மொத்தப் பக்கக்காட்சிகள்

திங்கள், 18 ஏப்ரல், 2016



                       வட்டெழுத்து கற்போம்-1      

வட்டெழுத்து - தோற்றம்

    தமிழெழுத்துகளில் தொன்மையான எழுத்துகள் என்பதாக நமக்குக் கிடைத்துள்ள எழுத்துகள் “தமிழி”  என்னும் “தமிழ் பிராமிஎழுத்துகளாகும். இந்தத் தொன்மைத் தமிழ்எழுத்து தமிழகத்தில் கி.மு. 5-ஆம் நூற்றாண்டிலிருந்து கி.பி. 2-ஆம் நூற்றாண்டு வரை ஏறத்தாழ எழுநூறு ஆண்டுக்காலம்  வழங்கிவந்துள்ளது. கி.மு. 2-ஆம் நூற்றாண்டு அளவில் தொன்மைத் தமிழ் எழுத்திலிருந்து வட்டெழுத்து” ,  “பிற்காலத்தமிழ் எழுத்து என்று இருவகை எழுத்துகள் வலர்ச்சியுறத்தொடங்கின. அறச்சலூர், பிள்ளையார்பட்டி, திருநாதர் குன்று ஆகிய இடங்களில் காணப்பெரும் கல்வெட்டுகளில் இத்தகைய வலர்ச்சியைத் தெளிவாகக் காணலாம்.

வட்டெழுத்து வளர்ச்சி நிலைகள்

முதல் நிலை
    வட்டெழுத்து வளர்ச்சி நிலையை மூன்று கால கட்டங்களாக அறிஞர்கள் பகுத்துள்ளனர். முதல் நிலை கி.பி. 2-ஆம் நூற்றாண்டு முதல் கி.பி. 6-ஆம் நூர்றாண்டு வரை. ஒரு சிலர், முதல் நிலையைக் கி.பி. 8-ஆம் நூற்றாண்டு வரை கொண்டுசெல்வர். முதல் நிலையில், வட்டெழுத்துகளும் தொன்மைத்தமிழ் எழுத்துகளைப்போலவே நேர் நேராக எழுதப்பட்டன. பூலாங்குறிச்சிக் கல்வெட்டும், வட ஆர்க்காடு, தர்மபுரி மாவட்ட நடுகற்கள் கல்வெட்டுகளும் முதல்வகையைச் சார்ந்தன.

இரண்டாம் நிலை
    இரண்டாம் நிலை, கி.பி. 6-ஆம் நூற்றாண்டு முதல் 8-ஆம் நூற்றாண்டு வரை என்பதாக ஒரு சாராரும், கி.பி. 9-ஆம் நூற்றாண்டு முதல் கி.பி. 13-ஆம் நூற்றாண்டு வரை என்பதாக மற்றொரு சாராரும் கருதுகின்றனர். இரண்டாம் நிலையில், எழுத்துகள் இடப்பக்கம் சிறிது சாய்த்து வட்டம் வட்டமாக் எழுதப்பெற்றன. இவ்வகை எழுத்துகள் தமிழகத்தின் வட மாவட்டங்கள், தஞ்சை, திருச்சி, தென்மாவட்டங்கள், கொங்கு நாடு எனப்பரவலான இடங்களில் காணப்படுகின்றன. கேரளப்பகுதியிலும் இந்த எழுத்துகளே புழக்கத்தில் இருந்துள்ளன. கேரளாவில் இவ்வெழுத்தை “நானா மோனா” , “தெக்கன் மலையாள , “கோலெழுத்து’  ஆகிய பெயர்களில் அழைத்தனர். ஓலைகளில் எழுதிய காரணத்தாலேயே இவ்வாறு வட்டமாக எழுதவேண்டி நேர்ந்தது எனக் கருதப்படுகிறது. (கோல் என்பது எழுத்தாணியைக்குறிக்கும். எழுத்தாணியால் எழுதியதால் “கோலெழுத்துஎன வழங்கலாயிற்று.)

மூன்றாம் நிலை

    மூன்றாம் நிலை, கி.பி. 8-ஆம் நூற்றாண்டுக்குப்பின்னர் உள்ள கால கட்டம் எனவும், கி.பி. 14-ஆம் நூற்றாண்டு முதல் கி.பி. 17-ஆம் நூற்றாண்டு வரையுள்ள கால கட்டம் எனவும் இருவேறு கருத்துகள் உள்ளன. மூன்றாம் நிலையில், பல எழுத்துகள் வேறுபாடு இன்றி அல்லது மிகக் குறைந்த வேறுபாட்டோடு, ஒன்றுபோலவே எழுதப்படலாயின. எனவே, இவ்வகை எழுத்துகளை மிகக் கவனமாகப் படித்தால்தான் புரிந்துகொள்ளமுடியும் என்ற நிலை ஏற்பட்டது. விரைவாக எழுத விரும்பியதால் இந்த மாற்றம் ஏற்பட்டிருக்கக் கூடும். இவ்வகை எழுத்துகள், கன்னியாகுமரி மாவட்டம், கேரளம் ஆகிய பகுதிகளில் கிடைத்துள்ள கல்வெட்டுகள், ஓலைச்சுவடிகள் ஆகியவற்றில் காணப்படுகின்றன. கோயில்கள் அவ்வப்பொழுது புதுப்பிக்கப்பட்டபோது, வட்டெழுத்தில் பொறிக்கப்பெற்ற கல்வெட்டுகளைத் தமிழ் எழுத்தில் மீண்டும் வெட்டியுள்ளனர். சான்றாக, 13-ஆம் நூற்றாண்டுக் கல்வெட்டொன்றில், திருமலை ஜீரணிக்கையால் உத்தாரணம் பண்ணினவிடத்து திருமலையில் கல்வெட்டு வட்டமாகையில் தமிழாகப் படியெடுத்து  என்று கூறப்படுகிறது. திருக்குற்றாலத்துக் குற்றாலநாதசுவாமிக் கோயிலிலுள்ள கல்வெட்டொன்று, புரிந்துகொள்ளமுடியாத வட்டம் நீங்கலாக மற்ற எல்லாக் கல்வெட்டுகளும் திரும்பச் சுவரில் பொறிக்கப்பட்டதைச் சொல்லுகிறது. இவற்றிலிருந்து, ஒரு கால கட்டத்தில், வட்டெழுத்து மக்களால் புரிந்துகொள்ள முடியாத அளவுக்கு அந்நியமாகிவிட்டதைத் தெரிந்துகொள்ளமுடிகிறது.


மேற்படி கருத்துகள் உதவி :
1. திரு. நடன. காசிநாதன் அவர்கள் எழுதிய தமிழக வரலாற்றுத்தடயங்கள்நூல்    .
2. பாண்டிய நாட்டு வரலாற்று ஆய்வுமையம் வெளிட்டுள்ள “கல்வெட்டுக்கலைநூல்.

பயிற்சி

    வட்டெழுத்துப்பயிற்சியில் நாம், இரண்டாம் நிலை எழுத்துகளைப் பயிலவிருக்கிறோம். காரணம், இரண்டாம் நிலையில்தான் வட்டெழுத்து முழு வளர்ச்சியில் பரவலாகத் தமிழகத்தில் வழங்கியுள்ளதைக் காண்கிறோம். முறைப்படுத்தப்பட்டனவாகவும், தேர்ச்சியாகவும் அவை இருப்பதால் அவற்றைப்பயின்ற அனுபவத்தில் அவ்வெழுத்துகளின் மாறுபட்ட எழுத்துகளையும் ஒருவாறு யூகித்துப் படிக்கமுடியும். மேலும், மூன்றாம் நிலை எழுத்துகள் படிக்க மிகக் கடினமானவை என்று முன்னுரையில் பார்த்தோம்.

இனி, எழுத்துகள்:

“அ    
                                       ஐவர் மலைக் கல்வெட்டில் உள்ளவாறு





"அ”,   “ஆ”
                                                       கையால் எழுதியன


பாடம்  தொடரும்.

------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
து.சுந்தரம், கல்வெட்டு ஆராய்ச்சியாளர், கோவை.
அலைபேசி : 9444939156.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக