மொத்தப் பக்கக்காட்சிகள்

திங்கள், 28 அக்டோபர், 2019



கருநாடகத்தில் ஒரு தமிழ்க்கல்வெட்டு
முடி ஈசுவரர் கோயில் - ஹுலுகுடி (தொட்டபல்லாபூர்)

முன்னுரை

இன்று (28-10-2019), முகநூல் பதிவுகளைப் பார்வையிட்டுக்கொண்டிருந்த வேளையில் கண்ணில் பட்டுக் கருத்தைக் கவர்ந்தது ஒரு கல்வெட்டின் படம். INSCRIPTION STONES OF BANGALORE  என்னும் குழுமத்தின் உறுப்பினர் ஒருவர் இப்படத்தைப் பதிவிட்டு, அது பற்றிய செய்திகளைத் தெரிந்துகொள்ளும் வகையில் சுட்டி ஒன்றைக் குறிப்பிட்டிருந்தார். கல்வெட்டுப்படம் கருத்தைக் கவர்ந்ததே அது ஒரு தமிழ்க்கல்வெட்டு என்பதாலாகும். படத்தைப் பதிவிறக்கம் செய்து அதன் பாடத்தைப் படித்துவிட்டு அதனோடு தொடர்புடைய செய்திகளைச் சுட்டி வழி இணையத்தில் (teamgsquare.com) சென்று அறிந்த செய்திகளை இங்கு பகிர்ந்து கொள்கிறேன்.

தொட்டபல்லாபூர்-ஹுலுகுடி (DODDABALLAPUR – HULUKUDI)

வெங்களூர் என்று தமிழ்க்கல்வெட்டுக் குறிப்பிடும் பெங்களூரு மாநகரிலிருந்து எண்பது கல் (கி.மீ) தொலைவில் அமைந்துள்ளது தொட்டபல்லாபூர்.  இவ்வூருக்கருகில் அமைந்த ஒரு சிற்றூர் ஹுலுகுடி. இவ்வூரை ஹுலுகடி என்றும் அழைக்கிறார்கள். ’ஹுலு’ (ஹுல்லு) என்பது புல்லையும், ’கடி’ என்பது குச்சியையும் குறிக்கிறது என்கிறார்கள். இங்கு ஒரு சிறிய மலை உள்ளது.  மலையின் மேல், வீரபத்திர சுவாமி  கோயில் என்னும் பெயரில் ஒரு குகைக்கோயில் அமைந்துள்ளது.

ஹுலுகுடி மலைக்கோட்டை


                                              
கண்காணிப்புக் கொத்தளம்
                                                      

                                          

  
சிதைந்துள்ள நிலையில் கோட்டைச் சுவர்கள்
                                                
ஹுலுகுடி மலை மேல், அழிந்துபோன ஒரு கோட்டையின் எச்சங்கள் உள்ளன. மலைமீது ஏறிச்செல்லும் பாதையெங்கும் சிதைந்து போன கோட்டைச் சுவரின் கற்கள் சிதறிக்கிடக்கின்றன. கண்காணிப்புக் கொத்தளம் ஒன்று அதன் வடிவம் மாறாமல் தன்னை அடையாளப்படுத்திக்கொண்டு நிற்கிறது. வீரபத்திர சுவாமி குகைக் கோயிலுக்கு வழி காட்டிய கோயில் பூசையாளர் கூற்றிலிருந்து கோயிலுக்குச் செல்லும் படிக்கட்டுகளோடு கூடிய வழி தற்காலத்தே கோயிலின் அறக்கட்டளையினரால் அமைக்கப்பட்டதென்றும், பழைய வழி வேறொன்று இருப்பதாகவும் அறிகிறோம். 


நந்திக் கோயில்
                                                


நந்திச் சிற்பம்
                                         


பழையவழியில் ஏறிச்செல்கையில் நந்திச் சிற்பம் அமைந்துள்ள நந்திக் கோயில் ஒன்றுள்ளது.  ஒற்றைக் கல்லால் செதுக்கப்பட்ட பெரிய நந்தி. இன்னும் சற்றுக் கடந்து சென்றால் பெரிய உருண்டைக் கற்பாறையைக் காணலாம்  மாமல்லபுரத்தில் காணப்படுகின்ற வெண்ணெய் உருண்டைப் பாறையைப் போன்றே தோற்றமளிக்கும் இப்பாறையும் வெண்ணெய்ப் பாறை என்று அழைக்கப்படுகிறது. கீழிருந்து மேலே செல்லும் வழியில் கற்றூண்களால் அமைந்த தோரணவாயில் ஒன்று அழகுறக் காட்சியளிக்கிறது. 


வெண்ணெய்க் கல் உருண்டை
                                                                                                          


ஹுலுகுடி சிவன்  கோயிலும் பாறைக்கல்வெட்டும்


                                            

மலைமேல் சிதைந்துபோன சிவன் கோயில் ஒன்றுள்ளது. .இக்கோயிலின் பக்கவாட்டில் ஒரு பாறையில் கல்வெட்டு வெட்டப்பட்டுள்ளது.  கல்வெட்டின் படமும் பாடமும் கீழ்க்கண்டவாறு:


                                   
தமிழ்க்கல்வெட்டு



கல்வெட்டின் பாடம்

1 ஸ்வஸ்தி ஸ்ரீமந் மஹாமண்டலேஶவர த்ரிபுவனமல்ல      தழைக்காடுகொண்ட
2    புஜபல வீரகங்க பொய்ஶல தேவர் ராஜ்யமாள் ஸம்வத்ஸரத்
3    தில் விக்கிரமசோழ மண்டலத்தின் மண்ணைநாட்டுக் கா
4    முண்டந் விருதராயபயங்கர மண்ணைநாடாழ்வாந் மகந்.. ..
5    நாந விருதராய பயங்கர மண்ணைநாடாழ்வாநேந் புற
6    கொடியில் மலைக்குக் கிழக்கில் சிகரத்தில் முடீஶவரமுடை
7    மஹாதேவருடை(ய விமாநம்) உதகபூர்வம் பண்ணிநேன் சிவ
8    ப்ராஹ்மணன் (பெண்ணை) பட்டந் மகன் (பன்ம) பட்டநுக்கு விருதரா
9    ய பயங்கர மண்ணைநாடாழ்வாநேந் எந் வம்ஶமும்  பன்ம
10  பட்டந் வம்ஶமுள்ளளவும் பூஜிப்பாறாகவும் பன்ம
11  பட்டந் தந்ணையும் தன் வம்ஶத்தாரையும் முடீஶவ
12  ரமுடையாரை பூஜிக்க வேண்டாவென்றவன் கங்(கையி)
13  டைய்க் குமரிடைய்க் குராற்பசுவைக் கொ(ன்ற) [வன்பு)
14  (குந்) னரகம் புகுவான் இவை (றா?)மாசாரி எழுத்து

  
குறிப்பு :  சிவப்பு வண்ண எழுத்துகள் கிரந்த எழுத்துகள்.


கல்வெட்டுச் செய்திகள்

கல்வெட்டின் காலமும் அரசனும்

கல்வெட்டு, தழைக்காடுகொண்ட வீரகங்க பொய்சல தேவர் என்று குறிக்கும் அரசன் ஹொய்சல விஷ்ணுவர்த்தன் ஆவான். இவனது ஆட்சிக்காலம் கி.பி. 1108-1152.  கல்வெட்டில், ஆட்சியாண்டு தரப்படாததாலும், சக ஆண்டுக்குறிப்பு இல்லாததாலும் கல்வெட்டு எந்த ஆண்டைச் சேர்ந்தது எனத் துல்லியமாகக் கணிக்க இயலாது.  கல்வெட்டில் குரிப்பிடப்படும் அரசன் விஷ்ணுவர்த்தன் என்பதால், கல்வெட்டின் காலம் 12-ஆம் நூற்றாண்டு என்றாகிறது.

சோழர் ஆட்சியின் தாக்கம்

கருநாடகப்பகுதியில் சோழரின் ஆட்சியைத் தொடர்ந்து ஹொய்சலர் ஆட்சி அமைந்தாலும், சோழர் ஆட்சியின்போது ஏற்பட்டிருந்த தமிழ்மொழியின் முதன்மைத் தன்மையும் பெருந்தாக்கமும் தமிழகத்தை ஒட்டி அமைந்த கருநாடகத்தின் இந்தப்பகுதியில் மக்களிடையே மேலாண்மை செலுத்தியது எனலாம். அதன் காரணமாகவே, சோழர் ஆட்சியின்போது பொறிக்கப்பட்டதைப் போன்றே, தொடர்ந்து வந்த ஹொய்சலர் ஆட்சியிலும் தமிழ் மொழியில் கல்வெட்டுகள் பொறிக்கப்பட்டன எனக் கருதவேண்டியுள்ளது.  ஹொய்சலஎன்பதைத் தமிழ்ப்படுத்துகையில் ‘போசல  என்று திரியும். இந்தத் திரிசொல் கல்வெட்டிலும் காணப்படுவது  கருதத்தக்கது. முதலாம் இராசராசன் கருநாடகத்தின் சில பகுதிகளைத் தன் ஆட்சியின்கீழ் கொணர்ந்தபோது, சோழர் ஆட்சிப்பகுதி, சோழ நாட்டின் ஆட்சிப்பிரிவுகளைப் போல் ‘முடிகொண்ட சோழமண்டலம்  என்னும் பெயர் பெற்றது. பின்னர், 12-ஆம் நூற்றாண்டில் விக்கிரம சோழன் காலத்தில்  விக்கிரம சோழமண்டலம்  எனப் பெயர்மாற்றம் பெற்றது எனக் கல்வெட்டின் வாயிலாக அறிகிறோம்.

விக்கிரம சோழமண்டலம் – மண்ணை நாடு

மண்டலத்தை அடுத்து நாட்டுப் பிரிவுகள் இருந்தன. கல்வெட்டில், இப்பகுதி (தொட்டபல்லாபூர்)  மண்ணை நாடு என்னும் பெயரில் வழங்கியது.  மண்ணை நாட்டுப் பிரிவின் ஆட்சித்தலைவனாக இருந்தவன் “மண்ணை நாடாழ்வான்  என்னும் காமுண்டன் ஆவான். சோழர் காலத்துத் தலைவர்க்கு வழங்கிய நாடாழ்வான் என்னும் நாட்டுத்தலைவன் பெயர் போசலர் காலத்திலும் தொடர்ந்தது எனலாம்.

புறக்கொடி

தற்போது, ஹுலுகொடி (HULUKODI) என்றும் ஹுலுகடி (HULUKADI)  என்றும் பெயர்கொண்டுள்ள இவ்வூர் 12-ஆம் நூற்றாண்டில், “புற(க்)கொடி  என்று வழங்கியது. இப்பெயரே, காலப்போக்கில் “புலுகொடியாகிப் பின்னர் “ஹுலுகொடி  எனத் திரிந்தது எனலாம். கன்னட மொழியின் “ஹஎழுத்தை முதலாகக் கொண்ட பெயர்கள் “ஹகரத்தை இழந்து “பகரமாக மாற்றம் பெறுதலும், “ப”கரம் “ஹ”கரமாக மாற்றம் பெறுதலும் இயல்பு.

கோயிலின் பெயரும், இறைவன் பெயரும்

புறக்கொடி ஊரின் மலைமீது (முடியில் அல்லது சிகரத்தில்) கோயில் அமைந்ததால் முடீசுவரம் (முடி-ஈசுவரம்)  என்னும் பெயர் ஏற்பட்டது. ஈசுவரம் என்பது சிவன் கோயிலைக்குறிக்கும் சொல். இறைவன் பெயரும் கோயிலின் பெயராலேயே முடீசுவரர் என்று வழங்கியது. கல்வெட்டு, முடீசுவரமுடைய மஹாதேவர் எனக் குறிப்பிடுவது இதன் காரணமாகவே. இறைவனின் இப்பெயர், தமிழகத்தில் புதுக்கோட்டைக்கருகில் அமைந்துள்ள குடுமியான் மலைக்கோயிலின் பெயரையும் இறைவனின் சிகாநாதர் என்னும் பெயரையும் நினைவூட்டுகிறது. சிகையும் முடி(குடுமி)யைக் குறித்தது; சிகரமும் முடியைக் குறித்தது. புறக்கொடியில் கோயில், மலையின் கிழக்குப் பகுதியில் இருந்தது.

கோயிலை எடுப்பித்தவன் மேலே குறிப்பிட்ட மண்ணை நாடாழ்வான் ஆவான். இதைக் கல்வெட்டு, முடீவரமுடைய மஹாதேவருடைய விமாநம் உதகபூர்வம் பண்ணிநேன்  எனச் சொல்கிறது. கோயிலைப் பாதுகாத்தலையும், வழிபாட்டுக் கடமைகளையும் நிறைவேற்றும் பொறுப்பை முறையே மண்ணை நாடாழ்வானும், கோயில் பூசையாளன் சிவப்பிராமணன் பன்மபட்டனும் ஏற்கிறார்கள். இதைக் கல்வெட்டு, “மண்ணை நாடாழ்வாநேந் எந் வம்சமும் பன்மபட்டந் வம்சமுள்ளளவும் பூஜிப்பாறாக   என்று குறிப்பிடுகிறது.

கோயிலின் காப்பு, வழிபாடு ஆகியவை தடையின்றிக் காலந்தோறும் தொடரவேண்டும் என்பதையே மேற்குறித்த கல்வெட்டு வரிகள் சுட்டுகின்றன. இந்தத் தன்மத்துக்குத் தீங்கு செய்வார் உண்டாகில் அவர்கள் கங்கை-குமரி இடையில் உள்ள நிலப்பகுதியில் பசுவைக் கொன்றவர் அடையும் நரகத்தை அடைவார்கள் என்று கல்வெட்டின் இறுதிப் பகுதி குறிப்பிடுகிறது. கல்வெட்டின் இம்மரபுத் தொடரை “ஓம்படைக்கிளவி  என்று குறிப்பிடுவர்.  கல்வெட்டைப் பொறித்த சிற்பியின் பெயர் இராமாச்சாரி  என்பதாகக் கல்வெட்டின் தொடர்  “இவை (றா)மாசாரி"  புலப்படுத்துகிறது.


பார்வை :   1  INSCRIPTION STONES OF BANGALORE  குழுமம்


                      2   TEAMGSQUARE  இணைய தளம்.




துரை.சுந்தரம், கல்வெட்டு ஆராய்ச்சியாளர், கோவை.
அலைபேசி :  9444939156.

3 கருத்துகள்: