மொத்தப் பக்கக்காட்சிகள்

புதன், 10 பிப்ரவரி, 2016

பெரியகுயிலி

         கோவைக்கருகிலுள்ள ஒரு சிற்றூர் பெரிய குயிலி. அவ்வூரில் இருக்கும் பூசையாளர் சுப்பிரமணியம் என்பவர்  அண்மையில் எனக்கு அறிமுகமானார். அவர், அவ்வூரில் அமைந்துள்ள குயிலியம்மன் கோவில் பூசைப்பொறுப்பை ஏற்றுக்கொண்டுள்ளதோடல்லாமல் அக்கோயிலைப் புதுப்பித்துக்கட்டும் திருப்பணியில் உழைப்பு மற்றும் பொருள் (செல்வம்) ஆகியவற்றைக் கொடையாகத் தந்தவர். கல்வெட்டுகள் கிடைக்கக் கூடிய இடங்கள் என நான் கருதித் தேர்வு செய்து தேடலை மேற்கொள்ளுகின்ற இடங்களில் ஒன்றாய்ப் பெரியகுயிலியும் அமையவே, அவரிடம் தொடர்புகொண்டு அவ்வூர் மற்றும் அதன் சுற்றுப்பகுதியில் கல்வெட்டுகள், பழஞ்சிற்பங்கள் போன்ற தொன்மைத் தடயங்கள் உள்ளனவா எனக் கேட்டிருந்தேன். அத்தகு இடங்கள் ஒரு சில காணப்படுவதாக அவர் கூறியதால் 9-02-2016 அன்று வரலாற்று ஆர்வலர்களான நண்பர்கள் திரு. மீனாட்சிசுந்தரம், திரு.ஜெயசங்கர் ஆகியோருடன் அங்கு சென்றேன்.

         தொல்லியல் நோக்கில் அமைந்த ஒரு பயணம். கல்வெட்டுகளில் ஒரு தொடர் பயின்றுவருவதைப் பார்க்கலாம். அத்தொடர், “விளையினும் விளையாதொழியினும்என்று அமையும். அதாவது, ஒரு நிலத்தின்மீது காணி அல்லது உரிமை கொண்ட ஒருவர் அல்லது ஓர் அமைப்பு வரி செலுத்தும்போது, நிலத்தில் விளைந்தாலும் விளைச்சல் இல்லாது போனாலும் வரி கட்டும் கடமை யினின்றும் பிறழ மாட்டோம் என்னும் உறுதி மொழிவதை அத்தொடர் சுட்டும். அது போன்றே, தொல்லியல் தடயங்கள் கிடைக்கவும் கூடும். கிடைக்காமலும்  போகும். ஆனால், தேடல் தொடரும். அவ்வாறு மேற்கொண்ட பயணம் பெரியகுயிலி ஊரைப்பொறுத்தவரையிலும் ஏமாற்றம்  அளிக்கவில்லை.

         முதன்முதலாகப் பார்த்த இடம் குயிலியம்மன் கோயில். குயிலியம்மன் கோயில் கொண்டதால் ஊர்ப்பெயர்  குயிலி என்று வழங்கியிருக்கலாம். ஊர்ப்பெரிய்வர்களுக்கு, ஊரின் பெயர்க்காரணம் தெரியவில்லை. கோவை, நெல்லை, மயிலை என ஊர்ப்பெயர்கள் வழங்கும் வழக்கத்தை ஒட்டி மக்கள் குயிலை”  என அழைக்கின்றனர். அருகிலேயே இன்னொரு சிறிய ஊரும் இருப்பதால் பெரியகுயிலி, சின்னக்குயிலி என இரு பெயர்கள். குயிலியம்மன் கோயிலில், தற்போது, குயிலியம்மன் முதன்மைத்தெய்வம் எனினும், கோயிலினுள்ளே ஒரு “ஆதி குயிலியம்மனும் உண்டு.

கல் ஊஞ்சல்

         பெரும்பாலும், எல்லா அம்மன் கோவில்களிலும் கல்லால் எழுப்பப்பட்ட ஓர் ஊஞ்சல் அமைந்திருக்கும். நீண்டுயர்ந்த இரு கற்றூண்கள் அருகருகே நாட்டப்பெற்றிருக்க, அவ்விரு தூண்களையும் மேலே இணைத்த நிலையில் ஒரு கிடந்த கல். அதிலிருந்து தொங்கும் சங்கிலிகளில் பிணைத்த ஒரு மரப்பலகை ஊஞ்சல். மக்கள் வேண்டுதல் வைத்து வணங்கி, அம்மனின் திருமேனியை ஊஞ்சலில் அமர்த்தி ஆட்டி அம்மனை மகிழ்விப்பர். அம்மன் நள்ளிரவில் அவ்வூஞ்சலில் அமர்ந்து ஆடிக்களிப்பதாகவும் மக்களிடையே ஒரு நம்பிக்கை நிலவுகிறது.


         ஊஞ்சலின் ஒரு தூணில், கல் ஊஞ்சலை அமைத்துக்கொடுத்தவர் யார் என்பது ஒரு கல்வெட்டாகப் பொறிக்கப்பட்டுள்ளது. 1922-ஆம் ஆண்டு பொறிக்கப்பட்ட எழுத்துகள். தொண்ணூற்று நான்கு ஆண்டுகள் பழமை. எனவே, எழுத்துகளை ஒரு பள்ளி மாணவன் கூட எளிதில் படிக்க இயலும். இருப்பினும், கல்லின்மீதுள்ள பொறிப்பு என்பதால் சற்றே கடினம். கல்வெட்டின் பாடம் கீழே:

  1. 1922
  2. ஆடி
  3. 28 தே
  4. குயி
  5. லாத்தா
  6. ளுக்கு
  7. கண்
  8. ணப்
  9. பாளை
  10. யம்
  11. வி.
  12. ரங்
  13. க போ
  14. யன்

கண்ணப்பாளையம் ஊரைச்சேர்ந்த ரங்கபோயன் என்பவர், 1922-ஆம் ஆண்டு, ஆடி மாதம் 28-ஆம் தேதியன்று ஊஞ்சல் அமைத்துக்கொடுத்துள்ளார்.


நினைவுக்கல் சிற்பம்

         சுற்றுச்சுவருடன் கூடிய கோயிலின் வெளிப்புறத்தில் கல் ஊஞ்சல் அமைந்துள்ளது போலவே, வெளிப்புறத்தில் கோயிலின் வலப்பக்கத்தில் ஒரு சிறு கோயில் அமைப்பு காணப்படுகிறது. ஏறக்குறைய ஆறடி உயரமுள்ள, பக்கத்துக்கு மூன்று என்னும் அளவில் ஆறு கற்றூண்களும், அவற்றை இணைத்து மேலே கிடத்திய இரு கற்றூண்களும், இவ்விரு கற்களுக்கிடையில் கூரையாகப் பாவப்பட்ட பலகைக்கற்களும் ஓர் அறையாகக் கோயில் தோற்றத்தைத் தருகின்றன. அறையின் உள்ளே, ஆணும் பெண்ணுமாய் ஒரு புடைப்புச்சிற்பம். இது ஒரு (Memory Stone) நினைவுக்கல்லாகும். கோவைப்பகுதியில் பல்வேறு நினைவுக்கற்கள் காணப்படுகின்றன. இவை யாவும் இறந்துபோன வீரர்கள், தலைவர்கள், பெண்கள் ஆகியோருக்காக எழுப்பப்பட்ட நினைவுக்கற்களாகும். கால்நடைச் சமுதாயம் ஓங்கியிருந்த நிலையில், கால்நடைகளைக்காக்கும் பணியில் ஈடுபட்டுப் புலியுடன் போராடி இறந்த வீரர்கள், கால்நடைகளைக்கவர்ந்து சென்ற எதிர்க்குழுவினரிடமிருந்து அவற்றை மீட்கும் முயற்சியில் (ஆநிரை மீட்டல்) எதிர்க்குழுவின் வீரர்களுடன் போரிட்டு இறந்த வீரர்கள், ஊர் அல்லது ஒரு குழுவின் தலைமைப் பொறுப்பை ஏற்று அரிய பணிகளைச் செய்து இறந்த தலைவர்கள் மற்றும் இவ்வகை வீரர்/தலைவர் ஆகியோருடன் உடன்கட்டை ஏறி இறந்த அவர்தம் மனைவியர் ஆகிய பலருக்கும் நினைவுக்கற்கள் எடுக்கப்பட்டு அவர்களை வணங்கும் வழக்கம் உண்டு. வீரக்கல், நடுகல், புலிகுத்திக்கல், நரிகடிச்சான் கல், சாமிக்கல், மாஸ்திக்கல் (மாசதிக்கல்) எனப் பல்வேறு பெயர்களால் கிராம மக்கள் வழங்குவர். அவற்றைப்பற்றிய செவிவழிக் கதைகளும் மக்களிடையே வழங்குவதுண்டு. அது போன்ற ஒரு நினைவுக்கல்தான் மேலே குறிப்பிட்ட நினைவுக்கல் சிற்பம்.
         

சிற்பத்திலுள்ள ஆணின் தலைப்பகுதியில் முடி, கொண்டை அமைப்பாக இல்லாமல், தலைப்பாகையுடன் உள்ளது. தலைப்பாகையில் ஒரு தலையணி இருப்பதுபோல் காணப்படுகிறது. மேல்நோக்கி முறுக்கிய மீசை. செவியணியும், கைவளையும், கழுத்தில், கழுத்தை ஒட்டியணியப்பட்ட கண்டமாலையும், அதனை அடுத்துத் தொங்கலாக அணியப்பட்ட நீண்ட மாலையும் காணப்படுகின்றன. ஆடை இடையிலிருந்து தொடங்கிப் பாதம் வரை காணப்படுகிறது. இடையின் இருபக்கங்களிலும் சுங்கு எனப்படும் ஆடைத்தொங்கல்கள் உள்ளன. பெண் வலப்புறம் கொண்டை முடியுடனும், இடையிலிருந்து பாதம் வரை ஆடையுடனும் காணப்படுகிறாள். கழுத்தில் அணிகள் எவையும் காணப்படுவதில்லை; கைவளைகளும் புலப்படாத நிலையில் கணவனோடு சேர்ந்து இறந்துபோன சதிப்பெண்ணாக இச்சிற்பத்தைக் கருதலாம். இக்கருத்தை ஊர் மக்களிடையே வழங்கும் கதை இருப்பின் ஒப்புநோக்கலாம். பெண் கைகூப்பி வணங்கும் தோற்றம் ஆணின் சிற்பத்தில் இல்லை. மாறாகக் கைகளைக் குவித்து வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

கருப்பராயன் (கன்னிமார்) கல் (கல்வெட்டுப்பொறிப்புடன்)

         பூசையாளர் சுப்பிரமணியம் அடுத்து எங்களை ஒரு தோட்டத்துக்கு அழைத்துச்சென்றார். பெரியகுயிலி ஊர்ப்பகுதி வறட்சியான ஒரு பகுதி. இருப்பினும் ஓரிரு இடங்களில் முன்னாளில் முன்னோர் சிலர் வெட்டிவைத்த பெரிய கிணறுகள் அமைந்துள்ள தோட்டப்பகுதிகளில், கிணற்று நீரை இறைத்துச் சொட்டுநீர்ப் பாசனம் செய்கின்றனர். அவ்வாறான ஒரு தோட்டப்பகுதிக்கு நாங்கள் சென்றோம். அவரைப்பயிர் பூக்களோடும், சிறு சிறு பிஞ்சுக்காய்களோடும் வளர்ந்து அந்தச் சிறிய இடத்துக்குப் பசுமையான தோற்றத்தை வழங்கியிருந்தது. கிணற்றின் அருகில், ஒரு மரத்தடியில் சில கற்கள். கருப்பராயன், கன்னிமார் கடவுளர் என மக்கள் வழிபடுகின்றனர். லிங்கத்தின் தலைப்பகுதி போன்ற தோற்றத்தில் அகன்ற பெரியதொரு கல். அதையடுத்து, நீள் சதுர வடிவில் ஒருகல். அதன் நடுப்பகுதி செங்குத்தாய் நீண்டு அதில் நாகம் செதுக்கப்பட்டிருந்தது. இக்கல்லின் பரப்பில், வலப்புறம் சிறிய தூண் அமைப்பில் ஒரு புடைப்புச்சிற்பம். மீதியுள்ள சமதளப்பரப்பில் எழுத்துப்பொறிப்புகள் உள்ளன என்று சுப்பிரமணியம் கூறினார். இவை யாவும் ஒரே கல்லில் செதுக்கப்பட்டிருந்தன. இக்கல்லின் முன்புறம் உருண்டை வடிவில் சிறு சிறு கற்கள். அவை ஏழு கன்னிமார் கடவுளரைக் குறிப்பன. ஐந்து கன்னிமாரே காணப்பட்டனர். இரண்டு கன்னிமார் கற்களை யாரோ சொந்த வழிபாட்டுக்காக எடுத்துச் சென்றுவிட்டனர் என்பது புதிய செய்தியாக இருந்தது. வழிபாட்டுக்காக எண்ணெய் பூசிப்பூசிக் கல்பரப்பு முழுதும் எண்ணெய்ப்பற்று. கூர்ந்து நோக்கியபோது எழுத்துகள் இருப்பது உறுதியாயிற்று.

இரும்புத்தகடு மூலம் எண்ணெய்ப்பற்றைச் சுரண்டி எடுத்தோம். அடை அடையாக, எண்ணெய்ச்செக்கில் வெளிப்படும் பிண்ணாக்குச் செதிள்கள் போல எண்ணெய்ப்பற்று வெளியேறியது. இரும்புப் புருசு மூலம் கல்பரப்பைத் தேய்த்தபின் எழுத்துகள் ஒருவாறு புலப்பட்டன. இரண்டு வரிகள் மட்டுமே புலப்பட்டன. எழுத்தமைதியை ஆராயும்போது கல்வெட்டின் காலம் கி.பி. 13 அல்லது கி.பி 14-ஆம் நூற்றாண்டு ஆகலாம் எனக் கருதமுடிகிறது. வெள்ளைச் சுண்ணாம்பை நீரில் கலந்து கல்வெட்டின்மீது பூசிக் காயவிட்டபின் எழுத்துகளைப் படிக்க முயன்றோம். கல்வெட்டின் பாடத்தை அப்போதே சரியாகக் படிக்க இயலவில்லை. முதல் வரியில் “ ராயண வ என்னும் சொல்லும், அடுத்தவரியில் “க்கு திரா த ரா ச என்னும் சொல்லும் புலனாயின.. ஆனால் கல்வெட்டின் ஒளிப்படததைக் கணினியில் உருப்பெருக்கம் செய்து ஆய்ந்து பார்த்ததில் கல்வெட்டின் இருவரிப் பாடம் கீழ்வருமாறு அமைந்திருந்தது.

கல்வெட்டின் பாடம்:

  1.  (வீ ர நா) ரா ய ண வ தி
  2.  க்கு  (அ) தி ரா ச  ரா ச  (ந்)

கல்வெட்டு சொல்லும் செய்திகள்

கல்வெட்டின் இரு வரிகள் நமக்குப் பல செய்திகளைச் சொல்லுகின்றன. வதி என்னும் சொல் வாய்க்காலைக் குறிக்கும். வாய்க்கால், வதி, ஏரி, மன்னறை (காடழித்து வேளாண் நிலமாக்கிய பகுதி) ஆகிய இடங்கள் அரசர் பெயரால் வழங்கப்படுதல் மரபு. கோவை சங்கமேசுவரர் கோயில் கல்வெட்டொன்றில் (கோவைமாவட்டக் கல்வெட்டுகள்-க.வெ.எண்; 90/2004) “சிவபாதசேகர மன்னறைஎன்றும், பேரூர் அழகிய சிற்றம்பலக்கோயில் கல்வெட்டொன்றில் (கோவைமாவட்டக் கல்வெட்டுகள்-க.வெ.எண் 118/2004) “வீரகேரள விலாடகுல மாணிக்க வதிமற்றும் “அதிராஜராஜ வாய்க்கால்என்றும் வருவதைக் காண்க. அது போல், நம் கல்வெட்டிலும் வீரநாராயணவதிக்கு என வருகிறது. மேலும், அதிராசராச என்னும் அரசர் பெயரும் காணப்படுகிறது. கோயிலுக்கு நிலம் கொடையளிக்கப்பட்ட செய்திகள் கொண்ட கல்வெட்டுகளில், நிலத்தின் எல்லை வரையறுத்துச் சொல்லப்படும்போது நிலத்தை ஒட்டிய நான்கு திசைகளில் அமைந்திருக்கும் வதி, வாய்க்கால், மன்னறை, நிலம் போன்றவற்றின் குறிப்புகள் சொல்லப்படும். அது போலவே இக்கல்வெட்டிலும் சொற்கள் வருவதால் இக்கல்வெட்டு, நிலக்கொடை மற்றும் நிலத்தின் எல்லை பற்றிய செய்திகளைக் கொண்ட கல்வெட்டு என்பது உறுதியாகின்றது.

         நிலக்கொடை கோயிலுக்கு அளிக்கப்பட்டதா அன்றி வேறு காரணம் பற்றியா என்பது தெளிவாகவில்லை. காரணம், கல்வெட்டின் தொடக்கப்பகுதி இக்கல்வெட்டில் இல்லை. “ஸ்வஸ்திஸ்ரீஎனத்தொடங்கும் முதல்வரியுடன் கூடிய கல்வெட்டுப்பகுதி பிறிதொரு கல்லில் வெட்டப்பட்டிருக்க வேண்டும். அந்தக் கல் கிடைத்தால்தான் கொடை பற்றிய செய்தியும், எந்த அரசன் காலத்தது என்பதும் தெரியவரும். இக்கல்வெட்டின் கீழ்ப்பகுதி நிலத்தில் புதையுண்டு கிடப்பதால், நிலத்தின் கீழுள்ள பகுதியையும் தோண்டி எடுத்துப்பார்த்தால் இன்னும் தெளிவான விளக்கங்கள் கிடைக்க வாய்ப்புள்ளது. இது பற்றி நில உடைமையாளர் மற்றும் ஊர்க்கவுண்டர்கள் ஆகியோரிடம் பேசி ஏற்பாடுகள் செய்யவேண்டியுள்ளது. எனவே, மேற்கொண்டு கல்வெட்டுச் செய்திகள் கல்வெட்டினை மீளாய்வு செய்தபின்னரே கிடைக்கும்.
  
அய்யாசாமி கோயில்
          அடுத்து நாங்கள் சென்ற இடம் சிறு சிறு கோயில்களாகப் பல கோயில்கள் அமைந்திருந்த தோட்ட ஒரு வளாகம். முதலில் அய்யாசாமி கோயில். பல ஊர்களில் அய்யாசாமி கோயில்கள் உள்ளன. இங்கு நாம் பார்த்த கோயில் ஊர்ப்பொதுக்கோயில் எனினும்,  பகல கூட்டத்தைச்சேர்ந்தவர்களின் பூசைப்பொறுப்பில் வழிவழியாக வந்துள்ளது. இறைவனின் திருமேனி ஒரு சிறிய படிமம். வலது காலை நேராக ஊன்றியும் இடது காலை மடக்கியும் வைத்த நிலையில் இறைவன் காணப்படுகிறார். பூணூல் அணிந்துள்ளார். இவர் ஒரு குழந்தை சாமி என்னும் கருத்து நிலவினாலும் இங்குள்ள திருவுருவம் மீசையுடன் காணப்படுகிறது. கைகளில் சங்கு சக்கரம் ஏந்தியது போலக் காணப்படுகிறது. விஷ்ணுவுடன் தொடர்புபடுத்துகின்றனர்.


முட்டாள் ராக்கியப்பன் கோயில்

         இப்பெயரில் வணங்கப்படும் இறைவனின் சிற்பம் ஒரு நினைவுக்கல் சிற்பத்தையே காட்டுகின்றது. ஒரு வீரர் தலைவனின் உருவத்தைக்கொண்டுள்ளது. நெடியதாய் நின்ற தோற்றம்.  தலைமுடியின் நடுப்பகுதி உச்சியில் நன்கு முடியப்பட்டுக் கட்டப்பட்டுள்ளது. கட்டப்படாத முடி சடை முடியாகப் பக்கவாட்டில் தொங்குகிறது. முகத்தில் மேல்நோக்கிய நிலையில் முறுக்கு மீசை. கழுத்தில் நிறைய அணிகலன்கள். கைகளில் வளைகளும் கால்களில் கழல்களும் உள்ளன. கால்களில் கழலோடு சேர்ந்து சிலம்பு போன்ற ஓர் அணிகலன் காணப்படுகிறது. பாதங்களில் பாதக்குறடு அணிந்துள்ளார். கைக்ள் கூப்பியிருந்தாலும் கைகளுக்கிடையில் ஒரு குறுவாள் உள்ளது. இடையிலும் ஒரு குறுவாள் உள்ளது. முழங்கால் வரையிலான ஆடை. இடையாடையிலும் அணிகலன்கள் காணப்படுகின்றன. அணிகலன் ஒன்றில் தாயத்துப்போன்ற ஒரு பொருள் காணப்ப்டுகிறது. ஆடையின் இருபுறமும் சுங்குகள். சிற்பத்தின் வலது புறம் சூலம் போன்ற ஓர் ஆயுதம் காட்டப்பட்டுள்ளது. ஆனால், சூல நுனியில் இரு நீட்சிகளே உள்ளன. மொத்தத்தில், பெரும்பதவியிலிருக்கும் வீரர் தலைவனின் நினைவுக்கல்லாக இதைக் கருதுமாறு தோற்றம்கொண்டுள்ளது. முட்டாள்’  என்னும் முன்னொட்டுச் சொல்லின் விளக்கம் தெரியவில்லை. சிற்பத்தின் நேர்த்தியான வடிவமைப்பு இதன் காலம் கி.பி. 18-ஆம் நூற்றாண்டுக்கு முந்தையது எனக் கருதவைக்கிறது.


         வாயில் கதவின் இரு பக்கச் சுவர்களின் அடிப்பகுதியில் சிற்பத்தொகுதியுள்ள இரு சிறு கற்கள் உள்ளன. ஒன்றில் இரு யாளி உருவங்களும் ஒரு யானை உருவமும் செதுக்கப்பட்டுள்ளன. மற்றொன்றில் இரு குரங்குகள் கைகளில் ஒரு பொருளை வைத்து விளையாடுவது போன்ற உருவமும் இரு வீரர்கள் போரிடுவது போன்ற உருவமும் செதுக்கப்பட்டுள்ளன. கோயில்களில் சுவர்ப்பகுதி முடிந்து கூரைப்பகுதி தொடங்கும் இடத்தில் யாளி வரிசை, பூத்கண வரிசை காணப்படும். அத்தகைய வரிசைக் கற்களில் இரண்டினை இங்கே வைத்துப் பதித்துள்ளனர் என்று தெரிகிறது.





பேச்சியம்மன், மசிறியாத்தா கோயில்

         இக்கோயிலில், பேச்சியம்மன், மசிறியம்மன், அன்னையர் எழுவர் (கன்னிமார்)  திருவுருவங்கள் உள்ளன. சிற்பங்கள் பிற்காலத்தவை. பேச்சியம்மன் சிற்பத்தில் கைகளில் சங்கு சக்கரங்கள் வைஷ்ணவியை ஒத்துள்ளன. மசிறியாத்தா சிற்பம் கையில் குழந்தையுடன் காணப்படுகிறது. ராக்கியப்பன், பேச்சியாத்தா, மசிறியாத்தா கோயில்கள் இப்பகுதியிலிருக்கும் பூந்துறை காடை கூட்டத்தவர் வழிபாட்டுக்குரியவை.
         


ஆநிரை தொடர்பான வீரக்கல்

         இறுதியாக, ஒரு தென்னந்தோப்பில் மண்ணில் புதையுண்டு கிடந்த ஒரு வீரக்கல்லைப் பார்த்தோம். கி.பி. 15/16 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக இருக்கக்கூடும் என்று கருதத்தக்க ஒரு வீரக்கல் சிற்பம். அது. ஒரு வீரன் பகை வீரனுடன் போரிடும் காட்சியை நினைவு படுத்தும் வகையில் அமைந்துள்ளது.மார்பளவு மட்டுமே உள்ள அச்சிற்பத்தில் பகை வீரனின் உருவம் புலப்படவில்லை. மண்ணுக்குள் புதையுண்ட பகுதியைத் தோண்டி எடுத்தபின்னரே அச்சிற்பம் ஆநிரை கவர்தலோடு தொடர்புள்ளதா என உறுதிபடுத்த இயலும். வேளாண் பணியின் போது இச்சிற்பம் வெளிப்பட்டதாகவும், அரசுக்குத் தகவல் தரப்பட்டு, அரசு வருவாய்ப்பிரிவின் அலுவலர்கள் இச்சிற்பத்தை வந்து பார்த்துப்போனதாகவும் சொன்னார்கள்.



முடிவுரை

         கட்டுரையின் தொடக்கத்தில் குறிப்பிட்டதுபோல, பெரியகுயிலி ஊர்ப்பகுதி தொல்லியல் சார்ந்த பகுதி என அறியப்படுகிறது. இப்பகுதியில் பழங்கோயில் ஒன்று இருந்துள்ளது என்றும் அழிந்துபோன அதன் எச்சங்களாகச் சில சிற்பங்களும் கற்றூண்களும் பல இடங்களில் சிதறுண்டு போனதாகவும் இங்குள்ளவர்கள் கூறுகிறார்கள். மேலும் சில சான்றுகள் கிடைத்தால் இச்செய்தி மெய்யாகக் கூடும்.


















து.சுந்தரம், கல்வெட்டு ஆராய்ச்சியாளர்,கோவை.

அலைபேசி : 9444939156.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக