மொத்தப் பக்கக்காட்சிகள்

சனி, 8 ஜூலை, 2017

கால்நடை மேய்ப்பர்களின் வாழ்க்கை- காடாறுமாசம் வீடாறு மாசம்

முன்னுரை
குறிஞ்சியும் முல்லையும் சார்ந்த நில்ங்களில் பழந்தமிழர் சமுதாயம் கால்நடைச் சமுதாயமாக இருந்துள்ளது. ஆநிரை கவர்தல் பற்றியும், ஆநிரை மீட்டுதல் பற்றியும் சங்க இலக்கியங்கள் பேசுகின்றன. தொல்லியல் சார்ந்த நடுகற்களும் ஆநிரைப்பூசல்களின் எச்சங்களாக இன்றும் காணப்படுகின்றன. கால்நடைகளைக் காக்கும் காவல் வீரர்கள் காட்டு விலங்குகளான புலிகள், பன்றிகள் ஆகியவற்றை எதிர்கொண்டு சண்டையிடும் சூழலும் அதன் விளைவாகக் காவல் வீரர்கள் இறந்துபடுதலும் அவர்களுக்கு நினைவுக்கல் எழுப்புதலும் “புலிகுத்திக்கல்”  போன்ற தொல்லியல் சின்னங்களால் அறியப்படுகின்றன. கோயில்களில் விளக்கெரிக்கும் நிவந்தத்துக்காக ஆடுகளைக் கோயிலுக்குக் கொடையாக அளித்தனர். கோயில் நிர்வாகம், ஆடுகளை இடையர்களிடம் ஒப்படைத்து நிசதமும் (நாள்தோறும்) இத்தனை ஆழாக்கு நெய் கோயிலுக்கு வழங்கவேண்டும் என்று நிவந்தத்தைச் செயல்படுத்தியது. இந்த இடையர்களின் வாழ்க்கை எவ்வாறு இருந்தது? கல்வெட்டுகள் வாயிலாக அறியக்கூடவில்லை.

“தி இந்து”  தமிழ் நாளிதழ் 
சென்ற 28-06-2017 அன்று “தி இந்து”  தமிழ் நாளிதழில் “காடாறு மாசம்...வீடாறு மாசம்”  என்னும் தலைப்பில் ஒரு செய்திக் கட்டுரை வெளியானது. அதில் மேய்ச்சல் நிலங்களை நோக்கி இடம் பெயர்தலையே வாழ்க்கையாகக் கொண்ட மேய்பாளர்களைப் பற்றி விரிவாக எழுதப்பட்டுள்ளது. சொந்த ஊர்ப்பக்கம் செல்ல இயலாமல் நாடோடி வாழ்க்கை வாழும் இவர்களில் ஒருவர் தம் வாழ்க்கை அனுபவங்களைப் பகிர்ந்துகொள்கிறார். அதில், அவர் கூறுகின்ற ஒரு பகுதி என்னை ஈர்த்தது.

மேய்ப்பாளரின் கூற்று
அவர் கூறுகிறார்:

மழைக்காலங்களில் ஆடுகளுக்கு நோவு வந்துச்சுனா மொத்தம் மொத்தமா இறந்துவிடும். அந்த நேரங்கள்ல எங்கபாடு ரொம்பவே கஷ்டமாகிடும். அதுமாதிரியான நேரங்கள்ல, குடைய புடிச்சுக்கிட்டு ஆடு ஓட்டுற கம்பை ஆதாரமா வைச்சுக்கிட்டு  கம்புல ஒத்தைக்காலும் தரையில ஒத்தைக் காலும் வைச்சுக்கிட்டு நின்ன மேனிக்கத்தான் தூங்குவோம்.

இந்த நிகழ்வு, சில நூற்றாண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த இடையர்களும் இவ்வாறுதான் நின்றவாறு தூங்கினர் என்று கருதத் தோன்றுகிறது. ஏனெனில், விஜய நகர அரசர்கள் காலத்திலிருந்து நாம் காணும் கோயிற் சிற்பங்களில் இந்நிகழ்வு காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இடையர் ஒருவர் தலையில் முக்காடு போட்டுக்கொண்டற்போல் நீண்டதொரு மறைப்புடன் நின்றவாறு தூங்கிக்கொண்டிருப்பதாகச் சிற்பங்கள் அமைக்கப்பட்டிருக்கும். கோயில்களில் எடுத்த ஒளிப்படங்களில் இவ்வாறான சிற்பங்கள் உள்ள படங்கள் இரண்டு என் சேர்ப்பில் இருந்தன. ஒன்று, ஹம்பியில் பார்த்த ஒரு சிற்பம். மற்றொன்று தாரமங்கலம் கோயிலில் பார்த்த ஒரு சிற்பம். அவற்றை இங்கு பகிர்கிறேன்.


                                                   ஹம்பியில்



                                                 தாரமங்கலத்தில்



து.சுந்தரம், கல்வெட்டு ஆராய்ச்சியாளர், கோவை.

அலைபேசி : 9444939156. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக