந்திய வணிகர் பற்றிய செய்தியும் அஞ்சுவண்ணத்தார் எழுவர் பெயரும் காணப்படுகின்றன.

          கி.பி. 1005-இல் ஸ்ரீவிஜயத்து அரசன் சூளாமணிவர்மன் தமிழகதின் நாகப்பட்டினத்தில் புத்தவிகாரை ஒன்றைக்கட்டினான். ஸ்ரீவிஜயம் என்பது சுமத்திரா, மலேசியா ஆகியவற்றை உள்ளடக்கிய பகுதியாகும். லெய்டன் செப்பேடு என்னும் ஆனைமங்கலச்செப்பேட்டில் இச்செய்தி உள்ளது. இராசராசன் இந்தப் புத்தவிகாரைக்கு ஆனைமங்கலம் என்னும் ஊரைப் பள்ளிச்சந்தமாகக் கொடை அளித்துள்ளான். செப்பேட்டில், ஸ்ரீவிஜய அரசன், கிடாரத்தரையன் சூளாமணி பந்மன் என்று குறிப்பிடப்பெறுகிறான். புத்த விகாரை, சூளாமணி பந்ம விஹாரத்துப்பள்ளி எனக் குறிப்பிடப்படுகிறது. இராசேந்திரன் இந்தக்கொடை பற்றிய செப்பேட்டை முழுமையாக்கி கி.பி. 1014-இல் தந்துள்ளான். கி.பி. 1021 வரை சோழருக்கும் ஸ்ரீவிஜயத்துக்கும் இடையில் நட்பு நிலவியது.

         கி.பி. 1025-இல் இராசேந்திரன் தென்கிழக்காசிய நாடுகளின்மேல் படையெடுப்பு நிகழ்த்தியது எதற்காக என்பதும் அப்படையெடுப்பின் விளைவுகள் யாவை என்பதும் எண்ணிப்பார்க்கத்தக்கவை. மரக்கலங்களைக்கொண்டு கடல் வழியே  தென்கிழக்காசிய நாடுகளுக்குச் சென்று வணிகம்  செய்த வணிகர்களுக்கும் மலாய் கடலோடி மக்களுக்கும் (Maritime people) எதோவொருவகை உரசல் அல்லது பூசல் ஏற்பட்டுள்ளது எனத்தெரிகிறது. இந்தச் சிக்கலால் இராசேந்திரன் படையெடுப்பு நிகழ்த்தியிருக்கிறான். ஆனால், இது பற்றி அங்கு கல்வெட்டுகள் எவையும் கிடைக்கப்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்தச் சிக்கல் இராசேந்திரனின் தம்பியான வீரராசேந்திரன் காலத்திலும் தொடர்ந்திருக்கக்கூடும்; வீரராசேந்திரன் காலத்திலும் இப்படையெடுப்பு நிகழ்ந்துள்ளது. மலாய் மொழியில் கப்பல், வங்கம் ஆகிய சொற்கள் வழங்குகின்றன. இராசேந்திரனின் மெய்க்கீர்த்தியில் ஸ்ரீவிஜயம், கடாரம் எனவும், அஜே என்னும் பகுதி இலாமுரி தேசம் எனவும், நிகோபார் தீவுகள் நக்கவாரம் எனவும் குறிப்பிடப்பெறுகின்றன. இவற்றில், ஸ்ரீவிஜயம் 1000 கி.மீ. தொலைவும், நிகோபார் 1500 கி.மீ. தொலைவும், அஜே 300 கி.மீ. தொலைவும் கொண்டவை. மற்ற பகுதிகளையும் சேர்த்து மொத்தம் 6000 கி.மீ. தொலைவு படையெடுப்பின்போது கடல்வழிப்பயணம் நிகழ்ந்துள்ளது. எந்தவகைக் கப்பல்கள் பயன்படுத்தப்பட்டன, கப்பல்கள் எங்கு கட்டப்பட்டன என்பது போன்ற செய்திகளுக்குப் போதுமான சான்றாதாரங்கள் இல்லை. ஒரு சில குறிப்புகளே கிடைக்கின்றன. மரக்கலம், தோணி ஆகியவை பற்றிய குறிப்புகள் கிருஷ்ணபட்டினத் துறைமுகத்தில் உள்ள கல்வெட்டில் காணப்படுகிறது. பாரூஸ் கல்வெட்டில், மரக்கலநாயன் என்னும் குறிப்புள்ளது. மரக்கலங்களை இயக்கிய கப்பல் தலைவனுக்கு இப்பெயர் வழங்கியது எனலாம். மரக்கலநாயன் என்னும் இச்சொல் பின்னர் மரக்கலராயர் எனவும், மரைக்காயர் எனவும் திரிந்தன. மங்களூரிலிருந்து தொடங்கி, கேரளக் கடற்கரையில் பல இடங்களில் படகு கட்டுமிடங்கள் இருக்கின்றன. ஆனால், தமிழகத்தின் மன்னார் பகுதியில் படகு கட்டுமிடங்கள் இருப்பதாகத்தெரியவில்லை. கோயில்களில் ஆயிரக்கணக்கான கல்வெட்டுகளை எழுதிவைத்தவர்கள், இராசேந்திரனின் படையெடுப்பு பற்றியோ மரக்கலங்கள் மூலம் சென்ற கடல்வழிப்பயணத்தைப்பற்றியோ எழுதவில்லை என்பது வியப்பானது. ஆனால், Manuscripts எனப்படும் ஓலை ஆவணங்களில் இது பற்றித் தகவல் கிடைக்ககூடும். ஓலை ஆவணங்கள் முந்நூறு, நானூறு ஆண்டுகள் நிலைத்து நிற்பவை. நிறையத் தகவல்கள் கொண்டவை. இவை ஆராயப்படவேண்டும். ஆனால், ஓலைச்சுவடிகள் இங்கே நன்கு பாதுகாக்கப்படுவதில்லை. அழிவை எதிர்கொண்டிருப்பவற்றுள் (Endangered species) ஓலைச்சுவடிகளும் அடங்கும். இங்கிலாந்தில், ஓலைச்சுவடிகள் போன்றவை ஒளிப்பட ஆவணங்களாக (Photo documentation) மாற்றப்பட்டுப் பாதுகாக்கப்படுகின்றன. சீன, ஜப்பான் நாடுகளில் கி.பி. 500-இலிருந்து கிடைக்கும் ஓலை ஆவணங்களைப் பாதுகாக்கின்றார்கள். தமிழகத்தில், கி.பி. 1700 முதல் கி.பி. 1900 வரையிலான இருநூறு ஆண்டுகாலகட்டத்தைச் சேர்ந்த மோடி ஆவணங்கள் உள்ளன. ஆனால், அவற்றைப் படிக்க ஆள்கள் இல்லை. எனவே, ஓலை ஆவணங்களுக்கு முதன்மை அளித்து ஆவன செய்யவேண்டிய பணி உள்ளது.
 





சொற்பொழிவுக்கருத்துகளைக் கட்டுரை ஆக்கம் செய்தவர்:
து.சுந்தரம், கல்வெட்டு ஆராய்ச்சியாளர், கோவை.
அலை பேசி : 9444939156. 


3 கருத்துகள்:

  1. பேரா.சுப்பராயலு அவர்களின் பூபுல் அறக்கட்டளைச் சொற்பொழிவுத் தொகுப்பு. திரு துரை சுந்தரம் அவர்களின் ஆர்வம் போற்றத்தக்க ஒன்று.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிகவும் நன்றி இராசகோபால் ஐயா. உங்களைப்போன்றவர்கள்
      தரும் ஊக்கமே கல்வெட்டியலில் எனக்கு ஆக்கத்தைத் தருகின்றது.

      நீக்கு
    2. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

      நீக்கு