மொத்தப் பக்கக்காட்சிகள்

வெள்ளி, 7 பிப்ரவரி, 2014

வலங்கை,இடங்கை சில குறிப்புகள்



      வலங்கை இடங்கைப்பிரிவுகள் எப்போது தோன்றின, எந்தச்சூழ்நிலையில் தோன்றின, இரு பிரிவுகளும் எவ்விதம் வேறுபட்டுச்செயல்பட்டன என்பவை சரியாக அறியப்படவில்லை. ஆனாலும் வழிவழி வந்த செய்திகளைக்கொண்டு திரு,குரோல் (Crole)  என்பவர் குறிப்பிடுவது: கரிகாலச்சோழன், இரு பிரிவுகளுக்கும் முறையே தொண்ணூற்றெட்டுக்குடிகளை (Tribes)  ஒதுக்கி அவர்களுக்குத்தனித்தனியே கொடிகளையும், அவர்களுடைய விழாக்களிலும், ஈம நிகழ்ச்சிகளிலும் பயன்படுத்திக்கொள்ளத் தனித்தனியே இசைக்கருவிகளையும் அமைத்துக்கொடுத்தான். இந்த வேறுபாடுகள், தொடக்கத்தில் அரசியல் காரணமாக ஏற்பட்டன. அல்லது, இரு சாராரிடையே பூசல்கள் எழாவண்ணம் தடுக்கவும் ஏற்பட்டிருக்கலாம். ஆனால் இவையே, சில நூற்றாண்டுகளாகப்பிரச்சினைக்குரிய கலகங்களுக்கான, கிள்ர்ச்சிகளுக்கான மூலகாரணங்களாக அமைந்துவிட்டன. இவ்வுட்பிரிவுகள் பற்றிய விரிவான செய்திகள் Madras Manual of Administration Vol-III   நூலில் காணலாம்.

      வலங்கைப்பிரிவினருள் அடங்கும் சில குடிகள் வருமாறு:
      வேளாளன்,கோமட்டி,சாலியன்,கன்னடியன்,கள்ளிறக்குவோர்,பறையர்
      இடங்கைப்பிரிவினருள் அடங்கும் சில குடிகள் வருமாறு:
      பள்ளி,செட்டி,கம்மாளர்,சக்களர் (Chuckler)
எம்.ஸ்ரீநிவாச அய்யங்கார் தமது ‘தமிழர் ஆய்வு’  நூலில், இவ்விரு பிரிவினருக்கிடையே  நிலவிய பகைமை தோன்றியதற்கான மூலத்தைப்பற்றிக் குறிப்பிட்டுள்ளார்.

      இப்பிரிவுகளைப்பற்றிய பண்டைய செய்திகள் நமக்கு இலக்கியங்கள் வாயிலாகவும், கல்வெட்டுகள் வாயிலாகவுமே தெரிய வருகின்றன. மிகப்பழமையான குறிப்பென்று சொல்லவேண்டுமானால், முதலாம் இராசேந்திரனின் கல்வெட்டுகளில் ஒன்றையே சுட்டவேண்டியிருக்கும். அதில் வலங்கைப்பிரிவு பற்றிய குறிப்பு காணப்படுகிறது. ‘தொண்டைமண்டல சதகம்என்னும் நூலில், ‘கண்ணாளர் குறும்படக்கி என்னும் குறிப்பு உள்ளது. உழவுத்தொழில் செய்த வெள்ளாளரும், கலைத் தொழில்நுட்பத்தினரான (Artisans) கம்மாளரும் நட்புடன் இருந்திருக்கவில்லை என்பது இதனால் புலப்படுகிறது. உழவருக்கு வேண்டிய தொழிற்கருவிகளைச்செய்து கொடுக்கும் நிலையில் இருந்ததால் கம்மாளர் என்போர் உழவர்களின் பணிமகன்களே (Servants) என்று உழவர் எண்ணித் தம் மேலாதிக்கத்தைக் காட்டியிருக்கவேண்டும்.

      கி.பி.1893-ஆம் ஆண்டுக்கல்வெட்டுத்தொகுதியில் உள்ள கல்வெட்டு எண் 562, 1905-ஆம் ஆண்டுத்தொகுதியில் உள்ள கல்வெட்டு எண் 151, மற்றும் தென்னிந்தியக்கல்வெட்டுகள் தொகுதி மூன்றில் உள்ள பசுபதீசுவரம் கல்வெட்டு ஆகிய கல்வெட்டுகளிலிருந்து உணரக்கூடிய செய்தி, கம்மாளர்கள் சமுதாயச்சூழ்நிலையில் உரிமைக்குறைபாடுகளைச் (Social disadvantages) சந்தித்தார்கள் என்பதுதான். மேற்சொன்ன கல்வெட்டுகளில், கம்மாளர்கள் சில வரிசைகளை (மரியாதைச்சின்னங்களை)ப் பெற்றார்கள் என்னும் செய்தி சொல்லப்படுகிறது. அவ்வரிசைகளாவன:
1.        காலில் செருப்பணிந்து வெளியே செல்லலாம்.
2.        பேரிகை (drums)  கொட்டவும், சங்கு ஒலிக்கவும் அனுமதி.
3.        ஓடு வேய்ந்த வீடுகள் கட்டிக்கொள்ளலாம்.
4.        வீடுகளுக்கு இரண்டு வாசல்கள் அமைத்துக்கொள்ளலாம்.
இவ்வரிசைகளை, அரசனுடைய சிறப்பு ஆணையால்தான் பெறமுடிந்தது. அதே சமயம், வலங்கைப்பிரிவினர் படைப்பிரிவுகளில் உயர்பதவிகளைப்பெற அனுமதிக்கப்பட்டனர். வலங்கைப்படைப்பிரிவுகள் (Regiments)  மிகுதியும் இருந்தன. இது முதலாம் இராசராசன் காலத்தில்.

      கவிச்சக்கரவர்த்தி கம்பரும் தம் ‘ஏர் எழுபது’  நூலில், ஏழு பாடல்களில் கைவினைக்கலைஞர்களை (artisan) ப்புகழ்ந்து பாடியுள்ளார். உழவர்பற்றிக்குறிப்பிடவில்லை. எனவே, வலங்கை,இடங்கை வேறுபாடுகள் அல்லது பகைமை பெரும்பாலான அளவில் உழவுத்தொழிலை மேற்கொண்ட வெள்ளாளர்களுக்கும், தொழில் வினைக்கலைஞர்களான கம்மாளர்களுக்கும் இடையில்தான் மிகுதியாக இருந்தன என அறியலாம். வலங்கை,இடங்கை ஆகிய இரு பெயர்ப்பிரிவுகள் ஏற்பட்டதே  இந்த இரு பிரிவு மக்களும் தம் சமூக வேறுபாடுகளை அரசன் முன் வைத்துத்தீர்வுக்கு அணுகியபோதுதான். இயல்பாகவே, அரசன் இவ்விரு முறையீட்டாளர்களையும் தன் வலப்பக்கமும் இடப்பக்கமும் இருத்தி விசாரணை செய்ததுதான் பிரிவுப்பெயருக்குக்காரணமாய் அமைந்திருக்கும். இந்த முறையீடுகளும், அரசன் தீர்ப்பும் காஞ்சியில் நடந்திருக்கலாம் என யூகிக்க முடிகிறது. காஞ்சியில்தான் இந்த வலங்கை,இடங்கை வேறுபாடுகள் மிகுதியாக அடையாளம் காணப்படுகிறன. வலங்கை-இடங்கைக்கோயில்கள், வலங்கை-இடங்கை மண்டபங்கள்,வலங்கை-இடங்கை நடனப்பெண்டிர் எனப்பலவகைச்சான்றுகளைப்பார்க்கிறோம். தீர்வு சொன்ன அரசன் இன்னார் எனத்தெரியவில்லை. கல்வெட்டுகளில் இவ்விருவகைப்பிரிவுகள் சுட்டப்பட்டாலும் அவற்றில் ஒவ்வொன்றிலும் அடங்கியிருந்த 98 உட்பிரிவுகள் விளக்கப்படவில்லை. 98 இடங்கைச்சாதியரும் தம்முள் நிலவும் ஒற்றுமையை வலுப்படுத்தும் முகத்தான், தமக்குள் ஓர் ஒப்பந்தம் ஏற்படுத்திக்கொண்டனர். இது நடந்த காலம் மூன்றாம் குலோத்துங்கனின் 40-ஆவது ஆட்சியாண்டாகும். (கி.பி.1218).
ஒரு கால கட்டத்தில், தாழ் நிலையில் இருந்த உட்பிரிவினர் சிலர் வலங்கை,இடங்கை ஆகிய இரு வகையினருமே கோயில்களுக்குக்கொடையளிக்கக்கூடாது எனத்தடை செய்யப்பட்டிருந்தனர். முதலாம் தேவராயரின் மகனான விஜய பூபதிராய உடையார் என்னும் அரசன், திருவண்ணாமலையில் இருக்கும் இடங்கை,வலங்கையார் இரு பிரிவினருமே கோயிலுக்குக்கொடை அளிக்கலாம் என ஆணை பிறப்பித்ததை ஒரு கல்வெட்டு குறிப்பிடுகிறது. (க.வெ.எண்: 564/1902).


----  உதவிய நூல் : இந்தியத்தொல்லியல் ஆய்வுத்துறை ஆண்டறிக்கை 1920-21.

மேலும் ஒரு சில செய்திகள்:

காஞ்சிபுரத்தில், இடங்கைப்பிரிவினர் தேரோட்டத்திருவிழா ஏற்பாடு செய்கின்றனர். அப்போது, தேர்த்திருவிழாவை நிறுத்த எண்ணிய வலங்கைப்பிரிவினர் ஒரு மந்திரவாதியின் உதவியால் நிறுத்திவிடுகின்றனர். இதன் எதிர்ச்செயலாக, இடங்கைப்பிரிவினர் மற்றொரு மந்திரவாதியின் உதவியால், அவன் மனைவியைப்பலிகொடுத்து மீண்டும் தேரை ஓடச்செய்கின்றனர். உதவிய மந்திரவாதியைத்தங்கள் சாதிப்பிள்ளை எனக்கூறி அவனுக்குச்சில உரிமைகளை வழங்கியுள்ளனர் இடங்கைப்பிரிவினர். அந்த இடங்கைப்பிரிவினருள் ஓர் இனமாகத் தேவேந்திரப்பள்ளரும் குறிக்கப்ப்பட்டுள்ளனர்.

செங்குந்தர் வெற்றிப்பட்டயம் என்னும் பட்டயத்தில், வலங்கை-இடங்கை வகுப்பினர்  வழக்கு ஒன்றைப்பற்றிய செய்தி கூறப்படுகிறது.. அதில், எழுகரை நாடு படையாட்சி, கம்மாளர், நகரத்தார், பள்ளர் (பழமர்), ஆகியோர் இடங்கைப்பிரிவினராகச்சுட்டப்பெறுகின்றனர்.

வலங்கை உய்யக்கொண்டார் என்பவர் சோழ அரசகுலத்தொடர்புடைய போர் வீரர்களாவர். இவரே பின்னாளில் நாடார் குலப்பிரிவினராக அறியப்படுகிறார்கள். இவர்கள் காளியைக்குலதெய்வமாகக்கொண்டவர்கள்.
ஐநூற்றுவர் (வணிகர்) இவர்களுக்குப்பலவகையான சிறப்புகளைச்செய்தனர். ஐநூற்றுவர் தம்தோள்களில் இவர்களைத்தூக்கிச்சுமந்ததால் இவர்கள்  “செட்டி தோளேறும் பெருமாள்”  என்னும் சிறப்புப்பெயர் பெற்றனர். இக்குறிப்பு வலங்கை மாலை நூலில் காணப்படுகிறது.
ஆங்கிலக்குறிப்புகளிலிருந்து தமிழாக்கம் :    து. சுந்தரம்,
                                           கல்வெட்டு ஆராய்ச்சியாளர்,
                                           கோவை.

                                           அலை பேசி : 94449-39156

2 கருத்துகள்:

  1. தமிழ்நாட்டுவரலாறு பார்ப்பனர் பார்ப்பனரல்லார் ஆரியதிராவிடசித்தாந்தங்களைச்சுற்றியேஇருக்கிறது. வலங்கைஇடங்கைபதினென்பூமியார் கடம்பர்களால்வழிமுறைக்குக்கொண்டுவரப்பட்டுசோழர்களால் நிலைநிறுத்தப்பட்டது. பல்வவர்காலத்தில் இதுஇல்லை.பராந்தகசோழன்காலத்தில்தான்96மூன்றுகைமாசேனைவருகிறது.மேலைச்சாளுக்கியர் காலத்தில்96மும்முரிதண்டநாயகபிரமாதிராஜர் என்றுகுறிப்பிடப்படுகிறது. இந்தபிரமாதிராஜர்கள்யார்?இவர்கள்பார்ப்பனர்கள் அல்ல. இராஜபுதானத்துக்ஷத்திரியர்கள் சூரியசோம அக்னிநாகபிரம்ம என்றுஐந்துவகைப்படுவர்.இதில்பிரம்மக்ஷத்திரியர் காக்ஷ்மீர்சிந்துமகதம்துளுகுந்தலம்ஆகியநாடுகளைஆண்டனர்.இவர்கள்பரசுராமரைத்தெய்வமாகக்கொள்வர்.பரசுராமரைஆரியத்தில்புகுத்திஉண்மைவரலாற்றைச்சிதைத்துவிட்டனர்.பரசுராமர்தான்சாக்தத்தைஏற்படுத்தியவர்.ஷாலாஎன்றுsecular academy ஏற்படுத்தி வேதசாஸ்திரங்களுடன்போர்பயிற்சிஅளித்தவர்.அவர்கள்பிரமாதிராஜர் என்றபட்டம் பெற்றனர்.இது தமிழில் பெருமானடியதரையர் என்றுவழங்கப்பட்டது.முத்தரையர் சம்புவரையர் வாணகோவரையர் அனைவருக்கும் பிரமாதிராஜர்பட்டம் உண்டு. பிராமணர் அரசு அதிகாரிகள் பிரம மாராயர் என்றுஅழைக்கப்பட்டனர். இவர்கள் நானாதேசதிசைஆ யிரத்துஐநூற்றுவணிகக்குழுக்களின் சேனையினர். வணிகக்குழுக்கள் சுதந்திரமான பல்வேறுசமுதாய அமைப்புகளைக்கொண்டது. இதுMILITARY CANTONMENT.இதற்கும் இப்பொழுதுஇருக்கும் சாதிஅமைப்புகளுக்கும்துளிக்கூடசம்பந்தம்இல்லை.ரோமசாம்ராஜ்யத்தின்தாக்கம்தென்னிந்தியாவைஆட்டிப்படைத்தது.அதன்DEXTER AND SINISTER THE RIGHT HAND AND LEFT HAND GROUPSதென்னிந்திய கடம்பர்களால் நிலைநிறுத்தப்பட்டது.கரிகாலன்காலம் ரோமசாம்ராஜ்யத்தைஒட்டிஇருந்ததாலும் காஞ்சியைமாற்றியதுகரிகாலன்என்பதாலும்காஞ்சியில் இவ்வமைப்புமுதனிலைபெற்றதாலும் கரிகாலனுடன்சம்பந்தப்படுத்தப்பட்டன.

    பதிலளிநீக்கு
  2. கம்மாளர்கள் தாழ்ந்தவர்களாக இல்லை

    பதிலளிநீக்கு