மொத்தப் பக்கக்காட்சிகள்

திங்கள், 13 நவம்பர், 2017

தொல்லியல் தடயங்களைத் தேடி-சாலைப்புதூர்

முன்னுரை
நண்பர் துரை பாஸ்கரன், தாம் பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னர் பார்த்திருந்த சில பழங்கோயில்களை நினைவு கூர்ந்து, அவற்றை இப்போது சென்று பார்க்கலாமா என்று அண்மையில் கேட்டிருந்தார். தொல்லியல் தடயங்களைத் தேடும் ஆர்வத்தால் ஒப்புக்கொண்டேன். நீண்ட நாள்களுக்குப் பின்னர் இக்கோயில்களின் நினைவு வந்த காரணம் பற்றிக் கேட்டபோது அதன் பின்னணியைக் கூறினார். பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னர், மலையேற்றப் பயிற்சி பெற்ற நண்பர்கள் சிலர் கோவையில் ஒரு குழு அமைத்து இயங்கிவந்தார்கள். அப்போது, குழுவைச் சேர்ந்த ஒருவர், சாலைப்புதூர் அருகில் விண்ணிலிருந்து வீழ்ந்த எரிகற்கள் கிடைப்பதாகக் கூறவே, குழு நண்பர்கள் சிலர் அவற்றைப் பார்ப்பதற்காகச் சாலைப் புதூர் சென்றுள்ளனர்.    அந்நிகழ்வைக் குழுவினருள் ஒருவரான சின்ன சாத்தன் என்பார் தாம் எழுதிய “வனவலம்”  என்னும் நூலொன்றில் விண்கற்களைத் தேடி ஒரு பயணம்என்னும் கட்டுரையில் எழுதியிருக்கிறார். அதில், பயணத்தின்போது பார்த்த ஓரிரு பழங்கோயில்கள் பற்றிய குறிப்பும் காணப்படுகிறது. அந்த நூலை அண்மையில் பார்க்க நேர்ந்த நண்பர் துரை பாஸ்கரன் மீண்டும் அங்கு சென்று பார்க்கும் விழைவால் என்னை அழைத்துள்ளார். சென்ற 11-11-2017 அன்று, நண்பரும், நானும் சாலைப்புதூர் நோக்கிப் பயணம் மேற்கொண்டோம். அதன் பகிர்வு இங்கே.

பயணம்
பல்லடம்-உடுமலை சாலையில் அமைந்துள்ளது சாலைப்புதூர். அங்கே, சாலையோரத் தேநீர்க் கடையில், தொகுப்பாக இருக்கும் பழங்கோயில்களின் இருப்பிடம் பற்றிக் கேட்டறிந்தோம். சாலைப்புதூரிலிருந்து கிழக்கே பிரியும் வண்டித் தடத்தில் எங்கள் நடைப் பயணம் தொடங்கியது. நண்பர், கல்லூரியில் தாவர இயலும் படித்தவர். பறவைகளைக் கண்டறியும் முறையையும் கற்றிருக்கிறார். எனவே, பயணத்தின்போது வழியில் செடிகளைப் பற்றிப் பேசிக்கொண்டும் சில செடிகளை இனம் கண்டு காண்பித்துக் கொண்டும் வந்தார். அண்மைக்கால மழைப்பொழிவினால், வண்டித்தடம் ஒரு மண்பாதை. இரு புறமும் செடிகளும் செடிகளுக்கப்பால் சோளப்பயிரும் சூழ்ந்து பசுமை கூட்டின. நகரத்தின் ஒலி, காற்று மாசுகளினின்றும் நமக்கு விடுதலை அளித்த ஓர் அழகான சூழல்.

                                         அழகான வண்டிப்பாதை


                         நரிக்கற்களால் அமைந்த வேலிச் சுவர்


 பாதையில் ஒரு சில இடங்களில், பயிர் நிலங்களின் எல்லையாக நிற்கும், கற்களாலான சுற்று வேலிச்சுவர். சிறு சிறு கற்கள்; நெருக்கமாக அடுக்கிச் சுவராக்கியிருந்தார்கள். இவற்றை “நரிக்கல்”  எனக்குறிப்பிடுவர் என்று நண்பர் தெரிவித்தார். பாதையின் இரு புறங்களிலும் பல்வேறு செடிகள். நண்பர் வேலிப்பருத்தி என்று ஒரு செடியைக் காட்டினார். இன்னொரு செடியைச் சூரல் கொடி எனசொன்னார். சூரல் கொடியை (செடி?) இப்போதுதான் நான் காண்கிறேன். இந்தச் சூரல் கொடி மிகுந்து காணப்பட்டதால் சூரலூர் என்று தற்போதுள்ள சூலூரின் பெயர் வழங்கியது என்று தொல்லியல்-கல்வெட்டு அறிஞர் பூங்குன்றன் அவர்கள் குறிப்பிட்டது நினைவுக்கு வந்தது. கல்வெட்டுகளிலும் சூரலூர் என்றே சுட்டப்பெறுகிறது. பெயர் தெரியாத ஒரு காட்டுச் செடியில், ஊதா வண்ணத்தில் மலர் ஒன்று பூத்திருந்தது ஓர் அழகான காட்சி. வேலிக்கல்லின் மீது ஓர் ஓணான் தலையைத் தூக்கி நின்றுகொண்டிருந்தது.

                     சூரல் கொடி 

           வேலிப்பருத்தி

                  ஊதாப்பூ


                  வேலிக்கல்லில் ஓணான்


கோயில் வளாகம்
பதினைந்து நிமிட நடைக்குப் பின்னர் ஒரு கோயில் வளாகத்தை அடைந்தோம். அங்கே நாலைந்து கோயில்கள் காணப்பட்டன. கோயில்கள் பற்றிக் கேடடறிய அங்கே எவரும் இல்லை. ஒன்றில் பெரிய குதிரையின் உருவத்தின் அடிப்பகுதியில் இருந்த தற்காலத்துக் கல்வெட்டு, அது, கரையாம்பாளையம் மதுரை வீரன் கோயில் என்றது. கல்வெட்டில் காணப்பட்ட துந்துபி ஆண்டு 1982-ஐக் குறிக்கும். மற்றொரு கோயில் பத்ரகாளியம்மன் கோயில் என்று பின்னர் அறிந்தோம். இக்கோயிலின் விமானம் சாலை அமைப்பைக் கொண்டிருந்தது. இரண்டு அடுக்கு கிரீவப்பகுதியில் சிற்ப வேலைப்பாடுகள் இன்றி, வெறுமையான சுவர்களே காணப்பட்டன. உச்சியில் மூன்று கலசங்கள். கோயிலின் முன்புறத்தில் உள்ள கல்லாலான விளக்குக் கம்பம் தவிர்த்து கருவறை, மண்டபம் ஆகியன செங்கல் கட்டுமானம். முழுதும் சுண்ணம் பூசப்பெற்று வெண்மை நிறத்தில் காணப்பட்டது. பழங்கோயிலின் ஓரிரு கற்கள் மண்ணில் கிடந்தன. ஒரு மரத்தடியில், பலகைக் கல் பரப்பின்மீது மூன்று சிறு கற்கள், இரு பெரிய கற்கள் என ஐந்து கற்கள் பதிக்கப்பெற்றிருந்தன. எவ்விதச் சிற்பச் செதுக்கல்களும் இல்லாமல் இயல்பாய்க் கற்களை ஐந்து, ஏழு என வரிசையாய்ப் பதித்து வைத்து வழிபடும் வழக்கம் நாட்டுப்புறங்களில் நம் காணும் காட்சிகளுள் ஒன்று. இது பற்றி சக்தி பிரகாஷ் என்பவர் தம் முக நூலில் கீழ்க்கண்டவாறு பதிவிட்டுள்ளார்:

                    கோயில் வளாகம்

                                 மதுரை வீரன் கோயில் குதிரை


                                        பொட்டுசாமி 

கொங்குப் பகுதியில் பெருவாரியான ஊர்களில் இன்றளவிலும் மக்களால் வணங்கப்படும் ஒரு தெய்வம்தான் "பொட்டுசாமி". இந்த பொட்டுசாமி நமது தொன்ம வழிபாடான நடுகல் வழிபாட்டின் நீட்சியாக கருதலாம்.
கொங்குப்பகுதிகளில் பொட்டு சாமியை ஊர் மந்தையிலும், குலதெய்வக் கோவில்களிலும், பிள்ளையார் மாரியம்மன் கோவில்களுக்கு நடுவிலும், நடுகற்களின் அருகிலும் காணலாம்.
பொட்டுசாமியை 1,3,5,7,9 என வரிசையாக கூர்மையான கற்களை நட்டு வழிபடுவர் . சில இடங்களில் அதற்கு வெள்ளையடித்தும் , சிவப்பு கருப்பு இட்டும் வழிபடுகின்றனர் . பெரும்பாலும் தனிமேடை அமைத்து அதன்மீது வைக்கப்பட்டுள்ளது.
இங்கே ஐந்து கற்களின் வழிபாட்டு வடிவமும் பொட்டுசாமியாகலாம். கோயில் வளாகத்தில் விளக்குக் கம்பத்துடனும், சிங்க ஊர்திச் சிற்பத்துடனும் கூடிய இன்னொரு அம்மன் கோயிலும், மேலும் மூன்று சன்னதிகள் கொண்ட ஒரு வரிசையும் இருந்தன. இந்த வளாகம் முழுதும் பல கோயில்கள் இருந்தும் தொன்மைச் சான்றுகளோ, கல்வெட்டுகளோ இல்லாதது எங்கள் பயண நோக்கத்துக்குப் பயன் விளைவிக்கவில்லை.

மேற்கு சடையம்பாளையம் கண்டியம்மன் கோயில்
அடுத்து, ஓர் இருபது நிமிட நடையில், தென்னந்தோப்பு ஒன்றைச் சுற்றிச் சென்ற மண்பாதையில் நடந்தும் ஓர் ஆற்றுப்பள்ளத்தைக் கடந்தும் சென்ற பின்னர் நாங்கள் சென்றடைந்தது கண்டியம்மன் கோயில். இது, சடையம்பாளையம் மூவர் கண்டியம்மன் கோயில் என்றும், தலை கண்டியம்மன் கோயில் என்றும் இரு பெயர்கள் கொண்டிருக்கிறது. கோயில் வளாகத்தில் முதன்மையாக விளங்கும் கண்டியம்மன் கோயிலோடு, பஞ்சகன்னியர் சன்னதி, வினாயகர் சன்னதி என இரு சிறு கோயில்கள். கண்டியம்மன் கோயிலின் கருவறை விமானம் ஒரு தளக் கிரீவத்துடனும் சாலை அமைப்பைக் கொண்ட சிகரத்துடனும் காணப்படுகிறது.. நாயக்கர் காலக் கட்டுமானங்களுக்குப் பின்னர் 19-ஆம் நூற்றாண்டின் காலத்துக் கட்டுமானச் சாயல் எனலாம். இவ்வகைக் கோயில் விமானங்களில் தளச் சிற்பங்களின் (சுதைச்சிற்பங்கள்) வேலைப்பாடுகளிலும் உருவங்களிலும் அழகோ, திருத்தமோ காணப்படுவதில்லை. மனித உருவச் சிற்பங்களும் இயல்புக்கு ஒவ்வாத நீளங்களில் கைகளையும், கால்களையும் கொண்டு காட்சியழகு சிறிதுமின்றிக் காணப்படுகின்றன. சாலைச் சிகரத்தின் ஒரு புறம், மடியில் மனைவியை இருத்திய தோற்றத்தில் விநாயகர் சிற்பம் உள்ளது. மற்றொரு புறம் மூன்று முனிவர்களின் சிற்பங்கள். ஒரு முனிவர் புலித்தோலின் மீது அமர்ந்திருக்கிறார். புலித்தலை நன்கு புலப்படுகிறது. மற்றொரு புறம் மகரதோரணத்தின் நடுவிலும் ஒரு முனிவர் சிற்பமே காணப்படுகிறது. விமானச் சிற்பங்களில் முனிவர்களின் உருவங்களைத் தவிர கடவுளர்களின் உருவங்கள் இல்லாதது வியப்புக்குரியதாகும்.

                                      மூவர் கண்டியம்மன் கோயில்


நடுகல்லும் சதிக்கல்லும்
கோயில் வளாகத்தில் கண்டியம்மன் தவிர மேலும் இரண்டு சிறிய கருவறை விமானங்கள் உள்ளன. ஒன்று பஞ்சகன்னியர் சன்னதி என்று பூசையாளர் தண்டபாணி கூறினார். ஆனால், கருவறையில் ஐந்து கன்னியர் சிற்பங்கள் இல்லை. மூன்று ஆண் உருவச் சிற்பங்களும், இரண்டு பெண்ணுருவச் சிற்பங்களும் காணப்படுகின்றன. வீரர்கள் இருவரின் நினைவாக எழுப்பப்பட்ட நடுகல்லும், வீரர்களின் மனைவிகளின் சதிக்கல்லும் சேர்ந்த ஒரு தொகுதியாக இச் சிற்பக்களைக் கருதலாம். நாயக்கர்காலச் சிற்பங்கள். வீரர்களில் ஒருவர் தன் வலப்பக்கத்தில் வாளைத் தரையில் பதித்துவைத்தவாறு கைகூப்பி வணங்கும் நிலையில் உள்ளார். இன்னொரு வீரர் தம் இடக்கையைத் தொடையில் பதித்தவாறும் வலக்கையில் ஒரு மதுக்குடுவையைப் பிடித்த நிலையிலும் காணப்படுகிறார்கள். மூன்றாவதாக ஒரு வீரர் தண்டம் போன்ற ஒன்றைத் தரையில் பதித்துவைத்தவாறு கைகூப்பி வணங்கும் நிலையில் உள்ளார். இவருடைய இடைக்கச்சில் குறுவாள் காணப்படுகிறது. ஆண்கள் இடப்புறமாகவும், பெண்கள் வலப்புறமாகவும் கொண்டை முடிந்துள்ளனர். ஆண், பெண் அனைவரும் காதணிகளும், கழுத்தணிகளும் அணிந்திருக்கிறார்கள். அனைவரது ஆடை அமைப்பிலும் அழகுறக் காட்டப்பட்டுள்ளன. தொல்லியல் தடயங்களைத் தேடி வந்த எங்கள் பயணத்தில் முதன் முறையாக ஒரு நடுகல் தடயம் கிடைத்ததில் மகிழ்ச்சியும் நிறைவும் ஏற்பட்டன.

                  நடுகல் - சதிக்கல் சிற்பங்கள்

கல்வெட்டு
பூசையாளர், எழுத்துகள் உள்ள இரண்டு துண்டுக் கற்களைக் காட்டினார். எழுத்துகள் இருக்கும் பக்கம் கீழ்ப்புறமாகத் தரையில் மறைந்தவாறு இருக்கவே அவற்றைப் புரட்டித் திருப்பினோம். முதலில் புதிய கல்வெட்டு கிடைத்த என் மகிழ்ச்சி மறைந்தது. காரணம், இந்தக் கல்வெட்டை நானும் நண்பர் தென்கொங்கு சதாசிவமும் 03-10-2013 அன்று ஒரு மாலை நேரத்தில் வந்து பார்ர்த்துச் சென்றுள்ளோம். எழுத்துகள் மிகவும் சிதைந்து போனமையால் படிக்க இயலவில்லை. இருப்பினும் பழைய ஒளிப்படங்கள், இப்போது எடுத்த ஒளிப்படங்கள் ஆகியவற்றை ஒப்பிட்டுப் பார்த்ததில் சில எழுத்துகள் அடங்கிய பாடத்தைக் கீழே தந்துள்ளேன்.

                        கல்வெட்டுகள்




கல்வெட்டுப்பாடம்
முதல் துண்டுக்கல்:
1 ண்ண
2 சோழன்
3.........
 4 ஊரு (ட)
5 டையரா
6 கிய செ
7 நாயனா
8 ர் (ற்) அ
9 ண்ண
10 யனா
11 கு (ள)
12 மகன்
13 த்தொ
14 ம்

இரண்டாவது துண்டுக்கல்
1 ........
2 ..........
3 நானா ட
4 ............ந
5 .............
6 ன
7  ற ட ய

மேற்படி கல்வெட்டுப்பாடத்திலிருந்து தெளிவான செய்திகள் எவையும் புலப்பட்வில்லை. எனினும், “உடைய”,  “நாயனார்”,  ”ஊரு”  “மகன்”  போன்ற சில சொற்களைக்கொண்டு யூகமாகப் பொருள் கொண்டால், சோழன் என்னும் சிறப்புப் பெயர் கொண்ட ஒருவன் கோயிலுக்குக் கொடை அளித்துள்ளான் எனலாம். “நாயனார்”  என்பது சிவன் கோயில் இறைவனைக் குறிக்கும் சொல். ஆனால் இங்கே அம்மன் கோயிலில் கல்வெட்டு உள்ளது. வேறெங்காவது இடத்திலிருந்து இக்கற்கள் பெயர்த்துக் கொண்டுவரப்பட்டனவா என்னும் ஐயமும் எழுகிறது.
கண்டியம்மன் கோயிலைப் பார்த்துவிட்டுத் திரும்பும் வழியில், ஆற்றுப்பள்ளத்தில் சிறு சிறு பானை ஓட்டுச் சில்லுகள் கிடைத்தன. ஆங்காங்கே, இரும்புக்கசடுகளின் (Iron slag) துண்டுகள் கிடைத்தன். பானையோட்டுச் சில்லுகள், வரலற்றுக்கு முந்தைய பெருங்கற்காலத்துப் பொருள்களாக அறியப்படுவதால் இப்பகுதியில் பழங்கால வாழ்விடமோ, ஈமக்காடோ இருந்திருக்கவேண்டும் எனக் கருதலாம். இரும்புக் கசடுகள் கிடைப்பதால் இப்பகுதியில், இரும்பை உருக்கி ஆயுதங்கள் செய்யும் தொழில் நடைபெற்றிருக்கலாம் எனவும் கருதலாம். வழியில் யாரோ பிடுங்கியெறிந்த ஒரு காந்தள் செடியைக் காண நேர்ந்தது. சற்றே வாடியிருந்தாலும் அதன் அழகு மங்காத அழகு.

 அனுமந்தப் பெருமாள் கோயில்
பகல் இரண்டு மணிக்கு மேல் பகலுணவை முடித்த பின், தேநீர்க்கடையில் சந்தித்த சிலரிடம் பேசியதில் பெரியபட்டியில் பழங்கோயில் உள்ளதெனச் செய்தி கிடைத்தது. பெரியபட்டி சென்றோம். அங்கு ஒருவர் சுட்டிய பெருமாள் கோயிலுக்குச் சென்றோம். உப்பாற்றின் கரையோரம் கோயில் அமைந்திருந்தது. அநுமந்தப் பெருமாள் கோயில் என்பது பெயர். ஆனால், கோயிலின் பெயர் சொல்ல ஒரு பெயர்ப்பலகை கூட இல்லை. கோயிலுக்குள் குறிப்பிடும்படியாகக் கல்வெட்டுகள் இல்லை. ஒரே ஒரு எழுத்துப் பொறிப்பு எங்களுக்குக் கிட்டியது. கோயிலின் தெற்குச் சுற்றில் மேடை மீது வீற்றிருக்கும் ஒரு நாகச் சிற்பம். சற்றே பெரிதாக இருந்தது. நாகத்தின் உடல் வளைவுகள் மூன்றுடன் தலைப்பகுதியில், காளிங்க நர்த்தனத்தை நினைவூட்டும் வகையில் கண்ணனின் ஆடுகின்ற தோற்றத்துடன் கானப்பட்டது. சதுரப் பீடத்தின் மையப்பகுதியில் ஒரு மனித உருவமும் அதனைச் சுற்றிலும் உள்ள இடைவெளியில் சில எழுத்துகளும் காணப்பட்டன. “அனுமந்”  என்னும் இறுதிச் சொல் படிக்க இயன்றது. இதன் தொடர்ச்சியாக, நாகத்தின் பக்கப்பகுதியில், பீடத்தில் சில எழுத்துகள் பொறிக்கப்பட்டிருந்தன. அவற்றைப் படிக்க இயன்றது. முழுப்பாடமும் கீழ் வருமாறு:

           அனுமந்தப் பெருமாள் கோயில் - உப்பாற்றங்கரை



                                    நாகச் சிற்பம் - கல்வெட்டுடன்

                                            கல்வெட்டு

கல்வெட்டுப் பாடம்:
1 அனுமந்
2 த ராம
3 ர் பூசாரி
4 சென்ன
5 பெருமா
 6 ள் தாசன்
7 மகன் ரங்
8 கா தாசன்

கல்வெட்டின் எழுத்துகள் மிகவும் பிற்காலத்து எழுத்துகள். 20-ஆம் நூற்றாண்டெழுத்துகள். சென்னப் பெருமாள் தாசன் என்பவனின் மகன் ரங்க தாசன் என்பவன் அமைத்துக் கொடுத்த நாக சிற்பம் என்பது கல்வெட்டுச் செய்தி. இக்கோயிலைப்பார்த்த பின்னர் ஊர் திரும்ப் நினத்தவேளை, பெரியபட்டி ஊருக்குள்ளேயே பாழடைந்த ஒரு கோயில் உள்ளதெனத் தெரியவந்தது. அதுவும் ஒரு பெருமாள் கோயில்.
பெரியபட்டிப் பெருமாள் கோயில்
பெரியதொரு வளாகம். கல்லும் மண்ணூம் கலந்து கட்டப்பெற்ற சுற்றுச் சுவர். வளாகத்தின் மையத்தில் பாழடைந்த நிலையில், கருவறை, அர்த்தமண்டபம், முன்மண்டபம் ஆகிய மூன்று கட்டுமானங்களைக் கொண்ட வெளிப்புறத்தோற்றம். நுழைவு மண்டபத்தின்  (முன்மண்டபம்) கதவு பூட்டியிருந்தது. பத்தடிக்கும் மேலான உயரமுள்ள ஆறு கல் தூண்கள் முன்மண்டபத்தின் முன்புறம் நின்றுள்ளன. வடக்குத் திருச்சுற்றில் இரண்டு நிலத்தடிக் கட்டுமானங்கள் காணப்பட்டன. கட்டுமானத்தின் மூல வடிவம் முற்றாய்க் கலைந்து வெறும் செங்கற்கூடாகக் காட்சியளித்தது. ஒன்று கிணறு போலத் தோற்றமளித்தது. இன்னொன்று நிலவறைச் சுரக்கம் போலத்தோற்றமளித்தது. (பின்னால் தெரிய வந்த செய்தி என்னவெனில் அவை இரண்டும் சிங்கமுகம் கொண்ட கோயிலின் தீர்த்தக் கிணற்றின் இரு பகுதிகள்).  பூட்டபெற்ற கதவின் வழியே பார்த்தபோது உள்ளே ஒரு விளக்கொளி தெரிந்தது.

                                  பெரியபட்டி அரங்கநாதப் பெருமாள் கோயில்

                     சிங்கமுகக் கிணறு


கோயிலைப்பற்றிய செய்திகளைத் தெரிந்துகொண்ட பிறகே ஊர் திரும்பவேண்டும் என்னும் ஆவலில் அருகே கேடறிந்து கோயிலின் பரம்பரைப் பூசையாளரைக் காணச் சென்றோம். பெரியபட்டிக்கருகில் உள்ள கள்ளப்பாளையத்தில் அவரது இருப்பிடம். ஐம்பத்தொன்பது அகவையுள்ள பூசையாளர் ஸ்ரீநிவாச ஐயங்கார். இவரது முன்னோர்கள் ஆதித்திருவெள்ளறை சோழியர் வழி வந்தவர்கள். திருவெள்ளறையிலிருந்து இடம் பெயர்ந்து வந்தவர்கள். அவர் கூறிய செய்திகள் இங்கே. கோயிலின் பெயர் அரங்கநாதப் பெருமாள் கோயில். கோயிலுக்கு நிறைய மானிய நிலங்கள் இருந்துள்ளன. தற்போது மிகக் குறைந்த அளவில் நிலம் உள்ளது. அருகில் உள்ள ஆமந்தக்கடவு ஜமீன் நிலக்கொடை கொடுத்துப் புரந்துகொண்டிருந்தது. கோயிலின் அன்றாட வழிபாடுகள் எவையும் நடைபெறுவதில்லை. மேற்படி
ஸ்ரீநிவாச ஐயங்காரின் தந்தையர்ர் காலத்திலிருந்தே பூசைகளின்றியும் தக்க பேணுதலின்றியும் கோயில் அதன் அழகை இழந்து நிற்கிறது. 
கோயிலின் உள்ளே கருவறை முதலிய இடங்கள் பெரும்பாலும் மரத்தால் ஆன கட்டுமானங்களைக் கொண்டவை. கோயிலின் உள்ளே யாரும் செலவதில்லை. சிதிலமடைந்த மரக்கட்டுமானங்களால், எந்நேரத்திலும் அவை கீழே வீழும் அச்சச் சூழ்நிலை. இருப்பினும், பூசையாளர் சிறுவயது முதற்கொண்டே உள்ள பழக்கம்கொண்டு நாள்தோறும் காலையில் கோயிலின் உள்ளே விளக்கேற்றி வருகிறார். கோயில், புதுப்பிக்க முன்வரும் புரவலரை எதிர் நோக்கிக் கோயில் காத்திருக்கின்றது.

ஆங்கிலேயர் காலத்து ஆவணம்
ஸ்ரீநிவாச ஐயங்கார் 1863-ஆம் ஆண்டு ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தைச்  சேர்ந்த ஒரு நில ஆவணத் தாளைக் காட்டினார். இனாம் ஆணையம் (INAM COMMISSION)  வழங்கிய நிலமானியம் பற்றியது. மேற்படி அரங்கநாதர் கோயிலுக்கு வழங்கப்பட்டது. TITLE DEED என்னும் தலைப்பில் வழங்கப்பட்ட இவ்வாவணத்தில் கோயில் என்பதற்குப் “பகோடா”  (PAGODA)  என்னும் சொல் ஆளப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 1919-ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட சொத்துப்பத்திரம் ஒன்றையும் காட்டினார்.

                 இனாம் ஆணையத்தின் ஆவணம் - 1863 

                இனாம் ஆணையத்தின் முத்திரை

                              அரசு முத்திரை 

                   1919-ஆம் ஆண்டுப் பத்திரம் 

முடிவுரை:
பெருமாள் என்றாலே செல்வமுள்ள கடவுள் என்னும் சூழலில், புதுக் கோயில்களை எழுப்ப நினைக்கும் பெரும் செல்வர்கள் ஒன்றிணைந்து இது போன்ற கோயில்களுக்குப் புத்துயிர் வழங்கலாம்.





---------------------------------------------------------------------------------------
து.சுந்தரம், கல்வெட்டு ஆராய்ச்சியாளர், கோவை.
அலைபேசி: 9444939156.
மின்னஞ்சல்  : doraisundaram18@gmail.com

வலைப்பூ : kongukalvettuaayvu.blogspot.in

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக