மொத்தப் பக்கக்காட்சிகள்

திங்கள், 12 மே, 2014










கரப்பாடி அமணலிங்கேசுவரர் கோயில்


கோயிலின் தோற்றமும் காலமும்

கரப்பாடியில் அமைந்துள்ள இக்கோயில் தற்போதும் அமணலிங்கேசுவரர் கோயில் என்னும் பெயருடன் வழங்குவதால், பழங்காலத்தில் இது ஒரு ஜைனக்கோயிலாக இருந்திருக்கவேண்டும். பல்லவர் காலத்தில் - கி.பி. 7-ஆம் நூற்றாண்டு பல்லவர்கள் சைவ சமயத்தை ஆதரித்ததால், வட தமிழகத்தில் ஜைனக்கோயில்கள் சிவன் கோவில்களாக மாற்றம் பெறும் சூழ் நிலை ஏற்பட்டது. அது போலவே, சோழர் காலத்தில் கி.பி. 10-12 நூற்றாண்டுகளில்   சைவம் எழுச்சியும் மறுமலர்ச்சியும் பெற்றபோதும், சில ஜைனக்கோயில்கள் சிவன் கோவில்களாக உருவெடுத்தன. அந்தக் காலகட்டத்தில், கொங்கு நாட்டில் கொங்குச்சோழர்களின் ஆட்சியின்போது, கொங்குப்பகுதியில் சில ஜைனக்கோவில்கள் சிவன் கோவில்களாக மாற்றம் பெற்றன என்பதைக் காண்கிறோம். மாற்றத்தின்போது, ஜைனத்தின் எச்சமாக, கோவில்களின் பெயரில் “ அமண “ என்னும் சொல் ஒட்டிக்கொண்டிருப்பதைக் காணலாம். எடுத்துக்காட்டாக, திருமூர்த்தி மலையில் உள்ள அமணலிங்கேசுவரர் கோயில், தேவனாம்பாளையத்தில் உள்ள அமணீசுவரர் கோயில் ஆகியனவற்றைக்குறிப்பிடலாம். அது போலவே, கரப்பாடி கோவிலும் “ அமண “ என்னும் பெயரைத்தாங்கியுள்ளது.

ஜைனக்கோவிலாக இருந்ததால், இக்கோயில் கி.பி. 10-ஆம் நூற்றாண்டினை ஒட்டிய பழமையான கோயில் என்பதை உணரலாம். ஆனால், சமண (ஜைன) சமயத்தொடர்புள்ள கல்வெட்டுகள் இக்கோயிலில் காணப்படவில்லை. இங்கு கிடைக்கும் கல்வெட்டுகளில் காலத்தால்  முற்பட்டது கொங்குச்சோழனான வீரராசேந்திரனின் 16-ஆம் ஆட்சியாண்டுக் கல்வெட்டாகும். வீரராசேந்திரனின் ஆட்சிக்காலம் கி.பி. 1207 முதல் கி.பி. 1256 வரையிலான காலமாகும். எனவே, கல்வெட்டின் காலம் கி.பி. 1223 என்பதாகும். இதைக்கொண்டு, கோயில் ஏறத்தாழ 800 ஆண்டுகள் பழமை வாய்ந்தது என்பது உறுதியாகின்றது. அடுத்து, கொங்குப்பகுதியை ஆண்ட கொங்குப்பாண்டியனான வீரபாண்டியனின் கல்வெட்டும் இக்கோயிலில் கிடைத்துள்ளது. அவனது ஆட்சிக்காலம் கி.பி. 1265 1285 ஆகும்.


கோயிலின் சிறப்புகள்

        கல்வெட்டுகள் வாயிலாக, கோயிலின் பல்வேறு சிறப்புகள் தெரிய வருகின்றன. கல்வெட்டுகளில் இவ்வூர் கரைப்பாடி  எனக் குறிப்பிடப்படுகிறது. இவ்வூர், கொங்கு மண்டலத்தில்,  “ காவடிக்கா(ல்) “  நாட்டைச்சேர்ந்தது.
         இறைவன் பெயர் தான்தோன்றீசுவரர் “ என்பதாகும். தான்தோன்றி என்பதால் தானே தோன்றிய சுயம்புலிங்கம் என்று நாம் பொருள் கொள்ளலாம்.
         கோயிலில் இறைவிக்கு (அம்மனுக்கு)த்தனியே சன்னிதி இருந்திருக்கவேண்டும். கல்வெட்டில், நாச்சியார் “ , “ திருப்பள்ளியறை நாச்சியார் “ என்னும் வரிகள் வருகின்றன. திருப்பள்ளியறை நாச்சியார் இறைவிக்கு திரு ஆடிப்பூர விழாவன்று நடக்கும் சிறப்புக்குக் கொடை அளிக்கப்பட்டுள்ளது. ஆடிப்பூரத் திருவிழாவினைக் கல்வெட்டு திருநோன்பு “ எனக் கூறுகிறது. இவ்விழாவின்போது ஐந்தடுக்குகள் கொண்ட விளக்குகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. அஞ்சுபாத விளக்கு “ என்று இதைக் கல்வெட்டு குறிப்பிடுகிறது.
         மற்றுமொரு கல்வெட்டில், தென்கொங்கில் கண்மாளர்களுக்கு வழங்கப்பட்ட சில உரிமைகளைப்பற்றிய செய்தி காணப்படுகிறது. கி.பி. 13-ஆம் நூற்றாண்டில் நிலவிய சமுதாயச் சூழ்நிலையை அறிந்துகொள்ள இக்கல்வெட்டுச் செய்தி உதவுகிறது. கண்மாளர்கள், தங்கள் வீடுகளில் நடைபெறும் நன்மை தீமைகளின்போது இரட்டைச்சங்கு ஊதிக்கொள்ளவும், பேரிகை முதலிய (கொட்டு) இசைக்கருவிகளைக் கொட்டுவித்துக்கொள்ளவும் உரிமைகள் வழங்கப்பட்டன. மேலும், அவர்கள் புறப்படவேண்டும் இடங்களுக்குக் காலில் செருப்பணிந்து செல்லவும் அனுமதிக்கப்பட்டனர்.
         கோவிலுக்குத் தானமாக நிலங்கள் அளிக்கப்பட்ட செய்திகளில், சோழவதி, வீரகேரளவதி, குலசேகரவதி ஆகிய வாய்க்கால்கள் மற்றும் தலைமடை (பாசனத்துக்கான முதல் மடை), மண்ணறை (உழு நிலமாக மாற்றப்பட்ட வனப்பகுதி), மன்றாட்டு (மேய்ச்சல் நிலம்) ஆகியவை குறிப்பிடப்படுகின்றன. இதன்மூலம் வேளாண்மை, நீர் நிர்வாகம் ஆகியவை பற்றி அறிகிறோம்.



து.சுந்தரம்,
கல்வெட்டு ஆராய்ச்சியாளர்,
21, கிரீன்வியூ டெலிகாம் காலனி, விளாங்குறிச்சி சாலை,
பீளமேடு, கோவை-641 004.

அலை பேசி: 9444939156.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக